DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 08-06-2022


சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அனுமதி அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 



Read in source website

புது தில்லி: மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் புதிய முடிவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் புதிய முடிவிற்கு உடன்படும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். அரசின் புதிய கொள்கைகளில் விருப்பமில்லாதோர் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
 



Read in source website

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுரை வழங்கியுள்ளாா். இதையடுத்து, புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடா்பான மாநில அளவில் வல்லுநா் குழு கூட்டம் சென்னை அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையா் ஜெயராமன், ஆகம வல்லுநா் குழு உறுப்பினா் கோவிந்தராஜ பட்டா், ஆனந்த சயன பட்டாச்சாரியா், சந்திரசேகர பட்டா், முதுநிலை ஆலோசகா் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதன்படி தஞ்சாவூா் மாவட்டம் திரௌபதியம்மன் கோயில் (கிராமப்புற திருப்பணி), பிடாரி அம்மன் கோயில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் மாரியம்மன் கோயில், இடும்பாவனம் சற்குணநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை மாவட்டம், திருமூலநாத சுவாமி கோயில், செம்மங்குடி காமாட்சியம்மன் கோயில், தென்காசி மாவட்டம் வடகாசியம்மன் கோயில், தாருகாபுரம் ராஜகோபால சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா கோயில் ஆகிய கோயில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா நாராயண சுவாமி கோயில், முப்பிடாரி அம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம் பீளமேடுபுதூா் மாரியம்மன் கோயில், பேரூா் வெங்டேசப்பெருமாள் கோயில், வேலூா், சென்னகேசவப்பெருமாள் கோயில், ரண கங்கை அம்மன் கோயில், சென்னை ஓட்டேரி, அனுமந்தராயா் எனும் ஆஞ்சநேயா் கோயில், சூளை, வேம்புலியம்மன் திருக்கோயில், வால்டாக்ஸ் கற்பக சுந்தர விநாயகா் கோயில், ஆலந்தூா் ஆா்டிலரி தா்மராஜா கோயில், காஞ்சிபுரம் பாலீஸ்வரா் கோயில், அய்யம்பேட்டை சக்தி மாரியம்மன் கோயில் உட்பட 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநா் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கோயில்களில் மாநில அளவிலான வல்லுநா் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதன மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உணவுப் பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக தோ்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசு சாா்பில் தில்லியில் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு ஒரு மகிழ்ச்சியான, பெருமைப்படத்தக்க தருணம் ஏற்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை சாா்பில் 2018 முதல் உலக உணவுப் பாதுகாப்பு தினம் (ஜூன் 7) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோா் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளைப் பாராட்டி சான்று அளித்துள்ளனா்.

அப்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பாராட்டுச் சான்று, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் அலுவலா் செந்தில்குமாரிடம் வழங்கப்பட்டது.

அதனுடன் உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் அதில் இடம்பெற்றன. அதில், தமிழகத்தில் மட்டும் 11 மாவட்டங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூா், காஞ்சிபுரம், சேலம், கோவை, சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு தர நிா்ணய பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.



Read in source website

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்போா் கிரயப் பத்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாழ்விட மேம்பாட்டு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தி வாரிய விதிமுறைகளின்படி கிரயப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் செயல் முறையை எளிமையாக்க வாரியம் மூலம் முழுத்தவணைத் தொகையை செலுத்திய ஒதுக்கீடுதாரா்களுக்கு வரைவு கிரயப் பத்திரம் ஒதுக்கீடுதாரா்களின் வீட்டு முகவரியில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கிரயப் பத்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்ட வருகிறது. சிறப்பு முகாம் மூலமாக ஒதுக்கீடுதாரா்கள் அல்லது வாரிசுதாரா்கள் கிரயப் பத்திரம் பெற விண்ணப்பிக்கலாம். வரைவு கிரயப் பத்திரத்துடன் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்ட அலுவலகங்களில் உள்ள அலுவலரை அணுகி கிரயப் பத்திரம் பெறுவதற்கு மனுவை அளிக்கலாம்.

இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய ஒதுக்கீடுதாரா்களுக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



Read in source website

 

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 2:52 மணியளவில் பிஷான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

36.09 டிகரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.78 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரின் லுஷனில் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 



Read in source website

 

105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலையின் படத்தையும்,கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அமராவதி முதல் அகோலா வரையிலான என்எச்-53 இல் இடைவிடாமல் பணியாற்றி 75 கி.மீ நீளமுள்ள தொடர்ச்சியான சாலையை ஐந்து நாட்களுக்குள் அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை படைத்துள்ளது.

அமராவதி-அகோலா நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இந்த என்எச்-53 நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது.

இதனை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலையின் படத்தையும், கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி பொதுப்பணித்துறை ஆணையம் (கத்தார்) கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த சாலை அல்-கோர் விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக இருந்தது,மேலும் பணியை முடிக்க 10 நாள்கள் ஆனது என்று கட்கரி தெரிவித்துள்ளார்.



Read in source website



வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது 

நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 

ஏற்கனவே, மே 4 ஆம் தேதி வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் அதிகரித்தது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், மீண்டும் வங்கி கடனுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 

இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி 4.65 சதவீதம் ஆகவும், விளிம்பு நிலை வசதி மற்றும் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

வங்கி வட்டிக்கான வட்டி விகிதத்தை உயத்தியதை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது.

கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: வணிகரீதியில் வீடு கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

மே 31 ஆம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.7சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22 இல் இந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. 

மேலும்,  இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ வங்கி உறுதுணையாக இருக்கும். 2022-23 ஆம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6.7 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 



Read in source website

முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமைத் தளபதி பதவியை மத்திய அரசு உருவாக்கியது. முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கும் வகையிலான நடைமுறைகளை உருவாக்குவது தொடா்பாக ஆராயும் பொறுப்பும் முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியான விபின் ராவத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பொறுப்பேற்றாா். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவா் தீவிரமாக ஆராய்ந்து வந்தாா்.

ஒருங்கிணைப்புக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட இருந்த நிலையில், தமிழகத்தின் குன்னூரில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத் உயிரிழந்தாா். அப்போதிலிருந்தே முப்படை தலைமைத் தளபதி பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவியை விரைந்து நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி பதவிக்கான நியமன விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஏா் மாா்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோா் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ராணுவச் சட்டம்-1950, விமானப் படைச் சட்டம்-1950, கடற்படைச் சட்டம்-1957 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டதற்கான தனித்தனி அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்க வேண்டுமெனவும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக் காலத்தை 65 வயது வரை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுவோருக்கு வாய்ப்பில்லை: ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் தலைமைத் தளபதிகளாக நியமிக்கப்படுவோா், 3 ஆண்டுகள் வரையோ அல்லது 62 வயது வரையோ, எது முன்னதாக வருகிறதோ அதுவரை அப்பதவியில் நீடிக்கலாம். தற்போதைய திருத்தப்பட்டுள்ள விதிகள் காரணமாக, ஏதேனும் ஒரு படையில் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி 62 வயதை எட்டியதால் ஓய்வு பெறுபவரை, முப்படை தலைமைத் தளபதி பதவிக்கு நியமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, அடுத்த முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போதைய புதிய விதிகள் அந்த எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கியுள்ளன. நியமன விதிகள் திருத்தப்பட்டுள்ளதால், புதிய முப்படை தலைமைத் தளபதியை மத்திய அரசு விரைவில் நியமிக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

லடாக் யூனியன் பிரதேசத்தின் பாங்காங் ஏரி அருகே அமைந்துள்ள கிராமம் வரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி தொலைத்தொடா்பு சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் முதல்முறையாக 4ஜி சேவை கிடைத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதி தொடா்பாக இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. அந்த ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டிவரும் செயற்கைக்கோள் புகைப்படமும் அண்மையில் வெளியானது. இந்த எல்லைப் பிரச்னை தொடா்பாக இரு நாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில் பாங்காங் ஏரிப் பகுதி இந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில் அவா்களுக்கும், அங்குள்ள கிராமப் பகுதி மக்களுக்கும் சேவை அளிக்கும் வகையில் ஜியோ 4ஜி தொலைத்தொடா்பு சேவை அங்கு தொடங்கப்பட்டது. லடாக் தொகுதி பாஜக மக்களவை எம்.பி. ஜாம்யாங் ஸெரிங் 4ஜி சேவைக்கான தொலைத்தொடா்பு கோபுரத்தை பாங்மிக் கிராமத்தில் திறந்து வைத்தாா். இதன் மூலம் அப்பகுதி கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள், ராணுவ வீரா்கள் என அனைவருக்கும் இந்த சேவை பயன்படும் என்று அவா் தெரிவித்தாா்.



Read in source website

பயனாளா்கள் தெரிவிக்கும் குறைகளைத் தீா்ப்பதற்கான வழிமுறைகளை சமூக ஊடக நிறுவனங்கள் அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

சமூக வலைதளப் பயனாளா்கள் தெரிவிக்கும் குறைகளுக்குத் தீா்வுகாண்பதற்காக ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் உரிய அதிகாரிகளை நியமித்துள்ளது. அந்த அதிகாரிகளின் முடிவுகளை மேல்முறையீடு செய்யும் வகையில் குறைதீா் மேல்முறையீட்டு குழுவை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடா்பாக தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில், ‘‘குறைதீா் மேல்முறையீட்டு குழுவானது, தெரிவிக்கப்படும் குறைகளுக்கு 30 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும். அக்குழுவின் முடிவானது சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். அவற்றை அந்நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘சமூக ஊடகப் பயனாளா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வுகாண கூடுதல் வழிமுறைகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயனாளா்களின் மேல்முறையீட்டுக்குத் தீா்வு காணும் வழிமுறையை சமூக ஊடக நிறுவனங்களே பரிந்துரைத்தால், அதைக் கருத்தில் கொள்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. பயனாளா்களுக்கு உரிய தீா்வு கிடைக்கும் நோக்கில் வழங்கப்படும் பரிந்துரைகளை அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை ஜூலை இறுதிக்குள் வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரைவு விதிகள் தொடா்பாக மக்களிடம் விரிவாக கருத்துகள் பெறப்படும். இணையத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’’ என்றாா்.



Read in source website

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை (எஸ்எஃப்எஸ்ஐ) வெளியிட்டு அவா் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாநிலங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஆரோக்கியமான உணவு நடைமுறைகளை செயல்படுத்துவதிலும் எப்எஸ்எஸ்ஏஐ-யின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு சூழலில் நோ்மறை மாற்றத்தை ஏற்படுத்துவதையும், போட்டி சூழலை உருவாக்குவதையும் இலக்காக கொண்டே கடந்த 2018-19-இல் எஸ்எஃப்எஸ்ஐ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்புக்கான ஐந்து அளவீடுகளைக் கொண்டு மாநிலங்களின் செயல்திறன் அளவிடுவதற்காக எஸ்எஃப்எஸ்ஐ உருவாக்கப்பட்டது. 2021-22-ஆம் ஆண்டுக்கான இந்த குறியீட்டு பட்டியலில் பெரிய அளவிலான மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடா்ந்து, குஜராத் மற்றும் மகாராஷ்டிர ஆகியவை உள்ளன.

சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா முதலிடத்திலும், அதனைத் தொடா்ந்து மணிப்பூா் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன.

யூனியன் பிரதேசங்கள் பிரிவில், ஜம்மு-காஷ்மீா், தில்லி, சண்டீகா் ஆகியவை முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

மாநில உணவு பாதுகாப்பு பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சாதித்துக் காட்டிய மாநிலங்கள் பாராட்டுக்குரியவை என்றாா் அவா்.



Read in source website

பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறும்போது, நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாக விளங்குவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘கரோனா தொற்று பரவல் காலத்தில் சில்லறை முதலீட்டாளா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்நிய முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறும்போது, சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாகச் செயல்படுகின்றனா்.

அந்நிய முதலீடுகள் வெளியேறினாலும் நாட்டில் உள்ள சிறு முதலீட்டாளா்கள் காரணமாகப் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திப்பதில்லை. தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ந்து வருகின்றன. அரசின் சேவைகளும் எண்மமயமாகி வருகின்றன. ஒழுங்காற்று நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும் எண்மமயமாக்கலில் முன்னிலை வகிக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்திய தொழிற்போட்டி ஆணையம் (சிசிஐ) உள்ளிட்டவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்க வேண்டும். அன்றாட நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இணைய விவகாரங்களில் ஏற்படும் பிரச்னையை விரைந்து சரிசெய்வதற்கான மனிதவளத்தை அனைத்து நிறுவனங்களும் பெற்றிருக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சுமாா் ரூ.4.46 லட்சம் கோடி நிதியை வழங்கி வருகிறது. அந்த நிதி செலவிடப்படும் முறையை அறிந்துகொள்வதற்காக ஒற்றை தலைமை மைய (எஸ்என்ஏ) வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த வலைதளம் நிதி நிா்வாகத்தை மேம்படுத்துவதோடு வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும்’’ என்றாா்.

மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் வா்மா கூறுகையில், ‘‘நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, அனுமதி பெறும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை இணையவழியில் கொண்டுவருவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகித உயா்வு உள்ளிட்டவற்றின் காரணமாக அந்நிய முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே வேளையில், கடந்த மாா்ச்சில் பங்கு வா்த்தகத்துக்கான ‘டிமேட்’ கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 6 கோடியை எட்டியதாக மத்திய டெபாசிட்டரி சா்வீசஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

 



Read in source website

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா-வியத்நாம் இடையிலான ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றாா். அங்கு ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை அவா் பயணம் மேற்கொள்கிறாா். அவரை வியத்நாம் தலைநகா் ஹனோய் விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா, வியத்நாம் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் வரவேற்றனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்தது.



Read in source website

மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த மாநாட்டில் உயா் கல்விக்கான 161 மத்திய நிறுவனங்களில் 53 நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் நேரடியாகவும் மற்றவா்கள் இணையதளம் வழியாகவும் கலந்து கொள்கின்றனா். இதில், ‘சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவின் உயா்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும், பொறுப்பும்; உயா் கல்வி நிறுவனங்களின் சா்வதேச தரவரிசை; பள்ளிக்கல்வி, உயா் கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு; வளா்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி’ உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகின்றன.

தொடக்க அமா்வில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகையில், ‘நமது இலக்குகளை அடைவதற்கு உயா்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. க்யூஎஸ் தரவரிசை பெற்றவையாக கடந்த ஆண்டு 29 இந்திய கல்வி நிறுவனங்கள் இருந்த நிலையில், நிகழாண்டு 35-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

தொடா்ந்து, உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளா்களுக்கு குடியரசுத் தலைவா் விருதுகளை வழங்கினாா்.

 



Read in source website

புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டின் எந்தபகுதியில் இருந்தும் வாக்களிக்கும் வகையில் புதிய முறையை பரிசோதிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் பதவியேற்றதில் இருந்து பல்வேறு தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளா்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றமாகி செல்கின்றனா். இதனால் அவா்களின் வாக்குகள் உள்ள மையங்களுக்கு வந்து வாக்களிப்பது கடினமாக உள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், இதுபோன்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தங்கள் வாக்குகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தே வாக்களிக்கும் முறையை பரிசோதிக்கும் நேரம் வந்துவிட்டது.

இதற்காக குழு அமைக்கப்பட்டு புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்து வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்னா் நடைமுறைப்படுத்தப்படும்.

மலைப்பகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நடைப்பயணமாக பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் தோ்தல் அதிகாரிகள் மூன்று நாள்களுக்கு முன்பே சென்றடையவும், அவருக்கான படிகள் இரட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வாக்குப் பதிவு மையங்களை மாநில தோ்தல் அதிகாரிகள் கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்படாத நபா்கள் அனுமதியின்றி திறக்க முற்பட்டால், அந்த இயந்திரம் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா தெரிவித்த கருத்துக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மாவும், தில்லி ஊடக பிரிவு தலைவா் நவீன்குமாா் ஜிண்டாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனா். அவா்களது கருத்துக்கு குவைத், கத்தாா், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த விவகாரம் குறித்து கேரள மாநிலம் கொச்சியில் செய்தியாளா்களிடம் மத்திய வா்த்தகம், தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

அரசின் பிரதிநிதிகள் யாரும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்பதால், அந்தக் கருத்து அரசின் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளித்துவிட்டது.

வளைகுடா நாடுகளுடன் நமக்கு நல்லுறவு உள்ளது. இந்த நட்பு தொடா்ந்து நீடிக்கும். இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றுதான் வளைகுடா நாடுகள் சொல்கின்றன. அதன்படி, கருத்து தெரிவித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களை குறித்து கவலைப்பட தேவையில்லை.

கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு:

கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இடது ஜனநாயக முன்னணியும் ஜனநாயக கொள்கைகளைப் புறக்கணித்து அரசியல் படுகொலையை சாா்ந்துள்ளன. எஸ்டிபிஐ, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உடனான கம்யூனிஸ்டுகளின் தொடா்பு தெளிவாக தெரிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

கேரள உள்துறை நிலைகுலைந்துவிட்டது. இங்கு கட்டாய மதமாற்றம் நிகழ்வதாக கேள்விப்படுகிறேன். குறிப்பாக சிறுமிகளுக்கு கேரளத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆள்சோ்ப்பதற்கான மையமாக கேரளம் மாறிவிட்டது என்றாா் பியூஷ் கோயல்.

 



Read in source website

தென்னாப்ரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி தோ்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 6 சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தரையில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தைப் புலி. ஒரு காலத்தில் இந்தியாவில் சிறுத்தை புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை அதிக அளவில் வேட்டையாடியதால், சிறுத்தைப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்துபோனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.

‘சிறுத்தைப் புலி’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.

மற்றோா் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வர அந்நாட்டுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வந்து, 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.



Read in source website

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசுகையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடா்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின்படி, அப்பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது

நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

டென்மாா்க் 1

பிரிட்டன் 2

ஃபின்லாந்து 3

மால்டா 4

ஸ்வீடன் 5

லக்ஸம்பா்க் 6

ஸ்லோவேனியா 7

ஆஸ்திரியா 8

ஸ்விட்சா்லாந்து 9

ஐஸ்லாந்து 10

வல்லரசு நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

அமெரிக்கா 43

ரஷியா 112

சீனா 160

இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

காங்கோ குடியரசு 100

உகாண்டா 125

கென்யா 148

நைஜீரியா 163

இந்தியாவின் அண்டை நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

ஆப்கானிஸ்தான் 81

பூடான் 85

மாலத்தீவு 113

இலங்கை 132

நேபாளம் 162

பாகிஸ்தான் 176

வங்கதேசம் 177

மியான்மா் 179

ஆய்வின் பல்வேறு பிரிவுகள் இந்தியாவின் தரவரிசை

பல்லுயிா்ப் பெருக்கம் பாதுகாத்தல் 179

உயிரினங்கள் பாதுகாப்பு குறியீடு 175

உயிரினங்கள் வாழ்விட குறியீடு 80

காடுகள் இழப்பு 75

புல்வெளிப் பகுதிகள் இழப்பு 116

சதுப்புநிலப் பகுதிகள் இழப்பு 60

காற்றின் தரம் 179

கடலில் பிளாஸ்டிக் கலப்பு 135

பருவநிலை மாற்றம் 165

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பு 136

வேளாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு 47



Read in source website

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

உலக அளவில் அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன. மின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு அந்த நாடுகள் பெரிதளவில் நிலக்கரியை மட்டுமே நம்பியுள்ளன.

இதனை உணா்ந்தே, மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்ய அரசு அண்மையில் வலியுறுத்தியது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் அதிக அளவில் நிலக்கரியை கையிருப்பில் வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2022 மாா்ச் மாதத்தில் சீனாவின் நிலக்கரி உற்பத்தி 15 சதவீதம் அளவுக்கு உயா்ந்தது.

அதேபோன்று, கோல் இந்தியா நிறுவனம் தீவிர நடவடிக்கைகளின் மூலம் நடப்பாண்டில் நிலக்கரி உற்பத்தியை 12 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவு இறுதிச்சுற்றில் 250.6 புள்ளிகளுடன் அவா் முதலிடம் பிடித்தாா். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா (247.6) வெள்ளியும், ஸ்வீடனின் அனா நோா்மன் (225.6) வெண்கலமும் வென்றனா்.

ஏற்கெனவே அவனி லெகாரா எட்டியிருந்த 249.6 புள்ளிகள் தான் உலக சாதனை அளவாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறாா். அத்துடன், 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் அவா் தகுதிபெற்றாா். டோக்கியோ பாராலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்ற அவனி லெகாரா, பாராலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றாா்.

முன்னதாக இந்த பிரான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக அவனி லெகாராவுடன் சென்ற பயிற்சியாளா், பாதுகாவலா் ஆகியோருக்கு நுழைவு இசைவு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் அந்த விவகாரம் சரிசெய்யப்பட்டது.



Read in source website

அமெரிக்கா: அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து சோதனையில் புற்றுநோயை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட புற்றுநோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் நடத்திய சிறிய மருத்துவ பரிசோதனையில், 18 புற்றுநோயாளிகள் சுமார் ஆறு மாதங்களுக்கு டோஸ்டார்லிமாப்(Dostarlimab) என்ற மருந்தை உட்கொண்டனர், இறுதியில், அவர்கள் மேற்கொண்ட சோதனையில் புற்றுநோய் செல்கள் மறைவதை கண்டறிந்தனர்.

டோஸ்டார்லிமாப் என்பது பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு மருந்து. இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

புற்றுநோயாளிகள் கீமோதெரபி, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால், குடல் மற்றும் பல்வேறு உடலுறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.  எனவே 18 நோயாளிகள் அடுத்த கட்டமாக  டோஸ்டார்லிமாப் மருந்து சோதனைக்குச் சென்றனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, சிகிச்சை இல்லாமல்  டோஸ்டார்லிமாப் மருந்தால் குணமாகியுள்ளது.

எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் அனைத்து சோதனையிலும் புற்றுநோய் செல்கள் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோஸ்டார்லிமாப் மருந்தால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன.  டோஸ்டார்லிமாப் மருந்து பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போது 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

டோஸ்டார்லிமாப் மருந்தை மதிப்பாய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், சிகிச்சையானது நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது, ஆனால் பெரிய அளவிலான சோதனை தேவையென்றும்,  இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

தங்கள் நாட்டில் சீனா கடற்படைத் தளம் அமைக்கவிருப்பதாக வெளியான ஊடகத் தகவலை கம்போடியா மறுத்துள்ளது.

இது குறித்து அரசு செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ரியம் கடற்படைதளத்தை விரிவாக்குவதற்காக சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். அதற்காக, அந்த தளத்தை சீனா ராணுவ ரீதியில் பயன்படுத்தவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானதாகும்’ என்றாா்.



Read in source website

‘அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் கூறினாா்.

அவா், திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தபோது, முகமது நபி (ஸல்) குறித்து பாஜக முன்னாள் நிா்வாகிகள் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டெஃபான் துஜாரிக் அளித்த பதில்:

அந்த செய்திகளை நான் பாா்த்திருக்கிறேன்; ஆனால் அவற்றைப் பொருள்படுத்தவில்லை. அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம் என்றாா் அவா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மாவும், கட்சியின் தில்லி ஊடக பொறுப்பாளராக இருந்த நவீன் குமாா் ஜிண்டாலும் முகமது நபியைக் குறித்து ஊடகத்தில் கருத்து தெரிவித்தது முஸ்லிம்களின் கண்டனத்துக்கு ஆளானது.

தொடா்ந்து, அதற்கு குவைத், கத்தாா், ஈரான் போன்ற முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடுமையான எதிா்ப்புகள் வந்தன. இதையடுத்து நூபுா் சா்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தும், நவீன் குமாா் ஜிண்டாலைக் கட்சியில் இருந்து நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது. மேலும், அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிப்பதாகவும் எந்தவொரு மதத்தின் தலைவரையும் அவமதிப்பதை கடுமையாக எதிா்ப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.



Read in source website

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.

இந்த சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலரிடமிருந்து எதிா்ப்பு எழுந்ததால், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட பின்னா் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 20ஏ சட்டப் பிரிவை நீக்கும் வகையில் 21-ஆவது சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. தற்போதைய பொருளாதார பிரச்னைக்கு தீா்வு காணாமல் 21-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றக் கூடாது என ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தன்னை பிரதமராக நியமித்த அதிபரை பலவீனப்படுத்தி தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள பிரதமா் ரணில் விக்ரமசிங்க முயல்வதாகவும் சிலா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதையடுத்து, அனைத்துத் தரப்பினரும் வரைவு மசோதாவை ஏற்றுக்கொண்ட பின்னா் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனவும், அடுத்த வாரம் அமைச்சரவையில் வரைவு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் எனவும் ஆளும் கட்சி எம்.பி. சரித ஹெராத் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

 



Read in source website

மதுரை: ''மனிதகுல மேம்பாட்டுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவுக்கு பயன்படுத்துகிறார்கள்'' என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை திருபனந்தாள் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டபோது, இனிமேல் யாரையும் அவதூறாக பேச மாட்டேன் என சாட்டை துரைமுருகன் உறுதிமொழி கடிதம் வழங்கினார். இதையேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக துரைமுருகன் கைதானார். இதையடுத்து திருபனந்தாள் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து, உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி செயல்பட்டதால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நீதிபதியின் உத்தரவில் கூறியிருப்பதாவது: ''இரண்டாம் உலகப் போரின்போது 1945-ல் ஹிரோஷிமா - நாகசாகியில் அணு குண்டு போட்டபோது, அணு சக்தியை கண்டுபிடித்த டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும்போது, மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே நான் அணு சக்தியை கண்டுபிடித்தேன். அது பேரழிவுக்கு பயன்படுத்தப்படும் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு எதிர்பார்த்திருந்தால் அணு சக்தியை கண்டுபிடித்திருக்கவே மாட்டேன் என்றார்.

மனித குலத்தின் நலனுக்காகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இணையம் என்பது 21-வது நூற்றாண்டில் அற்புதமான கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பு பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. யூடியூப் என்பது ஆன்லைன் வீடியோ பரிமாற்றம் செய்யப்படும் சமூக வலைதளமாகும். இதனை மாதம் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். தினமும் நூறு கோடி மணி நேரத்துக்கு மேல் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் யூடியூப் 63 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. சாதாரண நபர்கள் கூட தங்களின் அன்றாட செயல்பாடுகள், சிந்தனைகள், பயண அனுபவங்களை யூடியூப்புகளில் பதிவிடுகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் யூடியூப் வீடியோக்களை பார்த்து சமையல் செய்வதும் நடக்கிறது.

இணையதளத்தை பயன்படுத்தி ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தும் வீடியோ பதிவேற்றம் செய்து ஒருவரை குற்றவாளியாக்க முடியும். இவற்றை கட்டுப்படுத்த 2000ம் ஆண்டில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் சமூக வலை தளம் நடத்துவோரை கட்டுப்படுத்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் சட்டத்தை அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவது இல்லை.

துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது உட்பட பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த வீடியோக்களை பார்க்கும் தற்காலிக தலைமுறை குழந்தைகளின் மனதில் குழப்பம் உருவாகி மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் ஆட்சேபகரமான வீடியோக்களை முடக்குவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக சமூக வலை தளத்தினர் முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற உத்தரவு கேட்பதாகவும், வெளிநாட்டிலிருந்து இயங்கும் சமூக வலைதளத்தினர் சைபர் கிரைம் போலீஸாரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதே இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய நிலப்பரப்பில் இயங்கும் சமூக வலை தளத்தினர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். இந்த சமூக வலை தளத்தினர் பயனர்களுக்கான தனி வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக யூடியூப் சேனல்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஒப்பந்த விதிகளை மீறும் சேனல்களை உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் தங்களின் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் அந்த வீடியோக்களை நீக்க வேண்டும், முடக்க வேண்டும். அதற்காக முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற உத்தரவுகளை கேட்கக்கூடாது. தங்களின் கவனத்துக்கு வந்த பிறகும் ஆட்சேபத்துக்குரிய வீடியோக்களை முடக்கம், நீக்கம் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தினர் மீது மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

சென்னை: காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கான சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்களுக் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அரசுத்துறைகள் 50 இலட்சம் ரூபாய் வரை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை நேரடி கொள்முதல் செய்வதை ஏதுவாக்கும் வகையில் அரசுத்துறைகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் புத்தொழில் நிறுவனங்கள்-அரசுத் துறைகள் இடையேயான கொள்முதல் நாள் என்ற தொடர் நிகழ்வினை ஒருங்கிணைக்கிறது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்.

மாதந்தோறும் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் இரண்டு அரசுத் துறைகள் சார்ந்து உயர் அலுவலர்கள் பங்கேற்பர். அத்துறை சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்று அவர்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி விளக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமையும். பின்பு துறை சார்ந்து தேவையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, தகுதியான புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும்.

வரும் 14ம் தேதி , சமூக பாதுகாப்பு துறையில் பங்கேற்கும் நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கான அரசு காப்பகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள சிறுவர்,சிறுமியருக்காக இத்துறை செயல்படுகிறது. பெற்றோர் இல்லாதவர்கள், தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் மட்டும் உடையவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மீட்கப்பட்டவர்கள், குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 44000 குழந்தைகள் இந்த காப்பகங்களில் உள்ளனர்.

இந்தக் குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து இந்நிகழ்வில் பங்கெடுக்க விண்ப்பிக்கலாம். குறிப்பாக கல்வி, திறன் மேம்பாடு,மன நலம், வாழ்வியல் வழிகாட்டல் சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு www.startuptn.in இணையதளத்தை பார்க்கவும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கூம்பில்லா சிங்கன், மலைவாழை உட்பட பாரம்பரியமிக்க அழியும் தருவாயி்ல உள்ள 31 அரிய வாழை ரகங்களை மீட்டெடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்காவில் நட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் அரிய வகையான வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்ததை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர்செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இருந்த நிலையில், சில இனங்கள் அழிந்துவிட்டன. இன்னும் ஒரு சில இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

இத்தகைய 31 ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணை சுற்றுலா பகுதியில் செம்மட்டி, கரும்மட்டி, கூம்பில்லா சிங்கன், பூங்கதலி, மட்டி, கற்பூரவல்லி, ஆயிரம்காய்ச்சி, மலைவாழை, நெய்பூவன், சிங்கன், பாளையன்கோட்டை, படத்தி, இரசகதலி, மொந்தன் வாழை, நாட்டுப்பேயன், சக்கைப்பேயன், வெள்ளைத் தொழுவன், செந்தொழுவன், நேந்திரன், நெய்க்கதலி போன்ற வாழை ரகக்கன்றுகளை கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி அன்று நடும் பணியை தொடங்கி வைத்தேன்.

மேலும் 11 வாழை இரகங்களான கூம்பில்லா வாழை, திண்டுக்கல் சிறுமலை, கண்ணில் துளுவன், இந்தோனேசியா, மலைமட்டி, கருந்துளுவன், நெய் சிங்கன், தேன் மட்டி, பப்ளு, காவேரி கண்ணன், சிஓ-2 போன்றவை நடப்பட்டு தோட்டக்கலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல இனங்கள் குலைதள்ளி வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளைக் கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவுசெய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மேயர் மகேஷ், தோடக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி இயக்குநர்கள் சரண்யா, ஆறுமுகம் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Read in source website

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் 300-க்கும் அதிகமானோர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்குள்ள கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் கரை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிஉள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.

இவர்களில் பெரும்பாலானோர் திருஷ்டி பொம்மைகள் விற்கும் பணியிலும், பறை, டிரம்ஸ் செட் அடிக்கும் பணியிலும், பெண்கள் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்குள்ள குழந்தைகள் சாதிச் சான்றிதழ் இல்லாததால், 8-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், பெண்கள் சிறுவயதிலேயே திருமணமாகியும், சிறுவர்கள் ஏதாவது கிடைக்கும் வேலைக்கும் சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், மாரியப்பன் ஆகியோர் கூறும்போது, ‘‘அரசு எங்களுக்கு நிலப்பட்டா வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை இடத்தை அளந்து தரவில்லை. எங்களுக்கு இடத்தை அளந்து, அரசு வீடு கட்டித் தர வேண்டும்.

எங்கள் மூதாதையர்கள் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த நிலையில், தற்போது கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறோம். மேலும் திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசு உரிய சாதிச் சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க உதவியாக இருக்கும்.

எங்கள் குழந்தைகள் வாழ்க்கை சாதிச் சான்றிதழ் இல்லாததால் வீணாகி வருகிறது. 15 வயதிலேயே பெண் குழந்தைகள் திருமணமாகிச் சென்று விடுகின்றனர். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். எங்களுக்கு அரசு சாதிச் சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்கவும், எங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையவும் உதவியாக இருக்கும்.

இதேபோல, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களிலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்பு வீணாகி வருகிறது.

துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறார் திருமணம் நடைபெற்றுள்ளது’’ என்றார்.

துறவிக்காடு சமூக ஆர்வலரும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினருமான எஸ்.செல்வராஜ் கூறும்போது, ‘‘இப்பகுதியில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனர். போதிய படிப்பறிவு இல்லாத நிலையில், இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள் என்பது அதிகரித்து வருகிறது.

எனவே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து ஆய்வு செய்து, இந்த சமூக மக்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்கவும், குடியிருக்க வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Read in source website

புதுடெல்லி: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்யப்பட்டது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம் (2,000 கி.மீ.), அக்னி 2 (3,500 கி.மீ.), அக்னி 3 (3,000 முதல் 5,000 கி.மீ.), அக்னி 4 (4,000 கி.மீ.), அக்னி 5 (8,000 கி.மீ.) என அடுத்தடுத்து அக்னி வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அடுத்ததாக அக்னி 6 ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 12,000 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அக்னி வகை ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்னி 4 ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இது 4,000 கி.மீ. தொலைவு வரை பாயக்கூடியது. 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி வகை ஏவுகணைகள் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானின் எந்த பகுதி மீதும் இந்திய ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியும்.



Read in source website

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நீரிழிவு நோயால் 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிக நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த நீரிழிவு நோயாளிகளில் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர்.

கரோனா தொற்றால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

இந்தியாவில் நீரிழிவு முதல் வகையால் (டைப் 1) பாதிக்கப்படும் சிறார், இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது. பெரும்பாலும் மரபணு ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

நீரிழிவு முதல் வகையால் பாதிக்கப்பட்டோர், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும். சிறாருக்கு போதுமான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

நாள்தோறும் 3 வேளை உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றி, 6-7 முறை சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி இன்சுலின் மருந்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868 ரன்கள் எடுத்துள்ளார் அவர். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மிதாலி. மொத்தம் 7805 ரன்கள் குவித்துள்ளார்.

இதே ஜூன் மாதத்தில் கடந்த 1999 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார் மிதாலி. அப்போது அவருக்கு 16 வயது. அன்று முதல் இந்திய அணிக்காக மும்முரமாக ரன் குவித்து வந்தார். சீனியர் வீராங்கனையாக அணியை திறம்பட வழிநடத்தி வந்தார். இப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்த தனது அறிவிப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம், சக வீராங்கனைகள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் மிதாலி. அவரது ஓய்வு முடிவை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு விடை கொடுத்து வருகிறார்கள்.



Read in source website

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இனி ஒவ்வொரு முறையும் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறும். இந்த ஜோதி ஓட்டம் சதுரங்கம் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இம்முறை நேரமின்மை காரணமாக ஜோதி ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் எனவும், சுடர் பயணிக்கும் பாதை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



Read in source website

லண்டன்: சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் 14-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றிருந்த நார்வேயின் காஸ்பர் ரூட் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் கால் இறுதி சுற்றில் ரபேல் நடாலிடம் வீழ்ந்த போதிலும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 8,770 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இதேபோன்று அரை இறுதியுடன் வெளியேறிய ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 8,160 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் தொடர்கிறார். காயம் காரணமாக அரை இறுதி ஆட்டத்தின் போது விலகிய ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 7,795 புள்ளிகளுடன் 3-ம் இடம் வகிக்கிறார்.



Read in source website

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால கடனாக பெறும் வீட்டுக்கடனில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கும். தவணைத் தொகை அதிகரிக்கும் நிலையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயரும் வட்டி

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ (வட்டி) விகித்தை கடந்த மே மாதம் அவசர கூட்டத்துக்கு பின்பு ரிசர்வ் வங்கி 0.40 சதவீதம் உயர்த்தியது. இதனால் ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக ஏற்கெனவே உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் 90 பைசா வட்டி விகிதம் உயர்ந்து விட்டது.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.

ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது வங்கிகளுக்கான நிதிச் செலவு அதிகரிக்கிறது. ரெப்போ விகித உயர்வின் உடனடி தாக்கம் வீட்டுக் கடன் போன்ற சில்லறைக் கடன்களில் தெரியத் தொடங்கும். குறிப்பாக நீண்டகாலம் கட்ட வேண்டிய வீட்டுக்கடன் தொகையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதத்தில் 6.50 சதவிகிதம் குறைந்திருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஜூன் மாதத்தில் 7.60 சதவிகிதமாக உயரக்கூடும். இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறியதாவது:

ரெப்போ விகிதம் உயர்வால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரும். 36 நாட்களுக்குள் மொத்தமாக 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து வகையான வீட்டுக் கடன்களும் அதிக வட்டி உயர்வை நோக்கி செல்லும். இது ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள், புதிய கடன் வாங்குபவர்களையும் பாதிக்கும்.

நீண்டகாலம் கட்ட வேண்டுமா?

வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகித உயர்த்தும். இது கடைசி உயர்வாக இருக்காது. பணவீக்கம் குறையும் வரையிலும் கூட வட்டி உயர்வு இருக்கக்கூடும். ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டுக்குள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ ரேட் உயர்வால் வீட்டுக் கடன்களின் தவணை காலம் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் 20 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் அந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாக அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தால் அவர் கட்ட வேண்டிய தவணைத் தொகை என்பது மேலும் 24 மாதங்கள் அதிகரிக்கும்.

அதேசமயம் தவணை எண்ணிக்கை அதிகரிக்காமல் தொகையை அதிகரிக்க வாங்கியவர் விரும்பினால் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்வால் சராசரியாக ஒரு லட்சத்திற்கு கூடுதலாக ரூ.30 செலுத்த வேண்டும். சராசரியாக மாந்தோறும் செலுத்தும் தொகை சுமார் 4 சதவீதம் அதிகரிக்கும். இந்த விகிதம் என்பது, நபர், வங்கி, வாங்கிய காலம் ஆகியவற்றை பொறுத்து மாறும். இது அனைவருக்கும் ஒரே அளவாக இருக்காது.

கடன் பெறுபவர்கள் தங்கள் வட்டிச் சுமையைக் கட்டுப்படுத்த தவணை உயர்வுக்கு பதிலாக மொத்தத் தொகை செலுத்துதல் போன்ற முன் பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்திக் குறைக்கலாம்.

எப்போதும் கூடுதல் வட்டியின் சுமையை குறைக்க சிறிது தொகையை மாற்றாமல் அல்லது பகுதியளவு முன்கூட்டியே செலுத்துங்கள். ஆனால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காத வகையில் அமைகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு கூறினர்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரித்துள்ளது. 6.60 லட்சம் டன் பாமயிலை இந்தியா மே மாதம் இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரல் மாத இறக்குமதியைவிட 15 சதவீதம் அதிகம்.

பாமாயில் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தோனேஷியா முதன்மை நாடாக உள்ளது. ஆனால், உள்நாட்டு விலை உயர்வால் கடந்த ஏப்ரல் மாதம் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை விதித்தது.

இந்நிலையில் மலேசியா, தாய்லாந்து, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா பாமாயில் இறக்குமதியை அதிகரித்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் மே மாதம் 1.23 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் அதன் இறக்குமதி 67,788 டன்னாக இருந்தது. சோயா எண்ணெய் இறக்குமதி ஏப்ரலில் 3.15 லட்சம் டன்னாக இருந்தது. மே மாதம் அதன் இறக்குமதி 3.52 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு வரிச் சலுகை அறிவித்துள்ள நிலையில் வரும் மாதங்களில் அதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோயா எண்ணெயை அர்ஜென்டைனா மற்றும் பிரேசிலில் இருந்தும் சூரியகாந்தி எண்ணெயை ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்கிறது.



Read in source website

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், சிக்கனமான நகரம் பட்டியல் வெளியாகியுள்ளது. மார்ச் 2021ன் ஆய்வின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இசிஏ இன்டர்நேஷனல் (ECA International) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி உலகிலேயே வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரமாக ஆசியாவின் ஹாங்காங் நகரம் தேர்வாகியுள்ளது. நியூயார்க் இரண்டாம் இடத்திலும் ஜெனீவா மூன்றாம் இடத்திலும் உள்ளன. லண்டன் மற்றும் டோக்கியோ முறையே 4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன.

டாப் 5 காஸ்ட்லி நகரங்களில் லண்டனும், டோக்கியோவும் இடம்பெற அதிகரித்துவரும் வாடகையே பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது. நியூயார்க், லண்டன் நகரங்களில் வாடகைக் கட்டணங்கள் முறையே 20% மற்றும் 12% அதிகரித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 13வது இடத்தில் உள்ளது. வாடகை, பெட்ரோல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் விலைகள் அடிப்படையில் சிங்கப்பூர் 13வது இடத்தில் உள்ளது. சீன நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோ இந்தப் பட்டியலில் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

உலகிலேயே வாழ மிகவும் சிக்கனமான நகரமாக துருக்கி நாட்டின் தலைநகரான அங்காரா உள்ளது.

சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்: > உலகிலேயே காஸ்ட்லியான நகரான ஹாங்காங்கில் ஒரு கோப்பை தேநீர் விலை 5.21 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை $3.04. ஒரு கிலோ தக்காளியின் விலை $11.51 டாலர்.
> ஈரான் தலைநகரான டெஹ்ரானில் உலகிலே பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலை $0.09க்குப் பெறலாம்.
> உக்ரைன் போரால் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% வரை அதிகரித்துள்ளது.
> பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. சராசரியாக 37% வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக லெபனானின் பெய்ரூட் நகரில் 1,128% அதிகரித்துள்ளது.

டாப் 20 காஸ்ட்லியான நகரங்கள்:

ஹாங்காங் (1)
நியூயார்க் (4)
ஜெனீவா (3)
லண்டன் (5)
டோக்கியோ (2)
டெல் அவிவ் (7)
ஜூரிச் (6)
ஷாங்காய் (9)
குவாங்சோ (10)
சீயோல் (8)
சான் ஃபிரான்சிஸ்கோ (15)
சென்சென் (12)
சிங்கப்பூர் (13)
பீஜிங் (16)
ஜெருசலே (18)
பெர்ன் (17)
யோஹோஹோமா (11)
கோபன்ஹேகன் (14)
அஸ்லோ (19)
தைபே (20)

அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண் தரவரிசை எண்



Read in source website

ராஜ்ய சபா எம்.பி.க்கள் தேர்வு எப்படி? அவர்களுக்கான தேர்தல் நடைமுறை என்ன? ராஜ்ய சபாவுக்கான அதிகாரங்கள் என்ன?

Manoj C G

Explained: How are Rajya Sabha MPs elected?: ஜூன் 10ஆம் தேதி நான்கு மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போட்டிக் கட்சிகளின் குதிரை பேரத்தைத் தவிர்க்க, குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ரிசார்ட்டுகளில் பல்வேறு கட்சிகள் தங்க வைத்துள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கு முன் அடிக்கடி காணக் கிடைக்கும் இந்த நடைமுறையானது, ராஜ்ய சபாவில் உள்ள இடங்களுக்கு கட்சிகள் கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ராஜ்யசபா தேர்தல் ஏன் முக்கியமானது?

லோக்சபா சபாநாயகரால் பண மசோதாக்களாக நியமிக்கப்பட்டவற்றைத் தவிர, சட்டங்களை இயற்றுவதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும், ஒவ்வொரு ராஜ்யசபா இடமும் முக்கியம். ஏனெனில் சட்ட முன்வடிவு, சட்டமாக மாற, ராஜ்ய சபாவின் ஒப்புதல் தேவை.

ராஜ்யசபா அல்லது மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. 123 என்ற பாதியை எட்டுவது ஒருபுறம் இருக்க, கடந்த மூன்றரை தசாப்தங்களில் எந்த ஆளும் கட்சியும் 100 என்ற எண்ணிகையைத் தொட்டதில்லை. பா.ஜ.க தலைமையிலான என்டிஏ ஏப்ரல் மாதத்தில் 100ஐத் தொட்டது, ஆனால் பா.ஜ.க உறுப்பினராக இருந்த ஐந்து நியமன உறுப்பினர்களின் ஓய்வுக்குப் பிறகு அதன் பலம் இப்போது 95 ஆகக் குறைந்துள்ளது.

வேளாண்ச் சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான மசோதாக்களை கூட்டணிக் கட்சிகள் மற்றும் அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளின் ஆதரவுடன் NDA அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியுள்ளது.

பண மசோதாக்கள் விஷயத்தில் மாநிலங்களவைக்கு வரையறுக்கப்பட்ட பங்கு உள்ளது. இது ஒரு பண மசோதாவை திருத்த முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருத்தங்களை பரிந்துரைக்க முடியும், மேலும் லோக்சபா இவை அனைத்தையும் அல்லது சிலவற்றை, ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

ராஜ்யசபா தேர்தல் எத்தனை முறை நடத்தப்படுகிறது?

ராஜ்யசபா நிரந்தரமான சபை, கலைக்க முடியாது. சபை தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டாம் ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர், அரசியலமைப்பின் 83(1) பிரிவின் கீழ், இந்த காலியிடங்களை நிரப்ப “இரு ஆண்டு தேர்தல்கள்” நடத்தப்படுகின்றன. ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

245 உறுப்பினர்களில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். 233 பேர் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். ராஜினாமா, இறப்பு அல்லது தகுதி நீக்கம் காரணமாக ஏற்படும் காலியிடங்கள் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு முன் பதவியில் இருந்தவர்களின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு சேவை செய்கிறார்கள்.

சட்டப்பிரிவு 80(3)ன் கீழ், நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களும் இலக்கியம், அறிவியல், கலை போன்ற விஷயங்களில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நியமன உறுப்பினர் நியமிக்கப் பெற்ற ஆறு மாதங்களுக்குள் கட்சியில் சேரலாம்.

ராஜ்யசபா தேர்தல்: யார் வாக்களிக்கிறார்கள்? எப்படி?

ராஜ்யசபா எம்.பி.க்கள் மறைமுக தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டப்பிரிவு 80(4) மாநில சட்டசபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் ஒரே ஒரு மாற்றத்தக்க வாக்கு மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ராஜ்யசபா இடங்களை ஒதுக்குவது தொடர்பாக குறிப்பிடுகிறது. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 31 ராஜ்யசபா இடங்களும், கோவாவில் 1 இடமும் உள்ளன. காலியிடங்களை விட அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால், தேர்தல்கள் நடத்தப்படுகின்றன; இல்லையெனில், வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன?

ஒரு வேட்பாளருக்கு தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கையானது, காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் சபையின் பலத்தைப் பொறுத்தது. ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தால், 1961 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் தேவையான ஒதுக்கீடு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை எடுத்து, அதை 2 ஆல் வகுத்து, 1 ஐக் கூட்டி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, சட்டசபை உறுப்பினர்களால் 100 வாக்குகள் பதிவானால், ராஜ்யசபா வேட்பாளருக்கு தேவை:

100/2 + 1 = 51 வாக்குகள்

ஒன்றுக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருந்தால், ஒவ்வொரு முதல் விருப்பு வாக்குக்கும் 100 ஒதுக்கப்பட்ட மதிப்பின் அடிப்படையில் சமன்பாடு இருக்கும். அனைத்து வேட்பாளர்களுக்கும் வரவு வைக்கப்பட்ட வாக்குகளின் மதிப்புகள் மொத்தமாக உள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கையை விட மொத்தம் 1 ஆல் வகுக்கப்படுகிறது, மேலும் இந்த விகிதத்தில் 1 சேர்க்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் 3 ராஜ்யசபா காலி இடங்களுக்கு வாக்களித்தால், எந்தவொரு வேட்பாளருக்கும் தேவையான ஒதுக்கீடு

(100 × 100)/(3 + 1) + 1 = 2501

எந்தவொரு இடத்திற்கும், வேட்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெறத் தவறினால், இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் குறைந்த மதிப்பு.

தற்போதைய தேர்தல் எத்தனை இடங்களுக்கு நடைபெறுகிறது?

15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து 16 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் தேவைப்பட்டது. மீதமுள்ள 41 வேட்பாளர்கள் கடந்த வாரம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் ஆர்ஜேடியின் மிசா பார்தி ஆகியோர் அடங்குவர்.

ஹரியானாவில் (இரண்டு காலியிடங்கள்) மூன்றாவது வேட்பாளரான மீடியா அதிபர் கார்த்திகேய ஷர்மாவும், ராஜஸ்தானில் (நான்கு காலியிடங்கள்) ஐந்தாவது வேட்பாளரான ஜீ குழும நிறுவனரும் எஸ்செல் தலைவருமான சுபாஷ் சந்திரா பா.ஜ.க ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுவதாலும் தேர்தல்கள் அவசியமாகியுள்ளன.

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஜே.டி(எஸ்) ஆகிய கட்சிகள் நான்காவது இடத்திற்கு வேட்பாளர்களை நிறுத்தியதால், தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மகாராஷ்டிராவிலும் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்தை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

ஓய்வு பெறும் 57 உறுப்பினர்களில் 24 பேர் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அக்கட்சி, 16 இடங்களில் 6 இடங்களை கைப்பற்றும் பலம் பெற்றுள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதன் கூடுதல் வேட்பாளர்களைக் கணக்கிடவில்லை, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.,வின் பலம் 91 ஆக இருக்கும். அதனுடன் சேர்த்து காலியாக இருக்கும் ஏழு நியமன இடங்களும் பா.ஜ.க.,வுக்கு கிடைக்கும்.

காங்கிரசுக்கு 29 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் உறுப்பினர்கள் ஏழு பேர் ஓய்வு பெறுகின்றனர் மற்றும் அதன் நான்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரின் தலைவிதியில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் நிலையில் கட்சி மேலும் 4 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. எனவே அதன் பலம் 30-32 வரை செல்லும்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் பலம் 3ல் இருந்து 10 ஆக உயர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சிதான் அதிக இதில் லாபம் ஈட்டுகிறது. ஒய்எஸ்ஆர்சிபியின் பலமும் 6ல் இருந்து 9 ஆக உயரும்.

மசோதாக்களை நிறைவேற்றுவதைத் தாண்டி, ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை ஏன் முக்கியம்?

ராஜ்யசபா சில சிறப்பு அதிகாரங்களை கொண்டுள்ளது. மாநிலப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒரு விஷயத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்பது “தேசிய நலனுக்காக அவசியமானது அல்லது உகந்தது” என்று கூறி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுக்குக் குறையாமல் பெரும்பான்மையுடன் கூடிய தீர்மானத்தை ராஜ்ய சபாவில் நிறைவேற்றி, வாக்களித்தால் தான், அந்த விஷயத்தில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற முடியும். அத்தகைய தீர்மானம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் ஆனால் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்த காலத்தை ஒரு வருடத்திற்கு ஒரு முறை நீட்டிக்க முடியும்.

யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு பொதுவான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை உருவாக்க பரிந்துரைக்கவும் அதே வழியை பின்பற்றலாம். அத்தகைய சேவைகளை உருவாக்க பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

மேலும், தேசிய அவசரநிலை ஏற்பட்டால், ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியுற்றால் அல்லது நிதி அவசரநிலை ஏற்பட்டால், அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்ற குடியரசுத் தலைவர் பிரகடனங்களை வெளியிடும்போது, ராஜ்யசபாவுக்கு ஒரு பங்கு உண்டு. அத்தகைய ஒவ்வொரு பிரகடனமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், சில சூழ்நிலைகளில், ராஜ்யசபா சிறப்பு அதிகாரங்களை அனுபவிக்கிறது. மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அல்லது அதன் ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் லோக்சபா கலைக்கப்பட்டால், அரசியலமைப்பின் 352, 356 மற்றும் 360 வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் அதை அங்கீகரிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், அந்த பிரகடனம் செல்லுபடியனதாக இருக்கும்.



Read in source website

பிரேக் பூஸ்டர் சிக்கல்; 1 மில்லியன் பழைய மாடல் கார்களை திரும்ப பெறுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Mercedes to recall about 1 million older models worldwide: பிரேக் பூஸ்டரில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பழைய கார்களை திரும்பப் பெறுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

2004 முதல் 2015 வரை தயாரிக்கப்பட்ட எம்எல், ஜிஎல் (பிஆர் 164) மற்றும் ஆர்-கிளாஸ் (பிஆர் 251) சீரிஸ் மாடல்கள் இந்த பிரேக் பூஸ்டர் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70,000 கார்கள் ஜெர்மனியில் உள்ளன.

“அந்த சில வாகனங்களில், வாகனத்தின் கூட்டுப் பகுதியில் மேம்பட்ட அரிப்பினால் பிரேக் பூஸ்டரின் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று Mercedes-Benz ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இது வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்குத் தேவையான பிரேக் மிதி விசையில் அதிகரிப்பு மற்றும்/அல்லது நிறுத்தும் தூரத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் Mercedes-Benz கூறியது.

Mercedes-Benz திரும்ப பெறுவதை உடனடியாக தொடங்கி உள்ளது.



Read in source website

 பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கில், அவர் மீது போதிய ஆதாரமில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கும் திருப்பம். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படுவதும், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், ஊடகங்களில் கேவலப்படுத்தப்படுவதும், அதற்குப் பிறகு தகுந்த ஆதாரமில்லை என்று தெரிவிக்கப்படுவதும் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைப்பையே கேலிக்கு உள்ளாக்குகின்றன.
 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை கடற்கரைப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்றில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அந்தக் கப்பலில் இருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கோவாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த அந்த சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட 20 பேரில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர்.
 சொகுசுக் கப்பலில் சோதனை நடத்தியது, காணொலியில் பதிவு செய்யப்படவில்லை; ஆர்யன் கானுக்காக அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சென்ட் போதைப் பொருள் வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதற்காக அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதா என்றால் அதுவும் இல்லை; அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை - இவையெல்லாம் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் உண்மைகள்.
 தேசிய சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 14 பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்யன் கான் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கு விசாரணையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொண்டதற்காக, தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைப் பாராட்ட வேண்டும்.
 அதே நேரத்தில், முறையாக விசாரிக்காமலும், பொறுப்பில்லாமலும் குற்றம் சாட்டி, விளம்பரத்துக்காகவும், பரபரப்புக்காகவும் பிரபலங்களை துன்புறுத்தும் அதிகாரிகள் கடுமையான கண்டனத்துக்கு உரியவர்கள். இதற்கு முன்பு, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து, அவரது காதலி ரியா சக்ரவர்த்தி இதே மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் ஆதாரமில்லாமல் துன்புறுத்தப்பட்டதும், அலைக்கழித்து கேவலப்படுத்தப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.
 போதைப்பொருள் தடுப்பு துறை மும்பை பிரிவின் இயக்குநராக இருந்த சமீர் வான்கடே, நடிக, நடிகையரிடம் தனது அதிகார பலத்தைக் காட்டி அச்சுறுத்தி பணம் பறிக்க முயல்கிறார் என்கிற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. இப்போதும் அதே சமீர் வான்கடே தலைமையிலான குழுதான் ஆர்யன் கானை அடிப்படை ஆதாரமில்லாமல் கைது செய்து, நடிகர் ஷாருக் கான் குடும்பத்தை சந்தி சிரிக்கச் செய்தது.
 இயக்குநர் சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வருவாய் பணி அதிகாரியான வான்கடே, இப்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, அவரது தாய்த்துறையான வருமான வரித்துறையின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். போலி ஜாதிச் சான்றிதழின் அடிப்படையில் பட்டியலினத்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் குடிமைப் பணியில் சேர்ந்தவர் சமீர் வான்கடே என்கிற குற்றச்சாட்டு குறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்பதும் தெரியவில்லை.
 ஆப்கானிஸ்தான், தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது முதல், இந்தியாவுக்குள்ளேயும், இந்தியா வழியாகவும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ராஜாஜி சாலையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 ஞாயிற்றுக்கிழமை, குஜராத் மாநிலம் ஜகாவ் கடலோரப் பகுதியில் 49 கிலோ போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 ஒரு வாரத்துக்கு முன்பு, லட்சத் தீவு கடற்கரைப் பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்புள்ள 205 கிலோ ஹெராயினும், கேரளத்திலுள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில், தான்சானியா நாட்டு பிரஜை ஒருவரிடமிருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள சுமார் மூன்று கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் வழியாக பஞ்சாபுக்கும், மியான்மரிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கும், கடற்கரை வழியாக ஏனைய பகுதிகளுக்கும் போதைப் பொருள்கள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றன. பள்ளி சிறுவர்கள் வரை போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 போதைப்பொருள்களைக் கடத்தும் சர்வதேச கும்பல்களை அடையாளம் கண்டு தடுப்பதற்கு பதிலாக, அப்பாவிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. அச்சுறுத்தும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அப்பாவிகளை பயமுறுத்திப் பணம் பறிக்க முற்படுகிறது அதிகாரிகளில் ஒரு பிரிவு. இதற்குப் பின்னால் அரசியல் கட்சிகளும் (தலைவர்களும்) இருக்கக்கூடும்.
 ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார், சந்தோஷம். கொள்ளை நோயைப்போலப் பரவிக் கொண்டிருக்கும் போதை நோயிலிருந்து இந்தியாவை யார், எப்போது, எப்படி விடுவிக்கப் போகிறார் என்கிற கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை.



Read in source website

 தமிழ்நாட்டின் கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்து விட்டதால் தமிழ்நாட்டுக் கடலோர மீனவர் சமுதாயம் பேரிழப்பிற்கு ஆளாகிறது. இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே தக்க தருணம்.
 இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா எப்போதும் போல இப்போதும் ஆதரவு கரம் நீட்டி நிற்கிறது. துன்பம் நேரிட்டால் துணை நிற்பது மனிதநேயம் என்பது சரிதான். ஆனால், மனிதநேயம் கொண்டவர்களுக்கு துணைநிற்பது என்பது அதைவிட சரியானது.
 இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு மக்களாட்சி, நிலைத்த தன்மை, பொருளாதார மீட்சி திரும்பிட இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கிறது. அதற்காக கடந்த மாதம் ரூ. 11,400 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. மேலும் மருந்து, உணவுப் பொருள்களையும் இலங்கைக்கு அனுப்பியது. தமிழக அரசும் தனது பங்கிற்கு ரூ. 45 கோடி அளவில் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது.
 இந்திய அரசாங்கத்தினால் "நட்பு நாடு' என்று கூறப்படும் இலங்கை, தமிழ்நாட்டு மீனவர்களை நாள்தோறும் வேட்டையாடுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை தொழில் செய்ய விடாமல் பிடித்து, அடித்து, அவமானப்படுத்தி சிறைபிடிக்கிறது. நம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது?
 2022 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் சமயத்தில் 68 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இதே போல் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைபிடித்துச் சென்றனர்.
 உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு முயற்சி மேற்கொண்டும் விழா நாள்களில் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக அரசுத் தரப்பில், "கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்பவர்களே தவிர, தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்று கூறப்பட்டது.
 கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினர் 19 முறை நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பல படகுகள் அழிக்கப்பட்டு ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 73 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். அவற்றைத் திருப்பித் தரவில்லை. அன்று முதல் இன்று வரை, தமிழக முதல்வர்கள் இந்திய பிரதமர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 மத்தியில் அன்று காங்கிரஸ் ஆண்டது. இப்போது பாஜக ஆள்கிறது. ஆனாலும் எந்த மாறுதலும் இல்லை. நிலைமை அப்படியே தொடர்கிறது. நமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும்போதுதான் கச்சத்தீவு கவனத்துக்கு வருகிறது. கச்சத்தீவு நமது கட்டுப்பாட்டில் இருந்தபோது நம் மீனவர்கள் தாக்கப்படவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறிய பிறகுதான் இலங்கைக் கடற்படைக்கு துணிச்சல் வந்திருக்கிறது.
 கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. நாட்டின் எந்தவொரு பகுதியையும் வேறு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் சட்டம் 368-ஆம் பிரிவின்படி நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற்று அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 இந்த தீவு விஷயத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. 1974-ஆம் ஆண்டு இந்திய அரசு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கைக்கு கச்சத்தீவைக் கொடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று தமிழ்நாட்டின் சார்பாக 1991-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
 உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துபூர்வமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் "கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்னை இந்தியா - இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை கடற்பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 "அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியின் மீன்பிடிக்கும் உரிமை தமிழ்நாட்டுக்குக் கிடையாது. இருந்தபோதும் மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
 கச்சத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1.15 கி.மீ. புனித அந்தோணியார் திருக்கோயில் மட்டுமே அங்கே இருக்கிறது. வேறு எவ்விதக் கட்டுமானமும் இல்லை. 1974-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இந்திரா காந்தியும், இலங்கை பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயகவும் இருந்தபோது இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
 அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் 1974 ஜூலை 23 அன்று கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட இந்தியா முடிவெடுத்து விட்டதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 1976-இல் மீண்டும் ஒருமுறை இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
 இந்திய - இலங்கை கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு கச்சத்தீவைக் கொடுத்து சிறிமாவோ பண்டாரநாயக இலங்கையில் செல்வாக்கு பெற்று பதவியில் நீடிப்பதற்காக இந்திரா காந்தி எடுத்த ராஜதந்திர முடிவு என்றும், 40 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன என்றும் அப்போது ஆளும் தரப்பில் கூறப்பட்டது.
 தமிழ்நாட்டில் அப்போது திமுகதான் அதிகாரத்தில் இருந்தது. திமுக தலைவர் மு. கருணாநிதியே முதலமைச்சராகவும் இருந்தார். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருந்தது. இருந்தும் மாநில அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசே ஒரு தரப்பாக முடிவெடுத்தது. இலங்கை நட்பு நாடு என்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது.
 அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த பிரச்னை எழுந்துள்ளது. மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் வைத்துள்ளது. இந்தியாவின் தயவை எதிர்பார்க்கும் ஒரு நாடு இந்தியாவின் வேண்டுகோளை மறுதலிக்காது என்று எதிர்பார்க்கின்றனர்.
 கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளுக்கு வருவாய் தரும் தீவாக முன்பு இருந்தது. 1947-இல் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் வரும் வரை அது அவர்களது ஆட்சியில்தான் இருந்தது. இதற்கு ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன.
 இந்தத் தீவு முத்துக் குளிக்கவும், மூலிகைச் செடி, கொடி, வேர்களைக் கொண்டு வரவும், மீன்பிடித் துறையாகவும் பயன்பட்டு வந்தது. அந்தத் தீவினை சேதுபதிகளே குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்று வந்தனர். இவ்வாறு இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1822 முதல் வரையறையான சான்றுகள் உள்ளன.
 சேதுபதிக்கு 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் உரிமை உடையனவாய் இருந்தன. அந்த எட்டு தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவாகும். 1822ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, சேதுபதியிடம் 69 கடற்கரை ஊர்களில் வணிகம் செய்யவும், தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.
 இந்திய அரசோடு இராமநாதபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவும் இந்தியாவோடு சேர்ந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு, கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்று உச்சநீதிமன்றத்திலேயே இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
 இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ், புதுதில்லி வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். "கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திதான் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி சர்வதேச எல்லைக்குட்பட்ட கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. எனவே கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை' எனத் தெரிவித்தார்.
 இந்திய அரசின் பிரமாண வாக்குமூலம் இதையும் விஞ்சி விட்டது.
 மீனவர் பிரச்னை தலைதூக்கும்போதெல்லாம் கச்சத்தீவு பிரச்னையும் தலையெடுக்கும். அந்த அளவுக்கு அவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதை இரு நாடுகளும் கவனத்தில் கொள்வது நல்லது.
 கச்சத்தீவு ஆண்டாண்டு காலமாக தமிழகத்துக்கே சொந்தமாக இருந்து வந்தது. அதுவே தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எல்லையாகவும் இருந்து வந்தது. அதனை இந்திய அரசு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தூக்கிக் கொடுத்து விட்டது. அப்போது முதலே மீனவர்களின் பிரச்னை தொடங்கி விட்டது.
 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது. 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் போகக் கூடாது, மீன் பிடிக்கவும் கூடாது. ஆண்டுதோறும் நடக்கும் அந்தோணியார் திருவிழாவுக்கும் மக்கள் போகக் கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
 1991-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்கப்போவதாக சபதம் செய்தார். "தமிழக மீனவர் நலன் காக்க கச்சத்தீவை மீட்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்தார். 1991 அக்டோபர் 4-ஆம் நாள், தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மறுபடியும் எழுந்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். காங்கிரஸ் ஆட்சி செய்த தவறைத் திருத்தம் செய்ய அடுத்தடுத்து வரும் ஆட்சிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு. இப்போதே கச்சத்தீவுக்கொரு தீர்வு காண்போம்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 



Read in source website

பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ள மாநிலங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்திருந்த நிலையில் மே 31, 2022 வரையிலான நிலுவைத் தொகையை மொத்தமாக மத்திய அரசு வழங்கியிருப்பது இப்பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வை அளித்துள்ளது. இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கும் மொத்தத் தொகை ரூ.86,912 கோடி.

இவற்றில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பது ரூ.9,602 கோடியாகும். ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்ததாகவும் எஞ்சிய தொகையனைத்தும் மத்திய அரசு தனது மற்ற நிதியாதாரங்களிலிருந்தும் இழப்பீட்டுக்கான சிறப்புத் தீர்வைகளிலிருந்தும் வழங்கியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கல்லூரிக் கல்வி என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவரும் சூழலில், பட்டப் படிப்பை முடிக்காதவர்களின் எதிர்காலம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அன்றாட வாழ்க்கையில் புதிய பதற்றத்தையும் நிச்சயமின்மையையும் கரோனாவுக்குப் பிறகு நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது ஒருபுறம் என்றால், கடந்த இரண்டு வருடங்களாக இணையம்வழியாகப் பயின்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள், இப்போது மூன்று நான்கு மாதங்களாக வகுப்பறைகளில் பயின்று, இவ்வாண்டின் இறுதித் தேர்வை நேரடியாகத் தேர்வறைகளில் எழுதப்போகிறார்கள்.



Read in source website

பணவீக்கம் (Inflation): விலையின் பொது அளவு தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் நிலையைப் ‘பணவீக்கம்' என்ற சொல் குறிக்கிறது.

வேறு வேறு: ஒருசில பொருட்களின் விலை உயர்வு பணவீக்கம் ஆகாது. பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வே பணவீக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

விரும்பத்தக்கது: பொதுவில், பணவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதும் விரும்பத்தக்கதும் ஆகும்.

அளவீடுகள்: இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டெண், நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ஆகியவற்றின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளின் சராசரி விலையிலிருந்து இந்தக் குறியீட்டெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சதவீதம்: எண்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டாலும் பணவீக்கம் சதவீதமாகவே குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆண்டு: முந்தைய ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கம் அளவிடப் படுகிறது. வாராந்திர அளவிலும் பணவீக்கம் முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் வகைகள்: சந்தைத் தேவைகளின் காரணமாக உருவாகும் பணவீக்கம், உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக உருவாகும் பணவீக்கம் ஆகிய இருபெரும் வகைமைகளே நீண்ட காலமாகக் குறிப்பிடப்பட்டுவந்தன.

நவீன வகைகள்: ஒற்றை இலக்கத்திலான பணவீக்கம் ஊர்ந்துசெல்லும் பணவீக்கம் என்றும், இரட்டை இலக்கத்திலான பணவீக்கம் பாய்ந்துசெல்லும் பணவீக்கம் என்றும் மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்படும் பணவீக்கம் அதிஉயர் பணவீக்கம் என்றும் தற்போது வகைப்படுத்தப்படுகின்றன. அதிஉயர் பணவீக்கமானது, உள்நாட்டுப் பணமதிப்பின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்கின்ற சூழலைக் குறிக்கிறது. உதாரணம், இலங்கை.

விலையின் நிலைத்ததன்மை (Price stability): பணவியலின் (monetary policy) முதன்மை இலக்கே விலை உறுதித்தன்மைதான் என்று வழிகாட்டியவர் பொருளியல் மேதை கீன்ஸ். இந்தக் கோட்பாடு, அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் அரசுக் கொள்கையாக ஏற்கப்பட்டது.

விமர்சனங்கள்: விலை உறுதிப்பாடு குறித்த விமர்சனங்களும் உண்டு. விலைவாசி உயர்வதற்குப் பணவியல் கொள்கை மட்டுமே காரணமாவதில்லை, நீண்ட காலமாக விலை உயராதிருந்தால் அது முதலீடுகளுக்கு ஊக்கமளிக்காது, அந்நியச் செலாவணி முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகளுக்கு இது பொருத்தமான கொள்கையாக இருக்க முடியாது என்பது போன்ற விமர்சனங்கள் அவற்றில் முக்கியமானவை.

பணவியல் கட்டுப்பாட்டுக் கருவிகள்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன் கட்டுப்பாடு, பண மதிப்பிழப்பு, புதிய பணத்தாள்களை அச்சிடுதல் ஆகிய பணவியல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. பணவியல் கொள்கை சார்ந்த அதிகாரங்களும் பொறுப்புகளும் மைய வங்கியான பாரத ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.

நிதியியல் கட்டுப்பாட்டுக் கருவிகள்: அரசின் கூடுதல் செலவுகளைக் குறைப்பது, நேரடி வரிவிதிப்பை அதிகரிப்பது, மறைமுக வரிவிதிப்புகளைக் குறைப்பது, உபரி பட்ஜெட் முறையைப் பின்பற்றுவது ஆகியவை அரசுத் தரப்பிலான நிதியியல் (fiscal) கட்டுப்பாட்டு முறைகளாகும்.

கடன் கட்டுப்பாடு: (Credit control) பணப் புழக்கம் அதிகரித்துப் பணவீக்கம் நிலவுவதாக மைய வங்கி உணர்ந்தால், வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது. இதனால், கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி வீதத்தில் கடன் வாங்க முன்வருவதில்லை. விளைவாக, பண்டங்களின் தேவை குறைந்து அவற்றின் விலையும் குறைகிறது.

வங்கி வட்டி வீதம்: (Bank Rate) பாரத ரிசர்வ் வங்கி, எந்த வட்டி வீதத்தில் வணிக வங்கிகளுக்கு அவற்றின் கடன் பத்திரங்களுக்கு எதிராகக் கடன் வழங்குகிறதோ அந்த வட்டி வீதம், வங்கி வட்டி வீதம் எனப்படுகிறது.

திறந்த சந்தை நடவடிக்கைகள்: (Open market operations) பணவீக்கத்தின்போது மைய வங்கி தன் கையிலுள்ள அரசுக் கடன் பத்திரங்களை விற்கிறது. அதை வாங்கும் வணிக வங்கிகளின் பணக் கையிருப்பு குறைகிறது; இதனால், பொதுமக்களுக்கு அளிக்க வாய்ப்புள்ள கடனளவும் குறைகிறது.

பண வாட்டம்: (Deflation) பணவீக்கத்துக்கு நேரெதிரான நிலை இது. மிகவும் அரிதாகவே நிகழக்கூடியது. பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இது விரும்பத்தக்கது அல்ல. பணப்புழக்கம் குறைந்தால் மத்திய வங்கி, வங்கி வட்டி வீதத்தைக் குறைக்கிறது. கடன் வாங்குபவர்கள் தங்கள் முதலீட்டை அதிகரிக்கின்றனர். விளைவாக, வேலைவாய்ப்பும் மக்களின் வருமானமும் கூடுகிறது.

தொகுப்பு: புவி



Read in source website

சுற்றுச்சூழல் எப்படி நம் வாழ்க்கையின் மையமாக இருக்கிறது என்பதை நவீன ஆய்வுகளின் துணையுடன் மட்டுமல்லாமல், மரபு சார்ந்த அறிவின் அடிப்படையிலும் கவனப்படுத்தியதில் ‘டவுன் டு எர்த்’ இதழின் பங்கை மறுக்க முடியாது!

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, எப்படி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் செயல்பட்டுவந்தவர் அனில் அகர்வால். 1982-ல் ‘The State of India's Environment - A Citizens' Report’ என்கிற பெயரில் சுற்றுச்சூழல் பார்வையுடன் கூடிய விரிவான தொகுப்பை 40 ஆண்டுகளுக்கு முன்னரே அனில் அகர்வால் கொண்டுவந்தார். அது ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ என்கிற தலைப்பில் க்ரியா வெளியீடாகத் தமிழிலும் வெளியானது.

1992-ல் ‘ரியோ புவி மாநாடு’ தொடங்குவதற்கு முந்தைய மாதம் அனில் அகர்வாலை ஆசிரியராகக் கொண்டு ‘டவுன் டு எர்த்’ இதழ் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 30 ஆண்டுகளைத் தொடுகிறது ‘டவுன் டு எர்த்’. 2002-ல் புற்றுநோயால் அனில் அகர்வால் மடிந்தார். இதழின் தற்போதைய ஆசிரியர் சுனிதா நாராயண். புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம் இந்த இதழை வெளியிட்டுவருகிறது.

இன்றைக்கு ‘டவுன் டு எர்த்’ இதழின் இணையதளம், இந்தியச் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் தேடப்படக்கூடிய இணையதளமாக உள்ளது. ‘கோபர் டைம்ஸ்’ என்கிற சிறாருக்கான சுற்றுச்சூழல் இதழ், நீண்ட காலத்துக்கு இணைப்பாக வழங்கப்பட்டுவந்தது.

சமீப ஆண்டுகளாக ‘டவுன் டு எர்த்’ வெளியிட்டுவரும் ஆண்டுத் தொகுப்புகளான ‘State of India's Environment’, ‘State of India's Environment In Figures’ உள்ளிட்டவை, உலகப் பசுமை இதழியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக ‘டவுன் டு எர்த்’ இதழை ஆக்கியுள்ளன.

ஒருபுறம் வேதாந்தா நிறுவனத்தின் விளம்பரத்தைப் பிரசுரித்த ‘டவுன் டு எர்த்’, அதே நிறுவனம் சுற்றுச்சூழலை எப்படி மோசமாகச் சீரழிக்கிறது என்பதையும் சமரசம் செய்துகொள்ளாமல் வெளியிட்டுள்ளது. விளம்பரங்களுக்காக இதழியல் நெறிமுறைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதே அந்த இதழின் அடிப்படைக் கொள்கை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கானது என்கிற தவறான பார்வை இருக்கிறது. அதை உடைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது யாருக்கான வளர்ச்சி என்கிற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னிறுத்தி ‘டவுன் டு எர்த்’ செயல்பட்டுவருகிறது.

காட்டுயிர்களைப் பாதுகாக்கப் பழங்குடிகளைக் காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, பழங்குடிகளையும் இணைத்துக்கொண்டே காட்டுயிர்களையும் காடுகளையும் காக்க முடியும் என்கிற வாதத்தை முன்வைத்த இதழ் ‘டவுன் டு எர்த்’.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது, அரசுக்கு வலியுறுத்துவது மட்டுமில்லை, நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘டவுன் டு எர்த்’ 30 ஆண்டுகளாக உரக்க ஒலித்துவருகிறது.



Read in source website