DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 09-03-2022

கிருஷ்ணகிரி: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக பாசன குளங்களில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா, புதன்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கால்நடை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பாரூர் பெரிய ஏரியில் மிதவை கூண்டில், மீன் குஞ்சுகளை விட்டு மீன் வளர்ப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர், ரூ.312 லட்சத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 52 பயனாளிகள் நேரடியாக பயன்பெறுகின்றனர். ஆண்டிற்கு இதன் மூலம் 200 டன் மீன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு தேவையான மீன் தீவனம், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மீன் வளர்ப்பு மூலம் மொத்த வருவாயாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.180 லட்சம் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வருவாயில் அரசுக்கு 50 சதவீதமும் பயனாளிக்கு 50 சதவீதமும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என பேசினார் .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் பழனிச்சாமி, ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன், மீன்வள துணை இயக்குனர் திரு. இளம்வழுதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .



Read in source website

 

புண் என்று வந்தாலே பலருக்கும் பயம் தான். அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு புண் வந்தால் இன்னும் கவலைதான். டாக்டரிடம் சென்று அடிக்கடி புண் வருகிறது என்று சொன்னால் முதலில் சர்க்கரை பரிசோதனை செய்துவிட்டு வாங்க என்பது தான் அவரது பதிலாக இருக்கும். 

அன்கன்ட்ரோல்டு டயாபடீஸ் எனப்படும் கட்டுப்படாத நீரிழிவு உள்ளவர்களுக்கு புண் வந்தால் ஆறுவது மிகக் கடினம். “டாக்டர் எனக்கு பல மாதங்களாக புண் இருக்கு. நானும் மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் பல மாதங்களாக போட்டுக்கிட்டே தான் இருக்கேன். ஆனாலும் புண் முழுசா ஆறவில்லை. சித்த மருத்துவத்துல புண் ஆற்ற மருந்து இருக்கா?” என்று சித்த மருத்துவரை அணுக நினைப்பவர்களுக்கு நிச்சயம் பல மூலிகைகள் புண்ணை ஆற்ற காத்துக்கொண்டுள்ளன என்பது தான் உண்மை. 

அந்த வரிசையில் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது ‘யோசன வல்லி’ எனப்படும் ‘வல்லாரை கீரை’.

வல்லாரையா..? டாக்டர் அது ஞாபக மறதிக்கு தானே? அது எப்படி புண்ணை ஆற்றும்? என்று காலம் காலமாக ஞாபக சக்திக்கு வல்லாரை என்ற ஒற்றை வாசகத்தை அதன் மீது முத்திரை குத்தி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பலருக்கும் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவெனில், சித்த மருத்துவத்தில் ஒரே மூலிகை பல்வேறு நோய்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது சித்தர்களின் மெய்ஞ்ஞானத்திற்கு உதாரணம். அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மையும் கூட. 

ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன. அதற்க்கு யோசன வல்லி எனும் வல்லாரையும் மிகப்பெரிய உதாரணம். 

வல்லாரையானது யோசனை செய்ய உதவும் ஞாபக சக்திக்கு உதவுவதால் யோசனவல்லி என்ற பெயரை பெற்றது போலும். வல்லாரையின் பொருள் காரணத்தை தேடினால், வல்லாரை அதாவது வல்லவர்களை, திறமையானவர்களை உருவாக்குவதால் இப்பெயர் வந்தது போல் தெரிகிறது.

நம்ம ஊரில் நீர் நிலைகள் எங்கும் சாதாரணமாக படர்ந்து கிடக்கும் வல்லாரை கீரையால் புண், வாய்ப்புண், குன்மம், கட்டி, கிருமி நோய், சுரம், வயிற்றுநோய், எக்சீமா எனப்படும் தோல் ஒவ்வாமை, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் பலவற்றிக்கும் நல்ல பலனை அளிக்க கூடியது. குஷ்ட நோய் எனப்படும் தொழுநோயில் வல்லாரை பயன்படுத்தப்பட்டு நல்ல பலனளிப்பதை ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. 

இத்தகைய சிறப்பு மிக்க வல்லாரையை பயன்படுத்தக்கூறி பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல் என்று தேரையர் குணவாகடம் கூறுகின்றது. இதனை “பக்கத்தில் எல்லாரையும் அருந்தென்றே உரைத்து நன்மனையுள் வல்லாரையை வளர்த்துவை” என்ற வரிகளால் அறியலாம். 

சீன மருத்துவத்தில், இலைகள் நச்சு காய்ச்சல்,பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. 

அதேசமயம் தளிர்கள் கட்டிகள் மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகள், காயங்கள் மற்றும் பாம்புக்கடி போன்றவற்றின் சிகிச்சையிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

வல்லாரை கீரையில் உள்ள ட்ரைடர்பீன் சபோனின்கள் மற்றும் சப்போஜெனின்கள் காயம் ஆறுதல் மற்றும் காயம் ஏற்பட்ட இடத்தில் கொலாஜன் இணைப்பு திசுக்களின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் புண்ணை ஆற்ற முக்கிய காரணமாக உள்ளன. 

வல்லாரையில் உள்ள பிற மூலக்கூறுகளான பிரம்மோசைடு மற்றும் பிராமினோசைட் போன்றவை நரம்பு மண்டலத்தின் தளர்வுக்கு காரணமாக உள்ளது. சென்டெல்லாசைடு வேதிப்பொருள் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் (சிரை) பயனுள்ளதாக உள்ளன. டானின்கள் (20-25%), பைட்டோஸ்டெரால்கள் (கேம்பெஸ்டெரால், சிட்டோஸ்டெரால், ஸ்டிக்மாஸ்டெரால்), ரெசின்கள், அமினோ அமிலங்கள் (அலனைன், அஸ்பார்டேட், குளுட்டமேட், லைசின் மற்றும் ட்ரெயோனைன்), ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ஃபிளாவனாய்டுகள் , ஹைட்ரோகோடின் என்ற அல்கலாய்டு ,வாலரின் என்ற ஒரு கசப்பான மூலக்கூறு , கொழுப்பு அமிலங்கள் (லினோலிக் அமிலங்கள், லினோல்னெலிக், பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள்) போன்ற பல உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலக்கூறுகளின் இயற்கை கலவையாக வல்லாரை கீரை உள்ளது ஆச்சரியத்திற்கு உரியது.

வல்லாரையில் உள்ள வேதிப்பொருள்கள் வீக்கமுறுக்கியாகவும், மன அழுத்தத்தை போக்குவதாகவும், மன பதட்டத்தை குறைப்பதாகவும், ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், நரம்புகளின் வீக்கத்தை போக்குவதாகவும், வலிப்பு நோயை குறைப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்த குழாய் அடைப்பை தடுப்பதாகவும், அதன் மூலம் மாரடைப்பை தடுப்பதாகவும், கல்லீரல் திசுக்களை பாதுகாப்பதாகவும், வயிற்றுப்புண்ணை (அல்சரை) போக்குவதாகவும்  உள்ளது.  அளவுக்கு அதிகமாக இதை பயன்படுத்த தலைசுற்றல், தலைவலி இவற்றை உண்டாக்கும் என சித்த மருத்துவம் எச்சரிக்கின்றது.

வல்லாரையில் உள்ள ஆசியாட்டிகோசைட், ஆசியாட்டிக் அமிலம் எனும் முக்கியமாக செயல்படும் வேதிப்பொருள்கள் ரெட்டிகுலோ-எண்டோதெலியல் அமைப்பில்  விரைவான செயல்பாட்டைத் தூண்டுவதன் மூலம் எளிதில் புண் ஆற்ற வழிவகை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றது. 

வல்லாரை கீரையானது இணைப்பு திசுக்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், பெரிவாஸ்குலர் எனும் ரத்த குழாயின் மேலுறையை மேம்படுத்துவதன் மூலமும், திசு இறுகலை குறைத்து, பாதிக்கப்பட்ட சிறு ரத்த நாளங்கள் வழியாக ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் புண் ஆற வழிவகை செய்கிறது. 

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும் உள்ளபடியால் நீரிழிவு நோயாளிகளின் புண்ணை ஆற்றுவதிலும் நல்ல பலன் தரக்கூடியது. மேலும் வெரிகோஸ் ரத்த குழாயில் ஏற்படும் புண்களையும் ஆற்ற வல்லது.  மாறாத கீலாய்டு தழும்புகளையும் போக்கக் கூடியது.

சித்த மருத்துவத்தில் வல்லாரை கொண்டு செய்யப்படும் வல்லாரை நெய் பிரசித்தி பெற்றது. மேற்கூறிய நோய்களுக்கு நல்ல பலனை தரும். நரம்புகளுக்கு வன்மை தரும். மூளையும் பலப்படும். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.

ஆகவே ஆறாத புண்ணை ஆற்ற விரும்பும் பலரும், நாள்பட்ட புண்ணால் அவதியுறும் பலரும், வல்லாரை கீரையை உணவாக சமைத்து உண்பதோடு இதன் சூரணத்தை புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும். 

இது நம் நாட்டு கீரை வகைகளுள் ஒன்று. பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனளிக்கும். பலருக்கும் கூறி பலனடைய செய்வோம். சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே இனி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் திமுக மகளிா் அணியின் இணையதளத்தைத் தொடக்கி வைத்துப் பேசியது: உள்ளாட்சித் தோ்தலில் மகளிா் அணியினா் 50 சதவீதத்திற்கு மேல் இடம்பெற்று, பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உள்ளனா்.

20 மாநகராட்சிகளில் திமுகவைச் சோ்ந்த மேயா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

20 பேரில் 11 பெண்கள் ( 50 சதவீதத்துக்கும் மேல்) மேயா்களாகவும் 6 போ் துணைமேயா்களாகவும் பொறுப்பில் அமா்ந்திருக்கிறாா்கள். நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் பதவிகளில் 350 மகளிா் அமா்த்தப்பட்டு இருக்கிறாா்கள்.

நிகழாண்டில், ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தர இலக்கு

நிா்ணயித்திருக்கிறோம். இதுவரை ரூ.6,777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமானது, ‘தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’என மாற்றப்பட்டுள்ளது. இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயா்களில்தான் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் திமுக மகளிா் அணிச் செயலாளா் கனிமொழி, கேரள மாநில சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சா் ஷைலஜா டீச்சா் உள்ளிட்ட பலரும் உரையாற்றினா்.



Read in source website

 

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு செலுத்தும் வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

உலக அளவில் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கோவாவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசியாகப் பயன்படுத்த மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த மத்திய அரசின் மருத்துவ் நிபுணர் குழு கடந்த 7ஆம் தேதி பரிந்துரை செய்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கோவாவேக்ஸ் தடுப்பூசியை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.



Read in source website

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் (நாரி) சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்ட 28 விருதுகளில் சென்னையைச் சேர்ந்த மன நல மருத்துவர், நீலகிரி தோடரின கைப்பின்னல் பெண்கள் என தமிழகத்தைச் சேர்ந்த மூவர் விருது பெற்றனர்.
 சிறப்பாகச் சேவையாற்றி வரும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆண்டு தோறும் 14 மகளிர் சக்தி விருதுகளை வழங்குகிறது.
 குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் நீலகிரி தோடர் இனப் பெண்கள் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் சிக்கலான தோடரின எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்குவதற்காக இந்த மகளிர் சக்தி விருதை இணைந்து பெற்றனர். நீலகிரி தோடரின மக்களின் கலைப் படைப்பான இது, பெண்களால் பிரத்யேகமாக செய்யப்படும் கைப்பின்னல் ஆகும்.
 சென்னை அண்ணா நகரில் ஸ்கார்ஃப் ஆராய்ச்சி அறக்கட்டளை இணை நிறுவனர் டாக்டர் ஆர்.தாராவுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர், ஆய்வாளரான தாரா, இந்த அமைப்பை 1984-ஆம் ஆண்டு டாக்டர் சாரதா மேனனுடன் தொடங்கினார். மனநோய் குறித்த மூட நம்பிக்கை, இத்தகைய நோயாளிகள் குறித்த தவறான கருத்துகள் போன்றவற்றை அகற்றியதற்காகவும், நோயாளிகள் தாமதமின்றி மருத்துவம் பெறுதல், மனநல நோய்க்கான விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்கியதற்காகவும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து புனரமைப்பு உள்ளிட்ட புதுமையான, இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார். இதையொட்டி இவருக்கு மகளிர் சக்தி புரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது.
 மேலும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரது நிறுவனத்துக்கு இலவசமாக நிலம் ஒதுக்கித் தந்துள்ளார். அதன்மூலம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள், கிராமங்களுக்கு இலவச கைப்பேசி வழி மனநல மருத்துவ சேவையையும் இவரது நிறுவனம் அளித்து வருகிறது.
 மேலும், ஜோதிர்கமயா அறக்கட்டளை மூலம் பார்வையற்றோருக்கான நடமாடும் பள்ளியை நிறுவி பணிகளை மேற்கொண்டு வரும் கேரளத்தைச் சேர்ந்த பார்வையற்ற டிஃப்பனி ப்ரார், வணிகக் கடற்படையின் முதல் இந்தியப் பெண் கேப்டனான திருச்சூரைச் சேர்ந்த ராதிகா மேனன், சுமார் 50,000 பாம்புகளை மீட்டுள்ள முதல் பெண்ணான வனிதா ஜக்தியோபோரடே, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப முதல் பெண்மணியான இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கர்நாடகத்தைச் சேர்ந்த நிவ்ருதி ராய் என சமுதாயத்தின் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் 29 மகளிரை அங்கீகரித்து அவர்களது பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.



Read in source website

அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசி மூலமாகவும் யுபிஐ பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தொடக்கிவைத்தாா்.

அறிதிறன்பேசியைப் பயன்படுத்தி யுபிஐ வாயிலாக இணையவழியில் பணப் பரிவா்த்தனை செய்து கொள்வதற்கான வசதியை இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசிக்கும் அந்த வசதி அப்போதே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஆா்வமின்மை, அதிக கட்டணம், சிக்கலான வழிமுறைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக அந்த வசதி மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசி மூலமாகவும் யுபிஐ பணப் பரிவா்த்தனை மேற்கொள்வதற்கான வசதியை ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

தற்போது வரை யுபிஐ பணப் பரிவா்த்தனை வசதியானது அறிதிறன்பேசி பயன்பாட்டாளா்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. அதன் காரணமாக கிராமப்பகுதிகளில் வசிக்கும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களை அந்த வசதி சென்றடைய முடியவில்லை. அறிதிறன்பேசிகளின் விலை தொடா்ந்து குறைந்தாலும், அவா்களுக்கு யுபிஐ வசதி சென்றடையவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘யுபிஐ 123பே’ வசதி மூலமாக அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசியைப் பயன்படுத்துவோரும் பணப் பரிவா்த்தனையை மேற்கொள்ள முடியும். இது நிதி சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்க்க உதவும்.

யுபிஐ பணப் பரிவா்த்தனைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.76 லட்சம் கோடிக்கு யுபிஐ பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் ரூ.41 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விரைவில் இது ரூ.100 லட்சம் கோடியை எட்டும்.

அடுத்த இலக்கு: யுபிஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. இனி இணையவழிப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. யுபிஐ தொழில்நுட்பத்தை அண்டை நாடுகளுக்கு வழங்குவது தொடா்பாகவும் என்பிசிஐ ஆலோசிக்க வேண்டும். இதன் மூலமாக உலக சமுதாயம் பலனடையும் என்றாா் அவா்.

புதிய வசதி தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘அடிப்படை அம்சங்களை மட்டுமே கொண்ட கைப்பேசிகளை வைத்திருப்போா் குரல் அழைப்பு எண் (ஐவிஆா்), கைப்பேசியில் செயல்படும் செயலி, மிஸ்டு கால் முறை உள்ளிட்ட 4 முறைகளைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

அவற்றின் மூலமாக மற்றவா்களுக்குப் பணம் அனுப்புதல், கட்டணங்களை செலுத்துதல், ‘ஃபாஸ்டேக்’ கட்டணம் செலுத்துதல், கைப்பேசி ரீசாா்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், வங்கிக் கணக்கின் இருப்புத்தொகையையும் அறிந்து கொள்ள முடியும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

 

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் கோலி உள்பட மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 3-ம் இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். கோலி இரண்டு இடங்கள் முன்னேறி 5-ம் இடத்திலும் ரோஹித் 6-ம் இடத்திலும் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 10-ம் இடத்திலும் உள்ளார்கள். 

டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் அஸ்வின் 2-ம் இடத்திலும் பும்ரா 10-ம் இடத்திலும் உள்ளார்கள்.

டெஸ்ட் தரவரிசை: முதல் 10 இடங்களில் உள்ள இந்திய வீரர்கள் 

பேட்டிங் - கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த்
பந்துவீச்சு - அஸ்வின், பும்ரா
ஆல்ரவுண்டர் - ஜடேஜா, அஸ்வின் 



Read in source website

 


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1 ஆல்ரவுண்டராக முன்னேறியுள்ளார் ரவிந்திர ஜடேஜா.

இலங்கைக்கு எதிராக மொஹலியில் விளையாடிய டெஸ்டில் 175* ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஜடேஜா. இதையடுத்து ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரு படிகள் முன்னேறி நெ.1 இடத்தை அடைந்துள்ளார்.

2017 ஆகஸ்டில் ஒரு வாரத்துக்கு நெ.1 ஆல்ரவுண்டராக இருந்த ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை அடைந்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹோல்டர் 2-ம் இடத்திலும் அஸ்வின் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

டெஸ்ட்: ஆல்ரவுண்டர்கள் தரவரிசை

1. ஜடேஜா
2. ஹோல்டர்
3. அஸ்வின் 
4. ஷகில் அல் ஹசன்
5. பென் ஸ்டோக்ஸ்



Read in source website

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பையடுத்து தேசிய அவசர நிலையை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆஸ்திரேலியாவின் நியூசெளத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ள பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டுள்ளது. குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு முந்தைய 3 நாள்களில் ஆண்டு சராசரி மழைப்பொழிவில் 80 சதவிகிதத்தை சந்தித்துள்ளதால் மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நியூசெளத் வேல்ஸ் மாகாணத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பை தேசிய அவசர நிலையாக அறிவித்துள்ளார்.

அதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்துவரும் மக்கள் எத்தகைய ஆவணங்களுமின்றி அரசின் உதவிகளைப் பெற முடியும் எனவும், மாகாண அரசுகள் தன்னிச்சையாக பேரிடர் பாதிப்புகளிலிருந்து மீள நிவாரண உதவி முடிவுகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

ரஷியாவுக்கு எதிரான தாக்குதலில் தாய்நாட்டை பாதுகாக்க களமிறங்கிய உக்ரைன் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான பாஷா லீ ரஷியப் படைகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியப் படைகள் வான்வழித் தாக்குதலுக்கான சைரன் எச்சரிக்கை ஒலிக்க விட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைனின் ராணுவத்தில் இணைந்து போராடிய உக்ரைன் நடிகர் பஷா லீ(33), கீவ் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்துள்ளார். 

33 வயதில் தாய்நாட்டை பாதுகாக்க ரஷியாவிற்கு எதிரான போரில் களமிறங்கி போராடி வீர மரணம் அடைந்த நடிகர் பாஷா லீ-க்கு சக நடிகர்கள், ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனைவராலும் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட துடிப்பான இளைஞர் பாஷா லீ -ஐ தேசம் இழந்துள்ளதாக பெரும்பாலான ரசிகர்கள் தங்களது அஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியப் படைகள் தாக்கக்கூடும். எனவே, மக்கள் பாதுகாப்பாக நிலவறைக்குள் சென்று பதுங்கிக்கொள்ளுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் இருந்து இதுவரை உக்ரைனில் பொதுமக்கள் 406 பேர் பலியாகி உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 801 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 



Read in source website

திருப்பத்தூர்: சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான கிபி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். க. மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான நடுகல்லினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறியதாவது, "திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 10 கி.மீ., தொலைவில் கொரட்டி என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள ஏரியின் தெற்கு கரையில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்றை நாங்கள் கண்டெடுத்தோம். இந்த நடுகல் 5 அடி அகலமும், 3 அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் வட்டெழுத்துக்களுடன் காணப்படுகிறது.

அதில் நடுகல் வீரனின் உருவம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் முகம் வலது பக்கம் நோக்கியவாரு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் வாரி முடிக்கப்பட்ட கொண்டையும் வலது பக்கம் சாய்ந்த வண்ணம் காணப்படுகிறது.

வீரனின் வலது கையில் குறுவாளும் இடது கையில் அழகிய கோலத்துடன் வில் ஒன்றும் காணப்படுகிறது. அந்த வீரனின் கழுத்தில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளதை போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள், அழகான வரிக்கு வரி கோடுகளுடன், ஏழு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை வட்டெழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு. பெரும்பாணர் அரசர்களின் வீரன் ஆலம்பட்டு ஆட்டு மந்தையை கவர்ந்து செல்ல ‘பெரியந்தை நீலனார்’ என்ற வீரன் அந்த ஆட்டு மந்தையை மீட்டு இறந்தான் என நடுகலில் உள்ள வாசகம் எடுத்துரைக்கிறது.

இந்த நடுகலில் இருக்கும் வாசகங்கள் புதிய சில வரலாற்று செய்திகளைப்பற்றி பேசுகிறது. பெரும்பாணர் என்ற அரச பரம்பரையினரை பற்றி திருப்பத்தூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதல் நடுகல் இது தான். மாட்டு மந்தையைப் பற்றி பல நடுகற்கள் இருக்கும் போது, இந்த நடுகல் ஆட்டு மந்தையைப் பற்றி பேசுகிறது. ஆநிரைகள் (மாடு, ஆடு), தங்கும் இடத்தை குறிப்பதாகும். பட்டி (ஆலம்பட்டி) என்ற சொல்ல அரிதினும் அரிதாக இதில் காணப்படுகிறது.

தன் ஊர் ஆட்டு மந்தையை பகைவர் கைக்கொள்ள அவர்களை எதிர்த்து போரிட்டு உயிர் விட்ட வீர மறவனுக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதனைத் தற்போது திக்கியம்மன் என்ற பெயரில் ஊர்மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து படையிலிட்டு வழிபடுகின்றனர்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இந்த நடுகல், இன்றளவும் தெய்வமாக வணங்கப்பட்டு வருது குறிப்பிடக்கதக்கது. இது போன்ற வரலாற்று தடயங்களை மாவட்ட தொல்லியல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்" .இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய முன்னெடுப்பாக, ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டத்தை மார்ச் 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் தனித்திறன்களை மெருகேற்றவும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டது.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார், திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யா மற்றும் பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 81 பட்டப் படிப்புகள், 21 திறன் மேம்பாட்டுப் படிப்புகள் ஆகிய 130 கல்விசார் பாடவகைப் பிரிவுகளைத் தொலைதூரக் கல்விஅடிப்படையில் வழங்கி வருகிறது. இதில்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். அதன்படி, பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு படிப்பு களைப் படித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று நலச் சங்கங்கள் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கல்விக் கட்டணத்தில் முழு விலக்கு

அதைத்தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்து தமிழக அரசு 2008-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. பின்னர், உயர்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்புக்கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து 2010-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களில் திறந்தநிலை பல்கலை.யில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிகமானோர் பட்டம் பெற்றுள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வழங்கிய புள்ளி விவரங்களின்படி இளநிலை பிரிவில் 1,840 மாற்றுத் திறனாளிகளும், முதுநிலையில் 791 பேர், 2 பேர் எம்ஃபில், 4 பேர் பிஎச்.டி என மொத்தம் 2,637 பேர் பட்டம்பெற்றுள்ளனர். 71 வகையான இளநிலை பட்டப்படிப்பில் வரலாறு பிரிவில் 192 பேரும்,பி.காம் 153 பேரும், பிஎட் 149 பேரும், பிபிஏ 138 பேரும், பி.லிட் 121 பேரும், பிஏ ஆங்கிலம் 110 பேரும், பிசிஏ பிரிவில் 92 பேரும் பட்டம் பெற்றுள்ளனர்.

அதேபோல, 62 வகையான முதுநிலை பட்டப்படிப்பில் தமிழ் பிரிவில் 99 பேரும், ஆங்கிலத்தில் 87 பேரும், வரலாற்றில் 78 பேரும் பட்டம் பெற்றுள்ளனர். மேலும், 46பேர் முதுநிலை டிப்ளமோ, 317 பேர் டிப்ளமோ,72 தொழிற்கல்வி டிப்ளமோ, 23 பேர் சான்றிதழ் படிப்புகள், 12 பேர் குறுகியகால படிப்புகள் என மொத்தம் 3,107 பேர் திறந்தநிலை பல்கலை. மூலமாகப் பயனடைந்துள்ளனர். இதில் 1,252 பேர் பெண்கள், 1,855 பேர் ஆண்கள்.

குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் பணிக்கான சிறப்பு பிஎட் படிப்பில் 2008-ம் ஆண்டு முதல்2018-ம் ஆண்டு வரை மொத்தம் 3,664 பேர் படித்துள்ளனர். அதில் 3,257 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 207 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆகும்.

இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி கூறியது: மாற்றுத் திறனாளிகள், யார் தயவும் இல்லாமல் பொருளாதாரத்தில் முன்னேற கல்வி மட்டுமே வழிவகை செய்யும். இதனைக் கருத்தில் கொண்டு 2008-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த இலவச கல்வித் திட்டத்துக்குப் பின்னர் திறந்தநிலைப் பல்கலையில் அதிகப்படியான சேர்க்கை நடைபெற்றது.

அதன்படி, இளநிலை, முதுநிலை, டிப்ளமோஉள்ளிட்ட 9 பிரிவுகளில் 3,107 மாற்றுத் திறனாளிகள் பட்டமும், சான்றிதழும் பெற்றுள்ளனர். இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேறு எந்த பல்கலைக்கழகமும் செய்யாத சாதனையாகும். அதேபோல, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வியிலேயே தனிக் கவனம் செலுத்தும் வித மாகச் சிறப்பு பி.எட் படிப்பு 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, பிஎட் முடித்தவர்களில் சிறப்பு எம்.எட் படிப்பில் 55 பேரும், முதுநிலை சிறப்புக்கல்வி படிப்புகளில் 153 பேர் பட்டம் பெற்றுள்ளனர். மேலும், கூடுதலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு எம்எட் பயிலுவதற்கு வசதியாக, அப்படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பல்கலையில் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் சிலர் கூறும்போது, “கல்வி நிறுவனங்களுக்கு நாங்கள் நேரடியாகச் சென்று கல்வி பயிலுவதற்கு இடவசதி,கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்றபல்வேறு காரணிகள் தடையாக உள்ளன. இந்த தடைகள் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் இல்லை. மேலும், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. அதேபோல, தேர்வு எழுதுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளையும் பல்கலை. மேற்கொள்கிறது. இதன் காரணமாகவே, அதிக அளவில் திறந்தநிலை பல்கலை.யை விரும்புகிறோம்” என்றனர்.



Read in source website

தெள்ளார் அருகே மாந்தாங்கல் கிராமத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலை கண் டெடுக்கப்பட்டதாக தி.மலை மரபுசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் ராஜ்பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “தி.மலை மாவட்டம் தெள்ளார் அடுத்த வெடால் அருகே உள்ள மாந்தாங்கல் கிராம கிழக்கு பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் இரும்பு உருக்கு கழிவுகள் உள்ளன. அக்கழிவுகளுக்கு இடையே 4 செ.மீ., சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும், அதன் மத்தியில் 1 செ.மீ., சுற்றளவில் துவாரம் காணப்படுகிறது. சுடுமண்ணாலான இக்குழாய்களின் மேற்பரப்பு சிதைவுற்றுள்ளன. இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்ட,குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக் கலாம். கத்தி, ஈட்டி, கோடாரி, வேல் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதனருகே உள்ள மற்றொரு மலையின் சமவெளி பகுதியில் பழங்கான பானை ஓடுகள் மற்றும் கல் ஆயுதங்கள் உள்ளன. இந்த சமவெளி பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். இதேபோல், பெருங்கற்கால நினைவு சின்னங்கள் என கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட பெரிய கல் வட்டங்கள், சிதைவின்றியுள்ளன. இதர கல் வட்டங்கள் சிதைந்துள்ளன.

இக்கிராமத்தின் சாலையோரம் இருந்த பெரிய கல்லை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றியபோது கிடைக்க பெற்ற ஈமப்பேழை, திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பெருங்கற்கால அடையாளங்கள் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்” என்றனர்.



Read in source website

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில், பெண்ணை பலி கொடுப்பது போன்ற நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில் உள்ள சாக்கியம்மாள் கோயிலில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு மண்ணில் புதைந்திருந்த நடுக்கல்லை ஊர்மக்கள் உதவியுடன் வெளியே எடுத்தனர்.

இது தொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, இது நமது மாவட்டத்தில் கிடைத்த பெண்கள் தொடர்பான நடுகல்லில் மூன்றாவதாகும். இந்த நடுகல் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லில் உள்ள பெண், தோளில் மாலையுடனும், பிற அணிகலன்களுடனும், ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது, இப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது.

அப்பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்பது இந்த நடுகல் அமைப்பில் இருந்து தெரிய வருகின்றது.

தியாகத்தின் மறுஉருவம்

இதன் தொடர்ச்சியாக, சிவன் கோயில் சீரமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தினை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது. அதில், "தீத்தமலை உடநே தலை வெட்டு" என்ற வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன்கோயில் உள்ள இடம் ஆகும். தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரமாக, ஒரு வேண்டுதலுக்காகவோ, போருக்காகவோ, வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது நடுகல் மூலம் தெரிய வருகிறது. சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர் வைத்திருப்பது தெருக்கூத்தின் வழிவந்ததாக இருக்கக் கூடும். ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும். காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது. தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்திலிருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

பெங்களூரு: அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரம் (எ) முத்துசெல்வன் (79) திருச்சியைச் சேர்ந்தவர். பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் தனித்தமிழ் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: நாசா விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதல் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு டெல்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார்.

டெல்லியில் 1978-ல் பிறந்தவர் நிஷாந்த் பத்ரா. இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம் பெற்ற இவர், பிறகு இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையிலும் கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தற்போது பின்லாந்து நாட்டின் எஸ்பூ நகரில் வசிக்கும் நிஷாந்த் பத்ரா, நோக்கியா நிறுவனத்தில் உத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கான சர்வதேச தலைவராக உள்ளார். மேலும் 9 நோபல்பரிசுகளையும் 5 டூரிங் விருதுகளையும் பெற்றுள்ள ‘பெல் லேப்ஸ்’ நிறுவனத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

நாசா விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதல் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார்.

செவ்வாய் கிரகத்துக்கான பயணங்கள் உட்பட விண்வெளியில் எதிர்கால ரோபோ, மனித பயணங்களுக்கு இணைப்பை ஏற்படுத்திட வேற்றுகிரக செல்லுலர்கட்டமைப்பை இவரது குழு நிர்மாணித்து வருகிறது.



Read in source website

கீவ்: 8 வயது ஆலிஸ் ஏன் தெருவில் உயிரிழந்தாள்.. ! இப்படித் தலைப்பிட்டு உலக ஊடகங்களுக்கு உக்ரைனின் முதல் குடிமகள் (அதிபரின் மனைவி) ஒலீனா ஜெலன்ஸ்கா ஒரு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 14 வது நாளை எட்டியுள்ள நிலையில் ஜெலன்ஸ்கா இந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரை உக்ரைன் மீதான போர் குறித்து அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி மட்டுமே வீடியோக்கள், ட்வீட்கள், அறிக்கைகள் என்று அளித்துவந்தார். இந்நிலையில் முதல் குடிமகளின் முதல் அறிக்கை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

அவரது கடிதத்தின் விவரம்: பிப்ரவரி 24 ஆம் தேதி காலையில் கண்விழிக்கும்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது என்ற தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ டாங்குகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்தன. அவர்களின் விமானங்கள் எங்கள் வான்பரப்பில் நுழைந்தன. ஏவுகணை லாஞ்சர்கள் எங்கள் நகரங்களை சுற்றிவளைத்தன.

க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், இன்று உக்ரைன் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொலை செய்யப்படுகின்றனர். குழந்தைகள் கொலை செய்யப்படுவது தான் மிகுந்த வேதனையான விஷயம். 8 வயது ஆலிஸ் தெருவில் இறந்து கிடந்தாள். கீவ் நகரில் பொலினா தனது பெற்றோருடன் உயிர் நீத்தாள். 14 வயது ஆர்சென்லி ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட இடிபாட்டில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தான்.

பொதுமக்களுக்கு எதிரான போர் இல்லை என்று ரஷ்யா கூறிவருகிறது. அப்படியென்றால் இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு என்ன அர்த்தம். இந்தப் போர் எங்கள் மக்கள் மீதான போர். எங்கள் நாட்டின் தெருக்கள் அகதிகளால் நிரம்பி வழிகிறது. எம் நாட்டுப் பெண்களின் கண்களில் தெரியும் சோர்வையும், குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு செல்லும் அவர்கள் இதயத்தின் வலியையும் பாருங்கள். தங்கள் அன்புக்குரியவர்களை விட்டுவிட்டு அப்பெண்கள் அகதிகளாகச் செல்கின்றனர்.

இந்தப் போருக்கு இடையே பதுங்கு குழியில் இருப்பவர்கள் இன்சுலின் செலுத்திக் கொள்ள முடியுமா? இல்லை ஆஸ்துமா மருந்தை நெருப்புப் பிழம்புகளுக்கு இடையே சென்று எங்காவது வாங்க முடியுமா? யாருக்காவது அதிகாரம் இருந்தால் எங்கள் வான் எல்லையை நோ ஃப்ளை ஜோனாக அறிவியுங்கள்.

இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகள், பேஸ்மென்ட்டின் மேற்கூரையையே முதலில் பார்க்கின்றன. அடித்தளத்தில் இருக்கும் இறுக்கமான காற்றையே சுவாசிக்கின்றன. அந்தக் குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம் தான் வரவேற்றுள்ளது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர். ஆகையால் இந்தப் போர் எங்கள் பொதுமக்கள் மீதே நடத்தப்படுகிறது.

இவ்வாறு லெலன்ஸ்கா அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

அந்தக் கடிதத்திற்கு I Testify.. நான் சாட்சி சொல்கிறேன் என்று அவர் பெயரிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள மடல் வைரலாகி வருகிறது.

அவரின் கடிதத்தை உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அரசு, அவரும் அவரது இரு குழந்தைகளும் இன்னமும் கீவ் நகரில் தான் இருக்கிறார்களா என்பதை மட்டும் உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் அதிபர் காமெடி நடிகராக இருந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் நடிகராக இருந்தபோது ஒலீனா ஜெலன்ஸ்கா அவருக்கான ஸ்க்ரிப்ட்டுகளை எழுதிக் கொடுத்து வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளிக் குழந்தைகள் தரமான உணவை உறுதி செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் ஒலீனா என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: உடனடி பணப் பரிமாற்ற சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. யுபிஐ123 பே என்ற பெயரிலான இந்த சேவையை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கிவைத்தார்.

ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ மூலம் இப்புதிய சேவையை மக்கள் பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகவும் நம்பகமான தளமாக செயல்படும் இதன்சேவையை மேலும் பாதுகாப்பான வழியில் பயன்படுத்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது யுபிஐ சேவையை பயன்படுத்துவோர் கூடுதல் இணைப்பு வசதியுடன் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இனிபோன் மூலமும் இந்த சேவையைபயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதற்கு ஐவிஆர் அழைப்பு மூலமான உதவியையும் பெறலாம். செயலி அடிப்படையிலான வசதி உள்ளிட்ட பல வசதிகளை இது உள்ளடக்கியது. நண்பர்கள், உறவினர்களுக்கு பணப் பரிவர்த்தனை, மின் கட்டணம், சொத்து வரி செலுத்துவது, காருக்கான பாஸ்டாக் ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம் என ஆர்பிஐ வெளியிட்ட செய்தியில் கூறப்பட் டுள்ளது.



Read in source website

இயற்கை அவதானிப்பு, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கு எடுத்துக் காட்டாகக் கூறக்கூடிய உலகின் சிறந்த பண்பாடுகளில் ஒன்றைக் கொண்டது தமிழ்ச் சமூகம். ஆனால், நவீன சூழலியல் கருத்துகள் உலகில் கவனம் பெறத் தொடங்கிய காலத்தில், தமிழ்நாட்டில் அதே அளவுக்குக் கவனம் பெற வில்லை. தன் வேர்களை இடையில் மறந்து விட்ட தமிழ்ச் சமூகம் புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகே மெல்லமெல்ல நவீன சூழலியல் கருத்துகள் சார்ந்து கவனம் செலுத்தத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் அக்கறை பரவலாகிவருகிறது. ஆனாலும் இது போதாது.

ஏன் என்ன காரணம்? ஒருபுறம் இயற்கையை வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், அந்த வேர்களை மீட்டெடுக்கும் பயணத்தில் இருக்கிறது. அதே நேரம் கால மாற்றம் இத்துறை சார்ந்த நவீன - அறிவியல் புரிதல்களைக் கொண்டுவந்துள்ளது. இன்றைக்கு எந்த ஒரு செயல்பாட்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் தர்க்க நியாயங்கள் கவனப்படுத்தப்படுகின்றன. எந்த செயல்பாடும் மனிதக் குல லாபத்துக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறதா, அது இயற்கைச் சூழலை எப்படிப் பாதிக்கிறது என்பது சார்ந்து பொதுச் சமூகம் கொஞ்சம்கொஞ்சமாக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளது.

புதிய கருதுகோள்

நவீன சூழலியல் சார்ந்த புரிதல்கள் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் சிறுசிறு குழுக்கள் மூலமாக உருவாகிவந்தன. அப்போதுதான் தமிழகத்தில் சூழலியல் கோட்பாடு அறிமுகமாகத் தொடங்கியது. எந்த ஒரு புதிய அக்கறையும் கோட்பாடுகளும் தாய்மொழியில் விளக்கப்பட வேண்டும். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கைப் பாதுகாக்கும் இயக்கம் இதை முன்னெடுத்தது. தமிழகத்தில் மனித உரிமை அமைப்புகள் இது சார்ந்து கவனம் செலுத்தத் தொடங்கின. மறைந்த நெடுஞ்செழியன் ஒருங்கிணைப்பில் பல நண்பர்கள் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். மற்றொருபுறம் சு. தியடோர் பாஸ்கரன், பாமயன், பால் பாஸ்கர், ச. முகமது அலி உள்ளிட்டோர் சூழலியல் குறித்து எழுதத் தொடங்கினார்கள்.

புதிய கருதுகோள்களைத் தாய்மொழியில் விளக்குவது அவசியம். அதேநேரம், அது மிகவும் சவாலானது. ஒரு கருதுகோள் சார்ந்த புரிதலைப் பரவலாக்க, மக்களுடன் எளிதில் தொடர்புப் படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் நடை முறை உதாரணங்களுடன் விளக்க வேண்டும். அத்துடன் புதிய சொல்லாக்கங்களும் தேவை. தமிழில் இது மையப்படுத்தப்பட்ட வகையில் நடைபெறவில்லை என்ற போதிலும், சிறுசிறு முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன.

எழுத்து முயற்சிகள்

‘சவுத் விஷன்’ பாலாஜி, சமீபத்தில் மறைந்த ‘ஓயாசிஸ்’ பிரபலன் உள்ளிட்டோர் நடத்திவந்த பதிப்பகங்கள் சூழலியல் சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பதிலும் விற்பனை செய்வதிலும் ஆர்வம் காட்டின. ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’, வந்தனா சிவாவின் ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ போன்ற சூழலியல் செவ்விலக்கியங்கள் இப்படித்தான் தமிழுக்கு வந்தன. இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் கருத்தைப் பரப்புதலிலும் சூழலியல் என்கிற பொருளும் அது சார்ந்த களச்செயல்பாடுகளுமே மையமாக இருந்தன. தனிநபர்களோ, தலைமையோ, ஒற்றைமய சிந்தனைப் போக்கையோ பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் இப்படி வளர்ந்துவந்த சுற்றுச் சூழல் செயல்பாடுகளும் சூழலியல் எழுத்தும் இன்றைக்கு மிகவும் முக்கியமான புள்ளியை வந்தடைந்துள்ளன. சு. தியடோர் பாஸ்கரன், பாமயன், நக்கீரன், வறீதையா கான்ஸ்தந்தின் உள்ளிட்டோர் தமிழ்ச் சூழலியல் எழுத்துக்கு ஒரு முகத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ் மண், தமிழ்ப் பண்பாடு, காலம்காலமாக அது முன்மொழிந்தும் பின்பற்றியும் வரும் மதிப்பீடு களை முன்னிறுத்தக்கூடியதாக அவர்களுடைய எழுத்தும் வாதங்களும் அமைந்துள்ளன.

தார்மிக வலு

மற்றொருபுறம் சூழலியல் எழுத்தும் சுற்றுச் சூழல் செயல்பாடுகளும் இன்றைக்கு புதிய ஃபேஷனாக மாறிவருகின்றன. ‘சூழலியல் காவலர்’ என்கிற அடையாளத்துடன் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும் அது சார்ந்து கவனம் பெறவும் துறையில் புதிதாகக் கால்பதிப்பவர்கள் முயல்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக ஊடகங்கள், தொலைக் காட்சி விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மேம்போக்கான, ஆழமற்ற, அறிவியல் பூர்வமற்ற வகையில் சூழலியல் கருதுகோள்களைக் கவனப்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது.

சூழலியல் செயல்பாடு என்பது ஆழமானது, உணர்வுப்பூர்வமானது. எளிமையான வாழ்க்கை முறை, இயற்கையைக் குறைவாகச் சுரண்டுதல், ஒட்டுமொத்த அம்சங்களையும் கணக்கெடுத்துக் கொள்ளும் பார்வை போன்றவையே இதன் அடிப்படை. இந்த தார்மிக அடிப்படைகளைக் கொண்டே, யாராக இருந்தாலும் சூழலியல் பாதுகாப்பை முன்வைக்கவும் பேசவும் முடியும்.

ரேச்சல் கார்சன், மசானபு ஃபுகோகா, வங்காரி மாத்தாய், சுந்தர்லால் பகுகுணா போன்றோர் தங்கள் வாழ்க்கை முறையையே சூழலுக்கு இணக்கமானதாக, எடுத்துக்காட்டாக மாற்றிக்கொண்டு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள். சூழலியலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கான தார்மிக மனோபலம் அவர்களிடம் வலுவாக இருந்தது.

முரண்பட்ட பார்வை

இன்றைக்குச் சூழலியல் சிக்கல்கள் தீவிரமடைந்துவருகின்றன. நிதியுதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பல சூழலியல் அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாகச் சுற்றுச்சூழல் அமைப்புகளை நடத்திவரும் சில அரசியல் கட்சிகள், ஆன்மிக அமைப்புகள் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் நிதியுதவியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அதே வழியில் சில தன்னார்வ அமைப்புகள் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பிரசாரத்தை நிதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தற்போது நடத்திவருகின்றன.

இது போன்ற செயல்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காரில் வலம்வருவதும், குளிரூட்டப்பட்ட அரங்குகளில் சூழலைக் காக்கக் குரல் கொடுப்பதும் முரணாக உள்ளன. தொழிற்சாலை முதலாளிகளிடமும் எளிய மக்களிடமும் எப்படி ஒன்றுபோல் சூழலியல் பாதுகாப்பைப் பேச முடியும்? சூழலியலை சீர்கெடுப்பவர்களிடமும் அதன் மோசமான பலன்களை அனுபவிப்பவர்களிடமும் எப்படி ஒரே தீர்வுகளை எதிர்பார்க்கவோ, முன்வைக்கவோ முடியும்?

சூழலியல் ஆர்வத்தை வெளி அடையாளமாக முன்னிறுத்திக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அறுவடை செய்ய நினைப்பவர்கள் சூழலியல் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதும், தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கையில் சூழலுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்கும்போது இயல்பாகவே அது வசீகரமற்றதாக மாறிவிடுகிறது. இது ஒரு முரணான போக்கு.

ஒருபுறம் சூழலியல் சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் வணிக அமைப்புகள் பசுமை அடையாளத்தையும், பசுமைப் பாதுகாப்பையும் தங்கள் வெளி அடையாளமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இப்படிச் செய்வதன் பெயர் ‘பசுமைக் கண்துடைப்பு’. அதேபோல் சூழலியல் தன்னார்வச் செயல்பாடுகளும் பசுமைக் கண்துடைப்பாக மாறிவிடக் கூடாது.

தமிழ்ப் பசுமை எழுத்தும், தமிழ்நாட்டின் சூழலியல் களச்செயல்பாடுகளும் தம் தார்மிக வலுவில் வேர் பிடித்தவையாக, அடிப்படைகளில் உறுதிகொண்டவையாக இருக்க வேண்டும். சூழலியல் பாதுகாப்பு என்பது ஊருக்கு நல்லது சொல்வதுடன் நம் வாழ்விலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டியது. அப்போதுதான் பசுமைப் பாதுகாப்பு வீறு கொண்டு எழும்!

கட்டுரையாளர், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website

சீன - தமிழ் மக்களுக்கு இடையிலான பரிமாற்றத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. இந்த நீண்ட காலப் பரிமாற்றத்தின் வாயிலாகத் தமிழ் அடையாளத்துடன் கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள், எழுத்துகள், நடனம், உணவுப் பண்பாடு எனப் பலவும் சீனாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவை இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றங்களின் சின்னங்களாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், தமிழ்க் கலாச்சாரம் உலக அளவில் வரவேற்கப்படுவதற்குரிய ஆதாரங்களாகவும் விளங்குகின்றன. அனைவருக்கும் தெரிந்த ட்சுவன்சோ சிற்பக்கலை நீங்கலாக, சீனாவில் வேறு எத்தகைய தமிழ் அடையாளங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின்வழி பார்க்கலாம்.

தமிழ் வெண்கலச் சிற்பக்கலை

பெய்ஜிங்கில் உள்ள உலகப் பூங்காவில் நடராஜர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தாஜ்மகாலுடன் சேர்த்து அச்சிலையானது இந்திய நாகரிகத்தின் சின்னமாக சீனப் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது. பெய்ஜிங் உலகப் பூங்கா திறக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான சீனர்கள், தமிழர்களின் வெண்கலச் சிற்பக் கலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்ந நடராஜர் சிலையைப் பார்த்து ரசித்துள்ளனர்.

தமிழ் உணவு

பெய்ஜிங், ஷாங்காய், செங்தூ முதலிய சீனாவின் முக்கிய நகரங்களில் தென்னிந்திய உணவு வகைகள் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. இத்தகு உணவுக்கென பல இந்திய உணவகங்கள் உள்ளன. அவற்றுள் இந்தியன் கிச்சன் என்னும் உணவகம் மிகவும் பிரபலமானது. இது பெய்ஜிங், ஷாங்காய் உள்படப் பல நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த உணவகத்தில் மெட்ராஸ் கோழிக்கறியும், தோசையும் மிகவும் புகழ்பெற்றவை. “தோசை சீன நாணிற்கு (சீன நாண் 馕, கோதுமை நாண் போன்ற ஒரு சீன பாரம்பரிய முக்கிய உணவு) பதிலாகக் கறியுடன் சாப்பிடத் தகுந்த சிறந்த உணவு என இணையதளத்தில் சில வாடிக்கையாளர்கள் கருத்துகளைத் தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.

பரத நாட்டியம்

பரத நாட்டியம், இந்தியாவின் மிக முக்கிய நடனக் கலைகளுள் ஒன்றாகவும், பெருமைப்படத்தக்க தமிழ்க் கலையாகவும் திகழ்கின்றது. சீன பரத நாட்டியக் கலைஞர் ஜின் ஷன்ஷன் இளம் வயதிலேயே பரத நாட்டியத்தைக் கற்றுக்கொண்டவர். இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற நடனக் கலைஞர்களுள் ஒருவரான லீலா சாம்சனிடம் நடனம் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான்கு முறை இந்தியா பயணித்துள்ளார். சீனாவுக்குத் திரும்பிய பிறகு, சீன மக்களிடையே இந்த இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கும் பணியில் உறுதியுடன் ஈடுபட்டு வருகின்றார்.

அவரின் அயராத முயற்சியினால் அதிகமான சீனர்கள் படிப்படியாகப் பரத நாட்டியத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். “இன்றைய நிகழ்ச்சி இந்திய நடனத்தைப் பற்றிய பொதுவான புரிதலை முற்றிலும் மாற்றிவிட்டது. உண்மையான இந்திய நடனம் இவ்வளவு மென்மையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று அவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்த ஒருவர் கருத்து தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டில், ஜின் ஷன்ஷன் பெய்ஜிங்கில் இந்திய நடனக் கலை மையத்தை நிறுவி, பல சீனக் குழந்தைகளுக்குப் பரத நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்து வருகின்றார். “எங்களுக்கு இந்த நடனம் மிகவும் பிடித்துள்ளது. மேலும், நடனமாடும்போது ஒரு அற்புதமான உலகத்திற்குள் நுழைவதாக உணர்கிறோம்” என்று பரத நாட்டியத்தைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் குறிப்பிடுகின்றார்கள்.

தற்போதுவரை அவரது பாரத நாட்டியப் பள்ளியில் நூற்றுக்கணக்கான சீனக் குழந்தைகள் தமிழ்ப் பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போதும், முக்கியப் பண்பாட்டு நிகழ்வின் போதும் ஜின் ஷன்ஷன்னும் அவரின் மாணவர்களும் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஈடுபட்டுத் தமிழ்ப் பண்பாட்டைச் சீன ரசிகர்களுக்குக் காட்டுகின்றனர்.

தமிழ் பேசும் சீனர்கள்

சீன வானொலி நிலையமானது 1963ஆம் ஆண்டில் தமிழ் ஒலிபரப்பினைத் தொடங்கியது. கடந்த 58 ஆண்டுகளில் சீன வானொலியானது நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த வானொலி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. அதோடு, ‘சீன மற்றும் இந்தியச் சந்திப்பு’, TEA TIME TALK உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. தமிழ்ப் பிரிவின் புகழ்பெற்ற தொகுப்பாளர்கள் அவர்களின் தூய தமிழின் காரணமாகப் பெரும்பான்மையான தமிழர்களால் விரும்பப்படுகிறார்கள். அவர்களுள் நிலானி என்னும் தொகுப்பாளருக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்ச் சிற்பங்கள்

நிறைவாக, அனைவருக்கும் தெரிந்த சீனாவின் ஃபூஜியன் மாகாணத்தின் ட்சுவன்சோ நகரில் உள்ள தமிழ்ச் சிற்பங்கள் குறித்துப் பார்க்கலாம். ட்சுவன்சோ வெளிநாட்டுப் போக்குவரத்து வரலாற்று அருங்காட்சியகத்தில் விஷ்ணுவின் சிலை, இந்து தெய்வம் லட்சுமியின் சிற்பம், யானை, லிங்க வடிவிலான சிற்பங்கள், தமிழ் மொழிக் கல்வெட்டுகள் முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கையுவான் கோவிலில் இந்துக் கடவுளுடன் கூடிய கல் தூண்களும் காணப்படுகின்றன.

இவற்றைத் தவிர, போதி தர்மர், யுவாங்சுவாங் ஆகியோர் சீன-தமிழ் பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இன்று தமிழ் கற்ற சீனர்களான நாங்கள், சீன-தமிழ்த் தொடர்பினை வர்த்தகம், பண்பாடு, கல்வி என மேலதிகத் துறைகள் சார்ந்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம். வரும் நாட்களில், சீனாவில் மேலதிக மாணவர்கள் தமிழ் மொழி, நடனம், பண்பாடு முதலியவற்றைக் கற்றுக்கொள்ள ஆர்வமுடன் முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.

கட்டுரையாளர்: வாங் யுன்சியென் (Wang Yunxian),

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.



Read in source website

 உக்ரைன் மீதான ரஷியத் தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வருகிறது. அதேசமயம், இந்தப் போரின் மறுபக்கமாக, சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் எதேச்சதிகார நடவடிக்கை பெரிய அளவில் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. தனது முன்னாள் கூட்டாளியும் அண்டை நாடுமான உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-இல் திடீரென போரைத் தொடங்கியது. சொல்லப்போனால் இது போரே அல்ல. உக்ரைன் மீதான ரஷியாவின் ஒருதலைபட்சமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்தான் இது.
 ரஷியாவுக்கு எதிரான நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். கடந்த இரு வாரங்களில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், கனடா உள்ளிட்ட நாடுகள், ரஷியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளன. ரஷியாவுடனான விமானப் போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகள், இரு தரப்பு உறவுகளை நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. ரஷியா மீது பொருளாதாரத் தடைகளையும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. இவை நியாயமானவையே.
 அதேசமயம், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டு, சில பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்களும் ரஷியாவுடனான தங்கள் சேவையை முடக்கி வைத்துள்ளன. குறிப்பாக, "விசா', "மாஸ்டர் கார்ட்', "அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' ஆகிய சர்வதேச கடன் - பற்று அட்டைகளை செயல்படுத்தும் நிதி சேவை நிறுவனங்கள், ரஷிய நாட்டுடனான தங்கள் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன.
 மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், தங்கள் சேவையை ரஷிய மக்களுக்கு நிறுத்திவைக்க பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. "விசா', "மாஸ்டர் கார்ட்', "அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' ஆகியவை அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டவை. அதேசமயம், இவற்றின் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த வாடிக்கையாளர்களின் நிதிச் செயல்பாடுகளில் உதவுவதன் மூலமாக பல கோடி டாலர்களை இவை ஈட்டுகின்றன. இந்த உறவு, வாடிக்கையாளர் சேவை தொடர்பானது.
 நாடுகளிடையிலான ஒப்பந்தங்கள் இதற்குக் காரணமாக இருந்தாலும், வாடிக்கையாளர் சேவையே அடிப்படை அலகு. தற்போது அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடைபெறும் மறைமுக யுத்தத்துக்காக, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு சாதகமாகச் செயல்படக் கூடாது. ஏனெனில் இந்தத் தடைகள் ஐ.நா.சபையால் விதிக்கப்பட்டவை அல்ல. ஐ.நா. சபையால் ரஷியாவுக்கு எதிராக இன்னமும் தீர்மானம் நிறைவேற்ற முடியாத சூழலில், நேட்டோ நாடுகளின் கட்டளைப்படி பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இயங்குவது, அவற்றின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.
 உலக அளவில் சீனா தவிர்த்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பண அட்டை வர்த்தகத்தில் 90% பங்களிப்பவை அமெரிக்காவைச் சேர்ந்த இந்த மூன்று நிறுவனங்கள்தான். சீனா மட்டுமே தனக்கென்று பிரத்யேகமாக "யூனியன்பே' என்ற பண அட்டையைக் கொண்டுள்ளது. பிப். 26-இல் நேட்டோ நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடையை ஏற்று, கடந்த மார்ச் 5-இல் இந்த பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்கள் தங்கள் ரஷியா தொடர்பான பண அட்டைகளின் செயல்பாட்டை முடக்கிவைப்பதாக அறிவித்தன. இந்தப் பண அட்டைகளுக்கு ரஷியாவின் வர்த்தகப் பங்களிப்பு உலக அளவில் சுமார் 10 சதவீதமாகும்.
 இதன் காரணமாக, ரஷியாவிலுள்ள ஏடிஎம் இயந்திரங்களிலும், விற்பனை முனையங்களிலும் (பிஓஎஸ்) நிதிப் பரிமாற்றம் தடைபட்டதால் லட்சக்கணக்கான ரஷிய மக்கள் பாதிக்கப்பட்டனர். தங்கள் அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிரான நேட்டோ நாடுகளின் எதிர்ப்புக்காக, தங்கள் பண அட்டைகளை பன்னாட்டு நிறுவனங்கள் முடக்கியது ஏன் என்று அவர்கள் கோபமடைந்ததில் நியாயம் இருக்கிறது.
 இதேபோன்ற அனுபவம் 2014-இலும் ரஷியாவுக்கு ஏற்பட்டது. அப்போதும் ரஷிய- உக்ரைன் போர்ச்சூழல் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின்போது, "விசா', "மாஸ்டர் கார்ட்' நிறுவனங்கள் செயல்பட மறுத்ததால் ரஷியர்கள் அவதிக்குள்ளாகினர்.
 அதன் எதிரொலியாக, ரஷியாவின் முதன்மை வங்கியான ஸ்பெர் வங்கி, 2015-இல் ரஷியாவுக்கென பிரத்யேகமான "மிர்' என்ற கடன்- பற்று அட்டைகளை உருவாக்கியது. 2021-ஆம் ஆண்டிலேயே ரஷியாவின் பண அட்டை வர்த்தகத்தில் 32 சதவீதத்தை "மிர்' பிடித்துவிட்டது. "மிர்' இருப்பதால்தான் தற்போது ரஷியர்கள் 2014-ஆம் ஆண்டுபோல கடுமையாக பாதிக்கப்படவில்லை. எனினும் முதல் மூன்று நாள்களுக்கு அதன் தாக்கம் இருந்தது.
 தவிர, இந்தியாவின் "ரூபே', சீனாவின் "யூனியன்பே' பண அட்டைகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ரஷிய அரசு தயாராகி வருகிறது. இந்தியாவில் 2014 மே மாதம் முதல் செயல்பட்டு வரும் "ரூபே' பண அட்டையின் முக்கியத்துவம் இப்போது புரிந்திருக்கும்.
 உலகை ஆட்சி செய்யத் துடிக்கும் நாடுகளுக்குக் கட்டுப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நெறி பிறழ்கையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தமது நிதிச் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு கூடுகிறது. இன்று ரஷிய மக்களுக்கு ஏற்பட்ட பண அட்டை அவதி, நாளை பிற நாட்டு மக்களுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 



Read in source website

 இந்திய மாணவர் ஒருவர், மருத்துவப் படிப்பிற்கு இந்தியாவில் செலவிடும் தொகையில் பாதியளவு செலவழித்தாலே, உக்ரைனில் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட முடியும். தம் பெற்றோரைப் பிரிந்து, கடும் குளிரைத் தாங்கிக்கொண்டு உக்ரைனில் உறையும் மாணவர்கள், இன்று பதுங்குக் குழிகளிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் அகதிகள் போல் காத்துக் கிடக்கும் நிலைமை யாரால் விளைந்தது? ஒரு முதலாளி தொழிலாளியைச் சுரண்டுவது மட்டும் சுரண்டல் அன்று; ஒரு வல்லரசு, ஒரு குடியரசைச் சூறையாடுவதும் சுரண்டல்தான்.
 1965-க்கு முன் சிங்கப்பூர், மலேசியாவுடன் சேர்ந்தே இருந்தது. சிங்கப்பூருடன் சேர்ந்திருந்தால், மலேசியாவில் மலாய்க்காரர்களை விடச் சீனர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் எனப் பயந்த துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூரைக் கத்தரித்து விட்டார். அப்போது சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீகுவான் யூ, துங் அப்துல் ரஹ்மானிடம் தங்களைத் துண்டித்துவிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டார்.
 "நாங்கள் தண்ணீருக்குக்கூட மலேசியாவைத்தான் நம்பி இருக்கிறோம்; இதுவொரு மீன்பிடித் தீவு; எங்களைத் தனித்து விடாதீர்கள்' என்று வேண்டினார். ஆனால், மலாக்காவுக்கு வந்த துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூருக்குச் சுதந்திரம் என வானொலி மூலம் பிரகடனம் செய்தார். அதனைச் செவிமடுத்த லீகுவான் யூவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
 ஆனால், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு சோவியத் நாட்டோடு இணைந்திருந்த குடியரசுகள், ஒவ்வொன்றாகப் பிய்த்துக் கொண்டு போனது ஏன் எனச் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
 "துக்கத்தால் சூழப்பட்ட நாம், துக்கத்தையே சுவாசிக்கின்றோம்' என்றொரு பழமொழி ரஷியாவில் உண்டு. இன்றைக்கு 5,000 ரஷிய வீரர்கள் உக்ரைன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபை "ரஷியாவின் ராணுவ நடவடிக்கை, உக்ரைனின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மீறிய செயல்' எனக் கண்டிக்கின்றது.
 ஆனால், ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீர்மானத்தை மறுதலித்திருக்கிறது. சோவியத் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது, நாசிசத்தையும், பாசிசத்தையும் தோற்கடித்த நாடு, இன்று அந்த இசங்களுக்குத் துணை போகலாமா?
 "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற பெயரிட்டழைக்கப்படும் பலாத்காரத்துக்கும் கொள்ளைக்கும் முடிவே இல்லை' என்று எழுதினார் மாவீரன் லெனின் (ரஜனி பாம்தத், இன்றைய இந்தியா). அந்தப் புரட்சித் தலைவரால் கண்டிக்கப்பட்ட செயலை, இன்றைய ரஷியா, உக்ரைனில் காட்டுவானேன்?
 ஜார் ஆட்சி, வேண்டுமென்றே ஜனங்களைக் கல்லாமை என்ற காரிருளில் அடைத்து வைத்திருந்தது. ஜார் ஆட்சியில் 100-க்கு 78 பேருக்குப் படிப்பு வாசனையில்லை. ஆனால், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, கல்லாதவர்களின் எண்ணிக்கை 100-க்கு 7 ஆகக் குறைந்துவிட்டது. சகலருக்கும் 7 வருஷக் கல்வி கட்டாயமாய் அளிக்க வேண்டும் என்று 1934-இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அந்த ரஷியாவால், உக்ரைனில் 25 பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் பதுங்குக் குழிகளில் பதுங்கிக் கிடக்கிறார்கள். சாலை வழியாக 300 கி.மீ. நடந்து, போலந்துக்கும் ருமேனியாவுக்கும் சென்று சேருகின்றனர்.
 அக்டோபர் புரட்சியை "யுகப்புரட்சி' என முதலில் அறிவித்த மகாகவி பாரதி, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' என இந்திய இளைஞர்களுக்கு அறிவுறுத்திய பாரதி, இன்றிருந்தால் கண்ணீர் வடிக்க மாட்டாரா?
 "1905 ஜனவரி 9-ஆம் தேதியன்று ஜார் மன்னனிடம் மனு கொடுப்பதற்காகத் தொழிலாளர்கள் குளிர்கால அரண்மனைக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அந்த ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு ஜார் மன்னர் துருப்புகளுக்கு உத்தரவிடுகிறார். அதன் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்; சுமார் 5000 தொழிலாளர்கள் காயம் அடைந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமையை ரத்த ஞாயிறு என்று அழைத்தார்கள்' என லெனின் வருத்தப்பட்டு எழுதுகிறார்.
 உக்ரைன் தலைநகரை நோக்கி 65 கி.மீ.க்கு ரஷியா பீரங்கிகளை நிறுத்தியிருக்கிறது. பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் போர் வீரர்களை நிறுத்தியுள்ளது. ஜார் ஆட்சியில் சோஷலிஸ்டுகள் அனுபவித்த கொடுமைகளை, ரஷிய மொழி பேசும் உக்ரைன் மீது காட்டுவதுதான் சோஷலிசமா? "மக்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியவர்கள் மீது, மக்களே வன்முறையைப் பிரயோகிப்பார்கள்' எனக்கூறிய லெனின் வாக்கை, இவ்வளவு சீக்கிரமா ரஷியா மறப்பது?
 அறுபதுகளில் பிடல் காஸ்ட்ரோ கியூபாவை அமெரிக்காவின் பிடியிலிருந்து தனி நாடாகப் பிய்த்து எடுக்கப் போராடிய காலத்தில், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி ஆத்திரம் கொள்ளவில்லை; அவசரப்படவில்லை. "நம்மை அவர்கள் (பிடல் காஸ்ட்ரோ) ஒருமுறை முட்டாள் ஆக்கினால், அவர்கள் முட்டாள்கள்; இரண்டாவது முறையும் அவர்கள் முயலுவார்களேயானால் நாம் முட்டாள்கள்' என்றார் ஜான் கென்னடி. அந்தப் பொறுமை இன்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இல்லை.
 கியூபா எனும் சிறு தீவு சுதந்திரத்திற்குப் போராடியபோது, அதனை ஆதரித்து கியூபாவைச் சுற்றிலும் போர்க்கப்பல்களை நிறுத்தி, நேசக்கரம் நீட்டினார், அதிபர் குருசேவ்.
 ஒரு காலத்தில் ஒரு நாட்டின் விடுதலைக்குப் பக்கபலமாக நின்ற சோவியத் வல்லரசு, இன்று ஒரு சுதந்திர நாட்டின் அமைதியைக் குலைப்பது ஏன்?
 சோஷலிஸ்டுகள் அடிமைப்பட்ட நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கத்தான் போராடுவார்கள். சே குவேரா, கியூபாவின் விடுதலைக்கு பிடல் காஸ்ட்ரோவோடு தோளோடு தோள் நின்று போராடினார். விடுதலை பெற்றதும் சே குவேராவிற்கு ஒரு பதவியும் கொடுத்தார், காஸ்ட்ரோ. ஆனால் சே குவேரா அதனை மறுத்து பொலிவியாவின் விடுதலைக்குப் போராடப் புறப்பட்டார்.
 சே குவேராவைப் பார்த்து நிருபர்கள் "உங்கள் தாய்நாடு எது' என்று கேட்டபோது, "அடிமைப்பட்ட நாடே என் தாய்நாடு; அந்த நாட்டிற்கு விடுதலையைத் தேடித்தரும் போராளி நான்' என்றார். ஆனால், இன்று சோவியத் நாடு அடிமைப்பட்ட நாட்டிற்குச் சுதந்திரத்தை வழங்குவதற்கு பதிலாக, சுதந்திரம் பெற்ற ஒரு குடியரசை அடிமை நாடாக ஆக்க முயலுகிறது.
 கியூபா விடுதலை பெற்றவுடன், சோவியத் நாட்டிற்குத் தன் விசுவாசத்தைக் காட்டியதே தவிர, அதனோடு ஒன்றிப் போகவில்லை. அதற்கு காஸ்ட்ரோ சொன்ன காரணம், "ஒரு நாட்டின் வழிமுறையை இன்னொரு நாடு அப்படியே ஏற்க முடியாது; கூடாது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மைகள் உள்ளன.
 அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு நிலைகளில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கட்டுமானம் இருக்கும். அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; இல்லாவிடில் பெரும் சேதமும் பின்னடைவும் தவிர்க்க முடியாததாகிவிடும். "மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்' தேவை என்ற கருத்தாக்கம் எங்கும் பரவி வருகிறது' என்றார். அன்று பிடல் காஸ்ட்ரோ சொன்ன காரணம் இன்று உக்ரைனுக்கும் பொருந்தும் அல்லவா?
 மனித உயிர்கள் புழுக்களைப் போல் கொல்லப்படுவதைப் பார்த்து, போப் பிரான்சிஸ் ரஷிய தூதரகத்திற்கே சென்று கருணை மனுவை வழங்கினார். சுரண்டல், அடிமைத்தனத்தை ஒழித்தல், ஏகபோக முதலாளித்துவத்தைத் தடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றல் போன்ற கொள்கைகள்தாம் சோஷலிசம், கம்யூனிஸம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இன்று ஏமாந்து கிடக்கின்றனர்.
 "உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்; இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறொன்றுமில்லை' என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால், இன்று சுதந்திர நாட்டின் பிரஜைகளே விலங்கு மாட்டி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
 கம்யூனிஸம் பேசும் சீனா, திபெத்தை ஆக்கிரமித்து, புத்த பிக்குகளை வெளியேறச் செய்துவிட்டது. இந்தியாவின் லடாக் பகுதியை ஆக்கிரமித்ததோடு, அருணாசல பிரதேசத்திலும் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. இலங்கையிலே கடலைத் தூர்த்து, கடல்தளம் கட்டத் தொடங்கிவிட்டது. தைவானை உலகப்படத்தில் இல்லாமல் போகும்படி செய்து கொண்டிருக்கிறது.
 பொதுவுடமை பேசும் புண்ணியவான்களின் போக்கை அன்றே உணர்ந்திருந்தார் மாவீரன் லெனின். "தோழர் ஸ்டாலின் அளவற்ற அதிகாரத்தைத் தம் வசம் குவித்து வைத்திருக்கிறார். அந்த அதிகாரத்தை எப்போதும் எச்சரிக்கையுடன் அவர் பயன்படுத்துவாரா என்ற பயம் எனக்கு உண்டு.
 ஸ்டாலின் மிகவும் முரட்டுத்தனமானவர். எனவே, அதிக பொறுமையும் கட்டுப்பாட்டுணர்வும் உள்ளவராக, தோழர்களிடம் மென்மையாகவும், அக்கறை உள்ளவராகவும் நடந்து கொள்ளக்கூடிய, முடிவெடுப்பதில் உறுதியானவராகவும் உள்ள ஒருவரைத், தேடிக் கண்டுபிடிப்பது அவசியம்' என எழுதியிருக்கிறார் லெனின்.
 மகாகவி பாரதியார் "இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்' எனும்படி ஆட்சிபுரிந்த ஜார் ஆட்சி ஒழிந்துவிட்டது என்று கவிதையிலே ஆவேசப்பட்டுப் பாடிவிடுகிறார். ஆனால், பின்னர் நிகழ்ந்த கொலை பாதகங்களைப் பார்த்துக் கருணை மறவன் லெனினைக் கண்டிக்கவே செய்கிறார். "கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர், தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.
 "கொலையாளிகளை அழிக்க, கொலையைத்தானே நாம் கைக்கொள்ள நேருகிறது. அநியாயம் செய்வோரை, அநியாயத்தாலே அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே தவிர அதனை நீக்கவல்லது ஆகாது. அநியாயம் அநியாயத்தைத்தான் விருத்தி பண்ணுமே தவிர, குறைக்காது.
 அதர்மத்தைத் தர்மத்தால் வெல்ல வேண்டும்... தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். இதனை அறியாதவர் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவர் ஆவர்' எனத் தம் கட்டுரையில் எழுதுகிறார்.
 இப்படி மனித உயிர்கள் மலிவுப்பதிப்புகள் ஆவதைப் பார்த்துச் சகிக்காத இந்திய அரசு, நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனுக்கு அனுப்பி, இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பைத் தந்திருக்கிறது. "ஆபரேஷன் கங்கா' எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 76 விமானங்கள் மூலம் சுமார் 17,400 மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 இரண்டு உலகப்போர்களிலும் வென்றவர்கள் வாழ்ந்தார்கள்; தோற்றவர்கள் இருப்பதற்கு வழியில்லை. மூன்றாவது உலகப்போர் நடந்தால், வெற்றியைக் கொண்டாட வெற்றியாளர்களும் இருக்க மாட்டார்கள்! "யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது' எனும் கம்பன் வாக்கை நினைத்தால், சோவியத்தும் வாழும்; உக்ரைனும் வாழும்!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).



Read in source website

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் அரசு ஊழியர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதால், வரவிருக்கும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்ட அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டன. 2004 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் நிறுத்தப்பட்டன. எந்தவொரு ஊழியருக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அரசுகளே அந்தப் பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வது, தனியார் துறையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலையை எளிதில் உருவாக்கிவிடும்.

பெருந்தொற்று காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் தொய்வை ஏற்படுத்தாதா என்ற கேள்வி இயல்பானது. பழைய ஓய்வூதியத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் நிதிச் சுமையைத் தாம் தெளிவாகவே உணர்ந்துள்ளதாகவும் இதனால் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் எந்தச் சுணக்கமும் ஏற்படாது என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது சமீபத்திய கட்டுரையில் தெரிவித்துள்ளார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறையில் பணியாற்றிய ஓர் ஊழியருக்கு அவரது ஓய்வுக் காலம் என்பது ஓய்வூதியத்தை நம்பியே இருக்க முடியும்; நல்லதொரு ஆட்சி நிர்வாகத்துக்குத் தன் வாழ்வின் பெரும் பகுதியை அளித்த ஊழியரின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் கடமை என்ற விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அடுத்து வரும் ஆண்டில் புதிதாக ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியிருப்பதோடு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.800 கோடியும் ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டில் இத்திட்டத்துக்குக் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பரீட்சார்த்த நிலையில் உள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ராஜஸ்தான் முதல்வர் இத்திட்டங்களை அறிவிப்பதில் அவசரம் காட்டியிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களும் முடிந்துவிட்டதால், உடனடி அழுத்தங்கள் எதுவும் இல்லை என்றபோதும், ராஜஸ்தானின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறவில்லை.



Read in source website

தென்தமிழகக் கடற்கரைகளில் 1980-களின் இறுதியில் தொடங்கி, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமாகவே நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவரும், தூண்டில் வளைவுத் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டாலும் தனிப்பட்ட நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்கள் பெரும்பாலும் பயனற்று நிற்பதோடல்லாமல், கடலரிப்பின் காரணியாகவும் மாறியிருப்பதைக் களஆய்வுகளில் காண முடிகிறது.

செயற்கையாகத் தன்னுள் துருத்திக்கொண்டு வரும் எதையும் கடல் அனுமதிப்பதே இல்லை. தனது போக்கைச் சமப்படுத்துவதற்காகச் செயற்கையான அமைப்பின் ஒருபுறம் மணலைக் கிள்ளி மறுபுறம் சேர்த்துவிடும். கிழக்குக் கடற்கரையில் வடபுறம் கிள்ளி தென்புறம் மணலைச் சேர்க்கும் கடல், தென்மேற்குக் கடற்கரையில் தென்புறம் கிள்ளி, வடபுறம் சேர்த்துவிடுகிறது. சென்னைத் துறைமுகத்துத் தடுப்புச் சுவர்களால் கரையோரம் பாதிக்கப்படும் வடசென்னையும், தொடர்ச்சியாய் வளர்ந்துவரும் மெரினா கடற்கரையும் அதற்கான சான்று.

தீபகற்பத்தில் நதிக்கரைத் துறைமுக அமைவுகள் மாறி, கடல் முகத்தில் துறைமுகங்கள் அமைந்த பின், தடுப்புச் சுவர்கள் தவிர்க்க முடியாத அம்சங்களாய் மாறிவிட்டன. ஆனால், கடல் முகத்தில் அமைந்த தடுப்புச் சுவர்களால் பெரும் கடலரிப்பை அருகில் இருக்கும் மீனவ ஊர்கள் சந்தித்தன. பெரும் போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவையும் அமைவிடம் சார்ந்து மற்ற ஊர்களைப் பாதித்தன. கடலரிப்பு தொடர்கதையான பின், எல்லா கடலோர ஊர்களுமே தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளத் தடுப்புச் சுவர்கள் கேட்பது நியாயமானதுதான்.

கடலில் கற்களைக் கொட்ட ஆரம்பித்ததுதான், கரைக்கடல் மற்றும் அண்மைக் கடலில் மீன்வளம் அழிந்ததற்கான முக்கியக் காரணம். மன்னார் வளைகுடாப் பகுதியிலிருந்து திருவிதாங்கூர் வரையான மீன்கள் இனப்பெருக்கம் செய்யும், பவளப் பாறைகள் நிறைந்த கடல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. தென்மேற்குக் கடற்கரையில், அக்டோபர் முதல் வாரத்தில் கரைக்கடலில் கேசவன் புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, ராஜாக்காமங்களம்துறை போன்ற ஊர்களில் கிடைக்கும் நெத்திலிப்பாடு இல்லாமலே ஆகிவிட்டது. அதுபோலவே நெய்மீன், சீலா, சூரை, குதிப்பு, அயலை போன்ற மீன்களின் வரத்தும் குறைந்துவிட்டது. சரி, குறைந்தபட்சம் இருப்பதைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என அப்பகுதி பாரம்பரிய மீனவர்களிடம் கேட்டால், அவர்கள் நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர் வேண்டாம், தூண்டில் வளைவுகளே வேண்டும் என்கிறார்கள்.

கடலரிப்பு தடுப்பு சார்ந்த அரசின் தகவல் குறிப்புகளிலும், தூண்டில் வளைவுகள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும் இத்தடுப்புச் சுவர்கள் பற்றி துறைசார் அதிகாரிகளிடம் சரியான புரிதல் இல்லை. நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவரையும் தூண்டில் வளைவு என்றே அதிகாரிகள் புரிந்துகொள்கிறார்கள். தடுப்புச் சுவர்களில் நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர் வேறு, தூண்டில் வளைவு வேறு. இந்த வேறுபாடு புரியாமலேயே, கடந்த காலங்களில் கடற்கரை ஊர்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டதால், தென்தமிழகக் கடலோரமே இன்று அல்லல்பட்டுக் கிடக்கிறது.

கடலோரக் குடியிருப்புப் பகுதிகளைக் கடலடி மற்றும் கடலரிப்பிலிருந்து காப்பதற்கு, இன்றைய நிலையில் தூண்டில் வளைவுகள் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. தவிர்க்க முடியாமல் அமையும் இந்தத் தூண்டில் வளைவுகளால் கரைக்கடல் வளம் பாதிப்படைந்தாலும், கடலரிப்பாவது குறைந்து குடியிருப்புகள் பாதுகாக்கப்படும். கன்னியாகுமரிக்குக் கிழக்கே வாணிவாடும், வாடைக்காற்றுமே வடகிழக்குப் பருவகாலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்க, மேற்கே தென்மேற்குப் பருவகாலத்தின் சோணிவாடும், சோழக்காற்றுமே தொழில் எதிரிகள். திறந்த கடல்வெளியில் பெரும் கடலடியால் தொழில்செய்ய முடியாத சூழல் ஒருபுறமென்றால், மறுபுறம் கடலரிப்பால் காணாமல் போகும் கடற்கரைகள்.

தென்மேற்குக் கடற்கரையின் பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழ்நாடு அரசு, சமீபத்தில் கேசவன் புத்தன்துறைத் தடுப்புச் சுவருக்காக சுமார் ரூ.22 கோடியும், பொழிக்கரை தடுப்புச் சுவருக்காகச் சுமார் ரூ.19 கோடியும் நிதி ஒதுக்கியிருப்பதாகத் தகவல் இருக்கிறது. இந்தத் தடுப்புச் சுவர்களைப் பொதுப் புரிதலின்படி தனித்தனியாக நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்களாக அமைக்காமல், பொழிக்கரைக்கும் பெரியகாட்டுக்கும் இடைப்பட்ட பாதுகாப்பான மணல் மேட்டுப்பகுதியில் ஆரம்பித்து, 200மீ கடலில் தெற்காக இறங்கச் செய்து, தென்கிழக்காகத் திருப்பி கேசவன் புத்தன்துறை வரை நீண்ட ஒரே தூண்டில் வளைவாக அமைத்துக்கொடுத்தால், அப்பகுதியின் கடலடியும் கடலரிப்பும் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல், பெரும் மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்கான வரப்பிரசாதமாகவும் மாறிவிடும் என்கிறார்கள் அப்பகுதி பாரம்பரிய மீனவர்கள். இது தவிர்த்துத் தமிழகக் கடற்கரைகளில், வடசென்னை உட்பட ஏற்கெனவே அமைக்கப்பட்ட நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்களையும் ஆய்வுசெய்து, தேவைக்கேற்ப அவற்றைத் தூண்டில் வளைவுகளாய்த் திருத்தி அமைத்து, மீனவர் குடியிருப்புகளைப் பாதுகாப்பதும் அரசின் மேலான கடமை.

- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com



Read in source website

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வெற்றியாளர்களாக நமது குழந்தைகள் மிளிர்வதற்கு அவர்களை எந்தெந்த வகையில் தயார்செய்ய வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும், எப்படியெல்லாம் நமது குழந்தையை மாற்ற வேண்டும் என எப்போதும் யோசிக்கும் பெற்றோர்கள், அதற்காகச் சில விஷயங்களில் தங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே இல்லாத குழந்தைகள்கூட வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றார்கள். அதனால், குழந்தைகளின் வெற்றிக்குப் பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களின் மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான அணுகுமுறைகள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதியாகச் சொல்கின்றன. அந்த வகையில், வாழ்க்கையில் வெற்றிபெற்ற குழந்தைகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் இதன் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளெல்லாம் வெற்றிபெற்ற குழந்தைகளிடம் இருக்கக்கூடிய சில முக்கியமான குணங்களைப் பட்டியலிட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்:

குழந்தைகளை அவர்களின் வேலையை அவர்களே செய்ய விடுங்கள்:

ஜூலி ஹைன்ஸ், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். குழந்தைகள் உளவியல் தொடர்பாகவும், குழந்தை வளர்ப்பு தொடர்பாகவும் பல உரைகள், ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். ‘How to Raise an Adult’ என்ற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக ஆற்றிவரும் Tedx உரைகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவை. அவர், தான் பார்த்த வெற்றிபெற்ற குழந்தைகளிடம் இருந்த மிக முக்கியமான குணம் என்று ‘குழந்தைகளின் அன்றாட வேலைகளை அவர்களே செய்துகொள்வதுதான்’ என்கிறார். அவர்களுடைய அன்றாட சாதாரண வேலைகளைக்கூட அவர்களுக்குப் பதிலாக நாம் செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு எப்படித் தன்னம்பிக்கையும் தைரியமும் வரும் என்று அவர் கேட்கிறார்.

தங்கள் வேலைகளை, அதுவும் எளிதான அன்றாட வேலைகளிலிருந்து நேர்த்தியையும் ஒழுங்கையும், நேர மேலாண்மையையும் மிக எளிதாகக் குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல், அப்போது மற்றவர்களின் உதவியை, தேவையை, கஷ்டங்களை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அது அவர்களைப் பக்குவப்பட்டவர்களாக மாற்றும். தங்கள் இயல்புகள், குறைகள், போதாமைகள், விருப்பங்கள் என்று குழந்தைகள் தங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் அது உதவியாக இருக்கும்.

சகமனிதர்களுடன் உறவாடும் திறனை வளர்த்தல்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், 700 பேரை நர்சரி பள்ளிக் காலத்திலிருந்து அவர்களின் 25 வயது வரை தொடர்ச்சியாகக் கவனித்து ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் 25 வயதில் சிறப்பான ஆளுமை உடையவர்களாகவும், வெற்றிபெற்றவர்களாகவும் இருப்பவர்கள் சிறுவயதிலிருந்தே மற்றவர்களிடம் கனிவாகவும், மிக எளிமையாகப் பழகுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். சக குழந்தைகளுடன், மனிதர்களுடன் இணக்கமாகப் பழகும் திறன் அந்தக் குழந்தையை வெற்றிப் பாதையை நோக்கி மிகச் சுலபமாகக் கொண்டுசேர்க்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

ஆனால், இன்றைய கல்விச் சூழலில் பெற்றோர்களாகிய நாம் எந்த அளவுக்குக் குழந்தைகளிடம் இதை அனுமதிக்கிறோம் அல்லது சொல்லித்தருகிறோம்? “அவனை/அவளைவிட நீ நிறைய மார்க் வாங்க வேண்டும்”, “அவனை/அவளை நீ இந்தப் போட்டியில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்”, “அவனை/அவளை விட நீ நன்றாக டான்ஸ் ஆட வேண்டும்” எனச் சிறு குழந்தைகளின் மனதில், அவர்களின் நண்பர்களின் மீது ஒரு போட்டி மனப்பான்மையைத்தான் எந்நேரமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். சக குழந்தைகளை எப்போதும் போட்டியாளராக நினைத்துக்கொண்டு வளரும் குழந்தைகளால் எப்படி அவர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்? அதே போல, “அவர்களோட என்ன பேச்சு? வந்து படி”, “பக்கத்து வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது” என எந்த நேரமும் நமது கைகளுக்குள்ளேயே குழந்தைகளை வளர்த்துவருகிறோம்.

எந்நேரமும் நமது கட்டுப்பாட்டிலேயே வளரும் குழந்தைகள், பழகும் திறனை முற்றிலுமாக இழக்கிறார்கள். முதன்முறையாக சமூகத்தைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது திணறிவிடுகிறார்கள். மனிதர்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்களுடன் நீடித்த உறவை ஏற்படுத்திக்கொள்வதிலும் ஏராளமான சிக்கல்களை முதல் முறையாகச் சந்திக்கத் தொடங்குகிறார்கள். அதுதான் அவர்களுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது. சிறு வயதிலிருந்தே அவர்கள் மற்றவர்களுடன் பழகிக்கொண்டிருந்தால், மனிதர்களை எப்படி எதிர்கொள்ள, கையாள வேண்டும் என்பதை எளிதில் கற்றுக்கொண்டிருப்பார்கள். அது, வெற்றியை நோக்கிய பாதையில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

அப்பா-அம்மாவுக்கு இடையேயான ஆரோக்கியமான உறவு:

குழந்தையின் அப்பா-அம்மாவுக்கு இடையே இருக்கும் ஆரோக்கியமான, புரிதலுடைய, பக்குவமான உறவு என்பது குழந்தையின் எதிர்காலத்துக்கும் அதன் மனநிலைக்கும் மிகவும் அவசியமானது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஒரு விஷயத்தை எப்படிச் சொல்கிறோம், அதைப் பற்றி எப்படி உரையாடுகிறோம், அந்த விஷயத்தில் நமது முரண்களை எப்படிக் களைகிறோம், அதன் பொருட்டு எப்படி ஒருமித்த உறவுக்கு வருகிறோம் என்பதையெல்லாம் குழந்தைகள் தொடர்ச்சியாக நம்மிடம் கவனித்தே வளருகின்றன.

அதிலிருந்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கின்றன. அதன்படியே அவர்களும் நடந்துகொள்கிறார்கள். அதே போல பெற்றோர்கள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர்மறையான போக்கில் குழந்தைகளிடம் நடந்துகொள்வதும் குழந்தைகளிடையே குழப்பத்தை அதிகரிக்கும். உதாரணத்துக்கு அம்மா, “டிவியே பார்க்கக் கூடாது, டிவியே பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு வராது” என்று சொல்லும் நேரத்தில், “அப்படியெல்லாம் குழந்தையைப் பயமுறுத்தாதே, டிவி பார்த்தா அறிவு நல்லா வரும்” என்று அப்பா சொல்வது நல்லதல்ல. பெற்றோர்களுக்கிடையே ஒரு விஷயம் குறித்துக் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், குழந்தையிடம் ஒற்றைக் கருத்து மட்டுமே சொல்லப்பட வேண்டும்.

பெற்றோர்களின் மனஅழுத்தம்

அலுவல்கள் தொடர்பாகவோ குடும்பப் பொறுப்புகள் தொடர்பாகவோ பெற்றோருக்கு ஏற்படும் மனவுளைச்சல்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கின்றன என்கின்றன ஆய்வுகள். நீங்கள் அதை வெளியே சொல்லவில்லையென்றாலும் உங்கள் நடவடிக்கைகள், உடலசைவுகள், முகத்தோற்றங்களை வைத்துக் குழந்தைகள் அதை ஊகித்துவிடுவார்கள். அதனால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்த ஒரு சிக்கலையும் நீடிக்க விடாமல் அதற்கான தீர்வைத் தேடி, உடனடியாக அதைச் சரிசெய்துகொள்வது அவசியம்.

இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சூழல் உள்ள குடும்பங்களில் இதுபோன்ற மனவுளைச்சல்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, அதை முடிந்தவரை குழந்தைகளிடம் காட்டாமல் இயல்பாக நடந்துகொள்வதும், அப்படி ஒருவருக்கு மனஅழுத்தம் இருக்கும்போது இன்னொருவர் அக்கறையுடனும், கரிசனத்துடனும் அருகே இருந்து அவரைப் பார்த்துக்கொள்வது குழந்தையின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.

வாசிப்புப் பழக்கம்

இன்றைய மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. டிஜிட்டல் சாதனங்களின் வரவு அதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழுமையான காரணமல்ல. மாணவர்களின் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் போட்டி நிறைந்த உலகமாகிக்கொண்டிருக்கிறது. இயல்பான கல்வியை போட்டியாக மட்டுமே பார்க்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அதனால், கல்விக்கு வெளியே வாசிப்பு என்பது குழந்தைகளிடம் தேவையற்ற வேலை என்பது போன்ற கருத்தைப் பெற்றோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வாசிப்பின் மீதான ஆர்வம் புறந்தள்ளப்படுகிறது. அது எந்த வகையிலும் போட்டியில் வெல்வதற்கு உதவாது என்ற மனப்பான்மையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில், வாசிப்பு என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை, கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்றே ஆய்வுகள் சொல்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புகள் குழந்தைகளின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துகின்றன.

வெற்றிபெறும் குழந்தைகளின் பொதுவான பண்புகளாக இவையெல்லாம் இருக்கின்றன. அதனால், குழந்தைகளிடம் குறைந்தபட்சம் இந்தப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com



Read in source website