DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 09-01-2022

விழுப்புரம்/கடலூர்: சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் பாலசுப்ரமணியம், மோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தை சார்ந்தவர்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு வயது வரம்பு 20 முதல் 45 வரை ஆகும். தையல் கலை பயின்றவராகவும் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்றை சித்த மருத்துவம் மூலம் விரட்ட பல்வேறு வழி முறைகள் உள்ளதாக ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவின் உதவி சித்த மருத்துவ அலுவலர் வி.விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் 3-வது அலை உருவாகிவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருந்தாலும் கரோனாவின் 2 அலைகளை விரட்டியதைப் போலவே, ஒமைக்ரான் போன்ற கொடிய வைரஸையும் சித்த மருத்துவம்மூலம் விரட்டியடிக்கலாம். அதற்காக, பல்வேறு வழிமுறைகள் இருப்பதாக திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் வி.விக்ரம்குமார் தெரி வித்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது, ‘‘உலக அளவில் ஒமைக்ரான் பெரும் பேசும் பொருளாக தற் போது மாறிவிட்டது.

ஒமைக்ரான் தொற்றை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவை யில்லை. 2 அலைகளை சமாளித்த அனுபவம் நம்மிடம் உள்ளது. எனவே, 3-வது அலையை நாம் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.சித்த மருத்துவத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன.

கிருமிநாசினிகளோடு மஞ்சள் கரைத்த நீர், திருநீற்றுப் பச்சிலை, நொச்சி, கற்பூரவள்ளி ஊறிய தண்ணீரை வீடு மற்றும் அலுவலகங்களில் தெளிக்க வேண்டும். தினசரி உணவில் மிளகு, மஞ்சள், கிராம்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை, அன்னாச்சிப்பூ, சுக்கு, கிராம்பு போன்ற நறுமணம் சேர்க்கும் மருத்துவப் பொருட்களை சிறிதளவு சேர்த்து தினசரி குடிநீராக காய்ச்சி பருகலாம். தேநீர், காபி பருகுவதற்கு பதிலாக, இஞ்சி டீ, சுக்கு கசாயம், மிளகு ரசம், கொள்ளு ரசம், தூதுவளை துவையல், புதினா சட்னி, நெய்யில் வதக்கிய சிறிய வெங்காயம், மிளகு தூவிய பழவகைகள், குறிப்பாக நெல்லிக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், கீரை வகைகள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஆடாதோடை மணப்பாகு, நிலவேம்பு குடிநீர், கபசுரக்குடிநீர், தாளிசாதி சூரணம், அதிமதுரசூரணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும், அமுக்கரா சூரணம், பிராமனந்த பைரவம், வசந்தகுசுமாகரம் போன்ற சித்த மருந்துகளை தற்போதைய சூழ்நிலைக்கு பயன் படுத்தலாம். சுவாசப்பாதையை முறைப்படுத்த பாரம்பரிய முறையில் ஆவி பிடிக்கலாம்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுத்து நம்மை நாம் பாதுகாக்க நம்முடைய பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும். கரோனாவின் முதல் 2 அலைகளை நாம் கடந்துள்ளோம். நம்மிடம் பலமான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. சித்தமருத்துவமும், நவீன மருத்துவமும், கரோனா தடுப்பூசியும் இணைந்து எந்த வைரஸ் தொற்று வந்தாலும் அதை நிச்சயம் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க சித்த மருத்துவம் எப்போதும்கைகொடுக்கும்’’ என்றார்.



Read in source website

இந்திய கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜத்துக்கு, டைம் சர்வதேச மாநாட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கணித அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஒன்று கூடி விவாதிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டைம்’ (TIME -Technology and Innovation in Math Education) என்ற சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கணித கல்வியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ‘நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படும்.

அதன்படி 10-வது டைம் மாநாடு கரோனா பரவலால் கடந்த டிசம்பர் மாதம் இணையவழியில் நடைபெற்றது. இதில் புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்களுடன் கணிதத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், இந்த மாநாட்டில் கணித பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு ‘நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பேராசிரியர் ராமானுஜம் சென்னை தரமணியில் அமைந்துள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். கணிதக் கல்வியில் எண்ணற்ற புதிய முயற்சிகளையும், கற்பித்தலில் எளிய முறைகளையும் முன்னெடுத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை வழிநடத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2005-ம் ஆண்டு என்சிஇஆர்டியின் தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பிலும் பங்களிப்பு செய்துள்ளார்.

அதேபோல், அறிவியல் பரப்புரை பணிக்காக 2020-ம் ஆண்டு இவருக்கு இந்திரா காந்தி விருது தரப்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியர் ராமானுஜம் கூறும்போது, ‘‘வாழ்நாள் விருது என்றாலே அது எந்த தனிமனிதரின் சாதனையாகவும் இருக்க முடியாது. பள்ளிக்கல்வியிலும், அறிவியல் பரப்புதலிலும் நான் கற்றுக்கொண்டது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம்தான். எனவே, இந்த விருதை அறிவியல் இயக்கத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.



Read in source website

வாடகை வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்வதற்கான இ-வாடகை செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் விதைகள்உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம் ரூ.97.01 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை, வணிகத்துறை கட்டிடங்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யஇ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.50 கோடி மானியம்

மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2,118வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்குதல்மற்றும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து, 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் www.agrimachinery.nic.in’ என்றஇணையதளத்தில் விண்ணப்பித்து உரிய மானியம் பெற்றுக் கொள்ளலாம்.



Read in source website

மது பழக்கத்தால் இந்திய அளவில் நிமிடத்துக்கு 6 பேர் இறக்கின்றனர் என்றும், இதில் 18 சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தவிர, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமை ஆகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பார்ட்டி என்றாலே 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஒன்றாக குழுமி நலம் விசாரித்து இனிப்பு, காரம், காபி வகைகளையும், உணவு பதார்த்த வகைகளையும் உட்கொள்வதாகவே இருந்து வந்தது. அதில் வெகுசிலரே மதுபானங்களை அருந்துவர். ஆனால், தற்போது பார்ட்டி என்றாலே மதுவிருந்து என்றாகிவிட்டது. 100 பேர் மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றால், அதில் 75 பேர் ஆண்கள், எஞ்சிய 25 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.

பொதுவாக மதுபானங்களுக்கு முதலில் அடிமையாகும் நபர்களே கஞ்சா, அபின், கோகைன், போதை மாத்திரைகள் போன்ற போதை வழக்கங்களுக்கும் அடிமையாகி வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பது சம்பிரதாய வாசகமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2003-ம்ஆண்டுமுதல் மதுபான விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 2005-06-ல் ரூ.7,335 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், 2011-12-ல் ரூ. 21,680 கோடியாகவும், 2016-17-ல்ரூ.31,243 கோடியாகவும், 2020-21-ல் ரூ.33,811 கோடியாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக புத்தாண்டு மற்றும் தீபாவளி நேரங்களில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மதுபோதையால் ஆண்டுக்கு 30 லட்சம் பேரும், நிமிடத்துக்கு 6 பேரும் இறப்பை சந்தித்து வருவதாகவும், இதில் 18 சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும், 27 சதவீதம் பேர் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தவிர, இந்தியாவைப் பொறுத்தவரை மதுபோதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது 5 மடங்காக அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 2.2 கோடி பேர் மதுப்பிரியர்களாக உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மனநல ஆலோசகரும், சென்னை வளசரவாக்கம் ஜீவரக்ஷை குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மைய நிர்வாக இயக்குநருமான ஏ.சி.என்.அருணா கூறியதாவது: இந்தியாவில் பஞ்சாப், டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக கேரளா, தமிழகம், ஆந்திராவில் மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களே எளிதாக மது பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.

மது, கஞ்சா, அபின்,கொகைன் மற்றும் பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களில் 48 சதவீதம் பேருக்கு கல்லீரல் தொடர்பான நோய்களும், 26 சதவீதம் பேருக்கு வாய் புற்றுநோயும், 26 சதவீதம் பேருக்கு கணையம் தொடர்பான நோய்களும், 20 சதவீதம் பேருக்கு காச நோயும், 7 சதவீதம் பேருக்கு இதய நோயும், 5 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயும், பெரும்பாலானோருக்கு நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது வரும் 2027-ம் ஆண்டு இந்திய இளைஞர்களின் ஆரோக்கியம் என்பது இன்னும் கேள்விக்குறியாகிவிடும்.

எங்களது ஜீவரக்ஷை அமைப்பின் மூலமாக மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும், மொபைல் போன்களின் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மீளமுடியாமல் உள்ள உள்ள சிறுவர், சிறுமியருக்கும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டும், மனநல ஆலோசகர்களைக் கொண்டும் தீர்வளித்து வருகிறோம்.

சில குடும்பங்களில் கணவர் குடிப்பதை நியாயப்படுத்தும் பெண்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது குடும்பத்துக்கான ஆபத்தை உணராமல் உள்ளனர். தவிரபாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், மறுவாழ்வுக்கான உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறோம், என்றார்.



Read in source website

வெளிநாடு வாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி, வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

வெங்கையா நாயுடு ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள், இந்தியாவின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்காற்றுவதற்கான முற்சியை இரட்டிப்பாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இந்தியாவின் கலாசார தூதா்களாகவும் அவா்கள் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி, அனைவருக்கும் குறிப்பாக வெநாடுகளில் வசிக்கும் இந்தியா்களுக்கு வாழ்த்துகள். நமது வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினா் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனா். அதே சமயம், அவா்கள் தங்கள் வோ்களுடன் (சொந்த நாட்டுடன்) தொடா்பு வைத்துள்ளனா். அவா்களின் சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தாயகம் திரும்பினாா். அந்தச் சம்பவத்தின் நினைவாக, இந்தியாவின் வளா்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினா் ஆற்றி வரும் பங்களிப்பைக் குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



Read in source website

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபாய் புலே. ஆனால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று கேட்டால் பொதுவாக ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை. தெரியாததன் காரணம் அவர்களல்ல. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு பெண்ணின் பெயர் பொறிக்கப்படவில்லை. வரலாறு பொதுவாக அந்த காலத்தில் ஆண்களாலேயே எழுதப்பட்டது. அவர்கள் அடித்தட்டு பெண்களை பதிவிடவில்லை. சாவித்திரிபாய் புலே பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் முற்போக்கு கருத்துள்ளவர். சனாதன வாதிகளை எதிர்த்து கல்வி கொடுத்தவர். அதனாலும் கூட வரலாற்றில் எழுதப்படாமல் இருக்கலாம். 

பாத்திமா ஷேக்கை கொண்டாடிய கூகுள் டூடுல்

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர் பாத்திமா ஷேக். இவரும் இந்திய கல்வியாளர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்தான். ஆனால் பொதுவாக பாத்திமா ஷேக் பற்றியும் பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர் என பரவலாகக் கருதப்படும் இந்தியக் கல்வியாளர் மற்றும் பெண்ணியச் சின்னமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாள் ஜனவரி 9. இன்று, இவரை கொண்டாடும் விதமாக கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1831ஆம் ஆண்டு, ஜனவரி 9ஆம் தேதி பிறந்த பாத்திமா ஷேக், அவரது சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார்.

வரலாற்றில் தொலைந்து போன பாத்திமா 

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே நடத்திய பள்ளியில் தலித் குழந்தைகளுக்கு கற்பித்த இந்தியாவின் முதல் முஸ்லீம் ஆசிரியர்களில் பாத்திமா ஷேக் ஒருவர். இருப்பினும், அநீதிக்கு எதிராகப் போராடிய பல பெண்களைப் போலவே, இந்தக் கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியின் நினைவு இந்திய உணர்விலிருந்து துடைத்தெறியப்பட்டது இன்றுவரை.

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், வரலாற்றின் பக்கங்களில் அவர் தொலைந்து போனவர். ஆனால் இன்று உலக அளவில், டூடுல் மூலம் பெண்ணிய, கல்வியாளர் ஃபாத்திமா ஷேக்கை கூகுள் கெளரவிக்கிறது.

சாவித்திரி பாய் புலே மற்றும் ஜோதிராவ் புலேவுக்கு புகலிடம் தந்தவர் 

பாத்திமா  ஷேக், 1848 இல் சுதேசி நூலகத்தை சாவித்திரிபாய் புலேவுடன் இணைந்து நிறுவினார். இது பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளி. அவர் தனது சகோதரர் உஸ்மான் ஷேக்குடன் வசித்து வந்தார். அப்போது  தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் பள்ளிக்கூடம் அமைத்து கல்வி போதித்ததிற்காக ஜோதிபாய் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே இருவரையும் ஜோதிராவின் தந்தை கோவிந்தராவ், மகனையும் மருமகளையும் கல்வி சொல்லித்தருவதை நிறுத்தச் சொன்னார். இல்லை என்றால் சனாதன வாதிகள் அவர்கள் குடும்பத்தையை சமூக விலக்கலுக்கு உட்படுத்துவோம் என மிரட்டினார்கள்.

எனவே, கோவிந்த் ராவ் மகனையும், மருமகளையும் கல்வி சொல்லிக்கொடுப்பதை நிறுத்தச் சொன்னார்கள். இல்லை எனில் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற வற்புத்தினர். சாவித்திரி பாய் தொடர்ந்து பள்ளிக்குப் போய் வந்ததால், அவர்களது பெற்றோர், மேல் ஜாதி வர்க்கத்தினரின் மிரட்டுதலால் புலே தம்பதியரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர். தம்பதியினர் வெளியேற்றப்பட்ட பின்னர் , அவர்களுக்குப் போக புகலிடம் இல்லை. ஆனாலும் இருவரும் மனம் தளரவில்லை. 

புலே தம்பதியினர், 1841-1847க்கு இடையில் மாலி சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பின்னர், அப்போது அதனை அறிந்த உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் இருவரும், கஞ்ச் பேத்தில் உள்ள மோமின்புராவில் உள்ள வீட்டில் அவர்களுக்கு இடம் கொடுத்தனர். ஃபுலே தம்பதியினருக்கு உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் பாதுகாப்பும் கொடுத்தனர் 

சுதேசி நூலகமும், முதல் பெண்கள் பள்ளியும்

பாத்திமா ஷேக் முன்பே கல்வி கற்றவர்தான். சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றனர். எனவே 1848ல், ஜோதிபாய் புலே, உஸ்மான் ஷேக் இன்னும் வேறு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், ஷேக்குகளின் இல்லத்தில், அந்த கூரையின் கீழ் சுதேசி நூலகம் திறக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சாவித்திரிபாய் புலே மற்றும் ஜோதிபாய் புலே இருவரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளியை மீண்டும் துவக்கினர். இந்த பள்ளியில் மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி இதுதான்.   இந்த பள்ளியில் சாவித்திரிபாய் புலே முதல் பெண் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பாத்திமா ஷேக் முதல் பெண் முகமதிய ஆசிரியராக பணி புரியத்துவங்குகிறார். இந்தியாவில் முறையாகப் பயிற்சி பெற்று பணிபுரிந்த பெண் ஆசிரியர்கள் சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும்தான். 
  
இங்கு, சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் அவர்கள் பள்ளியில் , ஜாதி, மதம், மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படும் விளிம்புநிலை தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கற்பித்தார்கள். அவர் ஃபுலேவின் பிதேவாடா பள்ளியில் பெண்களுக்கு கற்பித்தல், வீடு வீடாகச் சென்று தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப குடும்பங்களை ஊக்குவித்து பள்ளிகளின் விவகாரங்களை நிர்வகித்தார். அவரது பங்களிப்பு இல்லாமல், முழு பெண்கள் பள்ளி திட்டமும் வடிவம் பெற்றிருக்காது. இன்னும், இந்திய வரலாறு பெரும்பாலும் பாத்திமா ஷேக்கை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. 

சத்யசோதக் சமாஜ் இயக்கம்  (உண்மை தேடுபவர்கள் சங்கம்) 

தாழ்த்தப்பட்ட சாதிகளில் பிறந்தவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக ஃபூலேஸின் முயற்சிகள் சத்யசோதக் சமாஜ் (உண்மை தேடுபவர்கள் சங்கம்) இயக்கம் என்று அறியப்பட்டது. சமத்துவத்திற்கான இந்த இயக்கத்தின் வாழ்நாள் சாம்பியனாக, பாத்திமா ஷேக் தனது சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பழங்குடி நூலகத்தில் கற்கவும், சாதி அமைப்பின் கடினத்தன்மையிலிருந்து தப்பிக்கவும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். சத்யசோதக் இயக்கத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்த முயன்ற ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்தார், ஆனால் ஷேக்கும் அவரது கூட்டாளிகளும் விடாமல் கல்வி போதிக்க புலே தம்பதிக்கும், பாத்திமாவுக்கும் உதவியைத் தொடர்ந்தனர். 

கூட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பாத்திமா ஷேக் 

சமூக விமர்சனங்கள் இருந்தபோதிலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு சான்றாக நிற்கிறது. கூகுளின் ப்ளாக் ஸ்பாட்டின் படி, ஷேக்கின் கதை 2014 வரை "வரலாற்றுப் புறக்கணிக்கப்பட்டதாக" இருந்தது, அப்போது இந்திய அரசாங்கம் உருது தேர்வுப் புத்தகங்களில் அவரது சாதனைகளை மற்ற இந்திய கல்வியாளர்களுடன் சேர்த்து உயர்த்தியது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்கு அவரது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர்களின் குரல்களைக் கேட்கும் வகையில் கூட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.
 
இந்திய அரசு அங்கீகாரம் 

பாத்திமா ஷேக்கின் கதை வரலாற்று ரீதியாக கவனிக்கப்படாமல் இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் 2014 இல் அவரது சாதனைகளில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.. பின்னர்  உருது பாடப்புத்தகங்களில் பாத்திமா ஷேக் பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.  கூகுள் ஞாயிற்றுக்கிழமை கல்வியாளர் மற்றும் பெண்ணியத்தின் அடையாளமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாளை உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட டூடுலுடன் கொண்டாடுகிறது. தனது துறையில் "வாழ்நாள் சாம்பியன்" என்று புகழப்படுகிறார். 

வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் கலவையில் அழகான கூகிள் டூடுல் பின்னணியில் இரண்டு திறந்த புத்தகங்களுடன் ஷேக்கின் விளக்கப்படத்தையும் சேர்க்கிறது. டூடுல் எளிமையானது, ஆனால் ஷேக்கின் வாழ்க்கையை ஒரே பார்வையில் காட்டுகிறது.

பாத்திமா பற்றிய குறிப்பு 

பாத்திமா ஷேக் கல்வித் துறையில் சாதி அடிப்படையிலான எதிர்ப்பை முறியடித்தார். பாத்திமா ஷேக் பற்றிய எந்தக் குறிப்பும் பெரும்பாலும் இல்லை.
பாத்திமா ஷேக் ஒரு வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார். 
பெண் கல்வியை இஸ்லாம் தடை செய்யவில்லை. 

எனவே, பூலேவால் தொடங்கப்பட்ட சாதி எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவள் இருப்பது அவளை மேலும் ஒரு புரட்சியாளராக நிரூபிக்கிறது. அவள் தன் சமூகத்திற்காக மட்டும் போராடவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் முஸ்லிம் மதகுருமார்களுக்கு பிடிக்கவில்லை.

தலித் இயக்கம் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த புலே, ஷாஹுஜி மகாராஜ், நாராயண குரு, பசவண்ணா போன்றவர்களை சிரமமின்றி ஏற்றுக்கொண்டது, ஆனால் பாத்திமா ஷேக் போன்றவர்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. முஸ்லிம் அறிஞர்கள் கூட பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை பெரிதும் புறக்கணித்தனர். ஒரு முஸ்லீம் பெண், சாதியற்ற சமுதாயத்திற்காகவும், பெண்களுக்கான நவீனக் கல்விக்காகவும் போராடுவது, மேலாதிக்க முஸ்லீம் கதைகளுடன் பொருந்தாது. பாத்திமா ஷேக் மற்றும் சாவித்ரிபாய் 1848 இல் பெண்களுக்கான பள்ளியை நிறுவினர். சர் சையத் அகமது கான் 1875 இல் முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார், அது பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது. இந்தியாவில் நவீன கல்வியின் முன்னோடிகளில் ஒருவராக கான் கருதப்படுகிறார். ஆனால் பாத்திமா ஷேக்கிற்கு சமமான முன்னோடிப் பணிகளைச் செய்த போதிலும் அதே அந்தஸ்து வழங்கப்படவில்லை 

சாவித்திரிபாய் கடிதம் & பாத்திமா 

சாவித்திரிபாய் தனது கணவருக்கு கடிதம் எழுதும் போது, பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை பற்றி எப்போதும்  குறிப்பிட்டு இருந்தார். அதன் மூலம் நாம் பாத்திமா பற்றி அறிகிறோம். இவற்றில் சிலவற்றை நாம் அறிவோம். பாத்திமா ஷேக்கின் சுருக்கமான விவரம் இப்போது மகாராஷ்டிராவின் உருது பள்ளி பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.



Read in source website

‘நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிடாது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சனிக்கிழமை அறிவித்தாா். அப்போது, நாடாளுமன்றத்தில் பிப். 1-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதும், நாடாளுமன்ற கூட்டு அவையில் குடியரசுத் தலைவா் உரையாற்ற உள்ளதும், பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதிலளித்து சுஷீல் சந்திரா கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டுமானதல்ல. எனவே, நிதிநிலை அறிக்கை தாக்கல் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிட விரும்பவில்லை. மேலும், நிதிநிலை அறிக்கை என்பது அரசின் வரவு-செலவு குறித்த அறிக்கை. அது எவ்வாறு தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.



Read in source website


புதுப் புது நம்பிக்கையூட்டும் ஆய்வுகள்

வயதானால் உடலின் அனைத்து உறுப்புகளும் கொஞ்சம் கொஞசமாய் செயலிழந்து போகும். மூளையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் உடற்பயிற்சி இவற்றை எல்லாம் மாற்றியமைக்கும் என புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன. 

உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் வேதியலை மாற்றி, வயதாவதை குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. வயதான ஒத்திசைவுகளைப் பாதுகாக்க உடற்பயிற்சி மூளையின் வேதியியலை மாற்றுகிறது; இதனால் சுறுசுறுப்பாக இருக்கும் வயதான பெரியவர்களிடம் மேம்பட்ட நரம்பு பரிமாற்றம் காணப்படுகிறது. இந்த ஆய்வு சொல்லும் தகவல் என்ன தெரியுமா? 

நரம்பு இணைப்புகளில் புரதங்கள் பணி -- ஆய்வு 

வயதானவர்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, அவர்களின் மூளையில் ஆரோக்கியமான அறிவாற்றலைப் பராமரிக்க நியூரான்களுக்கு இடையில் அதிகமான புரத வகைகள் உள்ளன.  இவை நியூரான்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளை மேம்படுத்தும் புரதங்களே என்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி இணைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தும் புரத வகைகள் அதிகமாக இருப்பதை சான் பிரான்சிஸ்கோ ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான பாதுகாப்புத் தாக்கம் சம்பந்தப்பட்ட  தகவல்கள், அல்சைமர் மற்றும் பிற நரம்பியக்கடத்தல் நோய்களால் இறந்தவர்களின் மூளையில் உள்ள நச்சுப் புரதங்களிலும் காணப்பட்டது. 

புரத ஒழுங்கமைப்பு 

"நரம்புகளின் இணைப்பிலுள்ள புரத ஒழுங்கமைப்பு (synaptic proteinregulation) என்பது உடல் செயல்பாடுகளுடன் நேரடித் தொடர்புடையது; இவை நாம் காணும் நன்மை பயக்கும் அறிவாற்றல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை, மனித தரவைப் பயன்படுத்தி செம்மையாகக் காட்டுகின்றனர். இதுதான் அவர்களின் முதல் பணி" என நரம்பியல் உதவி பேராசிரியரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான கெய்ட்லின் கசலெட்டோ ( Kaitlin Casaletto ) கூறியுள்ளார். இது பற்றிய செய்தி அல்சைமர் & டிமென்ஷியாவுக்கான அல்சைமர்ஸ் அசோசியேஷன் இதழில், ஜனவரி 7-ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. 

அறிவாற்றலில் உடல் செயல்பாடுகளின் நன்மை விளைவுகள் எலிகளில் காட்டப்பட்டுள்ளன, ஆனால் இதனை மனிதர்களிடம் நிரூபிப்பது கடினம். 

டிமென்ஷியா குறைப்பு 
 
நரம்பியல் உளவியலாளர் மற்றும் நரம்பியல் வெயில் இன்ஸ்டிடியூட் உறுப்பினரான கசலெட்டோ, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக  மனநல மருத்துவப் பேராசிரியரும், ஆய்வின் மூத்த ஆசிரியருமான வில்லியம் ஹோனர், எம்.டி.யுடன் இணைந்து, சிகாகோ, ரஷ் பல்கலைக்கழகத்தில் நினைவாற்றல் மற்றும் முதுமைத் திட்டத்தின் தரவுகளைப் பயன்படுத்தினர். அந்தத் திட்டம் வயதான பங்கேற்பாளர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில், அவர்களின் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்தது. பின்னர் அவர்கள் இறந்தபோது அவர்களின் மூளையை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்." நியூரான்களுக்கிடையேயான இந்த இணைப்புகளின் ஒருமைப்பாட்டை பராமரிப்பது என்பது  டிமென்ஷியாவைத் தடுக்க இன்றியமையாத ஒன்றாகக் கூட இருக்கலாம், ஏனெனில் அந்த நரம்பு இணைப்பு என்பது உண்மையில் அறிவாற்றல் நிகழும் தளமாகும்" என்று சொல்கிறார் கசலெட்டோ.

அதிக புரதங்கள்-சிறந்த செயல்பாடு "உடல் செயல்பாடு -- எளிதில் கிடைக்கக்கூடிய கருவி -- இந்த சினாப்டிக் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்."

அதிக புரதங்கள் சிறந்த நரம்பு சமிக்ஞைகளைக் குறிக்கின்றன சுறுசுறுப்பாக இருக்கும் வயதானவர்கள் நியூரான்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் அதிக அளவு புரதங்களைக் கொண்டிருப்பதை ஹானர் மற்றும் கசலெட்டோ கண்டறிந்தனர்.

இந்த முடிவு ஹொனரின் முந்தைய கண்டுபிடிப்புடன் தொடர்புடையது, அவர்கள் இறக்கும் போது அவர்களின் மூளையில் இந்த புரதங்கள் அதிகமாக இருந்தவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் தங்கள் அறிவாற்றலை சிறப்பாக பராமரிக்க முடியும்.

ஆச்சரியம் தரும் மாற்றங்கள் -- புரதம் பற்றிய புதிய ஆய்வை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள் ஆய்வாளர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஹானர் இந்த ஆய்வு பற்றிக் கூறுகையில், அறிவாற்றல் செயல்பாட்டுடன் தொடர்புடைய பிற மூளைப் பகுதிகளை உள்ளடக்கியதாக, மூளையின் நினைவகத்தின் இருக்கையான ஹிப்போகாம்பஸைத் தாண்டி, விளைவுகள் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என்கிறார். 

"உடல் செயல்பாடு நீடித்த விளைவை ஏற்படுத்துகிறது, மூளை முழுவதும் சினாப்டிக் பரிமாற்றத்தை எளிதாக்கும் புரதங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் தூண்டுகிறது" என்று ஹோனர் கூறினார்.

ஒத்திசைவுகள் டிமென்ஷியாவின் அறிகுறிகளைக் காட்டும் மூளைகளைப் பாதுகாக்கின்றன பெரும்பாலான வயதானவர்களின் மூளையில் அமிலாய்டு மற்றும் டாவ் (amyloid &  tau) என்னும் நச்சுப் புரதங்கள் குவிந்துள்ளன. அவை அல்சைமர் நோய் நோயியலின் அடையாளங்களாகும். பல விஞ்ஞானிகள் அமிலாய்டு முதலில் குவிந்து, பின்னர் டவு, சினாப்சஸ் மற்றும் நியூரான்கள் வீழ்ச்சியடையச் செய்யும் என்று நம்புகிறார்கள் உடற்பயிற்சி -அல்சைமர் நோயின் தன்மையைக் குறைக்கும் உயிருள்ள பெரியவர்களின் முதுகெலும்பு திரவம் அல்லது பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பெரியவர்களின் மூளை திசுக்களில் அளவிடப்பட்ட சினாப்டிக் ஒருமைப்பாடு அமிலாய்ட் மற்றும் டவு மற்றும் டவு மற்றும் நியூரோடிஜெனரேஷன் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் குறைப்பதாகத் தோன்றியது என்று கசலெட்டோ முன்பு கண்டறிந்தார். எனவே உடற்பயிற்சி என்பது அல்சைமர் நோயின் தன்மையைக் குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. 

"சினாப்டிக் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய அதிக அளவு புரதங்களைக் கொண்ட வயதான பெரியவர்களில், அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் நியூரோடாக்சிசிட்டியின் இந்த அடுக்கை பலவீனப்படுத்துவதாகத் தோன்றுகிறது," என்று அவர் கூறினார். "ஒன்றாக எடுத்துக்கொண்டால், அல்சைமர் நோய்க்கு எதிராக மூளையை ஆதரிக்க சினாப்டிக் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த இரண்டு ஆய்வுகளும் காட்டுகின்றன."



Read in source website

தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகையில் மகிழ்ச்சியை அதிகரித்துக் குதூகலமாக்குவதில் விளையாட்டுகளின் பங்களிப்பு மிக அதிகம். அதிலும் நம் பழந்தமிழரின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான மாட்டுவண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ்) இன்றுவரை மக்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்த மாட்டுவண்டிப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மதுரையில் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடியைச் சுற்றியுள்ள பகுதிகள், நாகர்கோவில் போன்ற இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர் போன்ற இடங்களிலிருந்து மாட்டுவண்டிப் போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு, தமிழ்ச் சமூகத்தின் தொன்றுதொட்டுவரும் கலாச்சாரத்தை இன்றும் வளர்த்துவருகின்றனர். இப்போட்டிகள் மிக அதிக அளவில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறுகின்றன.

மனித நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலிய எதேச்சையான, மிக முக்கியக் கண்டுபிடிப்புகளுள் மாட்டுவண்டியும் ஒன்று. பாரம் சுமப்பதற்கும் தூரம் கடப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள், மக்களின் வேலைகளை எளிமையாக்கி நேரத்தை மிச்சப்படுத்தின. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன.

நாள்கணக்கில் நடந்தே கடந்த பெருந்தொலைவுகளையும் எளிதில் கடக்க முடிந்ததோடு வணிகமும் தழைத்துச் சமூகப் பொருளாதார நிலையும் மேம்பட்டது. இதனால், சமூகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை மக்கள் அதிக அளவில் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மக்களின் இந்நிலைக்குக் காரணமான மாட்டுவண்டியும் அதனை இயக்கப் பயன்படுத்திய மாடுகளும் சமூகத்தின் மிக முக்கிய அங்கமாகின.

செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதும் தமிழர்கள், ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை அன்றாடப் பணிகளிலிருந்து விடுவித்துப் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். ஆரம்பத்தில் தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த மாட்டுவண்டிகளை விவசாய நிலப் பகுதிகளில் ஓடவிட்டு, முந்தி இலக்கை அடையும் வண்டிக்கு வெற்றிவாகை சூடி ஆரவாரித்தனர். மக்களுக்கு இதன்மீது ஏற்பட்ட அலாதிப் பிரியத்தால் தொடர்ந்து அடிக்கடி இப்போட்டியை நடத்தத் தொடங்கினர். குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடும் திருவிழாக்களில் போட்டிகள் நடத்தித் தங்கள் விழாக் கால மகிழ்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டனர். நாளடைவில் பொங்கல் மற்றும் கிராமப்புறப் பெண் தெய்வ வழிபாட்டு விழாக்களில் மாட்டுவண்டிப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட ஆரம்பித்தன. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களோடு சிறப்பான முறைகளில் இப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பொழுதுபோக்கு நிகழ்வுகள் அதிகம் இல்லாத அக்காலகட்டத்தில், இப்போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் சமூகத்தில் ஏற்படுத்தின. இதனால், போட்டிகளுக்கென்றே வண்டிகள் வடிவமைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட காளைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன.

மாடுகளால் இலகுவாக இழுக்கத்தக்க விதத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும்படியான வண்டிகள் உருவாக்கப்பட்டன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான மாடுகளுக்கான சிறிய அளவிலான ஒற்றைப் போல் வண்டிகளும் நான்கு வயதுக்கு மேலான மாடுகள் இழுக்கத்தக்க பெரிய அளவிலான இரட்டைப் போல் வண்டிகளும் தயாரிக்கப்பட்டன. இத்தோடு பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் வில்வண்டிகளும் போட்டிகளில் பங்கேற்கின்றன. பந்தயங்கள் பெரும்பாலும் புறவழிச் சாலைப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரின் அனுமதியுடனும் உதவியுடனும் நடைபெறுகின்றன.

பந்தய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளாக நல்ல உடல் வலிமையும் கம்பீர தோற்றமும் உடைய காங்கேயம், ஒட்டங்காளை போன்ற நாட்டுமாடுகள் இளங்கன்றிலிருந்தே வளர்க்கப்படுகின்றன. இதற்கென்றே ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் மாடுகளை வண்டியிழுக்கப் பழக்குவிக்கின்றனர். முதலில் குறைந்த எடையுடைய சிறிய வண்டிகளில் இளங்கன்றுகளை இணைத்துப் பழக்குகின்றனர். பின்னர், குறிப்பிட்ட தொலைவை அவற்றின் இயல்பான வேகத்தில் இழுத்துச்செல்லப் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான பயிற்சிகளால் காளைகள் போட்டிகளுக்குத் தயாராகிவிடுகின்றன. காளைகள் பந்தய வண்டிகளை வேகமாக இழுத்துச் செல்லக் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஆரோக்கியமும் இருப்பதற்காக போட்டி தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவற்றின் உணவு முறைகளிலும் பயிற்சிகளிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

பந்தயத்தில் ஈடுபடும் காளைகள் வயது மற்றும் அவற்றின் உயரத்தின் அடிப்படையில் பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு மாடுகள் எனத் தரம்பிரிக்கப்பட்டுப் போட்டிக்கான தூரம் தீர்மானிக்கப்படுகிறது. பெரிய மாடுகளுக்கான தூர அளவு 15 அல்லது 16 கிமீ, நடுத்தர மாடுகளுக்கு 12 கிமீ, கரிச்சான் மாடுகளுக்கு 10 கிமீ, பூஞ்சிட்டு மாடுகளுக்கு 7 கிமீ என்று தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தய வண்டியிலும் இரண்டு பேர் பொறுப்பாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள். ஒருவர் வண்டியின் உரிமையாளர், மற்றொருவர் உதவியாளர். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டுபவராக வண்டியின் உரிமையாளர் அமர்ந்திருக்க, உதவியாளர் காளைகளைத் துரத்தியபடி ஓடுவார். இவ்விருவரது சாமர்த்தியமான உந்துதலே காளைகளின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். ஏற்கெனவே பயிற்சியால் பழக்கப்பட்ட காளைகள் இவர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து, வேகமெடுத்து இலக்கை அடைவதில் தீவிரம் காட்டும். குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் வண்டிகள், வெற்றிபெற்ற வண்டி உரிமையாளர்கள், மாடுகளுக்குச் சிறப்புகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மாட்டின் கொம்புகளில் வெற்றி சால்வைகள் சுற்றப்பட்டும் மாலைகள் அணிவிக்கப்பட்டும் அக்காளைகள் கௌரவிக்கப்படுகின்றன. வெற்றியை வண்டி உரிமையாளரின் ஊரார் அனைவருமே தங்களது வெற்றியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்றான மாட்டு வண்டியின் பயன்பாடு குறைந்துவிட்டபோதிலும் தென்மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ் என்று அழைக்கப்படும் மாட்டுவண்டிப் பந்தயம் மக்களின் வரவேற்பை அதிகமாகவே பெற்றுவருகிறது.

- த. ஜான்சி பால்ராஜ், ‘மாடும் வண்டியும்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: jansy.emmima@gmail.com



Read in source website

‘நவீன கால டார்வின்’, ‘டார்வினின் வாரிசு’ என்றெல்லாம் புகழப்படும் இ.ஓ.வில்சன் (எட்வர்ட் ஆஸ்போர்ன் வில்சன்) ஒரு பரிணாமவியலர், உயிரி-புவியியலர், சமூக உயிரியலர், எறும்பியலர் (myrmecologist). கடந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவரும்கூட. அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் மாகாணத்தில் 2021 கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் 92 வயதில் காலமான அவர், உயிரியலின் வழியாக உலகைப் புரிந்துகொள்ள முயன்றவர். அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் தான் பெற்ற வெளிச்சத்தை வாழ்நாள் முழுவதும் உலகுக்குக் கடத்திக்கொண்டிருந்த அவர், உலகம் இன்றைக்கு எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ‘பூவுலகில் பாதி’யை (Half-Earth) இயற்கைக்கு அர்ப்பணித்தல் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தாக்கத்தைத் தெளிவுபடுத்தி அவர் வலியுறுத்திய விதத்துக்குப் பின்னால், நீண்டதொரு ஆராய்ச்சிப் பயணம் இருக்கிறது.

சிற்றுயிர் உலகம்

‘ஒவ்வொரு குழந்தைக்கும் பூச்சிகளைப் பின்தொடர்ந்த பால்ய காலம் ஒன்றிருக்கும். அந்தப் பால்ய கால ஆர்வத்தைத் தாண்டி நான் வெளியே வரவில்லை. சூழலியலை ஆராய்ந்து பார்ப்பதிலும் குழந்தைகளுக்குப் பெருவிருப்பம் இருக்கும். பூச்சியியலை நான் தேர்ந்தெடுத்ததற்கு இப்படிக் குழந்தை மனத்துடன் இருந்தது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம், என்னால் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்பது. அதனால்தான் சிறிய விஷயங்களை உற்றுநோக்குவதில் கவனம் செலுத்தினேன்’ என்று சுயசரிதையில் வில்சன் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஏழு வயதில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலுவாக இரையைக் கடித்த ஒரு முள்மீனை நீரிலிருந்து வேகமாகப் பிடித்து இழுத்தபோது, மீனின் துடுப்பிலிருந்த கூர்மையான முள் அவருடைய வலது கண் பாவையை வெட்டிவிட்டது. அதனால் வாழ்நாள் முழுக்க ஒரு கண்ணால் மட்டுமே தெளிவாகப் பார்க்கக்கூடிய நிலை அவருக்கு உண்டானது.

பால்ய காலத்தில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் உள்ள ராக் கிரீக் பூங்கா பகுதிக்கு வில்சன் அடிக்கடி சென்று திரும்பினார். ‘ஒரு நாள் மக்கிக்கொண்டிருந்த ஒரு மரக்கிளையை வெளியே எடுத்தேன். அதன் அடியில் சிட்ரோனெல்லா எறும்புகள் இருந்தன. அந்தக் கூட்டத்திலிருந்த உழைப்பாளி எறும்புகள் சிறிதாக, பருத்து, மஞ்சள் நிறத்தில் புத்திசாலிகளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அந்த எறும்புகளிலிருந்து எலுமிச்சைவாசம் வந்தது. அன்று எறும்புகள் குறித்து மனத்தில் பதிந்த அந்த பிம்பம் என் வாழ்நாள் முழுக்கத் திரும்பத் திரும்ப ஒரு நீங்காத காட்சியாக மனத்தில் பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது’ என்கிறார்.

பதின்ம வயதின் இறுதியில் பூச்சியியலர் ஆகும் ஆர்வத்துடன் ஈக்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்ததன் காரணமாகப் பூச்சி மாதிரிகளைக் குத்திவைக்கும் குண்டூசிகள் கிடைப்பது சிக்கலாக இருந்தது. இதன் காரணமாகச் சிறு குப்பிகளில் சேகரித்து ஆராயக்கூடிய எறும்புகளின் மீது அவருடைய கவனம் திரும்பியது.

உயிரினச் சமநிலை

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1956-ல் பயிற்றுவிக்கும் பணியில் சேர்ந்தார். எறும்பு வகைப்பாட்டியலராகவும் அவற்றின் பரிணாமவியல் வளர்ச்சி குறித்தும் ஆராயத் தொடங்கினார். சக எறும்புகளுடன் தொடர்புகொள்வதற்காக பெரமோன் எனும் வேதிப்பொருளை எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பதை முதலில் கண்டறிந்தவர் அவர்தான். 1960-களில் பிரபலக் கணிதவியலரும் சூழலியலருமான ராபர்ட் மெக்ஆர்தருடன் இணைந்து வில்சன் பணியாற்றினார். ஃபுளோரிடா கீஸ் என்கிற சிறு தீவில் ‘உயிரின வகைகள் சமநிலைக் கோட்பாடு’ குறித்து அவர்கள் ஆராயத் தொடங்கினார்கள்.

இதற்காக அங்கிருந்த அலையாத்தித் தீவுகளில் பரிசோதனை மேற்கொண்டார்கள். முதலில் அந்தத் தீவுகளில் இருந்த பூச்சி வகைகளைக் கணக்கெடுத்தார்கள். பிறகு, அங்கிருந்த சிற்றுயிர்கள் அனைத்தையும் புகையூட்டி அழித்தார்கள். பிறகு புதிய உயிரின வகைகள் அந்தத் தீவுக்கு எப்படி வந்து, பெருகத் தொடங்குகின்றன என்பதை ஆராய்வதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஒரே ஆண்டில் அந்தச் சிறு தீவுகளில் இருந்த பல்லுயிர் வகைகள் ஒரு யுகத்துக்கு முந்தைய நிலைக்குத் திரும்பின. பிறகு, உயிரினப் பன்மை சமநிலையை எட்டி, அந்த இடத்தில் அவை நிலைத்திருக்கத் தொடங்கின.

இந்த நேரடிக் கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில், உயிரின வகைகள்-அவை வாழும் நிலப்பரப்பு இடையிலான சமன்பாடு எனும் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவின்படி, ஒரு தீவில் வாழும் உயிரின வகைகளில் சமநிலை நிலவுகிறது என்பதுடன், அந்தத் தீவு சுருங்கினால், சில உயிரின வகைகளுக்கு இடமில்லாமல் போகும் என்பதும் உண்மையானது. அதாவது, ஓர் அளவுக்கு மேல் தீவுகளால் கூடுதல் உயிரின வகைகளைத் தாங்க முடிவதில்லை, அப்படித் தாக்குப்பிடிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துபோகின்றன. இந்த ஆய்வு அடிப்படையிலான ‘தீவு உயிரி-புவியியல் குறித்த கோட்பாடு’ என்கிற புத்தகம், சூழலியலர்களுக்கு நிரந்தரப் பாடமாக மாறியது.

சமூக நடத்தைகள் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்கிற கருதுகோள் அடிப்படையில், 1975-ல் அவர் எழுதிய ‘Sociobiology: The New Synthesis’ (சமூக உயிரியல்) என்கிற நூல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. சுயநலமற்றுப் பிறருக்கு உதவும் குணம் மரபணு வழியாகவும் இயற்கைத் தேர்வு மூலமாகவும் வந்திருக்கலாம் என்று விலங்கு சமூகங்களை முன்வைத்து வில்சன் கூறினார். குறிப்பாக, அந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் மனித சமூகத்தில் அதிகாரப் படிநிலை நிலவுவதற்கு மரபணுரீதியிலான காரணங்கள் இருக்கலாம் என்கிற கருதுகோளை அவர் முன்வைத்திருந்தார். மனித சமூக நடத்தைகளுக்கும் மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குள்ளானது.

சமூக உயிரியல் அடிப்படையில் அவர் எழுதிய ‘On Human Nature’ (1978) புலிட்சர் பரிசைப் பெற்றது. பிறகு, பெர்ட் ஹால்டாப்ளருடன் இணைந்து அவர் எழுதிய ‘The Ants’ (1990) நூலும் புலிட்சர் பரிசைப் பெற்றது. சர்ச்சைக்குரிய சமூக-உயிரியல் கருதுகோளுக்கு மாறாக, உயிரி-புவியியல் சார்ந்த வில்சனின் பங்களிப்பே பரவலான கவனத்தைப் பெற்றது, குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் மாறியது.

பெரும் கொடை

புத்தாயிரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் மட்டும் 14 புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். ‘பூவுலகில் பாதி’யை இயற்கைக்கு அர்ப்பணித்தல் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து ‘Half-Earth: Our Planet’s Fight for Life’ (2016) என்கிற நூலை எழுதியபோது அவருடைய வயது 87. பருவநிலை மாற்றத்தைத் தீவிரமடைய வைக்கும் உயிரினங்கள் திரளாக அற்றுப்போதலையும், சூழலியல் உருக்குலைவையும் தடுத்து நிறுத்த முடியும் என்று வில்சன் நம்பினார். அவரது கடைசி ஆசை, நிறைவேறாக் கனவு என்று இந்தக் கருத்தாக்கத்தை கூறலாம் என்கிறார் அமெரிக்க சூழலியல் எழுத்தாளர் ஜெரிமி ஹான்ஸ்.

மக்களின் நன்மைக்காகவும் இயற்கையின் நன்மைக்காகவும் பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணித்துப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பகுதியில் மனிதர்களைத் தவிர்த்த மற்ற உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை தனக்குத் தானே புத்துயிர் ஊட்டிக்கொள்ளும். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பரிணாமவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட ஒருவர், பூவுலகுக்கும் மனித குலத்துக்கும் அளித்த மிகப் பெரிய கொடை இந்தக் கருத்தாக்கம் என்று ஜெரிமி குறிப்பிடுகிறார்.

பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணித்தால் 80% உயிரினங்களைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக, உயிரினப் பன்மை மிகுந்த கடல் பவளத் திட்டுகள், வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளிட்டவற்றைக் காப்பது அவசியம். இது சாத்தியமானால் உயிரினங்கள் திரளாக அற்றுப்போதலையும் ஒட்டுமொத்த சூழலியல் சீர்குலைவையும் தவிர்க்க முடியும். மனித நாகரிகமும் பேரழிவிலிருந்து தப்பும்.

சாத்தியமற்றதா?

மனிதத் தூண்டுதலால் உலகில் பேரழிவு (Anthropocene) நடைபெற்றுவரும் காலம் என்று நாம் வாழும் காலம் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்ற அறிவியல் புனைவைப் போல் தோற்றமளிக்கலாம். இன்றைய தேதிக்குப் பூவுலகின் நிலப்பரப்பில் 17% காடுகளும் 7% பெருங்கடல்களும் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பைப் பெற்றுள்ளன. அப்படியென்றால், பூவுலகில் பாதியைக் காப்பதற்கான இடைவெளி பெரிது. அதேநேரம் இது சாத்தியமற்றதல்ல. உலக சராசரி வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த, ‘30-க்கு 30’ என்கிற திட்டத்தை மார்ஷல் தீவுகள் 2016-ல் முன்மொழிந்தன. அதன்படி பூவுலகின் 30% நிலப் பகுதியையும் 30% கடல் பகுதியையும் பாதுகாக்க 50 நாடுகள் முன்வந்துள்ளன.

இப்படிச் செய்வதன்மூலம் புவியை வெப்பப்படுத்திவரும் கரியமிலவாயு கூடுதலாகக் கிரகிக்கப்படும், தூய தண்ணீர் கிடைக்கும், மண் வளம் பெறும், உயிரினங்கள் செழிக்கும், இன்னும் என்னென்ன வகைகளிலெல்லாம் இயற்கை மீள வழியுண்டோ அத்தனை வழிகளிலும் இயற்கை மீண்டெழும். அதன் பலனாக மனித குலம் உட்பட அனைத்து உயிரிகளும் காக்கப்படும், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பூவுலகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப்பெறும். பூவுலகுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு இ.ஓ.வில்சன் முன்வைத்த இந்த அருமருந்து, உத்தரவாதமாகப் பலன் கொடுக்கும். ஆனால், அந்தத் தீர்வைச் செயல்படுத்துவது யாரோ சிலருடைய கைகளில் இல்லை. நம் ஒவ்வொருவர் கைகளிலுமே உள்ளது என்பதைத் தன் பணி, எழுத்து வழியாக உணர்த்தி வில்சன் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website