DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 10-01-2022

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் 19 முதல் பிப். 18-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான எமிஸ் இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன.10) நிறைவுபெறுகிறது. இந்நிலையில், கலந்தாய்வுக்கு பதிவுசெய்யும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கை;

கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் நீதிமன்ற வழக்கு, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் புகார்களுக்கு உள்ளாகி இருப்பினும், அவர்கள் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்.

அதேபோல, ஒரு ஆசிரியர் உரிய தகவலின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் இருந்தால், அதை காலிப் பணியிட பட்டியலில் சேர்க்க வேண்டும்.காலிப் பணியிட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றிய பின்பு, திருத்தங்கள் செய்யாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர, உபரி ஆசிரியர்கள்உள்ள பள்ளியில் இருந்து யாரேனும் பதவி உயர்வில் செல்லும்பட்சத்தில், சார்ந்தவரை பணிநிரவல் பட்டியலில் சேர்க்கக்கூடாது. ஒரு ஆசிரியருக்கு பதிலாக மற்றொருவர் பணி நிரவலில் செல்லவிரும்பினாலும், அனு மதிக்கவேண்டும். மேலும், கலந்தாய்வுக் கான முன்னேற்பாடுகளை மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.



Read in source website

சீக்கிய குரு குரு கோவிந்த் சிங் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், சாகிப் சாதா ஸோராவா் சிங், சாகிப் சாதா பத்தே சிங் ஆகியோரின் உயிா் தியாகத்தைப் போற்றும் வகையில் டிசம்பா் 26-ம் தேதியை வீா் பால் தினமாக, பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் கூறியிருப்பதாவது:

‘குரு கோவிந்த் சிங் ஜெயந்தி தினத்தில், டிசம்பா் 26-ம் தேதி வீா் பால் தினமாக அறிவித்து பகிா்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். இது சாகிப் சாதாக்களின் துணிச்சலுக்கும் நீதிக்கான அவா்களது தாகத்துக்கும் பொருத்தமான மரியாதையாகும்.

சாகிப் சாதா ஸோராவா் சிங், சாகிப் சாதா பத்தே சிங் ஆகியோா் சுவரில் உயிருடன் அடைக்கப்பட்டு உயிா்த்தியாகம் புரிந்த அதே நாள் (டிச. 26) வீா் பால் தினமாக அனுசரிக்கப்படும். சீக்கிய தா்மம் என்னும் புனிதமான கொள்கைக்காக, அதிலிருந்து வழுவாமல், இந்த இருவரும் இறப்பைத் தோ்வு செய்தனா்.

மாதா குஜ்ரி, குரு கோவிந்த்ஜி மற்றும் 4 சாகிப்சாதாக்களின் தீரமும், லட்சியங்களும் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளிக்கிறது. ஒருபோதும் அநீதிக்கு அவா்கள் தலைவணங்கியதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்லிணக்கம் கொண்டதாக உலகத்தை அவா்கள் கண்டனா். அவா்களைப் பற்றி அதிகம் போ் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் மிக்க தருணம் இது என்று கூறியுள்ளாா்.



Read in source website

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த ஆண்டு அக்டோபரில் 10 நாள்களுக்கு அக்கப்பல் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அக்கப்பலின் சோதனை ஓட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘முதலாவது சோதனை ஓட்டத்தின்போது கப்பலின் இயங்கும் தன்மை, அடிப்படை செயல்பாடுகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.

இரண்டாவது சோதனை ஓட்டத்தின்போது கப்பலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கருவிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது, பல்வேறு சூழல்களில் கடினமான பணிகளை ஐஎன்எஸ் விக்ராந்த் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது தொடா்பான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கப்பலில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு ‘சென்சாா்’ கருவிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளன. கடல்சாா் அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்டவை கப்பலின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றன.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் கப்பல்கட்டும் பணியில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் பங்களிப்பை முறையாக வழங்கின. அதன் காரணமாக உரிய காலத்தில் கப்பல் கட்டிமுடிக்கப்பட்டது.

கொச்சியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அண்மையில் குடியரசுத் தலைவரும் குடியரசு துணைத் தலைவரும் தனித்தனியாகப் பாா்வையிட்டனா். கப்பலின் செயல்பாடுகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா். அதில் அவா்கள் திருப்தியை வெளிப்படுத்தினா். மேலும், கப்பல் கட்டும் திட்டத்தில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்’’ என்றாா்.

மிக்-29கே போா் விமானங்கள், கமோவ்-31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை ஐஎன்ஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்க முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.



Read in source website

சென்னை : 14 வயதில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பரத் சுப்பிரமணி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை அடைந்தார்.

இத்தாலி நகரில் உள்ள கட்டோலிகா நகரில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் 6.5 புள்ளிகள் பெற்று பரத் சுப்பிரமணியம் 7-வது இடம் பெற்றார். ஆனால், கிராண்ட் மாஸ்டருக்குத் தேவையான 2500 எலோ ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதையடுத்து, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளைப் பெற்ற பரத், 7-வது இடத்தைப் பெற்றார். ஆனால், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற 3 ஜிஎம் விதிகளை பெற்றதையடுத்து, இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செஸ் போட்டியில் இந்திய வீரர் எம்ஆர் லலித் பாபு 7 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் ஓபனில் 11-வது இடத்தை பரத் பெற்றாலும் முதல் ஜிஎம்முக்கான தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்கேரியாவில் ஜூனியர் ரவுண்ட் செஸ் போட்டியில் 4-வது இடத்தை பரத் பெற்று 2-வது ஜிஎம் தகுதி பெற்றார்.

தற்போது இந்தப் போட்டியில் 7-வது இடம் பெற்றாலும் 3-வது ஜிஎம் தகுதி பெற்றதையடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பரத் சுப்பிரமணியம் பெற்றார். 14 வயதான பரத், தன்னுடைய 11 வயது 8 மாதங்களிலேயே சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் 71-வது கிராண்ட் மாஸ்டராக சங்கல்ப் குப்தாவும், 72-வது கிராண்ட் மாஸ்டராக மித்ராபா குஹாவும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரத் சுப்பிரமணியமுக்கு 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக வந்துள்ள பரத் சுப்பிரமணியமுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த சிறுவன் பரத், சிறந்த உள்ளுணர்வு இருக்கிறது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் தங்களின் இணையதளத்தில் பதிவிட்ட கருத்தில், “ இத்தாலியில் நடந்த வெர்கானி ஓபனில் 2500 ரேட்டிங் புள்ளிகளைக் கடந்து, இறுதி ஜிஎம் விதிகளைக் கடந்து, 14 வயது பரத் சுப்பிரமணியம் நாட்டின் 73-வது கிராண்ட் மாஸ்டராக உருவாகியுள்ளார். அவருக்கு அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது



Read in source website

லண்டன்: உங்களுக்கு ஜலதோஷமா, மூக்கடைப்பா..(common cold)? அப்படியென்றால் கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்! இது ஆச்சர்யமளிக்கும் அறிவிப்பாக இருக்கலாம்.

ஆனால் லண்டனின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சாதாரண ஜலதோஷம் பிடித்திருக்கும் போது T செல்கள் அதிகமாக உருவாகும் அவை கரோனாவுக்கு எதிரான இயற்கையான அரணாக இருக்கும் எனக் கூறுகின்றனர் இந்த ஆய்வு முடிவை எழுதியவர்கள்.

கரோனா எதிர்ப்பாற்றல் பற்றி புரிந்து கொள்வது எத்தனையோ ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் கூட சற்று கடினமானதாகவே இருக்கிறது. தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்பாற்றல் 6 மாதங்களில் குறைந்துவிடும் என்று கூறப்படும் நிலையில் ஜலதோஷத்தால் உருவாகும் T-cells கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி 2020 செப்டம்பரில் தொடங்கியது. இதற்காக லண்டனில் 52 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்தக் குடும்பங்களில் சளி பிடித்தோருக்கு, கரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் வந்த பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இவர்களில் 26 பேருக்கு தொற்று ஏற்படவில்லை. அவர்களுக்கு T-cells அதிகமாக இருந்தன.

இதன் அடிப்படையில், ஏற்கெனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நபரில் இருக்கும் T-cells, கரோனா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் ரியா குந்து கூறினார். ஆனால் இந்த பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறவில்லை.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 வில் உள்ள புரதங்களை T-cells தாக்குவதால் இது தடுப்பூசி தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு வரும் என்றார்.

தற்போதுள்ள கரோனா தடுப்பூசிகள் வைரஸின் ஸ்பைக் புரதங்களைக் குறிவைக்கின்றன. ஏனெனில் இந்த முள் புரதங்கள் தான் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. அப்படியான உருமாற்றத்தினால் தான் ஒமைக்ரான் வந்துள்ளது. அதேவேளையில் T-cells உள்ளார்ந்த புரதங்களைக் குறிவைக்கின்றன. இதனால் அங்கே உருமாற்றம் நிகழ்வது குறைவு என ஆராய்ச்சிக் கட்டுரையின் சக எழுத்தாளர் பேராசிரியர் அஜித் லால்வானி தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் வரும் புதிய தடுப்பூசிகள், T-cells போன்று செயல்பட்டு தற்போது உள்ள திரிபுகள் மட்டுமல்லாமல் இனி வரக்கூடிய திரிபுகளையும் தடுக்க வல்லதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.



Read in source website

மியான்மர்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை மேலும் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 76 வயதான ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று ஆங் சான் சூச்சி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூச்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இன்னொரு வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகள் முன் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட அன்று ஆங் சான் சூச்சி வீட்டில் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங் தலைமையிலான படைகள் சோதனை நடத்தியபோது, வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடத்தல் கருவிகள் என்று கூறி ராணுவம் வழக்கு தொடர்ந்திருந்தது. மியான்மரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்தான் ஆங் சான் சூச்சிக்கு மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு ஆண்டுகள் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் ஆறு ஆண்டுகள் அவர் தண்டனை அனுபவிக்கவுள்ளார். இந்த ஆறு ஆண்டு தண்டனை காலத்தையும் தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூகி அனுபவிக்க முடியும் என்று மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தண்டனை தொடர்பாக சூச்சியின் வழக்கறிஞர்கள் யாரும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், மியான்மர் மனித உரிமை கண்காணிப்பகம் சூச்சிக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், "ஆங் சான் சூகிக்கு மேலும் மேலும் தண்டனைகள் அளிப்பது நாடு தழுவிய அளவில் மக்களிடம் அதிருப்தியை அதிகரிக்கும்" என்று எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளது.



Read in source website

நிக்கோஸியா: மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த 2021 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் 3வது அலை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறியதாவது:
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் என இரண்டு வைரஸ்களின் பாதிப்பும் உள்ளது. இந்த இரண்டு பாதிப்பும் இணைந்து இருப்பதை டெல்டாக்ரான் வைரஸ் என அழைக்கிறோம். இதில் ஒமைக்ரானின் மரபணு அடையாளங்களும், டெல்டா வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளன.

இந்த வகை டெல்டாக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 25 பேரைக் கண்டறிந்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சூழலில் அனுமதியாகும் நோயாளிகள் மத்தியில் தான் இந்தப் பாதிப்பு தெரிகிறது.

25 பேரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்வாப் மாதிரிகளை குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்' (GISAID) என்ற அமைப்பின் ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதா உள்ளிட்ட கூறுகளை இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்து தெரிவிக்கும். ஆனால், எனது தனிப்பட்ட கணிப்பின்படி, ஒமைக்ரான் வைரஸை இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான் பிளஸ் திரிபு தான் மேலோங்கி நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 5 வாரங்களாக உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோல கரோனா தொற்றும் வேகமாக பரவுகிறது.

ஆனாலும், இதன் பாதிப்புகுறைவாக உள்ளது. பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமலோ அல்லது லேசான அறிகுறியோ உள்ளது. தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோர் 1 முதல் 2 சதவீதமாக உள்ளது. கரோனா 2-வது அலையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பது ஆறுதல் தரும் விஷயம்.



Read in source website

நீங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை எப்படி செலுத்துகிறீர்கள்? பணமாகவா அல்லது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற மொபைல்போன் செயலிகளின் வழியாகவா? ஸ்மார்ட்போன், இணையம் சார்ந்து புழங்கிக்கொண்டிருக்கும் நபர் என்றால் பெரும்பான்மையான நேரங்களில் நீங்கள் இத்தகைய செயலிகளின் வழியே பரிவர்த்தனை செய்பவராக இருக்கக்கூடும்.

போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது கிராமங்கள் வரையில் இச்செயலிகள் பரவியுள்ளன. பெட்டிக்கடை, தெருவோரக் கடைகளில் இச்செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் (QR Code) அட்டையை பார்க்க முடியும்.

இந்தச் செயலிகள் நம் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிதாக்கியது மட்டுமல்ல, இந்தியாவின் பணப் பரிவர்த்தனைக் கட்டமைப்பை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதில் நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இத்தகைய பரிவர்த்தனை முறையில் உலகின் முன்னோடி நாடு இந்தியா என்பதுதான். பல வளர்ந்த நாடுகளில் இன்னும் கார்டு மூலமான பரிவர்த்தனையே முதன்மையானதாக இருக்கிறது. எப்படி இந்தியா இத்தகையதொரு பரிவர்த்தனை கட்டமைப்பை உருவாக்கியது? ஒரே பதில், யுபிஐ. போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற செயலிகள் இந்தியா உருவாக்கிய யுபிஐ அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதால் தான் அச்செயலிகளின் வழியே எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது.

யுபிஐயின் தோற்றம்

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில் 2009-ம் ஆண்டில் நேஷனல் பேமெண்ட் கார்பரேசன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற லாப நோக்கற்ற அமைப்பை மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கின. 2011-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 1 கோடிக்கு மேற்பட்ட சில்லறை வணிகர்கள் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்பவர்களாக இருந்தனர். ஆனால், அந்த சமயத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6 முறை மட்டுமே அத்தகைய பரிவத்தனையில் மக்கள் ஈடுபட்டனர். அவ்வளவு குறைவான பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம், அந்த சமயத்தில் 14.5 கோடி இந்திய குடும்பங்கள் வங்கி சேவையை பெற முடியாத நிலையில் இருந்தன.

இந்தச் சூழலில் 2012-ம் ஆண்டு ஆர்பிஐ ஒரு இலக்கை நிர்ணயித்தது: அடுத்த நான்கு ஆண்டுகளில், நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான அதேசமயம் மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பணப் பரிவர்த்தனை அமைப்பை உருவாக்க வேண்டும். ஆர்பிஐ-யின் வழிகாட்டுதலின் கீழ் என்பிசிஐ அந்தப் பணியை மேற்கொண்டது. அப்படி உருவானதுதான் யுபிஐ. ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ(Unified Payment Interface) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பானது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒரே குடைக்குள் இணைத்து அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. மொபைல்போன் செயலி வழியே ஒரு வங்கியிலிருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.

யுபிஐயின் அசுர வளர்ச்சி

யுபிஐ 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. யுபிஐ அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலே அது மக்களின் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ வழியே மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு ரூ.707 கோடி. 2018 டிசம்பரில் அது ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2021டிசம்பர் டிசம்பரில் அது ரூ.8.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தமாக சென்ற ஆண்டில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.73 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கை 3,800 கோடி ஆகும். 2016 டிசம்பரில் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. 2018 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 129-ஆக உயர்ந்தது. தற்போது யுபிஐயின் கீழ் 282 வங்கிகள் உள்ளன.

தற்போது இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் புழக்கத்தில் உள்ளன. யுபிஐ சந்தையில் போன்பே மற்றும் கூகுள்பே தலா 43 சதவீதம் அளவில் பங்கு வகிக்கின்றன. பேடிஎம் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. யுபிஐ மூலம் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரையில் அனுப்ப முடியும். எனினும், யுபிஐ பரிவர்த்தனையில் 50 சதவீதம் ரூ.200 க்கு கீழான தொகை ஆகும். கூகுள் ஒரு உலகளாவிய நிறுவனம் என்பதால், கூகுள் பே மூலம் ஏனைய நாட்டு மக்களும் நம்மைப் போல எளிமையான முறையில் பரிவர்த்தனை மேற்கொள்வார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.

கூகுள்பே இந்தியாவில் செயல்படும் முறையும் ஏனைய நாடுகளில் செயல்படும் முறையும் ஒன்றல்ல. ஏனைய நாடுகளில் கூகுள்பே ஒரு வாலட்டாக (wallet) செயல்படுகிறது. அதாவது நம்முடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை அதில் பதிவேற்றம் செய்யவேண்டும். கடைகளில் பில் செலுத்தும்போது கார்டுக்குப் பதிலாக கூகுள்பே மூலம் பணம் செலுத்தலாம். கூகுள்பே போன்று பல செயலிகள் உலகெங்கும் புழக்கத்தில் உள்ளன. ஆப்பிள்பே, சாம்சங் பே ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம். இவை அனைத்தும் வாலட்டாக செயல்படுபவை. இந்த இடத்தில்தான் இந்தியாவின் யுபிஐ தனித்துவம் பெறுகிறது.

யுபிஐயின் தனித்துவம்

நெட்பேங்கிங் முறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் வழியே நாம் யுபிஐயின் தனித்துவத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.நெட் பேங்கிங்கைப் பொருத்தவரையில் நாம் எந்தக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு விவரங்களை நம்முடைய நெட்பேங்கின் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். வங்கி அதை ஏற்றுக் கொள்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அதன் பிறகுதான் பணம் அனுப்ப முடியும்.

அனைத்துக்கும் மேலாக, நெட்பேங்க் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள அதற்கான இணையதளத்துக்கோ அல்லது நம் வங்கியின் பிரத்யேக செயலிக்கோ செல்ல வேண்டும். நாம் நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அந்தந்த வங்கிக்கான தளத்துக்கோ அல்லது செயலிக்கோ தனித்தனியே சென்றுதான் பணம் அனுப்ப முடியும். ஆனால், யுபிஐயானது ரியல் டைம் பேமெண்ட் என்றழைக்கப்படும் உடனடி பரிவர்த்தனையை சாத்தியப்படுத்துகிறது.

நெட்பேங்கிங்கில் உள்ள சிரமமான நடைமுறை எதுவும் யுபிஐயில் இல்லை. நமது மொபைலில் யுபிஐ தொடர்பான ஏதேனும் ஒரு செயலியை (போன்பே, கூகுள்பே, பேடிஎம்….) டவுன்லோட் செய்து, நம் மொபைல் எண்ணை அதில் உள்ளிட்டால், அந்த எண் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நாம் கணக்கு வைத்திருந்தாலும் அவை அனைத்தும் - அந்தச் செயலியில் வந்துவிடும். அதன் பிறகு நம்முடைய மொபைல் எண்ணுக்கு என்று தனியே யுபிஐ ஐடி உருவாக்கிக் கொள்ளலாம்.

நாம் யாருக்காவது பணம் அனுப்ப விரும்பினால் அவர்களின் வங்கிகள் விவரங்கள் எதுவும் தேவையில்லை. அவர்களின் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் இருந்தால் மட்டும்போதும். அதைப் பயன்படுத்தி அந்த நபருக்கு பணம் அனுப்பலாம். நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், எந்த வங்கியிலிருந்து பணம் அனுப்ப வேண்டும் என்பதை நாம் அந்த செயலியில் இருந்தே தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல் நமக்கு யாராவது பணம் அனுப்ப வேண்டுமெனில், அது எந்த வங்கிக் கணக்கு ஏற வேண்டும் என்பதே நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதில் உள்ள க்யூஆர் கோடு வசதியானது பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமை ஆக்குகிறது. ஓட்டலில், சாலையோரக் கடைகளில், சூப்பர் மார்க்கெட்டில், பில் செலுத்துவதற்கு அவர்களுடைய யுபிஐ ஐடியை கூட நாம் உள்ளிடத் தேவை இல்லை. அவர்கள் வைத்திருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும். அவர்கள் கணக்கு நம் செயலியில் தோன்றி விடும். அதன் மூலம் நாம் பணம் அனுப்பலாம். யுபிஐ கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பிம் (BHIM) செயலி மூலம், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும். அதாவது, நாம் பணம் அனுப்பும் நபருக்கு மொபைல் போன் இல்லையென்றால், அவர்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு அதற்கு பணம் அனுப்பலாம். அந்தப் பணம் அவர்கள் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு சென்றுவிடும்.

நாம் அன்றாடம் புழங்குவதால் இந்த நடைமுறை எல்லாம் நமக்கு எளிதாக தோன்றக்கூடும். ஆனால், வங்கிகளை ஒரே குடைக்குள் கொண்டுவருவதும், பெரிய நடைமுறைகள் ஏதும் இல்லாமல் அவற்றுக்கிடையே பணப்பரிவர்த்தனையை சாத்தியப்படுத்துவதும், வங்கி விவரங்கள் இல்லாமல் மொபைல் எண்ணுக்கு, ஆதார் எண்ணுக்கு பணம் அனுப்பி அது வங்கிக் கணக்கில் வரவாகச் செய்வதும் அவ்வளவு எளிதானது இல்லை.

அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சி ரீதியாக பின் தங்கிய நாடு. ஆனால், யுபிஐ வழியே - இப்படியான ஒரு கட்டமைப்பை கற்பனை செய்து, அதை சாத்தியப்படுத்தியதில் - இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவில் அலிபே, வீசேட் போன்ற செயலிகள் இருந்தாலும் அவை இந்தியாவின் யுபிஐ அளவுக்கு எளிமையானவை அல்ல.

யுபிஐ: ஒரு முன்னுதாரணம்

இந்தியா உருவாக்கிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் யுபிஐ மிக முக்கியமான ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. எஃப்ஐஎஸ் (Fidelity National Information Service) என்ற ஆய்வு நிறுவனம் 2018-ம் ஆண்டில், உலக அளவில் 40 உடனடி பணப் பரிவர்த்தனை அமைப்புகளை ஆய்வு செய்து, அதில் இந்தியாவின் உடனடி பணப் பரிவர்த்தனை அமைப்புதான் சிறந்தது என்று மதிப்பிட்டது. இந்தியாவின் யுபிஐ முறையை முன்னுதாரணம் காட்டி 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வுக்கு கடிதம் எழுதியது.

அதில் இந்தியாவில் யுபிஐ மிகுந்த திட்டமிடலுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்தியாவைப் போல அமெரிக்காவும் யுபிஐ போலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூகுள் குறிப்பிட்டிருந்தது. தற்போது அமெரிக்கா யுபிஐ போல் பெட்நவ் (FedNow) என்றொரு பரிவர்த்தனைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அது 2023-ம் ஆண்டில்தான் முழுமையான பயன்பாட்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் பேநவ் (PayNow) என்றொரு கட்டமைப்பைக் கொண்டுவந்தது. பேநவ் மூலம் யுபிஐ போலவே எந்த வங்கியிலிருந்து எந்த வங்கிக்கும் நொடியில் பணம் அனுப்பலாம். தற்போது இந்திய அரசும் சிங்கப்பூர் அரசும் யுபிஐ மற்றும் பேநவ் இடையே இணைப்பை உருவாக்கி இரு நாடுகளுக்கிடையிலான பணப்பரிவர்த்தனை நடைமுறையை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளன.

சமீபத்தில் பூடான் அரசு அந்நாட்டில் இந்தியாவின் யுபிஐ முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தற்போது யுபிஐ வழியே முதன்மையாக இந்தியாவுக்குள் செயல்படும் வங்கிகளுக்குள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் யுபிஐ கட்டமைப்பை உலகளாவிய தளத்துக்கு விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. ஒட்டுமொத்த அளவில், தொழில்நுட்ப கட்டமைப்பு ரீதியாக, இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையையும் ஆற்றலையும் யுபிஐ கொடுத்துள்ளது!

riyas.ma@hindutamil.co.in



Read in source website

உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் அதிா்ச்சி அளிக்கிறது. ஆழிப்பேரலையாக மீண்டும் ஒருமுறை கொவைட் 19 தாக்கக் கூடும் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட முடியாது.

சீனாவின் பல நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள்கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறாா்கள் என்று செய்திகள் வருகின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. ஒருபுறம் ஒமைக்ரான் உருமாற்றம் பரவுகிறது என்றால், இன்னொருபுறம் ஏறத்தாழ 40% அளவில் டெல்டா உருமாற்ற பாதிப்பும் காணப்படுகிறது.

பிரிட்டன், துருக்கி, கிரீஸ், ஜொ்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, ஆஸ்திரேலியா என தீநுண்மித் தொற்றின் பரவல் எல்லைகளும் கண்டங்களும் கடந்து காட்டுத்தீ போலப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

உச்சநீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள், 150 பணியாளா்களை தீநுண்மித் தொற்று பாதித்திருக்கிறது என்றால், மக்களவை -மாநிலங்களவை செயலகங்களில் பணியாற்றும் சுமாா் 400 பேரையும் பாதித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் டெல்டா உருமாற்றம் ஏற்படுத்திய, நிலைகுலைய வைத்த பாதிப்புகளின் பின்னணியில் இப்போதைய ஒமைக்ரான் உருமாற்றப் பரவலை நாம் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 12,895 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி, அதாவது 6,156 பாதிப்புகள் சென்னையில் மட்டுமாகக் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவா்களில் 85% பேருக்கு ஒமைக்ரான் உருமாற்ற பாதிப்பு காணப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவிக்கிறாா்.

சா்வதேச அளவில் அதிவிரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் உருமாற்றத்தை எதிா்கொள்வதற்கு உடனடியாக எதிா்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் மூன்றாவது தவணை (பூஸ்டா் டோஸ்) போடப்படுவது அவசியம் என்று மருத்துவ ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களையும் ஒமைக்ரான் உருமாற்றம் பாதிக்கிறது என்றாலும்கூட, பாதிப்பு கடுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் பூஸ்டா் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி அத்தியாவசியமாகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து கோடி போ் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் 2.7 கோடி போ் முன்களப் பணியாளா்களும், இணைய நோய் உள்ளவா்களும், மூத்த குடிமக்களும். இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டு ஆறு முதல் 10 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவா்களது கொவைட் 19-க்கான எதிா்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் உடனடியாக மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழகத்தில் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி முதல்வா் மு.க. ஸ்டாலினால் இன்றுமுதல் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளா்கள், 9.78 லட்சம் முன்களப் பணியாளா்கள், 20.83 லட்சம் மூத்த குடிமக்கள் என 36.26 லட்சம் போ் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவா்கள். தமிழகத்தில் ஏற்கெனவை 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில், காலதாமதமில்லாமல் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி இருப்பது வரவேற்புக்குரியது.

அகில இந்திய அளவில் சுமாா் 1.05 கோடி சுகாதாரப் பணியாளா்கள், 1.9 கோடி முன்களப் பணியாளா்கள், இணை நோய்களும் மூத்த குடிமக்களும் என்று 2.75 கோடி போ் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவா்கள். தமிழகத்தைப் போலவே எல்லா மாநிலங்களும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தினால்தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து அவா்களைப் பாதுகாக்க முடியும்.

மூன்றாவது தவணைக்கு எந்தத் தடுப்பூசி மருந்தை பயன்படுத்துவது என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. மூன்றாவது தவணையை செயல்படுத்தும் பல்வேறு நாடுகளில், ஃபைசா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு தவணைக்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசியால் முந்தைய அளவு பாதுகாப்பை வழங்க முடியுமா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது தவணையும் போடுவதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. 90% போ் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவா்களாகவும் இருக்கிறாா்கள். அதனால்தான் எழுப்பப்பட்டிருக்கும் ஐயப்பாடு, சற்று கவலை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அவற்றில் கோவாக்ஸினும், சைகோவ் டி இரண்டு மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி பெற்றிருக்கின்றன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்படும் கோவாவேக்ஸ் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை.

இந்தப் பின்னணியில் அனைவருக்கும் இன்னும்கூட முதல் இரண்டு தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறோம் என்பதும், மூன்றாவது தவணை தடுப்பூசிக்கு ஐந்து கோடிக்கும் அதிகமானோா் இருக்கிறாா்கள் என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய எதாா்த்தங்கள். போா்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடுவதன் மூலம்தான் கொவைட் 19-இன் அடுத்த ஆழிப்பேரலையை எதிா்கொள்ள முடியும்!



Read in source website

ஆக்சிஜன் உற்பத்தி

உலகில் ஆக்சிஜனின்றி ஓர் உயிரினம் கூட வாழ முடியாது. இது பொது புத்தி. ஆனால் விலங்குகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவில்லை. தாவரங்கள்தான் நமக்கு உயிர்ப்பிச்சை அளிக்கின்றன. அதுவும் உலகம் உருவான காலத்தில் உயிரிகள் ஆக்சிஜன் மூலம் சுவாசிக்கவில்லை. காரணம் அப்போது ஆக்சிஜனில்லா உலகமாக இருந்தது. உயிரிகள் ஹைடிரஜனை வெளியேற்றி சுவாசித்தன. பச்சையம் வந்தபின்னர்தான், சூரிய ஒளி மூலம் ஆக்சிஜன் உருவானது. அந்த முறையைத்தான் நாம் ஒளிச்சேர்க்கை என்கிறோம். இப்போது ஓர் ஆச்சரியம்/அதிசயம்தான். இருட்டில் கடல் நுண்ணுயிரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறதாம். டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். 2022, ஜனவரி 6 ஆம் தேதி இதுகுறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன. 

நுண்ணுயிரிகள் இருட்டில் ஆக்சிஜன் உருவாக்கல்- கண்டுபிடிப்பு 

சூரிய ஒளி இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி இல்லை. எனவே, சூரிய ஒளி இல்லாவிட்டால் பூமியில் ஆக்சிஜன் இருக்காது என்பது நமக்கு அறிவுறுத்தப்பட்ட பொதுவான கருத்து. அதுவே பொதுவான அறிவு; ஒளிச்சேர்க்கையின் முக்கிய கூறு, ஒளி பச்சையம் மற்றும் பொருள்களோடு இணைவதுதான். ஆனால், இப்போது ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

சூரிய ஒளி இல்லாமல்கூட ஆக்சிஜன்  உற்பத்தி செய்யலாம்/செய்யப்படுகிறது என்பதுதான். அது கடலின் ஆழ்பரப்பில் இருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆழமான, இருண்ட கடல் நீரில் நாம் நினைப்பதைவிட இந்நிகழ்வுகள் அதிகமாக நடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத, நமக்குப் பெயரும் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் எண்ணற்ற எண்ணிக்கையில்  நீர் அடுக்குகளில், பல வரிசைகளில் அவற்றின் அன்றாட வாழ்க்கையை, நம்மிடம் ஏதும் சொல்லால், நம்மிடம் பகிர்ந்துகொள்ளாமல், அவைகள் நம்மைவிட மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த நுண்ணுயிரிகளின் கூட்டத்திடையே இப்படி ஒரு நிகழ்வு, அதாவது ஆக்சிஜன் உற்பத்தி  நடந்து கொண்டிருக்கிறது. நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வுகள்

நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான ஆய்வினை, தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட் கிராஃப்ட் மற்றும் டொனால்ட் ஈ. கேன்ஃபீல்ட்(Beate Kraft and Donald E. Canfield) ஆகியோர் நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவு அறிவியல் இதழில் 2022 ஜனவரி 6 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிகோ ஜெம்லிச், மோர்டன் லார்சன், லாரா பிரிஸ்டோவ், மார்ட்டின் கோன்னேகே மற்றும் போ தாம்ட்ரப் (Jehmlich, Morten Larsen, Laura Bristow, Martin Könneke and Bo Thamdrup) ஆகியோர் பங்களித்துள்ளனர்.

பீட் கிராஃப்ட் என்ற பெண், உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கவனம் நுண்ணுயிர் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் சிறப்பான ஈடுபாட்டுடன் உள்ளது. மேலும், அவரது ஆராய்ச்சியை வில்லம் என்ற  இளம் ஆய்வாளர் கிராண்ட் ஆதரிக்கிறார். டான் ஈ. கேன்ஃபீல்ட் உயிரியல் துறை சூழலியல் பேராசிரியராகவும், உயிரியல் துறையின் டேனிஷ் இன்ஸ்டிடியூட் தலைவராகவும் உள்ளார்.

ஆக்சிஜன்-சூரிய ஒளியின்றி 

ஆக்சிஜன் பூமியில் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. மேலும், முக்கியமாக தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாவிலுள்ள பச்சையத்தின் வழியே ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜன்  உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சில நுண்ணுயிரிகள் சூரிய ஒளி இல்லாமல் ஆக்ஸிஜனை உருவாக்குவதாக அறியப்படுகிறது. ஆச்சரியம்தான். ஆனால், இதுவரை அவை மிகக் குறைந்த அளவுகளில் மற்றும் மிகவும் குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடல் வாழ் நுண்ணுயிரியான நைட்ரோசோபுமிலஸ் மாரிடைமஸ் (Nitrosopumilus maritimus )  மற்றும்  அவைகளுடன் தொடர்புடையவை , அம்மோனியா ஆக்சிடைசிங் ஆர்க்கியா (ammonia oxidizing archaea) எனப்படும்.

இருட்டில் உலவும் பேய் உயிரிகள்

"உண்மையில் நுண்ணுயிரிகள் பெருங்கடல்களில் ஆழத்திலும் எண்ணற்ற அளவில் ஏராளமாக உள்ளன. அங்கு அவைகள் முக்கியமாக நைட்ரஜன் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கும்கூட அவைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், எனவே ஆக்சிஜன் இல்லாத நீரில் அவை ஏன் அதிக அளவில் உள்ளன என்பது நீண்டகால புதிராகவே உள்ளது" என உயிரியலாளர் பீட் கிராஃப்ட் தெரிவிக்கிறார்.

"இவை எல்லாம் எந்தச் செயல்பாடும்/பயன்பாடு இன்றி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை ஒருக்கால் ஒருவித பேய் செல்களோ என நினைத்தோம்" அவர் சொல்கிறார்.

ஆனால் இதில் புதிர் ஒன்று இருந்ததை கண்டறிந்தோம் என்கிறார் பீட் கிராஃப்ட்.

"இந்த நுண்ணுயிரிகள் எல்லாம் மிகவும் பொதுவானவை தான். ஒரு வாளி கடல் நீரில், நாம் சோதித்துப் பார்த்தால் அதில் உள்ள செல்களில் 5ல் ஒன்று, இந்த நுண்ணுயிரிகள் என்பது இணை ஆசிரியர் டான் கேன்ஃபீல்ட்டின் கருத்து. எனவே, மேற்கூறிய ஆய்வின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாகி, அதிகம் ஆய்வு செய்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஆக்சிஜன் குறைந்துவிட்ட நீரில் அவை எப்படி செயல்பட முடியும் என்பதுதான்.

ஆய்வாளர்கள் சோதனை செய்து அறிந்த தகவல் "அந்த நுண்ணுயிரிகள் , தாங்களே ஆக்ஸிஜனை உருவாக்குகிறார்கள் என்பதே". பின்னர் பீட் கிராஃப்ட் அவற்றை ஆய்வகத்தில் சோதிக்க முடிவு செய்தார்.

"ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நாங்கள் பார்க்க விரும்பினோம். ஆக்சிஜன் நிறைந்த நீரிலிருந்து ஆக்சிஜன் குறைந்த தண்ணீருக்கு நகரும்போது, அந்த நுண்ணுயிரிகள்  உயிர் பிழைப்பார்களா?தண்ணீரில் உள்ள அனைத்து ஆக்சிஜனையும் அந்த நுண்ணுயிரிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதைஆய்வாளர்கள் அறிந்தனர். பின்னர் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.  சில நிமிடங்களில், ஆக்சிஜன் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அது ஆய்வாளர்களுக்கு ஏராளமான உற்சாகத்தைத் தந்தது. என்பதை டான் கேன்ஃபீல்ட் நினைவு கூர்ந்து தெரிவிக்கிறார்.

குறைந்த அளவு -ஆக்சிஜன் உருவாக்கம்

Nitrosopumilus maritimus நுண்ணுயிரிகள் இருண்ட சூழலில் ஆக்ஸிஜனை உருவாக்கும் திறன் கொண்டவை என அறியப்பட்டது. ஆனால், அந்த அளவு  அதிகம் இல்லை. அது பூமியில் ஆக்சிஜன் அளவை பாதிக்கும் அளவுக்கோ, அதனுடன் உருவாக்கத்தில் போட்டியிடவோ  இல்லை. ஆனால் தங்களின் வாழ்நிலைக்கு தன்னைத்தானே தொடர போதுமானது.

அதிக ஆக்சிஜன்..?

"அந்த நுண்ணுயிர்கள் தங்களுக்குத் தேவையானதைவிட சற்று அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தால், அந்த ஆக்சிஜன் விரைவில் மற்ற உயிரினங்களால்பயன்படுத்தப்படும். எனவே, இந்த ஆக்சிஜன் கடலை விட்டு வெளியேறாது" என்கிறார் பீட் கிராஃப்ட்..

ஆனால், இப்படி இந்த  நுண்ணுயிர்கள் மிக அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்போது, அவைகளின் வாழ்சூழலில் அவை என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பது இனிதான் அறியப்படவேண்டும்.

புதிய கடல்பயண தேடல்

அம்மோனியா ஆக்ஸிஜனேற்ற ஆர்க்கியா வகை நுண்ணுயிரிகள், பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.  அவை உலகளாவிய நைட்ரஜன் சுழற்சியை தொடர்ந்து தங்களிடம் தக்க வைத்துள்ளன.  ஆனால் அவற்றின் திறன்களின் முழு அளவையும் அவைகளோ/நாமோ அறிந்திருக்கவில்லை.

புதிய பாதை; புதிய தகவல்

இப்போது அறியபப்ட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாதையில்/வழிமுறைகளில், நுண்ணுயிரி "நைட்ரோசோபுமிலஸ் மாரிடைமஸ்" ஆக்சிஜன் உற்பத்தியை, வாயு நைட்ரஜனின் உற்பத்தியுடன்  இணைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவை சுற்றுச்சூழலில் உயிரிகளிடமிருந்து கிடைக்கும் நைட்ரஜனை நீக்குகின்றன.

"இந்த வாழ்க்கை முறை பரவலாக பெருங்கடல்களில் இருந்தால், அது நிச்சயமாக கடல் நைட்ரஜன் சுழற்சியைப் பற்றிய நமது தற்போதைய புரிதலை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது" என்கிறார் பீட் கிராஃப்ட்.

"அவரது  அடுத்த கட்ட செயல்பாடு என்பது உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் கடல் இருக்கும் பகுதிகளில் ஆக்சிஜன் குறைந்த நீரில் இருந்து, ஆய்வகத்தில் ஆய்வு செய்ய கொஞசம் நுண்ணுயிரிகள் எடுத்து ஆய்வகத்தில் வளர்த்து அதில் இப்போது கடலில் கண்ட நிகழ்வுகளை  எப்படி செய்கின்றன என ஆய்வதாகும்" என்று பீட் கிராஃப்ட் கூறுகிறார்.

அவரது ஆராய்ச்சிக் குழு ஏற்கனவே டென்மார்க்கில் உள்ள மரியாஜர் ஃப்ஜோர்டில் மாதிரிகளை எடுத்துள்ளது, அடுத்து மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகாவுக்கு வெளியே இந்த ஆய்வுகளைச் செய்ய  உள்ளது.



Read in source website

இந்த ஆண்டின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பியதன் வாயிலாக, அனைத்து சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. நாடாளுமன்ற அவைகளைப் போலத் தனி அலைவரிசையை வருங்காலத்தில் உருவாக்கிடவும் அதன் வழியாக ஆக்கபூர்வமான அரசியல் சூழலை வளர்த்தெடுக்கவும் வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு கால நடவடிக்கைகள் அனைத்தும் மின்னுருவாக்கம் செய்யப்படும் என்ற நிதிநிலை அறிக்கையின் முந்தைய அறிவிப்பும் விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும்.

பயிர் பாதிப்பு நிவாரணங்களுக்கு நிதி விடுவிப்பு, சென்னை வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. அம்மா உணவகங்கள் மூடப்படாது என்ற முதல்வரின் அறிவிப்பு, எளியோர் நெஞ்சில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறு குற்றத்தில் ஈடுபட்டாலும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற முதல்வரின் எச்சரிக்கையை அவரது கட்சியினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான நெகிழ்வான விதிமுறைகள் ஊழலுக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அதை நீக்கும் முயற்சியாக இயக்குநர்களின் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, கூட்டுறவு முறையைப் பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது தொடர்பில், மத்திய உள் துறை அமைச்சரும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். கூட்டுறவுத் துறை சீர்திருத்தங்களைத் திமுக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

நிறைவேற்றப்பட்டுள்ள 13 சட்ட முன்வடிவுகளில் பெரும் பாராட்டைப் பெற்றிருப்பது, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அதிகார அமைப்புகளுக்குமான ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நியமிக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவாகும். இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, இந்தச் சட்ட முன்வடிவு அவையில் நிறைவேற்றப்பட்டது, ஆளுங்கட்சியின் மற்ற அறிவிப்புகளைப் பின்தள்ளிவிட்டு, முதன்மையான கவனத்தை ஈர்த்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள், மின்வாரியம் ஆகியவற்றில் ஊழியர்களை நியமிப்பதில் அவ்வப்போதைய ஆளுங்கட்சிகள் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதற்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளன. என்றபோதும், திமுக தனக்கான வாய்ப்புகளை மறுத்து அந்நியமனங்களை வெளிப்படையாக நடத்துவதற்கு முன்வந்திருப்பது தமிழ்நாட்டின் நிர்வாகத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

டிஎன்பிஎஸ்சி வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, இந்நியமனங்கள் அளிக்கப்படவுள்ள அதே வேளையில், முதன்மைத் தேர்வுகளில் விரித்துரைக்கும் வகையிலான விடைத்தாள்கள் திருத்தப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் நேர்காணல் தேர்வில் மதிப்பெண் குறைந்து வேலைவாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.



Read in source website

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டது. கரோனாவின் தாக்கம் காரணமாக 2023, அக்டோபரிலிருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று யூ.ஜி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதனால் முன்பு இருந்ததை விடவும் முனைவர் பட்டப் படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

அதேபோல, ஏற்கெனவே தனியார் கல்லூரிகள், ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலரும் வேலையை விட்டுவிட்டு முழுநேர முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்கின்றனர். முழுநேர முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே தொழிற்கல்விப் பட்டப் படிப்பைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், அரசின் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி பணிக்கும் சேர முடியும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதன் விளைவே இது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமான அளவில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். கேரள மத்திய பல்கலைக்கழகம் முழுநேர முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் 70%-க்கும் அதிகமான மாணவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான காரணிகளாக போதிய உதவித்தொகை இல்லாமை, ஆய்வு வழிகாட்டியின் ஒத்துழைப்பின்மை, குடும்பப் பொருளாதாரச் சூழல், அதிக நேர உழைப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக உதவித்தொகை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வயதில் உடன் படித்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நிலையில் இருக்கும்போது வீட்டில் பணம் பெற்றுப் படிப்பது என்பதே சங்கடமான சூழல்தான். அதிலும் உதவித்தொகை இல்லாமல் கல்லூரிக் கட்டணம், விடுதி உணவுக் கட்டணம், ஆய்வுக்குச் செலவாகும் தொகை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்குத் தேவையான கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்கும் பெற்றோரைச் சார்ந்திருப்பது என்பது ஏழ்மையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைப் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

சீனா, பிரேசில் போன்ற நமக்கு இணையான நாடுகளில் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யும் தொகையில் கால் பங்குகூட இந்திய அரசு ஒதுக்குவதில்லை. ஒரு நாடு ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதைப் பொறுத்தே அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்திய அரசு ஏனோ ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தொகை ஒதுக்குவதில் சுணக்கம் காட்டிவருவதால் மேலும் நாம் ஆய்வில் பின்னோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மத்திய அரசு வழங்கும் யூ.ஜி.சி. கல்வி உதவித்தொகை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை குறைவான நபர்களுக்கே வழங்கப்படுவதால் பல முழுநேர முனைவர் பட்ட மாணவர்களின் படிப்பு என்பது மாநில அரசின் உதவித்தொகையை நம்பித்தான் இருக்கிறது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.50,000-லிருந்து ரூ. ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான மாணவர்களின் குடும்பத்தின் வருமான வரம்பையும் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஆனால், முழுநேர முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையானது மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுவருகிறது.

குறிப்பாக, நாம் வேளாண்மையைத்தான் முக்கியத் தொழிலாகக் கருதுகிறோம். அதற்குக் காரணம் நம் நாட்டில் 60%-க்கும் அதிகமானோர் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அப்படிப்பட்ட இன்றியமையாத வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வு மேற்கொள்ளும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 4,000 மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இங்கு முதுநிலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கே ரூ.17,000 உதவித்தொகை வழங்கும் நிலையில் அதற்கும் மேல் படிக்கும் முனைவர் பட்டத்துக்குக் குறைவான உதவித்தொகையை அரசு வழங்குவது மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்ந்தவுடன் மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை அந்தந்த மாநில அரசுகளாலும் மத்திய அரசாலும் வழங்கப்படுகிறது. இதைவிட வேறு ஏதாவது அதிகமான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அதை பெறும்வரை அந்த மாணவர் மாநில அரசின் உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு அமைகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படியான சூழல் இல்லை என்பதுதான் நிதர்சனம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்விக் கட்டணமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது.

இதனால் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பயிலக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆர்வமும் திறமையும் இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் பலர் முனைவர் பட்டம் பயில முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் உதவித்தொகையை மற்ற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

அதுதான் ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும், புதிதாய் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேரும் மாணவர்களுக்கும் உத்வேகமாய் இருக்கும். மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அரசு இந்த விஷயத்திலும் நல்ல முடிவை எடுப்பது பலரது வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

- மு. ஜெயராஜ், வேளாண் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: jayarajm96@gmail.com



Read in source website

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லலாமா? இந்தக் கேள்வியில் தொடங்கி அண்மையில் ஒரு விவாதம். சொல்லின் பொருள் பற்றிய மொழிப் பயிற்சி போன்றதல்ல இந்த விவாதம். இது சொல் அரசியல். வழக்கமான அரசியலில் இல்லாத நுட்பமும் நளினமும் சொல் அரசியலுக்கு உண்டு. மொழியும் அரசியல் போக்குகளை நிச்சயிக்க வல்லது. இப்படிச் சொல்வதால் மொழி நடையின் கவர்ச்சி என்ற மலினத்தைத்தான் சொல்கிறேன் என்று நினைத்துவிடக் கூடாது.

மத்திய - மாநில அரசுகளின் அதிகார உறவு பற்றிய சொல்லாடல் 1960-களில் தொடங்கியது. அண்ணாவோடு ராஜாஜியின் பங்களிப்பும் இதற்கு உண்டு. இப்போது தமிழ்நாடு முதல்வர், ‘ஒன்றிய அரசு’ என்பது சட்டத்தில் இல்லாத தொடர் அல்ல, அதைப் பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார். ‘ஒன்றியம்’ என்பதை மையச் சொல்லாக்கி, ஏற்கெனவே இருக்கும் சொல்லாடலை அதன் வசத்தில் வைத்துக் கட்டமைத்துக்கொள்கிறார். இதைத்தான் மொழி வழியாக அரசியல் போக்குகளை நிர்ணயிப்பது என்றேன்.

இனிமேலும் இணைச் சொல்லாகுமா?

மொழி எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்பவர்களுக்கு இது சுவாரசியமான பிரச்சினை. இதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லலாம். ‘ஒன்றிய அரசு’ என்பதால் என்ன சாதித்துவிட்டார்கள் என்று கேட்கக்கூடும். ‘மத்திய அரசு’ என்பதை ‘ஒன்றிய அரசு’க்கு இணைச் சொல்லாக்க இனி நாம் தயங்குவோம். ‘மத்திய அரசு’ என்பது ஒரு நூலாவது வேறுபட்ட அரசமைப்புச் சித்தாந்தத்தைச் சேர்ந்ததாகத் தோன்றும்.

அகராதியில் ‘ஒன்றிய அரசு’ என்று வந்தால் “காண்க ‘மத்திய அரசு’ ” என்று தருவார்களா? கட்டுரை எழுதும் மாணவர் ‘மத்திய அரசு’ என்று எழுதுவதை ‘ஒன்றிய அரசு’ என்று ஆசிரியர் திருத்தினால், அதைச் சித்தாந்த வக்கிரம் என்போமா, துல்லியம் என்று பாராட்டுவோமா? “‘மைய அரசு’, ‘நடுவண் அரசு’, ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ இவற்றுள் பொருத்தமானதைக் காட்டுக” என்று தேர்வில் ஒரு கேள்வி இருந்தால், கேள்வியில் குறை என்று சொல்ல மாட்டோம்.

“இணைச் சொல்லா என்ற பிரச்சினையை விடுங்கள், ‘ஒன்றியம்’ என்பதற்குப் பொருள்தான் என்ன?” என்றும் சிலர் கேட்கக்கூடும். சொல் தன் பொருளை எப்படிப் பெறுகிறது என்று அவர்களுக்கு விளக்க வேண்டும். கடலையை உடைப்பதுபோல் சொல்லிலிருந்து பொருளை எடுத்துக்கொள்வது இல்லை. பொருள் சொல்லுக்குள் இல்லை. சொல் தன் அளவிலேயே, சுய இயக்கத்தில் பொருள் தராது. மற்ற சொற்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதில்தான் சொல்லின் பொருள் இருக்கிறது. ‘அந்தி’ என்ற சொல் ‘விடியல்’ என்பதிலிருந்து அர்த்தம் பெறுவதுபோல்.

‘ஒன்றிய அரசு’ என்பது ‘மத்திய அரசி’லிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதுதான் அதன் பொருள். புதிய சமன்பாட்டுக்கான சொல்லாடலாகத் திரண்டுகொள்ளும் ‘ஒன்றிய அரசு’ மத்திய அரசை எப்படி அவதானிக்கலாம் என்பதை மட்டும் சொல்லவில்லை. மாநில அரசின் சுய அடையாளமும் அங்கேயே சுரக்கிறது. அதற்கு வந்த எதிர்ப்பே தான் கட்டிய வேடத்தில் அது கச்சிதமாகப் பொருந்திக்கொள்ள உதவியது. மாநில அரசு கோருவதை மத்திய அரசு ஏற்றாலும் மறுத்தாலும் இனி அதை ‘ஒன்றியம்’ என்ற உரைகல்லில் உரைத்து மாற்று காண்பார்கள்.

பொருளின் விளையாட்டுக் களம்

பொருள் முடிவாகிவிட்டதாக மூடியிருந்த ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ இரண்டுமே இப்போது திறந்துகொண்டன. ஒரு சொல்லின் பொருள் கூறு ஏதாவது அழுத்தமாக வேண்டுமானால், அதை மற்றதன் பொருள் கூறுகளை மாற்றி அமைப்பதால் எளிதாகச் செய்ய முடியும். இரண்டுமே பரந்து கிடக்கும் அர்த்த மைதானங்கள். இதைத்தான் ‘ஒன்றியம்’ என்ற சொல் சாதித்தது. சொல்லுக்கு என்றைக்குமே பொருள் நிலைக்காதா என்று கேட்கக்கூடும். சொல் தனக்கு வேண்டிய பொருளை ஈர்த்துக்கொள்ளச் செய்வது அரசியல் சொல்லாடலின் நுட்பமான இயக்கம்; குற்றமல்ல. இதற்கு ஈடுகொடுக்கும் இன்னொரு சொல்லாடலைக் கட்டமைக்க முடியுமானால் அதுதான் பொருத்தமான எதிர்வினை. அப்போதும் நீங்கள் செய்யப்போவது இதே சொல் அரசியல்தான்.

அதாவது, சொல்லின் பொருள் உறைந்துபோகாமல் பார்த்துக்கொள்வது. சித்தாந்த நீரோட்டத்தில் மையச் சொற்களின் பொருள் நிலைப்பதில்லை. ‘இந்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ - இப்படி எதுவானாலும் அதனதன் பொருள், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளவாறுதானே என்றும் கேட்கலாம். சட்டங்களின் சொற்களுக்குக்கூட அந்தந்தச் சட்டங்களிலேயே விளக்கம் இருக்கிறதே என்றும் சொல்லலாம். எதைச் சொல்ல ஒரு சொல் வருகிறது என்பதற்கு யூஜின் நீடா சில விளக்கங்களைத் தொகுத்துள்ளார். நான் என்ன நினைத்து ஒரு சொல்லைச் சொல்கிறேனோ அதுதான் அதன் பொருள்.

கேட்பவர் என்ன புரிந்துகொள்கிறாரோ அதுதான் பொருள். பொதுவாக, மக்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதுவேதான் பொருள். துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சொல்லின் பொருள். இப்படி விளக்கங்கள் பல. அரசமைப்புக்குச் சட்ட வல்லுநர்கள் என்ன பொருள்கொள்கிறார்களோ அதுதான் அதன் பொருள் என்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால், அந்தப் பொருளும் சித்தாந்த நிலவரங்களுக்கு ஏற்ப மாறும் என்பதும் யதார்த்தம்.

சொல்லாடல் வசமாகும் அரசியல்

இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத் துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில், ‘ஒன்றியம்’ என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு பொருத்திப் பொருள்கொள்ள வேண்டும். ஆங்கிலச் சொல்லுக்கு அரசமைப்பின் பின்னணியில் பொருள் தேட வேண்டும். அரசமைப்புக்கோ ஐரோப்பிய முன்மாதிரிகளில் பொருள் அறிய வேண்டும்.

தத்துவவியலர் தெரிதா சொல்வதுபோல், சொல்லின் பொருள் எந்தக் கோட்டிலும் நிலைகொள்வதில்லை. ‘ஒன்றியம்’ முறையான சொல்லாவது அது அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பில் இருப்பதால் மட்டுமே அல்ல. அது மாற்றுச் சொல்லாடலின் மையம். புதுச் சொல்லாடல்கள்தானே அரசியல் மாற்றத்தின் ஆரம்பமும் அடையாளமும்!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com



Read in source website