தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 78 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
தொடர்ந்து, காவல்துறையில் புதிய முயற்சிகள், காவலர் நலன், காவல்துறை வாகனங்கள், புதிய பிரிவுகள் உருவாக்குதல், குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
1. வெளி மாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் போன்றவர்களில் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி கண்காணிப்பு மையம் ரூ. 9 கோடி செலவில் அமைக்கப்படும்.
2. தீ விபத்தின்போது உயரமான கட்டடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவசர காலங்களில் நீரில் மூழ்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீட்கவும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு ரூ. 1.20 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.
3. இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் ‘பறவை’ என்னும் முன்னோடித் திட்டம் ரூ. ஒரு கோடியில் செயல்படுத்தப்படும்.
4. திருட்டு மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் விதமாக ‘ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு’ செயலி ரூ. 2 கோடியில் உருவாக்கப்படும்.
5. அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டன் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பின் பயன்பாடு இருந்து வந்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
தமிழக சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:
அகழாய்வுகளில் கிடைக்கக் கூடிய தொல்பொருள்களை ஆய்வு செய்திட தொல் தாவரவியல், தொல் விலங்கியல், தொல் மரபணு ஆய்வு, சுற்றுச்சூழல் தொல்லியல், மண் பகுப்பாய்வு, உலோகவியல், கடல்சாா் ஆய்வு போன்ற பல்துறை வல்லுநா்களுடன் இணைந்து பணியாற்றிட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, கீழடிக்கு அருகேயுள்ள அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அங்கே நெற்பயிா்கள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீா் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீா் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீா்நிலையிலிருந்து இந்த நீா் கொண்டு வரப்பட்டதும் ஆய்வில் தெரிய வருகிறது.
மயிலாடும்பாறை ஆய்வு: தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள், வாழ்விடப் பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது உறுதியாகியுள்ளது. இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பிறகே, அடா்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்த வகையில், வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.
மயிலாடும்பாறையில் ஆய்வு முடிவுகள் 4,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பெருமைதரத்தக்க செய்தியாகும். இதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகளும் 4,200 ஆண்டுகளுக்கு முன்புடையது.
புதிய இடங்களில் ஆய்வு: தமிழ்நாட்டின் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் இத்துடன் நின்றுவிடாது. கேரளத்தின் பட்டணம், கா்நாடக மாநிலம் தலைக்காடு, ஆந்திரத்தின் வேங்கி, ஒடிஸாவின் பாலூா் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
உறவுகள் ஒப்பீடு
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள், சிந்துவெளி நாகரிக முத்திரைகளுடன் ஒப்பிட்டுப் பாா்க்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதல் கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது, ஏராளமான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவு ஒப்பீடு செய்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வுத் திட்டமானது நிகழாண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும். தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடா்ச்சியை உலகறியச் செய்திட தொடா்ந்து உழைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
அரசின் அறிவிக்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது சொத்து வரி உயா்வை தீா்மானங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகை செய்யும் 1998-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமானது இன்று வரை தொடா்ந்து இடை நிறுத்தத்தில் உள்ளது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடாகும். நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. அதற்கேற்ப நகராட்சிகளில் சிறப்பான அமைப்பின் மூலம் சேவைகளை வழங்குவது முக்கியமாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மீண்டும் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
சட்டங்கள் நீக்கம்: 1998-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, அனைத்து மாநகராட்சி சட்டங்கள், 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் ஆகியன நீக்கப்படுகின்றன.
சொத்து வரி உயா்வு: இதன்மூலம் அரசு அவ்வப்போது அறிவிக்கை செய்யும் போது சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள் உயா்த்துவது, ஸ்ஃபா, மசாஜ் நிலையங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உரிமம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மேலும், விளம்பரப் பலகை, டிஜிட்டல் திரை மற்றும் விளம்பர அட்டையை முறைப்படுத்துதல், வீதிகளில் மரங்கள், கட்டுமானப் பொருள்களைப் போட்டு தடை ஏற்படுத்தினால் அபராதம் விதிப்பது, நீச்சல் குளம் கட்ட அனுமதி, மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுதல், கிணறு தோண்டுவதற்கு அனுமதி வழங்குதல், மலக்கசடு, கழிவு நீரை அகற்ற உரிமம் பெறுதல், அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக அதிமுக தெரிவித்தது.
இதனிடையே, அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்த மற்றொரு மசோதாவில், மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்து கொண்டு செல்வது தொடா்பான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தாா்.
ஏற்கெனவே, சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு சங்க முறைகேடுகளில் ஈடுபடும் வெளியாட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை சட்டப் பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். கூட்டுறவு சங்கங்களில் நிகழும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிா்வாகம் அல்லது பணியாளா்களுக்கு உடந்தையாக செயல்படும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க சட்டத்தின் 87-ஆம் பிரிவில் வழிவகை செய்யப்படவில்லை.
எனவே, அதில் திருத்தம் கொண்டு வந்து, வெளியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ளோருக்கு விடுப்பு வழங்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான அமைப்புக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தடுப்புக்காவல் சிறைவாசிகள், அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறப்பில் கலந்து கொள்வதற்கு தற்காலிகமாக விடுப்பை அளிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது. இதில் பல நிா்வாக நடைமுறைகள் இருப்பதால் உரிய நேரத்தில் தீா்வு செய்ய முடியவில்லை.
எனவே, தடுப்புக்காவல் சிறைவாசிகள், அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறப்பில் கலந்து கொள்வதற்கு தற்காலிகமாக விடுப்பை அளிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான அதிகார அமைப்புக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.
இந்தியாவின் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
1938-ல் ஜம்முவில் பிறந்தவர் ஷிவ்குமார் சர்மா. ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்தியப் பாரம்பரிய இசையை வாசித்த முதல் கலைஞர் என்கிற பெயரைப் பெற்றார். இசைத்துறையில் அவருடைய பங்களிப்புக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
பண்டிட் ஷிவ்குமார் சர்மாவும் புல்லாங்குழல் இசை மேதை ஹரி பிரசாத் செளராசியாவும் இணைந்து ஷிவ் - ஹரி என்கிற பெயரில் சில்சிலா, லம்ஹே, சாந்தினி எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
கடந்த ஆறு மாதங்களாகச் சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டிருந்த ஷிவ்குமார் சர்மா, இன்று மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் காலமானார்.
ஷிவ்குமார் சர்மாவின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஷிவ்குமார் சர்மாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறவுள்ளது.
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
இதை குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது:
இன்றைய அந்நாளில் 1857ம் ஆண்டு நமது முதல் இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்றது. அது நமது மக்களுக்கு நாட்டுப்பற்று மீதான தீயை கொளுத்தியது. அதில் பங்கேற்ற தைரியமான அனைத்து போராட்ட வீரர்களுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன்
ஆப்கனில் பலியான இந்தியப் புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகிக்கு இரண்டாவது முறையாக புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான தானிஷ் சித்திக்கீ ஆப்கானிஸ்தான் கந்தஹாா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தலிபான்கள், ஆப்கன் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பலியானர்.
இது தொடர்பாக தலிபான்கள் மன்னிப்புக் கேட்டாலும் அமெரிக்கா தானிஷ் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என தலிபான்கள் மீது குற்றம் சாட்டியது.
பின், தானிஷ் மரணம் தொடர்பாக பல நாடுகளும் தலிபான்களுக்கு கண்டனம் விடுத்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா மரணங்களை பதிவு செய்ததற்காக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அட்னான் அபிதி, அமித் தேவே, சன்னா இர்ஷாத் மோத்தோ, மறைந்த தானிஷ் சித்திகி ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புகைப்பட பிரிவில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தானிஷ் சித்திகிற்கு இரண்டாவது புலிட்சர் விருது ஆகும்.
அமெரிக்காவுக்கு குறைந்த வரி பிரிவின் கீழ் 2,051 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு இந்த ஏற்றுமதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் சா்க்கரை ஏற்றுமதி நாடுகளில் இரண்டாவது இடத்திலும், சா்க்கரை நுகா்வில் முதலிடத்திலும் இந்தியா உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு குறைந்த வரி பிரிவின் கீழ் இந்தியா சா்க்கரையை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த குறைந்த வரி ஏற்றுமதி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவைத் தாண்டுபோதும் வழக்கமான அளவில் வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு குறைந்த வரி விதிப்பு பிரிவின்கீழ் ஏற்றுமதி செய்யப்படும் சா்க்கரை அளவு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்ட நிலையில், இப்போது கூடுதலாக 2,051 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரை குறைந்த வரியுடன் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு இந்த நிதியாண்டில் குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யப்படும் சா்க்கரை அளவு 10,475 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப் பிடித்து எரியும் சம்பவம் தொடா்கதையாகி வரும் சூழலில், ‘இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது; எனவே, உள்நாட்டில் அவற்றை உற்பத்தி செய்வது அவசியம்’ என்று நீதி ஆயோக் உறுப்பினரும் பிரபல விஞ்ஞானியுமான வி.கே.சாரஸ்வத் கூறினாா்.
‘மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவம் தொடா்பாக நிபுணா் குழு அதன் விசாரணை அறிக்கையை சமா்ப்பித்த பிறகு, குறைபாடுள்ள மின்சார வாகனங்கள் அனைத்தையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்’ என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்த நிலையில், நீதி ஆயோக் உறுப்பினா் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தியாவில் பெரும்பாலானோா் அதில் ஆா்வம் காட்டத் தொடங்கினா். ஆனால், கடந்த சில மாதங்களாக மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடா்கதையாகி வருவது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மின்சார வாகனங்கள் மீதான ஆா்வம் தற்போது மக்களிடையே குறைந்து வருகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடா்பாக மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், நீதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பின் மூன்னாள் தலைவா் சாரஸ்வத் கூறியதாவது:
பேட்டரி தொழில்நுட்பம் வளா்ந்து வரும் தொழில்நுட்பமாக உள்ளது. இந்தியவில் தற்போது பேட்டரி செல்கள் உற்பத்தி கிடையாது.
இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது. உயா் வெப்பநிலை மற்றும் வெப்ப மண்டல தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வகையில் அல்லாமல், தரமற்ற பேட்டரி செல்கள் காரணமாகவே வாகன தீ விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இறக்குமதி செய்யப்படும் அனைத்து பேட்டரிகளையும் ஆய்வுக்கு உள்படுத்துவதோடு, கடுமையான பரிசோதனை நடைமுறைகளுக்கும் உள்படுத்தவேண்டும்.
ஒரு சில நாடுகள் மட்டுமே உயா் வெப்பநிலையிலும் பாதிப்பின்றி செயல்படக் கூடிய பேட்டரிகளை உற்பத்தி செய்கின்றன. அதுபோல, இந்தியாவும் விரைந்து உள்நாட்டிலேயே சொந்த பேட்டரி செல்கள் உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் இந்திய சூழலுக்கும், உயா் வெப்பநிலைக்கும் உகந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறினாா்.
சிறுபான்மையினரைச் சாா்ந்த சமூகத்தை தோ்ந்தெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்றும் இதுதொடா்பான இறுதி முடிவு எடுக்கும்முன் மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பத்து மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதாக மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய் வழக்குத் தொடுத்தாா். மேலும், சிறுபான்மையினா்கள் யாா் என்பதை தோ்வு செய்வது குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.
அவரது மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் அளித்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ள நிலையில், மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘தேசிய சிறுபான்மையினா் சட்டத்தின்கீழ் இதுவரை மத்திய அரசு 6 சமூகத்தினரை சிறுபான்மையினராக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்ற போதிலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்டவா்களிடம் ஆலோசிக்கப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாட்சி தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சே நேற்று மாலை பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, பிரதமரின் ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
அண்டை நாடான இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதை சிரமங்களை சமாளிக்க இந்தாண்டு மட்டும் ரூ. 27,000 கோடி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையை தணிக்க இந்திய மக்களும் உதவி செய்து வருகின்றனர்.
மேலும், இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ள மகிந்த ராஜபட்ச, கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கடற்படை முகாம் முன்பு திரண்டுள்ளனர்.
சவுத் கொரியாவின் 13வது அதிபராக பதவி ஏற்கும் யூன் சோக் யோல் அவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் ட்விட்டரில் கூறியதாவது:
சவுத் கொரியாவின் புதிய அதிபருக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகள். விரைவில் தங்களை சந்திக்க கஸ்த்திருக்கிறேன்.இருநாட்டு உறவுகளை மேலும் செரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் முன்னைப்பாக இருக்கிறேன்.
சென்னை: 16-வது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தயாகம் கவி 8,446 கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டபேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 16-வது சட்டப்பேரவையின் மூன்றாம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி ஜன.7-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் (சிறப்புக் கூட்டம்) பிப்.8-ம் தேதியும், மூன்றாவது கூட்டம் மார்ச் 18-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையிலும் நடபெற்றது. தமிழக பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த ஏப்.6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெற்றது.
அதிகமான கேள்விகளை எழுப்பிய 5 எம்எல்ஏக்கள்:
இந்தக் கூட்டத்தொடரில் அதிக அளவு மூல வினா கேட்ட உறுப்பினர்களில், திமுகவைச் சேர்ந்த ப.சிவகுமார் என்ற தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளைக் கேட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, பாமக சட்டமன்றக் குழுத் தலைவரான ஜி.கே.மணி 8312 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதேபோல், 5425 கேள்விகளை எழுப்பிய திமுகவைச் சேர்ந்த எ.எம்.வி.பிரபாகரராஜா மூன்றாவது இடத்திலும், பாமகவைச் சேர்ந்த அருள் 5036 கேள்விகளை எழுப்பி நான்காவது இடத்திலும், பாமகவைச் சேர்ந்த ச.சிவகுமார் 2937 கேள்விகளை எழுப்பி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அதிகமான கேள்விகளுக்கு பதிலளித்த 5 அமைச்சர்கள்:
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 14 கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலா 13 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 12 கேள்விகளுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தலா 11 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: 2019-20 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 29 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.18,538 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரிம் என்று 60 பொதுத் துறை நிறுவனங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது.
இதன்படி 2015 - 16-ம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.14,822 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த நஷ்டம் அதிகரித்து கொண்டுள்ளது.
2019 - 20-ம் ஆண்டில் ரூ.17,243 கோடி நஷ்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2019- 20-ம் ஆண்டில் மட்டும் 60 பொதுத்துறை நிறுவனங்களில் 24 நிறுவனங்கள் ரூ.1,340 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 29 நிறுவனங்கள் ரூ.18,538 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் மறைந்த டேனிஷ் சித்திக்கி இரண்டாவது முறையாக இப்பரிசினை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா காலத்தின் கோர முகங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபீச்சர் ஃபோட்டோகிராஃபி பிரிவில் இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங் நியூஸ் ஃபோட்டோகிராஃபி பிரிவில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் குறித்த புகைப்படங்களை எடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் மார்கஸ் யாமுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் பத்திரிகையாளருக்கு 2022 புலிட்சர் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த டேனிஷ் சித்திக்கி... 1983-ல் புதுடெல்லியில் பிறந்த டேனிஷ், இளமையும் ஆற்றலும் உச்சமாகத் திகழும் பருவத்தில் 38 வயதில் இறந்தார். அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மாறிய உலகத்துக்குள் நுழைந்த ஒரு தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதி அவர். ஜனநாயகரீதியான கருத்துப் பரிமாற்றங்கள், போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படத் தொடங்கிய அதேவேளையில் மதரீதியான, இனரீதியான அடையாளங்கள் கூர்மையடைந்து பரஸ்பரம் மோதிக்கொண்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்ந்து செய்திப் புகைப்படங்களை எடுத்துத்தள்ள வேண்டிய பரபரப்பிலும் செய்திக்குப் பின்னால் இருக்கும் மனித அம்சத்துக்குக் கவனம் அளித்தவர் டேனிஷ் சித்திக்கி. ரோஹிங்கியா அகதிகள் சந்தித்த கொடூரங்கள், சென்ற ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த கலவரம், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்கள், கரோனா இரண்டாம் அலை போன்றவை தொடர்பான ஒளிப்படங்கள் நினைவுகூரத்தக்கவை. ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அவர் எடுத்த ஒளிப்படங்கள்தான் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத்தந்தன.
கலைஞனுக்கு மறைவில்லை என்பதை நிரூபிப்பதுபோல், டேனிஷ் சித்திக்கியின் மறைவுக்குப் பின்னரும் அவருக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது.
புதுடெல்லி: இந்திய விமானப் படையில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சுகோய்-30 ரக விமானங்களை ரஷ்யா தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது இந்திய விமானப் படையில் 272 சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன.
இந்த விமானங்களின் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எச்ஏஎல் நாசிக் மையத்திலும் சுகோய் விமான பாகங்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வகை விமானங்களில் நவீன ரக ஆயுதங்கள் பொருத்துதல், அதிநவீன கருவிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகை மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருந்தது.
இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் இந்தத் திட் டத்தை தற்போது தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து மிகவும் முன்னேறிய வகையிலான சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் 12-ஐ இந்தியா வாங்கவிருந்தது. இதுவும் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. ரூ.20 ஆயிரம் கோடியில் இந்த விமானங்கள் வாங்கப்பட விருந்தன.
போர் காரணமாக விமானங்களுக்கான உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதும் தாமதமாகி வருகிறது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்தது.
சென்னை: இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த கார்த்தி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேலும் தான் அந்த இரண்டு வீரர்கள்.
இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியாவில் வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. இது 11-வது ஆசிய கோப்பை தொடராகும். மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தில் இந்த தொடரில் களம் காண்கிறது இந்தியா. 5 முறை இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தத் தொடருக்கான அணியில்தான் கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் தேர்வாகியுள்ளனர்.
13 ஆண்டுகால தேடல்: சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சீனியர் ஆடவர் ஹாக்கி அணியில் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர். கடைசியாக தமிழகத்தை சேர்ந்த குணசேகர் மற்றும் நவீன் 2009-இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடி இருந்தனர். அதன் பிறகு இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கவில்லை. இப்போது அந்த காத்திருப்பு கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் முற்றுப் பெற்றுள்ளது.
இதில் கார்த்தி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 20 வயதான அவர் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். முன்கள (Forward) வீரர். "அணியில் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை அறிந்ததும் கொஞ்சம் பதற்றமாக உணர்ந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார். 21 வயதான மாரீஸ்வரன், மிட்ஃபீல்டர். இந்திய அணியை ரூபிந்தர் பால் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார்.
வீரர்கள் இருவரையும் தமிழ்நாடு ஹாக்கி பிரிவு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணிக்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவார்கள் என தமிழ்நாடு ஆடவர் அணியின் தலைமை தேர்வாளர் ஆடம் தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறுவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர் காமி ரிட்டா (52). இவர் 1994-ல் முதன்முதலாக இந்த சிகரத்தில் ஏறினார். கடந்த 2018-ம் ஆண்டு மே 16-ம் தேதி 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம் அதிக முறை இந்த சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனை படைத்தார்.
இந்நிலையில், காமி ரிட்டா 11 வழிகாட்டிகள் அடங்கிய குழுவினருடன் கடந்த 7-ம் தேதி 26-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இந்த தகவலை செவன் சமிட் ட்ரெக்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தவா ஷெர்பா தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மே மாதம் மலையேறும் சீசன் தொடங்குவது வழக்கம். இதையடுத்து, இந்த சீசனில் மலேயேற்றப் பாதையில் மலையேறுபவர்களுக்கு உதவும் வகையில் இக்குழுவினர் கயிறுகளை பொருத்தி உள்ளனர். இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 316 பேருக்கு நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது.
எவரெஸ்ட் மட்டுமல்லாது, காட்வின் ஆஸ்டன் (கே2), லேட்சே, மனஸ்லு மற்றும் சோ ஓயு ஆகிய சிகரங்களிலும் ரிட்டா ஏறி சாதனை படைத்துள்ளார்.
தங்கம்... இந்த வார்த்தையே கொஞ்சம் உயர்வானதுதான் என்றால் அது மிகையில்லை. ஒரு நாட்டின் பணமதிப்பிலும் தங்கம் பங்கு வகிக்கிறது. அந்தளவுக்கு தங்கம் ஒரு சிறப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. ராஜாங்க விவகாரத்தில் மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. விலை நிரந்தரமில்லாத தங்ககத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பில்லை என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தினாலும், இந்திய சமூகத்தில் தங்கத்தின் மீதான வாஞ்சை குறையவே இல்லை. அட்சய திருதியை காலத்தில் அதிகரித்து வரும் தங்கத்தின் விற்பனையே இதற்கு சாட்சி.
மத்திய, கீழ்மத்திய வர்க்க குடும்பங்களின் எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிக்க அவர்களிடம் இருக்கும் தங்கம்தான் ஆபத்துதவியாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்கு சாட்சி தொலைக்காட்சி, பத்திரிகைகளில் நகைகளை அடமானம் வைப்பதற்கும், விற்பனைக்கு செய்யப்படும் விளம்பரங்கள். தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் போல வங்கிகளும் நகைக்கடன் வழங்குகின்றன.
புதுடெல்லி: ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் அவர்களுக்காக தனியாக குழந்தைக்கு தனியாக படுக்கை வசதி ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரயில்களில் இரவுநேர பயணத்தின்போது படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முன்பதிவு செய்யும்போது குழந்தைகளாக இருந்தால் பாதி கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தனியாக பெர்த் வழங்கப்பட்டது. பாதிக்கட்டணத்தில் பெர்த் வழங்கியதால் ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடன் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதிக் கட்டணத்தில் தனியாக படுக்கை வழங்குவது நிறுத்தப்பட்டது. அதே பாதிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேசமயம் பயணம் செய்யும் தாய் மார்கள் தாங்கள் படுக்கும் படுகையிலேயே குழந்தையை படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது.
இந்தநிலையில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி தற்போது ரயில்களில் அறிமுகம் ஆக உள்ளது. அன்னையர் தினத்தையொட்டி ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.
தாயின் சீட்டை ஒட்டியே குழந்தைக்கான சீட்டும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் ஏசி முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணியர்கள் கூறுகையில் ‘‘ இரவு நேர பயணங்களில் குழந்தையை மடிமேல் படுக்க வைத்து, மிகுந்த சிரமத்துக்கு விடிய விடிய ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. தாய்மார்கள் இந்த வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் நிச்சயம் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்’’ எனத் தெரிவித்தனர்.
ஏசி பெட்டிகளை தொடர்ந்து சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் உபயோகமாக இருக்கும் என்றும் பயணியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம், கைரேகையை ஆதார் தரவுதளத்தில் ஒப்பிட்டு, குற்றவாளியை பிடிக்க உதவுமாறு டெல்லி போலீஸ் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கைக்கு UIDAI எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களுக்கு பிரத்யேக ஆதார் எண்ணை வழக்கும் UIDAI, எந்தவொரு முக்கிய பயோமெட்ரிக் தகவலையும் காவல் துறையுடன் பகிர்ந்து கொள்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறையின் கோரிக்கையை ஏற்பது தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது.
டெல்லி போலீஸ் மனு
கடந்த பிப்ரவரி மாதம், ஆதார் சட்டத்தின் 33(1) பிரிவின் கீழ் டெல்லி உயர் நீதிமன்றத்தை காவல் துறை அணுகியது. அச்சட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதி சில வழக்குகளில் அடையாளம் குறித்த தகவல்களை வெளியிட உத்தரவிடலாம்.
ஆதார் சட்டம், 2016 பிரிவுகள் 28(2) மற்றும் 28(5)இன்படி, UIDAI தனிநபர்களின் அடையாளத் தகவல் மற்றும் அங்கீகாரப் பதிவுகளின் ரகசியத்தன்மையை உறுதி செய்யும் என்று கூறுகிறது. எந்தவொரு UIDAI ஊழியர் பணியில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்றப்பிறகோ, தரவுக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவலை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
வழக்கு என்ன?
ஜூன் 12, 2018 அன்று, ஹேமந்த் குமார் கௌசிக் என்ற நகைக்கடைக்காரர், ஆதர்ஷ் நகரில் உள்ள அவரது கடையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு சந்தேகநபர்கள் கடையை கொள்ளையடித்த போது, மூன்றாவது நபர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வெளியே காத்திருந்தார். கௌசிக் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, அவரை சுட்டுக்கொன்றனர்.
காவல் துறை நடத்திய விசாரணையில், 14 கைரேகைகளும், சிசிடிவியில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படமும் சிக்கியுள்ளது. காவல் துறையிடம் ஏற்கனவே உள்ள குற்றவாளிகள் புகைப்படம் மற்றும் கைரேகையுடன் அவரை ஒத்துப்போகவில்லை. தற்போது, போலீஸ் ஆதாரின் பயோமெட்ரிக் டேட்டாபேஸை உபயோகிக்க முடிவு செய்தனர்.
UIDAI சேகரிக்கும் தரவுகள் என்ன?
குடியிருப்பாளர்களின் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை ஆணையம் சேகரிக்கிறது. அவர்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பத்து விரல்களின் கைரேகை, இரண்டு கருவிழி ஸ்கேன், புகைப்படம் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. பிராசஸ் முடிவடைந்த பிறகு, அவர்களுக்கு 12 டிஜிட் ஆதார் எண் வழங்கப்படும்.
தரவு ரகசியத்தன்மை
ஆதார் சட்டத்தின்படி UIDAI தான் சேகரிக்கும் அடையாளத் தகவலின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். UIDAIகூற்றுப்படி, டெல்லி காவல்துறையின் கோரிக்கை சட்டப்பிரிவு 29க்கு முரணானது. அச்சட்டம், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற முக்கிய பயோமெட்ரிக் தகவல்களை எந்த நிறுவனத்துடனும் எந்த காரணத்திற்காகவும் பகிர்வதை தடை செய்கிறது. ஆதார் கார்டு உரிமையாளரின் அனுமதியின்றி ஆதார் தரவைப் பகிர முடியாது என்றும் UIDAI கூறியுள்ளது.
டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சட்டப்பிரிவு 33இல் புகைப்படம் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே வெளியிட கூறுகிறது. முக்கிய பயோமெட்ரிக் தகவல்கள் பகிர சட்டம் அனுமதிக்கவில்லை. அதேபோல், சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது கார்டு உரிமையாளரின் அனுமதியின்றி அத்தகைய உத்தரவை நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது எனவும் கூறுகிறது.
இச்சட்டத்தில் தேசிய பாதுகாப்பு விதிவிலக்கும் உள்ளது. மத்திய அரசின் செயலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி, தேசிய பாதுகாப்பு நலன் கருதி அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவு உள்ளிட்ட தகவல்களை வெளியிட உத்தரவிடலாம்.
தொழில்நுட்ப தடை
டெல்லி போலீஸ் மனுவை எதிர்ப்பு தெரிவித்த UIDAI, 1:N தரவுப் பகிர்வு சாத்தியமில்லை, அது 1:1 அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
ஆதார் தொழில்நுட்பம் பயோமெட்ரிக் அங்கீகாரங்களை மட்டுமே அனுமதிக்கிறது. அவை 1:1 அடிப்படையில் செய்யப்படுவதால், தனிநபரின் ஆதார் எண்ணை வைத்திருப்பது அவசியம்.
தடயவியல் நோக்கங்களுக்கான தொழில்நுட்பங்கள், தரநிலைகள் அல்லது நடைமுறைகளின் அடிப்படையில் கருவிழி ஸ்கேன், கைரேகைகள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கவில்லை. எனவே, பயோமெட்ரிக் தரவை சீரற்ற பொருத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. அவை சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் என UIDAI நீதிமன்றத்தில் கூறியது.
ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு, “லைவ் பயோமெட்ரிக்ஸ்” மற்றும் ஆதார் இரண்டையும் வைத்திருப்பது அவசியம். எனவே, ஆதார் எண் மூலம் மட்டுமே ஒரு தனிநபரின் அடையாளத்தை ஆணையம் பெற முடியும். அறியப்படாத குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வழங்குவது கூட தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை. UIDAI இன் தொழில்நுட்ப கட்டமைப்பு 1:N பொருத்தத்தை அனுமதிக்காது என UIDAI தெரிவித்தது.
கோவையில் பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
இத்திட்டத்தை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நடத்தும் என்ஜிஓ அமைப்பான மக்கள் சேவை மையம், ரோட்டரியுடன் இணைந்து முன்னிறுத்தியுள்ளது.
விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், “கோவை தெற்கு தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களுடன் நெருக்கமாகி அவர்களது பிரச்சினைகளை கண்டறிந்து உதவிகளை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஊக்கமளிக்கிறார். இதேபோல், மக்களுக்கு சேவையாற்றும் வானதி போன்ற எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் நீங்கள் பா.ஜனதா அரசு ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, வெண்டிங் மேஷின் மூலம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
>அமுதம் பால் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படும். அதனை அருகில் உள்ள மளிகை கடைகளில் காட்டி அமுதம் பசும்பாலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தினமும் பயனாளிகளுக்கு ¼ லிட்டர் பசும் பால் வழங்கப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார்.
Mahinda Rajapaksa: A street-fighter politician who maintained image of security, stability but failed on economic front: சக்தி வாய்ந்த ராஜபக்சே குலத்தின் 76 வயது தேசபக்தரான மகிந்த ராஜபக்சே, ஒரு காலத்தில் இலங்கையின் முன்னனி தலைவராக அறியப்பட்டவர். ஆனால் இலங்கையில் இதற்கு முன் இல்லாத தற்போதைய பொருளாதார கொந்தளிப்பால் தூண்டப்பட்ட முன்னோடியில்லாத அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சுனாமியாக மாறி, மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை தேசத்தின் தற்போதைய மோசமான பொருளாதார நெருக்கடியானது வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது, இதன் பொருள் இலங்கை இறக்குமதி செய்யும் முக்கிய உணவுகள் மற்றும் எரிபொருளுக்கு அந்த நாடு பணம் செலுத்த முடியாது, இது கடுமையான தட்டுப்பாடு மற்றும் அதிக விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
இதன் காரணமாக, அதிபர் கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ஆகியோர் பதவி விலக கோரி இலங்கை முழுவதும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதிகரித்த அழுத்தத்தின் கீழ், அதிபர் கோட்டாபய ராஜபக்சே தனது மூத்த சகோதரர் சமல் மற்றும் சகோதரர் மகன் நமல் ஆகியோரை ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். அதேநேரம், கடனில் மூழ்கியிருக்கும் இலங்கையில் ஆட்சி நடத்துவதில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தபோதும், பிரதமர் மஹிந்த ராஜினாமா செய்யத் தயங்கினார்.
அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு வெளியே போராடி வந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதன் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை விதிக்கவும் மற்றும் தேசிய தலைநகரில் இராணுவ துருப்புக்களை நிலைநிறுத்தவும் அதிகாரிகளை தூண்டியதை அடுத்து மஹிந்தவின் ராஜினாமா செய்யப்பட்டது.
அரச சேவை, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், கல்வி மற்றும் தபால் துறை உட்பட பல துறைகளில் இருந்து ஏறக்குறைய 1,000 தொழிற்சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட, சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அதிபர் கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த அரசாங்கத்தை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி போராட்ட இயக்கத்தில் இணைந்ததை அடுத்து, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வேகமெடுத்தன.
இரண்டு முறை முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே, 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் படுதோல்வியடைந்தார், நாட்டின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய, 11 இந்தியர்கள் உட்பட 270 பேரைக் கொன்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, மகிந்த 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
மகிந்தாவின் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி (SLPP) குறுகிய காலத்திலே இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றி, அந்த நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றியது.
2020 ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தங்கள் கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, அதிகாரம் வாய்ந்த ராஜபக்சே குடும்பம், அதிபரின் அதிகாரங்களை மீட்டெடுக்க அரசியலமைப்பைத் திருத்தவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தவும் அனுமதித்தது.
மிருகத்தனமான இராணுவ தாக்குதலில் தமிழ்ப் புலிகளை நசுக்கிய மகிந்த, பிரதமராகப் பதவி ஏற்று, தனது வாழ்க்கையில் நான்காவது முறையாக பிரதமரானார்.
ஆரம்பத்தில், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் பரவியதால், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் பிம்பத்தை மஹிந்த பராமரித்து வந்தார். இருப்பினும், மற்ற தெற்காசிய நாடுகளை விட, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாகப் பதிவாகியிருந்த போதிலும், சுற்றுலா சார்ந்த இலங்கைப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த பின்னடைவு, இறுதியில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியது, அது மகிந்தாவை ராஜினாமா செய்ய வழிவகுத்துள்ளது. மூத்த அரசியல்வாதியான மகிந்த, தனது 24வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்து, இளம் நாடாளுமன்ற உறுப்பினரானார். 1977 இல் பதவியை இழந்த பிறகு, 1989 இல் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழையும் வரை அவர் தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
மகிந்த ராஜபக்சே, அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கீழ் தொழிலாளர் அமைச்சராகவும் (1994-2001) மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராகவும் (1997-2001) பணியாற்றினார், ஏப்ரல் 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையைப் பெற்றபோது அவர் தன்னை பிரதமராக நியமித்துக் கொண்டார்.
மகிந்த நவம்பர் 2005 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, வடக்கு இலங்கையில் நடைமுறை அரசாங்கத்தை நிறுவிய புலிகளை நசுக்குவதற்கான தனது விருப்பத்தை மஹிந்த அறிவித்தார்.
தனக்கு முன்னால் அதிகாரத்தில் இருந்தவர்களெல்லாம் தோல்வியடைந்த நிலையில், எல்.டீ.டீ.ஈ உடனான சுமார் 30 வருட இரத்தக்களரி உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மகிந்த ஹீரோவானார். இதன் மூலம் 2010 இல் அமோக வெற்றியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இது, அரசியல் ஆய்வாளர்களை அவரை “மிடாஸ் டச் மனிதன்” என்று முத்திரை குத்த வழிவகுத்தது. 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்த காலத்தில் மஹிந்த தனது பதவியை உறுதிப்படுத்தினார். அவர் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு அரசியலமைப்பு மாற்றப்பட்டது, மேலும் அவரது மூன்று சகோதரர்களான கோட்டாபய, பசில் மற்றும் சமல் ஆகியோருக்கு செல்வாக்கு மிக்க பதவிகள் வழங்கப்பட்டன.
விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய கவலைகள் காரணமாக 2014 ஆம் ஆண்டில் அவரது உள்நாட்டுப் புகழ் குறைந்து காணப்பட்டது, மேலும் ஆதரவை இழக்கும் முன் மீண்டும் அதிபர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில், மகிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அரசியல் சூதாட்டம் பின்வாங்கியது மற்றும் அவர் 2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். முன்னாள் ராஜபக்சேவின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அவரை தோற்கடித்து அதிபராக பதவியேற்றார்.
மகிந்த அதிபராக இருந்த காலத்தில், சீனாவுடன் பல முக்கிய உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டார், இது இந்தியாவிலும் மேற்குலகிலும் கவலைகளை எழுப்பியது.
“சீனக் கடன் பொறிக்குள்” நாடு வீழ்ந்ததற்கு மகிந்த தான் காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அவரது ஆட்சியின் போது சீனக் கடனால் நிதியளிக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகம், இலங்கை கடனைச் செலுத்தத் தவறியதை அடுத்து, 2017 ஆம் ஆண்டில் 99 வருட கடனுக்கான ஈக்விட்டி இடமாற்றத்தின் அடிப்படையில் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு, மஹிந்தவை மீண்டும் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், ஜனாதிபதி பதவிக்கான அரசியலமைப்பின் இரண்டு கால வரம்புகளை நாடாளுமன்றம் மீட்டெடுத்தது. ஆகஸ்ட் மாதம் மஹிந்த பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
2015ல் ராஜபக்சே தோல்வியடைந்த பின்னர், கைது மற்றும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் போராடி வந்தனர். முறைகேடு செய்ததாக அவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 அக்டோபரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்த அப்போதைய அதிபர் சிறிசேனவால் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டார், இது நாட்டை அரசியலமைப்பு நெருக்கடிக்குள் தள்ளியது. சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை “சட்டவிரோதமானது” என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து டிசம்பர் 15 அன்று மஹிந்த ராஜினாமா செய்தார்.
பின்னர், மகிந்தவும் பாராளுமன்றத்தில் அவரது ஆதரவாளர்களும் ஆளும் கட்சியிலிருந்து விலகி, அவரது சகோதரர் பசில் நிறுவிய SLPP இல் இணைந்து, அவர் முறைப்படி எதிர்க்கட்சித் தலைவரானார்.
ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ராஜபக்சேக்கள் தலைமையிலான SLPP, பாதுகாப்பு விவகாரத்தில் ஏற்பட்ட தோல்விக்காக அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சாடியது.
இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் இறுதி ஆண்டுகளில் அவரது பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் கோட்டபய ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக SLPP அறிவித்தது.
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து கவலையடைந்த இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ராஜபக்சே சகோதரர்கள் உறுதியளித்தனர். 2019 அதிபர் தேர்தலில் கோட்டபய வெற்றி பெற்றார்.
அதிபராக பதவியேற்ற பின்னர் கோட்டபய மஹிந்தவை பிரதமராக நியமித்தார்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணங்கள் தொடா்பான புள்ளிவிவர அறிக்கை விவாதப்பொருளாகி இருக்கிறது.
2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் 1.5 கோடி போ் கொள்ளை நோய்த்தொற்றுக்கு பலியானதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. பல்வேறு நாடுகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கையான 54 லட்சத்துடன் ஒப்பிடும்போது, உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் ஏறத்தாழ மூன்று மடங்கிலும் அதிகம்.
அந்த அறிக்கையின்படி, பெரும்பாலான கொவைட் 19 உயிரிழப்புகள் தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியாவில் நிகழ்ந்திருக்கின்றன. மொத்த உயிரிழப்புகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் அதிகாரபூா்வ கொவைட் 19 உயிரிழப்பு எண்ணிக்கை 4.81 லட்சம் என்றால், அதுவே உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 47.11 லட்சம்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நிதி ஆயோக், எய்ம்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் வல்லுநா்கள், உலக சுகாதார அமைப்பு கையாண்டிருக்கும் கணக்கீட்டு முறையையும், எண்ணிக்கையையும் விமா்சித்திருக்கிறாா்கள். மாா்ச் மாதம் ‘லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்ட புள்ளிவிவரங்களுடன் உலக சுகாதாரஅமைப்பின் அறிக்கை தரும் எண்ணிக்கை ஒத்துப் போகிறது என்றாலும், இப்போது வெளியிட்டிருக்கும் பத்து மடங்கு அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையை அவா்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாா்கள்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் ‘அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை’ என்பது, வழக்கமான உயிரிழப்புகளிலிருந்து கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அதிகரித்த எண்ணிக்கை என்று கொள்ளலாம். 2023-இல் கூடுதல் தகவல்களைத் திரட்டி, மறு மதிப்பீட்டு அறிக்கை வெளிவரும் என்று அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. பல வளா்ச்சி அடைந்த நாடுகள் அந்த அமைப்பின் புள்ளிவிவரம் குறித்து சந்தேகம் எழுப்பி இருப்பதுதான் அதற்குக் காரணம்.
கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டதில், உலக சுகாதார அமைப்பு பல சறுக்கல்களையும், தவறுகளையும் எதிா்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். நோய்த்தொற்று பரவத் தொடங்கிப் பல வாரங்கள் கடந்தும்கூட சா்வதேச அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவில்லை. வூஹான் நகருக்கு சா்வதேச விஞ்ஞானிகள் சென்று ஆய்வு நடத்த சீனாவை சம்மதிக்க வைப்பதற்கே பல வாரங்கள் எடுத்தன. அதற்குள் உலக அளவில் நோய்த்தொற்று பரவிப் பல உயிா்கள் பலியாகி விட்டன.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் உலக சுகாதார அமைப்பின் எண்ணிக்கை முறையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. தேசம் தழுவிய அளவிலான நோய்த்தொற்று பாதிப்பு விகிதத்தின் (டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட்) அடிப்படையில் அமைந்திருக்கும் உலக சுகாதார அமைப்பின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பு, இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிற அவா்களின் வாதத்தில் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது.
3.46 கோடி மக்கள்தொகையுள்ள கேரளத்தில் 10 போ் உயிரிழந்தால், 140 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் 406 போ் உயிரிழந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பு அனுமானிக்கிறது. 2020-இல் மகாராஷ்டிரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் 15% இருந்தது என்றால், 2021-இலும் அதே அளவு பாதிப்பு இருந்ததாகக் கருதுகிறது. பல மாநிலங்களின் உயிரிழப்புக் கணக்குகளை, இணையதளத்திலிருந்தும், ஊடகச் செய்திகளின் அடிப்படையிலும் சேகரித்ததாகக் கூறுவதால் அந்தக் கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பெரும்பாலான நாடுகளின் உயிரிழப்பு புள்ளிவிவரங்களை அப்படியே ஏற்றுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு, இந்தியாவின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு, நமது ஊடகங்களில் வெளிவந்த விமா்சனங்களைச் சுட்டிகாட்டுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாகக் குழப்பத்தின் பிடியில் சிக்கி, எந்தவித கட்டமைப்பும் இல்லாத ஈராக்கின் புள்ளிவிவரம் எந்தவிதக் கேள்விக்கும் உள்ளாகாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதும், இந்தியாவின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உலக சுகாதார அமைப்பின் உள்நோக்கத்தை சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொள்ளை நோய்த்தொற்றின்போது, நமது உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் பலவும் கொவைட் 19 மரணங்களைக் கணக்கில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது என்னவோ உண்மை. மக்கள் மத்தியில் பீதி ஏற்படாமல் இருக்க சரியான புள்ளிவிவரம் வெளியிடப்படாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், பிறப்பு - இறப்புப் பதிவேடு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய பிறப்பு - இறப்பு பதிவு முறையில் சில குறைபாடுகள் இருந்தாலும், பெரும்பாலும் தவறு நடக்க வழியில்லை. ஏனென்றால், இறப்புச் சான்றிதழ் இல்லாமல் சொத்துப் பெயா் மாற்றம் செய்ய முடியாது என்பதால் உயிரிழப்புகள் முனைப்புடன் பதிவு செய்யப்படுகின்றன. கொவைட் 19 உயிரிழப்புகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களை பாதிக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு அறிக்கையும், கணக்கும் ஒருபுறம் இருக்கட்டும். அதை விமா்சிப்பதில் நேரத்தை வீணாக்காமல், நமது பிறப்பு - இறப்பு பதிவு முறையை அப்பழுக்கற்ாகக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சரியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் முறையான திட்டமிடல் சாத்தியம்.
கி.மு 200-ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உருவான வரதட்சணை என்ற பழக்கம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் போனாலும் நமது தேசத்தில் தொடா்கிறது.
நமது அண்டை நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இது பொதுவான பழக்கமாகிவிட்டது. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைக்கு காரணமான சமூகத் தீமையான வரதட்சணை 1961-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்ட விரோதம் என்ற போதிலும் 95% இந்திய திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படுவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.
தங்கத்தின் விலை உயரும்போது இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளில் குறைவான குழந்தைகள் மட்டுமே பிறந்த முதல் மாதத்தில் உயிா் பிழைப்பதாக லண்டனில் இருந்து செயல்படும் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலும் வரதட்சணையின் ஒரு பகுதியாக தங்கம் இருப்பதனால் தங்கத்தின் விலை உயரும்போது பெண் குழந்தைகளுக்கான செலவு உயரும் என்ற அச்சத்தில் பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படுவதாக அக்கட்டுரை கூறுகிறது. 90% க்கும் அதிகமாக தங்கத்தினை இறக்குமதி செய்யும் இந்தியாவில் நகை வடிவிலான தங்கம் வரதட்சணையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே தங்கத்தில் ஏற்படும் சா்வதேச விலை மாறுபாடு வரதட்சணை மதிப்பில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துவதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
ஆரம்ப காலங்களில் மகளின் நிதிப் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் அல்லது அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடியதாக உருவெடுத்துள்ளது. தெற்காசியாவில் வழங்கப்படும் வரதட்சணை சராசரி குடும்ப வருமானத்தை விட ஆறு மடங்கு அதிகம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்திய சட்டங்களால் தடை செய்யப்பட்ட வரதட்சணை, தங்களுக்கு விதிக்கப்பட்ட வரியினைப் போல் பாவித்து பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பெண் குழந்தை பிறந்தவுடனே வரதட்சணைக்காகச் சேமிக்கத் தொடங்குகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
2020-ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் 19 பெண்களின் மரணத்திற்குக் காரணம் வரதட்சணை என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு ஒன்று. 2020-ஆம் ஆண்டில் வரதட்சணை காரணமாக 7,045 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் 6,966 பெண்கள் இதனால் மரணமடைந்துள்ளனா் என்றும் இத்தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம் திருமணங்களை விட கிறிஸ்தவ, சீக்கியத் திருமணங்களில் வரதட்சணை அதிகரித்துள்ளதாகவும், முஸ்லிம் திருமணங்களின் சராசரி நிகர வரதட்சணை ஹிந்து திருமணங்களை விட சற்று குறைவாகவே உள்ளதாகவும் உலக வங்கியின் வலைப்பதிவில் வெளியான சமீபத்திய கட்டுரை கூறுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1960, 2008 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் இந்திய கிராமங்களில் நடைபெற்ற 95% திருமணங்களில் வரதட்சணை வழங்கப்பட்டதாகவும் 1970-ஆம் ஆண்டிலிருந்து கேரளத்தில் வழங்கப்படும் வரதட்சணை அதிகரித்து வருவதாகவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.
ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வரதட்சணைப் பழக்கம் குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ (பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்) திட்டத்தின் மிக முக்கிய நோக்கம், பாலின விகிதத்தின் சரிவை மாற்றியமைப்பது. சரிந்து வரும் பாலின விகிதத்திற்கும் வரதட்சணைக்கும் இடையிலான தொடா்பைப் புரிந்துகொள்வதற்கு ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை என்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம் போன்ற சமூகத் திட்டங்கள் கூட வரதட்சணைக்கு எதிரான சமூகப் போராக உருவாகவில்லை என்றும் சமூகவியல் அறிஞா்கள் கூறுகின்றனா்.
வரதட்சணைக்கு மற்றொரு பெயா் ‘திருமணப் பரிசு’. பெண் குழந்தைகளைப் பாதுகாக்க கடந்த காலங்களில் உருவான ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் என்பது வரதட்சணையை அரசாங்கமே ஆதரிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் பெயரிலான இந்த திருமண நிதியுதவித் திட்டம் தற்போது அவரது பெயரிலேயே உயா்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவா்கள் உயா்கல்வியை முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவா்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கெதிரான வரதட்சணை போன்ற சமூக அவலங்களை அகற்ற பெண் கல்வி அவசியம் என்பதனை உறுதி செய்யும் வகையில் இம்மாற்றம் அமைந்துள்ளது.
தங்க நகை, மகிழுந்து, இருசக்கர வாகனம், வீடு, குளிா்சாதனப் பெட்டி போன்றவற்றை தனது மகளுக்கு மனமுவந்து கொடுப்பது வரதட்சணையாகாது என்று கூறுபவா்கள் உண்டு. சமூக அழுத்தம் காரணமாகவோ தனது மகளின் வேண்டுதலின் பேரிலோ சுய விருப்பத்திலோ வழங்கப்படும் அன்புப் பரிசும் கூட சமூகத்தின் பாா்வையில் வரதட்சணையே.
மிகையான ஆடம்பரத்துடன் கூடிய திருமணமும் வரதட்சணைக்கு எதிா்வினையாற்ற முடியாது செய்கிறது.
உயா்வருவாய் பிரிவினரை இலக்காக கொண்ட பிரபல வங்கியின் பிரமாண்ட திருமணத்திற்கான தனிநபா் கடன் விளம்பரம், பிரபல நகைக்கடையின், திருமணத்திற்கான வைர நகை விளம்பரம் போன்றவை ஏழைகளிடத்தில் ஏற்படுத்தும் மனரீதியான பாதிப்பு அவா்களின் பெண்குழந்தைகளின் திருமணத்தின் போது அவா்களை கடனாளியாக்குகின்றன.
வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் வரதட்சணை கொடுமைகளை நம்மால் தடுத்து நிறுத்த இயலவில்லை. பணக்கார சமூகத்தின் திருமணப் பரிசான வரதட்சணை, ஏழை குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. பொருளாதார ரீதியில் வா்க்க பேதத்தை ஏற்படுத்தும் வரதட்சணையை ஒழிப்போம். திருமணம் என்பது தங்க நகைககளின் சங்கமமாக இல்லாமல் அன்பின் சங்கமமாக இருக்கட்டும்.
ஏப்ரல் 19-ல் சென்னையில் காவல் நிலைய விசாரணையின்போது இளைஞர் விக்னேஷ் இறந்தது தொடர்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், நம்பிக்கைக்குரிய சில நகர்வுகள் தென்படத் தொடங்கியுள்ளன. விக்னேஷின் இறப்பு சந்தேகத்துக்குரியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில், தற்போது அது கொலைவழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள், காவல் துறையைத் தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் விருப்புவெறுப்பின்றிச் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதுபோலவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கமணி உடல்நலம் குன்றி இறந்ததும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களின் நலன் சார்ந்து அரசின் செயல்பாடுகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, "திமுகவின் தேர்தல் அறிக்கையின் மீது ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்பின் காரணமாகதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அந்த தேர்தல் அறிக்கையின்படி 90 சதவீத வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றினாலே ஆட்சியில் 100 சதவீதம் வெற்றி பெற்றுவிடும். ஆனால், அதற்கு நிதிச் சுமையை அரசு காரணம் காட்டி சிலவற்றை தவிர்த்துள்ளது.
திமுக பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறை சார்ந்து தொலைநோக்குப் பார்வையின் கீழும், நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இதனை வணிக ரீதியாக லாபகரமான தொழிலாக மாற்றும் நடவடிக்கைகளாக அரசு முன்னெடுத்துள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை சொல்லலாம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகர்வு.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய விவசாய முறைக்கான ஆராய்ச்சி மையம் நம்மாழ்வார் பெயரில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சொன்னார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் வேளாண் கல்லூரிகள் தொடங்கியுள்ளார்கள்.
அதே நேரத்தில் விவசாய மக்களின் உடனடி தேவை என்ற அடிப்படையில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது" என தெரிவித்தார்.
இது தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் குழு துணைத் தலைவரும், வழக்கறிஞருமான வெ.ஜீவகுமார் பகிர்ந்தவை: "விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்தது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். இருந்தாலும் குளறுபடியான மற்றும் குழப்பமான அறிவிப்புகளை இந்த அரசு அறிவிக்கிறது.
குறிப்பாக, காவிரி விவகாரத்தில் இந்த அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதாக தெரிகிறது. காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது விவகாரம் குறித்து இந்த அரசு பேச மறுக்கிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை மூன்று முறை நடத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இங்குள்ள கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையை கூட அரசு வெளிப்படுத்தவில்லை. நகைக்கடன் உட்பட கடன் தள்ளுபடி மீதான குளறுபடிகள், மின்சாரக் கட்டணத்தின் மீதான மாற்றுக் கருத்து, நெல் கொள்முதலில் கூட இந்த அரசு தடுமாறுகிறது.
மொத்தத்தில் இந்த அரசு கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், அதை செயல்பட தவறுகிறது. இருந்தாலும் ஆட்சி அமைந்து ஓராண்டு தான் நிறைவு பெற்றுள்ளது. அதனால் இந்த ஓராண்டை வைத்து அரசின் செயல்பாட்டை எடை போட்டுவிட முடியாது. நூறு நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுடன் இணைக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை" என தெரிவித்துள்ளார்.
வேளாண்மை சார்ந்து அரசின் முக்கிய அறிவிப்புகள்:
> பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.
> சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் இயக்கம்
> ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்
> மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம்
> உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி
> பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி
> தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி
> தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.
> பசுமைக்குடில், நிழல் வலைக் கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி
> தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி
> உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி
> காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி
> பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி
> பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி
> பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி
> முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் - ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடி
> 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ.10 கோடி
> ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் கூட்டுறவுத் துறையில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் (சிஐடியு) கிருஷ்ணமூர்த்தி...
நிறைகள்: "கரோனா தொற்று காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பாக 20-க்கு மேற்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நகைக்கடன் அளித்ததில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
குறைகள்: நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், பல சங்கங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. கூட்டுறவுத் துறையில் இருந்தது பொது விநியோகத் துறையை பிரித்து தனித் துறை அமைக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பால் விலையைக் குறைத்துவிட்டு பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
> தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
> கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க, கூட்டுறவு சங்கம் மூலம் மற்ற வியாபாரிகளுக்கும் குறுகிய கால கடன் வழங்க வேண்டும்.
> தையல் கூட்டுறவுச் சங்கங்கள் செய்யும் பணிகளுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்.
> நியாவிலைக் கடையில் பொருட்களை பாக்கெட் போட்டு விற்பனைச் செய்தால் எடை குறைவு போன்ற புகார்களைத் தவிர்க்கலாம்.
கடந்த மே 1, உழைப்பாளர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கரோனா ஊரடங்குக் காரணங்களால் தடைபட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த உழைப்பாளர் தின கிராம சபை சமூக ஆர்வலர்கள், கிராம இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இம்முறை கிராம சபையில் ஊராட்சியின் வரவு-செலவுக் கணக்குகளைக் குறிப்பிடும் படிவம் 30-ஐ அச்சிட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், 2021–22 நிதியாண்டின் வரவு-செலவு விவரங்களைப் பதாகையாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது, மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. ஆனால், தங்கள் ஊரின் மிக அத்தியாவசியமான விஷயங்கள் குறித்து ஊராட்சி நிர்வாகத்தோடு கலந்துரையாடுவதற்கும், அது குறித்து முடிவுகளை எடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் மிக ஆவலாக இருந்த மக்கள், இந்தக் கிராம சபையில் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.
கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விவாதப் பொருட்களாக அரசு பரிந்துரைத்தவற்றை மட்டுமே தீர்மானமாகப் பதிவுசெய்ய வேண்டுமென வாய்மொழி உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கிராம சபையில் மக்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளைத் தீர்மானமாக நிறைவேற்ற மறுத்த அலுவலர், “அரசு கொடுத்துள்ள விவாதப் பொருட்களை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற முடியும்” என்றார். சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்தக் காணொளி அதிர்ச்சியளிக்கிறது. “இதுபோலத்தான் எங்கள் ஊரிலும் நடைபெற்றது” எனப் பலரும் முறையிடுவதைப் பார்க்க முடிகிறது.
உண்மையில், அரசமைப்பு அப்படிச் சொல்லவில்லை. ஒவ்வொரு ஊராட்சியும் அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருட்களைத் தாங்களாகவே தயாரித்து முடிவெடுத்து, அரசு கொடுக்கும் கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு, கிராம சபையில் பேச வேண்டும் - விவாதிக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மக்களின் கோரிக்கையைப் பதிவுசெய்வதுதான் கிராம சபையின் முதல் கடமை. அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கும் சேர்த்து, சென்னையில் தயாரிக்கப்படும் பட்டியலை மட்டுமே பேச வேண்டும், தீர்மானிக்க வேண்டும் என்பது அரசமைப்பை மீறுவது ஆகாதா? ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்க்கும் நாம், ஊராட்சிகளிடம் இப்படியா நடந்துகொள்வது? சில இடங்களில், கிராம சபையில் கலந்துகொண்டவர்கள் இதனைக் கண்டித்துத் தங்கள் ஊருக்குத் தேவையான விஷயங்களைப் பேசித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
கிராம சபையில் மக்கள் அனைவரும் சமமாக அமர வேண்டும் என்பது விதி. மேலும், ஒரு கிராம சபைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த வேண்டியவர், சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்தான். இந்த இரண்டு அடிப்படை விதிகளும் இம்முறை எங்கெல்லாம் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்களோ அங்கெல்லாம் மீறப்பட்டதைப் பார்க்க முடிந்தது. அமைச்சர்களுக்கு என ஒரு சிறு திண்ணை போன்ற ஒரு மேடை அமைப்பு... பொதுமக்கள் தரையில்!
அடுத்த விதி மீறல், ஊராட்சித் தலைவர்கள் ஒரு ஓரமாக நின்றிருந்ததையும், அமைச்சர்கள் நடுநாயகமாக ஒரு அரசு விழாவை நடத்துவதுபோல கிராம சபைக் கூட்டத்தைத் ‘தலைமையேற்று’ நடத்தியதையும் பார்க்க முடிந்தது. கிராம சபைக் கூட்டம் அரசு அறிவிப்புகளை வழங்கும் கூட்டம் அல்ல. ஊராட்சியில் இதுவரை நடைபெற்ற திட்டங்கள் மற்றும் செலவினங்கள் குறித்த ஆய்வை மக்கள் மேற்கொள்வது, ஊராட்சி நிர்வாகமும் மக்களும் ஊருக்குப் பொதுவான விஷயங்களை விவாதித்து முடிவெடுப்பது ஆகியவைதான். கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பே தவிர, கூட்டத்தை அவர் நடத்த வேண்டும் என்பதில்லை. கூட்டத்தை ஊராட்சித் தலைவரே முன்னின்று நடத்துவார். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டமும் அதைத்தானே சொல்கிறது.
சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் வழக்கமாக நான்கு நாட்கள் கட்டாயம் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை 6 நாட்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கிராம சபைக் கூட்டம் என்பது ஆறு நாட்களையும் தாண்டி, மக்களின் தேவைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு ஆண்டில் கூட்டிக்கொள்ளலாம் என்பதும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஊராட்சி, அரசின் முன் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்பதும் குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் முன்னனுமதி பெறத் தேவை இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு அரசமைப்பு, உள்ளூர் மக்களுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை மற்றுமொரு அரசுக் கூட்டமாக, அறிவிப்புகள் வழங்கும் நிகழ்வாக மாற்றிவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இனிவரும் காலத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் என்பது சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் தயாரிக்கப்படும் விவாதப் பொருட்களோடு, அரசு கொடுக்கும் விவாதப் பொருட்களும் இணைக்க வேண்டும். குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்மொழியும் விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை தீர்மானமாக நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது. இரண்டாவது, முதல்வரே கலந்துகொண்டாலும் கிராம சபையில் ஒரு பார்வையாளராகத்தான் அவர் கலந்துகொள்ள முடியும். ஊராட்சித் தலைவர்தான் கிராம சபையை நடத்த வேண்டும். கடந்த முறை பாப்பாப்பட்டி கிராம சபை (அக்டோபர் 2, 2021) கூட்டத்திலும் சரி, இம்முறை செங்காடு (24.04.2022) கிராம சபைக் கூட்டத்திலும் சரி, முதல்வர்தான் கூட்டத்துக்குத் தலைமை ஏற்றார். ஊராட்சித் தலைவர்தான் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்த வேண்டும்.
தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக ஆக வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு ஊராட்சியையும் ஒவ்வொரு கிராம சபையையும் அதில் பங்காளியாக்க வேண்டும். சென்னையிலிருந்து அனுப்பப்படும் பட்டியலுக்குக் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும் என்று நினைக்கலாகாது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கான உரிமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.
பல சமூக ஆர்வலர்கள், கிராம இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் தொடர் முயற்சியால், தற்போது கிராம சபை குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ள நிலையில், இனி வரும் காலத்தில் சரியான முறையில் அவை நடத்தப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
- நந்தகுமார் சிவா, பொதுச்செயலாளர், தன்னாட்சி அமைப்பு. தொடர்புக்கு: nanda.mse@gmail.com
கடைசியில், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை நேற்று (09.05.2022) ராஜினாமா செய்துவிட்டார். இலங்கையில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிளம்பிய பாரிய அழுத்தத்துக்கு மத்தியில், இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் எடுத்திருக்கிறார்.
இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பல தடவை பதவி வகித்துள்ள மகிந்த ராஜபக்ச தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையை அவரே எதிர்பார்த்திராத ஒரு கணத்தில், எதிர்பார்த்திராத விதத்தில் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துவிட்டதாக நாடு முழுவதும் நான்கு தடவை வதந்திகள் கிளம்பியிருந்தபோதிலும், இப்போதுதான் அந்தத் தகவல் அவரது உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.