DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 08-03-2022

தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பணியாளா் நலப்பிரிவு அதிகாரியாக கே.ஹரிகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்றாா்.

இந்திய ரயில்வே பணியாளா் சேவையின் 1990 ஆம் ஆண்டு பிரிவு அதிகாரி ஆவாா். இதற்குமுன்பு, இவா் தென் மேற்கு ரயில்வேயின் ஹூப்ளியில் தலைமைப் பணியாளா் நலப்பிரிவு அதிகாரியாக இருந்தாா். இவரது 30 ஆண்டுகால ரயில்வே சேவையில் தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் பணியாற்றினாா். ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை, தென்மேற்கு ரயில்வே மற்றும் யெல்ஹங்காவில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் பணியாற்றினாா்.

தில்லியில் ரயில்வே வாரியத்தின் இயக்குநராக இருந்தாா். இவா், தென் மேற்கு ரயில்வேயில் பணியாற்றிய காலத்தில், அந்த ரயில்வேயின் பணியாளா் நலத்துறையில் சிறந்த செயல்பாட்டுக்காக ரயில்வே அமைச்சகத்தின் கேடயத்தைப் பெற்றாா்.



Read in source website

மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தைச் சீரமைத்து வெளியிடப்பட்ட உத்தரவை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியமானது திருத்தப்பட்டு அண்மையில் உத்தரவு வெளியிடப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் துணைத் தலைவராகவும், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் உறுப்பினராகவும், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநா், உறுப்பினா் செயலாளராகவும் நியமிக்கப்பட்டாா்.

மாற்றுத் திறனாளிகள் துறை சாா்ந்த வல்லுநராக சென்னையைச் சோ்ந்த பி.அருணாதேவியும், அரசு சாரா நிறுவனம் மற்றும் சங்கப் பிரதிநிதிகளாக ஆறு பேரும் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனா். இந்த நியமனங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் புதிய மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்காக, வெளியிடப்பட்ட அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, புதிய அரசு சாரா நிறுவனம், சங்கப் பிரதிநிதிகளைக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் திருத்தி அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.



Read in source website

கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:

உக்ரைன் போா் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தச் சவாலை எதிா்கொள்ள எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளப் போகிறோம், அதன் பாதிப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது போகப்போகத் தான் தெரியும்.

இந்தியாவின் எரிபொருள் தேவையை பூா்த்தி செய்ய 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறோம். எரிபொருள் விலை உயா்வது கவலை அளிக்கக் கூடியதாகும். அப்பிரச்னையை எப்படி சமாளிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

15 நாள்கள் சராசரியின் அடிப்படையில்தான் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. தற்போதுள்ள நிலையில் சராசரி, அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

வேறு ஆதாரங்களில் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வது குறித்து ஆராய்வோம். உலக கச்சா எண்ணெய் சந்தையின் போக்கைக் கணிப்பது கடினமாகும். கச்சா எண்ணெய் விலை உயா்வை அரசு சமாளிக்கும் தேவை இருக்கும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சராசரி விலை உயா்வைக் கணக்கில் கொண்டு ஒதுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமடைந்து வருகிறது. எனவே, நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பான விவாதம் ஜிஎஸ்டி கவுன்சில் முன்பு இருக்கிறது என்றாா்.

 



Read in source website

இந்தியாவின் கலாசார பெருமையை சா்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில், டிடி இந்தியா (தூா்தா்ஷன்) அலைவரிசையை யுப் டிவியின் ஓடிடி தளத்தில் இடம்பெறச் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், யூப் டிவியின் ஓடிடி தளத்தில் டிடி இந்தியா அலைவரிசையை காணலாம். இந்த அலைவரிசை 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவுக்கும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியா வம்சாவளியினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் ஊடகமாக டிடி இந்தியா அலைவரிசை திகழ்கிறது.

யுப் டிவி மூலம் உலகின் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒருவா் நிகழ்ச்சிகளைக் காண முடியும். இந்தியாவின் தொலைக்காட்சி அலைவரிசையை யுப் டிவி மூலம் சா்வதேச அளவில் எளிதாகவும், குறைந்த செலவிலும் காணமுடியும்.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பிரசாா் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி சசிசேகா் வேம்பட்டியும், யுப் டிவி நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உதய் ரெட்டியும் கையெழுத்திட்டனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

நான்கு நாள்கள் நடைபெறும் இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதார கருத்தரங்கை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

‘‘கொந்தளிப்பான, நிச்சயமற்ற, சிக்கலான உலகில் ராணுவ மருத்துவ நலன்’ என்ற கருப்பொருளில் மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, ராணுவ மருத்துவப் பிரிவுகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போா்க் கள மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள், போா்க் கள அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, விமானம் மற்றும் கடல்சாா் மருத்துவ அவசர நிலை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளன.

இதில் இந்தியா உள்பட 38 நாடுகளைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். இந்த 4 நாள் கருத்தரங்கில் 110 தலைப்புகளில் நிபுணா்கள், உயா் அதிகாரிகள் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்கின்றனா்.

தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எந்த ராணுவத்துக்கும் மருத்துவச் சேவைகள் பிரிவு முக்கியமான அம்சம். போா் தொடா்பான பணிகளுக்கு அடுத்த படியாக இயற்கை பேரிடா்கள் ஏற்படும்போது, மிகவும் மதிப்பு மிக்க பணிகளில் தயாா் நிலையில் உள்ள ராணுவ மருத்துவச் சேவைப் பிரிவு ஈடுபடுகிறது.

பணியில் இருக்கும் வீரா்கள், அவா்கள் குடும்பத்தினா், முன்னாள் ராணுவத்தினருக்கு அனைத்து விதமான மருத்துவச் சேவைகளையும் பாதுகாப்புப் படைகளின் மருத்து சேவை பிரிவு அளிப்பது பாராட்டுக்குரியது. கரோனா பெருந்தொற்றின் போது, பாதுகாப்புப் படைகள் மருத்துவச் சேவைப் பிரிவு, அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கது.

மருத்துவப் பொருள்கள் மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகளைப் போக்குவதில், கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரிடா்கள் சமயத்திலும் பாதுகாப்புப் படைகள் வான்வழியாகவும் கடல் வழியாகவும் தேவையான உதவிகளை செய்தன. இவையெல்லாம் நவீன கால, பகிா்தல் முறைகள் மூலம் சாத்தியமானது.

இந்தக் கூட்டு அனுபவம் எதிா்காலத்திலும் இதுபோன்ற சவால்களை எதிா்கொள்ளும் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஷாங்கிரி லா பேச்சுவாா்த்தையின்போது, இந்தோ-பசிபிக் பகுதி தடையற்ற திறந்தவெளிப் பகுதி எனவும், இதன் மூலம் அனைவருக்கும் முன்னேற்றம், செழிப்பு ஏற்படும் எனவும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தோ-பிசிபிக் கொள்கை உலகம் ஒரு குடும்பம் என்ற உணா்வைப் பிரதிபலிக்கிறது. உலகளவில் மிகவும் உயா்ந்ததாக கருதப்படும் மருத்துவப் பணியாளா்களின் பங்களிப்பால், ஏற்படும் இந்த உணா்வு மிக சிறந்த உதாரணம் இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினாா்.

இந்த கருத்தரங்கைப் பாதுகாப்புப் படைகள் மருத்து சேவைகள் பிரிவு மற்றும் அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.



Read in source website

 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை. பளு தூக்குதலில் 21 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குக் கிடைத்த பதக்கம். தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற 5-வது இந்தியர். 

இத்தனை சாதனைகளையும் படைத்துவிட்டு, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு சொன்னது - ஒரு துண்டு பீட்சா சாப்பிட வேண்டும். 

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு இனிமேல் சாக்லேட் கேக்கை விரும்பியபோதெல்லாம் சாப்பிடுவேன் என்றார். பி.வி. சிந்து ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பிறகு பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டர். அதேபோல மீராபாய்க்கு பீட்சா. இதற்கு ஏங்கும் அளவுக்குத்தான் 5 வருடங்களாக அவர் கடும் பயிற்சி எடுத்திருந்தார்.

சிறுவயதில் மீராபாய்க்கு ஊக்கமாக இருந்த குஞ்சராணி தேவி, மீராபாய் பெரிய அளவில் சாதிக்கும் முன்பே அவரைப் பற்றி 2016-ல் சொன்னார் - ஒரு தலைமுறைக்கு மீராபாய் போல ஒருவர் தான் கிடைப்பார்.

*

மணிப்பூரின் தலைநகர் இம்பாலின் தெற்கே 45 கி.மீ. தொலைவில் உள்ளது நாங்பாக் கக்சிங் கிராமம். சிறுவயதில் மீராபாய் வீட்டில் ஆறு குழந்தைகள். அவர்களில் இளையவர், மீராபாய். மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அண்ணன் என்ன எடை தூக்கினாலும் அதைவிட அதிக எடை கொண்ட பொருளைத் தூக்கிக் காண்பிப்பார் மீராபாய். 12 வயதில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கவனித்திருக்கிறார் அவருடைய தாய். மகளிடம் விளையாட்டு வீராங்கனைக்கான திறமைகள் உள்ளதை அவர் உணர்ந்தார். முதலில் வில்வித்தை வீரராக வேண்டும் என்பதுதான் மீராபாயின் விருப்பமாக இருந்தது. ஆனால் தங்களுடைய மண்ணிலிருந்து கிளம்பி சர்வதேச அரங்கில் ஜொலித்த குஞ்சராணி தேவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் போலவே பளு தூக்குதல் விளையாட்டில் சாதிக்க எண்ணினார். இது காகிதக் கனவு அல்ல என்று தாய்க்குத் தெரிந்ததால் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினார். 

முறையான பயிற்சிகள், பெற்றோரின் ஊக்கம் போன்றவற்றால் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய். இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கம் வெல்வார் என்கிற சிறு நம்பிக்கை பலரிடமும் இருந்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டியை இப்போது நினைத்தாலும் மிகவும் சங்கடப்படுவார் மீராபாய் சானு.

மகள் தன்னுடைய முதல் ஒலிம்பிக்ஸிலேயே தங்கம் வெல்ல வேண்டும் என்று தன்னுடைய நகைகளை விற்று மகளுக்கு ஒலிம்பிக் வளையம் கொண்ட தங்கக் கம்மல்களை வாங்கித் தந்திருந்தார் மீராபாயின் தாய். முதலில் செயின் தருவதாகத்தான் இருந்தார். ஆனால், போட்டியின்போது செயினை அணிவது கடினம் என்று கம்மல்களை வாங்கிக்கொண்டார் மீராபாய். இக்கம்மல்கள் உனக்கு நிறைய பதக்கங்களையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்றார் தாய்.

ஒலிம்பிக் போட்டி வளாகத்துக்குள் நுழைந்தபோது இருந்த உற்சாகமும் ஆர்வமும் திரும்பி வரும்போது காணாமல் போனது. பெரிய தோல்வி. அழுதபடி தன் அறைக்குத் திரும்பினார். முதல் ஒலிம்பிக் போட்டி என்றாலும் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அதற்கு முன்பு சாதித்ததை ரியோவில் செய்திருந்தாலே பதக்கம் கைக்கு வந்திருக்கும். 

(பளு தூக்குதல் விளையாட்டில் ஸ்னாட்ச் என்றால் எடையை அப்படியே அலேக்காகத் தலைக்கு மேலே தூக்கவேண்டும். கிளீன் & ஜெர்க் என்றால் முதலில் கழுத்துப் பக்கம் எடையைக் கொண்டு சென்றுவிட்டு, அதன்பிறகு தலைக்கு மேலே தூக்க வேண்டும். இதில் அதிக எடையைத் தூக்கிவிட முடியும்.)

21 வயதில் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்ஸில் 48 கிலோவுக்கான போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் முன்னிலை பெறவில்லை. 82 கிலோ தான் தூக்கினார். கிளீன் & ஜெர்க் பிரிவில் அவரால் 104, 106 கிலோ எடைகளைத் தூக்கவே முடியவில்லை. ஒலிம்பிக் மேடையில் மூன்று முறை தோல்வி கிடைத்தது. ஏமாற்றம், வேதனை, கண்ணீர். இதற்காக நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேன். இனிமேல் விளையாட்டே வேண்டாம், இந்த அவமானங்களும் வேண்டாம், நான் இதற்குத் தகுதியில்லாதவள் என அவருடைய மனம் என்னென்னவோ சொல்லி வேதனைப்பட்டது. 

சாய் விளையாட்டு அமைப்பின் உளவியல் நிபுணர்களிடம் பேசியபோது விடை கிடைத்தது. இது உன் முதல் ஒலிம்பிக் போட்டி. அது தந்த அழுத்தத்தை உன்னால் தாங்க முடியவில்லை. அடுத முறை அந்த அழுத்தம் இருக்காது அல்லவா, ரியோவில் விட்டதை டோக்கியோவில் பிடிப்போம் என மனத்துக்குள் சபதம் போட்டுக்கொண்டார். 

அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் வீட்டுக்குச் செல்லவேயில்லை. அதாவது அதிகபட்சமாக ஐந்து நாள்கள் வீட்டில் இருந்திருந்தால் அதிகம். இன்னொருமுறை ஒலிம்பிக் போட்டியிலிருந்து அழுதுகொண்டு திரும்பக் கூடாது என முடிவெடுத்து, திட்டமிட்டு, ஒரு வெறியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டார். 

அதேபோல தன்னுடைய பிரச்னை மன அழுத்தம் மட்டுமல்ல, சரியான பயிற்சியுடன் திறமையில் முன்னேற்றம் இருந்திருந்தால் ரியோவில்  வெறுங்கையுடன் திரும்பியிருக்க மாட்டேன் என்று தெளிவானார். இதனால் பயிற்சிகளில் மாற்றம் கொண்டுவந்தார். பயிற்சியாளர்களுடன் தொடர்ந்து விவாதித்து, தன்னிடமிருந்த பலவீனங்களைப் போக்கினார். உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினார். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் வீராங்கனையாகத் தன்னை எண்ணிக்கொண்டு அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். கிளீன் & ஜெர்க் பிரிவில் கடுமையாக உழைத்து முன்னேற்றம் கண்டார். (டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டார்.)

2017 முதல் வரிசையாகக் கலந்துகொண்ட 4 சர்வதேசப் போட்டிகளில் முதலிடம் வந்தார். ரியோவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு வரை கலந்துகொண்ட 9 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலிடம் தான். காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. ரியோவில் நிகழ்ந்தது போல எங்கும் கிளீன் & ஜெர்க் பிரிவில் எடையைத் தூக்க முடியாமல் அவதிப்படவில்லை. அதை விடவும் டோக்கியோவுக்கு வரும்போது கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி உலக சாதனையாளராகவும் இருந்தார். (அதற்கு முன்பு 118 கிலோ உலக சாதனையாக இருந்தது.) 2017-ல் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். மல்லேஸ்வரிக்குப் பிறகு அப்போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை. இப்படி எல்லாவிதத்திலும் ஒலிம்பிக் போட்டிக்காகத் தன்னைச் சரியான முறையில் தகுதிபடுத்திக் கொண்டார்.

2020-ல் தாஷ்கெண்டில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவ்வளவு எளிதாக உலக சாதனை நிகழ்த்திவிடவில்லை. ஸ்னாட்ச் பிரிவில் இருமுறை 85 கிலோ எடையைத் தூக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. காரணம், கரோனா ஊரடங்கு காரணமாகச் சரியாகப் பயிற்சி எடுக்கவில்லை. கடைசி முயற்சியில் 86 கிலோ எடையைத் தூக்கினார். மோசமில்லை. அப்போது அவர் 4-ம் இடம் தான் பிடித்திருந்தார். பிறகு கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை நிகழ்த்தினார். மொத்தமாக 205 கிலோவுடன் (இது தேசிய சாதனை, அதற்கு முன்பு 88+115 என 203 கிலோ எடையைத் தான் மீராபாய் தூக்கியிருந்தார்.) வெண்கலம் வென்றார், உலக சாதனையாளர் என்கிற பெருமையுடன். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கு பெறுவதற்கும் தகுதி பெற்றார். இந்தியர் ஒருவர் பளு தூக்குதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. மேலும் ஸ்னாட்ச் பிரிவில், தான் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை இந்தப் போட்டி தெளிவுபடுத்தியது. 

டோக்கியோவில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. ஸ்னாட்ச் பிரிவில் எடையைச் சரியாகத் தூக்கிவிட்டால், பதக்கம் உறுதி. கிளீன் & ஜெர்க் பிரிவில் தான் உலகச் சாதனை கைவசம் உள்ளதே!

டோக்கியோவில் ஸ்னாட்ச் பிரிவில் சொதப்பி விட்டால் இன்னொருமுறை பதக்கமின்றி திரும்ப வேண்டியதுதான். முதலில் 84 கிலோ எடையைத் தூக்க வேண்டும். முதல் ஒலிம்பிக்ஸ் தோல்வி அப்போது நினைவில் வராமல் இருக்குமா? அவ்வளவு எளிதா அது? மேலும் போட்டிக்கு ஒருநாள் முன்பு மீராபாய்க்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதனால் உடலளவில் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் இருந்தார். என்ன ஆகுமோ, பதக்கக் கனவு தகர்ந்துவிடுமா எனப் பயந்தார். பிறகு, எதுவானாலும் துணிந்து போராடுவோம் என மன உறுதி கொண்டார்.

போட்டி தினத்தன்று மறக்காமல் அம்மா 5 வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒலிம்பிக் வளையத் தங்கக் கம்மல்களை அணிந்துகொண்டார். அம்மா சொன்னது இன்றைக்கு நடக்கட்டும் என எண்ணிக்கொண்டார். களத்துக்குச் செல்லும்முன்பு விடியோ கால் வழியாகப் பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டார். அவர் வீட்டில் ஒரே உறவினர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம். வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டு அனைவரும் ஆசையுடன் போட்டியைப் பார்த்தார்கள். 

முதலில் 84 கிலோ எடையைத் தூக்கினார் மீராபாய். அடுத்ததாக 87 கிலோ எடையும் சாத்தியமானது. 2017-க்குப் பிறகு ஸ்னாட்ச் பிரிவில் இரு வெற்றிகள். சர்வதேசப் போட்டியில் இதுவே அவருடைய சிறந்த முயற்சி. அடுத்ததாக 89 கிலோ, முடியவில்லை. அதனால் என்ன? ஸ்னாட்சில் தோல்வி இல்லை. ஸ்னாட்ச் முடிவில் 2-ம் இடம். கிளீன் & ஜெர்க் பேட்டையில் மீராபாய் தாதா என்பதால் அப்போதே அவருடைய ஒலிம்பிக் பதக்கம் உறுதியானது.

ரியோவில் தூக்க முயன்ற எடையின் அளவை விடவும் முதல் முயற்சியில் அதிக எடையைத் தூக்கவேண்டும். ஆனால் ரியோவுக்கும் டோக்கியோவுக்குமான 5 வருடக் காலகட்டத்தில் எத்தனை மாற்றங்கள், எத்தனை வியர்வைகள், எத்தனை முயற்சிகள், எத்தனை வெற்றிகள். அக்கணத்தில் தன்னுடைய முன்னேற்றத்தை நினைத்துப் பார்த்து நிச்சயம் சில நொடிகள் சிலிர்த்திருப்பார். ரியோவில் வெண்கலம் வென்றிருந்தால் கூட இத்தனையும் நடந்திருக்காது. தோல்வி கற்றுத் தரும் பாடம் ஒரு மனிதனை வெகு உயரத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். 

கிளீன் & ஜெர்க் பிரிவில் முதலில் 110 கிலோ எடையைத் தூக்கிவிட்டார் மீராபாய். (ரியோவில் 104, 106 கிலோ எடைகளைத் தூக்க முடியாமல் தோற்றார்.) இது மீராபாய்க்கு ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்தது.

அடுத்ததாக 115 கிலோ எடையையும் தூக்கினார். தங்கம் வேண்டுமென்றால் 123 கிலோ எடையைத் தூக்க வேண்டும். 119 கிலோ எடை தூக்கித்தானே உலக சாதனை படைத்தார்! அதனால் தங்கம் வெல்ல வாய்ப்பில்லாததால் ஒலிம்பிக் சாதனைக்காக 117 கிலோவை முயன்றார். அந்த எடையைக் கிட்டத்தட்ட தூக்கிவிட்டார். இருந்தாலும் கடைசிக்கட்டத்தில் பாரம் தாங்காமல் கீழே போட்டார். அவர் உடல் எடையை விட இரண்டரை மடங்கு! அதைத் தூக்கியிருந்தால் ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்திருப்பார். முடியவில்லை. அதனால் என்ன, அப்போதே 202 கிலோ எடையைத் தூக்கிய காரணத்துக்காக வெள்ளிப் பதக்கம் உறுதியானது. மகிழ்ச்சியுடன் மேடையை விட்டு இறங்கினார் மீராபாய். பளு தூக்குதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றார். சீனாவின் ஹோ ஷுஹுய் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

மீராபாயின் அடுத்தக் கனவு - தங்கம் வெல்வது. டோக்கியோவில் ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க், மொத்தம் என மூன்றிலும் ஒலிம்பிக் சாதனைகளை நிகழ்த்தினார் சீனாவின் ஹோ ஷுஹுய். பலமுறை அவரைத் தோற்கடிக்க முயன்றேன். முடிவில்லை. ஆனாலும் சீன வீராங்கனையை வென்று ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிறார். 

*

மீராபாய் சானுவின் சாதனையால் ஊக்கம் கொண்ட சிறுமி ஒருவர், அவரைப் போலவே எடையைத் தூக்கும் அழகான விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்றது. 

சிறுமியின் பின்னால் மீராபாய் சானுவின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காணொளி, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் காணொளியை அவ்வப்போது பார்த்தபடி எடையைத் தூக்க முயலும் சிறுமி, முதலில் மீராபாய் சானுவைப் போலவே பவுடரைக் கைகளால் தட்டி, பிறகு சிறிய அளவிலான எடையைத் தூக்கி, அவரைப் போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்தார். இதை மீராபாய் சானுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மிக அழகாக உள்ளது. நான் மிகவும் ரசித்தேன் எனப் பாராட்டினார். 


வெள்ளி வென்ற தருணத்தில் தொலைக்காட்சியில் மகளின் வெற்றியைப் பார்த்த மீராபாயின் தாய்க்கும் தந்தைக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எத்தனை எத்தனை தியாகங்களுக்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் அது என்று அவர்கள் அறியாமல் இருப்பார்களா? மீராபாயைத் தொலைக்காட்சியிலும் யூடியூப் காணொளியிலும் பார்த்தவர்கள் அந்தத் தங்கக் கம்மலைக் கவனிக்காமல் இல்லை. இம்முறை அது கூடுதல் ஒளியைப் பாய்ச்சியது அவருடைய பெற்றோருக்கே தெரிந்திருக்கும்.



Read in source website

ஆசியாவின் மிகப்பெரிய யானையாக கருதப்படும் 69-வயதான ‘நதுங்கமுவே ராஜா’ திங்கள்கிழமை உயிரிழந்தது.

தன் உறவினரை குணப்படுத்திய இலங்கை துறவிக்கு மைசூா் மகாராஜாவால் பரிசாக அளிக்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளில் ‘நதுங்கமுவே ராஜா’வும் ஒன்று.

கண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெளத்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் புனித புத்தரின் பல் இந்த யானை மீது வைத்து கொண்டு செல்லப்படும். இதற்காக ராஜா தனது நதுங்கமுவே கிராமத்தில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள கண்டிக்கு நடந்தே செல்லும். அதற்கு ஆயுதம் ஏந்திய இலங்கை படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த யானையின்தந்தம் 10.5 அடி நீளமாகும்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த இந்த யானை, காம்பஹா மாவட்டத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தது. யானையின் மறைவுக்கு இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நதுங்கமுவே ராஜா யானையின் உடலை தேசிய சொத்தாக அறிவித்த அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச, வருங்கால சந்ததியினருக்காக யானையின் உடல் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளாா்.



Read in source website

கோவை: தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் கேட்கப்படும் தகவல்களை பொதுத் தகவல் அலுவலர்கள் உரிய காலத்துக்குள் அளிக்கவேண்டும் என மாநில மனிதவள மேலாண்மை துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை சார்ந்த பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் மனு அனுப்பினால் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால், பல பொதுத் தகவல் அலுவலர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அனுப்பாமலும், மனுவில் என்ன தகவல் கேட்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளாமலும், திசை திருப்பும் தகவல்களை அளிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, மனுதாரர் முதல் மேல்முறையீடு செய்தாலும் மேல் முறையீட்டு அலுவலர்களும் பதில் அளிப்பதில்லை. இதனால் சென்னையிலுள்ள மாநில தகவல் ஆணையத்துக்கு மனு அளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுத்தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் உரிய காலத்தில் தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் நா.லோகு, மாநில மனித வள மேலாண்மை துறைக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து மாநில மனித வள மேலாண்மை துறை அரசுச் செயலர் மைதிலி ராஜேந்திரன் அனைத்துத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பொதுத் தகவல் அலுவலர்கள் மனுக்களை பெற்ற 30 நாட்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும். நகல்கள் வழங்குவதாக இருந்தால் அதற்கான கட்டணத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, மேல்முறையீட்டு அலுவலரும் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கோ அல்லது தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கோ மேற்கொண்டு புகார்கள் வராத வகையில் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களும், முதல் மேல்முறையீட்டு அலுவலர்களும் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்திற்கு பின்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த இந்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, அதன் பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

எனினும், கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 2021-ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, இந்திய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியா அழைத்து வருகிறது.

தற்போது கரோனா தொற்றின் மூன்று அலைகளின் பாதிப்பும் குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா "மார்ச் 27-ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமான சேவைத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையைத் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதன் பின்னர் ஏர் பபுல் ஏற்பாடுகள் ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை மூலம் இந்தத் துறை புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரபூர்வ அறிக்கையில், "உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து மார்ச் 27 ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைத் தொடங்கப்படவுள்ளது. அப்போது இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிடும் வழிகாட்டுதல்கள் உறுதியாக கடைபிடிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன என்றும் அது எந்தெந்த துறை என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான அடிப்படையின் பிரதிபலிப்பாகும். இந்த பட்ஜெட்டில் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

அந்நிய முதலீட்டு வரவுகளை ஊக்குவித்தல் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு வரி குறைத்தல், என்ஐஐஎஃப், கிப்ட்சிட்டி, புதிய டிஎஃப்ஐ-க்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நாங்கள் முனைந்துள்ளோம்.

நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தும் அரசின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் அல்லது 75 மாவட்டங்களில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் இந்த தொலைநோக்கை பிரதிபலிக்கும்.

நிதி சார்ந்த பல்வேறு திட்ட மாதிரிகளை வகுப்பதன் மூலம் பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் வழிகளை கண்டறிவது அவசியம். பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் இத்தகைய ஒரு நடவடிக்கை.

முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டம் அல்லது கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கை மேம்படுத்துதல் போன்றவை முன்னுரிமை திட்டங்கள்.
எம்எஸ்எம்இ-களை வலுப்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் பல அடிப்படை சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

நிதி தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாடு முன்னேறும் வரை தொழில் 4.0-வுக்கு வாய்ப்பில்லை. இந்த துறைகளில் நிதி நிறுவனங்களின் உதவியானது இந்தியாவை தொழில் 4.0 –வின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன. கட்டுமானம், ஸ்டார்ட் அப், அண்மையில் தொடங்கப்பட்ட ட்ரோன் துறை, விண்வெளி மற்றும் ஜியோ ஸ்பேஷியல் டேட்டா ஆகிய துறைகளில் இந்தியா முதல் 3 இடங்களை பிடிக்க முடியும். இதற்கு நமது தொழில் மற்றும் புதிய தொழில்முனைவோர் நிதித்துறையின் முழு ஆதரவை பெறுவது அவசியமாகும்.

தொழில்முனைவு விரிவாக்கம், புத்தாக்கம், ஸ்டார்ட் அப்புகளுக்கு புதிய சந்தைகளை தேடல் ஆகியவை இந்த துறைகளுக்கு வருங்காலத்தில் யார் நிதி அளிப்பார்கள் என்பது பற்றிய ஆழமான புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

நமது நிதித்துறை புதுமையான நிதி அளித்தல் மற்றும் புதிய வருங்கால எண்ணங்கள் மற்றும் முன்முயற்சிகளின் நீடித்த அபாய மேலாண்மையை கருத்தில் கொண்டிருக்கும்.

இந்திய பொருளாதாரத்தில் பெரிய அடிப்படை கிராமப்புற பொருளாதாரம் ஆகும். சுய உதவிக் குழுக்கள், உழவர் கடன் அட்டைகள், விவசாயி உற்பத்தி அமைப்புகள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற பொருளாதாரம் கொள்கைகளின் மையமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

நாட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.36,657 கோடி வரை பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேவைப்படும் பல பணிகளுக்கு இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.93,224 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, ரூ.56,567 கோடி மட்டுமே கல்விப்பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.36,657 கோடி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கல்வித்துறை வளர்ச்சிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் பல்வேறு தரப்பினர் போராடிவரும் நிலையில், ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் விடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு உதவிபெறும் கல்வி மையங்களில் மட்டும் ரூ.7,143 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கு முந்தைய 2019 - 20-ல் இந்த தொகை ரூ.355 கோடியாகவும், 2020-21-ல் ரூ.274 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் 19 ஆயிரத்து 349 அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரத்து 535 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் 859 இடங்கள் காலியாக உள்ளன. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 611 பேராசிரியர் பணியிடங்களும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 499 இடங்களும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 359 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதுபோல நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியும். தரமான கல்வி வழங்க தரமான ஆசிரியர்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும், மறுபுறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் கவலையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, கல்விக்காக கடந்த 2004-05-ம் ஆண்டு முதல் மத்திய அரசு கூடுதல் வரி வசூலித்து வருகிறது. கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் தொகையுடன் கூடுதலாக இந்த வரி மூலம் கிடைக்கும் தொகை செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், கூடுதல் வரியை சேர்த்த பின்னரும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக்காக மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது. நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதே அளவுக்கு நிதி ஒதுக்கி கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.



Read in source website

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொது சபை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட்டின் ஆலோசனை கூட்டம் அண்மையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இந்தியா இன்று வரை நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறி யிருப்பதாவது: உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஐரோப்பிய நாடு களான ஹங்கேரியும் செர்பியாவும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளன. அந்த நாடுகள்கூட ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஆசிய கண்டத்தில் இந்தியா இருந்தாலும் சர்வதேச அரங்கில் நமது நாட்டின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு சர்வதேச அளவில் நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. நாம் போரை விரும்பவில்லை. அதேநேரம் நமது நாட்டின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேட்டோ நாடுகள்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளோ, ஐரோப்பிய நாடுகளோ ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. உக்ரைனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்கி, நேட்டோ நாடுகளின் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்ஜி கூறும்போது, நேட்டோ சார்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டால் ஐரோப்பா முழுவதும் போர்வெடிக்கும். பல்வேறு நாடுகளைசேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள். நேட்டோ நாடுகளை பாதுகாக்க நாங்கள் நேரடியாக போரில் ஈடுபட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசிடமும் உக்ரைன் அதிபர்ஜெலன்கி பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அமெரிக்க அரசு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறது. அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. தங்கள் நாடுகளுக்கு துளியும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.

நடுநிலையில் மாற்றமில்லை

இதே அணுகுமுறையில்தான் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கடைசி வரை இதையே வலியுறுத்துவோம். நடுநிலைமையில் இருந்து ஓர் அங்குலம்கூட விலக மாட்டோம்.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

கெய்ரோ: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் 4 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டித் தொடர் நடந்து வந்தது. மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்றனர். இந்தியா இதில் நான்கு தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா இணை 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இதேபோல் ஆண்கள் 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய அணி இறுதிப்போட்டி வரை வந்து, ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இந்தியாவுக்கு அடுத்ததாக, நார்வே 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என இரண்டாமிடத்தையும், பிரான்ஸ் 3 தங்கப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய வீரர்களின் இந்த சாதனையை துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் வெகுவாக பாராட்டியுள்ளது.



Read in source website

சென்னை: ஒரே நாளில் 3,855 டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை துறைமுகம் மார்ச் 7-ம் தேதியன்று, ஒரே நாளில், 3,855 டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

அதாவது 77,100 மூட்டை சரக்குகள் ஒரே நாளில் கையாளப்பட்டுள்ளது. இதற்குமுன் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதியன்று ஒரே நாளில் 3,270 டன் அதாவது, 65,400 மூட்டை சரக்குகளை கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.

தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ள துறைமுக அதிகாரிகள், தனியார் கப்பல் நிறுவனம் மற்றும் பணியாளர்களுக்கு சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பலிவால் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.



Read in source website

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து ரஷ்யா நிறுவனமான ஏரோஃப்ளோட் தனது சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. என்ன மாற்றப்பட்டது, இது ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துத் தொழிலை எவ்வாறு பாதித்தது?

Explained: How sanctions by the West have impacted Russia’s aviation industry: செவ்வாய்க்கிழமை முதல், ரஷ்யாவின் விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் மின்ஸ்க் நகருக்கு செல்லும் விமானங்களைத் தவிர, அனைத்து சர்வதேச விமானங்களையும் ரத்து செய்துள்ளது. இந்த ரத்து நடவடிக்கை ரஷ்யாவின் மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளான வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச விமானங்களை தரையிறக்குவதற்கான முடிவு காரணங்கள் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலானது.

ஏரோஃப்ளோட்டின் சர்வதேச விமானங்களை ரஷ்யா ரத்து செய்ய என்ன காரணம்?

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் நிறுவனங்கள் வணிகம் செய்வதைத் தடுப்பது மற்றும் ரஷ்ய விமானங்களுக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். வான்வெளி கட்டுப்பாடுகள், ரஷ்யாவாலும் விதிக்கப்பட்டாலும், மேலும் கடினமான விமான சேவைக்கான காலங்களாக கூறப்பட்டாலும், பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் விமானத் துறையின் மூச்சுக் குழாயை மெதுவாக மூச்சுத் திணறச் செய்தது.

பொருளாதாரத் தடைகள் ரஷ்ய விமானத் தொழிலை எவ்வாறு பாதித்தன?

விமான தயாரிப்பாளரான சுகோயின் கீழ் ரஷ்யா தனது சொந்த சிவிலியன் விமானத் திட்டத்தைக் கொண்டிருந்தாலும், உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே, ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட போயிங் விமான நிறுவனங்களை விமானத் தேவைகளுக்காக ரஷ்யா சார்ந்துள்ளது. பொருளாதாரத் தடைகளின் விளைவாக, போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ரஷ்ய ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்படும் விமானங்களுக்கான பாகங்கள் மற்றும் சேவைகளை நிறுத்தியது. இதன் பொருள் இந்த நிறுவனங்கள் விமானப் படையை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய அம்சமான பராமரிப்பு ஆதரவை திறம்பட நிறுத்தின.

இதைவிட பாதிப்பாக, ஒட்டகத்தின் முதுகை உடைத்த இறுதி வைக்கோல் என்று கூறப்படுவது, டெக்சாஸை தளமாகக் கொண்ட பயண தொழில்நுட்ப நிறுவனமான சேபர் ஏரோஃப்ளோட்டுடன் செய்த விநியோக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஆகும். ஏரோஃப்ளோட்டின் முதுகெலும்பான தொழில்நுட்பத்தை சேபர் உருவாக்கி நிர்வகித்தது, அதில் டிக்கெட் முன்பதிவு முறையும் அடங்கும். இந்த ஒரு நடவடிக்கையானது, பல ஆண்டு கால விமான சேவையின் திறனைப் பின்தள்ளியது, இதனால் சேபரை விட குறைவான செயல்திறன் கொண்ட மாற்று வழிகளைத் தேட இது வழிவகுத்தது.

ஆனால் இதற்காகவா ஏரோஃப்ளோட் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது?

ஏரோஃப்ளோட்டின் பெரும்பாலான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அது பெலாரஸின் மின்ஸ்க் நகருக்கு தொடர்ந்து இயக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத் தடைகளின் மற்றொரு அம்சம் என்னவென்றால், ஐரோப்பிய விமானக் குத்தகை நிறுவனங்கள் ரஷ்ய விமான நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ளத் தொடங்கின மற்றும் தங்கள் விமானங்களை மீட்டெடுக்கத் தொடங்கின.

தி ஐரிஷ் டைம்ஸின் அறிக்கையின்படி, 700 விமானங்கள் ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, 200 க்கும் மேற்பட்டவை ஐரிஷ் நிறுவனங்களால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய விமானக் குத்தகை நிறுவனமான டப்ளினை தளமாகக் கொண்ட ஏர்கேப், நெருக்கடிக்கு மிகவும் ஆளாகியுள்ளது, ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள 152 விமானங்களின் மதிப்பு 2.1 பில்லியன் யூரோக்கள் ஆகும், இது அதன் கப்பற்படை மதிப்பில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

குத்தகை நிறுவனங்கள் தங்கள் விமானங்களை மீட்டெடுப்பதைத் தடுக்க ரஷ்யா முனைவதால், சர்வதேச விமானங்களை ஏரோஃப்ளோட் ரத்து செய்வதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் ஐரோப்பியத் தடைகளுக்கு எதிராக ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையால் ரஷ்யாவின் சர்வதேச இணைப்புக்கு என்ன நடக்கும்?

ஃப்ளைட் டிராக்கிங் போர்டல் Flightradar24 இன் படி, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகள் விமானத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரோசியா மற்றும் அரோரா ஆகிய விமான நிறுவனங்களை உள்ளடக்கிய ஏரோஃப்ளோட் குழுமத்தின் சர்வதேச நெட்வொர்க் 25 நாடுகளில் 47 இடங்களுக்கு 1,225 மாதாந்திர பயணங்கள் என பாதியாக சுருங்கியது. இருப்பினும், செவ்வாய்க்குப் பிறகு, மின்ஸ்க் ஏரோஃப்ளோட்டின் ஒரே சர்வதேச இடமாக இருக்கும்.

கூடுதலாக, ஏர் இந்தியா, கத்தார் ஏர்வேஸ், எதிஹாட், துருக்கிய ஏர்லைன்ஸ், ஏர் சீனா, எமிரேட்ஸ் உள்ளிட்ட சில ரஷ்ய அல்லாத விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்களுக்கு தொடர்ந்து இயக்கப்படுகின்றன.



Read in source website

பங்குச் சந்தைகள் 2.74 சதவிகிதம் வரை சரிவு; அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 77.01 ஆக சரிவு; கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய்க்கு $ 138 வரை அதிகரிப்பு; பங்குகள் ஏன் வீழ்ச்சியடைகின்றன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Stocks and rupee plunge, crude on the boil: why is it happening, and what should you do?: திங்கள்கிழமை (மார்ச் 7) காலை பங்குச் சந்தைகள் 2.74 சதவீதம் வரை சரிந்தன மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 77.01 ஆக சரிந்தது, ஏனெனில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய்க்கு $ 138 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் 1,791 புள்ளிகள் (3.29 சதவீதம்) சரிந்த பிஎஸ்இ (மும்பை பங்குச்சந்தை) சென்செக்ஸ், இந்திய நேரப்படி 10.55 மணி அளவில், 1,451 புள்ளிகள் குறைந்து 52,883.38 ஆகவும், என்எஸ்இ (தேசிய பங்குச்சந்தை) நிஃப்டி குறியீடு 416 புள்ளிகள் குறைந்து 15,829.25 ஆகவும் இருந்தது.

ஸ்மால் கேப் குறியீடு 2.48 சதவீதம் சரிந்தநிலையில், மிட் கேப் இன்டெக்ஸ் 2.54 சதவீதம் சரிந்தது. ரியல் எஸ்டேட், வங்கி, நிதி, ஆட்டோமொபைல் மற்றும் மூலதன பொருட்களின் குறியீடுகள் மற்றும் பங்குகள் 4.7 சதவீதம் வரை சரிந்தன.

பங்குகள் ஏன் வீழ்ச்சியடைகின்றன?

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா முழுமையாகத் தடைசெய்வதாக வெளியான வார இறுதி அறிக்கைகளுக்குப் பிறகு, எதிர்காலச் சந்தைகளில் பீதியடைந்து, திங்கள்கிழமை காலை எண்ணெய் விலை 8.50% உயர்ந்தது மற்றும் கிட்டத்தட்ட முடிவடைந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில், ரஷ்யர்கள் அமெரிக்கா மீதான சில கடுமையான கோரிக்கைகளை கடைசி நிமிடத்தில் சேர்த்தனர் என்று OANDA அறிக்கை கூறுகிறது.

“ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்காவின் தடை அதிக உள்நாட்டு விலைகளுக்கு வழிவகுக்கும் என்பதாலும், இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தியை பெரிதும் நம்பியிருக்கும் ஆசிய வர்த்தகர்கள் பீதி பொத்தானை அழுத்துவதில் ஆச்சரியமில்லை” என்று OANDA ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் ஜெஃப்ரி ஹாலி கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பிப்ரவரி 24 அன்று தொடங்கிய பின்னர் சென்செக்ஸ் இப்போது 7.66 சதவீதம் சரிந்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை $138.00 என் வர்த்தகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் விலை தற்போது ஒரு பீப்பாய் $128.00 ஆக உள்ளது என OANDA கூறுகிறது. கச்சா எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கூர்மையான உயர்வு, இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தை உயர்த்தி, நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவுபடுத்தும் அச்சுறுத்தல் காரணமாக, திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

திங்கட்கிழமை ரூபாயின் மதிப்பு 77.01 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை 76.16 ஆக நிறைவடைந்து இருந்தது. அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் இந்தியாவின் இறக்குமதிச் செலவைக் கூட்டி பணவீக்கத்தை உயர்த்தும். பணவீக்கத்தை அதிகரித்து வருவதால் ஏற்படும், பொருட்களின் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை வைத்திருந்தால் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் முதலீட்டை நிறுத்தாமல் தங்கள் SIP திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மறுபுறம், ஒரு பெரிய திருத்தம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தரமான பங்குகளை கவர்ச்சிகரமான நிலைகளில் எடுக்க வாய்ப்பளிக்கும். “முதலீட்டாளர்கள் எந்தவொரு பெரிய உறுதிமொழிகளையும் செய்வதற்கு முன் வெளிவரும் சூழ்நிலையை காத்திருந்து கவனிக்க வேண்டும். வாங்குதல் என்பது நியாயமான மதிப்பு அல்லது நல்ல வருவாய் தெரிவுநிலையைக் கொண்டிருக்கின்ற பங்குகள்/பிரிவுகளாக இருக்க வேண்டும்,” என்று ஜியோஜித் பைனான்சியலின் தலைமை முதலீட்டு வியூகவாதி வி கே விஜயகுமார் கூறினார்.

அனைத்து முதலீட்டாளர்களும் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு உத்தியைப் பின்பற்றுவதும், தற்போதைய கட்டத்தில் புதிதாக நுழைவதைத் தவிர்ப்பதும் நல்லது. உக்ரைன் நெருக்கடி மேலும் அதிகரித்தால், எண்ணெய் விலை உயர்ந்த மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சந்தை மேலும் அடிபட வாய்ப்புள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் கூடி வட்டி விகிதங்களை உயர்த்துவது மற்றும் பணப்புழக்கத்தை கடுமையாக்குவது குறித்து முடிவெடுக்கும் அதே வேளையில், பெடரல் ரிசர்வ் செங்குத்தான உயர்வு அல்லது இறுக்கத்திற்கு செல்லாது என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

மற்றொரு கவலை என்னவெனில், பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் நேரத்தில், அதாவது ரிசர்வ் வங்கியின் மேல் பட்டையை விட அதிகமாக இருக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கமாகும்.



Read in source website

பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சி முதலமைச்சர்களின் தற்போதைய அழுத்தம், பல தசாப்தங்களுக்கு முன்னர் இதேபோல் எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒன்றினைந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது. அப்போது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலக்காக இருந்தது.

பிப்ரவரி 13 அன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் “அரசியல் சட்ட மீறல் மற்றும் ஆளுநரின் அதிகாரம் துஷ்பிரயோகம்” குறித்து விவாதிக்க பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய பரிந்துரைத்தார்.

நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து தெலங்கானா முதல்வர்கே சந்திரசேகர் ராவுடன் பானர்ஜி பேசினார். தொடர்ந்து, பிப்ரவரி 20 அன்று, பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கேசிஆர் சந்தித்தார்.

மேலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுக்கு பணியமர்த்துவதற்கான விதிகளில் மாற்றங்களை முன்மொழிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேசிஆர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல தசாப்தங்கள் பின்னோக்கி பயணம்

பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சி முதலமைச்சர்களின் தற்போதைய அழுத்தம், பல தசாப்தங்களுக்கு முன்னர் இதேபோல் எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒன்றினைந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது

1969இல் முதல்வராக பதவியேற்றவுடன், மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பேசினார். பின்னர் சில மாதங்கள் கழித்து, அவரது அரசாங்கம் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி வி ராஜமன்னார் தலைமையில் குழுவை அமைத்தது. அந்த குழுவினர் 1971இல் சம்ர்பித்த அறிக்கையில், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. நீண்ட விவாதங்களுக்கு பிறகு, 1990 இறுதியில் கவுன்சில் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, 1983இல் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தார். 1980இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, 9 மாநில அரசின் ஆட்சியை கலைத்தார். இது, கிரான்வில் ஆஸ்டின் 1983 இன் அரசியலமைப்பு கிளர்ச்சி என அழைக்கப்பட்டது.

இதையடுத்து, அதே ஆண்டில் மார்ச் 20 அன்று, ராமகிருஷ்ண ஹெக்டே (கர்நாடகா), எம்ஜிஆர் (தமிழ்நாடு), என் டி ராமராவ் (ஆந்திரா), மற்றும் டி ராமச்சந்திரன் (பாண்டிச்சேரி) ஆகியோர் பெங்களூரில் நேரில் சந்தித்து பேசினர்.

அந்த சந்திப்பை தொடர்ந்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள், ஆளுநர் பதவியை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தென் மாநில முதலமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மே 28 அன்று, விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத 14 கட்சிகளின் கூட்டத்தை என்டிஆர் கூட்டினார். இதில் பாஜக சார்பில் எல் கே அத்வானி, சஞ்சய் விசார் மஞ்ச் சார்பில் மேனகா காந்தி, அகாலி தளம் சார்பில் எஸ் எஸ் பர்னாலா, காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சிபிஐ-எம் சார்பில் பசவபுன்னையா, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், 356-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, அக்டோபர் 5-7 தேதிகளில் பரூக் அப்துல்லாவால் கூட்டப்பட்ட கூட்டத்தில் காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் பங்கேற்றுக்கொண்டனர். இதில் ஏபி வாஜ்பாயும் பங்கேற்றுக்கொண்டார்.

மாறும் காங்கிரஸ், பாஜக ரோல்

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, தற்போது டெல்லியில் இரண்டு முழு பெரும்பான்மை அரசாங்கங்கள் இதே போன்ற மோதல் போக்கை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, வலிமையான முதல்வர்கள் குரல் எழுப்புகின்றனர்.

பா.ஜ.க ஆட்சியில் இருந்ததாலும், காங்கிரஸ் கடுமையாக பலவீனமடைந்ததாலும், அதன் ரோல் மாறியுள்ளன. தற்போது மத்திய அரசுக்கு எதிராக ஒலிக்கும் குரல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா அரசுக்கு எதிராகவும் ஒலித்தன.

பாஜக அல்லாத முதல்வர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளாவது, ” கல்வி மையப்படுத்தல், ஆளுநரின் பாரபட்சம், புதிய மின்சாரக் கொள்கை, நிதி, பொருளாதாரம் மற்றும் சட்டமன்றத் துறைகளில் கூட்டாட்சிக் கொள்கைகள் பலவீனமடைதல், வருவாய்ப் பங்கீடு ஆகியவை அடங்கும். அதேபோல், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு பணியமர்த்துவதற்கான விதிகளில் மாற்றங்களை முன்மொழிவதற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அப்போது, விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்திரா, மத்திய-மாநில உறவுகளை ஆராய நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா கமிஷனை நியமித்தார். 1984 இல் பணியை தொடங்கிய குழுவினர், 1987இல் 600 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில்,சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும், பெரும்பாலான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆளுநர்கள் தேர்வு மற்றும் நியமனம் குறித்த பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.

மத்திய அரசின் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் தவறாக பயன்படுத்த அனுமதித்துள்ள அரசியல் சட்டத்திலேயே குறைபாடுகள் இருக்கிறதா என சட்ட வல்லுநர் நானி ஏ பால்கிவாலா கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடைபெறும் எனில் அது நேட்டோ நாட்டினர் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்கிறது நேட்டோ உடன்படிக்கை

What is NATO and why is Russia so insecure : தற்போது கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்று வரும் போரின் முக்கியமான சில காரணங்களில் ஒன்று உக்ரைன் நேட்டோ படையுடன் சேர விருப்பம் தெரிவித்தது. அமெரிக்க தலைமையிலான மேற்கு உலக நாடுகளின் ராணுவக் கூட்டணியே இந்த நேட்டோ படை. அதிபர் விளாடிமிர் புதினை பொறுத்த வரை உக்ரைன் இந்த நேட்டோ படையில் இணைவது ரஷ்யாவின் வாழ்வா சாவா என்பது தொடர்பான அச்சுறுத்தலாக உள்ளது. இந்த காரணத்தின் பேரிலும், 1945-க்குப் பின்னாள் ஐரோப்ப நாடுகள் காணாத வகையில் ரஷ்யா உக்ரைன் மீது தன்னுடைய போரை தொடுத்துள்ளது.

கூட்டு ராணுவப் படை

நேட்டோ படை அல்லது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு 1949ம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளால், சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள உருவாக்கப்பட்டது. இது மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையாக கருதப்படுகிறது.

30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த அமைப்பு பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள இதர நாடுகளின் கமாண்டிங் ஆப்பரேஷன் அலுவலகம் பெல்ஜியத்தின் மோன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.

வெளிப்புற தாக்குதல்களை நேட்டோ நாடுகள் எதிர்க்கொள்ளும் பட்சத்தில் பரஸ்பர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்நாடுகள் ஒப்பந்தமிட்டுள்ளனர். கூட்டு பாதுகாப்பு படை என்பது நேட்டோவின் மையமாக உள்ளது. இது உறுப்பினர்களை ஒன்றாக இணைக்கும் ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த கொள்கை ஆகும். இதர நாடுகளை பாதுகாக்க மற்றும் கூட்டணிக்குள் ஒற்றுமை உணர்வை உருவாக்குகிறது இந்த அம்சம்.

இந்த அம்சம் தொடர்பாக விரிவான விளக்கம், நேட்டோ உருவாக்கத்தின் போது எழுதப்பட்ட உடன்படிக்கையின் பிரிவு 5-ல் இடம் பெற்றுள்ளது.

“ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடைபெறும் எனில் அது நேட்டோ நாட்டினர் மீதான தாக்குதலாகவே கருதப்படும். ஒரு நாட்டின் மீது ஏதேனும் வெளிப்புற தாக்குதல் நடைபெறும் எனில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அந்த தாக்குதலுக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பிற்காக பதில் தாக்குதலை நடத்தலாம் என்பது ஏற்கனவே ஐ.நா சாசனத்தின் பிரிவு 51-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமையாக உள்ளது. இந்த உரிமையின் கீழ் பாதிக்கப்பட்ட நாட்டின், நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆயுதம் ஏந்திய தாக்குதல் உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வடக்கு அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்” என்று பிரிவு 5-ல் கூறப்பட்டுள்ளது.

தோற்றம் மற்றும் பின்னணி

இரண்டாம் உலகப்போரின் முடிவில், மோசமாக பாதிப்படைந்திருந்த ஐரோப்பிய நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்று கொண்டிருந்தன. அன்று பொருளாதார சக்தியாக கருதப்பட்ட அமெரிக்கா, கம்யூனிச சோவியத் ஒன்றிய மேற்கு நோக்கி விரிவடைவதை தடுக்க மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன், ஐரோப்பாவை மீள் கட்டமைப்பு செய்ய ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதன் வழியே பொருளாதார உதவிகளை அதிகப்படியாக ஐரோப்பாவிற்கு வழங்கியது அமெரிக்கா.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி எஸ் ட்ரூமனின் வெளியுறவுத்துறை செயலர் ஜார்ஜ் சி மார்ஷ் என்பவரின் பெயரில் மார்ஷல் திட்டம் அல்லது ஐரோப்பிய மீட்பு திட்டத்தை அமெரிக்கா அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பகிரப்பட்ட நலன்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தியது அமெரிக்கா. இந்த மார்ஷெல் திட்டத்தில் சோவியத் ஒன்றியம் பங்கேற்க மறுத்ததோடு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்க முயன்ற அமெரிக்காவின் பொருளாதார உதவியை பெற வேண்டாம் என்றும் கூறியது.

1946 – 49 காலகட்டங்களில் நடைபெற்ற க்ரீக் உள்நாட்டு போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சோவியத்தின் ஆதரவை பெற்ற கம்யூனிஸ்ட் அமைப்பு க்ரீஸை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியை முறியடித்தது. மேற்கு நாடுகள் துருக்கிக்கு பின்னாள் நிற்க, துருக்கியோ, . போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஜலசந்தியை (கருங்கடல் மற்றும் மர்மாரா கடல் மற்றும் மர்மாரா மற்றும் ஏஜியன் கடல் ஆகியவற்றை முறையே இணைக்கும்) கைப்பற்ற நினைத்த சோவியத் யூனியனுக்கு எதிராக நின்றது. 1947-48 காலங்களில் துருக்கி மற்றும் க்ரீஸ் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட கம்யூனிச எழுச்சிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டது.

செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் ராணுவ ஆட்சிக்கு ஸ்டாலினின் அரசு 1948ம் ஆண்டு உதவி புரிந்தது. இது சோவியத் ஆதிக்கம் செலுத்திய கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கத்திய கொள்கைகளைக் கொண்ட மேற்கு ஜெர்மனியுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்ட நாட்டில் கம்யூனிச கட்சியின் ஆட்சிக்கு வழி வகை செய்தது. போருக்கு பிந்தைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் 1948 – 49 கால கட்டங்களில் சோவியத் மேற்கு பெர்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் 11 மாதங்கள் மிகப்பெரிய நெருக்கடி நிலவியது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணி அவசியம் என்ற முடிவுக்கு அமெரிக்காவை இட்டுச் சென்றது. ஐரோப்பியர்களும் ஒரு கூட்டுப் பாதுகாப்பு தேவையின் அவசியத்தை நம்பினார்கள். எனவே 1948ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் ப்ரஸ்ஸல்ஸ் ஒப்பந்தத்தில் கூட்டு பாதுகாப்பு படைக்காக கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் ஏதேனும் பாதிப்பை சந்தித்தால் இதர நாடுகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பது இந்த உடன்படிக்கையில் சிறப்பு அம்சமாக இடம் பெற்றது.

சில மாதங்களுக்கு பிறகு, ஐ.நா. சாசனத்திற்குள் ஆனால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளியே செயல்படும் பரஸ்பர பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும் சுதந்திரமான உலகப் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை கூறும் வான்டென்பர்க் தீர்மானம் ஒன்றை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் அந்த அமைப்பிற்கு வெளியே இத்தகைய முடிவு தேவை என்று கருதப்பட்டது.

வான்டென்பர்க் தீர்மானம் நாட்டோவின் முதல் படியாக கருதப்பட்டது. ப்ரஸ்ஸல்ஸ் ஒப்பந்த நாடுகள் மட்டுமின்றி இதர நாடுகளையும் இணைத்தால் இது மேலும் திறம்பட செயல்படும் என்று அமெரிக்கா நம்பியது. வடக்கு அட்லாண்டிக் நாடுகளான கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, ஐயர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளையும் உள்ளடக்கியது. இந்த நாடுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரண்டு கரைகளை இணைக்கும் பாலமாக பார்த்தது அமெரிக்கா.

ஆரம்பத்தில் 12 உறுப்பு நாடுகளை கொண்டு நேட்டோ 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாசிங்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நார்வே, போர்ச்சுகல், நெதர்லாந்து, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் இதில் இடம் பெற்றன.

நேட்டோ விரிவாக்கம்

க்ரீஸ் மற்றும் துருக்கி நாடுகள் 1952-ல் இணைந்தன. ஜெர்மனியின் ஃபெட்ரல் குடியரசு (மேற்கு ஜெர்மனி) 1955லும், ஸ்பெய்ன் 1982லும் இணைந்தன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உறுப்புகளாக இருந்த செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து போன்ற நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1999ல் நேட்டோவுடன் இணைந்தன.

பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா 2004ம் ஆண்டிலும், அல்பானியா, க்ரோசியா 2009ம் ஆண்டிலும் மோண்டேனேக்ரோ 2017ம் ஆண்டிலும், 2020ம் ஆண்டில் வடக்கு மசிடோனியாவும் நேட்டோவில் இணைந்தன.

ரஷ்யாவின் பதட்டம்

நேட்டோவின் உருவாக்கம் தான் சோவியத்தை பதட்டம் அடைய வைத்தது. 1955ம் ஆண்டு சோவியத் யூனியன் சொந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இது வர்சாவ் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. இதில் போலாந்து, செக்கோஸ்லோவாக்கியா, அல்பானியா, பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் ரோமானியா போன்ற நாடுகள் இடம் பெற்றன.

பனிப்போரின் முடிவில் வார்சாவ் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு ஒப்பந்தம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இதன் உறுப்பு நாடுகளாக இருந்த சோவியத் யூனியன், செக்கோஸ்லோவாக்கியா, மற்றும் கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளின் இருப்பும் முடிவுக்கு வந்தது. இதர ஐந்து நாடுகள் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக மாறின.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகான சிறிது காலங்கள் கழித்து, புடினின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யா தொடர்ந்து மேற்கு நாடுகள் மீதான அச்சத்தையும் சந்தேக பார்வையையும் எப்போதுமே கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள மூன்று பால்டிக் நாடுகளும் நேட்டோ உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில் உக்ரைன் மற்றும் பெலராஸ் நாடுகள் நாடுகள் மட்டுமே மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பிற்கு வெளியே உள்ளன.

கிரெம்ளினின் கண்ணோட்டத்தில், அதன் தெற்கு மற்றும் மேற்கு எல்லையில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு பாதுகாக்கப்பட்ட இடைவெளியை வைத்திருப்பது ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானது. நேட்டோவின் அணு ஆயுத குடைக்குள் உள்ள உக்ரைனால் மாஸ்கோவில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஏவுதளத்தை வைத்துக் கொள்ள முடியும், கருங்கடலில் சூடான நீர் துறைமுகங்களை ரஷ்யா அணுகுவதை தடுக்க முடியும் என்பது போன்ற காரணங்களால் தான் 2014ம் ஆண்டு க்ரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.



Read in source website

உக்ரைன் மீதான தாக்குதலை ஆதரிக்கும் ரஷ்யர்களுக்கு அடையாளமாக மாறிய ’Z’; ஹிட்லரின் ஸ்வஸ்திகாவை ஒத்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து

The letter ‘Z’ has become a symbol for Russians who support the invasion of Ukraine: “Z” என்ற எழுத்து முதன்முதலில் பல வாரங்களுக்கு முன்பு உக்ரைனுடனான ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டாங்கிகள், ராணுவ வீரர்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பிற இராணுவ வாகனங்களின் பக்கங்களில் இரண்டு அடி உயரத்தில் வரையப்பட்டபோது கவனத்தை ஈர்த்தது.

ரஷ்யாவில், இந்த எழுத்து எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியது. கார்கள் மற்றும் வணிக வாகனங்களின் பின்புறத்தில் Z ஸ்டிக்கர்கள் இடம் பெறத் துவங்கின. மேலும் சமீபத்தில் ஒரு டாக் ஷோ தொகுப்பாளர் ஒரு பெரிய வெள்ளை Z கொண்ட டி-ஷர்ட்டை அணிந்திருந்தார்.

சில கார்ப்பரேட் லோகோக்கள் மற்றும் செய்தித்தாள் பெயர்கள் Z ஐக் கொண்டவை, அவை தங்களை முன்னிலைப்படுத்த இந்த எழுத்தைப் பயன்படுத்திக் கொண்டன. பெரிய நகரங்களில் விளம்பரப் பலகைகளைப் பயன்படுத்தி ஒரு விளம்பரப் பிரச்சாரத்தில் ரஷ்ய ராணுவத்தின் சின்னமான செயின்ட் ஜார்ஜ் ரிப்பன் என்ற கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ரிப்பனில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு பெரிய Z உருவாக்கப்பட்டது.

ராணுவ பிரச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாகனங்கள் உடனடியாக அடையாளம் காணக்கூடிய அடையாளத்தைக் காட்டுவது பொதுவானது அல்ல. எடுத்துக்காட்டாக, குவைத்தின் ஈராக் படையெடுப்பை முறியடிக்க பயன்படுத்தப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் ஒரு பெரிய வெள்ளை செவ்ரானால் (ராணுவ வீரரின் பதவியைக் குறிக்கும் கோடுகள் உடைய பட்டை) வர்ணம் பூசப்பட்டன. இந்த லோகோக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவுவது வேறு விஷயம்.

“Z” எழுத்து பிரச்சாரம் எங்கும் பரவியது, இது போருக்கான ஆதரவைப் பறை சாற்றுவதற்கான ஒரு திட்டமிடப்பட்ட ரஷ்யாவின் முயற்சி என்று பலர் முடிவு செய்ய வழிவகுத்தது, ஏனெனில் இது முந்தைய பல முயற்சிகளை ஒத்திருந்தது. இது கடந்த கால போர்களின் முழக்கங்களைப் போல் ஒரு ஹேஷ்டேக்குடன் வந்தது: “நாங்கள் எங்களுக்குச் சொந்தமானதை கைவிட மாட்டோம்.” (வீரர்களைப் போலவே)

பாஸ்டனை தளமாகக் கொண்ட ரஷ்ய அமெரிக்க ஊடக ஆய்வாளரான வாசிலி காடோவ், “இது நிச்சயமாக அரசால் தூண்டப்பட்ட நினைவுச்சின்னம்” என்றார். “இதுபோன்ற செய்தியை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்கிறார்கள்.” சமூக வலைதளங்களில் மீம்களை பரப்பி, பிரபலம் என்ற தவறான தோற்றத்தைக் கொடுப்பதற்காக ஒரு சிறிய அளவிலான பிரச்சாரகர்கள் பணம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான சந்தேக நபர்களில் சிலர் வரிசையாக கண் முன் வருவது அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பு உணர்வைக் காட்டுகிறது.

ரஷ்யாவிற்கான பதிவு செய்யப்படாத முகவராக பணிபுரிந்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், மரியா புட்டினா 2019 இல் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இப்போது ஸ்டேட் டுமா அல்லது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அவர், தனது சூட் ஜாக்கெட்டில் வெள்ளை நிற இசட் வரைந்த வீடியோவை வெளியிட்டார்.

“உங்கள் வேலையைச் செய்யுங்கள், சகோதரர்களே,” “நாங்கள் எப்போதும் உங்களை ஆதரிப்போம்.” என்று அவர் உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களைப் பற்றிய வெளிப்படையான குறிப்பில் கூறினார்.

அரசு நடத்தும் RT தொலைக்காட்சி நெட்வொர்க்கும் சின்னத்தை பரப்பியது.

மற்றொரு வீடியோ ஆன்லைனில் ஒரு தொழிற்சாலை அல்லது மீட்டிங் ஹாலில் இளைஞர்களின் ஃப்ளாஷ் மாப் (கூட்டமாக நிகழ்த்துவது) போல் இருந்தது, அது Z எழுத்துடன் கூடிய கருப்பு டி-சர்ட்களை அணிந்து, ரஷ்ய கொடிகளின் கடலுக்கு மத்தியில் நடனமாடுவதைக் காட்டியது. முந்தைய கிரெம்ளின் மாளிகை பிரச்சாரங்களின் போது இதே போன்ற வீடியோக்கள் வந்துள்ளன, ஒரே வித்தியாசம் டி-ஷர்ட்கள் கூடுதலாக உள்ளது.

சமூக ஊடகங்களில் உள்ள விமர்சகர்கள், ஹிட்லர் ஆயிரக்கணக்கான கருப்புச் சட்டை ஆதரவாளர்களைத் திரட்டினார் என்பதைச் சுட்டிக்காட்டினர், மேலும் சிலர் Z என்ற எழுத்தை நாஜி ஸ்வஸ்திகாவை போன்று உள்ளதாக கூறினர்.

சில காட்சிகள் உண்மையான ஆதரவைப் பிரதிபலித்தன என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, சனிக்கிழமையன்று, ரஷ்ய ஜிம்னாஸ்ட் இவான் குலியாக் கத்தாரில் நடந்த ஒரு போட்டியில் உக்ரேனிய ஜிம்னாஸ்ட்களும் கலந்துக் கொண்ட அந்த போட்டியில் தனது சீருடையில் Z அணிந்திருந்தார். விளையாட்டின் சர்வதேச நிர்வாகக் குழு ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தாலும் கூட, ரஷ்ய பயிற்சியாளர் மற்றும் சில சக ரஷ்ய ஜிம்னாஸ்ட்கள் அவரைப் பகிரங்கமாக ஆதரித்தனர்.

இந்த சின்னமும் அச்சுறுத்தலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும், போருக்கு எதிரான தனது எதிர்ப்பால் ரஷ்யாவை விட்டு வெளியேறிய ஒரு முக்கிய திரைப்பட விமர்சகரான அன்டன் டோலின், தனது அபார்ட்மெண்ட் கதவில் யாரோ ஒருவர் பூசப்பட்ட ஒரு மாபெரும் வெள்ளை Z இன் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார். மிரட்டல் முயற்சி என்று.

விந்தை என்னவென்றால் ஒரு தேசியவாத சின்னமாக உள்ள, Z என்பது லத்தீன் எழுத்துக்களின் பதிப்பாகும். ரஷ்ய பதிப்பு, சிரிலிக் எழுத்துக்களில் இருந்து, 3 போன்ற வட்டமானது.

இதன் பொருள் என்ன என்பது பற்றிய பல வார ஊகங்களுக்குப் பிறகு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது, இது “ஜா போபேடு” என்ற ரஷ்ய சொற்றொடரின் முதல் வார்த்தையான “ஜா” என்பதிலிருந்து வந்தது, அதாவது “வெற்றிக்காக”.

அந்த விளக்கம் திங்களன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு கூர்மையான சலசலப்பைத் தூண்டியதாகத் தோன்றியது, அங்கு உக்ரேனிய தூதர் செர்ஜி கிஸ்லித்ஸ்யா, “Z” உண்மையில் “zveri” என்பதைக் குறிக்கிறது, இது ரஷ்ய மொழியில் மிருகங்கள் அல்லது விலங்குகளைக் குறிப்பதாகும் என்று கூறினார். அதற்கு ரஷ்ய தூதரான வாசிலி நெபென்சியா, விலங்குகள் யார் என்பதில் ரஷ்யர்கள் தங்கள் சொந்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று பதிலளித்தார்.



Read in source website

 

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சோகமான நாளாகும். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ராட்னி மார்ஷ் (74) காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னேயை அடுத்த 12 மணி நேரத்துக்குள் காலன் கபளீகரம் செய்துவிட்டான் என்பதுதான் மிகப் பெரிய சோகம். தாய்லாந்தில் உள்ள சுற்றுலாத் தீவான கோ சாமுயில் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார்.

சாதனை மேல் சாதனை படைத்த வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கை சோதனையுடன்தான் தொடங்கியது. 7 முதல் தர ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்ற நிலையில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்கு எதிராக 1992-இல் சிட்னியில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது டெஸ்டில் அறிமுகமான அவர் 150 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 

அடிலெய்டில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் விக்கெட் எடுக்காததால் நீக்கப்பட்டார். ஆனால், மீண்டும் அணியில் இடம்பிடித்த அவருக்கு அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் திருப்புமுனையாக அமைந்தது. 52 ரன்களுக்கு 7 விக்கெட் சாய்த்து ஆட்ட நாயகன் ஆனார். அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம்தான்.
ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 1993-இல் களம்கண்டார். ஓல்ட் டிராஃபர்டில் நடைபெற்ற டெஸ்டில் தான் வீசிய முதல் பந்திலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார். இங்கிலாந்தின் மைக் கேட்டிங் அவரது பந்துவீச்சை எதிர்கொண்டார். லெக் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து, மைக் கேட்டிங் கண்ணிமைப்பதற்குள் அற்புதமாக சுழன்று ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது. கேட்டிங் ஆச்சரியத்தில் உறைந்தார். அந்தப் பந்து "பால் ஆஃப் தி செஞ்சுரி' என்று புகழ்பெற்றது.

அதன் பின்னர், உலகின் தலைசிறந்த பேட்டர்கள் பலரையும் இதுபோன்று அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 1999-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு வார்னேவும் ஒரு காரணம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 213 ரன்கள் மட்டுமே எடுத்தபோதும், வார்னே 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 
4 விக்கெட் சாய்க்க ஆட்டம் "டை' ஆனது. ரன் ரேட் விகிதத்தால் ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் வார்னே 4 விக்கெட் சாய்க்க, பாகிஸ்தான் 132 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா எளிதாக வென்றது. இரு ஆட்டங்களிலும் வார்னேதான் ஆட்ட நாயகன்.

1877 முதல் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளில் இருவர் மட்டும்தான் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் வார்னே (1001 விக்கெட்); மற்றவர் இலங்கையின் முரளீதரன் (1347 விக்கெட்). இதிலிருந்தே அவரது சிறப்பை அறிய முடியும். டெஸ்ட் ஆட்டங்களில் முரளீதரன் 800 விக்கெட்டுகளையும், வார்னே 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் 2007 முதல், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைக்கு வார்னே - முரளீதரன் டிராபி என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் பைபிள் என்று கருதப்படும் "விஸ்டன்' இதழ் வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களுள் ஷேன் வார்னே ஒருவர்தான் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் சர் கேர்பீல்ட் சோபர்ஸ் (ஆல்ரவுண்டர்), சர் விவியன் ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்தின் சர் ஜாக் ஹாப்ஸ் ஆகியோர் விஸ்டன் பட்டியலில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் ஆவர். 1997 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் விஸ்டனின் அந்த ஆண்டின் சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வார்னேவை "ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்த்து கெளரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
2008-இல் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவரது பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக எதிர்கொண்டு விளாசியுள்ளார். அதேபோன்று, அவரது பந்துவீச்சை யார் சிறப்பாக எதிர்கொண்டாலும் அவர்களைப் பாராட்டும் குணம் கொண்டவர்.

2013-இல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகிய வார்னே, வர்ணனையாளராகப் பணியாற்றினார். ஓர் ஆட்டத்துக்கு முன்பாக ஆடுகளம் குறித்து சூதாட்ட முகவருக்குத் தகவல் அளித்து பணம் பெற்றதாக வார்னேவுக்கும், மார்க் வாஹ்வுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது. ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியானதால் 2003 உலகக் கோப்பை போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது போன்ற சர்ச்சைகளுக்கு ஆளானார்.

"வார்னே இறந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது' என்று விவியன் ரிச்சர்ட்ஸ் பதிவிட்டார். "வார்னே காலமானது அதிர்ச்சியில் உறையும் வகையிலான துயரமான செய்தி. அவர் என்றும் நினைவில் இருப்பார்' என்று சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை வசீ
கரித்த வார்னே அகால மரணமடைந்தாலும், டெண்டுல்கர் கூறியதுபோல கிரிக்கெட் விளையாடப்படும் வரை ரசிகர்களின் நினைவில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.



Read in source website

ஒரு முனிவரிடம் சீடர் ஒருவர் தன் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளைக் கூறி, அவற்றுக்கான தீர்வைக் காண முடியாமல் தான் திணறுவதாகக் கூறினார். உடனே முனிவர் "உனக்கு உன் ஊரைப் பிடிக்குமா, உன் ஊர் எப்படிப்பட்ட ஊர்' என்று கேட்டார். உடனே சீடர், "எனது ஊர் மிகவும் ரம்மியமான கிராமம். அங்கு இருக்கும் மலைகள் மிகப்பெரியவை. அவை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்' என்று கூறினார். 

முனிவர் அவரை அழைத்துக் கொண்டு ஒரு மலையின் உச்சிக்கு வெகுதூரம் நடந்து சென்றார். சீடருக்கோ ஒன்றும் புரியவில்லை. நம் பிரச்னைக்கு இங்கு என்ன தீர்வு இருக்கும் என்று எண்ணிக்கொண்டே  தொடர்ந்தார். மிகவும் உயரமான உச்சியை இருவரும் அடைந்தனர். அப்போது இங்கிருந்து நீ என்ன காண்கிறாய் என்றார் முனிவர்.  சீடர் "மிக அருமையான காட்சி குருவே. கால் வலிக்க ஏறி வந்த களைப்பெல்லாம் இப்போது சென்றுவிட்டது' என்றார்.
"அதோ அங்கு ஒரு புள்ளியாகத் தெரிகிறதே, அதுதான் உன்னுடைய கிராமம்' என்றார். சீடர், "அட, நான் பிரமிப்போடு பார்த்த என் கிராமம் இப்போது இவ்வளவு சிறிதாகத் தெரிகிறதே' என்று பதிலளித்தார். முனிவர் "உண்மைதான், நாம் பெரிதாக எண்ணும் விஷயங்கள் எல்லாம் மேலிருந்து பார்க்கும்போது சிறிதாகத் தோன்றும்.

நீ உன் பிரச்னையை வெளியிலிருந்து பார்க்கும்போது, அதை எளிதாகக் கையாளலாம். பிரச்னைக்கு உள்ளேயே இருந்துகொண்டு அதற்கான  தீர்வைக் காண நினைப்பது,  புதைகுழியில் இருக்கும் மனிதன் அதிலிருந்து மீள நினைப்பதாகும். தரையில் இருப்பவரால் மட்டுமே புதைகுழியில் இருப்பவரைக் காப்பாற்றமுடியும்' என்று முனிவர் கூறினார். சீடருக்குத் தெளிவு பிறந்தது. வெளியுலகம் தரும் அனுபவங்கள், இன்னல்களைக் கையாளும் திறமையை நமக்குக் கற்றுக்கொடுக்கும். 

சுமெய்யே பொயாசி என்ற பெண், பிறக்கும்போதே இரண்டு கைகளும் இன்றி பிறந்தவர்.  திடீரென அவருக்கு நீச்சலின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்களோ "இரு கைகளும் இல்லாத உன்னால் எப்படி நீந்த முடியும்' என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர், மீன்தொட்டியில் மீன்கள் நீந்துவதைக் காட்டி, "கைகள் இல்லாத மீன்களால் நீந்த முடியும்போது என்னாலும் முடியும்' என்று கூறுகிறார். 

தன்னுடைய முயற்சியால் தண்ணீரின் ஆழம் காண்கிறார். நம்பிக்கையுடன் பல போட்டிகளில் கலந்துகொள்கிறார். 2018-இல் ஐரோப்பிய நாட்டில் நடந்த போட்டியில் வெற்றியாளராக முடிசூடுகிறார். 2019-இல் நீச்சல் போட்டியில் உலக அளவில் பட்டம் வென்று சாதனை புரிகிறார். அவரின் தன் னம்பிக்கையின் நீட்சியே அவர் தன் கால்களால் தீட்டும் வண்ணமிகு ஓவியம். 
தனக்குக் கைகள் இல்லை என்பதை எண்ணி சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் முயன்றதால் பொயாசி பெரிதினும் பெரிய சாதனையை செய்ய முடிந்தது. தன் கைகள் மற்றவர்களைப் போல் அழகாக இல்லையே என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில், கைகளே இல்லாத பொயாசி வாழ்க்கையின் கண்ணோட்டத்தை மாற்றி, முயன்றால் வாழ்வு வளமாகும் என்பதை நமக்குப் புரிய வைத்தார். 

வீட்டிற்குள்ளே இருக்கும் சிறு சிறு இன்னல்களால் சலிப்படைந்து வாழ்வின் இனிமைகளை ரசிக்கத் தவறும் மனிதர்கள் ஏராளமானோர். குறிப்பாக பெண்கள் தங்கள் கனவுகளைத் தன் குடும்பத் தேவைக்காக தள்ளிவைத்து விடுவர். பிறருக்காகவும், குடும்பத்துக்காகவும் வாழ்ந்து பின்னாளில் நான் எனக்கென வாழவில்லையே என்று எண்ணி மனம் வருந்துவார்கள். ஒரு பெண் தனக்காக ஒதுக்கும் நேரமே அவளின் வாழ்வை 
மாற்றும்.
நமக்கான நேரம் என்பது தொலைக்காட்சி பார்ப்பது மட்டும் அல்ல. தனக்கு ஏற்ற ஒரு கலையைக் கற்பதோ கற்பிப்பதோகூட இருக்கலாம். நாம் கற்றுக் கொள்ளும் கல்வி நம் அறிவைப் பண்படுத்தும்; கலையோ நம் மனதைப் பண்படுத்தும். நாம் கற்றுக் கொள்ளும் கலைகள் நம் மனதில் உள்ள களைகளைக்  களையும்.

சிறுசிறு நிகழ்வுகளைப் பெரிதாக்கிப் பார்க்கும் குணமே நம் மகிழ்ச்சிக்கான தடையாகும். உண்மையில் ஒருவரின் மகிழ்ச்சி அவருடைய கைகளில்தான் உள்ளது. அற்ப விஷயங்களில் மாட்டிக் கொண்ட மனங்களுக்கான மருந்து பெரிதினும் பெரிதாய் ஒன்றை நோக்கி நகர்வதுதான்.
ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை அலட்சியப்படுத்தும் குணம் நம்மைப் பண்படுத்தும். ஆம், கண்ணுக்கு அருகில் இருக்கும் சிறு கல் கூட உலகைக் காணும் நம் பார்வையை மறைக்கும். வாழ்வில் நிலையற்ற நிகழ்வுகளைத் தள்ளி வைத்து, நிலையான நிகழ்வுகளுக்காக எடுக்கப்படும் முயற்சிகளே வாழ்வின் வெற்றிக்கான அடித்தளமாக அமையும்.

தங்களை துச்சமாகப் பேசியவர்களைப் புறந்தள்ளி சரித்திரம் படைத்த பெண்கள் பலர் உள்ளனர். தன் மீது அமிலம் வீசப்பட்ட பின்னரும் தளராமல் போராடி வெற்றி கண்ட லக்ஷ்மி அகர்வால், ஏளனம் செய்தவர்களுக்கு முன் எழுச்சியுடன் எழுந்து நின்ற ஆளுமை மிக்க பெண்ணாவார். 
உயரிய இலக்கை நோக்கி வீட்டையும், நாட்டையும்  உயர்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் வளர்ச்சிக்கான அடிக்கல் ஆவர். இன்றும் பல இடங்களில் தங்கள் அடிப்படைத்  தேவைக்காக போராடும் பெண்கள் இருந்து  கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் மனம் செலுத்தாமல் தனக்காகவும், சுற்றத்தாரின் உயர்வுக்காக பாடுபடும் ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டியவரே. 

எந்தச் சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற உதவியை நாட்டுக்கு செய்யலாம் என்பதற்கு மிகப்பெரிய சான்று, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துளசி கெளடா என்ற பெண்மணி. அவர் அன்று நட்ட ஒவ்வொரு மரக்கன்றும் இன்று ஆக்ஸிஜன் தரும் ஆலைகளாக வளர்ந்து நிற்கின்றன. 
துளசி கிட்டத்தட்ட முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கிப் பாதுகாத்து வருகிறார். இளம் வயதில் தனக்கு மரம் நடுவதில் ஏற்பட்ட ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, இன்று தன் 72 வயதில், மரங்களின் தாயாய் பூமித்தாயின் சேயாய் உயர்ந்து நிற்கிறார். 

ஒருவர் தன் பங்கை சமுதாயத்திற்கு அளிப்பதற்கு  பதவியோ பட்டமோ தேவையில்லை என்பதே அவரது வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும். அவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றபோது செருப்பு அணியாத கால்களுடன், தங்கள் கலாசார உடையணிந்து வந்து விருதைப் பெற்றது  இன்னும் சிறப்பு.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் கூடுதல் ஆகிப் போனது இல்லத்தரசிகளின் பொறுப்பு. பல வீடுகளில் பாடங்களை இணையத்தில் பிள்ளைகளை விட அதிகமாக கவனித்தது அம்மாக்களே. எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெண்களுக்கு உண்டு என்று உணர்த்திய காலம் அது.

அனுமனுக்குத் தன் திறமை தெரியாமல் இருந்தபோது ஜாம்பவான் வந்து அவரின் திறமையை விளக்கிக் கூறியது போல், நோய்தொற்றுக் கிருமி பல பெண்களின் திறமையை இணையதளம் மூலம் பிரபலமடையச் செய்திருக்கிறது. தன் திறமையை உலகறியச்  செய்ய இணையதளம் போதுமானது என்ற புரிதல் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு புதிய முயற்சியும் தொடங்கும்போது அது குறித்த விமர்சனங்கள் வரலாம்.  நம் குறைகளைப் பற்றி கூறும்போது மனம் தளர்வுறலாம். எதிர்மறை விமர்சனங்கள் நம் ஆற்றலைக் குறைக்கலாம். ஆனால் அந்த நிலையில் இருந்து மீண்டு, நாம் வேகமாக பழைய நிலைக்குத் திரும்புவதே நம் வெற்றியின் வீரியத்தை அதிகமாக்கும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எத்தனை முறை சாய்த்தாலும், அது உடனே தன் பழைய நிலைக்கு வந்து விடும். அதுவே உயர்வான வாழ்க்கைக்கான தத்துவம் ஆகும். எதிர்ப்புகளைத் தாண்டி தன் பழைய நிலையை  அடையும் விசையை தலையாட்டி பொம்மை வைத்திருப்பதே அதன் ரகசியம் ஆகும். 

யார் ஒருவர் வீழ்ந்தவுடன் மீண்டெழும் சக்தியைப் பெறுகிறாரோ அவரே வாழ்வின் உச்சியை அடைகிறார். எவ்வளவு பெரிய விசையையும் சமன் செய்து மீண்டும் தன்னிலைக்கு வரும் உந்துசக்தி நம்மிடமே உள்ளது. இதனை எடுத்துக் கூறுவதே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.

சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் பெண்கள் பலர், தங்கள் திருமணத்திற்குப் பின்பு, குடும்பம் மட்டுமே தங்கள் முன்னுரிமை; தங்களால் குடும்பம், லட்சியம் இரண்டிலும் பயணிக்க முடியாது என்று எண்ணி தங்கள் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். அவ்வாறு எண்ணுவது தவறு என்பதை மதுரையைச் சேர்ந்த பத்மாவதி ஹரிஹரன் என்ற 86 வயதுப் பெண்மணியின் சாதனை நமக்கு உணர்த்துகிறது.

இளம் வயதில் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட பத்மாவதி, கல்வியின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் பின்னர், பி.காம் படித்து முடித்தார். பின் தனது 45-ஆவது வயதில் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தன்னுடைய அனுபவப் பகிர்வில், சில நாட்களில் காலையில் சி.ஏ தேர்வையும், மாலையில் பட்டமேற்படிப்பான எம்.காம் தேர்வையும் எழுதியதாகக் குறிப்பிட்டுகிறார்.  

இவர், இல்லத்தரசியாக இருந்தபோதிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டு திறமையான இசைக்கலைஞராகவும் ஆனார். ஒரு பெண் நினைத்தால் வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக பத்மாவதி திகழ்கிறார்.

"காதல் செய்யும்  மனைவியே சக்தி கண்டீர்' என்று மகாகவி பாரதியாரும், "இடும்பை தீர்ப்பவள் என் மனை, அவள் என் குடும்ப விளக்கு' என்று பாரதிதாசனும் பெண்மையைப் போற்றினர்.  

எனவே, சிறிய எல்லைக்குள் உலகம் காணும் கிணற்றுத் தவளையாக இல்லாமல் பருந்துப் பார்வை கொண்டு உலகம் காண்போம் பெண்களே! பெரிதினும் பெரிது காண்போம்.

இன்று (மார்ச் 8) உலக மகளிர் நாள்.



Read in source website

கதாநாயக வழிபாடு என்பது உலகெங்கிலும் பரவியிருக்கும் ஒன்றாகும். திரைப்பட நடிகா்கள், நாடக நடிகா்கள், இசைமேதைகள், விளையாட்டுவீரா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள் என்று பலதரப்பினரையும் மக்கள் தங்களின் கதாநாயகா்களாக நினைத்துப் போற்றுவது நமக்குப் புதிய விஷயமல்ல.

நமது இந்திய தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளைக் கொண்டாடும் காலம் மலையேறிவிட்டது. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், மகாகவி பாரதியாா், வ.உ. சிதம்பரனாா் போன்ற ஒரு சிலரை மட்டும் இன்னும் மறக்காமல் இருக்கிறது நாடு.

பொதுவாக, நம் தேசத்தில் திரையுலகக் கலைஞா்களும், அவா்களுக்கு அடுத்தபடியாகக் கிரிக்கெட் வீரா்களும்தான் மக்களால் பெரிதும் கொண்டாடப் படுகின்றாா்கள். சதுரங்க வீரா் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரா் விஜய் அமிா்தரஜ், பயஸ், சானியா மிா்ஸா போன்றவா்களுக்கும் ரசிகா்கள் உண்டு. ஆனாலும் கிரிக்கெட் வீரா்களைப் போன்ற கதாநாயக வழிபாடு அவா்களுக்குக் கிடைப்பதில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

திரையுலக நாயகா்கள், கிரிக்கெட் வீரா்கள் இவா்களை வெறித்தனமாகக் கொண்டாடி மகிழும் ரசிகா்களோ அவா்களை நேரடியாக ஒருமுறை பாா்ப்பதற்கும், அவா்களின் குரலைக் கேட்பதற்கும் தவம் இருக்கக் கூடியவா்கள். தங்களின் அபிமானத்துக்குரியவா்களின் ஒரு கையொப்பத்தைப் பெறுவதையும், அவா்களுடன் ஒரு புகைப்படமோ தற்படமோ எடுத்துக்கொள்வதையும் வாழ்நாள் சாதனையாக நினைத்து மகிழும் மனோபாவம் நிறைந்தவா்கள்.

இப்படிப்பட்ட ரசிகா்களைப் பெற்றிருக்கும் நமது நாட்டின் திரைப்பட, கிரிக்கெட் பிரபலங்களுக்கு இன்னொரு முக்கியமான முகமும் உண்டு. அந்த நாயக பிம்பங்கள் இடம்பெறும் விளம்பரங்களின் வணிக சக்தியே அந்த இன்னொரு முகமாகும்.

பிரபலமாகவும், கொண்டாடப்படுபவராகவும் உள்ள ஒருவா் பயன்படுத்தும் துணி வகைகள், கைக்கடிகாரங்கள், குளிா் கண்ணாடிகள், தானியங்கி வாகனங்கள், சோப்பு, முகப்பவுடா், பற்பசை, கைப்பேசிகள், குளிா்பானங்கள் என்று விளம்பரங்கள் கூறுகின்ற சகல பொருட்களையும் விலைகொடுத்து வாங்கி மகிழ்கின்ற ரசிகக் கூட்டம் நம் நாட்டில் நிறையவே உண்டு.

ஒரு பொருள் தரமானது என்பதைக் காட்டிலும், அது பிரபலமானவா்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதே நம்முடைய மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்தக் காரணத்தினால்தான், சில லட்சரூபாய்களைக் கொடுத்து அந்த பிரபலங்களை விளம்பரப் படங்களில் நடிக்கவைக்கும் பெருமுதலாளிகள் பலகோடி ரூபாய் லாபம் அடைகிறாா்கள்.

நடிகா்களோ, கிரிக்கெட் வீரா்களோ எந்த ஒரு பொருளுக்கான விளம்பரத்தில் நடித்தாலும் அந்தப் பொருளின் வியாபாரம் உயா்கிறது. இது உலகம் முழுவதிலும் உள்ள நடைமுைான். பிரபலமாக இருக்கும் ஒருவரின் பெயரும் முகமும் ஒருபொருளின் வியாபாரப் பெருக்கத்திற்கு உதவுகின்றது என்பது வரை சரிதான்.

அந்த பிரபலமே, மனித குலத்தைச் சீரழிக்கும் விஷயங்களுக்கான விளம்பரத்தில் நடிப்பாா் என்றால் அதனை எப்படி ஏற்றுக்கோள்வது ?

கணினி, கைப்பேசி ஆகியவற்றின் பயன்பாடு தவிா்க்கமுடியாததாகிவரும் இன்றைய காலகட்டத்தில், ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளில் வெறித்தனமாக ஈடுபட்டுப் பெருமளவில் பணத்தை இழந்து பலரும் கடனாளிகளாவதும், அவா்களில் சிலா் கடன் சுமைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்வதும் அவ்வப்போது வெளிவரும் செய்தியாகிவிட்டது.

சிறுவா்கள் முதல் வயதானவா்கள் வரை இத்தகைய இணையவழிச் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளனா். அவா்கள் ஓரிரு முறை விளையாடிவிட்டு, போதும் என்று ஒதுங்கிக் கொள்வதில்லை. ஆா்வத்தை அடக்கிக் கொள்ள முடியாமல், விட்டதைப் பிடிப்போம் என்ற எண்ணம் மேலோங்க மேன்மேலும் வெறிகொண்டு சூதாடுவதை நாம் பாா்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

‘இணையவழி ரம்மி’ என்ற சீட்டாட்டம் இன்று பலரையும் சீரழித்து வருகின்றது. படித்தவா், படிக்காதவா், சிறுவா், இளைஞா், நடுத்தர வயதினா், முதிா்ந்தவா், முதலாளி, தொழிலாளி என்று வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளில் உள்ளவா்களை இந்த சீட்டாட்டம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

சொந்த வீட்டில் திருடுவது, அலுவலகப் பணத்தில் கைவைப்பது என்று எந்தவிதத்திலாவது பணம் சேகரித்துச் சூதாடிவிடுவது என்ற வேகத்தில் கையும் களவுமாகச் சிக்கிக் கொள்பவா்கள் ஒரு புறம் என்றால், சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து தங்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் நிா்க்கதியாக விட்டுவிட்டுத் தற்கொலை புரிந்துகொள்பவா்கள் இன்னொருபுறம்.

இத்தகைய சூதாட்டங்களைத் தடுப்பதற்குரிய சட்டநடவடிக்கைகளை நம் அரசுகள் எடுப்பதில் இன்னும் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்றுபுரியவில்லை. ‘புகைப்பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்’, ‘குடிப்பழக்கம் உடல்நலனுக்குத் தீங்கானது’ என்ற வாசகங்களைப்போலவே, ‘இணையவழி சூதாட்டம் பண இழப்பிற்கு வழிவகுக்கும்’ என்ற சட்டபூா்வ எச்சரிக்கையுடன் இத்தகைய சூதாட்டங்கள் குறித்த ஊடக விளம்பரங்கள் சக்கைபோடு போடுகின்றன. சிரித்த முகத்துடன் சில திரையுலக பிரபலங்களே அவற்றை நமக்குச் சிபாரிசு செய்வதையும் அந்த விளம்பரங்களில் பாா்க்க முடிகிறது.

இதுமட்டுமா? பரபரப்பான கிரிக்கெட் பந்தய ஒளிபரப்புகளின் நடுவே கிரிக்கெட் தொடா்பான (ட்ரீம் 11 என்ற) இணையவழி விளையாட்டுக்கான விளம்பரங்களும் இதே போன்ற சட்டபூா்வ எச்சரிக்கையுடன் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கின்ற பிரபல வீரா்கள் சிலரே அவ்விளம்பரங்களில் தோன்றி அவற்றை நமக்குப் பரிந்துரைக்கின்றாா்கள்.

இணையவழிச் சூதாட்டங்களில் பலரும் சிக்கிச் சீரழிவது என்பது திரைப்படக் கதாநாயகா்களுக்கும், கிரிக்கெட் வீரா்களுக்கும் தெரியாத விஷயமா என்ன? மக்களைச் சூறையாடும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம் என்று மேற்கண்ட பிரபலங்கள் இனியாவது உறுதி ஏற்க வேண்டும். மனிதசமுதாயம் முன்னேற வேண்டும் என்ற பொறுப்புணா்வு தங்களுக்கும் உண்டு என்பதை அந்த பிரபலங்கள் நிரூபிக்க வேறு வழி எதுவும் இல்லை.



Read in source website

 

வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டு வந்ததின் விளைவாக சோவியத் ரஷியாவில் நிகழ்ந்த சோசலிச அரசு மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு நாம் கொண்டாடும் சர்வதேச மகளிர் நாள் என்பதை உண்மையில் உழைக்கும் பெண்கள் நாள் என அழைப்பதே சிறந்ததாக இருக்கும்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 1908ஆம் ஆண்டு முறையான வேலை நேரம், சரியான கூலி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எழுந்த பெண்களின் பேரணிக்கு இதில் முக்கியப் பங்குள்ளதையும் புறந்தள்ள முடியாது. இவற்றுக்கு மத்தியில் இன்றைய நாளில் பெண் தலைவர்கள், ஆளுமைகள் நினைவுகூரப்பட்டாலும் அனைத்து மகளிருக்குமான விடுதலையாக இந்த நாள் இன்னும் மாறாமல் இருப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது. 

பெண்களுக்காக ஆண்கள், பெண்களின் வெற்றிக்கு காரணமான ஆண்கள் என மறைமுகமாக பெண்களின் சாதனைகளின் மீது ஆண்களின் சாயம் தெளிக்கப்படுவதும், அவற்றின் மூலம் பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றுக்கு மத்தியில் ஒடுக்கப்படும் அனைத்து  மனிதர்களுக்குமான பொன்னுலகக் கனவுகளை சுமந்து, அதனில் நின்று போராடி உயிர் நீத்த மாபெரும் பெண் ஆளுமையை இந்த நாளில் நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும். 

இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் நடந்த 1919ஆம் ஆண்டானது உலகம் முழுவதும் உள்ள சோசலிஸ்டுகளுக்கும், குறிப்பாக ஜெர்மன் சோசலிஸ்டுகளுக்கும் மறக்க முடியாததாக மாறக் காரணமானவர் ஒரு பெண்மணி...புரட்சியாளர்...

1919ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பெர்லினில் உள்ள கால்வாயில் கடுமையான தாக்குதலுக்குள்ளான ஒரு பெண்ணின் சடலம் மிதந்து ஒதுங்கியது. உயிரைப் பறித்து அடக்க நினைத்த மனிதர்களின் பேராசைகளைப் புறந்தள்ளி இன்றுவரை தன்னுடைய எழுத்துக்களின் மூலமும், செயல்பாடுகளின் மூலமும் வாழ்ந்து வருகிறார் கால்வாயில் மிதந்து ஒதுங்கிய அந்தப் பெண்மணி. யார் அவர்?

2019ஆம் ஆண்டு ஜெர்மனி வீதிகளில் சோசலிசத்தை வலியுறுத்தியும், முதலாளித்துவ வன்முறைகளுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியபடியும் முழக்கங்களை உரத்து எழுப்பிச் சென்ற மக்கள் நினைவுகூர்ந்தது ரோசா லக்ஸம்பர்க்கை. எந்தப் பெண்மணி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்டாரோ அதே பெண்மணி 100 ஆண்டுகள் கழித்து அதேநாளில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பதாகைகளில் இடம்பெற்றிருந்தார்.

ரோசா லக்ஸம்பர்க்... பெண் விடுதலையைத் தாண்டி ஒட்டுமொத்த மனிதகுல விடியலை வலியுறுத்தி செயல்பட்டு மடிந்த ஒரு சோசியலிஸ்ட்.

ஜெர்மானிய மார்க்சியவாதியாக அறியப்பட்ட ரோசா லக்ஸம்பர்க் மார்ச் 5, 1871 ஆம் ஆண்டு போலந்தின் சாமொஸ்க்கில் பிறந்தார். ரஷியக் கட்டுப்பாட்டில் போலந்து இருந்தபோது ஜார் மன்னனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட தந்தையை பார்த்து வளர்ந்த ரோசா, இளம்வயதிலேயே போராட்ட குணங்களுடன் அடையாளம் காணப்பட்டார்.

தன்னுடைய 15 வயதிலேயே கம்யூனிஸ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ரோசா லக்ஸம்பர்க் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் முன்னெடுத்து நடத்திய பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றினால் ஆத்திரமடைந்த அப்போதைய அரசு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் 4 பேரை கொன்று அழித்தது. அதனைத் தொடர்ந்து கட்சி கலைக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தன்னை அரசியல் பணிகளில் இயக்கத்திலேயே வைத்துக் கொண்டார் ரோசா. கட்சித் தோழர்களை ரகசியமாக சந்தித்து கட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மாற்றுத்திறனாளியான ரோசாவின் எழுத்துகளும் பேச்சுகளும் ஜெர்மானிய தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்தன. தத்துவம், அரசியல், பொருளாதாரம் என தொடர்ச்சியான கற்றலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு வலிமையான தலைவராக மாறினார் ரோசா லக்ஸம்பர்க். அரசியல் அழுத்தங்களால் 1889ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற  ரோசா சூரிச் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய உயர்கல்வியை முடித்தார். அங்கு லியோ ஜோகித்சேவை சந்தித்த ரோசா போலந்தில் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை எதிர்த்து அரசியல் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். அதில் முதலாளிகளால் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்களின் உரிமைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டினார். 

தன்னுடைய இளம் வயதிலேயே நாடு அறியும் சோசலிஸ்ட்டாக தன்னை தயார்படுத்திக் கொண்டார் ரோசா லக்ஸம்பர்க். 1898ஆம் ஆண்டு ஜெர்மனியில் குடியேறிய ரோசா அங்கு சமூக ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கு எதிரான எழுத்துக்களை வெளிப்படுத்தி வந்த ரோசா ஜூனியசு எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். ஒருகட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பின் சிறையிலடைக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய போர் குணத்தால் 6 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். நாளுக்குநாள் உடல் மோசமான நிலையை எட்டிக் கொண்டிருந்தது. அப்போதும் அவர் சக தோழரான கவுட்சிக்கு எழுதிய கடிதத்தில், “அனைத்தையும் துச்சமாகக் கருதுங்கள்...புரட்சி ஓங்கட்டும்” என முழங்கினார்.

கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள், மனித அமைதிக்கு எதிரானவர்கள் என பொய்ப் பிரசாரங்கள் காலம்காலமாக எழுப்பப்பட்டு வரும் வேளையில் முதல் உலகப் போருக்கு எதிராக கடுமையாக தன்னுடைய வாதங்களை முன்வைத்தவராக இன்றும் அறியப்படுகிறார் ரோசா. முதலாளிகளின் இலாபத்திற்காக மக்கள் போர் எனும் பெயரில் பலியிடப்படுவதை ரோசா தீவிரமாக எதிர்த்தார்.

ரஷியாவில் நிலவிய அரசியல் சூழல் ஜெர்மனியையும் விட்டுவைக்கவில்லை. ரஷியத் தொழிலாளர்களின் போராட்டம் ஜெர்மனி தொழிலாளர்களின் மத்தியில் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. இதனால் அச்சமடைந்த அரசு முக்கியத் தலைவர்களை திட்டமிட்டு ரகசியமாகக் கொன்றது. ரோசா லக்ஸம்பர்க்கும் அரசினால் குறிவைக்கப்பட்டார். 1919ஆம் ஆண்டு கை, கால்கள் கட்டப்பட்டு பெர்லினில் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டார். பல மாதங்களாக அவரது உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

ரோசாவின் மரணம் ஜெர்மனி தொழிலாளர்களை வெகுவாக பாதித்தது. அவரின் ஜீரணிக்க முடியாத மரணம் இன்றைக்கும் தொழிலாளர்களை சோசலிசத்தை நோக்கி தயார்படுத்தும் எரிபொருளாக உள்ளது என்றால் மறுப்பதற்கில்லை.

சோசலிசத்தை நோக்கிய பயணத்திற்கு தொழிலாளர்களைத் தயார்படுத்துவதில் ரோசா லக்ஸம்பர்க்கின் எழுத்துக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக இடதுசாரிகள் கருதுகின்றனர். அவரின் எழுத்துகள் மாறிவரும் உலகைப் புரிந்துகொள்ள, அதனை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற கை கொடுக்கும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.   


 



Read in source website


'அதிகாலை நேரம் கூலிக்கு போனோம்..
அன்னைக்கு ஆறுமணிக்கு வேலை முடிஞ்சி வாறோம்..
ஏலேலோ அம்மா ஏலேலோ
ஏலேலோ அய்யா ஏலேலோ
'.. என்ற மக்களிசைப் படலில் கூறுவதைப்போல அதிகாலையில் விழித்து, ஆணுக்கு நிகராக உழைத்தாலும் உப்பு உப்பள பெண்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடியாமலே போனது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டமே உப்பு சத்தியாகிரம். தண்டியில் மகாத்மா காந்தியன் தலைமையில் நடைபெற்றது. இதேபோல, தமிழகத்தின் பங்களிப்பாக 1930 வேதாரண்யத்தில் நடைபெற்றது.

விடுதலை கிடைத்தது. ஆனால், ஊடே உழைக்கும் தொழிலாளர், அதிலும் ஆணுக்கு நிகரான உழைப்பை தரும் பெண்களின் நிலைதான் உப்பு நீரில் கரையும் கண்ணீராகவே நிலைக்கிறது.

உயிரை பணயம் வைத்து நடைபெறும் சுரங்கத்தொழில் தொடங்கி, பாறைகள் உடைப்பது போன்ற எத்தனையோ தொழில்களை கடினமான பட்டியலில் கூறிவிடலாம். இவையாவும் ஆபத்துகள் நிறைந்தவை, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதே நிலை.

அதேநேரம் கடினம் மட்டுமல்ல உடலையும் மனதையும் மெல்ல மெல்ல உருக்கிக் கொல்லும் இயல்புடையது என்றால் அது உப்பளத்தொழிலைக் கூறலாம். ஆணுக்கு நிகராக பெண்களும் தனது உழைப்பை கொடுத்தாக வேண்டும் என்கிற நிலை இதில் உள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடியும், அதற்கு அடுத்த இடத்தில் வேதாரண்யமும் உள்ளன. இவ்விரண்டு இடங்களில் உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சதுப்பு நில அளத்தில் பாத்திகள் அமைத்து கடல் நீர் அல்லது நிலத்தடி உப்பு நீரை தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு விளைவிக்கப்படுகிறது. இதில் அனுபவம் நிறைந்த மனித உழைப்பு அவசியமானது.

எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அதிகாலை 1 மணிக்கு எழுந்து அளத்தில் நின்று வேலை பார்க்கும் கடினமான உழைப்பில் பெண்களின் பங்களிப்பு முதன்மையானது.

வேதாரண்யம் பகுதியை பொருத்தவரையில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. பெரு நிறுவனங்களில் இயந்திர பயன்பாடுகள் வந்த பிறகும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை நம்பியே உள்ளனர்.

ஆண்டு தோறும் ஜனவரியில் உப்பு உற்பத்திக்கான பாத்திகளை அமைத்து தயாரிக்கும் பணி நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் பொண் உப்பு எடுத்து உற்பத்தி தொடங்கும். சில ஆண்டுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரம் வரையில் நடைபெறும்.

இந்த தொழிலில் தொடர்பில்லாத புதியவர்கள் உப்பு உற்பத்தி செய்யப்படும் அளப்பகுதியில் குறிப்பிட்ட மணிநேரம் சும்மா நின்றால்கூட சிறு நீர் கடுப்பு, கண் எரிச்சல் என பல உபாதைகளை உடனடியாக உணரமுடியும்.

உப்பு சுமப்பது கடினம் என்பதால் வாகனங்கள் அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் உப்பு மூட்டைகளை வெளியில் எடுத்துச்செல்ல ஏதுவாக கடின உழைப்பை எதிர்கொள்ளும் கழுதைகளை பயன்படுத்தி வந்தனர். வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு பின்னர் அவை அரிதாகிவிட்டது.

ஆனால், பல நூற்றாண்டுகளாக மனித உழைப்பு, பயன்பாடு மட்டும் இந்த தொழிலில் எந்தவித மாற்றமும், எளிமைப்படுத்தலும் நடைபெறாமல் அப்படியே உள்ளது.

உப்பளத் தொழில் இல்லாத காலங்களில் கட்டுமானம் போன்ற தொழில்களில் இந்த தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு வாரும் பணியைத் தவிர, பாத்தி, வாய்க்கால், குட்டை அமைத்தல் போன்ற மற்ற பணிகள் மராமத்து வேலை என அழைக்கப்படுகிறது.

மரமத்து பணிக்கு ஆண்களைவிட 35 முதல் 40 சதவீதம் கூலி குறைவாக பெண்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக தற்போது ஆண்களுக்கு ரூ.550-ம்,பெண்களுக்கு ரூ.300-ம் கூலியாக வழங்கப்படுகிறது.

மானாவாரி நிலப்பரப்பை கொண்ட வேதாரண்யம் பகுதியில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கிடைப்பது எளிதல்ல.வேலை இல்லா மழைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் அரை நூற்றாண்டுகளை கடந்தும் நிறைவேறாத கோரிக்கையாகவே பயணிக்கிறது.

உப்பு வாரும் பணிக்கு வாருமுதலுக்கு ஏற்ற கூலியாக ஒப்பந்தம் போன்றே பேசப்படுகிறது. குறிப்பாக 100 கிலோ உப்பை உற்பத்தி செய்து, வாரி, குவியலில் கொண்டு வந்து சேர்த்து கொடுக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் 100 கிலோ உற்பத்திக்கு ரூ.30 முதல் 35 என முதலாளிக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் முறை உள்ளது. இது ஒப்பந்தம் முறை என்பதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பு, சம ஊதியமாகிறது.

விளைந்த உப்பின் மீது அதிகமான சூரியனின் வெப்பம் படும்போது அதில் இருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர் வீச்சுகள் மூளை மற்றும் கண் பார்வையை பாதிக்கும். கால், கை பாதங்களில் புண் போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்கும் வகையில்தான் அதிகாலையில் பணியை தொடங்கி தண்ணீர் சூடாக மாறுவதற்குள் பணிகளை முடிக்கின்றனர்.

ஒரு ஏக்கர் பாத்தியில் ஒரு முறை வாரும் பணிக்கு ஒரு ஜோடி ஆள்கள் ஈடுபடுத்தப்படுவர். பெரும்பாலும் ஆண்கள், பெண்களாகவே இருப்பர். உப்பை வாரி குவித்து 40 கிலோ கொள்ளளவு கொண்ட கூடையில் அல்லது பாத்திரத்தில் வைத்து கரை பகுதிக்கு கொண்டு செல்வர்.  இதில் ஆணுக்கு பெண்கள் இணையாக நின்று சுமையை தூக்கவும் அல்லது எதிர்த்து நின்று தூக்கிவிடும் பணியையும் செய்கின்றனர்.

இந்தப் பணிகளால் பெண்களுக்கு கருப்பை எளிதில் இறங்கவும், பாதிக்கவும் செய்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு கால், இடுப்பு, நரம்புகள் விரைவாக பாதிக்கப்படுகிறது.

இது குறித்து அளத்தில் பணி செய்த செல்லமாள்(35) கூறியது: என தந்தையின் ஊர் கொருக்கை. 6 ஆம் வகுப்புக்கு மேல் செல்லவில்லை. அங்குள்ள  மக்கள் உப்பளத்தையே பார்த்ததில்லை. அங்கு விவசாய கூலிவேலைகள் தெரியும். என்னை பெண் கேட்டு வந்தபோது வீட்டில் சமைத்துக்கொடுத்தால் போதும் என்றுதான் கூறினார்கள்.

இங்கு வந்தபிறகு வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், அவர்களை கஷ்டம் குறைந்த வேறு தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் நானும் வேலை செய்யக் கற்றுக்கொண்டேன் என்றார்.

மற்றொரு பெண் லெட்சுமி (32) பேசுகையில், கரிச்சான் குருவி கத்தும் முன்னரே எழுந்துவிடுவோம். கஷ்டமான வேலைதான் வேறு வழியில்லை. தீபாவளி பண்டிகையின்போது பாத்தியின் முதலாளியிடம் ரூ.50 ஆயிரம் வரையில் அட்வான்ஸ் வாங்குவோம். வேலை நடைபெறும் நாள்களில் வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொள்வோம். மற்ற சம்பளத் தொகையை அடுத்த தீபாவளி வரையில் கட்டி அடைப்போம். இப்படிதான் வாழ்க்கை போகிறது என்றார்.

ஆங்கிலேயரிடம் இருந்து உப்புக்கும் நாட்டுக்கும் விடுதலை கிடைத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால், உப்பளத் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை நிலைத்துவிட்டது. உப்புத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு காப்பீடு, உழைப்புக்கு ஏற்ற ஊதிய வரம்பு என எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும், ஆணுக்கு நிகரான உழைப்பை கொடுப்பவர்களாக இந்தப் பெண் தொழிலாளர்கள் திகழ்கின்றனர்.



Read in source website

 

இன்று மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செங்கல்சூளை, செங்கல் காளவாசல், மண்பாண்ட பொருள் உற்பத்தி தொழிலில்  ஈடுபட்டு, ஏராளமான பெண்கள், வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர். 

மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல், சித்துக்கள் ஆகியவற்றின் தயாரிப்பு அதிகமாக நடக்கிறது. மேலும் மண்பாண்ட பொருள்கள் உற்பத்திக்கு பெயர் போன மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தவாறு பல பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தொழில்களில் ஆண்கள் அதிகமாக ஈடுபடுவதை விட பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். 

மானாமதுரை பகுதியில் கல்குறிச்சி, ஆலங்குளம், சங்கமங்கலம், தீயனூர், உள்ளிட்ட பல கிராமங்களில் செங்கல் சூளைகள்,காளவாசல்கள் செயல்படுகின்றன. இங்கு  வேலைக்கு பெண்கள் அதிகமாக  ஈடுபடுத்தப்பட்டு இவர்கள் செங்கல், சித்துக்கல் போன்றவை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பெண்கள் பல்வேறு மணல் வகைகளை ஒன்றாக பிசைந்து அதை காலால் மிதித்து கலவையாக்கி அச்சு மூலம் செங்கல் சித்துக்கல் தயாரித்து வெயிலில் காயவைத்து அதன் பின் சூளைகளில்  அடுக்கி நெருப்பு மூட்டி வேகவைத்து விற்பனைக்கு தயார்படுத்துகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் தினமும் கணிசமான தொகையை சம்பாதிக்கின்றனர். செங்கல்சூளை, காளவாசல் உரிமையாளர்கள் இந்தப் பணியில் ஆண்களை அதிகம் ஈடுபடுத்துவதை விட பெண்களை அதிகம் ஈடுபடுகின்றனர். மேலும் செங்கல் ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கொடுக்கும் உள்ளூர், வெளியூர் முகவரிகளுக்கு  லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செங்கல் லோடுகளை ஏற்றிச் சென்று இறக்கும் பணியையும் இங்கு பெண்களே செய்கின்றனர். இதற்காக இந்த பெண்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. 

இதுகுறித்து  பி.எஸ்.சி நர்சிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் மானாமதுரையில் சித்துக்கல் தயாரிக்கும் காளவாசலில் வேலை பார்க்கும் இலக்கியா கூறுகையில், பல ஆண்டுகளாக செங்கல் காளவாசல், சித்துக்கல் உற்பத்தி செய்யும் இடங்களில் வேலை பார்த்து வருகிறோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கட்டட வேலை உள்ளிட்ட பிற வேலைகளுக்குச் சென்றாலும் நாங்கள் இந்த வேளையில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக எங்களுக்கு உழைப்பிற்கேற்ற சம்பளம் வழங்கப்படுகிறது. நாங்கள் ஈட்டும் வருவாய் குடும்பத்தின் கடன்களை அடைக்கவும் குடும்பம் நடத்தவும் உதவிகரமாக உள்ளது. ஆனால் எங்களது குழந்தைகளை  நாங்கள் செய்யும் இந்த வேலையில் ஈடுபடுத்தாமல் அவர்களை படிக்க வைத்து வருகிறோம். இதற்காக நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்கிறோம் என பெருமையுடன் கூறினார். 

இதேபோல்  மானாமதுரையில் குலாலர் தெரு பகுதியில் சீசனுக்கு தகுந்தவாறு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தியில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மண்பாண்ட பொருள் தயாரிப்பு வேலை செய்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருள்களை இவர்கள் நேரடியாகவும் இங்குள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மூலமும்  விற்பனை செய்கின்றனர். பல பெண்கள் மண்பாண்ட பொருள்கள் தயாரிக்கும் தொழில் செய்பவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். மண்பாண்ட நேரடி தொழில் மூலமும் இத்தொழில் சார்ந்த பணியில் தினச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதன் மூலமும் இந்த பெண்களுக்கு  போதுமான வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் மானாமதுரை குலாலர் தெருவில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் உள்ள  பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அதன்மூலம் வங்கியில் கடன் பெற்று அதை முறையாக திரும்ப செலுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர். 

தற்போது செங்கல், சித்துக்கல் மற்றும் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பதற்கு தேவையான கரம்பை, சவுடு  மற்றும் ஆற்று மணல் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளதால் இந்த மண் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மேற்கண்ட மணல் வகைகளை தாராளமாக கிடைக்கச் செய்தால் மேற்கண்ட தொழில்கள் சிறந்து விளங்கி அதில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டி வாழ்க்கைத் தரம் மேலும் உயர உதவியாக இருக்கும் என மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.
 



Read in source website

பெண்களைத் தெய்வத்திற்கு நிகராகப் பொருத்திப் பார்க்கத் துளியும் தயங்காத நாடு, பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகளாகத் தயக்கம் காட்டுவது ஏனோ?

1996-இல் தேவெ கௌடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். இதற்கு அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் தேவை. ஆனால், கால்நூற்றாண்டைக் கடந்தபோதிலும், மசோதாவானது இன்னும் கிடப்பில்தான் உள்ளது.

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது மசோதாவானது மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. 2010-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும்,  மக்களவையில் நிறைவேற்றப்படாததால் அது காலாவதியாகிவிட்டது.

1996-க்குப் பிறகு ஐக்கிய முன்னணி, இரண்டு முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி என ஆட்சிகள் மாறினாலும், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் காட்சிகள் மாறவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் இதை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்கள் தரப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.  

2014, 2019 மக்களவைத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதியளித்தது. பாஜக இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகும் இது நிறைவேற்றப்படாமலே உள்ளது.

கடந்தாண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருந்தபோதிலும், அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

2019-21 காலகட்டத்தில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின்படி, மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்.

இந்தத் தரவுகளை முன்வைத்தே கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். 

அப்போது மக்களவையில் பேசிய அவர், "2014 முதல் நேரடியாகவும் எழுத்துபூர்வமாகவும் சுமார் 22-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரேவிதமான பதில்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. நானே மூன்று முறை கேள்வி கேட்டும், 'அரசு ஆழ்ந்து ஆய்வு செய்து வருகிறது, கவனமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயல்கிறது' என ஒரேவிதமான பதிலைத்தான் பெற்றுள்ளேன்" என்றார் அவர்.

மேலும், இந்தப் பதில்கள் எப்போது முடிவுக்கு வரும், எப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்றார் கனிமொழி.

33 சதவீத இடஒதுக்கீடு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு, மக்கள்தொகை கணக்கிற்கேற்ப மகளிருக்கான இடஒதுக்கீடு விகிதம் அதிகரிக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 33 சதவீதத்துக்கே 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த 25 ஆண்டுகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கப்போகிறதோ?
 



Read in source website

 

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தித் தொழிலிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் ஏறக்குறைய 60 சதவீதம் திருப்பூரில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஏற்றுமதி மூலமாக ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடியும், உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ரூ.35 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.68 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் நேரடியாக 6 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்

இந்தத் தொழிலில் தமிழகம் மட்டுமின்றி பிகார், ஒடிஸா, மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களைத் சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் வடமாநிலத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் சிறியதும், பெரியதுமாக 20 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. நிட்டிங், டையிங், எம்பிராய்டிங், காம்பேக்டிங், கட்டிங்,  ஸ்டிச்சிங், அயனிங், பேக்கிங் என்ற பல பிரிவுகளைக் கொண்டது.

வடமாநில பெண் தொழிலாளர்கள் வருகை

திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொழிலாளர்களுக்கு அவர்களது மாநிலங்களிலேயே சமர்த் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக 3 மாதங்கள் வரையில் இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகு தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் உதவியுடன் திருப்பூருக்கு வந்து பின்னலாடை நிறுவனங்களில் பணியில் சேருகின்றனர்.

ஏற்றுமதி நிறுவனங்களில் தங்குமிடம் இலவசம்

அதிலும் பெரும்பாலும் ஏற்றுமதியைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில்தான் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இலவசமாக தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படுவதுடன், மூன்று வேளை உணவுக்கும் சேர்த்து மாதம் ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலேயே ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர். மேலும், அவர்கள் தங்குமிடத்தில் முழுப்பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், வர விடுமுறை நாள்களில் நிறுவனங்கள் சார்பிலேயே வாகனங்களில் சென்று அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிவரவும் சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றன.
 
மாதம் ரூ.12 ஆயிரம் வரையில் ஊதியம்

திருப்பூருக்கு போதிய அனுபவம் இல்லாமல் வரும் பெண் தொழிலாளர்கள் முதலில் உதவியாளர்களாக (செக்கிங், கைமடி) பணியில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ஷிப்ட்டில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் பணியாற்றினால் ரூ.220 முதல் ரூ.280 வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. சில நாள்களில் 2 ஷிப்ட் கூட பணி வழங்கப்படும். மேலும் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் என 6 நாள்களுக்கு பணியாற்றினால் ரூ.2,500 வரையில் ஊதியம் பெறலாம். அதே வேளையில், கைமடியில் இருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்று டெய்லராகப் பணியில் சேர்ந்தால் ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.350 முதல் ரூ.420 வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதிலும், அனுபவம் அதிகரிக்கும்போதும், வேறு நிறுவனங்களுக்கு  இடம் பெயரும் போதும் கூடுதலாக ஊதியத்தைப் பெறலாம். மேலும், ஒரே நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணியாற்றும்போது ஷிப்ட்டுக்கு 10 ரூபாய் சேர்த்து வழங்கப்படுகிறது.

பணியில் முழு சுதந்திரம்

திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முழு அளவில் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் பணியில் செய்யும் சிறு தவறுகளைக்கூட சூப்பர்வைசர்கள் நிலையிலேயே சரி செய்து கொள்கின்றனர். அதே வேளையில், உடல் நிலை சரியில்லாமல் போனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது பயணப்படிகள் வழங்குவது, தீபாவளி பண்டிக்கைக்கு கூடுதல் போனஸ் தொகை வழங்குவது போன்ற பல்வேறு சலுகைகளும் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. 

இதன் மூலமாக பெற்றோர்கள், குடும்பத்தினரைப் பிரிந்து பல கிலோ மீட்டர் தொலைவில் பணியாற்றி வந்தாலும் எங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது என்கின்றனர் இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள்.

பெரிய நகரமாக உருவெடுக்க தொழிலாளர்களே காரணம்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: இந்தியா முழுவதிலும் உள்ள வேலைதேடும் நபர்கள் சங்கமிக்கும் தலமாகவே திருப்பூர் விளங்குகிறது. நம் நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொழிலாக ஆடை உற்பத்தித்துறை திகழ்ந்து வருகிறது. 

திருப்பூர் மாநகரமானது முழுக்க முழுக்க வெளிமாநிலத் தொழிலாளர்களே அதிக அளவில் குடிபெயர்ந்து பின்னலாடை உற்பத்தித்துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நகரில் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்களே வசிக்கக்கூடிய நிலையில் இருந்து தற்போது 20 லட்சம் பேர் வசிக்கும் பெருநகரமாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களே காரணம். இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் ஆணோ, பெண்ணோ திருப்பூர் வந்தால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தொழில் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தொழிலுக்கு பல்வேறு காலகடங்களில் பல இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை முறியடித்து மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிலில் ஈடுபடுவதுதான் மிகவும் முக்கியமான காரணமாகும். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆரம்ப காலகட்டங்களில் உதவியாளர்களாக (ஹெல்பர்) பணியைத் தொடங்கி டெய்லர், சூப்பர்வைசர், மேலாளர், உரிமையாளர் என்ற பல்வேறு நிலைகளுக்குச் செல்கின்றனர். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு தற்போது பெண்களும் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் துறையைக் குறித்து நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு இங்கு வந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் அவர்களது தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்கமுடியவில்லை என்றாலும் கூட அடிப்படை வசதிகளான குடியிருப்புகள், குறைந்த விலையில் 3 வேளையும் உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கிறது. மேலும், இங்கு இனமோ, மதமோ, ஜாதியோ எந்தவிதமான பாகுபாடும் பணியாற்றும் நிறுவனங்களில் இல்லை என்பதால் இங்கு பணிபுரிய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இதற்கு எடுக்காட்டாக வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ஒவ்வொரு ரயில்களிலும் 200 முதல் 300 தொழிலாளர்கள் வந்து கொண்டிருப்பதை ரயில் நிலையத்துக்குச் சென்றால் நாம் காணலாம். திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வரும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது என்றார்.

ஆகவே, சர்வதேச மகளிர் தினத்தில் (மார்ச் 8) திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் வடமாநிலப் பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 



Read in source website

இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த உடன்பாடு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவுசெய்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர். போர் நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் விவசாயப் பணிகள் முழு மூச்சாக நடந்துவருகின்றன. அப்பகுதியின் முக்கிய விளைபொருளான வால்நட் என்று அழைக்கப்படும் வாதுமைப் பருப்பு வகைகளை வெளிச் சந்தைக்கும் அனுப்ப முடிகிறது.

இதனால், விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் பயனடைகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்துவருகின்றன, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இருபுறங்களிலிருந்தும் நடந்த ராணுவத் தாக்குதல்களின் காரணமாக, அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போயிருந்தது. ஓராண்டு அமைதியில், எல்லைப் பகுதியில் மீண்டும் மகிழ்ச்சி அரும்பத் தொடங்கியிருக்கிறது. அது தொடர வேண்டும்.

2003-லேயே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது என்றபோதும், தொடர்ந்து அது மீறப்பட்டது. 2018-ல் 1,629 தடவைகள்; 2019-ல் 3,168 தடவைகள்; 2020-ல் 4,645 தடவைகள் என்று பாகிஸ்தான் ராணுவத்தால் போர் நிறுத்த உடன்பாடு மீறப்படுவது தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. 2010 முதல் 2021 பிப்ரவரி வரையில் போர் நிறுத்த உடன்பாடு மொத்தம் 14,411 முறை மீறப்பட்டு, எல்லை தாண்டிய தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன.

இத்தாக்குதல்களில், 138 பாதுகாப்பு வீரர்களும் 129 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். காயமுற்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 664, பொதுமக்களில் காயமுற்றவர்கள் 708. தாக்குதல்களின்போது இடிந்த வீடுகள், சேதமடைந்த பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என்று தொடர் பாதிப்புகளை காஷ்மீர் எல்லைப் பகுதி மக்கள் சந்தித்துவந்தனர். கடந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே 592 முறை உடன்பாடு மீறப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர்-ஜெனரல்கள் இடையே 2021 பிப்ரவரி 23-ல் உடன்பாடு உறுதிசெய்யப்பட்டு, அதற்கடுத்த நாளிலேயே அது நடைமுறைக்கும் வந்தது. பிப்ரவரி 25-ல் இரு நாடுகளின் ராணுவமும் தங்களது போர் நிறுத்த அறிவிப்பைக் கூட்டறிக்கையாகவும் வெளியிட்டன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை உருவாக்க இதுவரை நடந்த பல்வேறு தொடர்முயற்சிகளில், இந்த உடன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியை வர்த்தக உறவாக வளர்த்தெடுக்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் ஊடுருவல், ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் இந்திய எல்லைக்குள் அனுப்புதல் ஆகியவை இந்தியாவுக்கு சவாலாகவே தொடர்கின்றன. ரஷ்ய - உக்ரைன் யுத்தமும் அதன் விளைவுகளும் உலகம் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அருகமை நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்தப்பட்டிருக்கிறது.



Read in source website

தந்தையும் மகனுமாகச் சாலையில் நடந்து செல்கின்றனர். மகன் சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு மைல் கல்லாகப் பார்க்கிறான். பின்னர் கடக்கிறான். கொஞ்ச நேரம் பொறுத்து ஒவ்வொரு மைல் கல்லிலும் எழுதியிருக்கும் எண்களைக் காட்டி “இது என்ன.. இது என்ன?” என்று கேட்கத் தொடங்குகிறான். உடன் வரும் தந்தை “இவையெல்லாம் எண்கள்” எனச் சொல்லித் தருகிறார். இவனும் புரிந்துகொண்டு கற்கிறான். இவ்வாறாகத் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்குள் சுமார் 100 வரையிலான எண்களுக்கான வார்த்தைகளையும் எண்ணுருக்களையும் கற்றுத் தெளிகிறான். இந்தியிலும் வங்க மொழியிலும் எழுதிக் குவித்த எழுத்தாளரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஈஷ்வர சந்திர வித்யாசாகர்தான் அந்தச் சிறுவன்.

வித்யாசாகருக்குத்தான் என்பதில்லை; பயணிக்கும்போது சாலையில் தென்படும் ஆர்வமான விஷயங்களால் எப்போதும் கற்றல் நடந்துகொண்டேதான் இருக்கும். புதிய மாநிலங் களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் தகவல் பலகைகளிலிருந்து புதுப் புது எழுத்துகளைக் கற்றுக்கொண்டோர் நம்மில் பலர் இருக்கலாம். பொதுவாக, புதிய இடங்கள்தான் என்பதில்லை. புதுப் புதுச் சூழல்கள் கற்றலுக்கு உதவிகரமாய் இருப்பவை என்பதை யார் மறுக்க இயலும்!

கல்வி என்பது வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களாலும் ஆசிரியர்களாலும் மட்டும் நடைபெறுவதில்லை. மாறாக, குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்தும் அனைத்துவிதமான புலன்களாலும் கற்றுக்கொள்வதால் நடப்பதே. அதற்குச் சரியான வழிகாட்டுதல்கள் மட்டும் அளிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் கற்றலின் வீச்சு எல்லையற்றதாய் இருக்கும். இதனை அளிப்பதே ஆசிரியர்களின் முக்கியப் பணி. இவ்வாறான கருத்துகளைக் காலம்காலமாய்க் கல்வியாளர்களும் கல்விக் குழுக்களும் வலியுறுத்திவருகிறார்கள். ‘கற்றல் அனுபவங்கள்’ (Learning experiences) என்று ‘தேசியக் கலைத்திட்டம்-2005’ குறிப்பிடுவதும் இவை போன்றவற்றையேதான். மேலும், வகுப்பறை களுக்கு வெளியே கற்பதை வகுப்பறைகளுக்குள் கொண்டுவர வேண்டும் என அந்த ஆவணம் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல, சக தோழர்களிடமிருந்தும் கற்பதற்கான வாய்ப்பும் அச்சமின்றிக் கற்றலை நெருங்க உதவும் என்பதும் காலம்காலமாய் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இன்று தமிழகத்தின் எந்த ஒரு கிராமத்திலும் இவ்வாறு கற்பதற்கான வாயில்களை ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ திறந்துவிட்டுள்ளது. தங்கள் வீட்டின் அருகிலுள்ள அண்ணன், அக்கா போன்றோர் மூலம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் எனப் பல்வகைச் செயல்பாடுகள் குழந்தை களுக்கு அளிக்கப்படுகின்றன. தவறுகளை அனுமதிக்கும், குழந்தைமையைப் போற்றும் இவ்வகைச் செயல்பாடுகளால் எவ்வளவு அற்புதமான தன்னம்பிக்கையைக் குழந்தைகளால் பெற இயலும்! இப்படி வீதிகள்தோறும் பள்ளிகள் அமைவதால் குழந்தைகள் வாழும் தலமனைத்தும் பள்ளிகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா காலச் சங்கடங்களுக்கு மத்தியில் சாதிக்கப்பட்டுள்ள சாதனை இது.

கரோனா பெருந்தொற்றால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் முடங்கியபோது பள்ளிகளும் முடங்கின. அப்போது தடுப்பூசி இருக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. மக்களின் வாழ்வாதாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு, படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்தனர். அப்போதும் பள்ளிகள் குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி ஒன்றே கற்றலுக்கான வாய்ப்பாக இருந்தது.

இவ்வாறாக, சமூகம் சமநிலை அடைவதற்குள் சுமார் 600 நாட்களுக்கும் மேலாகக் கற்றல் இழப்பு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், மாலை நேரங்களில் கற்றல் இழப்பைச் சரிசெய்யும் இந்த ஏற்பாடு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆசிரியர்களில் பலரும் அல்லும் பகலும் இதற்கான பங்களிப்பைச் செய்து வருவதும் பாராட்டுக்குரியது. இத்திட்டத்தில் சேவையாற்ற கிராமப்புறத்திலுள்ள இளைஞர் களும் இளம்பெண்களும் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.

அரசின் சீரிய நடைமுறையால் குறுகிய காலத்துக்குள் சுமார் ஒரு லட்சம் மையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப் பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தாலும் இன்னும் கற்றல் செயல்பாடு இயல்புநிலைக்கு வரவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிக்கப்படும்வரை இப்படியே நீடிக்கும் நிலையில் இல்லம் தேடிக் கல்வி போன்ற தற்காலிக ஏற்பாடுகளால் நிச்சயம் குழந்தைகளின் கற்கும் ஆர்வம் மேம்படும். தங்களுக்குத் தெரிந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கற்றல் அனுபவம் பெற இம்மையங்கள் ஆகப் பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

இப்போது பரவலாக எழுப்பப்படும் கவலைகள் குறித்தும் கொஞ்சம் விவாதிப்போம். இப்படி நடைபெறும் மையங்கள் மூலம் கரோனா பரவாதா என்பதே அது. நியாயமான கேள்விதான். முகக்கவசத்துடன் சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே குழந்தைகள் கூடுகின்றனர். பள்ளிகளின் வேலை நேரம் மற்றும் எண்ணிக்கை மிகுந்த மாணவர்கள் என்ற ஒப்பீட்டளவில் இதற்கான பரவும் வாய்ப்பு குறைவே. ஆனாலும் இதனைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் பலப்பட வேண்டும். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. அரசும் இதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

இத்திட்டத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் ஓரளவுக்குக் கல்வியை முடித்துவிட்டுத் தங்கள் எதிர்காலக் கனவுகளோடு இருப்பவர்கள். ஆனாலும், தங்கள் வயதுக்கே உரிய துடிப்போடு தங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புறங்களில் இருக்கும் குழந்தைகளுக்குக் கற்பிக்க முன்வருகின்றனர். தங்கள் கையிலுள்ள செல்பேசியின் மூலம் குழந்தைகளுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்கும் எல்லையில்லா சுதந்திரத்தை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் கையேடுகளும் வழிகாட்டிகள் மட்டுமே. இவற்றையும் தாண்டி, கற்றலை இனிமையாக்கும் வானளாவிய சுதந்திரம் இவர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்குத் தேவையெல்லாம் சமூக அங்கீகாரம் மட்டுமே. அண்மையில் ஒரு சமூக ஆர்வலர் தனது சொந்தச் செலவில் குழந்தைகள் பயிலும் இடத்துக்கு வண்ணம் பூசித்தந்து உதவியுள்ளார். இவ்வாறுதான் என்றில்லை. சிறு சிறு உதவிகளும் செய்து உற்சாகப்படுத்தலாம். வேறு எதுவும் இயலவில்லை என்றாலும், அந்த வழியாகச் செல்லும் யாரும் ஒருசில நிமிடங்கள் நின்று “நல்லது தங்கச்சி”, “நல்லது தம்பி”, ‘‘நல்ல வேலை செய்கிறீர்கள்” என்ற வார்த்தைகளைக் கூறினால்கூடப் போதும். அது அவர்களுக்கு ஆகப் பெரிய உற்சாகத்தை வழங்கும். அதனை வழங்குவதற்குத் தமிழ்ச் சமூகம் தயங்குமா என்ன?

- என்.மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com



Read in source website

இந்த முறை சென்னை புத்தகக்காட்சிக்குப் போக வாய்க்கவில்லை. ஓர் அலுவலின் பொருட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்கு வந்துவிட்டேன். என்றாலும் புத்தகக்காட்சியில் வெளியான புதிய நூல்களையும் வருகைதந்த எழுத்தாளர்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக நாள்தோறும் காண முடிந்தது. வெள்ளமாய்ப் புது வரவுகள், மறு பதிப்புகள், கிளாஸிக் படைப்புகள், நூற்றுக்கணக்கான அரங்குகள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், லட்சக்கணக்கான தலைப்புகள், கோடிக்கணக்கான புத்தகங்கள். பதிப்பாளர்கள் இயன்றவரை கூடுதல் வாசகர்களை எட்ட முயற்சிக்கிறார்கள்.

ஏனெனில், இப்படி ஒரு பெரிய புத்தகக்காட்சிக்கு அவர்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அதாவது, ஆண்டு முழுவதும் கணிசமான புத்தகங்கள் வாசகர்களின் கையெட்டும் தூரத்தில் இருப்பதில்லை. இப்படியான புத்தகக்காட்சிகளில்தான் அது சாத்தியமாகிறது. ஏன் இப்படி நடக்கிறது?

சிட்னியின் மையத்தில் இருக்கும் ஜார்ஜ் தெருவின் பாரம்பரியக் கட்டிடங்களுள் ஒன்றில் இருக்கும் டைமாக்ஸ் புத்தகக் கடைக்குச் சமீபத்தில் நான் போயிருந்தேன். கடை இரண்டு தளங்களில் விரிந்து கிடந்தது. கீழ்த்தளத்தில் புனைவு, மேல்தளத்தில் அபுனைவுப் புத்தகங்கள். இடையில் நகரும் படிக்கட்டுகள். மேல்தளத்தில் படிக்கட்டைச் சுற்றி வளைவான கைப்பிடிச் சுவர். பின்னால் ஒற்றை வரிசையில் மெத்தை வைத்த நாற்காலிகள்.

உள்ளே அமிழ்ந்துகொள்ளலாம், மணிக்கணக்காகப் படிக்கவும் செய்யலாம். மேல்தளத்தில் ஒரு தேநீரகமும் இருந்தது. உணவு மேடைக்கு எதிரில் வரிசையாக சுமார் 20 வார்ப்பிரும்பு மேசைகள், ஒரு மேசைக்கு இரண்டு நாற்காலிகள். உணவகத்தின் பேச்சுச் சத்தம் புத்தகங்களைப் புரட்டுகிறவர்களின் செவிகளை எட்டாத தூரத்தில் உணவு மேசைகள் இருந்தன. உயரமான பீங்கான் கோப்பைகளில் காபியும், வெளிர் நீலப் பூப்போட்ட தட்டுகளில் பலகாரமும் வாங்கிக்கொண்டு மேசைகளில் வந்து அமர்ந்துகொள்ளலாம். புத்தகங்களிடம் பேசலாம். உடன் வந்தவர்களோடும் உரையாடலாம்.

கீழ்த்தளத்தில் ஒரு சின்ன மேடை. சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது. அதன் மீது ஒரு கருங்காலி மேசை. என் முகத்தில் தோன்றிய கேள்விக்குறியைப் படித்துவிட்டு “இது எழுத்தாளர் மேசை” என்றார் சீருடைப் பெண். புத்தகங்களில் கையொப்பமிட்டுக் கொடுப்பதற்கும், வெளியீட்டு நிகழ்வுகளுக்கும் எழுத்தாளர்கள் வருகிறார்கள். “நாளை மாயா லீ வருகிறார்” என்றார் அதே பெண். லீ எழுதிய புத்தகம் அந்த இடத்திலிருந்து காணக்கூடியதாக இருந்தது.

புத்தகத் தட்டுக்கு வெளியேயும் நிறையப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களின் உள்ளிருந்து ஒரே அளவிலான அட்டைகள் தலை நீட்டிக்கொண்டிருந்தன. “அவை முகவரி அட்டைகள். நாளை வர முடியாதவர்கள் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆசிரியர் கையொப்பத்துடன் அவர்களுக்குப் புத்தகம் அனுப்பப்படும்” என்று விளக்கினார். அருகிலேயே ஒரு அரங்கமும் ஒரு சிற்றரங்கமும் இருக்கிறது. மார்ச் வரையிலான கூட்டங்கள், வெளியீட்டு நிகழ்வுகள், கையொப்ப வைபவங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் அந்தப் பெண் கொடுத்தார். எழுத்தாளரின் படங்கள், நூல் நயம், நாள், நேரம் எல்லா விவரங்களும் அதில் இருந்தன. நகரில் இப்படிப் பல புத்தகக் கடைகள் இருக்கின்றன.

ஏன் வேண்டும் புத்தகக்காட்சி?

இந்த இடத்தில் எனக்கு ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். அவரை 2020-ம் ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சியில் ‘க்ரியா’ பதிப்பக அரங்கில் சந்தித்தேன். அதுதான் கடைசிச் சந்திப்பு என்பது அப்போது எனக்குத் தெரியாது. அந்தச் சந்திப்பில் அவர் சொன்னதை மறக்க முடியாது. “இப்படியான புத்தகக்காட்சிகள் வாசகர்களைப் புத்தகத்துக்கு நெருக்கமாக்கும். அவர்கள் புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள், அட்டையை நீவுகிறார்கள், நூலைப் புரட்டுகிறார்கள், அதன் அச்சையும் அமைப்பையும் அவதானிக்கிறார்கள், பின்னட்டைக் குறிப்பைப் படிக்கிறார்கள். அவர்கள் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிடலாம். பரவாயில்லை. புத்தகம் இப்படித்தான் வாசகர்களுக்கு அணுக்கமாகும். அதற்கான சூழலைப் புத்தகக்காட்சிகள் உருவாக்குகின்றன” என்றார் அவர்.

சிட்னி புத்தகக் கடையில் அவர் சொன்னது எனக்குக் கூடுதலாக விளங்கியது. புத்தகங்களைப் புரட்டுகிறவர்களை, சாவதானமாக வாசிப்பவர்களை, தேநீருக்கு இடையில் அவற்றின் உள்ளடக்கம் குறித்து உரையாடுபவர்களை அங்கே பார்க்க முடிந்தது. ராமகிருஷ்ணன் சொன்னதுபோல் இன்று அவர்கள் புரட்டுகிற புத்தகத்தை வாங்காமல் போய்விடலாம். ஆனால், இந்தக் கடை ஆண்டின் எல்லா நாட்களும் திறந்திருக்கும். அந்த வாசகர்கள் மீண்டும் வருவார்கள். ஒரு கட்டத்தில் அந்த நூல் அவர்களின் உடமையாகக் கூடும். ஆனால், நம்மிடம் இப்படியான புத்தகக் கடைகள் இல்லை. புத்தகக்காட்சிதான் இருக்கிறது. அதுவும் ஆண்டுக்கு ஒரு முறைதான் வருகிறது.

புத்தகசாலை உண்டா?

நமது சமூகத்தில் எழுத்துக்கும் புத்தகங்களுக்கும் உள்ள இடம் சிறப்பானதல்ல. அறிஞர் அண்ணா இதைக் குறித்து எழுதியிருக்கிறார். ‘‘நம் வீடுகளில் படுக்கையறை, பூஜையறை, சமையலறை எல்லாம் இருக்கும். புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப் பாருங்கள். மிக மிகக் கஷ்டம். ‘புத்தகசாலை உண்டா?’ என்று கேளுங்கள். பதில் கூற மாட்டார்கள். ஒரு புன்னகை தோன்றும்.”

அண்ணா இப்படி எழுதியும் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு புத்தகசாலைக்கு ஆசைப்பட்டார். புத்தகசாலை போகட்டும், எத்தனை வீடுகளில் புத்தக அலமாரி இருக்கிறது? எல்லா ஊர்களிலும் அறைகலன்களுக்கான கடைகள் இருக்கின்றன. அங்கு படுக்கைகள் கிடைக்கும், பல வண்ண சோபாக்கள் இருக்கும், ஷோகேஸ் கண்ணைப் பறிக்கும், சாப்பாட்டு மேசைகள் வரிசைகட்டி நிற்கும், ஆனால், புத்தக அலமாரி என்றோர் அறைக்கலன் இருக்காது. கொள்வாரில்லை. ஆகவே விற்பாரும் இல்லை. இந்த நிலை மாற வேண்டாமா?

ஏன் வேண்டும் புத்தகங்கள்?

புத்தகங்கள் கற்பனா சக்தியை வளர்க்கும். வாசிக்கும் மூளை இயங்கிக்கொண்டே இருக்கும். நினைவாற்றல் பெருகும். வார்த்தைகள் சேகரமாகும்; அது எழுத்தை, பேச்சை, உரையாடலை, மேம்படுத்தும். தனிமை நீங்கும். பொழுதுபோகும். மன அழுத்தம் குறையும். சமூக அக்கறை மிகும். அறிவு செழுமையுறும். எல்லா மாயத்தையும் இந்த அச்சடித்த புத்தகங்களால் நிகழ்த்த முடியும்.

வீடுதோறும் கலையின் விளக்கமாக விளங்க வேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் முதற்கட்டமாக வீடுதோறும் ஒரு புத்தக அலமாரி வேண்டும். அதில் புத்தகங்களை நிறைக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற புத்தகக்காட்சிகளை சென்னைவாசிகளும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் கூடுதலாக விற்பனையானால், புத்தகக்காட்சிகளும் அதிகமாகும். நாளடைவில் நமது நகரங்களிலும் புத்தகக் கடைகள் அதிகமாகும். அப்போது புத்தகங்களுக்கு மரியாதை உண்டாகும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com



Read in source website