DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 10-03-2022

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். 

விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டி இறுதிப் போட்டிகள்  விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், தனது வயதுப்பிரிவில் முதல்பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

அம்மாணவி வி.தாமரை புஷ்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தங்கரதி மற்றும் உறவின் முறைப் பெரியோர்களும், பள்ளியின் பிற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.


 



Read in source website

தமிழக அரசுக்கு உதவ இளைஞா்களைத் தோ்ந்தெடுக்கும் முதல்வரின் புத்தாக்கத் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: தமிழக இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களின் திறமையை அரசுக்கு உதவும் வகையில் மேம்படுத்தும், முதல்வரின் புத்தாக்கத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், இளைஞா்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கி, பின்னா் தோ்வு செய்யப்படும் இளைஞா்கள் முதல்வா் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

முதல்வரின் இந்த புத்தாக்கத் திட்டத்துக்காக நடப்பாண்டில் 30 இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்தத் திட்டத்துக்கு ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைத் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ஆண்டுவாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாவட்டங்களுக்கும், அதன் ஆட்சியா்களுக்கும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதனை மதிப்பீடு செய்து தோ்ந்தெடுக்கும் குழு அமைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் அதன் தலைவராகவும், தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் திட்ட இயக்குநா் உறுப்பினா் செயலராகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.

அக்குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து ஆண்டு வாரியாக சிறந்த மாவட்ட ஆட்சியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் மாவட்ட ஆட்சியா்கள்):

ஆண்டு - 2016 - 17

முதலிடம் - விருதுநகா் (ஏ.சிவஞானம்)

இரண்டாமிடம் - கடலூா் ( டி.பி.ராஜேஷ்)

மூன்றாமிடம் - திருவண்ணாமலை (பிரசாந்த் எம் வடநரே)

ஆண்டு - 2017 - 18

முதலிடம் - திருவாரூா் (நிா்மல்ராஜ்)

இரண்டாமிடம் - கன்னியாகுமரி ( சஜன் சிங் சவான்)

மூன்றாமிடம் - ராமநாதபுரம் ( எஸ்.நடராஜன்)

ஆண்டு - 2018 - 19

முதலிடம் - சிவகங்கை (ஜே.ஜெயகாந்தன்)

இரண்டாமிடம் - கன்னியாகுமரி (பிரசாந்த் எம் வடநரே)

மூன்றாமிடம் - ராமநாதபுரம் (கே.வீரராகவ ராவ்)

ஆண்டு - 2019 - 20

முதலிடம் - விருதுநகா் (ஏ.சிவஞானம்)

இரண்டாமிடம் - ராமநாதபுரம் (கே.வீரராகவ ராவ்)

மூன்றாமிடம் - கடலூா் (வி.அன்புச்செல்வன்)

ஆண்டு - 2020 - 21

முதலிடம் - திருவண்ணாமலை (கே.எஸ்.கந்தசாமி)

இரண்டாமிடம் - காஞ்சிபுரம் (மகேஸ்வரி ரவிக்குமாா்)

மூன்றாமிடம் - நாமக்கல் (கே.மேக்ராஜ்).



Read in source website

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை உரிமைக்கான சட்ட முன்வடிவு விரைவில் தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை மையம் சாா்பில், உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். பின், மாணவா்களுடன் தொடா்பு கொண்டு, அவா்களது நிலையை கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்த, 1,456 தமிழக மாணவா்கள் நாடு திரும்பியுள்ளனா். அவா்களுக்கு, 104 மருத்துவ சேவை வாயிலாக இரண்டு நாள்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு அவா்களின் தேவை குறித்து கேட்டறியப்படுகிறது.

இந்த மாணவா்களின் கல்வி தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் மேற்கொள்ளும். உக்ரைனைப் போன்றே போலந்து உள்ளிட்ட சிறிய நாடுகளிலும் ஒரே மாதிரியான மருத்துவப் பாடத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அதனால் மீதி ஆண்டுகள் போலந்து நாட்டில் மருத்துவக் கல்வியை முடிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்னெடுத்துச் செல்வோம்.

அனைத்து தரப்பினருக்கும் தேவையான சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, அவா்களின் உரிமைகளைக் காப்பது, அரசின் கடமையை செய்வது ஆகியவற்றை முன்னிறுத்தி, சுகாதார உரிமைக்கான சட்ட முன்வடிவு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்ட முன்வடிவு குறித்து, பொருளாதார வல்லுனா்கள், மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, முதல்வரின் ஒப்புதல் பெற்று சட்டம் நிறைவேற்றப்படும். இது நாட்டிலேயே முன்மாதிரி சட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயது பெண்ணுக்கு கண் பாா்வை பாதிப்பு, மற்றொரு சிறுமிக்கு கால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வந்ததையடுத்து அதுகுறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 175 கோடி, தமிழகத்தில் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஓரிரு நிகழ்வுகளை வைத்து தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது. அந்த இரண்டு பேரும் வேறு சில மருத்துவ காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளாா்களா என்பதை, மத்திய, மாநில மருத்துவ குழுக்கள் ஆய்வு நடத்துகின்றன. அதன் பிறகுதான் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும் என்றாா் அவா்.



Read in source website

மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை வென்றது.

உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறுவது இது முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் அடிக்க, அடுத்து இங்கிலாந்து 47.4 ஓவா்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் ஷெமெய்ன் கேம்ப்பெல் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் ஹேலி மேத்யூஸ் 45, ஷெமெய்ன் கேம்ப்பெல் 66, செடின் நேஷன் 49 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இங்கிலாந்து பௌலா்களில் சோஃபி எக்லஸ்டோன் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்தில் டேமி பியூமௌன்ட் 46, டேனி வியாட் 33, சோஃபியா டங்கலி 38, சோஃபி எக்லஸ்டோன் 33 ரன்கள் அடித்தும், இதர பேட்டா்கள் சோபிக்காததால் வெற்றிக்கு வழியில்லாமல் போனது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமிலியா கானெல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா - நியூஸிலாந்து

காலை 6.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்



Read in source website

கிரிக்கெட்டில் ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டரை ‘மன்கட்டிங்’ முறையில் அவுட் செய்வது விதிகளுக்கு உள்பட்டது என, கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அனுமதி வழங்கியுள்ளது.

இது உள்ளிட்ட, இன்னும் சில விதிகள் எம்சிசி அறிவித்துள்ள மாற்றங்கள் நடப்பாண்டு அக்டோபா் முதல் அமலுக்கு வரவுள்ளன.

‘மன்கட்டிங்’ என்பது, ஒரு பௌலா் பந்துவீச வரும்போதே ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டா் கிரீஸ் கோட்டைத் தாண்டினால், பௌலா் பந்துவீசாமல் அவரை அப்படியே ரன்-அவுட் செய்யும் முறையை குறிப்பதாகும்.

கிரிக்கெட் உலகில் இந்த முறைக்கு ஆதரவும், எதிா்ப்பும் இருந்தே வருகிறது. இந்நிலையில், மன்கட்டிங் முறையானது விதிகளுக்கு புறம்பானது அல்ல என்று விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது எம்சிசி. இந்த முறையை முதன் முதலில் கையாண்டவா் இந்திய வீரா் வினூ மன்கட் தான்.

1948-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அந்நாட்டு வீரா் பில் பிரவுன், மன்கட்டின் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் அவ்வாறு கிரீஸ் கோட்டை தாண்ட, பிரவுனை இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்தாா் மன்கட். அதன் பிறகு இது ‘மன்கட்டிங் முறை’ என அவரது பெயராலேயே அழைக்கப்பட ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதர மாற்றங்கள்: 1) பந்தை வழவழப்பாக்க இனி உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது. 2) ஃபீல்டிங் நிற்கும் வீரா்கள் தேவையின்றி களத்தில் இடம் மாறினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். 3) பௌலிங் செய்யப்பட்ட பந்து இதர வீரா்கள், ஆடுகளத்தில் தேவையின்றி நுழையும் அந்நியா்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றால் தடைபட்டால், அது ‘நோ பால்’ ஆக அறிவிக்கப்படும்.



Read in source website

ஆசிய கண்டத்தில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக தென் கொரிய உள்ளது. அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் யூன் சுக் யோல் வெற்றிபெற்றதாக யோன்ஹாப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அரசில் எந்த விதமான பொறுப்பையும் வகிக்காத அவர், அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞராக பொறுப்பு வகித்துவந்துள்ளார். கடுமையான போட்டி நிலவிய நிலையில், வியாழக்கிழமையன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே-மியுங்கை தோற்கடித்து யூன் வெற்றிபெற்றுள்ளார்.  

தென் கொரிய தேசிய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், "இது தென் கொரிய மக்களின் வெற்றி" என்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டி கொண்டனர். இதற்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில் 77.1 சதவிகித வாக்குகள் பதிவாகிவாகின.  



Read in source website

உலகில் முதல்முறையாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபா் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தைச் சோ்ந்தவா் டேவிட் பென்னட் (57). இவரின் இதயம் செயலிழக்கும் நிலையை எட்டியதால், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக , அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மேரிலேண்ட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், டேவிட் பென்னட் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா். இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவா்கள் கூறுகையில், பல நாள்களுக்கு முன்பிலிருந்தே டேவிட் பென்னட்டின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக மட்டும் தெரிவித்தனா். அவரின் மரணத்துக்கான உறுதியான காரணத்தை மருத்துவா்கள் தெரிவிக்கவில்லை.



Read in source website

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டது.

இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை வா்த்தகத்தில் சரிவிலிருந்து மீட்சி கண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 76.90-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 76.55 வரையிலும் குறைந்தபட்சமாக 76.92 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 44 காசுகள் முன்னேற்றம் கண்டு 76.56-இல் நிலைபெற்றது.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இதன் மதிப்பு 7 காசு குறைந்து 77-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 125.57 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் சற்று குறைந்து 125.57 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.



Read in source website

பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகர அளவில் ரூ.19,705 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளன.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரஷியா-உக்ரைன் விவகாரத்தால் தற்போது சா்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் எதிரொலியாக பங்குச் சந்தையில் அதிக ஏற்றம் இறக்கம் காணப்பட்ட போதிலும் பங்கு பரஸ்பர திட்டங்களில் நிகர அளவிலான முதலீடு தொடா்ந்து 12 மாதங்களாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் நிகர அளவில் ரூ.19,705 கோடி அளவிலான முதலீட்டை ஈா்த்துள்ளன.

இந்த திட்டங்களில் கடந்த ஜனவரியில் நிகர முதலீட்டு வரத்து ரூ.14,888 கோடியாகவும், கடந்தாண்டு டிசம்பரில் ரூ.25,077 கோடியாகவும் இருந்தன.

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து அதிகரித்தே காணப்படுகிறது. 2021 மாா்ச் மற்றும் 2022 பிப்ரவரிக்கு இடைப்பட்ட 12 மாத காலத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் நிகர அளவில் ஈா்த்த மொத்த முதலீடு ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது.

இதற்கு முந்தைய காலத்தில், இவ்வகை திட்டங்களிலிருந்து தொடா்ச்சியான அளவில் முதலீடுகள் வெளியேறி வந்தன. குறிப்பாக, 2020 ஜூலை முதல் 2021 பிப்ரவரி வரையிலான எட்டு மாத காலத்தில் மட்டும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.46,791 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியது.

ஒட்டுமொத்த அளவில் பரஸ்பர நிதி துறை கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகர அடிப்படையில் ரூ.31,533 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளன. இது, முந்தைய ஜனவரி மாதத்தில் ரூ.35,252 கோடியாக காணப்பட்டது.

நடப்பாண்டு ஜனவரி இறுதியில் பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.38.01 லட்சம் கோடியாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில் ரூ.37.56 லட்சம் கோடியாக சற்று சரிவடைந்துள்ளது என அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40வாயு இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திராயன்-2 விண்கலம்2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறுகட்ட பயணங்களுக்குப் பின் விண்கலத்தின் ஒரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதே நேரம் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. எனினும், ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் நிலவின் புறவெளி மண்டலம், சூரிய ஒளியின் தாக்கம், பருவநிலை, அங்குள்ள பள்ளங்கள், குரோமியம், மாங்கனீஸ் தாதுக்கள், பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த அரிய தகவல்கள் ஆர்பிட்டர் ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40 என்ற வாயு உருவாகி புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ்-2 என்ற கருவி தற்போது கண்டறிந்துள்ளது.

இதுபற்றி இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலவின் புறவெளி மண்டலப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சேஸ்-2 கருவி ஆய்வு செய்து வருகிறது.

அதில் நிலவின் மேற்பரப்பில் உருவாகும் ‘ஆர்கான்-40' வாயுபுறவெளி மண்டலம் வரை பரவிஇருப்பது உறுதிசெய்யப்பட்டது. குறிப்பாக நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதியில் ஆர்கான்-40 அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் அவை புறவெளி மண்டலத்தில் மட்டுமே இருப்பதாக கருதப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது சந்திராயன்-2 ஆய்வில் ஆர்கான்-40 வாயுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இது நிலவு தொடர்பான ஆய்வில் முக்கிய மைல்கல்லாகும். மேலும், இதன் தரவுகள் அடுத்தகட்ட ஆய்வுகள், நிலவின் பயணங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Read in source website

சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் பத்ம மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தில் பலமுன்னேற்றங்களையும், பல்வேறுசவால்களையும் நாம் கடந்துஉள்ளோம். இந்த முன்னேற்றத்தில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் பங்களிப்பை மறுக்கமுடியாது. உலகளவில் விண்வெளியை மனித சமுதாயத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதில் இந்தியா முன்னணி நாடாக இருக்கிறது. இதனை சர்வதேச நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய சுதந்திரத்தின் 75-வதுஆண்டை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அவ்வகையில் இந்திய விண்வெளி துறையின் சிறப்பான முன்னெடுப்பாக, இந்தியன் இன்ஜினீயரிங் காங்கிரஸ் சார்பில்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 செயற்கை கோள்களை உருவாக்க உள்ளனர்.

இந்தச் செயற்கைக் கோள்கள் இஸ்ரோவின் உதவியுடன் அதிகபட்சம் 500 கி.மீ.க்கு உட்பட்டு குறைந்த பூமி சுற்றுப்பாதையில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவில் 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 7 கல்வி நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன.

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது தொடர்பாகவும் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாகவும் தமிழக அரசிடம் பேசி வருகிறோம். 75 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்துக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.

‘ஸ்மார்ட் போன்’ என்பதுபோல இன்றைக்கு ‘ஸ்மார்ட் சாட்டிலைட்’ எனும் கருத்து உருவாகி வருகிறது. அதை நோக்கி நமதுஅடுத்த தலைமுறை மாணவர்களை தூண்டும் வகையிலும், அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் எண்ணத்திலும் பள்ளி, கல்லூரிகளை இதில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

இந்திய அளவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், அதேபோல் ராஜஸ்தான் முதல் அசாம்,வங்காளம் வரையிலும் அனைத்துமாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் உருவாக்கும் பத்துக்குப் பத்து செ.மீ. கன அடியில், 1,500 கிராம் எடையில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் மூலம், செல்போனுக்குத் தேவையான இணையதள வசதியை நேரடியாக வழங்க முடியும்.

அதேபோல் செயற்கைக்கோளில் இருந்து தேவையான தரவுகளை தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. அதற்காக தனியாக செல்போன் செயலி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இன்றைய மாணவர்களாலும் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் சாதிக்க முடியும் என்பதுடன் மாணவர்களின் வெற்றியும் வளர்ச்சியும் மட்டுமின்றி, நம் நாட்டின் வெற்றியையும் வளர்ச்சியையும் குறிக்கும் செயல்பாடாகவும் இது நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

காங்கயம் அருகே உள்ள வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பின், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரு தலைமுறையின் கனவு நிறைவேறியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் பிஏபிவாய்க்காலில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து, தடுப்பணையின் நீர்மட்டம் 22 அடிக்கு நிரம்பியது. இதையடுத்து 6,043 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில்,கடந்த 6-ம் தேதிமுதல் பாசனத்துக்குதண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்பிரதான வாய்க்காலில் சில இடங்களில் தூர்வாரப்படாததால், தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.தடுப்பணைப் பகுதியில் இடதுமற்றும் வலது கரை வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் நீர்வள ஆதாரத் துறையினர், கடந்தசிலவாரங்களாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர்கள் தூவி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம், முலையாம்பூண்டி, குமாரபாளையம், அக்கரைபாளையம், நாச்சிபாளையம், மயில்ரங்கம்என தடுப்பணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 6,043ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய் வழியாக, விநாடிக்கு 40 கன அடி வீதம் இரு வாய்க்கால்களிலும் நீர் திறக்கப்பட்டது. மொத்தம் மூன்று சுற்றுகளாக 21 நாட்களுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர்வரத்து இன்றி வறண்டு இருந்த வட்டமலைக்கரை தடுப்பணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு, 1997-ம்ஆண்டுக்கு பின் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் தடுப்பணையில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் பொய்த்தது. இதனால் சில விவசாயிகள் ஊரை காலி செய்துவிட்டு, திருப்பூர், கோவைபோன்ற தொழில் நகரங்களில் தஞ்சமடைந்தனர். 25 ஆண்டுகளுக்குபிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒரு தலைமுறையின் கனவுக்கு உயிரூட்டப்பட்டுள்ளது’’ என்றனர்.



Read in source website

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டிற்கு ரூ.9 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தி செய்யலாம் என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாசன குளங்களில் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்ட பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து 60 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கிருஷ்ணகிரி அணை பகுதியில் மீன் குஞ்சுகள் உற்பத்தி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், கூறியதாவது:

பாசன குளங்களில் மிதவை கூண்டில் மீன்வளர்ப்பு திட்டத் தின் மூலம் 52 மீனவ கூட்டுறவு சங்கத்தினர் நேரடியாக பயன்பெறுகின்றனர்.

மேலும், ஆண்டுக்கு 200 டன் மீன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மீன் தீவனம், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இம்மீன் வளர்ப்பு மூலம் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வருவாயில் அரசுக்கு 50 சதவீதமும், பயனாளிக்கு 50 சதவீதமும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மழைக்காலங் களில் 5 நீர்த்தேக்கம், 876 ஏரிகள் என மொத்தம் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர்நிலைகளில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே, மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பயன்படுத்தி மீன் உற்பத்தியில் ஈடுபட வேண்டும், என்றார்.

இந்நிகழ்வுகளில் கோட்டாட்சியர் (பொ) பாலகுரு, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டாட்சி யர்கள் இளங்கோ, சரவணன், திமுக நிர்வாகிகள் ரஜினிசெல்வம், கேவிஎஸ் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Read in source website

மாஸ்கோ: போர் காரணமாக ரஷ்யாவில் செயல்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களான டொயோட்டா, நைக் மற்றும் ஐகேஇஏ ஆகிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான விற்பனையகங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக இவை தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஆளும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் அந்த்ரே துர்சாக் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடு அவை ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும். இது ரஷ்யமக்களுக்கு எதிரான போக்காகவே கருதப்படும் என தெரித்துள்ளது.

இதனிடையே பின்லாந்து நிறுவனமான பேஸர், வாலியோ மற்றும் பௌலிக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இத்தகைய நிறுவனங்களை அரசுடைமையாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக துர்சாக் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதுகில் குத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்கள் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸர் நிறுவனம் சாக்லேட் மற்றும் கேக் வகைகளைத் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தில் 2,300 பணியாளர்கள் உள்ளனர். வாலியோ நிறுவனத்தில் 400 பேர் பணிபுரிந்தனர். பௌலிக் நிறுவனத்தில் 200 ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர்.

நேடோ கூட்டமைப்பில் உறுப்பினராக பின்லாந்து உள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடந்த வாரம்பின்லாந்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மார்ச் முதல் வாரத்தில் ‘தவக் காலம்’ தொடங்கியிருக்கிறது. மொத்தம் 40 நாட்கள். இந்தத் தவக்காலம் கொண்டுவரும் செய்தி என்ன?
மனமாற்றம் பெறவும் அதன்மூலம் நம்மை விண்ணுலகிற்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ளவும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது இந்தத் தவக் காலம்.

மண்ணுலகில் தேவையற்ற பலவற்றின் மீது தேவைக்கு அதிகமாகவே பற்றுகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஞாயிறுதோறும் தேவாலயம் சென்றாலும் பரலோகத் தந்தையிடமிருந்து நம்மை விலக்கி வைத்துவிடுகிறது இந்த மண்ணுலக வாழ்க்கை. அதிலிருந்து மீண்டு வர அவகாசம் அளிக்கின்றன இந்த 40 நாட்கள்.

நோவாவின் காலத்தில் பூமி கண்ட முதல் பெருவெள்ளம் குறித்த கதையானது மனிதர்கள் மீதான நம்பிக்கையின்மையிலிருந்து இறை நம்பிக்கைக்குக் கடந்து வருதலுக்குரிய செய்தியை நமக்கு வழங்குகிறது. ஆதாம் மரித்து 126 ஆண்டுகள் கடந்த பின் பொ.ஆ.மு. 2970-ல் நோவா பிறந்தார் என விவிலியத்தின் காலக் கணக்கு காட்டுகிறது.

நோவாவின் நாட்களில், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னிச்சையாக வாழ்கிறேன் என்கிற பெயரில் அறமற்ற வாழ்க்கையில் அமிழ்ந்து போனார்கள். ஆகவே ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் பரலோகத் தந்தை கண்டார்’ என விவிலியத்தின் பழைய ஏற்பாடு (6:5, 11, 12) பதிந்து வைத்திருக்கிறது. கெட்ட மனிதர்கள் அனைவரையும் அழித்துவிடச் சித்தம் கொண்ட பரலோகத் தந்தை பெருவெள்ளத்தை அனுப்புகிறார். மனித இனத்தைக் காக்க, பூமி வாழ்க்கையின் பொருட்டு தன்னுடனான உறவைத் துண்டித்துகொள்ளாத நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் தேர்ந்தெடுக்கிறார் கடவுள். நோவா, கடவுள் சொன்னதை முழுமையாக நம்பி, பெருங்கப்பலைக் கட்டுகிறார்.

இங்கே பெருவெள்ளப்பெருக்கானது நோவா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கீழ்ப்படிதலுக்கான போராட்டத்தைக் குறிக்கிறது. நோவா கட்டிய பெருங்கப்பல் அவர்கள் தீமையைக் கடந்து வருதலை எடுத்துரைக்கிறது. வெள்ளத்திலிருந்து அவர்களைக் காக்க இறைவன் தோன்றச் செய்யும் வானவில்லானது அவருடைய உறுதியான அன்பின் உடன்படிக்கைக்கு அடையாளமாகிறது.

நோவா காலத்தின் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளைப் பெறும் முன்பு, மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரே மலையில், நாற்பது பகல், நாற்பது இரவுகள் கடவுளுடன் எலியா நடந்தார். நாற்பது என்கிற இந்த எண், விவிலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயேசு கிறிஸ்துகூட, தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இந்தப் பின்னணியில் விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நாற்பது நாட்கள் தவக்கால நோன்பை ஆழமான அர்த்தத்தைக் கொண்டதாக மாற்றிவிடுகின்றன.



Read in source website

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 85 ஆயிரம் MBBS இடங்களில், நான்கில் மூன்று பங்கு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களிலும் ஏறக்குறைய பாதி அரசு கல்லூரிகளில் தான் உள்ளது. இவற்றுக்கான கட்டணம் மத்திய அரசால் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

எந்த சீட் குறைந்த விலையில் கிடைக்கும்? யாருக்கு லாபம்?

நாட்டில் உள்ள 85,000 மருத்துவ இடங்களை பொறுத்தவரை, 276 தனியார் கல்லூரிகளில் 41 ஆயிரத்து 190 இடங்களும், 286 அரசு கல்லூரிகளில் 43 ஆயிரத்து 237 இடங்களும் உள்ளன. புதிய வழிகாட்டுதல்படி, அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் தவிர, தனியார் கல்லூரிகளில் உள்ள பாதி இடங்கள் (அல்லது சுமார் 20,000 இடங்கள்) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் முன்னாள் இயக்குநரும், மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் எம்.சி.மிஸ்ரா, “இது ஒரு பெரிய மைல்கல் ஆகும். ஏனெனில் மொத்த மருத்துவ இடங்களில் 75% சதவீதம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரியை தவறவிட்ட மாணவர்களால், தனியார் கல்லூரிகளில் குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் செலுத்தி படிக்க முடியவில்லை என்றார்.

NMC உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ” நீட் இளங்களை தேர்வின் தகுதிக்கேற்ப மாணவர்களுக்கு இந்த இடங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு முதலில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் வழங்கப்படும். பின்னர், அரசு கட்டணங்களை கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் வழங்கப்படும். கடைசியாக, தனியார் கல்லூரிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். அனைத்து சேர்க்கைகளும் மெரிட் மூலம் நடைபெறும் என்றார்.

கடந்த காலங்களில், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை சில மாநிலங்கள் கட்டுப்படுத்தின, ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வரம்புக்குட்பட்ட கட்டணத்துக்கும், அரசு மருத்துவக் கட்டணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை மாறுபடுகிறது.

மேலும் பேசிய அவர், ” தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணக் கட்டமைப்பில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்களின் கட்டணங்கள் உள் கமிட்டிகளால் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, ​​அவையும் மாநில ஒழுங்குமுறைக் குழுக்களின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு கட்டணத்திற்கான இடங்கள் போக மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரிகள் தன்னிச்சையான கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த இடங்களுக்கான கட்டணத்தை மாநில ஒழுங்குமுறை கட்டணக் குழு நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்களுக்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்?

புதிய வழிகாட்டுதலின்படி, மருத்துவக் கல்லூரிகளால் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது. லாப நோக்கற்ற அடிப்படையில் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

மருத்துவக் கல்லூரியின் செயல்பாட்டுச் செலவே கட்டணக் கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமையும். எனவே, இயக்கச் செலவு முந்தைய நிதியாண்டின் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும். (குறிப்பு: கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளும் கணக்கில் கொள்ளப்படும்). அதேபோல், தணிக்கை அறிக்கை இல்லாத புதிய கல்லூரிக்கு, மாநிலத்தில் அண்மையில் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரியின் தணிக்கையின் அடிப்படையில் தற்காலிக கட்டணக் கட்டமைப்பு கணக்கிடப்படும்.

கல்லூரியில் சேரும் மாணவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், படிப்பு முடியும் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முந்தைய செலவுகள் மற்றும் தற்போதைய வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்து மருத்துவக் கல்லூரிகள் 6 முதல் 15% வரையிலான மேம்பாட்டுக் கட்டணத்தை இயக்கச் செலவில் வசூலிக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனையை நடத்துவதற்கான எந்தச் செலவையும் மாணவர் கட்டணத்தில் சேர்க்க முடியாது. ஒருவேளை, மருத்துவமனை அதிக நஷ்டத்தில் இயங்கும் பட்சத்தில், மாநிலக் கட்டண ஒழுங்குமுறைக் குழு, கல்லூரியின் ஒரு பகுதியை ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு மாணவர்களிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கலாம்.

அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகையில், ” மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் செலவை கட்டணக் கட்டமைப்பில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் வர சிகிச்சை செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இது மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இது அதிக கட்டணத்தை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் PPP மாதிரியை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரியாக்ஷன்

பாரதி வித்யாபீத் ஹெல்த் சயின்சஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்மிதா ஜக்தாப் கூறுகையில், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் மானியம் மற்றும் கட்டணத்தில் 50 சதவீத இடங்கள் வழங்கப்பட்டால், அதன் செலவு மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றப்படும்.

பாரம்பரியமாக, 80% இடங்கள் மெரிட் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்திலும், 20% இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. இந்த இடங்களில், மெரிட் வரவழியாக வர முடியாத மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களுக்கானது. நான் இன்னும் வழிகாட்டுதல்களை விரிவாகப் படிக்கவில்லை. ஆனால், 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால், செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதற்கு, மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கலாம். இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான இருக்கை பற்றாக்குறை காரணமாகவே, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் அதிக இடங்களை வழங்க மருத்துவ கவுன்சில் அனுமதித்தால், இந்த செலவினங்களை ஈடுகட்ட முடியும் என்றார்.



Read in source website

மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய விமான நிலையம் நகருக்கு அருகில் செயல்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கிரீன்ஃபீல்ட் வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்ட நான்கு சாத்தியமான தளங்களை ஆய்வு செய்து வருகிறது.

மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய விமான நிலையம் நகருக்கு அருகில் செயல்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு’ திருப்போரூர், பாரந்தூர், பண்ணூர், படலம் ஆகிய நான்கு இடங்கள் தமிழக அரசால் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக விமானங்களின் எண்ணிக்கையும் தினசரி வருகையும் பன்மடங்கு அதிகரித்துள்ள போதிலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பெருமைக்குரிய விமான நிலையங்கள் சென்னையில் இல்லை.  

அதிகரித்து வரும் கூட்டத்திற்கு ஏற்ப தற்போதுள்ள விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் கட்டிடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் விரிவுபடுத்தி வருகிறது, ஆனால் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது’ நீண்ட கால தாமதமாக உள்ளது.

2006 இல், சென்னைக்கு வெளியே தொழில்துறை மையமான ஸ்ரீபெரும்புதூரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் அரசாங்கத்தின்  திட்டம், அப்போதைய திமுக அரசாங்கத்தின் கூட்டணியில் இருந்த பாமகவின் எதிர்ப்பு உட்பட பல காரணிகளால் தொடங்கப்படவில்லை.2011 முதல் 2021 வரை அதிமுக அரசு இந்த விஷயத்தில் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

“இரண்டாவது விமான நிலையத்திற்கான பணியை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இரண்டாவது விமான நிலையத்திற்கு’ சென்னைக்கு அருகில் நான்கு இடங்களை தமிழ்நாடு தொழில்துறை கழகம் பரிந்துரைத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம்’ நான்கு தளங்களை ஆய்வு செய்கிறது, இது ஆரம்ப கட்டமாகும். ஆய்வு முடிந்ததும், கலந்துரையாடலுக்குப் பிறகு’ இடத்தை அடையாளம் காணும் பணி தொடங்கும்,” என்று ஒரு அரசு அதிகாரி டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நான்கு இடங்களில் திருப்போரூர்’ சென்னைக்கு 44 கிமீ தொலைவில் மிக அருகில் உள்ளது, அதே சமயம் படலம் 78 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பன்னூர் சென்னையிலிருந்து 54 கி.மீ தொலைவிலும், சென்னைக்கும், பாரந்தூருக்கும் இடையிலான தூரம் 69 கி.மீ. ஆகவும் உள்ளது.

“இந்த நாட்களில் தூரம் ஒரு பிரச்சினை அல்ல. மேலும் நகருக்குள் விமான நிலையங்களை அமைக்க முடியாது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து இடங்களையும் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக இரண்டு மணி நேரத்தில் கடந்து செல்லலாம். எனவே இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வு முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும், ”என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

புதிய வசதி செயல்பாட்டுக்கு வந்த பிறகும், தற்போதுள்ள விமான நிலையத்தை மூடும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று முதல் அதிகாரி மேற்கோள் காட்டினார்.

பல டெர்மினல்களைக் கொண்ட டெல்லி மாதிரியை சென்னையும் பின்பற்றும். தற்போதுள்ள விமான நிலைய டெர்மினல் கட்டிடங்களை நவீனமயமாக்க பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், அவை வணிக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில், புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, பழைய விமான நிலையங்கள் மூடப்பட்டன.

சென்னையைத் தவிர, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் உள்ளன. பெங்களூருக்கு வெளியே அமைந்துள்ள தொழில் நகரமான ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாநில அரசு இப்போது ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது.



Read in source website

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் 2.15 மில்லியன் பேர் பதிலளித்ததாகவும் அதில் 93% அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது என்று ஆம் ஆத்மி கூறியது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் 2.15 மில்லியன் பேர் பதிலளித்ததாகவும் அதில் 93% அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது என்று ஆம் ஆத்மி கூறியது.

அவர் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையை “உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்” என்று ஷாஹீத் பகத்சிங் பெயரில் சத்தியம் செய்து, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் ‘பசந்தி’ (மஞ்சள்) தலைப்பாகை அணிந்து கூறினார். அவர் இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று மஞ்சள் தலைப்பாகையை அணிந்துகொண்டு கூட்டத்தை திரட்டுவார். 48 வயதான பகவந்த் சிங் மான், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர், அரசியல் புதியவராக இருந்து 11 ஆண்டுகளுக்குள் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் முகமாக முக்கியமான பயணத்தைக் கொண்டவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரது தொகுதியான துரியில் முன்னிலை வகிக்கும் பகவந்த் சிங் மான், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இவர், சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த சட்டமன்றத் தேர்தலில் துரி பகுதியிலிருந்து போட்டியிட்டார். சங்ரூரில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தில் பிறந்த பகவந்த் சிங் மான், சுனமில் உள்ள ஷாஹீத் உதம் சிங் அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தனது முதல் ஆடியோ கேசட்டை வெளியிட்டு 18 வயதிலேயே புகழ் பெற்றார். சமூக மற்றும் அரசியல் கிண்டல்களில் தேர்ந்த அவர், ‘ஜுக்னு மஸ்த் மஸ்த்’ போன்ற நீண்டகாலம் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வேகமாக மாநிலத்தின் நகைச்சுவை மன்னராக மாறினார்.

2011ம் ஆண்டு அகாலி தேசபக்தரும் 5 முறை முதல்வராக இருந்த பிரகாஷ் எஸ் பாதலின் மருமகனுமான மன்ப்ரீத் சிங் பாதலின் தூய்மையான அரசியலில் ஒரு சோதனையாக பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர, அவர் அக்கட்சியை விட்டு விலகியபோது பகவந்த் சிங் மானின் நகைச்சுவை கரியர் உச்சத்தில் இருந்தது. ஆனால், 2012 சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ராஜிந்தர் கவுர் பட்டலின் தொகுதியான லெஹ்ராகாகாவிலிருந்து அவர் முதன்முதலாகப் போட்டியிட்டார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாதல் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தபோது, ​​மான் உடன் செல்ல மறுத்து, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். மற்றவை எல்லாம் நடந்தது வரலாறு. பகவந்த் சிங் மான் சங்ரூர் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அகாலியின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.திண்ட்சாவைக் வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.

2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் மிகவும் வெளிப்படையான முகமாக பகவந்த் சிங் மான் இருந்தார். பிரச்சாரத்தின்போது 300-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசினார். மேலும் பஞ்சாபி ‘கிக்லி-கலீர்’ மெட்டு பாடல்களை உருவாக்கினார். அதை பாதல் குடும்பத்தின் தலைமையை விமர்சித்து ஒரு மோசமான நையாண்டியாக மாற்றினார். அப்போது அகாலி தளம் ஆளும் கட்சியாக இருந்தது.

பின்னர், அகாலி தலைவர் பிக்ரம் எஸ் மஜிதியா மீது கெஜ்ரிவால் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் போதைப்பொருள் வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்டபோது, ​​​​மாஜிதியாவை வழக்கமாகக் குறைகூறிய பகவந்த் சிங் மான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, ​​​​சில சக எம்.பி.க்கள் அவர் குடிபோதையில் அவைக்கு வந்ததாக புகார் கூறியதால், பகவந்த் சிங் மான் நாடாளுமன்றத்தில் புகழ் பெற்றார். முன்னதாக, அவர் ஜனவரி, 2017-ல் பதிண்டாவில் நடந்த கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு ஃபிளையிங் முத்தங்களை கொடுத்த பிறகு, விழுந்தபோது கடும் கோபம் ஏற்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டில் புதிய தொடக்கமாக தனது நடத்தையை மாற்றிக்கொண்டார் என்று கட்சி கூறியது. கெஜ்ரிவால் பகவந்த் சின் மான் மது அருந்துவதை விட்டுவிட்டதாக உறுதியளித்தார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், இந்தத் தேர்தல், ஒரு நிதானமான மற்றும் கட்டுப்பாடான மனிதனைக் கண்டது – அவருடைய வாகனமான ஃபார்ச்சூனரின் பானட் அதிக சவாரிகள் செய்ய வில்லை, அவர் அதிக நகைச்சுவைகள் அல்லது கூட்டங்களுக்குள் மூழ்கவில்லை – ஊழல் கட்சிகளை வெளியேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை அவர் தனது ஷேரோ-ஷாயரி நாட்டுப்புற பாணியில் சேர்த்து தனது பேச்சுக்களை வைத்தார். ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற அரசியல்வாதிகளின் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு எப்படி அதிகரித்தது. ஆனால், அவருடைய சொத்து மதிப்பு எப்படி குறைந்தது என்பதை என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சடோஜில் உள்ள அவரது வீட்டில் அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கான எந்த அடையாளமும் இல்லை. அவரது தாயார், இல்லத்தரசி மற்றும் சகோதரி, ஒரு பள்ளி ஆசிரியை, இருவரும் அவர் முதல்வர் முகமாக அறிவிக்கப்பட்ட விழாவில் கட்சி ஊழியர்களிடம் பேசவில்லை. விவாகரத்தான பகவந்த் சிங் மான் – 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஒரு வருடம் கழித்து அவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்தார். அவர் தன்னை பஞ்சாபிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். அவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் 16 மற்றும் 20 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

அவரை டெல்லி தலைமையின் ரப்பர் ஸ்டாம்ப் என்று ஒதுக்கிவிடக்கூடாது என அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரிக்கின்றனர். நண்பர்களும் எதிரிகளும் அவரை ஒரு சாதுர்யமான அரசியல்வாதியாகக் கருதுகிறார்கள். அதே நேரத்தில் கெஜ்ரிவால் கட்சியை வழிநடத்த நம்பகமானவராகவும் பணிவானவராகவும் காண்கிறார்.

பஞ்சாப் மாநில தேர்தலில், பகவந்த் சிங் மான், தங்கள் கட்சி அதிக பெரும்பான்மையைப் பெறும் என்று கூறி வருகிறார். “நாங்கள் கவலைப்படவில்லை, எங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும், மற்றவர்கல் உட்கார்ந்து கணக்கு போடுங்கள்” என்று கூறுகிறார்.



Read in source website

டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் செயலிக்கு ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூப் எந்த நேரம் வேண்டுமானாலும் தடை செய்யப்படலாம் என்கிற நிலையில் உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த 22 ஆண்டுகளாக முழு நாட்டையும் தனது கைபிடியில் வைத்திருந்தாலும், சுதந்திர தகவல் பரிமாற்றம், அரசியல் வெளிப்பாடு சிறிதளவாக ஆன்லைனில் இருந்து வந்தது. தற்போது, அவையும் முடிவுக்கு வந்துள்ளது.

உக்ரைன மீது போர் தொடங்கியதையடுத்து, உலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கு இடையே டிஜிட்டல் தடுப்பு சுவர் உருவாகியுள்ளது. ரஷ்ய அதிகாரிகளும், பன்னாட்டு இணைய நிறுவனங்களும் அதிவேகத்தில் சுவரை எழுப்பியுள்ளன.

டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் செயலிக்கு ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூப் எந்த நேரம் வேண்டுமானாலும் தடை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சிஸ்கோ மற்றும் பிற நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளன. . Minecraft போன்ற ஆன்லைன் வீடியோ கேம்கள் கூட இனி அங்கு உபயோகிக்க இயலாது.

இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவை சீனா, ஈரானை போல் டிஜிட்டல் பிரிவில் வெளியுலகத்திலிருந்து தடுத்து வைத்துள்ளது. இணையத்தில் கட்டுப்பாடை அதிகரிப்பது மட்டுமின்றி வெளிநாட்டு வலைத்தளங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தணிக்கை செய்கிறது.

சீனாவின் இணையமும் மேற்கத்திய இணையமும் பல ஆண்டுகளாக முற்றிலும் தனித்தனியாக மாறியுள்ளன. சில சேவைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஈரானில், போராட்டங்களின் போது அதிகாரிகள் இணையத்தை முடக்கியுள்ளன.

இணையம் மட்டுமின்றி உலகின் நிதி அமைப்பிலிருந்து ரஷ்யா பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்கவில்லை. அதன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களுக்கான உலகளாவிய அணுகல் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதேசமயம், டிஜிட்டல் தனிமைப்படுத்தல் புதினின் நலன்களுக்கும் உதவுகிறது. அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றாத கருத்து வேறுபாடுகள், தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த அவரை அனுமதிக்கிறது.

கடந்த வாரம் இயற்றப்பட்ட தணிக்கைச் சட்டத்தின் கீழ், உக்ரைன் மீதான போர் குறித்து “தவறான தகவல்களை” வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்கள், இணையதளம் நடத்துபவர்கள் மற்றும் பிறருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, மீண்டும் உலகை 1980களுக்கு திரும்பிய உணர்வை தந்ததாக இணைய தணிக்கையை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்தது. ஏனெனில், அப்போது தான் மொத்த தகவல் பரிமாற்றமும் அரசு கையில் இருந்தது.

புதின் முதலில் அரசாங்க விமர்சகர்கள் மற்றும் ஆன்லைனில் சுதந்திரமான செய்தி நிறுவனங்களை ஒடுக்கினார். ட்விட்டர் போன்ற வலைத்தளங்களுக்கான அணுகலைத் தடுக்க புதிய தணிக்கை கருவிகளை நிறுவுவதற்கான பிரச்சாரத்தை ரஷ்யா தொடங்கியது.

ரஷ்ய கட்டுப்பாட்டாளர்களால் தடுக்கப்படும் அடுத்த இலக்குகளில் ஒன்றாக YouTube இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உள்நாட்டு இணைய நிறுவனங்கள் மூலம் பல ஆண்டுகளாக தனி சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் சீனாவை போல் ரஷ்ய கிடையாது. ரஷ்யாவில் பெரியளவில் உள்நாட்டு இணையம் அல்லது தொழில்நுட்பத் துறை இல்லை. எனவே, டிஜிட்டல் சுற்றுசூழலில் ரஷ்யா தனியாகவிடப்பட்டால், மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம்.

இதுதவிர, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் எதிர்கால நம்பகத்தன்மை, வணிகங்கள் மற்றும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேருக்கான சேவைகள் ஆகியவை ஆபத்தில் உள்ளன.

ஏற்கனவே, மொபைல் போன் நெட்வொர்க்குகளை இயக்கும் ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களால், Nokia, Ericsson மற்றும் Cisco போன்ற நிறுவனங்களின் புதிய உபகரணங்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கான அனுமதி இல்லை.

இவ்விவகாரத்தை கையாள திருட்டு சாப்ட்வேர்களை பதிவிறக்குவது சட்டவிரோதமானது என்ற விதியை தளர்த்துவதன் மூலம் ரஷ்ய அதிகாரிகள் பதிலளிக்கலாம் என்கின்றனர்.

உக்ரைன் அரசாங்கமும் ரஷ்யாவில் இணை அணுகலைத் துண்டிக்க சேவை வழங்குநர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. உக்ரைன் அதிகாரிகள், இணைய டொமைன்களை மேற்பார்வையிடும் லாப நோக்கற்ற குழுவான ICANNயிடம், ரஷ்ய இணைய டொமைன் “.ru” ஐ இடைநிறுத்துமாறு கோரியது. ஆனால், உக்ரைன் கோரிக்கையை நிராகரித்தது.

சில ரஷ்ய இணைய பயனர்கள் கடுமையான கட்டுப்பாடுகளைச் மீறுவதற்கான வழிகளைக் கண்டறிகின்றனர். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் சேவையான Top10VPN கூற்றுபடி, விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் மூலம் இருப்பிடத்தை மறைத்து பிளாக் செய்யப்பட்ட இணையதளங்களை அணுக அனுமதிக்கும் தொழில்நுட்பத்தின் அணுகல் படையெடுப்புக்குப் பிறகு 600% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தண்டிக்க பன்னாட்டு நிறுவனங்களின் முடிவுகள் இந்த விபிஎன் கருவிகள் உபயோகிப்பதையும் கடினமாக்கும். விபிஎன் உபயோகிக்க பணம் செலுத்த வேண்டிய வழியான விசா மற்றும் மாஸ்டர்கார்ட் பிளாக் செய்யப்பட்டது, ரஷ்யர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

 நெகிழிப் பொருள்கள் குறித்தும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகமும், அகில இந்திய நெகிழி உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
 இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா பேசுகையில், "நெகிழிப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அரசு ஊக்கமளிக்கும்' என்றார். இந்த மாநாட்டில், நெகிழிக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்தும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
 நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்வதால் மட்டும், நெகிழியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைந்துவிடாது என விஞ்ஞானிகள் கூறுவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படாதது பெரும் குறையே. நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் இந்தத் தொழில் மேலும் விரிவடைந்து, சுற்றுச்சூழலுக்கு அதிகப்படியான கேடுகளை விளைவிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளும், நெகிழி உற்பத்தி நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டன.
 உலகில் 1950-களில்தான் நெகிழிப் பொருள்கள் அறிமுகமாகின. இந்தியாவில் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி 1957-இல்தான் தொடங்கியது. 2020 ஜனவரி நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 30,000 நெகிழிப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 85-90 சதவீதம் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களில் சுமார் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) நெகிழி நுகர்வு 8 சதவீதமாக உள்ளது.
 வேளாண்மை, நீர் மேலாண்மை, ஆட்டோமொபைல், சரக்குப் போக்குவரத்து, கட்டுமானம், பொருள்களைக் கட்டுதல், நுகர்பொருள்கள், தொலைத்தொடர்பு, மின்னணு சாதனங்கள், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றில் நெகிழிப் பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. பொருள்களைக் கட்டுவதற்குத்தான் மிக அதிகளவில் (35 சதவீதம்) நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.53,200 கோடி அளவுக்கு நெகிழிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 நெகிழிப் பொருள்களைப் பொறுத்தவரை, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மிக மெல்லிய பைகளால்தான் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. மக்கும் தன்மை இல்லாத ஒரு நெகிழிப் பை சிறு சிறு துண்டுகளாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும்.
 காகிதம் போன்ற மற்ற பொருள்களைப் போல் நெகிழிக் கழிவுகள் எளிதில் மக்குவதில்லை. சாலைகளிலும், கழிவுநீர்க் கால்வாய்களிலும், நீர்நிலைகளிலும், கடலிலும் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகளால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, ஆடுகள், மாடுகள், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 நெகிழிப் பைகள் தயாரிக்க ûஸலின், எத்தலின் ஆக்ûஸடு, பென்ஸின் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நெகிழிப் பைகள், சூடான உணவுப் பொருள்களையும், குடிநீரையும் அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சாலைகளில் வீசப்படும் நெகிழிக் கழிவுகளை விழுங்கிவிடும் ஆடுகள், மாடுகள், பறவைகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
 உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன் நெகிழிக் கழிவு கடலில் கலக்கிறது. கடலில் சேரும் நெகிழிக் கழிவுகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்குக் கடும் இன்னல்கள் ஏற்படுகின்றன. நெகிழிக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
 நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், நெகிழிக் கழிவுகளில் 1முதல் 3 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 உலகில் உற்பத்தியாகும் நெகிழிப் பொருள்களில் 50 சதவீதப் பொருள்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு பின்னர் கழிவுகளாக மாறுகின்றன. ஆண்டுதோறும் 5 டிரில்லியன் (5 லட்சம் கோடி) நெகிழிப் பைகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
 இந்தியாவைப் பொறுத்தவரையில், நெகிழிப் பொருள்களில் 80 சதவீதம் பயன்பாட்டுக்குப் பிறகு கழிவுகளாக தூக்கிவீசப்படுகின்றன. நமது நாட்டில் தினமும் 25,940 டன் நெகிழிக் கழிவுகள் உருவாவதால், அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
 நெகிழிப் பைகள் பயன்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தடை விதிப்பதாலோ கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஊக்குவிப்பதாலோ சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூடிவிட்டு, அவற்றுக்கு பதிலாக மக்கும் தன்மையுடைய காகிதம், துணி, சணல் ஆகியவற்றாலான பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பெருமளவில் தொடங்குவதன் மூலமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
 இந்த விஷயத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்!
 



Read in source website

 அதிகாலையில் இருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "நேற்று முழுதும் எனக்கு மனசே சரியில்லை' என்றார். அதைக் கேட்ட மற்றவர், "என்ன, மனசு சரியில்லையா? நம்ம உடம்புல மனசுன்னு ஒன்னு இல்லையே, அப்புறம் எப்படி மனசு சரியில்லாமல் போகும்' என்று கேட்டார். ஆம், நம் உடலில் மனது என்ற ஒன்று கிடையாது. நமது உடலில் இல்லாத ஒன்றைச் சொல்லி அது சரியில்லை என்கிறோம்.
 அதிக பாரத்தை சுமந்து செல்லும் கனரக வாகனத்தின் டயர்களுக்கு காற்று எவ்வளவு அவசியமோ அது போல மனிதனுக்கும் காற்று அவசியம், மனமும் அவசியம். ஆனால் இவையிரண்டையும் கண்களால் பார்க்க முடிவதில்லை. காற்று இல்லையென்றால் எந்த வாகனமாக இருந்தாலும் நகரவே முடியாது. அதுபோலவே, எந்த மனிதராக இருந்தாலும் மூச்சு நின்று விட்டால் அடுத்த நொடியே அவரைப் "பிணம்' என்று சொல்லி விடுவார்கள். மனசு சரியில்லாமல் இருந்தால் எந்த மனிதராலும் எதையும் சிறப்பாக செய்ய முடியாது. உருவமே இல்லாத இந்த மனசுதான் மனிதர்களுக்குள் இருந்துகொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
 மனிதருக்குள் இருக்கும் இந்த மனதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, நல்ல மனம், மற்றொன்று கெட்ட மனம். அதாவது ஒருவர் நல்லவர், மற்றொருவர் கெட்டவர். இந்த இருவரும்தான் எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கும் முக்கியமானவர்கள். கோபம், பேராசை, விரக்தி, ஒழுக்கமின்மை, பழிவாங்கும் உணர்வு இவையனைத்தையும் மனதுக்குள் இருக்கும் தீயவர் தருகிறார். அமைதி, நிம்மதி, அன்பு, பொறுமை, பாசம், சந்தோஷம் இவற்றையெல்லாம் மனதுக்குள் இருக்கும் நல்லவர் தருகிறார்.
 உதாரணமாக, கடிகாரம் அலாரம் அடிக்கிற போது, எழுந்து, அதை அணைத்து விட்டு, மீண்டும் நம்மைத் தூங்க வைத்து விடுபவர் தீயவர். அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே எழுந்து அதை அணைத்து வைத்துவிட்டு, பணிகளில் சுறுசுறுப்பாக நம்மை ஈடுபட வைப்பவர் நல்லவர். மனதிற்குள் இருக்கும் நல்லவரை தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தால் நாம் வெற்றிக்கனிகளை எளிதாகப் பறித்துக் கொண்டே இருக்கலாம்.
 ஒரு மனிதனை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகள் வெளியில் இல்லை, அவன் மனதுக்குள்ளேயே இருக்கிறார்கள். உண்மையில் மனிதன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்கு பணமோ பொருளோ தேவையில்லை. இவை நமக்குள்ளேயே இருக்கின்றன. மனதை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்வதுதான் முன்னேற்றத்துக்கான அடித்தளம்.
 கடற்கரையோரமாக ஒரு வியாபாரி நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது கடற்கரை மணலில் ஒரு மீனவன் மீன்பிடி வலைமீது படுத்துப் பாடிக்கொண்டிருந்தான். அவனிடம் அந்த வியாபாரி, "இன்று நீ ஏன் மீன் பிடிக்கப் போகவில்லை' என்று கேட்டார். அதற்கு அவன் "நான் ஏற்கனவே நிறைய மீன்களைப் பிடித்து அவற்றை நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்' என்றான்.
 வியாபாரியோ, "இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்தால் உனக்கு அதிகமான பணம் கிடைக்கும். நீ சொந்தமாக ஒரு படகு வாங்கலாம். அதிக மீன்களைப் பிடிக்கலாம். உன் வீட்டுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கலாமே' என்றார். அதற்கு அந்த மீனவன் "அவற்றையெல்லாம் வாங்கி சந்தோஷமாக இருப்பதை விட, இப்போதே நான் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்' என்றான். மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை, நமக்குள்தான் இருக்கிறது என்பதற்கு இந்த மீனவன் கதை ஒரு உதாரணம்.
 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளி மாணவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள், "மாணவர்களே! மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்க. உற்சாக மனமே உன்னதங்களைச் செய்யும்' என்பதே. ஒரு குடிகாரத் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். மூத்த மகனும் குடிகாரனாக இருந்தான். இளைய மகன் நல்லவனாக, மதுவிற்கு அடிமையாகாதவனாக இருந்தான்.
 ஒருவர் மூத்த மகனைப் பார்த்து, "நீ ஏன் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன் "என் தந்தை குடிப்பழக்கம் உடையவர். அவரைப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது. இப்போது என்னால் அதை விட முடியவில்லை' என்றான். மூத்த மகனிடம் கேட்ட நபர் இளைய மகனையும் பார்த்து "உன் தந்தையைப் போல உனக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லையா' என்றார். "என் தந்தையும், அண்ணனும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். அவர்களைப் போல நானும் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எண்ணங்கள்தான் வாழ்க்கை' என்று சொன்னான் இளைய மகன். சுவாமி விவேகானந்தர் "நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்றார்.
 பலனை எதிர்பார்க்காமல் நாம் செய்யும் எந்த செயலையும் ஆர்வத்துடன் மேலும் மேலும் சிறப்பாக செய்து கொண்டே இருந்தால் நமது மனது உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடும். வெற்றிக் கதவுகள் தானாகவே திறந்து விடும். அலாவுதீனின் அற்புத விளக்கு போல நாம் கேட்பதெல்லாம் நம் கண் முன்னே வந்து நிற்கும். இதுதான் வெற்றியின் ரகசியம்.
 எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நீங்கள் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், புகழ் ஏணியில் ஏறி வெற்றிக்கொடியை பறக்கவிட வேண்டும் எனத் துடித்தால் அதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது. அதுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் நல்ல மனது, தீய மனது எனும் இரண்டில் தீய மனதை விரட்டியடியுங்கள். நல்ல மனதை உற்சாகப் படுத்துங்கள்.
 மறந்துவிடாதீர்கள், உற்சாக மனமே உன்னதங்களைச் செய்யும்.
 



Read in source website

 எந்தச் சந்தர்ப்பச் சூழலுக்கும் இடம்கொடுக்காமல், தனக்கான தர்மத்தைக் கடைப்பிடிக்கிறவனே கடைசி வரையில் மனிதனாக இருக்க முடியும். அப்படி இருந்தவர்கள்தான் எப்பொழுதும் இருக்கிற புகழுக்கு உள்ளாகிறார்கள். சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு மாறிக்கொள்கிறவர்களைக் காலம் சந்தர்ப்பம் பார்த்து ஒதுக்கிவிடுகிறது.
 சந்தர்ப்பம் என்பது என்ன? அது காலத்தின் ஒரு இணுக்குத்தானே. குறைந்த அளவிலான காலத்திற்குள் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் குறுஞ்செடிகளாகிவிடுகிறார்கள்; ஆண்டாண்டு காலம் நிலைநின்று செயல்புரிந்து வாழநினைப்பவர்கள், ஆலமரமாகிவிடுகிறார்கள். அதற்குக் காலம் கருதி இடத்திற்கேற்பப் பணிபுரிய வேண்டும் என்று வழிகாட்டுகிறது வள்ளுவம்.
 ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
 கருதி இடத்தால் செயின்
 என்கிறார் திருவள்ளுவர்.
 அரும்பு மலரும் முன்பே, கனியைச் சுவைக்கக் கருதினால் கைகூடுமா? அரும்பு மலராகி, சூல்கொண்ட பின்னர், பிஞ்சாகி, காயாகி, கனிந்து வரக் காலம் ஆகுமே. அதுவரை பொறுமையுடன் காத்திருத்தல் அவசியம்.
 "அத்தகு காலம் வருகிற வரைக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்து தம்மைத் தகுநிலையில் வெளிப்படுத்திக் கொள்வர் தகுதியுடையோர்' என்கிறார் திருவள்ளுவர்.
 காலம் கருதி இருப்பர் கலங்காது
 ஞாலம் கருது பவர்
 காத்திருப்பது மட்டுமல்ல, கலங்காது இருப்பதும்தான் முக்கியக் கடப்பாடு. அதற்கு நெஞ்சுரம் வேண்டும்; நினைவும் நல்லதாய் வேண்டும். அத்தகையோரை "ஞாலம் கருதுபவர்' என்றார் திருவள்ளுவர். தன்னையும் கருதி, தரணியின் நன்மையையும் கருத வேண்டும். உலக அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கிறவனுக்கு இந்தப் பண்பு, இருந்தாதல் வேண்டும்.
 இது சுயநலம் சார்ந்ததுபோல் தெரிந்தாலும், உண்மையில், உலக நலன் சார்ந்தது. உலக நலனில்தான் ஒவ்வொருவருடைய சுயநலமும் ஒளிந்திருக்கிறது என்கிற உண்மையை உணர்ந்துவிட்டால், இந்தச் சுருக்கத்திற்கே இடமில்லாமல் போய்விடும். இந்தச் சுருக்கம்தான் ஒருவரைப் பற்றிக் குறைத்தோ, மிகைப்படுத்தியோ நம்மை மதிப்பிடவைத்துவிடுகிறது. அதனால் குழப்பமும் பல சமயங்களில் சண்டை சச்சரவுகளும்கூட வந்துவிடுகின்றன.
 அதிலும் குறிப்பாக, குடும்ப அளவிலோ நிர்வாக அளவிலோ இவ்வாறு மதிப்பிட வேண்டும் என்கிறபோது, அவசரப்பட்டு கருத்தை வெளியிட்டுவிட்டால், அதுவே கேட்போர் மனங்களில் பதிந்து அதற்கேற்ப அவர்களைச் சிந்திக்க வைத்துவிடும். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டுவிட்டுத் தன் அபிப்ராயத்தை அவற்றுடன் ஒப்பிட்டு உணர்ந்துகொண்டபின் ஒரு முடிவுக்கு வருவது எல்லார்க்கும் நல்லதாக அமையும்.
 கம்பராமாயணக் காப்பியம் இதற்கான சூழல் ஒன்றை நம்முன் நிறுத்துகிறது.
 சர்வ வல்லமையும் படைத்தவனாய்த் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற இராவணன், இராம, இலக்குவர்களையும், வானரப் படையினையும் குறைத்து மதிப்பிடுகிறான்; அதையே தனது கருத்துருவாகவும் வெளிப்படுத்தி விடுகிறான்; ஏற்றுக்கொள்வோரை உடன் வைத்துக்கொண்டும் மாற்றுக் கருத்துடையோரை வெளியேற்றியும் விடுகிறான். இறுதி வரையில் போர் நிகழ்த்தித் தன் சுற்றத்தோடு தானும் அழிகிறான்.
 அவனுக்குப் பின் பிறந்த வீடணன் தனது அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்து முடிவு கேட்கிறான். அவர்கள் இராமனைக் காண்பதே நல்லது என்கிறார்கள். முடிவாக, வீடணன் இராமனிடம் அடைக்கலமாக வருகிறான்.
 இராமனும் அவனை உடனே ஏற்றுக் கொண்டுவிடவில்லை. அவனும் தன் நண்பர்களோடு கலந்துரையாடிக் கருத்துக் கேட்கிறான். ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்கான கருத்துக்களைப் பலரும் முன்வைக்கிறார்கள். அவை பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையில் அமைகின்றன. எனவே, ஏதும் கூறாது நின்ற அனுமனை நோக்கி, "உன் கருத்து என்ன' என்று கேட்கிறான், இராமன்.
 அவன் தன் கருத்தைச் சொல்லத் தொடங்குகிறான்."ஒருவர் தன் உள்ளத்தில் உள்ளதைச் சொல்வதற்கு முன், அவரது உள்ள உணர்வுகளை அவர் முகமே அடையாளம் காட்டிவிடும். கள்ளத்தனம் கொண்டோரின் கருத்து இதுவென்று சொல்லாமல் சொல்லிவிடுகிற இருள்நிறைந்த பள்ளம்போல் அவர் முகம் மாறிவிடும்' என்கிறான். பின்னர், அவன் இலங்கை சென்றிருந்தபோது கண்ட காட்சிகளை விவரிக்கிறான்.
 ""எல்லை மீறி உள்ளே புகுந்ததனால், "கொல்லுமின், இவனை' என்று அரக்கன் கூறியபோது, "தூதரைக் கொல்லுதல், பழி தரும். ஆதலால் போர்த்தொழில் புரிந்து வெல்லலாம்' என்று அறவுரை கூறினான் வீடணன். அவனது திருமகள்தான் அன்னை சீதைக்கு ஆறுதல்மொழி கூறிவருகிறவள். "அபயம் என்று வந்தவர்க்கு அருளுதல் கடன்.' ஆதலால், இவன் வரவு நல்வரவே'' என்று எடுத்துக் கூறினான்.
 இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு இராமன், "நஞ்சினும் கொடியவன் வீடணன். அவனைச் சேர்க்க வேண்டாம்' என்று கூறிய சுக்கிரீவனையே அனுப்பி, வீடணனை அழைத்துவரச் செய்கிறான். மாற்றுக் கருத்துக் கூறியவர்களுக்கு மாறாக, ஏற்றுக் கொள்ளும் கருத்தினைக் கூறிய அனுமனை அல்லவா, இராமன் வீடணனிடம் அனுப்பியிருக்க வேண்டும்? ஏன் சுக்கிரீவனை அனுப்பினான் என்ற கேள்வியும் எழுகிறது.
 தன் அண்ணனைப் பகைத்து, இராமனிடம் முன்பே அடைக்கலம் ஆனவன்தானே, சுக்கிரீவன். அதுபோல், வீடணனும் ஆகியிருக்கலாம் என்று நினைக்காமல், ஒட்டுமொத்தமாய் அரக்கர்களின் நிலைப்பாடு இதுதான் என்று பொத்தாம் பொதுவாய்க் கருத்துச் சொல்வது கிட்கிந்தையின் தலைவனுக்கு உகந்தது இல்லையே. தன் நிலையை உணராமல் மற்றவர்களின் தகுநிலையை மதிப்பீடு செய்து, அவசரப்பட்டுக் கருத்துரைப்பது நல்லதல்லவே. இதையெல்லாம் சொல்லாமல் உணர்த்திச் செயலில் காட்டியவனாக, இராமன் விளங்குகிறான்.
 சுக்கிரீவன் அழைத்துவரத் தன்னிடம் அடைக்கலமாகிய வீடணனைத் தழுவி, இராமன் சொன்ன வாசகம்தான், உலகம் முழுதும் அறிந்த கம்பராமாயணக் கவி வாசகம்.
 குகனொடும் ஐவர் ஆனேம், முன்பு;
 பின், குன்று சூழ்வான்
 மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
 அகன் அமர் காதல் ஐய, நின்னொடும்
 எழுவர் ஆனேம்;
 என்கிறான் இராமன், எப்படி?
 "புகல் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை' "பிள்ளையே இல்லாமல் பெரிதும் வருந்திய தயரதன், என்னைக் கானகம் அனுப்பியதனால், முன்பொரு சகோதரனாகக் குகன் வாய்த்தான்; அடுத்து எனக்குக் கிடைத்த சகோதரன், சுக்கிரீவன்.
 ஆக, ஏற்கெனவே, என்னுடன் பிறந்த சகோதரர்கள் மூவரோடு, அறுவர் ஆகினோம். இன்று அன்புடன் வந்து எங்களுடன் இணைந்துகொண்ட நின் வரவால், நாம் எழுவர் ஆனோம்' என்று கூறியதோடு, இராமன் நிறுத்திக் கொள்ளவில்லை.
 தன்னிடம் அடைக்கலமாக வந்த வீடணனிடம், தன் சகோதரக் கூட்டத்தையே உறவாகக் கொடுத்தும் விட்டான். அதுவரைக்கும் "என் தந்தை' (எந்தை)யாக, இருந்த தயரதன், இப்போது "உன் தந்தை' (நுந்தை) ஆகிவிட்டார் என்று இராமன் கூறுகிற இடம் காப்பிய உச்சம் மட்டுமல்ல, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறத்தின் வழிகாட்டல்.
 இந்தப் பண்பு, ஒவ்வோர் இல்லத் தலைவருக்கும், நிர்வாகத் தலைமையர்க்கும் இருந்தாக வேண்டிய நற்பண்பு. யாரும் எப்போதும் தனித்து இருந்துவிட முடியாது; எப்போதும் பகைத்துக் கொண்டும் இருந்துவிட முடியாது; பகையையும் தம் பண்பால் சுற்றமாய்ச் சேர்த்து இணக்கமாக்கி வாழ்வதுதான் மனித குலத்திற்கு இன்றியமையாதது.
 சந்தர்ப்பச் சூழல், சதி செய்துவிட்டாலும் கூட, தன் சொந்த அறிவால், அவற்றைச் சீர்நோக்கிச் சிறப்புற முடிவெடுத்துச் சீர்திருத்துவது சிறந்தது. அதனினும் சிறப்பு, அத்தகு சீர்மையாளர்களாகத் தன் உடனிருப்பவர்களையும் வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியது.
 குணமும் குற்றமும் மனித இயற்கை. இவற்றுள் எது மிகுதி என்று எடைபோட வேண்டும். அதற்கு முன்னதாக, எது குணம், எது குற்றம் என்கிற தெளிவு நமக்குள் இருத்தல் வேண்டும். நமக்குக் குற்றமாகத் தெரிவது மற்றவர் கண்ணோட்டத்தில் குணமாகவும் இருக்குமல்லவா? குணத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்த நாம், அவர்தம் குற்றத்தை நினைக்க மறந்துவிடலாம் அல்லவா?
 குணத்தையும் குற்றத்தையும் ஒரு தராசின் இரண்டு தட்டுகளாகக் கொண்டு ஏந்திப் பிடிக்கிற நமக்குள் நடுநிலை என்கிற முள் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கத் தெரிந்திருத்தல் வேண்டும். இதில் நமது குணத்தையும் நாடவேண்டும்; நமக்குள் இருக்கும் குற்றத்தையும் நாடித் தெளிந்து கொள்ள வேண்டும்.
 எடை சரியாக இருக்கிறதா, என்பதை அறிய, இன்னொரு தராசில் இட்டு வைத்துப் பார்க்கிறோம் அல்லவா, அப்படி ஒருவர் மதிப்பீட்டோடு, இன்னொருவரின் மதிப்பீட்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இரண்டு மதிப்பீடுகளை மட்டும் நாடிப் பார்ப்பது போதாது. முடிவெடுக்க மூன்றாவது கருத்தையும் உள்வாங்கி ஒப்பிடவேண்டும். அப்போதுதான் மிகை நாட முடியும். அவற்றுள் மிக்கவை கொள்ள முடியும். அதனால்தான்,
 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
 மிகைநாடி மிக்க கொளல்
 என்கிறார் திருவள்ளுவர்.
 இந்தத் திருக்குறள், மூன்று முறை "நாடி' பார்க்கச் சொல்கிறது போலும். தெரிந்த ஒருவரை மட்டுமல்ல, தெரிந்த எந்த ஒன்றையும் தேர்வதற்குமுன், இந்தத் தெளிவு வருவது நல்லது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 



Read in source website

சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சவாலுடன் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலியல் பொறுப்பையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மாற்று எரிபொருளாகப் பசுமை ஹைட்ரஜனை உற்பத்திசெய்யும் மின்னுற்பத்தி ஆலைகளை வளர்த்தெடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஆலைகளைத் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் எளிதில் பெறும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலைகளுக்குத் தேவையான மின்வழித் தட இணைப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று மின்சக்தி அமைச்சகமும் தெரிவித்துள்ளது. ஜூலை 2025-க்குள் தொடங்கப்படவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வழித்தடங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அசாமில் இயங்கவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள், தங்களுக்குத் தேவைப்படும் மின்சக்தியை ராஜஸ்தானில் நிறுவியுள்ள தங்களது சூரிய மின்சக்தி ஆலையிலிருந்து கொண்டுசெல்வது எளிதாகும்.

2030-க்குள் ஆண்டொன்றுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்திசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு. நீரில் மின்விளைவுகளை உருவாக்கி, ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் தனித்தனியாகப் பிரித்தெடுப்பதுதான் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கான தொழில்நுட்பம். புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களில் ஒன்றான பசுமை ஹைட்ரஜன், சேமிக்கவும் நீண்ட தொலைவுக்கு எடுத்துச்செல்லவும் எளிதானது. ஆலைகளின் மின்தேவைக்கு மட்டுமின்றி, வாகனங்களுக்கான எரிபொருளாகவும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதால், இந்தியாவில் ஹைட்ரஜன் உற்பத்தியை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் தேவையை எளிதில் நிறைவுசெய்ய முடியும் என்பதோடு, எதிர்வரும் காலத்தில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பசுமை ஹைட்ரஜனை இறக்குமதி செய்யும் முக்கிய இறக்குமதி நாடுகளாக இருக்கும். அதையும் உத்தேசித்து, ஏற்றுமதிக்கு முன்பாகப் பசுமை ஹைட்ரஜனையும் பசுமை அம்மோனியாவையும் பாதுகாத்து வைப்பதற்கு ஏதுவாகத் துறைமுக நிர்வாகங்கள் குறைவான கட்டணத்தில் நிலங்களை ஒதுக்கித்தரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜனையும் அம்மோனியாவையும் முக்கிய மூலப் பொருட்களாகப் பயன்படுத்திவரும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு, வேதியுரங்கள் தயாரிப்பு மற்றும் எஃகு உருக்காலைகள் தங்களது தேவைக்காகப் பசுமை ஹைட்ரஜனைத் தயாரித்துக்கொள்வதற்கு இக்கொள்கை உடனடியாக உதவும். எனினும், பழுப்பு ஹைட்ரஜனைக் காட்டிலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு அதிகச் செலவாவதால் அதைத் தயாரிக்கும் வேதியுரத் தொழிற்சாலைகள் அரசிடமிருந்து மானிய உதவிகளையும் எதிர்பார்க்கின்றன.

பிப்ரவரி மத்தியிலேயே பசுமை ஹைட்ரஜன் கொள்கை அறிவிக்கப்பட்டுவிட்டாலும் உக்ரைன் போருக்குப் பிறகு உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது இக்கொள்கையைக் குறித்து தீவிரமாக விவாதிக்கவைத்துள்ளது. இதற்கிடையில், அண்மையில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா நாடுகளுக்கிடையிலான குழுவின் அறிக்கையில், இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள பருவநிலை எச்சரிக்கைகள், இவ்விவாதங்களை இன்னும் கூர்மைப்படுத்தியுள்ளன.



Read in source website

தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாகத் தங்கியிருக்கிற, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்திவருகின்றன. ஆனால், முன்னர் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசும், இப்போதைய மோடி அரசும் சாதகமான பதிலைக் கொடுக்கவில்லை. தமிழகத்துக்கு 1964-க்குப் பிறகு, தாயகம் திரும்பிய அகதிகளும் 1983-க்குப் பிறகு ‘தஞ்சம் தேடிய அகதிகளும்’ வந்தார்கள்.

1964-ல் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகாவும், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலேயரின் ஆட்சியின்போது குடியேற்றப்பட்ட மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படும் தோட்டப்புறத்தில் வாழ்ந்த 5 லட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தாயகம் திரும்பிய அகதிகளாக வந்தார்கள். இதற்குப் பதிலாக இலங்கையில் இருந்த 3 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இரு சாராரும் தீர்வு காணாத ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்கள் ‘நாடற்றவர்களாக’ இலங்கையில் இருந்தார்கள். ‘நாடற்றவர்கள்’ (Stateless) என்ற சொல்லின் பொருளையும், அச்சொல்லின் பின்னால் வாழ்ந்த மக்களின் துன்பங்களையும் அரசியலர்களும் பெரும்பான்மையான மக்களும் உணர்ந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டபோது, காபி, தேயிலைப் பயிர் செய்கைக்காகத் தமிழகத்திலிருந்து மக்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுசென்றனர். 1827-ல் 10 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டதோடு அவர்களின் வருகை தொடங்கியது. இதனால் 1911-ல் தோட்டப் பகுதியில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 983 தமிழர்கள் இருந்தார்கள். 1936-ல் இத்தொகை 11 லட்சத்து 23 ஆயிரமாகக் கூடியது.

1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்றது, 1949-ல் அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேன நாயக்கர் கொண்டுவந்த பிரசாவுரிமை சட்டத்தால் சுமார் 10 லட்சம் தோட்டப்புறத் தமிழர்கள் நாடற்றவரானார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 1947-ல் நடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு வாக்களித்து, ஏழு இந்திய வம்சாவளித் தமிழர்களை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்தவர்களே புதிய சட்டத்தில் நாடற்றவரானார்கள். இச்சட்டம் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தால் நாடற்றவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வாழலாம். உயர்கல்வி இல்லை. சிறு வர்த்தகம்கூடத் தொடங்க முடியாது. நாட்டை விட்டுப் போக இயலாது. சுருக்கமாகச் சொன்னால், தோட்டங்கள் என்ற திறந்தவெளிச் சிறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவையே அறியாதவர்கள். இலங்கையில் பிறந்தவர்கள். இவர்களில் 1940-க்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இலங்கை வந்தவர்கள். இவர்களை உள்ளடக்கியதே சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும் அதற்குப் பிறகு செய்யப்பட்ட அகதிகள் குறித்த ஒப்பந்தமும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்த, அங்கேயே பிறந்த மலையகத் தமிழர்களை நாடற்றவராக்கியதன் உள்நோக்கமே, இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே ஆகும். இதனைச் செய்வதற்காக சிங்கள அரசியலர்கள் கட்சியைத் தாண்டிக் கைகோத்தனர். இதற்கு அப்போதைய தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் உள்ளிட்ட சிலரும் கைதூக்கினார்கள். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சட்டத்தை எதிர்த்தார். ஆனாலும், சட்டம் அமலாகி, அந்த மக்கள் நாடற்றவர்களாக வாழ்ந்தார்கள். 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தில் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

1983-க்குப் பிறகு, இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் பாதிப்படைந்த இலங்கைத் தமிழர்கள் ‘அகதிகளாக’ தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இவர்களில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடங்குவார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை திரும்பிவிட்டனர். ஏனைய இலங்கைத் தமிழர்கள், தமிழக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலே இருக்கும். எப்படிப் பார்த்தாலும், இவர்களின் அகதி வாழ்க்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவர்களின் முகாம் வாழ்க்கை மோசமானதென்று குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதே காலகட்டத்தில், வேறு நாடுகளுக்குச் சென்ற தமிழ் அகதிகள், செல்வ வளத்தோடும் அவர்களின் பிள்ளைகள் உயர் பதவிகளிலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அகதிகளின் நிலையோ கேள்விக்குறியாக இருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகளின் கெடுபிடி கடுமையாக ஆனது. மொத்தத்தில், அவர்களின் வாழ்க்கை துன்பக்கேணியைப் போன்றது. இந்நிலையில், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற ‘அரசியல்’ சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தில், இலங்கைக் குடியுரிமை கொண்டவர்களான இவர்களைத் திரும்ப அழைப்பதில் இலங்கை அரசு அக்கறையே காட்டவில்லை. அதற்கு முக்கியக் காரணம், இந்தியாவுக்குள் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வைத்த அரசியல் தந்திரமே ஆகும். இந்நிலையில், இப்போது அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால், அது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். அகதித் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால், 1. இலங்கைத் தமிழரின் மக்கள்தொகையில் வீழ்ச்சி உருவாகும், 2. அவர்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு ஆளாகும், 3. நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறையும்.

ஏற்கெனவே, ஒப்பந்தத்தின் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளைத் தமிழகம் உள்வாங்கியிருக்கிறது. கச்சத்தீவு கைமாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகும் அரசியல் முடிவும் வரவில்லை. சீனர்களின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகியிருப்பதோடு, சீனர்களின் குடியேற்றமும் கூடியிருக்கிறது. சீனர்களை அழைக்கும் இலங்கை அரசு, தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து மெளனம் சாதிப்பதன் பின்னணியை உணர வேண்டும். ஆகவே, தமிழகத்தில் தங்கியிருக்கும் அகதிகளின் நிலையை இரு வகையில் கையாளலாம்: 1.இந்தியாவில் தங்க விரும்புபவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கலாம். 2.மற்றவர்கள் தாயகம் திரும்புவதற்கு இலங்கை அரசோடு பேசி முடிவு காண வேண்டும்.

இப்பிரச்சினைக்கு முடிவு காணும் வரை, 1.தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளுக்குத் தனியான அடையாள அட்டை (எப்போது வந்தார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களுடன்) வழங்க வேண்டும். 2.தனியாரிடம் வேலை செய்ய அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும். 3.மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும். 4.வாழ்வாதாரத்துக்கான நிதி, உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். 5.நாடு திரும்புகிறவர்களுக்கு ஒரு தொகை கொடுத்தனுப்ப வேண்டும்.

இவற்றையெல்லாம் உணராமல் குடியுரிமை வழங்குவது குறித்துப் பேசாமல் இருப்பது இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகும். எதிர்காலத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குப் போனால், அவர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும். அதன் மூலம், இலங்கையில் தமிழர் மக்கள்தொகையைக் குறைக்க முடியும் என்ற தந்திரத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாக முடியும்.

- மாத்தளை சோமு, எழுத்தாளர், ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்.

தொடர்புக்கு: mathtalai@gmail.com



Read in source website

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதல் களப்பலியான ல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தாளமுத்து என்ற இளைஞரும் தியாகியானார். மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் காலமானார். நடராசன் – தாளமுத்து என்ற இரட்டைப் பெயர்கள் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவை. ஆனால், அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாத நிலையே இருந்தது. ‘இந்து தமிழ் திசை’யில் (‘நடராசன் புகழுடம்பு எய்திய கதை’, ஜனவரி 31, 2022) நடராசன் பற்றிய கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து, தாளமுத்து பற்றிய புதிய செய்திகளுடன் இக்கட்டுரை அமைகின்றது.

சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் பக்தவத்சல நாயுடு என்பாரும் சட்ட மேலவையில் என்.ஆர்.சாமியப்ப முதலியாரும் தாளமுத்துவின் மறைவைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். சென்னை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லெப்டினெண்ட் கர்னல் எம்.எம்.கான், சென்னை பொது மருத்துவமனையின் மதிப்புறு மருத்துவர் கே.நாராயணமூர்த்தி ஆகியோரிடமிருந்து அரசாங்கம் பெற்ற அறிக்கைகளிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது.

சென்னை மத்திய சிறையிலிருந்த தாளமுத்துவின் கைதி எண் 6477. ‘சி’ வகுப்பு. வயது 19. எடை 43 கிலோ. உயரம் 5 அடி 4 அங்குலம். கல்வித் தகுதி, வேலை ஆகியன பற்றித் தகவல் இல்லை. இருப்பிடம் கும்பகோணம் கும்பேசுவரர் தெற்குத் தெரு.

  1939 பிப்ரவரி 13-ல் சிறைபட்ட தாளமுத்துவுக்குப் பதினெட்டு நாட்கள் கழித்துக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதிதான் அவர் மருத்துவ உதவியை நாடினார் என்று சிறை அதிகாரிகள் கூறினர். அவருக்கு வந்த நோய் அமீபாவினால் (Entamoeba histolytica) உண்டாகும் சீதபேதி என்று சிறை மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அடுத்த நாள் சளியும் குருதியும் கலந்து பதின்மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இல்லை என்றாலும் நிமிடத்துக்கு நாடித் துடிப்பு 88 உடன் மூச்சிரைப்பும் இருந்தது. அதற்கடுத்த நாள் வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டதில் கழிப்பறைக்குத் தாமே நடந்து செல்லத் தாளமுத்து விரும்பியிருக்கிறார். ஆனால், அதற்கு மருத்துவர்கள் இணங்கவில்லை. தேறிவருகிறார் என்று நினைத்த வேளையில், மார்ச் 10-ம் தேதி அவருடைய நிலை மோசமடைந்தது. இரவில் பத்து முறையும் காலையில் பத்து முறையுமாகப் பன்னிரண்டு மணி நேரத்தில் இருபது முறை சளியும் ரத்தமும் கலந்து பச்சை நிறத்தில் கழிந்தது. ஒவ்வொரு முறையும் கழியும் முன் வயிற்றுப்பிசைவுடன் கடும் வலியில் தாளமுத்து துடித்தார்.

உடனே, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மதியம் 1:35-க்கு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் தாளமுத்து. நீர்ச்சத்து இழந்தும், களைத்துச் சோர்ந்தும், கண்கள் உள்ளொடுங்கியும், படபடவென நாடியும் துடித்துக்கொண்டிருந்த தாளமுத்துவுக்கு குளுக்கோஸ், பிராந்தி கலவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையும், தொடர்ந்து குளுக்கோஸ் நீரும் ஊட்டப்பட்டன. கைகால்களின் விரல்நுனிகள் மெல்லச் சில்லிட்டுவந்ததால் கம்பளியும் சுடுநீர் பாட்டிலும் அணைப்புக்குக் கொடுத்தனர். நிலைமை சீரடையாததால் இரவு பத்து மணிக்கு நாளங்களின் வழியாக குளுக்கோஸ்- உப்புநீர் உட்செலுத்தப்பட்டது. மறுநாள், 11-ம் தேதி காலை குதத்தின் வழியாகச் சூடான காபி கொடுத்தார்கள். அப்போதும் நிலைகொள்ளாமல் அனத்திக்கொண்டிருந்தார் தாளமுத்து. 10:30 மணிக்கு அட்ரீனலின் (adrenalin), ஸ்ட்ரிக்னீன் (strychnine) ஆகிய ஊக்கிகள் செலுத்தப்பட்டன. பிற்பகல் 1:45 மணிக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் தாளமுத்துவின் உயிர் பிரிந்தது.

தாளமுத்து எப்படிக் காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் தகவல் சென்றதா, எப்போது பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது, சிறையில் சுகாதார நிலைமை என்ன முதலான கேள்விகள் சட்டமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ஆனால், நடராசன் இறந்தபோது நிகழ்ந்ததைப் போன்ற காரசாரமான விவாதங்கள் நிகழவில்லை. முதல் களப்பலிக்குக் கிடைத்த கெளவரம் என்றே அதைக் கொள்ளலாம். நீதிக்கட்சியின் பெருந்தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், பழம்பெரும் இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம், அப்துல் ஹமீது கான், டி.வி.ராமசாமி, கே.வி.ஆர்.சாமி, மெஹ்பூப் அலி பேக் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.

அரசாங்கம் மேலதிக விவரங்களைக் கேட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தம் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிறுவும்வகையில் விளக்கம் அளித்தார். சீதபேதித் தொற்று ஏற்படுவதற்கும் அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். எனவே, சிறைபடுவதற்கு முன்பே தாளமுத்து தொற்றுக்கு ஆளாகிவிட்டார் என்றார்.

நான்கு மாதங்களாகச் சிறையில் எவருக்கும் இந்நோய் நேரவில்லை என்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டினார். சிறையின் சுகாதார நிலைமையைப் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்றதோடு நில்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டக் கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்காமல் முரண்டுபிடிக்கின்றனர் என்று அவர்கள் மீதே புகார் கூறினார். உடல் மெலிவும் ரத்த சோகையும் உடல்வாகுக்கு உரியதைவிட ஏழெட்டு கிலோ குறைவான எடையும் கொண்டவரான தாளமுத்துவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என்று இறந்துபோன தாளமுத்து மீதே பழி சுமத்தினார். 

மருத்துவ அறிக்கைகளை வழிமொழிந்து முதல்வர் ராஜாஜி கொடுத்த பதில்களில் ஏளனம் இழையோடியது. தாளமுத்து நோய்வாய்ப்பட்டதற்குப் போராட்டத் தலைவர்கள் அக்கறை கொண்டார்களா என ஓர் உறுப்பினர் வினவியதற்கு, இல்லை என்ற பதில் கேள்வியிலேயே தொக்கி நிற்கவில்லையா என்று பதிலளித்தார் ராஜாஜி. தாளமுத்துவின் மறைவு வெளியுலகில் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு முற்றிலும் மாறான உணர்வுநிலையே சட்டமன்றத்தில் வெளிப்பட்டது.

மாலை ஆறு மணிக்குப் பொது மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தாளமுத்துவின் முதிய பெற்றோரும் இளம் மனைவியும் அழுது புரண்ட காட்சி அனைவரையும் கலங்கவைத்தது. மறியல் களமான இந்து தியலாஜிக்கல் பள்ளியைத் தாண்டி ஊர்வலம் சென்றபோது, பேராரவாரம் ஏற்பட்டது. மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசனின் சமாதிக்கு அடுத்து தாளமுத்து புதைக்கப்பட்டார். அண்ணா, என்.வி.நடராசன், பாசுதேவ் ஆகியோர் உணர்ச்சிமிகு இரங்கல் உரையாற்றினர். ‘தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார் அண்ணா.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஆவணபூர்வமான முழு வரலாறு 80 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எழுதப்படவில்லை. அந்த வரலாற்றை எழுதுவது நடராசன் – தாளமுத்து தியாகத்துக்குச் சிறந்த அஞ்சலியாக அமையும்.

- ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

மார்ச் 11 தாளமுத்துவின் 83-ம் நினைவு நாள்.



Read in source website