DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 09-02-2022

கடந்த 400 முதல் 700 ஆண்டுகளில், இமயமலையின் பனிப்பாறைகள் அவற்றின் மொத்த பரப்பளவில் 40 சதவீதத்தை இழந்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதீத வெப்பநிலை, பனிமலைகள் உருகுதல், மழைவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்,  கடந்த 400 முதல் 700 ஆண்டிகளில் இமயமலையானது 28,000 சதுர கிலோமீட்டரிலிருந்து 19,600 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையை மேற்கொளிட்டுப் பேசிய மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், இமயமலையின் பரப்பு சுருங்கி வருவது புதிய நீர் ஆதாரங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் சமூக-பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த சில தசாப்தங்களாக இமயமலையின் பனிப்பாறைகள் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு விரைவாக பனிப்பாறைகளை இழந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in Source Website

சமூக அதிகாரமளித்தல், பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்த மாணவிகளின் திறன் மேம்பாட்டுக்கு 19 தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் தெரிவித்தார்.
 மாணவிகளின் திறனை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதில்:
 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் திறனை மேம்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளுக்கான "சமக்ரா சிக்சா' திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வியுடன் விவசாயம், ஆடை தயாரித்தல், அழகு சாதனக் கல்வி, சுற்றுலா, கட்டுமானத் துறைப் பணிகள் போன்றவை பற்றிய தொழில் கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.
 கடந்த 2021, மார்ச் வரையில் 11,710 பள்ளிகளில், 8.16 லட்சம் மாணவிகள் உள்பட 15 லட்சம் குழந்தைகள் இதில் பயன் பெற்றுள்ளனர்.
 மேலும், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாணவிகளின் திறனை மேம்படுத்தி, பொருளாதாரத்தைப் பெருக்கும் வகையில், பிரதம மந்திரி கெளசல் விகாஸ் யோஜனா, ஜன் சிக்சா சன்ஸ்தான், தொழில் கல்வி பயிற்சித் திட்டம் போன்றவை வழங்கப்படுகின்றன.
 இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு போக்குவரத்துச் செலவு, உணவு, தங்கும் வசதி ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. 14,604 தொழில்பயிற்சி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள், மாணவிகளுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. தன்னாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்தவும் ஜன் சிக்சான் சன்ஸ்தான் அமைப்பின் மூலம் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவிகளுக்கு 14 வயதிலிருந்து 45 வயது வரையுள்ளவர்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகையில் கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 79 சதவீத பெண்கள் பயனடைந்துள்ளனர் என கல்வித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
 மனிதக் கழிவுகளைக் கையாளத் தடை: மனிதக் கழிவுகளை, மனிதர்களே கையாளும் இழிநிலையை மாற்ற, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த திமுக உறுப்பினர் டி.ஆர் பாலுவின் மற்றொரு கேள்விக்கு மத்திய சமூக நீதித் துறையின் இணையமைச்சர், ராம்தாஸ் அதாவலே பதில் அளித்தார்.
 அதில் அவர் கூறியுள்ளதாவது:
 மனிதக் கழிவு அகற்றுவோர் மறுவாழ்வுச் சட்டம் 2013-இன்படி, மனிதக் கழிவுகளை, மனிதர்களே கையாள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களுக்கு நிவாரணத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 40,000 வரை உதவித் தொகை, குழந்தைகளின் திறனை மேம்படுத்த, மாதம் ரூ. 3,000 யுடன் பயிற்சி, பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.



Read in Source Website

 

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆமதாபாத் ஐபிஎல் அணியின் பெயரை அணி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

இந்நிலையில், ஆமதாபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் எனப் பெயரிட்டு அணி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in Source Website

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறாா். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

துபையில் செவ்வாய்க்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மிதாலி 738 புள்ளிகளையும், மந்தனா 710 புள்ளிகளையும் பெற்றுள்ளனா்.

ஆஸி. வீராங்கனை அலிஸா ஹீலி 742 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். இதர வீராங்கனைகள் பெத் மூனி 719, எமி சேட்டா்த்வெயிட் 717 புள்ளிகளுடன் மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனா். பௌலிங்கில் ஆஸி. வீராங்கனை ஜெஸ் ஜோனஸ்ஸன் 773 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 727 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ஆல்ரவுண்டா் தரவரிசையில் ஆஸி. வீராங்கனை எலிஸி பொ்ரி மீண்டும் முதலிடத்துக்கு திரும்பினாா். இங்கிலாந்தின் நாட் ஷிவா், இந்தியாவின் தீப்தி சா்மா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனா்.

இன்று நியூஸி-இந்திய மகளிா் டி20:

இந்திய மகளிா் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே ஒரு டி20 ஆட்டம்

புதன்கிழமை குயின்ஸ்டவுனில் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 5 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 12-இல் முதல் ஒருநாள், 15-இல் இரண்டாம் ஒருநாள், 18-இல் மூன்றாம் ஒருநாள், 22-இல் நான்காம் ஒருநாள், 24-இல் 5-ஆம் ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன.

நியூஸிலாந்தில் வரும் மாா்ச்-ஏப்ரல் மாதம் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இத்தொடா் அமைந்துள்ளது.



Read in Source Website

ஸ்நோ போா்டிங் ஆடவா் பிரிவில் ஆஸ்திரிய வீரா் பெஞ்சமின் காா்ல் தங்கப் பதக்கம் வென்றாா். ஸ்லோவேனிய வீரா் டிம் மஸ்தாங்க் வெள்ளியும், ரஷியாவின் விக் வைல்ட் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் பிரிவில் செக். குடியரசின் எஸ்தா் லெடக்கா தங்கத்தைக் கைப்பற்றினாா். ஆஸ்திரியாவின் டேனியலா வெள்ளியும், ஸ்லோவேனியாவின் குளோரியா வெண்கலமும் வென்றனா்.

 



Read in Source Website

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவு கா்லிங் விளையாட்டில் இத்தாலி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இத்தாலி-நாா்வே இடையே கா்லிங் போட்டி இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகளைக் குவித்தன. இறுதியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி வென்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

லூஜ்: நடாலிக்கு 5-ஆவது தங்கம்

மகளிா் லூஜ் பிரிவில் ஜொ்மனிக்கு தங்கம், வெள்ளி கிடைத்தது. லூஜ் பிரிவில் இதுவரை 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்றுள்ளது.

ஜொ்மனியின் முன்னணி நட்சத்திரம் நடாலி ஜெய்ஸன்பொ்கா் 4 தங்கப் பதக்கங்களை தன்வசம் வைத்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 34 வயதான நடாலி 3:53:454 நேரத்தில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். மற்றொரு ஜொ்மன் வீராங்கனை அன்னா பெர்ரட்டியா் வெள்ளியும், ரஷியாவின் டாட்யனா இவானோவா வெண்கலமும் வென்றனா்.

ஐஸ் ஹாக்கி: ஸ்வீடன், பின்லாந்து வெற்றி:

மகளிா் ஐஸ் ஹாக்கி பிரிவில் ஸ்வீடன் 1-0 என டென்மாா்க்கை வீழ்த்தியது. ரஷியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பின்லாந்து.

கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்: ஜோஹன்னஸுக்கு தங்கம்

ஆடவா் கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங் பிரிவில் நாா்வேயின் ஜோஹன்னஸ் ஹாஸ்புளோட் ப்ரி ஸ்பிரின்ட் தங்கம் வென்றாா். கடந்த 2018-இலும் ஜோஹன்னஸ் தங்கம் வென்றிருந்தாா். இத்தாலி வீரா் பெட்ரிகோ வெள்ளியும், ரஷிய வீரா் அலெக்சாண்டா் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனை ஜோன்னா சன்ட்லிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். அவா் நடப்பு உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக வீராங்கனை மஜா வெள்ளியும், அமெரிக்காவின் ஜெஸ்ஸி டிகின்ஸ் வெண்கலமும் வென்றனா்.

 



Read in Source Website

சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடியாக விளங்குகிறது. நீலகிரி மலையின் இயற்கை எழில் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லிட்டருக்கும் குறைவான கொள்ளளவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சூழலியலுக்கு தீங்கு விளைவிக்காத மக்கும் பொருட்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துமாறு உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், உதகையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நெல் உமி, கோதுமை உமி, கரும்புச் சக்கை, வேர்க்கடலை ஓடுகள், தேங்காய் நார், வாழைத்தண்டு, புளியங்கொட்டை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த கழிவுகளைக் கொண்டு, தேநீர் கோப்பைகள், கரண்டிகள், தட்டுகள், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய பயன்படும் கன்டெய்னர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவற்றை நீலகிரி மாவட்டத்தில் புழக்கத்தில் விட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான முன்னெடுப்பில் அசத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, வேளாண் கழிவுகளிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.செந்தில்குமார் கூறும்போது, "சுற்றுச்சூழல் பாது காப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமான நீலகிரியில், பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாற்று பயன்பாட்டு பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதனைக்கருத்தில் கொண்டே வேளாண் சார்ந்த கழிவுகள் மூலமாக கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறிந்த 24 மணி நேரத்துக்குள் மக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும், அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வேளாண்கழிவுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், கொள்முதல் செலவும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. ஒரு கோப்பை ரூ.1-க்கு விற்பனை செய்கிறோம்.

உதகையிலுள்ள சில உணவகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் எங்கள் தயாரிப்புகளை காண்பித்து அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம்" என்றார்.



Read in Source Website

சென்னை: சர்வதேச அளவில் புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) முதல்பெண் துணைவேந்தராக பேராசிரியை சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவி என்பது தெரியவந்துள்ளது. இதனால், மாநிலக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.ராமன் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, அதுவும் முதல் பெண் துணைவேந்தராக எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறோம். ஒட்டுமொத்த கல்லூரியே இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

சாந்தி எங்கள் கல்லூரியில் கடந்த 1980-83 ஆண்டில் பி.ஏ. வரலாறு பட்டமும், 1983-85 ஆண்டில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர். அந்த காலகட்டத்தில் அவருக்கு இளங்கலை படிப்பில் பேராசிரியர் தனுஷ்கோடி வரலாறு பாடமும், பேராசிரியர் சிதம்பர குமாரசாமி ஆங்கிலப் பாடமும், முதுகலை படிப்பில் பேராசிரியை லலிதா லட்சுமி, துறைத் தலைவர் அம்சபிரியா ஆகியோர் அரசியல் அறிவியல் பாடமும் எடுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன். எஸ்.சந்திரசேகர், தமிழ் அறிஞர் உவேசா, ஜெனரல் கரியப்பா, முதல் பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி சி.வி.முத்தம்மா, நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, அரசியல் தலைவர்கள் ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், ஏன் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என புகழ்பெற்ற பல தலைவர்களும் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. அந்த வரிசையில் இன்னொரு முன்னாள் மாணவியான சாந்தியால் எங்கள் கல்லூரிக்கு இன்னொரு கவுரவம் கிடைத்துள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழா அல்லது மிகப்பெரிய விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in Source Website

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தோம். காற்றோடு கலந்து வந்த மங்களகரமான நாகஸ்வரம் இசை வரவேற்றது. கோயில் கொடிமரம் அருகே செம்பனார்கோயில் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ், நாகஸ்வரத்தை வாசித்து கொண்டிருந்தார். அந்த தெய்வீக இசை கேட்போரை மெய்மறக்கச் செய்தது.

நாகஸ்வர இசைக் கலைஞர் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ் குறித்து விசாரித்தபோது, செம்பனார்கோயில் பரம்பரையில் இவர் 21-வது தலைமுறை என்பது தெரியவந்தது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் (44 ஆண்டு) நாகஸ்வர இசைக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த மோகன்தாஸிடம் பேச முற்பட்டோம். புன்முறுவலோடு வரவேற்று அமர வைத்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

எந்த வயதில் இருந்து நாகஸ்வரத்தை வாசித்து வருகிறீர்கள்?

நாகஸ்வர உலகத்தில் செம்பனார்கோயில் பரம்பரை மிகப் பெரிய பாரம்பரியம் கொண்டது. எங்கள் பரம்பரையில் 21-வது தலைமுறையாக நான் நாகஸ்வரத்தை வாசித்து வருகிறேன். பூர்வீகம் செம்பனார்கோயில். நான் பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை. 11-வது வயதில் நாகஸ்வரத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரே ஆண்டில் நாகஸ்வரத்தைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டேன். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தி உள்ளேன்.என்னுடைய இசையை பாராட்டி ‘கோகில கானஇசை செல்வர்’ உள்ளிட்ட பல பட்டங்களை கொடுத்துள்ளனர்.

உங்களுடைய குரு...

என் தந்தை செம்பனார்கோயில் எஸ்ஆர்ஜி சம்பந்தம்தான் என்னுடைய முதல் குரு. என் தந்தைக்கு கலைமாமணி விருது கடந்த 1980-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. தொழில் பக்தி, அவற்றின் மீதான பற்றுகளை அவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன்.

இத்தனை ஆண்டுகாலத்தில் உங்க ளது மறக்க முடியாத அனுபவம்...

நான் நாகஸ்வரம் கற்று தொழிலுக்கு நுழைந்தவுடன் தமிழ் இசைச் சங்கம், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியில் விழா நடத்தினார்கள். இவ்விழாவில் கச்சேரி நடத்திய என்தந்தை என்னையும் அழைத்து சென்றிருந்தார். விழா கடைசியில் என் தந்தை என்னைநாகஸ்வரத்தை வாசிக்க வைத்தார். நான் வாசித்து முடித்தவுடன், விழா ஏற்பாடு செய்த பொள்ளாச்சி வெள்ளையப்பன் செட்டியார் ரூ.11 சன்மானமாக கொடுத்து 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ என்றுகூறினார். அது என் வாழ்நாளில் மறக் கவே முடியாது.

நாகஸ்வரம் தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பு வது...

இசைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தபிறகு இளைஞர்கள் நேரடியாக தொழிலுக்கு சென்றுவிடுகின்றனர். அது அடிப்படையை தெரிந்து கொள்ளத்தான் உதவும். எனவே, இசைப் பள்ளியில் படித்துமுடித்த பிறகு, அனுபவம் வாய்ந்த வித்வான்களை குருவாக ஏற்று இளைஞர்கள் கற்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் இளைஞர்கள் போதிய அனுபவத்தைப் பெற முடியும். இதனை பணம் சம்பாதிக்கும் தொழிலாகக் கருத கூடாது. இத்தொழிலை உயிர் மூச்சாக நினைத்து இளைஞர்கள் வர வேண்டும்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாதஸ்வரம் தொழிலின் தற்போதைய நிலை...

25 ஆண்டுகளுக்கு முன்பு வித்வான்கள் மீது மனப்பூர்வமாக மரியாதை வைத்திருந்தனர். ஆனால், தற்போது உதட்டளவில்தான் உள்ளது. அந்த காலத்தில் நாகஸ்வர கச்சேரிகளில் 50 சதவீதம் தொழில் தெரிந்தவர்களும் 50 சதவீதம்பாமர மக்களும் இருப்பர். ஆனால், அந்த பாமர மக்களுக்கும் நாகஸ்வர இசையின் கேள்வி ஞானம் இருந்தது. அவர்களே எந்த ராகத்தை இசைக்கிறோம் என்பதை சரியாக கூறுவார்கள். தற்போது, அப்படி கிடையாது.

கலைஞர்களுக்கு அரசு அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்கிறதா?

மத்திய, மாநில அரசு விருதுகளை வழங்குவதற்கு தலைசிறந்த கலைஞர்களை உள்ளடக்கிய கமிட்டி அமைத்து தகுதியான, திறமையான இசைக் கலைஞர்களை கண்டுபிடித்து அவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முறையை மாற்றி தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பயணம் செய்வதற்கு ஏசி பெட்டியில் ரயில் டிக்கெட், தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதியும் அரசு செய்து கொடுக்கும். விருது வழங்கிய நாளன்று மாலை, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்து ஆளுநர் கவுரவப்படுத்துவார். அந்த நடைமுறை தற்போது இல்லை. இதை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தினால் கலை புத்துயிர் பெறும்.

கடந்த காலங்களில் தமிழக அரசு சார்பில் வித்வான்களுக்கு ‘அரசவைக் கலைஞர்' என்று பட்டம் அளித்து வில்லிபுத்தூர் கோபுரம் பதிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கப்படும். அதன்பிறகு, ஓர் ஆண்டுக்கு அரசு நிகழ்ச்சிகளில் அரசவைக் கலைஞர் பட்டம் பெற்றவர்தான் வாசிப்பார். அதுபோன்று மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து அரசு விழாக்களிலும் மங்கள இசை வாசிக்கப்படுவதை கட்டாயப்படுத்த வேண்டும்.

நாகஸ்வரம் வித்வான்களின் வாழ்க் கைத் தரம் உயர அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கைகள்...

கோயில்களில் பணியாற்றும் வித்வான்களுக்கு குடும்பத்தை நடத்தும் அளவுக்குக் கூட சம்பளம் கொடுப்பதில்லை. எனவே, சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும். கோயில்களில் உள்ள நாகஸ்வரம், தவுல் உள்ளிட்ட கலைஞர்கள் காலிபணியிடங்களை தமிழக அரசு நிரப்பி வருகிறது. தற்காலிக பணியிடங்களில் உள்ள கலைஞர்களை பணி நிரந்தரம் செய்து வருகிறது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in Source Website

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளை தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தமிழகம்2-ம் இடத்திலும் உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in Source Website

சென்னை: பேரவைக்கு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் தெரிவித்தது ஜனநாயகமா என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் விலக்கு மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து,மீண்டும் மசோதாவை நிறைவேற்றுவற்கான சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது:

நீட் விலக்கு மசோதா கடந்தஆண்டு செப்.13-ம் தேதி முதல்வரால் முன்மொழியப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றி, உடனே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரிடம் இருந்து கடந்த 1-ம் தேதி ஒரு நேர்முகக் கடிதம் எனக்குவந்தது. தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தியும் வெளியானது. இதுதொடர்பாக, கடந்த 5-ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்தசட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டிமீண்டும் மசோதாவை நிறைவேற்றிஅனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

ஆளுநர் எனக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:

ஊகங்களின் அடிப்படையில்..

தமிழக சட்ட மசோதா, அதனுடன் அளிக்கப்பட்ட உயர்நிலை குழுவின் அறிக்கை மற்றும் இதரஆவணங்களை கவனமாக பரிசீலித்தேன். உயர்நிலை குழுவின் அறிக்கையே மசோதாவின் அடிப்படை என்பது தெளிவாகிறது. அந்த அறிக்கை எந்த வகையிலும் ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தஅறிக்கையானது, ‘நீட் தேர்வு நோக்கம் அற்றது. தகுதிக்கு எதிரானது. ஒப்பீட்டு அளவில் குறைந்தசெயல்திறன் கொண்ட மாணவர்களை எம்பிபிஎஸ் சேர வழிவகுக்கிறது. இத்தேர்வால் திறன் குறைந்த, சமுதாயத்தில் முன்னேறிய, பணம் படைத்தவர்கள் மருத்துவத் துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தவழிவகை செய்கிறது’ என்று ஆதாரமற்ற, மிகைப்படுத்தப்பட்ட ஊகங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுகளுக்கு மட்டுமே நீட் தேர்வு முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் 30-38 சதவீதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏழைக் குழந்தைகள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளிகளின் வருந்தத்தக்க நிலையையே காட்டுகிறது.

‘காமாலைக்கண்’ பார்வை

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது; வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரம், தனியார் பயிற்சி மையங்கள் அளிக்கும் சிறப்பு பயிற்சிகளால் மாநில பொதுத் தேர்வுகளிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாறுபடுவதை குழு கருத்தில் கொள்ளவில்லை. உயர்நிலை குழுவின் ‘காமாலைக்கண்’ கொண்ட ஒருதலைபட்ச பார்வையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

அரசியலமைப்பு சட்ட விதிகளை ஒட்டியே நீட் தேர்வு அமைந்துள்ளது என்பதை தனித்து குறிப்பிட அவசியம் இல்லை. இது சமூக நீதியை காக்கவே வழிவகை செய்கிறது. தேசிய நலனுக்காகவும், நலிந்த பிரிவினரை காக்கவும் நீட் தேர்வு அவசியம் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், நாடு முழுவதற்கும் பொதுவானதாகவும், கட்டாயமாக்கப்பட்டதுமான நீட் தேர்வுக்கு மாநிலஅரசு விலக்கு கேட்பது சரியா? இவற்றின் அடிப்படையில், இந்த சட்ட மசோதா தமிழக மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுவதால், இதை அவையின் மறு பரிசீலனைக்கு திருப்பி அனுப்புகிறேன்.

இவ்வாறு அதில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனக்கு வந்த கடிதத்தை பேரவை செயலரிடம் கொடுத்து மிக ரகசியமாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. வேறு யாருக்கும் இதுபற்றி தெரியாத நிலையில், பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பொது வெளியில் தெரிவித்து, விவாதம், விமர்சனம், போராட்டத்துக்கு வித்திட்டது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதா என்பதை உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in Source Website

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது:

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% ஹைட்ரஜன் கலந்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஹைட்ரஜன் எரிபொருள், வாகனங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் 2020ஆம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள், பேட்டரி தயாரிப்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய திட்டங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

மேலும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், உயிரிக்கழிவுகளை எரிபொருளாக்கி அதிலிருந்து உயர்தர ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமைத்துள்ளது.

சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது.

இதே போன்று தயாள்பாக் கல்விக்கழகம் தேசிய சூரியசக்தி நிறுவனமும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



Read in Source Website

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் வேகத்தில் விரிவடையும் இக்காலகட்டத்தில், உணவு, உறைவிடம் போல பாதுகாப்பான தகவல் தொடர்பு என்பது அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது.இந்தப் பின்புலத்தில், இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சியாக பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக ஜனவரி 27-ம் தேதி இஸ்ரோ நடத்திய தொழில்நுட்ப சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.

இஸ்ரோவின் தகவல் பரிமாற்ற சோதனை

குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தகவல் பரிமாற்ற சோதனையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெற்றி பெற்றுள்ளது. இஸ்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையங்களான குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள ‘செயற்கைக்கோள் பயன்பாட்டு மையம்’ (Satellite Applications Centre-SAC), ‘இயற்பியல் ஆய்வு நிறுவனம்’ (Physical Research Laboratory-PRL) ஆகியவை கூட்டாக இணைந்து இந்தச் சோதனையை செய்துள்ளன. இதில் இயற்பியல் ஆய்வு நிறுவனம், இஸ்ரோ உருவாவதற்கு முன்பே விக்ரம் சாராபாய் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து, படங்கள், இரு வழி காணொளி கருத்தரங்க (Two Way Video Call) தரவுகள் அடங்கிய தகவல் தொகுதி செயற்கைக்கோள் பயன்பாட்டு மையத்தின் ஒரு கட்டிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் இணையத்தில் தினந்தோறும் நடப்பதுதானே. இதிலென்ன சிறப்பு என நீங்கள் யோசிக்கலாம். மேலே படியுங்கள்.

குவாண்டம் தகவல் தொடர்பு

இணையத்தில் அனுப்பப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதமில்லை. ஹாக்கிங் (Hacking) எனப்படும் இணைய வழிப்பறி கொள்ளையில் ஒவ்வொரு நானோ நொடியிலும் தகவல்கள் திருடப்படுகின்றன. அதனால்நிகழும் மோசடிகளும், அசம்பாவிதங்களும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும், பொருளாதார இழப்புகளும் மிக மிக அதிகம்.

இங்கேதான் இஸ்ரோவின் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. தகவல்களை வழக்கமாக கம்பி (Wire),இழை (Fiber) வழியில் அல்லது கம்பியில்லா தொடர்பில் (Wireless) பரிமாறலாம். மூன்றாம் மனிதருக்கு புரியாத வகையில் தகவல்களை குறியீட்டாக்கம் (Encryption) செய்து அனுப்புவது வழக்கம். குறியீட்டாக்கம் செய்ய மென்பொருட்கள் உள்ளன. வங்கிகள் மின்னஞ்சல் ஆவணங்களுக்கு பாஸ்வேர்ட்பயன்படுத்துவதைப் போல குறியீட்டாக்கத்தை பலப்படுத்த சாவி (Key) பயன்படுத்தப்படுகிறது. சாவி என்பது நீண்ட எண்-எழுத்துக் கலவையாக இருக்கும். குறியீட்டாக்கம் செய்ய மட்டுமல்ல தகவலை குறிநீக்கம் (Decryption) செய்யவும் சாவி தேவை. குறி நீக்கம் செய்யப்பட்ட தகவலைத்தான் நாம் பயன்படுத்த முடியும். எப்படி பாஸ்வேர்ட், நமது மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்படுவதில்லையோ அப்படியே, இந்த சாவியும் குறியீட்டாக்கம் செய்யப்பட்ட தகவலோடு சேர்த்து அனுப்பப்படுவது இல்லை.

தகவல்களை குறியீட்டாக்கம் செய்து வழக்கமான வழியில் அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகள், சாவியை அனுப்ப மிகவும் பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு உள்ள குவாண்டம் தொழில்நுட்பமான ‘குவாண்டம் பின்னல்’ (Quantum Entanglement) என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

குவாண்டம் பின்னல்

குவாண்டம் என்பது ‘எவ்வளவு’ என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.குவாண்டம் என்றால் ஒரு பொருளின் மிகச் சிறிய அளவு என்று அர்த்தம். உதாரணமாக ஒளிக்கற்றை, ஃபோட்டான் (Photon) என்ற மிகச்சிறிய துகள்களால் ஆனது. ஆக, ஃபோட்டான் என்பது ஒளியின் ஒரு குவாண்டம் எனக் குறிப்பிடலாம். சரி. குவாண்டம் பின்னல் என்றால் என்ன?

ஒரு கார் பந்தய நிகழ்வை கற்பனைசெய்து கொள்ளுங்கள். பந்தயத்தில் பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான கார்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கின்றன. அப்படி செல்லும் கார்களில் 10-வது காரும் 50-வது காரும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. இரண்டுகார்களும் 10 கி.மீ, தூர இடைவெளியில் வெவ்வேறு வளைவுகளில் இருப்பதால்இரண்டு ஓட்டுநர்களும் ஒருவரை யொருவர் பார்க்க முடியாது. ஆனால் இரு வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்கின்றன. 10-வது கார் வேகம் குறைந்தால் 50-வது காரும் வேகம் குறைகிறது. இரண்டில் ஏதாவது ஒரு காரின் வேகம் தெரிந்தால் அதன் ஜோடி காரின் வேகத்தை கண்டுபிடித்து விடலாம். ஆச்சர்யமான ஜோடியாக இருக்கிறதே என நீங்கள் யோசிக்கிறீர்கள்.

இதேபோன்ற ஆச்சரியமான நிகழ்வு,குவாண்டம் இயக்கவியலில் (Quantum Mechanics) உண்டு. ஒளியின், ஃபோட்டான் துகள்களிலும் இப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஜோடிகள் உண்டு. ஒன்றின் தன்மை (Quantum State) மற்றொன்றின் தன்மையைப் போலிருக்கும். துகள்கள் ஒன்றையொன்று விட்டு தூரத்தில் இருந்தாலும் ஒரு துகளை அளந்தால் அதன் தொலைதூர ஜோடியை கணித்துவிடலாம். இதற்கு குவாண்டம் பின்னல் (Quantum entanglement) என்று பெயர். இந்த நிகழ்வு அப்போதைய அறிவியலின் புரிதலை மீறிய செயலாக இருந்ததால், இதை ‘தூரத்து பயமுறுத்தும் செயல்’ (Spooky action at a distance) என்று குறிப்பிட்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

டாக்டர். வி.டில்லிபாபு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி. ‘பொறியியல் புரட்சிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்)



Read in Source Website

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட், அவரின் மனைவி ஜெசிகா பெலிக்ஸ் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பெயர் வைத்ததன் பின்னணியில் இந்தியத் தொடர்பு ஒன்று உள்ளது.

2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இரண்டும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. வெற்றி பெற 156 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மார்லன் சாமுவேல்ஸ் (85 ரன்கள்), டுவைன் பிராவோ (25 ரன்கள்) தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி இருந்தனர்.

அணியை மீட்க சாமுவேல்ஸ் (85 ரன்கள்) தன்னந்தனியாக போராடி வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றாலும், அன்று வெற்றிக்கு உதவியது பிராத்வைட்டின் நான்கு இமாலய சிக்ஸர்கள் தான். கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார் பிராத்வைட். மைதானத்தில் வானவேடிக்கையாக அமைந்த அந்த 4 சிக்ஸர்கள் உதவியால் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி.

அதன்பிறகு பிராத்வைட் பெயர் உச்சரிக்கப்பட்டாலே அந்த நான்கு சிக்ஸர்களைதான் கிரிக்கெட் ரசிகர்களை நினைவுபடுத்துவார்கள். அந்த அளவுக்கு அன்றைய ஆட்டத்துக்கு ரீச் இருந்தது. அந்த சரித்திர வெற்றியை நினைவுகூரும் விதமாகவே தனது மகளுக்கு "ஈடன் ரோஸ்" என்று பெயர் வைத்துள்ளார் பிராத்வைட். மேலும், குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஈடன் ரோஸ் பிராத்வைட்! பெயரை நினைவில் வைத்து கொள்ளுங்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



Read in Source Website

வெளிநாட்டவர்களில் 2017 இல் 817 பேருக்கும், 2018 இல் 628 பேருக்கும், 2019 இல் 987 பேருக்கும், 2020 இல் 639 பேருக்கும், 2021 இல் 1,773 பேருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

4,844 foreigners granted Indian citizenship in 5 years, 1,773 in 2021 alone: Govt: கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில், அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு இந்திய குடியுரிமைகளை வழங்கியுள்ளது. இந்த தகவல்கள் சபைக்கு தெரிவிக்கப்பட்டது.

தரவுகளின்படி, வெளிநாட்டவர்களில் 2017 இல் 817 பேருக்கும், 2018 இல் 628 பேருக்கும், 2019 இல் 987 பேருக்கும், 2020 இல் 639 பேருக்கும், 2021 இல் 1,773 பேருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

“இந்தியாவின் குடியுரிமை என்பது குடியுரிமைச் சட்டம், 1955 இன் விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6 இன் கீழ் இயற்கைமயமாக்கல் மூலம் அல்லது பிரிவு 7 இன் கீழ் பிரதேசத்தை இணைப்பதன் வழியாக, தகுதியான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை பிரிவு 5 இன் கீழ் பதிவு செய்வதன் மூலம், குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்திய குடியுரிமை பெறுவதற்கான காரணங்கள் குடியுரிமைச் சட்டம், 1955 இல் உள்ள விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு விண்ணப்பதாரரின் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மாறுபடும்.”என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான (சிஏஏ) விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க தரவு, 2018 முதல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் கணிசமான பெரும்பான்மையினர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களான இந்து, சீக்கியர், ஜெயின், கிறிஸ்தவம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வழங்கிய தரவுகளின்படி, மூன்று நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், ஜெயின் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 8,244 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர், அதில் 3,117 பேர் டிசம்பர் 2021 வரையில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். சுவாரஸ்யமாக, 2018 மற்றும் 2020 க்கு இடையில் , இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 2,254 ஆக உள்ளது. 2021க்கான ஒட்டுமொத்த தரவு கிடைக்கவில்லை.

“2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், ஜெயின் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8244 ஆகும். 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கியர், ஜெயின், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமைகளின் எண்ணிக்கை 3117” என்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் ஹோம் ராய் தெரிவித்தார்.

CAA டிசம்பர் 12, 2019 அன்று பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது, ஆனால் அதன் விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, ஜெயின், சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ மற்றும் புத்த சமூகங்களைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தின் பின்னணியில் உள்ள, வெளிப்படையாக முஸ்லிம்களை ஒதுக்கிய, வகுப்புவாத சிக்கலைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிடம் அகதிகள் பற்றிய கொள்கை இல்லை.

அகதிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் வெளிநாட்டினர் சட்டம், 1946, வெளிநாட்டினர் பதிவு சட்டம், 1939, பாஸ்போர்ட் (இந்தியாவில் நுழைதல்) சட்டம், 1920 மற்றும் குடியுரிமைச் சட்டம், 1955 ஆகியவற்றில் உள்ள விதிகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள்,” என்று அமைச்சர் தனது பதில் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராய், 2016 மற்றும் 2020 க்கு இடையில், 4,177 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக சபைக்கு தெரிவித்தார். இவற்றில் 628 குடியுரிமைகள் 2018 ஆம் ஆண்டிலும் 987 குடியுரிமைகள் 2019 ஆம் ஆண்டிலும் 639 குடியுரிமைகள் 2020 ஆம் ஆண்டிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வரை இந்தியக் குடியுரிமைக்காக அரசாங்கத்திடம் 10,635 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் ராய் சபையில் தெரிவித்தார். இதில் பாகிஸ்தானில் இருந்து 7,306, ஆப்கானிஸ்தானில் இருந்து 1,152 மற்றும் வங்கதேசத்தில் இருந்து 161 நிலுவையில் உள்ளன. நாடற்றவர்களிடமிருந்து மொத்தம் 428 விண்ணப்பங்கள் அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளன.

2019 இல் CAA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு ஊடகப் பேட்டிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 முஸ்லிம்களுக்கு 2014 முதல் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறினார்.



Read in Source Website

தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு. தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கடைசி பாலூட்டி இதுவாகும்.

newest mammal White Cheeked Macaque: ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா ஆராய்ச்சியாளர்கள் நம்முடைய நாட்டில் வெண்முக மந்தி என்ற புதிய பாலூட்டி வகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

2015ம் ஆண்டு சீனாவில் இத்தகைய குரங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போதும் இந்தியாவில் இந்த குரங்குகளின் இருப்பை யாரும் உறுதி செய்யவில்லை. வெகு சமீபத்தில் தான் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அஞ்சாவ் என்ற பகுதியில் இந்த குரங்குகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். சீனாவில் இந்த குரங்குகள் தென்கிழக்கு திபெத்திய பகுதியான மொடோக் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து வெறும் 200 கி.மீ தொலைவில் இந்த குரங்குகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு அனிமல் ஜீன் என்ற சர்வதேச இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஒரு விபத்து தான். நாங்கள் வெண்முக மந்தியை தேடி ஆராய்ச்சியை நடத்தவில்லை. இமய மலையில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யவே எங்களுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இமாலய பகுதியின் பல்லுயிர் தன்மை மற்றும் இந்த பகுதியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வந்தோம் என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் முகேஷ் தாக்கூர் கூறினார். ZSI இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் கைலாஷ் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை எழுதிய மூத்த ஆராய்ச்சியாளர்களில் முகேஷூம் ஒருவர்

கிழக்கு இமாலயாவில் சிவப்பு நிற பாண்டா மற்றும் அருணாச்சல மந்திகளை நாங்கள் ட்ராக் செய்து கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய மாணவர்களில் ஒருவரான அவிஜித் கோஷ் அருணாச்சல மந்திகளை ட்ராக் செய்து கொண்டிருந்தார். ரோமம் மற்றும் கழிவு மாதிரிகளை சேகரித்து எங்களுடைய ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்டோம். டி.என்.ஏ. மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வின் போது அது அருணாச்சல மந்தி இல்லை ஆனால் வெண்முக மந்தி என்பது கண்டறியப்பட்டது என்று முகேஷ் கூறினார்.

இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளித்த நிலையில் மீண்டும் நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம். ஆனால் அப்போதும் அது வெண்முக மந்தியின் டி.என்.ஏ. தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது தான் இந்தியாவில் இத்தகைய குரங்குகள் இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தோம் என்றும் அவர் கூறினார்.

இது வெண்முக மந்திதானா என்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இந்த ஆராய்ச்சி குழு. கேமரா ட்ராப்களை பொறுத்தியுள்ளனர். இறுதியில் அஞ்சாவ் பகுதியில் உள்ள வேட்டைப் பழங்குடிகளில் ஒருவர் காட்டில் இருந்து பிடித்து வந்த வெண்முக மந்தியின் குட்டியையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நாட்களில் பெரிய வகை உயிரினங்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாகவே அரங்கேறி வருகிறது. டாக்ஸானோமி ஆராய்ச்சியாளர்களாக நாங்கள் சிறிய வகை உயிரினங்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பூச்சி இனங்களை மட்டுமே கண்டறிந்து ஆவணப்படுத்துகிறோம். ஆனால் இது மிகவும் அரிதானது என்றும் அவர் கூறினார்.

இந்த பாலூட்டியின் கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்தியாவில் உள்ள பாலூட்டிகளின் எண்ணிக்கையானது 437-ல் இருந்து 438 ஆக உயர்ந்துள்ளது.

தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு. தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கடைசி பாலூட்டி இதுவாகும்.

அருணாச்சல மந்திகள் மற்றும் வெண்முக மந்திகள் கிழக்கு இமாலயாவில் ஒரே பல்லுயிர் மண்டலத்தின் கீழ் வசித்து வருகின்றன.

கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் இந்த மந்திகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் கண்டுபிடித்துவிட இயலும். சீனாவுக்கு மிக அருகில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் வெண்முக மந்தி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பூட்டானிலும் இவ்வகை குரங்குகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த உயிரினம் வனவிலங்கு பட்டியலோடு சேர்க்கப்படுவதோடு, இந்திய வனபாதுகாப்பு சட்டத்தின் கீழும் இணைக்கப்படும். இந்த உயிரினத்தின் இருப்பே தெரியவில்லை என்பதால் இது பட்டியலில் இணைக்கப்படவில்லை என்று கூறிய தாக்கூர் மேலும், இந்த மந்திகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன மற்றும் உடனடி கவனமும் பாதுகாப்பும் தேவை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உயிரினங்களைக் கண்காணிப்பது அவசியம் என்று ZSI க்கு ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



Read in Source Website

பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது? என்ன கவலைகளை ஏற்படுத்துகிறது?

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் (I&B) தயாரிக்கப்பட்டு, பத்திரிகை தகவல் பணியகத்தால் வெளியிடப்பட்ட புதிய கொள்கையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. தற்போது நாட்டில் 2,457 அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

முதன்முறையாக, பத்திரிக்கையாளர் அங்கீகாரத்தை இழக்க நேரிடம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிப்பது, குற்றத்தை துாண்டுதல், நீதிமன்ற அவமதிப்பு, அவதுாறு செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவரது மத்திய அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 இல் வெளியான முந்தைய கொள்கையில், அரசு அங்கீகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், அது திரும்பப் பெறப்படும்/ இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய கொள்கை ஏற்படும் கவலைகள்?

அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரிய வணிகர்கள், கார்ப்பரேட் குழுக்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த தவறுகளை அம்பலப்படுத்துவது ஒரு பத்திரிகையாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். அச்சமயத்தில், புதிய கொள்கையை பயன்படுத்தி அங்கீகாரத்தை பறித்துவிடுவேன் என மிரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு பிடிக்காத பிரச்சினைகள் மற்றும் கொள்கை முடிவுகளை அடிக்கடி தெரிவிக்கின்றனர். புதிய கொள்கையின்படி, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்குக்கு கேடு விளைவிப்பது, குற்றத்தை துாண்டுதல், நீதிமன்ற அவமதிப்பு, அவதுாறு செயல்களில் ஈடுபட்டாலும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூறப்படும் நிலையில், சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரிக்கையில், இதில் ஏதேனும் ஒன்றை மீறிவதற்கான வாய்ப்பு கட்டாயம் ஏற்படலாம் என கூறுகின்றனர்.

அரசு அங்கீகாரத்தின் பலன் என்ன?

இந்த அங்கீகாரம் பத்திரிகையாளர்களுக்கு “எந்தவொரு உத்தியோகபூர்வ அல்லது சிறப்பு அந்தஸ்தை வழங்காது. ஆனால், professional working journalist என்ற அங்கீகாரத்தை வழங்குகிறது.

இந்த அங்கீகாரம் இருந்தால் மூன்று பலன்கள் உள்ளன. ஒன்று, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பி.க்கள் அல்லது பிரமுகர்கள் கலந்து கொள்ளும் சில நிகழ்வுகளில், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாவது, இந்த அங்கீகார அட்டை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் தனது ஆதாரம் குறித்து தகவல் பாதுகாத்திட முடியும். உதாரணமாக, மத்திய அமைச்சர்கள் அலுவலகத்திற்கு செல்கையில், நுழைவு வாசலில் யாரை சந்திக்கப்போகீறிர்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் அலுவலகங்களுக்குள் இந்த கார்ட் வைத்திருந்தால் தாராளமாக செல்லலாம்.

மூன்றாவதாக, மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் சேர்க்கப்படுதல் மற்றும் ரயில்வே டிக்கெட்டுகளில் சில சலுகைகள் போன்ற சில நன்மைகளை பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு கிடைக்கிறது.

இதற்கு முன்னரும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதா?

பல அரசாங்கங்கள் முயற்சி செய்தன. ஆனால் வழக்கமாக திரும்பப் பெற வேண்டியிருந்தாக இருக்கும்.

2018 ஆம் ஆண்டில், NDA அரசாங்கம் போலிச் செய்தி வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது, பத்திரிகையாளர் போலிச் செய்திகளைப் பரப்பியதாக ஊடக ஒழுங்குமுறை அமைப்புகள் தீர்ப்பளித்தால், ஒரு பத்திரிகையாளரின் அங்கீகாரத்தை இடைநிறுத்தலாம் மற்றும் நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தெரிவித்தது. ஆனால், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் அரசாங்கம் மாநில அதிகாரிகளை “மோசமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில்” இருந்து பாதுகாக்கும் மசோதாவைக் கொண்டு வந்தது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.ஆனால், அந்த மசோதாவும் வாபஸ் பெறப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், UPA ஆட்சியின் போது, ​​காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன், மக்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்தார். அதாவது, வெளிநாடு அல்லது உள் மூலங்களிலிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது சம்பவத்தை நிறுத்தவோ அல்லது அதனை இடைநிறுத்தும் அதிகாரம் கொண்ட ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க முன்மொழிந்தது. இறுதியில் நடராஜன் மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை. அவரது கட்சியும் ஆதரவு அளிக்கவில்லை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஊழல் குற்றச்சாட்டுகளால் உலுக்கிய அவரது அரசாங்கம், 1988 இல் ஒரு அவதூறு மசோதாவை முன்மொழிந்து. அதாவது, எந்தவொரு தனி நபரின் குற்றங்களையும், பொய்யாக கருதப்படும் குற்றங்களையும் பொதுவெளியில் வெளியிடு அனுமதி வழங்குகிறது. இருப்பினும், இறுதியாக அந்த முன்மொழிவு வாபஸ் பெறப்பட்டது.



Read in Source Website

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், 2022-23-க்கான மத்திய பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் கால குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்த்து, அடுத்த கால்நூற்றாண்டுக்கான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க அவர் முனைப்பு காட்டியிருக்கிறார். அதே நேரத்தில், அவரது திட்டமிடலும், இலக்கும் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
 இந்தியாவைப் பொருத்தவரை, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கி அரசுகளால் அறிவிக்கப்படும் திட்டங்களும், கொள்கை முடிவுகளும் குறித்த காலத்தில் செவ்வனே நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்தியா கால் நூற்றாண்டுக்கு முன்பே உலகின் முன்னணி வளர்ச்சி அடைந்த நாடாக மாறியிருக்கும். பெரும்பாலான அரசின் திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டும்கூட, முறையாக நிறைவேற்றப்படுவதில்லை.
 அடுத்த நிதியாண்டுக்கான தனது 90 நிமிஷ பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் 16 முறை "வளர்ச்சி' என்கிற வார்த்தையை உச்சரித்திருக்கிறார். வளர்ச்சிக்காக அரசின் முதலீட்டு செலவினங்களை மிக அதிக அளவில் உயர்த்துவதுதான் அவர் முன்னெடுக்கும் வழிமுறை.
 மூலதன திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு என்பது முதன்மை பெறும் அளவுக்கு, அவை குறித்த நடைமுறைத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. எந்தவொரு திட்டமும் மத்திய - மாநில அரசு நிர்வாகத்தால் நிறைவேற்றப்படும்போது பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பது நிதியமைச்சருக்குத் தெரியாததல்ல. அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும்போது, அவை நடுவழியில் கைவிடப்படுவது விதிவிலக்கு என்பதைவிட, வழக்கம் என்பதுதான் உண்மை.
 அரசு புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலேகூட, 480 திட்டங்கள் அறிவிப்பின் போதான திட்ட மதிப்பு அதிகரித்ததால் தாமதப்படுகின்றன. திட்ட மதிப்பீட்டைவிட அதிகரித்திருக்கும் திருத்திய திட்ட மதிப்பு ரூ.4.46 லட்சம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.சில திட்டங்கள் 300 மாதங்களாகியும், அதாவது கால் நூற்றாண்டாகியும், நிறைவேறாமல் கிடப்பில் இருக்கின்றன.
 பிரதமரின் கதி சக்தி (விரைவு சக்தி) திட்டத்தின் அடிப்படையில், புதிய பல முதலீட்டுத் திட்டங்களுக்கு பட்ஜெட் முன்னுரிமை வழங்குகிறது. இதில் தனியார் - அரசு கூட்டு முயற்சியில் சரக்குகள் கையாளும் பேட்டைகள், வேளாண் பகுதிகள், பாரத் நெட் இணைய இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை அடங்கும். இதற்கு முந்தைய தனியார் - அரசு கூட்டு முயற்சி திட்டங்கள் பல அரைகுறையாக நின்றுகொண்டிருக்கின்றன. தனியார் - அரசு கூட்டு முயற்சி குறித்த 2015 கேல்கர் குழு அறிக்கை வசதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
 நிதி ஒதுக்கீடு மிக முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், ஒதுக்கீடுகள் முறையாகவும், குறிப்பிட்ட காலத்திலும் செலவிடப்பட்டு திட்டங்கள் நிறைவேறுகின்றனவா என்பதுதான் அதைவிட முக்கியம். மத்திய அரசும், மாநில அரசுகளும் 2021- 2022 நிதியாண்டுகளில் சுமார் ரூ.5.5 லட்சம் கோடி அளவிலான ஒதுக்கீட்டை செலவழிக்காமல் இந்திய ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கின்றன. நிதியமைச்சரின் தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களும் இதுபோலத் தேங்கிவிடாது என்பதை எப்படி, யார் உறுதிப்படுத்துவது?
 ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்திருப்பதற்கு பொருள்களின் விலைவாசி உயர்வு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. உற்பத்தி அதிகரிப்பாலோ, பொருளாதார இயக்கத்தின் அதிகரிப்பாலோ ஏற்பட்டிருப்பதல்ல ஜிஎஸ்டி வரிவசூல் அதிகரிப்பு. அதனால், அரசு திட்டமிடும் மிகப் பெரிய முதலீட்டுச் செலவினங்களுக்கான வருவாயை அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம்தான் பெற முடியும்.
 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்கிற அரசின் கொள்கை முடிவு, பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்த நரசிம்ம ராவ் அரசால் எடுக்கப்படவில்லை. தனியார் துறை இயங்குவதற்கு அனுமதி அளித்து, சந்தைப் போட்டியை உருவாக்க முற்பட்டதே தவிர, அரசுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு 1996-இல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயம் முன்மொழியப்பட்டது. கால் நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், அதுகுறித்து விவாதிப்பதில் இனி அர்த்தமில்லை.
 அரசு எதிர்பார்ப்பதுபோல, அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெறவில்லை. 2020-21-இல் நிர்ணயித்த இலக்கு ரூ.1.75 லட்சம் கோடி. 2021-22-இல் திருத்தப்பட்ட இலக்கு ரூ.78,000 கோடி. அதையும் எட்ட முடியாததால், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதுவே ரூ.68,000 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
 இரண்டு ஆண்டுகள் கடந்தும்கூட, பெரிய அளவில் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையாகவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராததால், கேட்ட விலைக்கு அது கைகழுவப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பாரத் பெட்ரோலியம், கன்டெய்னர் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இன்னும் கேட்பு இல்லாததால் விற்கப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில், அறிவிக்கப்பட்ட இரண்டு வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் தனியார்மயம் குறித்து, இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் எதுவுமே குறிப்பிடவில்லை.
 இலக்கு நிர்ணயிப்பதும், அறிவிப்பதும், ஒதுக்கீடு செய்வதும் எல்லாமே சரி, எப்படி விரைந்து குறித்த காலத்தில் நிறைவேற்றுகிறோம் என்பதில்தான் அரசின் வெற்றி இருக்கிறது. இதையும் நிதியமைச்சர் கவனத்தில் கொள்வாராக!



Read in Source Website

 பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர். ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க வைத்து விடுகிறது.
 புது தில்லியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் உதவிகொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். அக்கொலையைச் செய்த மூன்று சிறார்களைப் பிடித்து, அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய புலன்விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
 "புஷ்பா' என்ற திரைப்படத்தைப் பார்த்த அந்த மூன்று சிறார்கள் வித்தியாசமான முறையில் சிந்தித்தனர். யாரையாவது கொலை செய்து, அந்த கொலை சம்பவத்தை விடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தால், உடனடியாகப் பிரபலமாகி விடலாம் என திட்டமிட்டனர்.
 சாலையோரக் கடை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்துவந்த ஒருவரை அச்சிறார்கள் கத்தியால் குத்தி, படுகாயங்களை ஏற்படுத்தினர். அவர்களில் ஒருவர் இச்சம்பவத்தை கைபேசியில் விடியோ காட்சியாக பதிவு செய்துள்ளார் படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்தார். புலன்விசாரணையின் பொழுது அச்சிறார்களிடம் இருந்து கைப்பற்றிய கைபேசியில் கொலை சம்பவ விடியோ காட்சிகளின் பதிவுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 பதினெட்டு வயது பூர்த்தியடையாத அச்சிறார்கள் மூவரும் தற்பொழுது புது தில்லியில் உள்ள "கூர்நோக்கு இல்லம்' ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அச்சிறார்கள் செய்த கொலை வழக்கின் முடிவு என்னவாகும்? அச்சிறார்கள் சீர்திருத்தப்பட்டு, நல்ல குடிமகன்களாக சமுதாயத்தில் இணைந்து விடுவார்களா? கொடுங் குற்றச்செயல்களில் சிறார்களின் ஈடுபாடு நம் நாட்டில் எப்படி இருக்கிறது?
 வளரும் பருவத்திலுள்ள சிறார்கள் சிறு குறும்புகள் செய்வதும், பெற்றோர்களும், உறவினர்களும், ஆசிரியர்களும் அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்துவதும் சமுதாயத்தில் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள். சிறு குறும்புகளைச் செய்யாத சிறார்களை மந்த புத்தி உடையவர்கள் என்று கூறுவதும் உண்டு.
 ஆனால், இன்றைய சிறார்கள் பலரிடம் சிறு குறும்புகள் வெளிப்படுவதில்லை. மாறாக கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற கொடுங் குற்றச்செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர்.
 நம் நாட்டில் கரோனா பெருந்தொற்றின் முதல் அலையைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கிக் கிடந்த 2020-ஆம் ஆண்டில் 29,768 குற்ற வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 35,352 சிறார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
 அவ்வறிக்கையின்படி, 842 கொலை வழக்குகள், 981 கொலை முயற்சி வழக்குகள், 9,287 திருட்டு, களவு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள், 937 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரம், சிறார்கள் திசைமாறிப் பயணிக்கின்றார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுங்குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டு சிறார்களின் பங்களிப்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
 தமிழ்நாட்டில் 2016 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் முறையே 48,53,75,92,104 கொலை வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரம் இரண்டு முக்கிய கருத்துகளை வெளிப்படுத்துகிறது.
 கடந்த ஐந்தாண்டுகளில் சிறார்கள் நிகழ்த்திய கொலை வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளதும், ஆண்டுதோறும் சிறார்கள் நிகழ்த்திய கொலை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான நிலை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழவில்லை.
 தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டைக்காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் குறைவான கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சிறார்கள் செய்த கொலைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைக்காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.
 சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்க சட்டம் இடமளிக்காத நிலையில், 2000-ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களை சிறார்கள் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதும், நம் நாட்டில் சிறார்கள் நிகழ்த்திய விபத்துகளில் 22% விபத்துகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் 2019, 2020-ஆம் ஆண்டுகளில் "சிறார் குற்றங்கள்' அதிகமாக நிகழ்ந்த பெருநகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பெற்றுள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரே பெருநகரமாக சென்னை விளங்குகிறது எனவும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
 கல்வி, விழிப்புணர்வு, வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் முன்னேறிய மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில் "சிறார் குற்றங்கள்' தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையைக் காண முடிகிறது.
 தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள் மற்றும் சட்டத்திற்கு முரணான சிறார்களின் செயல்பாடுகள் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில முக்கிய கருத்துகள் தெரியவந்துள்ளன.
 குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களில் பலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும், கைபேசி திருட்டில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும், கையும் களவுமாகப் பிடிபடும் சிறார்கள் மீது பல நேரங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும், அந்தந்த பகுதியிலுள்ள முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு, அவர்களின் வழிகாட்டுதலின்படி கொடுங் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுகின்ற சூழல் நிலவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 16 முதல் 18 வயது உடையவர்கள். இந்த வயதுடைய சிறார்கள் கொலை, வழிப்பறி உள்ளிட்ட கொடுங் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், "இளைஞர் நீதிக் குழுமம்' என்ற அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே, அச்சிறார்கள் மீதான குற்றத்தை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரணை நடத்த முடியும் என இளைஞர் நீதிச் சட்டம் கூறுகிறது.
 சிறார் குற்றங்கள் தொடர்பான ஆய்வில், ஓரிரு குற்றங்கள் மட்டுமே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரணை நடத்த இளைஞர் நீதிக் குழுமம் அனுமதி வழங்குகிறது. பெரும்பாலான சிறார் குற்றங்களை இளைஞர் நீதிக் குழுமமே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
 தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளும் இளைஞர் நீதிக் குழுமம், மிகக் குறைவான எண்ணிக்கையிலான சிறார்களை சிறப்பு இல்லத்திற்கு அனுப்பவும், ஏனைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கவும் ஆணை வழங்குகிறது.
 கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆடு திருடிய சிறார்களைப் பிடித்த திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்த இரண்டு சிறார்கள் ஒன்றரை மாதத்திற்குள் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டனர். அச்சிறார்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மனம் திருந்திவிட்டார்களா என்பது புதிராகவே உள்ளது.
 தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் புரிந்ததற்காக ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மூன்று ஆயிரத்திற்கும் சற்று அதிகமான சிறார்கள் காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர். கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைக்கப்படும் அச்சிறார்களில் பலர் ஓரிரு மாதங்களில் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் பொறுப்பில் ஒப்படைக்கப் படுகின்றனர்.
 கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே வந்த சிறார்கள் சமுதாயத்தில் எப்படி வாழ்கின்றனர்?
 ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ரெளடித்தனம் செய்பவர்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு ரெளடிக்கும் "ரெளடி ஷூட்' எனப்படும் போக்கிரி சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
 வடசென்னை பகுதியில் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு, காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வரும் ரெளடிகளில் 25-க்கும் மேற்பட்ட ரெளடிகள் சிறார் குற்றங்களில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் என்பது கள ஆய்வில் தெரிய வருகிறது.
 குற்றச் செயலில் ஈடுபடும் சிறார்களை சிறைகளில் அடைத்து வைக்காமல், கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்கவைத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, சமுதாயத்தில் இணைந்து வாழ வழி செய்ய வேண்டும் என்பதே இளைஞர் நீதிச் சட்டத்தின் நோக்கமாகும்.
 இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. அதன் விளைவுதான் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருந்த சிறார்கள் காலப்போக்கில் ரெளடிகளாக உருவெடுக்கின்றனர்.
 தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சமூக பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
 அதிகரித்து வரும் சிறார் குற்றங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று புதிய கூர்நோக்கு இல்லங்கள் அமைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி, சமூக பாதுகாப்புத் துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கருத்துரு நிலுவையில் இருந்து வருகிறது.
 அரசு துறையின் கீழ் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களின் செயல்பாடுகளை மேன்மைபடுத்துவதும், தேவைக்கேற்ப புதிய கூர்நோக்கு இல்லங்கள் அமைப்பதும், சிறார்களை வசியப்படுத்தும் போதைப் பொருள்களின் விற்பனையைத் தடை செய்வதும் சமுதாயத்தில் நிகழும் சிறார் குற்றங்களைக் குறைக்க பெரிதும் துணை புரியும்.
 
 கட்டுரையாளர்:
 காவல்துறை அதிகாரி (ஓய்வு).
 



Read in Source Website

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில், கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கின. ஜூன் 2022 வரையில் மாவட்ட எல்லைகளைத் திருத்தியமைக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்டது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்பு, முதன்முறையாக ஜனவரி 1, 2020 தொடங்கி மார்ச் 31, 2020 வரையில் மாவட்ட மறுவரையறைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் கால அளவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னால், மாவட்ட மறுவரையறைகளை நிறுத்திவைப்பது ஒரு கட்டாய விதிமுறையாகும். ஆனால், கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இன்னமும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை.

கடந்த 2011-ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா முழுவதும் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன. தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கையில் மேலும் 100 கூடியிருக்கிறது. இந்த முறை நடக்கவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளோடு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டது என்றாலும், சில மாநிலங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான உத்தேசச் செலவு ரூ.8,700 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இது அதிக செலவைக் கோருகிற திட்டமாக இருந்தாலும், இந்தியாவின் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் தெளிவான தரவுகளைத் தொகுப்பதற்கான ஒரே வழிமுறையாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பே இருந்துவருகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகிற இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள், இந்தியாவுக்கு வெளியிலுள்ள மக்கள்தொகையியலர்களாலும்கூட தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடற்ற வகையில் பல்கிப் பெருகும் இந்திய மக்கள்தொகை எப்போதும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்துவருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தபோதும், குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பலனும் இல்லை.

உலகில் சராசரியாக ஆறு நபர்களில் ஒருவர் இந்தியர் என்ற மதிப்பீடு, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள பெரும் பொறுப்பை உணர்த்துகிறது. அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பதை மனிதவளமாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையும் நிலவுகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மதரீதியான சாயங்களும்கூட பூசப்படுகின்றன.

மக்கள்தொகையில் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் விகிதாச்சாரம் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளும் உண்டு. மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சரியான ஒரு பதிலைக் கொடுக்க முடியும். பெருந்தொற்றுக் காலத்தில் மக்களை அணுகித் தகவல்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்தக் கணக்கெடுப்பை இணையவழியில் மேற்கொள்வது பற்றியும்கூடப் பரிசீலிக்கலாம்.



Read in Source Website

காவிரிப் படுகை இந்த ஆண்டும் வானம் பொழிந்து விளைந்துள்ளது. விளைந்த நெல்லை நுகர்பொருள் வாணிபக் கழகக் கொள்முதல் மையத்தில் விற்கலாம். அங்கே சிப்பத்துக்கு முப்பது ரூபாய் கொடுத்துக் காவிரி நெல்லை விவசாயிகள் செல்லுபடியாக்க வேண்டும். முப்பது என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிரக் குறையாது.

புதிய சொற்களைச் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. இருந்தாலும், விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாகப் பணம் பெறுவதால் இந்த வகைக் கொள்முதலுக்கு ‘வல்முதல்’ என்பது பொருந்தும்போல் தெரிகிறது. நெல்வளத்தோடு சொல்வளமும் பெருகினால் அதை வேண்டாம் என்றா சொல்வோம்?

அமர வசனம்

திரைப்பட வசனங்களில் சில அமரத்துவம் வாய்ந்தவை. எப்போதோ பேசிய வசனம் என்றாலும் இப்போதும் கச்சிதமாகப் பொருந்திக்கொள்ளும். அல்லது, மனித குலத்தின் வரலாறு நின்ற இடத்திலேதான் நிற்கிறது என்பதாகக்கூட இருக்கலாம். துரையே என்றாலும் ஜாக்சனைச் சற்று கீழேவைத்து வீரபாண்டியக் கட்டபொம்மன், “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் தர வேண்டும் வரி?” என்று கேட்பார். அது காலனிய காலம். ஜனநாயகக் குடிமக்கள் அதிகார மையங்களைப் பார்த்து அப்படிப் பேச முடியுமா? வெட்டாற்றங்கரை வேங்கட கவிபோல், “இது தகுமோ? இது முறையோ, தருமம்தானோ?” என்று வேண்டுமானால் இறைஞ்சலாம்.

இப்போது நில வரியாகச் சொல்லத்தக்கது எதுவும் இல்லை. ஆனால், நெல் விற்கும்போது நாற்பது கிலோ சிப்பத்துக்கு முப்பது ரூபாய் வீதம் ஏக்கருக்கு ரூ.1,350 வரை கொள்முதல் நிலையத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். சிப்பத்துக்கு விற்றுமுதல் ரூ.806 என்றால், உற்பத்தி வரி இப்போது வரை 3.72% என்று வைத்துக்கொள்ள வேண்டும். ‘காவிரி நெல்லுக்குக் கலால் வரியா?’ என்று அசரக் கூடாது. நாற்பது வேலி கிராமமானால் அது ரூபாய் மூன்று லட்சத்து அறுபதினாயிரம் கொடுக்கக்கூடும். காவிரிக் கரை கிராமங்கள் ஒன்றுவிடாமல் விளைந்ததில் ஒரு கிலோ நெல் விடுபடாமல் இவ்வாறு கொடுக்கும். அறுபது வேலி, நூறு வேலிக் கிராமங்கள் என்றால் அததற்குத் தக்க. பழைய மதிப்பில் காவிரிப் படுகை பதின்மூன்றேகால் லட்சம் ஏக்கர். கணக்குக்காக அல்ல, உங்களுக்குப் பிடிபடட்டும் என்பதற்காக.

சொல்லின் மூலப் பொருளில் சொல்வதானால் இதுதான் புரட்சி. கீழ் மேலாகும் வட்டச் சுழற்சி. நிலவரி பூஜ்யம் என்பதிலிருந்து விளையும் ஒவ்வொரு கிலோவுக்கும் எழுபத்தைந்து பைசா என்ற உச்சிக்கு வருவது. ஒரு வகை பசுமைப் புரட்சி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! விளைச்சல் அதிகம் உற்பத்தியும் அதிகம் என்றால், அந்த வீதத்துக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய பணமும் தன்னால் அதிகரிக்கும். இது அரசுக்குப் போகாது என்பது தெரிந்ததுதான். அங்கேயும் போகாமல் விவசாயிகளிடமும் தங்காமல் இடையில் எங்கேயோ சென்றுவிடும். இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு இழப்பு வரக் கூடாது என்பதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தோற்றுவிடுகிறது.

பொறுப்பு முகவருக்கா, முதலாளிக்கா?

இந்திய உணவுக் கழகத்தின் முகவராகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. தன் முகவரோ ஊழியர்களோ தவறுசெய்தால், மேலிருக்கும் முதலாளி சாதாரணமாக அதற்குப் பொறுப்பு. தான் கொடுத்த அதிகாரத்தைத் தாண்டி அவர்கள் தாங்களாகவே செய்யும் தவறுகள் இவை என்று இந்திய உணவுக் கழகம் சமாதானம் சொல்லுமோ?

மாவட்ட நிர்வாகமும், ‘தவறு நடந்தால் தெரிவியுங்கள்’ என்று கைபேசி எண் ஒன்றைத் தரும். அதாவது, நடக்கிறது என்பதை விவசாயிகள் ருசுப்பிக்க வேண்டும். சென்ற அக்டோபரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கொள்முதல் நிலையங்களில் நிகழும் முறைகேடுகளை விரிவாகவே எழுதியது. மாவட்ட ஆட்சியர்களின் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகளும் குமுறுகிறார்கள். இந்தச் சூழலில், நடக்கிறது என்று விவசாயிகள் ருசுப்பிப்பதற்குப் பதிலாக நடக்கவில்லை என்று நிர்வாகம்தான் ருசுப்பிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் அளவுக்கு இந்திய நியாயவியல் முன்னேறியிருக்கிறதா என்று விவசாயிகளுக்குத் தெரியாது.

சிப்பத்துக்கு மூன்றேகால் ரூபாய் பணியாளர்களுக்கு ஊதியம். முதிர்ச்சியுள்ள நிர்வாகப் போக்கில் அதைப் பத்து ரூபாயாக உயர்த்தியது அரசாங்கம். கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காது என்று இப்போது எதிர்பார்ப்பது நியாயமே. ஆனாலும், சிப்பத்துக்கு முப்பது ரூபாய் தொடர்கிறது. ‘‘கொடுக்காமல் ஒன்றும் நடக்காது” என்றார் ஒரு விவசாயி. “இப்போதுமா நடக்கிறது?” என்ற கேள்விக்குப் பதிலாக இதைச் சொல்லவில்லை. நிர்வாகத்துக்கும் குடிமக்களுக்கும் வாய்த்த உறவை வாழ்ந்து கழித்ததன் தத்துவமாக அது தொனித்தது.

விவசாயிகளைச் சிறுமைப்படுத்தலாமா?

சட்டம், நியாயம், அரசுக்கு விசுவாசம், விவசாயிகளுக்கு இழப்பு, தனக்கு முறையற்ற ஆதாயம் - இந்தச் சாதாரணங்களைத் தள்ளுங்கள். விவசாயிகள் ஏழ்மைப்பட்டார்கள், அவர்கள் சிறுமையுமா பட வேண்டும்? ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தன்னாட்சிப் பெருமை கொண்டவை நம் கிராமங்கள். அவை கூனிக்குறுக வேண்டுமா? இன்னொன்றும் சொல்லலாம். கையாள்வது நெல் என்பதை மறக்கக் கூடாது. அதற்குப் பொருள் மதிப்பைவிட மரபால் வரும் மதிப்பு அதிகம்.

இறந்தவர் காடு ஏகும் முன் படியில் நெல்லை நிரப்பி, அதில் நல்ல விளக்கு வைத்த நிறைநாழியை அவர் கையில் கொடுத்து வீட்டுக்குள் வாங்கிக்கொள்கிறார்கள். அளந்து கொடுத்ததிலிருந்து நான்கு ஐந்து நெல்லை அளந்த மரக்காலில் திரும்பப் போட்டுக்கொள்வது வழக்கம். நெல் கதிரில் குஞ்சம் கட்டிக் கோயிலில் வேண்டுதலாகத் தொங்கவிடுகிறோம். வீட்டு நிலையில் சாணம் கொண்டு நெல் கதிரை ஒட்டிவைக்கிறோம். நெல்லை சிரசில் போட்டு ஆசி கூறுவார்கள். பரப்பிய நெல்லின் மேல் பட்டுப் பாய் போட்டு மணமக்களை அமர்த்துகிறார்கள். அம்மை போட்டிருக்கும் வீட்டார் நெல் கொடுக்க மாட்டார்கள். மாரியம்மனின் முத்துக்கு நிகரானது நெல். நெல்லில் எழுதிக் குழந்தை தன் படிப்பைத் துவங்குகிறது. சிலையும் ஒரு மண்டலம் நெல்லுக்குள் வசித்துக் கோயிலில் வீற்றிருக்கத் தகுதி பெற வேண்டும். அறிவு அறியாத ஆழ்மனதில் வேர்விட்டவை மரபுகள். அவற்றைப் பற்றிக்கொண்டு அங்கே கிடக்கும் நெல்லின் பெயரால் தவறு செய்யக் கூடாது. தை மாத வரவான நெல்லை இரண்டு கைகளிலும் அள்ளிப் பாருங்கள். புத்தாடை உடுத்தி உங்கள் வீட்டுக்குள் வரும் பெண் குழந்தைபோல், “நல்லா இருக்கேனா நான்?” என்று சிரிக்கும். அது நம்மைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளக் கூடாது. வல்முதல் வேண்டாமே!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com



Read in Source Website

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பாஜக. ‘கோட்டையில் காவிக் கொடி பறப்பதற்கான முதல் படி இது’ என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர். ‘கமுதி 14-வது வார்டில் பாஜகவை எதிர்த்துத் தோற்றிருந்தால்கூடப் பரவாயில்லை. வேட்பாளரை நிறுத்தகூட திமுகவிலோ, அதன் கூட்டணியிலோ ஒரு தொண்டனும் இல்லையா? இதுதான் இந்துத்துவப் படையெடுப்பைத் திமுக முறியடிக்கிற லட்சணமா?’ என்று இன்னொரு தரப்பினர் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் இன்னொரு பார்வை பேசப்படாமலேயே போய்விடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றியவன் என்கிற முறையில் அதை விவாதத்துக்குக் கொண்டுவர நினைக்கிறேன்.

கமுதி பேரூராட்சியைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சிசெய்துகொண்டிருப்பது சாதிக் கூட்டணி. ‘கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்’ என்பது இவர்களின் கொள்கை முடிவு. தேர்தல் ஆணையம் தேர்வுசெய்யும் நபரல்ல, இந்தக் கூட்டணி தேர்வுசெய்பவரே பேரூராட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் வர முடியும். இந்த உள்ளூர் மரபில் தலையிட்டுத் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் வேட்பாளரையே அறிவிப்பதில்லை.

கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இதில் நாடார், இஸ்லாமியர், கிறிஸ்தவ மீனவர், செட்டியார் ஆகியோர் தங்களுக்குள் பேசி, போட்டியின்றி கவுன்சிலர்களைத் தேர்வு செய்துகொள்வார்கள். இப்படியே பெரும்பான்மைக்குத் தேவையான கவுன்சிலர்களைத் தேர்வுசெய்துவிடுவதால், அதே பாணியிலேயே பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவியையும் இவர்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்கிறார்கள். இதன்படி, கடந்த 30 ஆண்டுகளாகப் பெரும்பான்மை சமூகமான நாடாரும், இஸ்லாமியருமே மாறி மாறிப் பேரூராட்சித் தலைவராகிறார்கள். துணைத் தலைவர் பதவி கிறிஸ்தவ மீனவர் உள்ளிட்ட பிற சமூகங்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதே பாணியைத்தான் மறவர், தேவேந்திர குல வேளாளர் போன்றோர் தங்கள் வார்டுகளில் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த முறை தலைவர் பதவி இஸ்லாமியருக்கும், துணைத் தலைவர் பதவி மீனவருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கவுன்சிலர் விஷயத்தில் ஊர்க்காரர்களின் திட்டம் கொஞ்சம் சறுக்கிவிட்டது என்றாலும், 3 முஸ்லிம், 2 நாடார், ஒரு மீனவர், ஒரு செட்டியார், ஒரு மறவர், 2 அருந்ததியர் (ஒருவர் மறவர் ஆதரவு, இன்னொருவர் நாடார், இஸ்லாமியர் ஆதரவு) என 11 கவுன்சிலர்கள் போட்டியின்றி சுயேச்சையாகத் தேர்வாகியிருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெரும்பான்மையாக வாழும் 14-வது வார்டிலும் அப்படிப் போட்டியில்லாமல் (அன்னப்போஸ்டு) தேர்வுசெய்யப்பட்டவரைத்தான், பாஜக தனது வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.

வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சத்யாவைத் தொடர்புகொண்டபோது, அவரது கணவர் ஜோதிராஜா பேசினார். ‘கமுதி வெள்ளையபுரம் தனி வார்டு. இங்கே தேவேந்திரகுல வேளாளர்தான் பெரும்பான்மை. 107 ஓட்டு மட்டும் அருந்ததியர். கிராமம் (கமுதி - வெள்ளையபுரம்) சார்பில் யார் வேட்பாளர் என்று முடிவுசெய்கிறார்களோ, அவர்களை யாரும் எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்பது மரபு. கடந்த முறை என் உறவுக்காரப் பெண்ணுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். திமுககாரர் என்றாலும் சுயேச்சையாகவே தேர்வானார். இந்த முறை என் மனைவிக்கு வாய்ப்புக் கேட்டேன். தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்துக்கு உதவிய கட்சி பாஜக என்பதால், மனைவியை பாஜக சார்பிலேயே நிறுத்தினேன். பதவி உனக்குன்னு ஒதுக்கியாச்சு. உன் இஷ்டம் என்று பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி என் மனைவி பாஜக கவுன்சிலரானார். தகவல் அறிந்ததும் மாநிலத் தலைவர் அண்ணாமலை எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார். இதேபோல வேறு வார்டுகளிலும் வெல்லும் வாய்ப்பிருந்தால் முயற்சி செய்யுங்கள் என்றும் ஊக்கப்படுத்தினார்’ என்றார்.

இது சரியான நடைமுறையா?

உள்ளாட்சிகளில் கட்சி எதற்கு? சண்டைச் சச்சரவு இல்லாமல் மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லதுதானே என்று தோன்றலாம். ஆனால், இந்த சாதி ஒப்பந்தம் காரணமாக கமுதியில் சிறுபான்மையினராக இருக்கும் அகமுடையார், கோனார், ஆசாரி, கல் ஒட்டர், மருத்துவர் உள்ளிட்ட பிற சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. சமூக அக்கறையும், பொதுப்பணியில் ஈடுபடும் ஆர்வமும் இருந்தாலும்கூட அவர்களால் வெற்றிபெற அல்ல, வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூட முடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. புரியும்படி சொல்வதென்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த ஊரில் பிறந்திருந்தாலும், அவர்களால் கவுன்சிலர் தேர்தலில்கூட நிற்க முடியாது. அவர்கள் சார்ந்த கட்சியும் அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த அஞ்சும் என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

ராமநாதபுரம் மாவட்டத்திலோ கமுதியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். ‘பாருங்க. கமுதி மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதைப் போல் நாமும் செய்ய வேண்டாமா?’ என்று சாயல்குடி பேரூராட்சியில் இஸ்லாமியர், கோனார் உள்ளிட்டோர் கூட்டணியாகக் களமிறங்கியிருக்கின்றனர். ‘உள்ளூர் மரபில் தலையிடுவதில்லை’ என்ற கட்டுப்பாடு காரணமாக, அந்தப் பேரூராட்சியிலும் திமுகவும் அதிமுகவும் ஒரு வேட்பாளரைக்கூட அறிவிக்கவில்லை. அருகிலுள்ள அபிராமம் பேரூராட்சியிலும் இந்த நடைமுறையைக் கையாண்டு பார்க்கும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.

அரசியலில் சாதி ஆதிக்கம் செலுத்துகிற வடக்கு, கோவை, தென் மண்டலங்களில் இதுபோன்ற போட்டியில்லாத தேர்வுகள் நடந்திருக்கின்றன என்றாலும், அவை பெரும்பாலும் இரண்டு, மூன்று வார்டுகளுக்கு மேல் இல்லை. எதிர்காலத்தில் அங்கேயும் ‘கமுதி ஃபார்முலா’ நடைமுறைக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டபோது, அவ்வூர் பிறமலைக் கள்ளர் சமூகத்தினர் நடந்துகொண்ட விதம் அரசமைப்புக்கே சவால்விடும் அளவுக்கு இருந்தது. எத்தனை முறை தேர்தல் அறிவித்தாலும், தேர்வான பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தார்கள். மாவட்ட நிர்வாகம் தனது முழுமையான கவனத்தைச் செலுத்தத் தொடங்கிய பிறகுதான் அதைச் சரிசெய்ய முடிந்தது. கமுதி விவகாரம் அவ்வளவு மோசமில்லை என்றாலும்கூட, வளர்ந்துவரும் தமிழ்நாட்டுக்கு, சமூகநீதியில் நாட்டுக்கே வழிகாட்டுகிற தமிழ்நாட்டுக்கு இது பெருமைக்குரிய விஷயமல்ல.

எங்கெல்லாம் சாதி ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதியின் வாலைப் பிடித்துக்கொண்டு மதவாதமும் நுழையும். மதவாத அரசியலை எதிர்ப்போர், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்பிரச்சினைக்கு எளிய தீர்வொன்றும் இருக்கிறது. மிகப் பெரிய பேரூராட்சியான கமுதியுடன் அருகில் உள்ள சில ஊர்களை இணைத்து, கமுதியை நகராட்சியாக அறிவித்துவிட்டால் இந்தச் சாதியக் கணக்குகள் தகர்ந்துபோகும் என்கிறார்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள்.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in



Read in Source Website