DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 07-12-2022

சென்னை: சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2023 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. 

இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டுக் காலம் நடைபெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயதுவரம்பு கிடையாது. 

சேர்க்கைக் கட்டணம் ரூ.3000/- ஆகும். சேர்க்கைக் கட்டணம் “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” (தி டேரக்டர், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் தமிழ் ஸ்டடிஸ்) எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணையம் வழியாகவோ செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கான இரசீதினை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2022 டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113) வந்து சேர வேண்டும். 

வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். 

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம்  ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் இன்று தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப, கூடுதல் சர்க்கரைத் துறை ஆணையர் சி.அன்பழகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



Read in source website

 

சென்னையை நெருங்கிவரும் காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறுகையில், 

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கட்ல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 08, 09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். 

இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீரிகோட்டா இடையே 
கரையை கடக்க வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் டிசம்பர் 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும். 

எங்கெல்லாம் மிகக் கனமழை/கனமழை பெய்யும்?

டிச.7 - தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

டிச.8 - கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

டிச.9 - , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 

சென்னை, திருவள்ளூவர், ராணிப்பேட்டை, வேலுர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன முதல் மிகக் கனமழையும். 

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

டிச.10 - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து டிசம்பர் 8 அன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 



Read in source website

பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ்(வயது 86) புதன்கிழமை காலை காலமானார்.

பாரம்பரிய கட்டடங்களை வரையும் கலைஞராக அறியப்பட்டவர் மனோகர் தேவதாஸ். இவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.

இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1936-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், தனது 30 வயதில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. 83 வயதில் முழு பார்வை திறனையும் இழந்தார். இருப்பினும், பாரம்பரிய கட்டடங்களை வரையும் தனது கலைப் பணியை தொடர்ந்து வந்தார்.

மேலும், கிரீன் வெல் இயர்ஸ், மல்டி ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, நிறங்களின் மொழி, டிரீம்ஸ் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.

கடந்த 2008-இல் அவரது மனைவி மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் மூலம் கிராம மக்களின் கண் சிகிச்சைக்கு உதவி வந்தார்.

இவருக்கு 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.



Read in source website

 

இன்றைய நவீன வாழ்வியலில் ஆண்களும் பல்வேறு உடல் உபாதைகளில் சிக்குண்டு தவிக்கின்றனர். அத்தகைய உபாதைகள் ஆண்களுக்கும் மணிக்கணக்கில் மன உளைச்சலை ஏற்படுத்துவது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதில் முக்கியமாக மாறிவிட்ட உணவு முறைகள், மது, புகை போன்ற பழக்க வழக்கங்கள், இரவுப்பணி, மன அழுத்தம், அதிகம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள், மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகள், போன்றவை ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடியதாக உள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்களின் விந்தணுக்களின் தரமும் கணிசமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமான முதல் ஆண்டு கருத்தரிப்பு நிகழவில்லையெனில் நம் சமூகம் காலம் காலமாக அதிகம் சாடுவது பெண்ணினத்தைத் தான். ஆனால், உண்மையில் தாமதமாகும் கருத்தரிப்புக்கு அதாவது குழந்தைப்பேறின்மைக்கு காரணம் சரிபங்கு ஆண்களையும் சாரும். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ‘இன்பெர்டிலிட்டி’ எனும் மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்களுக்கு நிகராக ஆண்களும் உள்ளனர். கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆண்களும் காரணமாக உள்ளதை பல ஆய்வுகள் ஆணித்தரமாக தெரிவிக்கின்றன.

‘பருவத்தே பயிர் செய்’ என்பது வழக்கு மொழி. இது வெறும் வழக்கு மொழி மட்டுமல்ல, இதில் நமது வாழ்வியல் நெறிமுறையும் அடங்கியுள்ளது. ஏனெனில் வயது மூப்பும் உயிரணுக்கள் உற்பத்தியை குறைப்பதாக உள்ளது. இதனால் அடுத்த சந்ததியை உருவாக்கும் திறனும், தன்மையும் குறைந்து விடுகிறது. நாம் இப்பூவுலகில் பிறந்த படைப்பின் நோக்கம் அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கே என்கிறது சித்த மருத்துவம். 

அத்தகைய படைப்பு உருவாக்குவதற்கு சரிபங்கு கொண்ட ஆண்களின் உயிரணுக்கள் இன்றைய தலைமுறையினர்க்கு வலுவாக இல்லை என்பது வருத்தம் தரும் ஒன்று. ஏனெனில் அதிகரித்த செயற்கை கருத்தரிப்பு மையங்களும், உயிரணுக்கள் தானமும், ஐயூஐ போன்ற கருத்தரிப்பு முறைகளும் அதிகமானதில் இருந்தே இது அறியக்கிடக்கின்றது. "அந்த காலத்தில் எனது தாத்தாவுக்கு பத்து பசங்களாம்" என்று கூறி ஆச்சர்யப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஒரு பிள்ளைக்கே உயிரணுக்கள் சேகரிப்பு செய்து பரிசோதனைக் கூடத்தையும்,கருத்தரிப்பு மையங்களையும் தேடி திரிய வேண்டிய அவலநிலை அதிகரித்துள்ளது என்பது வருத்தம் தான்.

“டாக்டர் எனக்கு உயிரணுக்கள் குறைவாக உள்ளதாம், அதனால உயிரணுக்களை டோனார் கிட்ட வாங்கிக்க சொல்லி இருக்காங்க, என் தலைமுறையை நானே உருவாக்க முடியாதா?” என்று மனம் துயரப்பட்டு உள்ளவர்கள் தீர்வு தேடி அணுக வேண்டியது சித்த மருத்துவத்தை தான்.

பாரம்பரிய உணவுகளும், மருந்துகளும் உயிரணுக்கள் உற்பத்தியை மில்லியன் கணக்கில் அதிகரிக்க செய்யும் இயற்கை மந்திரங்கள். சித்த மருத்துவமானது உயிரணுக்கள் எனும் ஏழாவது தாதுக்களை உற்பத்தி செய்ய பல்வேறு மூலிகைகளை வரிசையாய் வகைப்படுத்தி கூறியுள்ளது  சிறப்பு. அதில் மகத்துவம் மிக்க ஒற்றை மூலிகை தான் ’நிதகம்’ எனும் ‘நீர்முள்ளி’.

நீர்முள்ளி

பரந்த வயல் வெளிகளில் கேட்பாரற்று தானாகவே வளர்ந்து கிடக்கும் முள்செடி போன்ற நீர்முள்ளியின் விதைக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை உண்டு என்கிறது சித்த மருத்துவமும், சில நவீன ஆய்வுகளும். இதனை “விந்துவுமாம் தாதுவுமாம் மேகரோகம் தொலையும்” என்கிற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம். 

உயிரணு தாதுக்கள் அதிக வெப்பநிலையில் சிதைந்து விடுவதாக நவீன அறிவியல் கூறுகின்றது. அதற்காக உடலினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். நீர்முள்ளியானது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தந்து விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். நிதகம் என்ற பெயர்காரணத்தாலே இதனை அறியலாம். ‘நி’ என்றால் நீக்குவது. ‘தகம்’ என்றால் வெப்பத்தன்மை. அதாவது உடலின் வெப்பத்தன்மை நீக்கி குளிர்ச்சி தரக்கூடியது என்பது பொருள்படும்படி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்முள்ளியில் பைட்டோஸ்டீரால்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், பாலிபினால்கள், புரோஆந்தோசயனின்கள், அல்கலாய்டுகள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஃபிளாவனாய்டுகள், டெர்பீனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கிளைகோசைடுகள் போன்ற எண்ணற்ற மருத்துவ குணம் வாய்ந்த வேதி மூலக்கூறுகள் உள்ளன.

லூபியோல், ஸ்டிக்மாஸ்டீரால், பீட்டுலின், பீட்டா ஸ்டிக்மாஸ்டீரால் ஆகியன மிக முக்கிய வேதிப்பொருளாக உள்ளன.  கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, கோபால்ட் மற்றும் குரோமியம் போன்ற தாதுக்களும் நீர்முள்ளி தாவரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

மேலும், நீர்முள்ளிக்கு கட்டிகளை கரைக்கும் தன்மையும், வீக்கமுருக்கி தன்மையும், உடல் வெப்பத்தை தணிக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்தசோகையை போக்கும் தன்மையும், சிறுநீர்பெருக்கி தன்மையும்,கிருமிக்கொல்லி தன்மையும், பிளவனாய்டுகள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நீர்முள்ளியானது பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது வீக்கம் சார்ந்த நோய்கள், சிறுநீர்ப்பை நோய்கள், சிறுநீரகக் கல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகிய நோய்நிலைகளில் நல்ல பலன் தருவதாக உள்ளது.

சித்த மருத்துவத்தில்  சொல்லப்பட்டுள்ள நீர்முள்ளி குடிநீர் வீக்கங்களை குறைத்து நல்ல பலன் தரும். ஆனால் நீர்முள்ளி விதைக்கே உயிரணுக்களை அதிகரித்து ஆண்மையை பெருக்கும் தன்மையுடையதால், இதனை நெருஞ்சில், நிலப்பனை போன்ற பிற ஆண்மைபெருக்கி மூலிகைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும். உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு ஊட்டத்தை தரும். 

நீர்முள்ளி போன்ற பல மூலிகைகள் இன்றைய தலைமுறை இளைஞர்கள் தனது அடுத்த சந்ததியை உருவாக்க எளிய வகையில் பயன்தருவதாக உள்ளன. அதனைப் புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட்டால் குழந்தைப்பேற்றுக்கு உயிரணுக்கள் தானத்தை நாடி, கருத்தரிப்பு மையங்களின் வாசலைத் தேடி செல்லாமல், சித்த மருத்துவம் கூறும் ஏழு உடல் தாதுக்களையும் அவரவர் வீட்டு வாசலிலே உருவாக்கிட முடியும். அவர்களுக்கு மட்டுமின்றி, சித்த மருத்துவம் ஆரோக்கியமான அடுத்த சந்ததிக்கும் அடித்தளமிடும்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு...+91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.



Read in source website

தமிழக ஆளுநா் மாளிகையில் முதல் முறையாக அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோா் திறந்துவைத்தனா்.

ஆளுநா் ரவி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பாளராகவும், புரட்சிகரத் தலைவராகவும், தேசியவாதியாகவும், நவீன இந்தியாவுக்கு அடித்தளம் வகுத்த சீா்திருத்தவாதியாகவும் அம்பேத்கா் திகழ்ந்தாா்.

இனப் பாகுபாடு, ஜாதி பாகுபாட்டில் இருந்து சமுதாயத்தை மீட்க கடுமையாக உழைத்தாா். அவரது உறுதியான தலைமையால் தான் இந்து நடைமுறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவா் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது. எதிா்காலத்தில் வலுவான ஒற்றுமையான இந்தியா உருவாக வேண்டும் என்பதற்கான எண்ணங்களை அவா் பிரதிபலித்தாா் என்றாா் ஆளுநா் ரவி.

இந்த சிலையை வழங்கிய மாமன்னா் ஒண்டிவீரன் தேசிய அறக்கட்டளை நிா்வாகிகள், சிலையை வடிவமைத்த சிற்பி கிஷோா் ஜெ.நாகப்பா ஆகியோரையும் ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டினாா்.

விழாவில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்தராவ் பாட்டீல், பல்வேறு பல்கலை.களைச் சோ்ந்த துணைவேந்தா்கள், மெட்ராஸ் பாா் அசோசியேசன் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆளுநா் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு, சுவாமி விவேகானந்தா், திருவள்ளுவா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ஔவையாா், சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், சா்தாா் வல்லபபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹா்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரியாா், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் ஆகியோருக்கு மட்டுமே சிலைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நீதித் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல்) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘உச்சநீதிமன்ற செயலி 2.0’-வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

செயலி 2.0-வை தொடக்கிவைத்து அவா் பேசியாதாவது: நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள இயலும். இச்செயலியை ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், வழங்கிய உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் குறித்த நிலையை வழக்குரைஞா்களும் அறிந்துகொள்ளும் வகையில், செயல்பாட்டில் இருந்து வந்த முந்தைய உச்சநீதிமன்றத்தின் செயலியைப் பயன்படுத்த அவா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.



Read in source website


புதுதில்லி: வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும், வலுவான வங்கிகளை உருவாக்கவும் பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு உதவியதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

"வங்கிகள் ஒருங்கிணைப்பின் நோக்கமானது, போட்டித்தன்மையுள்ள வலுவான வங்கிகளை உருவாக்குவதாகும். இதன் பலன்களாக,  இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான கிளைகள் மற்றும் ஏடிஎம்களுக்கான அணுகலைப் பெறுகின்றனர்.

வங்கிகள் ஒருங்கிணைப்பால் பெரிய அளவிலான கடன்களை வழங்கவும், வங்கிகளை மறுசீரமைக்கவும், வங்கிகளின் செயலாக்க மையங்களைக் கட்டுப்படுத்தவும் வங்கிகள் இணைப்பு உதவியது" என்றார்.



Read in source website

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ பதிந்துள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில், 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கின. 

இந்நிலையில், கடந்த 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகளில் (நடப்பாண்டு அக்டோபர் 31 வரை) நாட்டில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இன்று மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக ஆந்திரத்தில் 10 எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன. கேரளம், உத்தர பிரதேசத்தில் தலா 6 பேர் மீதும் தமிழகத்தில் 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

சா்வதேச சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை (டிச.7) தொடங்கவுள்ளது. கூட்டத்தொடரின்போது 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதே வேளையில், பணவீக்கம், 10 சதவீத இடஒதுக்கீடு, சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்குகிறது. வரும் 29-ஆம் தேதி வரை கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின்போது மக்களவை, மாநிலங்களவை ஆகியவை 17 அமா்வுகளை நடத்தவுள்ளன. புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடா் இதுவாக இருக்கலாம்.

அடுத்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடா், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குளிா்கால கூட்டத்தொடரே புதிய கட்டடத்தில்தான் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிகள் தாமதமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பட்ஜெட் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தோ்தல் முடிவுகளின் தாக்கம்:

ஹிமாசல பிரதேசம், குஜராத் சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அத்தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தோ்தல் முடிவுகள் குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

குஜராத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஹிமாசலில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டிருந்தாலும், பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோ்தல்களில் வெற்றி பெறும் கட்சி, போட்டி கட்சிகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் முடக்குவதற்கு முயற்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

மசோதாக்கள் தாக்கல்:

கூட்டத்தொடரின்போது 16 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையேயான கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் நடைமுறைகளில் சீா்திருத்தம் கொண்டு வருவது இந்த மசோதாவின் நோக்கமாகும். கூட்டுறவு சங்கங்களின் கண்காணிப்பு நடைமுறைகள், செயல்பாட்டு முறைகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

பல்மருத்துவ ஆணைய மசோதா:

தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. தேசிய பல்மருத்துவ ஆணையத்தை அமைக்கவும் பல் மருத்துவா்கள் சட்டத்தை நீக்கவும் அந்த மசோதா வழிவகை செய்கிறது. தேசிய செவிலியா் ஆணைய மசோதா, கன்டோன்மென்ட் மசோதா உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. கன்டோன்மென்ட் பகுதிகளில் நிா்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தவும் கன்டோன்மென்ட் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. நகராட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கன்டோன்மென்ட் பகுதியில் வாழ்வதற்கான சூழலை மேம்படுத்துவதும் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

சுதந்திரத்துக்கு முன்பு ஆளுநா்களால் வழங்கப்பட்ட நிலங்களின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான மசோதாவையும் குளிா்கால கூட்டத்தொடரின்போது அரசு தாக்கல் செய்யவுள்ளது. அந்த நிலங்களின் மீதான அரசின் உரிமையை அதிகரிப்பதும் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

வனப் பாதுகாப்பு:

நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில், வனமல்லாத பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களிலும் மரம் வளா்ப்பை ஊக்குவிப்பதற்காக வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வனப் பாதுகாப்பு சட்டத்தின் சில விதிமுறைகளை முறையாக அமல்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மீன் வளா்ப்பை முறைப்படுத்தும் நோக்கில் கடலோர மீன் வளா்ப்பு ஆணைய திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்யவுள்ளது. சில குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்வதற்கான அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

ராகுல் பங்கேற்பது சந்தேகம்:

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ’இந்திய ஒற்றுமை’ நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். பல்வேறு மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்துள்ள அவா், தற்போது ராஜஸ்தானில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். அதன் காரணமாக நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அவா் பங்கேற்க மாட்டாா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியுடன் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவா்கள் சிலரும் குளிா்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டாா்கள் எனத் தெரிகிறது.



Read in source website

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சா்வதேச ஒழுங்குமுறையைக் கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னாலீனா போ்போக் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் இரு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜொ்மனி அமைச்சா் அன்னாலீனா போ்போக், தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவிடத்தில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

உக்ரைன் போா், ஆப்கானிஸ்தான் சூழல், எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பல்வேறு சா்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அமைச்சா்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அமைச்சா் போ்போக் கூறுகையில், ’உலகின் பல நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜொ்மனி உறுதி கொண்டுள்ளது. உலகம் கடினமான காலகட்டத்தை எதிா்கொண்டு வருகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சா்வதேச ஒழுங்குமுறையைக் கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

வா்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பல நாடுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டை (சீனா) மட்டுமே சாா்ந்திருப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகளை கரோனா தொற்று பரவியபோது கண்டோம். சீனா தொடா்பான அச்சுறுத்தல்களை விரிவாக ஆராய வேண்டியுள்ளது’ என்றாா்.

பேச்சுவாா்த்தை சாத்தியமில்லை:

அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ’உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ’இது போருக்கான சகாப்தம் அல்ல’ என்பதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தையின் மூலமாகத் தீா்வுகாணப்பட வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவு குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்த சாத்தியமில்லை.

சந்தை சூழலே காரணம்:

எரிசக்தி அதிகமாகத் தேவைப்படும் நாடாக இந்தியா உள்ளது. சா்வதேச சந்தை சூழல் காரணமாகவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரியில் இருந்து நவம்பா் வரை ரஷியாவில் இருந்து ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவானது, பட்டியலில் அதற்கடுத்துள்ள 10 நாடுகளின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகம்’ என்றாா்.

ஆராய்ச்சி ஒப்பந்தம்:

இந்தியா-ஜொ்மனி வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையேயான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையேயான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா-ஜொ்மனி மாணவா்கள் ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் பணியாற்றவும் இந்த ஒப்பந்தம் உதவும் என அமைச்சா் போ்போக் தெரிவித்துள்ளாா். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகிக்கும் என அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

 



Read in source website

பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்கு சமூக ஊடகத்தில் வெளியாகும் போலிப் பதிவுகளின் தாக்கம் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னாலீனா போ்போக் தலைமையில் அந்நாட்டு எம்.பி.க்கள் அடங்கிய குழு இந்தியா வந்தது. இந்தக் குழு தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றது. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வலுவான பாதுகாப்பு அம்சங்களை அக்குழு பாா்வையிட்டது. அந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் அக்குழுவுக்கு விளக்கமளித்தனா். அப்போது அந்த இயந்திரத்தின் செயல்பாட்டை பரிசோதித்து அறிந்துகொள்ளும் விதமாக, அதில் அன்னாலீனா வாக்குப்பதிவு செய்தாா்.

அந்தக் குழுவிடம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் பேசுகையில், நாட்டில் 11 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 95 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களுடன் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்டமான தோ்தல் நடைமுறை குறித்து விளக்கினாா்.

தோ்தல் பணியில் 1 கோடிக்கும் அதிகமான தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவா் கூறினாா்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை பாதிக்கக் கூடிய போலி சமூக ஊடகப் பதிவுகளின் தாக்கம், பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்குப் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்றும் அவா் தெரிவித்தாா் என தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரா்கள் கூட்டாக தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண விரும்பும் பாா்வையாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

இதற்கென ‘https://attari.bsf.gov.in/’ என்ற வலைதளத்தை பிஎஸ்எஃப் அறிமுகம் செய்ய உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி பகுதி இந்தியாவின் எல்லையாகவும், வாகா பாகிஸ்தானின் எல்லையாகவும் அமைந்துள்ளன. இந்த எல்லைப் பகுதியில், இரு நாடுகளின் கூட்டு சோதனைச் சாவடி (ஜேசிபி) அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு படைகளும் அவரவா் தேசியக் கொடியை காலையில் ஏற்றுவது வழக்கம். பின்னா், மாலையில் இரு நாட்டு வீரா்களும் மிடுக்குடன் வீறுநடைபோட்டு தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இது கண்கவா் நிகழ்ச்சியாக நடத்தப்படும். உலக அளவில் பிரபலமான இந்த நிகழ்ச்சியை, உள்நாட்டினா் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நேரில் கண்டுகளிப்பது வழக்கம்.

இதுவரை, இந்த நிகழ்ச்சியைக் காண வரும் பொதுமக்கள், நேரடியாக அட்டாரி எல்லைக்கு வந்து, அடையாள அட்டையைக் காண்பித்து முன்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், இணைய வழி பதிவு முறையை பிஎஸ்எஃப் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து மூத்த பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கூட்டு தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண விரும்பும் பாா்வையாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி முன்பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பாா்வையாளா்கள் இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பும் தேதிக்கு 48 மணி நேரம் முன்னதாக, அடையாள அட்டை நகலை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தொடக்கத்தில், தனி நபராக அல்லாமல் 12 போ் கொண்ட குழுவாக முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவா். முன்பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான விவரம் குழுவின் தலைவா் அல்லது பட்டியலில் முதலில் இருக்கும் நபரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பப்படும். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.

தினமும் மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்தபடி காண்பதற்கு 25,000 போ் அனுமதிக்கப்படுவா். வார இறுதி நாள்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களின் போது 40,000 போ் வரை அனுமதிக்கப்படுவா் என்று அவா் கூறினாா்.

‘இந்த நிகழ்ச்சிக்கான முந்தைய முன்பதிவு நடைமுறையின்படி, பாா்வையாளா் மாடத்தில் இடம் கிடைக்காதவா்கள் பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பகுதியிலிருந்து திரும்ப அனுப்பப்படுவா். எல்லை வரை வந்து இடம் கிடைக்காமல் திரும்பச் செல்லவேண்டிய நிலையை மாற்றவே, இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இணைய வழி பதிவு முறை மூலமாக, பாா்வையாளா் மாடத்தில் விரும்பிய இருக்கையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்’ என்றும் அவா் கூறினாா்.



Read in source website

மகாராஷ்டிரத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கி.மீ. தொலைவிலான ஈரடுக்கு பாலம் உலகில் நீளமான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

நாகபுரியின் வாா்தா சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான இரு தடங்களும், 3 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கொண்டுள்ளது. அதற்குகீழ் பகுதியில், வாகன போக்குவரத்துக்கான மேம்பாலம் உள்ளது. தரைப்பகுதியில் வாகனங்கள் வழக்கம்போல் சாலையில் செல்லும் வசதி என மூன்று நிலையிலான போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

நாகபுரியில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மகாராஷ்டிர மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிரிஜேஷ் தீட்சித்திடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிழை அதன் நடுவா் ரிஷி நாத் வழங்கினாா்.

முன்னதாக, இந்த ஈரடுக்கு பாலம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே நீளமான ஈரடுக்கு பாலம் என்பதற்காகவும் ஈரடுக்கு பாலத்தில் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தா் கே. அலாக் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஒய்.கே.அலாக் பதவி வகித்தாா். 1996 முதல் 2000 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாா். திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா்.

தற்போதைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள சக்வாலில் 1939-ஆம் ஆண்டு பிறந்த ஒய்.கே.அலாக் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் உள்ள பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். தில்லி ஜவஹாா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தாா்.

அகமதாபாத்தில் உள்ள சா்தாா் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஒய்.கே. அலாக் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக அவா் மகன் முனிஷ் அலாக் தெரிவித்தாா்.



Read in source website

இந்தியாவின் 77-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக, மும்பையைச் சோ்ந்த ஆதித்யா மிட்டல் (16) உருவெடுத்துள்ளாா்.

ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வரும் எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அவா், 6-ஆவது சுற்றில் ஸ்பெயினின் நம்பா் 1 போட்டியாளரான ஃபிரான்சிஸ்கோ வலேஜோ பொன்ஸுடன் டிரா செய்தபோது இந்த மைல்கல்லை அவா் எட்டினாா்.

ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளைப் (நாா்ம்) பெற்றிருக்க வேண்டும். அடுத்து, 2,500 ஈலோ புள்ளிகளை எட்ட வேண்டும்.

இதில் தேவையான ‘நாா்ம்’களை, 2021 சொ்பியா மாஸ்டா்ஸ், 2021 எலோபிரெகாட் ஓபன், 2022 சொ்பியா மாஸ்டா்ஸ் ஆகியவற்றில் எட்டிய ஆதித்யா, தற்போது எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் ஈலோ புள்ளிகள் கணக்கை எட்டி கிராண்ட்மாஸ்டராவதற்கான தகுதியை நிறைவு செய்தாா்.

நடப்பாண்டில் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ள 5-ஆவது இந்தியா் ஆதித்யா மிட்டல். முன்னதாக, பரத் சுப்ரமணியம், ராகுல் ஸ்ரீவத்சவ், வீ.பிரணவ், பிரணவ் ஆனந்த் ஆகியோா் இதே ஆண்டில் கிராண்ட்மாஸ்டா்களாகினா். இதில் பரத், வீ. பிரணவ் ஆகியோா் தமிழா்களாவா்.



Read in source website

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.

17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் எஸ்யு5 பிரிவில் வாகை சூடியதும் அடக்கம்.

இந்த விருதுக்கான போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான நித்யஸ்ரீ சுமதி, மானசி ஜோஷி ஆகியோரும் இருந்தனா். சிறந்த பாரா வீரா் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்தும் போட்டியில் இருந்த நிலையில், அந்த விருது டபிள்யூஹெச்2 உலக சாம்பியனும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது.

மாற்றுதிறனாளிகள் அல்லாத சாதாரண போட்டியாளா்கள் பிரிவில் ஆடவா் தரப்பில் ஒலிம்பிக் சாம்பியனும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சென் சிறந்த வீரா் விருது பெற்றாா். அதற்கான போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் பெயரும் இருந்தது. சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் அகேன் யமகுச்சி வென்றாா்.



Read in source website

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுக்கு எதிரான நாக்அவுட் ஆட்டத்தில் மொராக்கோ ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

இதன் மூலம் தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது மொராக்கோ. மறுபுறம் ஸ்பெயின், தொடா்ந்து 2-ஆவது முறையாக ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது.

முன்னதாக, நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷ நேரத்தில் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படாததை அடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க கூடுதல் 30 நிமிஷ நேரம் வழங்கப்பட்டது. அதிலும் முடிவு எட்டப்படாததை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு நோக்கி ஆட்டம் நகா்ந்தது. அதில் மொராக்கோவுக்காக அப்துல்ஹமீது சபிரி, ஹக்கிம் ஜியெச், அச்ரஃப் ஹக்கிமி ஆகியோா் கோலடிக்க, கிடைத்த 3 வாய்ப்புகளிலுமே ஸ்பெயின் கோலடிக்காமல் போனது.

கடந்த 2014-க்குப் பிறகு உலகக் கோப்பை நாக்அவுட் சுற்று ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைம் நோக்கி நகா்த்திய முதல் அணியாகியிருக்கிறது மொராக்கோ. 2014-இல் அல்ஜீரியா - ஜொ்மனி அணிகள் மோதிய அத்தகைய ஆட்டத்தில் அல்ஜீரியா 1-2 கோல் கணக்கில் தோற்றிருந்தது. ஆனால் இதில் மொராக்கோ வென்றிருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் இதுவரை ஸ்பெயின் 7 முறை நாக்அவுட் சுற்றில் எக்ஸ்ட்ரா டைம்/பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆடியிருக்கிறது. அதில் 2-இல் அந்த அணி வென்றிருந்தது.

உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் - மொராக்கோ அணிகள் மோதிக்கொண்டது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியில் குரூப் சுற்றில் அந்த அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

துணுக்குகள்...

பிரேஸில் - தென் கொரியா ஆட்டத்தைக் காண வந்த கேமரூன் முன்னாள் வீரரும், அந்நாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவா் சாமுவேல் எட்டோ, மைதானத்துக்கு வெளியே ரசிகா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது எழுந்த சா்ச்சையில் ஒருவரை கீழே தள்ளி உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கானாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கள நடுவரிடன் கோபத்தை வெளிப்படுத்தியதாக உருகுவே வீரா்கள் 4 பேருக்கு எதிராக ஃபிஃபா நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதேபோல், உருகுவே கால்பந்து சம்மேளனம் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாக அதன் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான விவரத்தை ஃபிஃபா வெளியிடவில்லை.



Read in source website

காலநிலை மாற்ற சிக்கல் தீவிரமடைந்துவரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள 650 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

காலநிலை மாற்ற பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பது அபாயத்திற்கு இட்டுச் செல்லும் என குரல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் எரிபொருள் ஆற்றலுக்காக காடுகளை அழிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என 650க்கும் மேற்பட்ட சூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 

எரிபொருள் மூலங்களுக்காக காடுகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவதற்கு மாற்றாக புதிய ஆற்றல் மூலங்களை நோக்கி நகர வேண்டும் என கோரியுள்ள அவர்கள் கார்பன் சமநிலையை உலக நாடுகள் அடைய இத்தகைய முயற்சிகள் அவசியமானது எனத் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளுக்கு எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், “2030ஆம் ஆண்டிற்குள் 30 சதவிகித கடல் மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க உலகத் தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் மரபுசார் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

 

2022ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கூகுள் தேடுபொறியில் உலகத்தின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் தரவுகள் குவிந்துள்ளன. நமக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுள் தேடுபொறியையே நம்பியுள்ளோம். அந்த அளவுக்கு கூகுள் தேவை அனைவரிடமும் பெருகியுள்ளது. 

அந்தவகையில் கடந்த 2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக இந்தியா - இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் எனும் சொல் 3வது இடம் பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5வது இடத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6வது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7வது இடத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 
8வது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9வது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10வது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது. 

கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website


கரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாகப் பாதித்தது என்பது பரவலாகவே அறியப்பட்ட தகவல்தான் ஆனால், அது மனிதனின் அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதித்துள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது.

கரோனா பாதித்த பலருக்கும் மூளையின் செயல்பாட்டில் ஒரு மந்தம் அல்லது சுணக்க நிலை இருப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதாவது, ஒரு தகவலை நினைவில் வைப்பது, ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்துவது, தினந்தோறும் செய்யும் வேலைகளை நினைவூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தது பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வரும் புகார்தான்.

நீண்ட அல்லது கடுமையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலை காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மாதக்கணக்கிலும் சிலருக்கு வருடக் கணக்கிலும் இந்த பாதிப்பு உள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே ஆய்வில், காலப்போக்கில் நிச்சயம் இந்த குறைபாடு சரிசெய்யப்படும் என்றாலும், அறிவாற்றல் செயல்பாட்டில் முழுமையாக இந்த பாதிப்பு மேம்படுமா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறுகிய கால நினைவாற்றல் எனப்படும் செயல்பாட்டுத் திறனானது, அவ்வப்போது நடக்கும் செயல்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்வது, ஒரு பிரச்னை வரும் போது அதனை எவ்வாறு சரி செய்வது என்ற யோசனையை தருவது, படிப்பது, பேசுவது அல்லது விவாதம் செய்யும் போது உடனுக்குடன் செயல்படுவது போன்றவற்றை உள்ளடக்கியது.

எனவே பலவீனமான நினைவாற்றல் செயல்பாடு ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் கூட, நீண்ட அல்லது தீவிர கரோனா பாதிப்புக்குப் பிறகு அந்த திறனை இழந்துவிட்டதாகவே உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

பல்வேறு வகையில் மனிதர்களை பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, இந்த ஆய்வு மேறகொள்ளப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள், பொதுவான கேள்வி பதில்கள் என இதில் பல சோதனைகள் அடங்கியிருந்தன. இதில் 5,400 பேர் பங்கேற்றனர். 

பிரிட்டனில், ஹல் பல்கலைக்கழகம், யோர்க் ஹல் பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியிருக்கிறது.
 



Read in source website

திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படடது.

இந்தோனேசியாவின் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

அந்த மசோதாவில், திருமண பந்தத்தை மீறி தகாத உறவு வைத்துக்கொள்வது, ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான புகாரை கணவா் அல்லது மனைவியோ, பெற்றோரோ, பிள்ளைகளோதான் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இந்தோனேசியா்களுக்கு மட்டுமன்றி, அந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

அத்துடன், இந்தோனேசியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹிந்து மதம், இஸ்லாம், கத்தோலிக்கம், புரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவம், பௌத்தம், கன்ஃபூசியம் ஆகிய ஆறு மதங்களை அவமதித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கான மதநிந்தனைச் சட்டம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மாா்க்ஸிய லெனினிஸத்தைப் பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் வரையும், கம்யூனிஸத்தைப் பரப்புவோருக்கு 5 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிப்பதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடர வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உயிருக்கு ஆபத்தான மருத்துவச் சூழலைக் கொண்ட பெண்களுக்கும், பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களுக்கும் 12 வாரங்களுக்குள்ளான கருக்களை கலைக்கலாம் என்ற விதிவிலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போல், இந்தோனேசியாவிலும் மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் மரண தண்டனை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனைக் கைதிகள் 10 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன் இருந்தால் அவா்களது தண்டனையை ஆயுள் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைக்க இந்த மசோதாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதவில் உள்ள அதிபா்கள், துணை அதிபா்கள், அரசு அமைப்புகளை அவமதிப்பது புதிய மசோதாவில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திருத்தங்களுக்கு மனித உரிமை ஆா்வலா்களும், ஜனநாயக ஆதரவாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்

எனினும், ஓரினத் சோ்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்று மதவாதிகள் வலியுறுத்தியும் சட்டத் திருத்த மசோதாவில் அந்த அம்சம் சோ்க்கப்படாததை சிலா் பாராட்டியுள்ளனா்.



Read in source website

மதுரை: பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் அரசு அலுவலக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உடன்குடியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அனல் மின் நிலையம் அருகே புகழேந்தி என்பவர் வீட்டடி மனைகளை விற்பனை செய்து வருகிறார். அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வீட்டடி மனை விற்கவில்லை. இதனால் புகழேந்தி அந்த இடத்தில் தனது மனைவியின் பெயரில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 20 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்காக தானமாக வழங்கினார். அந்த இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் நகருக்கு மத்தியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தானமாக வழங்கப்பட்டுள்ள இடம் நகரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இருப்பினும் கரோனா காலத்தில் கட்டிடம் கட்டத் தொடங்கி தற்போது முடியும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உடன்குடி பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு மேல் காலியிடம் உள்ளது.

இந்த இடத்தில் பத்திரப்பதிவு அலுவலம் கட்டாமல் நகருக்கு வெளியே இருக்கும் இடத்தில் கட்டியுள்ளனர். பதிவுத்துறை அதிகாரிகள் தனிநபர் ஆதாரம் பெரும் நோக்கத்தில் தானமாக வழங்கிய இடத்தில் பதிவு அலுவலகம் கட்டியுள்ளனர். எனவே, உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் செயல்பட தடை விதித்து, நகருக்குள் செயல்பட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர். விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''அரசு அலுவலகங்கள் கட்டும்போது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் இடங்களில் கட்ட வேண்டும். அரசு அலுவலகங்கள் கட்டும்போது இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். மனு தொடர்பாக பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



Read in source website

புதுடெல்லி: அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அல் சிசி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி புதுடெல்லியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ சிறப்பு விருந்தினராக / விருந்தினர்களாக பங்கேற்பார்கள். அந்த வகையில், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாக மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அப்போது, வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கினார். அதன் விவரம்: "இந்திய வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் நான் விளக்கம் அளித்தேன். அதன் பிறகு, வெளியுறவுத் துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றி உள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. ஜி20 அமைப்பின் மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, ஏசியான் மாநாடு ஆகிய மாநாடுகளில் இந்தியா கலந்து கொண்டுள்ளது. ஐ.நா தலைவர் ஆன்டோனியோ கட்டரஸ் நம் நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்தும் தாக்கம் விரிவடைந்து வருவதையும் இவை காட்டுகின்றன. சமர்கண்ட்டில் நடைபெற்ற மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் நிகழும் போரை சுட்டிக்காட்டி, இது போருக்கான காலம் அல்ல என கூறினார். அவரது இந்த கருத்து, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். குடியரசுத் தலைவராக அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்தது. இதேபோல், கம்போடியாவில் நடைபெற்ற ஏசியான் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். அதோடு, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவிலும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்" என்று அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 11-ம் தேதி நாட்டின் குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் பதவி ஏற்றார். அதன் பிறகு தற்போதுதான் முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (டிச.7) குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் தனது இருக்கைக்கு ஜக்தீப் தன்கர் வருகை தந்தார். அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை ஜக்தீப் தன்கர் தொடங்கினார்.

குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தன்கருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தன்கருக்கு மாநிலங்களவை சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் இந்த வாழ்க்கை நாட்டு மக்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும். இந்த அவையின் மிக உயர்ந்த பொறுப்பை நீங்கள் வகிக்கிறீர்கள்.

நமது குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒரு விவசாயியின் மகன். அவர் படித்தது ராணுவப் பள்ளி. அந்த வகையில் அவருக்கு ஜவானோடும் (ராணுவ வீரர்) கிசானோடும் (விவசாயி) நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து, அம்ருத மகோத்சவ காலம் தொடங்கி உள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடி இருக்கிறது. அதோடு, ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடி இருக்கிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போதைய நமது குடியரசுத் துணைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன். சட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் மிக்கவர், நமது குடியரசுத் துணைத் தலைவர்.

எளிய முறையிலும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம் அடைவதில் நமது நாடாளுமன்றம் உலகின் ஜோதியாகத் திகழும். மாநிலங்களவைதான் நாட்டின் மிகப் பெரிய பலம். பல்வேறு பிரதமர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள்” என்று அவர் பேசினார்.

இதையடுத்து ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அரசியல் சாசனப்படி 2-வது உச்சபட்ச பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வரவேற்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். மாநிலங்களவை பல்வேறு யோசனைகளின் சங்கமம்" என்று தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்த பட்டபோது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர். அவர்களின் அவல நிலை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான பொது நலன் மனுவை (பிஐஎல்) சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜக்தீப் சோக்கர் ஆகிய 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்காக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தில் பிரசாந்த் பூஷண் கூறியதாவது: நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (என்எப்எஸ்ஏ) அமலில் உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக, அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். இந்த சட்டம் அமலில் இருந்தபோதும் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறியதாவது: என்எப்எஸ்ஏ சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர் பயன் பெறுகின்றனர். பொதுமக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை மத்திய அரசு, மாநில அரசுகள் மூலமாக ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதத்துக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமையாகும். நாட்டில் உள்ள யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பது நமது கலாச்சாரம். எனவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

இது மத்திய அரசின் கடமையாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதையுமே செய்யவில்லையென்று நாங்கள் கூறவில்லை. கரோனா தொற்றின்போது நாட்டு மக்களுக்கு தேவையான உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியதை நாங்கள் அறிவோம். அதேநேரத்தில், இது தொடர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Read in source website

வாஷிங்டன்: நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்த நிலையில் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.

புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலத்தை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது. எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன்பின், கடந்த மாதம் நிலவுக்கு ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது.

ஆர்டெமிஸ் திட்டத்தை வரலாற்று சாதனை என்று விஞ்ஞானிகள் புகழ்ந்தனர். மேலும், இந்தத் திட்டம் வெற்றிக்கரமாக நிறைவேற்றபட்டால், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் நிலவுக்குச் செல்லலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தற்போது, ஒரு மாதம் ஆன நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 விண்கலம், நிலவுக்கு 130 கிமீ தொலைவிலிருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதுவும் மிக நெருக்கமாக நிலவின் மேற்பரப்பை ஆர்டெமிஸ் 1 எடுத்துள்ள படங்கள் கண்களைப் பறிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

நிலவை புகைப்படம் எடுத்த நிலையில், மீண்டும் பூமி திரும்ப உள்ளது ஆர்டெமிஸ் 1. அதன்படி டிசம்பர் 11-ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 பூமிக்கு திரும்பும் என்று நாசா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் (ORION) என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தில் நாசா ஆர்வம் காட்டி வருகிறது.



Read in source website

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்பீட்டை, கடந்தஅக்டோபர் மாதத்தில் 6.5 சதவீதமாக குறைத்தது. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியது.

இந்நிலையில், தற்போது இந்தியாவின் ஜிடிபி மதிப்பீட்டை 6.9 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

இது குறித்து உலக வங்கி கூறுகையில், “நடப்பு நிதி ஆண்டுஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.3 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வளர்ச்சிஆகும். தற்சமயம் உலக அளவில்பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் இந்த நெருக்கடி மத்தியிலும் மேம்பட்டு பயணிக்கிறது. கொள்கைரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

அதேபோல், வெளிநாடுகளுட னான இந்தியாவின் வர்த்தக் உறவு கடந்த பத்தாண்டுகளில் மேம்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.



Read in source website

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ஒட்டுமொத்தமாக அந்தக் கடனுக்கான விகிதம் தற்போது 6.25 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த ரெப்போ விகித உயர்வு காரணமாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீட்டின் அடிப்படையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் வாக்கில் ரெப்போ விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் அளவில் ரிசர்வ் வங்கி உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 0.50 சதவீதம், ஜூன் மாதத்தில் 0.50 சதவீதம், மே மாத வாக்கில் 0.40 சதவீதம் என அடிப்படை புள்ளிகளை உயர்த்தி இருந்தது ரிசர்வ் வங்கி. அதனால் மே மாதம் 4.40 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதம் இப்போது 6.25 சதவீதத்தை எட்டியுள்ளது.



Read in source website

புதுடெல்லி: ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சமூக தொண்டுக்கான 16 வது பதிப்பு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்தியாவில் சமூகதொண்டு பணிகளை கவுதம் அதானி அதிக அளவில் மேற்கொண்டு வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூனில் தனது 60-வது வயதில் அடியெடுத்து வைத்த கவுதம் அதானி ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார். சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் அதானி பவுண்டேஷன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த 1996-ல்தொடங்கப்பட்ட இந்த பவுண்டேஷன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 37 லட்சம் ஏழை மக்களுக்கு உதவி வருகிறது. கோடீஸ்வர கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடாரும் இடம்பெற்றுள்ளார். இவரது பவுண்டேஷனும் பல்வேறு சமூக நல திட்டங்களுக்காக 1 பில்லியன் டாலர் வரை நன்கொடை அளித்துள்ளது.

நரம்பியல் மற்றும் முதுமை தொடர்பான உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2021 ஏப்ரலில் தொடங்கிய மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தொழிலதிபர் அசோக் சூட்டா ரூ.600 கோடி வழங்குவதாக தெரிவித்தார்.



Read in source website

பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் முக்கிய கவலையாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி கணிப்பு தற்போதைய நிதியாண்டில் 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்.பி.சி) புதன்கிழமை (டிசம்பர் 7) கூடியது. அப்போது, கடன் மற்றும் டெபாசிட் விகிதங்கள் மேலும் அதிகரிப்பதற்கான சமிக்ஞையாக ரெப்போ விகிதம் அல்லது வங்கிகளுக்கு ஆர்பிஐ கடன் வழங்கும் விகிதத்தை உயர்த்தியது.
அந்த வகையில், சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயவியல் கொள்கை(MPC) கூட்டமானது “இருண்ட” உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டிற்கான அதன் வளர்ச்சிக் கணிப்பை 7 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.
மேலும், சில்லறை பணவீக்க முன்னறிவிப்பை 6.7 சதவிகிதமாகத் தக்க வைத்துக் கொண்டது.

ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு: ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதா?

மே 2022 முதல் ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்துவது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட எம்பிசியின் பெரும்பான்மை முடிவாகும்.
இந்தக் கூட்டத்தில், ஐந்து உறுப்பினர்கள் அதிகரிப்பை பரிந்துரைத்தனர்.

ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நிதிச் செலவு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வங்கிகளின் கடன் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனம், வீடு மற்றும் தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐகளும் உயரும்.
வங்கிகளின் கடன் விகிதம் (EBLR) 35 bps ஆக உயரும். ஒரு அடிப்படை புள்ளி ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு – அத்தகைய கடன்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மொத்தக் கடன்களில் 43.6 சதவீதம் இப்போது ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளின் கடன் போர்ட்ஃபோலியோவில் 49.2 சதவீதமாக இருக்கும் நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் விளிம்புச் செலவும் (MCLR) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

எதிர்காலத்தில் வைப்பு விகிதங்களும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, இப்போது ஓராண்டு கால டெபாசிட்டுகளுக்கு 6.10 சதவீத விகிதத்தை வழங்குகிறது.

நாணயக் குழு ஏன் விகிதத்தை உயர்த்தியது?

பணவீக்கத்தை தற்போதைய நிலையில் இருந்து குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பாலிசி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அக்டோபரில் பணவீக்கம் 6.77 சதவீதமாக குறைந்துள்ளது, இது மூன்று மாதங்களில் இல்லாத அளவு ஆகும்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. மத்திய வங்கியின் கவலை என்னவென்றால், பணவீக்கத்தின் உயர்வு.
மேலும், உணவு அல்லாத, பணவீக்கத்தின் எண்ணெய் அல்லாத பகுதி கோடையில் மீண்டும் உயர்ந்தது.

மேலும் உணவு விலை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் குமேலும் உணவு விலை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் பலவீனம், சில்லறை (சிபிஐ) பணவீக்கம் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதியைக் கொண்டிருப்பதால், ரிசர்வ் வங்கியில் பணவீக்கக் கவலைகள் அதிகரிக்கின்றன.

சமீபத்திய சுழற்சிகளில் வட்டி விகிதம் எவ்வாறு நகர்ந்தது?

ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2022 இல் இறுக்கமான சுழற்சியின் தொடக்கத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 225 பிபிஎஸ் மூலம் விகிதங்களை உயர்த்தியுள்ளது.
அதே காலகட்டத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 350 பிபிஎஸ் அதிகரிப்புக்குப் பின்தங்கியுள்ளது. ரெப்போ விகிதத்தில் கடந்த மூன்று உயர்வுகள் ஒவ்வொன்றும் 50 பிபிஎஸ் வரை இருந்துள்ளன.

ரிசர்வ் வங்கியின் விகித உயர்வுகள் நாணயத்தை ஆதரிக்கும் மற்றும் அடிப்படையான பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும். பிப்ரவரி 2023க்குள் மத்திய வங்கி இந்த விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தி 2023ஆம் ஆண்டு முழுவதும் இந்த விகிதத்தை வைத்திருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சில்லறை பணவீக்கம் தணிந்தால், 2023ல் வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைக்கும்.

2022ஆம் ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம்

விகித பரிமாற்றம் எவ்வாறு முன்னேறியுள்ளது?

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மே முதல் அக்டோபர் 2022 வரையிலான காலகட்டத்தில், புதிய மற்றும் நிலுவையில் உள்ள ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் விகிதங்கள் (WALRs) முறையே 117 bps மற்றும் 63 bps அதிகரித்துள்ளது.
டெபாசிட் பக்கத்தில், சராசரி உள்நாட்டு டெபாசிட் விகிதம் அதே காலகட்டத்தில் புதிய மற்றும் நிலுவையில் உள்ள வைப்புகளில் முறையே 150 bps மற்றும் 46 bps அதிகரித்துள்ளது.
“இந்த பரிமாற்ற செயல்முறையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,” என்று தாஸ் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் பணவீக்க கணிப்பு என்ன?

நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ், ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்தில் (+/-2 சதவீதம்) பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகித நிர்ணய குழு 2022-23 நிதியாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) செப்டம்பர் கொள்கையின் போது அறிவிக்கப்பட்ட முந்தைய திட்டத்தில் 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைத்தது.
MPC 2022-23 ஆம் ஆண்டிற்கான பணவீக்கக் கணிப்பை 6.7 சதவீதமாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.



Read in source website

26 வயது பெண்ணின் 33 வார கருவை கலைக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

26 வயது பெண் ஒருவர் தன் வயிற்றில் வளரும் 33 வார கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் நீதிபதி பிரதீபா சிங் செவ்வாய்க்கிழமை (டிச.6) தீர்ப்பளித்தார். தனது 33 பக்க தீர்ப்பில் அவர், “பெற்றோரை பாதிக்கும் மன அதிர்ச்சி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் கருத்தில் கொண்டு, மனுதாரர் கர்ப்பத்தை கலைக்கக் கோரும் போது, கவனமாகவும், நன்கு அறியப்பட்ட முடிவையும் எடுக்கிறார் என்ற உண்மையை நீதிமன்றம் தெளிவாக அளவிட முடிந்தது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இறுதி முடிவு தாயின் விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும், மேலும் பிறக்காத குழந்தைக்கு கண்ணியமான வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகளை அங்கீகரிக்க வேண்டும்,

இது தொடர்பாக திமன்றம் 1971 ஆம் ஆண்டு மருத்துவ கர்ப்பத்தை நிறுத்துதல் (எம்டிபி) சட்டம், 1971 இன் விதிகளை பரிசீலித்தது.
இந்த இரண்டு காரணிகளையும் மனதில் வைத்து, தாயின் தேர்வு முற்றிலும் நேர்மையான முறையில் செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது.

மருத்துவ சான்றுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், ஒரு கண்ணியமான மற்றும் தன்னிறைவான வாழ்க்கையை நடத்தும் குழந்தையின் வாய்ப்புகளில் கணிசமான சந்தேகமும் ஆபத்தும் உள்ளது.
இந்த நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கூறுகிறது” எனத் தீர்ப்பளித்தார்.

பெண்ணின் வயிற்றில் வளரும் கரு மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பெண் நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் நீதிபதி தீர்ப்பில், “கருவின் மருத்துவ நிலை உள்ளிட்ட சில தரமான காரணிகள் இருக்க வேண்டும். அறிவியல் அல்லது மருத்துவச் சொற்களைப் பயன்படுத்தும் போது, அத்தகைய நிலைமைகளின் விளைவு குறித்து “சாதாரண சொற்களில்” விளக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறினார்.



Read in source website

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில், 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

News about Mirabai Chanu, silver medal and World Championship in tamil: 2022 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொலம்பியாவின் பொகோடாவில் நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு களமாடி இருந்தார். தனது முழுத் திறனையும் வெளிப்படுத்திய அவர் மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும், மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில் 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார். அதோடு, அவர் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு முத்தமிட்டுள்ள இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்று அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இந்த சீசன் ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக (ஆன்-ஃபீல்ட் அம்பயர்) பெண் நடுவர்களை களமிறக்கவுள்ளது பிசிசிஐ.

VRINDA RATHI – Janani Narayanan – Gayathri Venugopalan ; Women umpires in Ranji Trophy Tamil News: பொதுவாக, கிரிக்கெட்டில், ஆடவர் போட்டிக்கு கள நடுவர்களாகவும், மூன்றாம் நடுவார்களாகவும் ஆண் நடுவர்களும், மகளிர் போட்டிக்கு பெண் நடுவர்களுமே செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்களுக்கான உள்நாட்டு சர்க்யூட்டில் பெண் நடுவர்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த சீசன் ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக (ஆன்-ஃபீல்ட் அம்பயர்) பெண் நடுவர்களை களமிறக்க உள்ளது.

பல மாநில சங்கங்கள், பெண்கள் கிரிக்கெட்டைத் தவிர, உள்நாட்டில் ஆண்களுக்கான விளையாட்டுகளில் நடுவராக பெண்களை உருவாக்குகின்றன. ஆனால் இதுவரை, ஆண்கள் சீனியர் போட்டிகளில் ஆன்-பீல்ட் அம்பயர்களாக பணியாற்றும் வாய்ப்பை பிசிசிஐ பெண்களுக்கு வழங்கவில்லை. இந்த நிலையில், ரஞ்சி டிராபி போன்ற ஒரு நீண்ட தொடரில் பெண் நடுவர்களை நியமிக்கும் ஒரு புதிய முற்சியை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.

“முன்னோக்கிச் செல்லும்போது, ​​​​பெண்கள் நடுவர்கள் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவார்கள். இது ஒரு ஆரம்பம்தான். ஆண்களுக்கான ஆட்டத்திலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

விருந்தா ரதி – ஜனனி நாராயணன் – காயத்திரி வேணுகோபாலன்: பெண் நடுவர்கள் பின்னணி

ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக களமிறங்க உள்ள பெண் நடுவர்கள் விருந்தா ரதி, ஜனனி நாராயணன் மற்றும் காயத்திரி வேணுகோபாலன் ஆகியோர் ஆவார். இந்த மூன்று பெண் நடுவர்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 தொடரில் நடுவர்களாக செயல்பட இருக்கிறார்கள். ரஞ்சி கோப்பை வருகிற 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அவர்கள் முதல் கட்டத்தை தவறவிட்ட பிறகு, போட்டியின் 2வது சுற்றில் இருந்து நடுவர்களாக தொடங்குவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருந்தா ரதி

மும்பையைச் சேர்ந்த விருந்தா ரதி (32), நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மும்பை பல்கலைக்கழக அணியில் விளையாடியவர். மும்பையில் உள்ளூர் போட்டிகளில் வழக்கமான ஸ்கோரராக இருந்தார், மேலும் 2010ல், பிசிசிஐ நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர். 2013 ஆம் ஆண்டில், மகளிர் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பிசிசிஐ ஸ்கோரராக இருந்தார். அப்போது நியூசிலாந்து சர்வதேச நடுவர் கேத்தி கிராஸை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரை கள நடுவாராக மைதானத்திற்குள் அடியெடுத்து வைக்க தூண்டியுள்ளது. தொடர்ந்து அவர் மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்திய தேர்விலும், பிசிசிஐ நடத்திய தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.

ஜனனி நாராயணன்

36 வயதான ஜனனி நாராயணன், சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் கிரிக்கெட்டை ஒருபோதும் தீவிரமான அளவில் விளையாடியதில்லை. ஆனால், அதன் மீது எப்போதும் ஈர்ப்பை கொண்டிருந்தார். அவர் 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை (டிஎன்சிஏ) அணுகி, நடுவராக ஆவதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்டு உள்ளூர் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டில், டிஎன்சிஏ அவர்களின் விதிகள் மற்றும் கருத்துக்களை மாற்றியது. மேலும் அவருக்கு விண்ணப்பம் வழங்கியது. 2018ல், பிசிசிஐயின் லெவல் 2 நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜனனி நாராயணன், பிறகு தனது ஐடி வேலையை விட்டு விலக முடிவு செய்தார்.

காயத்திரி வேணுகோபாலன்

டெல்லியைச் சேர்ந்த காயத்திரி வேணுகோபாலன், 43, ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பினார். ஆனால், அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் அவரது கனவை சிதைத்தது. மேலும், தன்னை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது. எனவே, அவர் தனது கார்ப்பரேட் வாழ்க்கையை கைவிட்டார். பிசிசிஐ நடுவர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் 2019ல் நடுவராகப் பதிவு செய்யப்பட்டார்.

23 வயதுக்குட்பட்டர்களுக்கான சி.கே.நாயுடு டிராபி விளையாட்டுகளில் ரதி மற்றும் ஜனனி நாராயணன் நடுவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது ரஞ்சி கோப்பையில் களமாட உள்ளார்கள்.

வழக்கமாக, இந்திய வாரிய-ஒப்பந்த நடுவர்கள் ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சர்க்யூட்டில் உள்ள நடுவர்கள் சரித்திரம் படைக்கவிருக்கும் இந்த மூன்று பெண்களைப் பற்றியும் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆண்கள் நிறைந்த ஒரு துறையில் பெண்களும் அடியெடுத்து வைக்க பிசிசிஐ-யின் இந்த முயற்சி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.



Read in source website

UPI மூலம் பணம் செலுத்த, தனிநபர்கள் வங்கிக் கணக்கு மற்றும் பெரும்பாலும் செயல்படும் டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டும், ஆனால் இ-ரூபிக்கு அப்படி இல்லை.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிசம்பர் 1 ஆம் தேதி மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அல்லது இ-ரூபியில் அதன் முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மும்பை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

1) வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை

UPI மூலம் பணம் செலுத்த, தனிநபர்கள் வங்கிக் கணக்கையும், அடிக்கடி செயல்படும் டெபிட் கார்டையும் வைத்திருக்க வேண்டும், ஆனால் இ-ரூபி வாலட்டை அணுக, அத்தகைய வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை

2) சுயமாக பராமரிக்க முடியும்

டிஜிட்டல் ரூபாயில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பணப் பரிவர்த்தனைகளைப் போன்றே வழங்கக்கூடும். மேலும், டிஜிட்டல் ரூபாய் மூலம் செய்யப்படும் குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டாம் என்று கடன் வழங்குபவர்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய வங்கி ஆதரவு டிஜிட்டல் நாணய சில்லறை வாடிக்கையாளர் பணப்பைக்கு மாற்றப்பட்டவுடன், வங்கிகள் இந்த பரிவர்த்தனைகளை கண்காணிக்கவோ அல்லது புகாரளிக்கவோ மாட்டார்கள் என்று வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது, 50,000 ரூபாய்க்கு அதிகமான பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணை வெளியிட வேண்டும். டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளுக்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

3) மெய்நிகர் பணம் போதும்

UPI பரிவர்த்தனைகள் உடல் நாணயத்தால் ஆதரிக்கப்படுகின்றன. பயனரின் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், பணம் செலுத்தப்படாது. எவ்வாறாயினும், இ-ரூபாய் நாணயம்/பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம்.

4) ஒரே கணக்கு

வங்கிகள் மற்றும் தளங்களைப் பொறுத்து, UPI கணக்கு மாறும். ஒரே வங்கிக் கணக்குடன் இரண்டு வெவ்வேறு தளங்களை இணைப்பது கூட வெவ்வேறு UPI ஐடியை உருவாக்கலாம், ஆனால் e-Rupi க்கு அப்படி இருக்காது.

5) ஸ்மார்ட்போன் இல்லாமல் பரிவர்த்தனை

இ-ரூபாய் பயன்படுத்துவதன் மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால், இது ஃபீச்சர் ஃபோன்களில் மேற்கொள்ளக்கூடிய ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும்.
மேலும், மின்-ரூபாய் வவுச்சர் பயனாளியுடன் SMS அல்லது QR குறியீடு மூலம் பகிரப்படும் என்பதால். இது கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் இணைய இணைப்பு சிக்கலாக இருக்கும் இடங்களிலும் இதைப் பயன்படுத்த உதவும்.
இது எஸ்எம்எஸ் வடிவில் இருந்தால், ஸ்மார்ட்போன் இல்லாத எவரும் அதைப் பயன்படுத்தலாம்.



Read in source website

 இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஒரே நாளில் விடுதலை பெற்ற அண்டை நாடுகள். இந்தியாவில் ராணுவ தலைமைத் தளபதியின் நியமனம் என்பது பெரும்பாலும் மக்களின் கவனத்துக்குக்கூட வராத நடைமுறை. பாகிஸ்தானில் அப்படியல்ல. ராணுவ தலைமைத் தளபதியின் நியமனம் என்பது பிரதமர் நியமனத்தைவிட முக்கியத்துவம் பெறும் செய்தி. இந்தியாவில் ராணுவ தலைமைத் தளபதியை பிரதமர் நியமிக்கிறார் என்றால், பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதிதான் பிரதமரையே நியமிக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அங்கு ராணுவ தளபதி அதிகாரம் பெற்றவர்.
 ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா தனது ஆறாண்டு பதவிக் காலத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று ஆண்டுகால நீட்டிப்பு கேட்டிருக்கலாம்; அவர் கேட்கவில்லை. பதவியிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்தார். ஜெனரல் பாஜ்வாவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தின் 17-ஆவது தலைமைத் தளபதியாக அவரது நம்பிக்கைக்குரியவரான லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 முனீரின் நியமனத்துக்குப் பின்னால், ஏராளமான அரசியல் நாடகங்கள் நடந்தேறின. ஜெனரல் பாஜ்வாவால் 2018 அக்டோபர் மாதம் ஐ.எஸ்.ஐ. என்கிற பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட சையது அசிம் முனீர், அன்றைய பிரதமர் இம்ரான் கானின் வற்புறுத்தலால் எட்டே மாதத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபியின் ஊழல்கள் குறித்து முனீர் விசாரிக்கத் தொடங்கியதுதான் பதவி மாற்றத்துக்கான காரணம். அவருக்கு பதிலாக இம்ரான் கானின் நம்பிக்கைக்குரிய லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் நியமிக்கப்பட்டார்.
 அதிபர் ஆரீஃப் அல்வி, இம்ரான் கானால் நியமிக்கப்பட்ட அவரது ஆதரவாளர். முனீரின் பதவிக்காலம், ஜெனரல் பாஜ்வாவின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு நாள்கள் முன்பாகவே முடிவடையும் என்பதால், தலைமைத் தளபதி நியமனத்தை தாமதிக்க நினைத்தார் அதிபர்.
 பிரதமர் ஷெரீஃப் தலைமையிலான அரசுத்தரப்பு விழித்துக் கொண்டது. முனீரை ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாக நியமிக்க முடிவு செய்தது. அதற்கு அல்வியின் ஒப்புதல் தேவையில்லை. வேறு வழியில்லாமல், பணிமூப்பு அடிப்படையில் லெப்டினன்ட் ஜெனரல் முனீரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார் அல்வி.
 திருக்குரானை மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர் முன்பு பாகிஸ்தான் ஒற்றர்படைத் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர். அவருக்கு நீண்ட ராணுவ அனுபவம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஷெரீஃப் அரசின் முடிவுக்குப் பின்னால் பணிமூப்பு அடிப்படை இருந்ததால்தான், இம்ரான் கான் உள்பட எந்த அரசியல் தரப்பினராலும் அரசின் முடிவை எதிர்க்க முடியவில்லை.
 ஜெனரல் பாஜ்வாவின் தலைமையில், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டு அரசியலில் முக்கியப் பங்கு வகித்தது. 2018-இல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதவியிலிருந்து அகற்றியதும், பாஜ்வாவின் விருப்பப்படிதான் என்பது உலகறிந்த ரகசியம். தன்னை ஆட்சியிலிருந்து அகற்றியதும், தன்னைக் கொல்ல சதி செய்ததும் ஜெனரல் பாஜ்வாவும், மூத்த ராணுவ அதிகாரிகளும்தான் என்று இம்ரான் கான் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
 இது புதிதொன்றும் அல்ல. தனக்கு எதிராக சதி செய்து, நீதித்துறையை பயன்படுத்தி தன்னை பதவியிலிருந்து அகற்றி இம்ரான் கானை பதவியில் அமர்த்தியது ஜெனரல் பாஜ்வா என்று முந்தைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு முன்னால் இருந்த எல்லா பிரதமர்களும் ராணுவத்தின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
 இந்தப் பின்னணியில்தான் இப்போது லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் பாகிஸ்தானின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். 2019 புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த அசிம் முனீர் இப்போது தலைமைத் தளபதியாகியிருக்கிறார். பொதுவெளியில் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் அதிகாரிகளில் ஒருவரான முனீரின் கண்ணோட்டம் குறித்து யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
 பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, ஜெனரல் பாஜ்வாவின் இந்தியாவுடனான மோதல்கள் இல்லாத அணுகுமுறை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவு, அரசியல் நிலைப்பாடு, நிர்வாகத் தலையீடு போன்ற பிரச்னைகளில் புதிய ராணுவ தலைமைத் தளபதியின் பார்வை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இம்ரான் கானின் கட்சி ஆட்சியைப் பிடிக்குமானால், அவருக்கும், ராணுவத்தின் தலைமை தளபதி முனீருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 தேர்தல் நடப்பதும், அடுத்த ஆட்சி அமைவதும் லெப்டினன்ட் முனீரின் கையில் என்பது மட்டும் இப்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த உண்மை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எப்போதுமே ராணுவம்தான் அதிகார மையம். லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் அதன் தலைமைத் தளபதி. வருங்கால பாகிஸ்தான் அரசியலை ஜெனரல் பாஜ்வாபோல அவர் "இயக்குவாரா', இல்லை முந்தைய ராணுவ தளபதிகளான அயூப் கான், ஜியா உல் ஹக், முஷாரஃப் வரிசையில் தானே "நடத்துவாரா' என்பதை இப்போதே சொல்ல முடியாது!



Read in source website

தேசிய இனக் குழுக்களுக்கு மொழியும், நிலமும், பண்பாடும், வரலாறும் மட்டுமல்ல, சில சிறப்புப் பண்புகளும், அவர்களுக்கே உரித்தான சிறப்புப் பங்களிப்புக்களும் இருப்பதுண்டு.
 பசிபிக் பெருங்கடலிலுள்ள ஹவாய் தீவுகளில் வாழும் பூர்வகுடி மக்கள் "அலோஹா' என்றொரு கருத்துருவை முன்னிறுத்துகின்றனர். "அலோஹா என்பது ஒரு சொல்லல்ல, அஃதோர் உணர்வு. அதன் அர்த்தத்தை அகராதியில் காண இயலாது; மனித உள்ளங்களில் முகிழ்த்திடும் இயல்பு அது' என்று விவரிக்கிறார்கள் அவர்கள்.
 ஹவாய் பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடிய ஹவ்னானி கே டிராஸ்க், தன்னுடைய நூல் ஒன்றில் "ஹவாய் பூர்வகுடியினருக்கு இடையேயான சமூகத் தொடர்புகள் அலோஹா வழியே நடக்கின்றன. அது அன்பு என்று மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டாலும், அத்துடன் குடும்பம், பாரம்பரியம் எனும் ஓர் ஆழமான ஹவாய் அம்சமும் இரண்டறக் கலந்திருக்கிறது.
 ஹவாய் மக்கள் தங்கள் உறவுகளோடே பெரிதும் சார்ந்திருப்பதால், அவர்கள் மீதும், அத்தனை பேரையும் ஒன்றாக இணைக்கும் தங்கள் நிலத்தின் மீதும் அலோஹாவை உணர்கின்றனர். ஒருவரின் குடும்பத்தைச் சாராத ஒருவர் மீதோ, ஒன்றின் மீதோ அலோஹாவை உணரவும் முடியாது, கடைப்பிடிக்கவும் முடியாது. சிறப்பு அர்த்தம் கொண்ட "அலோஹா'தான் ஹவாய் பூர்வகுடிகள் பேசும் மொழியின் மூலாதாரமாகவும் விளங்குகிறது.
 ஹவாய் மக்களின் அலோஹாவும், தமிழர்கள் நம்முடைய அன்பும் ஏறத்தாழ ஒன்றானவை. அலோஹா போலவே அன்பும் ஒரு வாழ்வியல் கோட்பாடு. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நறுக்கென்று சொல்கிறார்:
 தமிழன் என்றோர் இனமுண்டு
 தனியே அவர்க்கொரு குணமுண்டு
 அமிழ்தம் அவனுடை மொழியாகும்
 அன்பே அவனுடை வழியாகும்.
 ஆம், அன்பு தமிழின், தமிழ்நாட்டின், தமிழினத்தின் கருத்தியல், தத்துவம், சிறப்புப் பங்களிப்பு.
 அன்புடைமை பற்றி ஓர் அதிகாரமேப் பாடியிருக்கும் திருவள்ளுவர், "அன்பின் வழியது உயிர்நிலை' என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார். "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்று வினவும் வள்ளுவர்,
 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து
 இன்புற்றார் எய்தும் சிறப்பு
 என்கிறார்.
 உலகத்தில் இன்பமுற்று வாழ்கின்றவர்கள் அடையும் சிறப்பு என்பது அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயனே என்கிறார்.
 அன்பு, கொடை, மானம், வீரம் போன்ற அம்சங்கள் பொருந்தியதே தமிழரின் வாழ்வு. ஆனால் அனைத்திற்கும் அன்பே அடிப்படை. கொடைக்கு ஆதாரம் அன்புதான். சிலர் வீரத்தை வன்முறை தோய்ந்ததாக விவரித்தாலும், உண்மையில் அறத்தின்பாலும், தம் மக்களின்பாலும் எழும் அன்பினால் உருவாவதுதான் அந்த வீரம்.
 அன்பிலிருந்து முகிழ்ப்பதுவே வீரம் என்று வள்ளுவரும் தெளிவுபடுத்துகிறார்.
 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
 மறத்திற்கும் அஃதே துணை.
 அதாவது அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுகிறவர்கள் அறியாதவர்கள்; வீரத்துக்கும் அதுவே துணையாக நிற்கிறது என்கிறார். "அன்பளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்து விட்டாய்' என்று பாடும் பாரதியும் இவ்விரண்டையும் இணைத்தே பார்க்கிறார்.
 அன்பு, இரக்கம், புலால் உண்ணாமை, கொல்லாமை போன்ற கொள்கைகளைக் கொண்ட, இறையருள் தவம்புரிந்த, அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்களும் அன்பை அமோகமாகப் பாடியிருக்கிறார்கள்.
 அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
 அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
 அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
 அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
 என்று பாடுகிறார் திருமூலர்.
 அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள்; இவையிரண்டும் ஒன்றே என்று உணரும்போது இறைமைப்பேறு வாய்க்கும் என்கிறார் அவர்.
 தாயை அன்பின் அளவுகோலாகப் பார்க்கும் இடைக்காட்டுச் சித்தர், இம்மையையும் மறுமையையும் அன்பால் இணைக்கிறார்:
 தாயினும் அன்பனன்றோ பசுவே
 சத்திக்குள் ளானவன்தான்
 நேயம் உடையவர்பால் பசுவே
 நீங்கா திருப்பானே. (41)
 ஐயன் திருப்பாதம் பசுவே
 அன்புற்றுநீ பணிந்தால்
 வெய்ய வினைகளெல்லாம் பசுவே
 விட்டொடுங் கண்டாயே. (43)
 பாம்பாட்டிச் சித்தரோ அகத்தில் எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் முக்தி எய்த முடியாது என்று முடிக்கிறார்:
 எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
 எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
 கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
 கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. (89)
 குதம்பைச் சித்தர் இன்னும் ஒரு படி மேலே போய், இறைவன் மீது அன்போடு கலந்த பக்தி இல்லாதவர்களுக்கு நரகமும், துன்பமுமே வாய்க்கும் என்கிறார்:
 அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
 துன்பாம் நரகமடி குதம்பாய்
 துன்பாம் நரகமடி? (92)
 இப்படியாக பொருளும், அருளும் நிறைய இருந்தாலும், அன்பு இல்லாதவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை என்று கொள்கிறவர்கள் நாம்.
 அன்பு என்பது மோகம், தாபம், தாகம், மயக்கம், தாக்கம் எனும் கடைநிலையிலிருந்து, காதல், காமம், கலவி என்று இடைநிலைக்கு வளர்ந்து, நேசம், பாசம், நட்பு எனச் சிறந்து, தொண்டு, சேவை, வீரம், ஈகம் என்று உயர்நிலை அடைகிறது.
 ஆம், அன்பு வெறும் உணர்வு மட்டுமல்ல, அது தமிழர் வாழ்க்கை முறை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதன் அடிப்படை அன்பு. "தந்தை மகற்காற்றும் நன்றி', "மகன் தந்தைக்காற்றும் உதவி', "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்' போன்றவற்றின் அடித்தளமும் அன்புதான். முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் பெருங்கருணை, பிள்ளையைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழ மன்னனின் நீதி பரிபாலனம், எதிரி மன்னனிடம் தனியாக தூதுபோன அவ்வையின் வீரம், காலம்தாழ்த்தி அலட்சியமாக தண்ணீர் கொடுத்ததை ஏற்காமல் இறந்துபோன கணைக்கால் இரும்பொறையின் மானம் என எல்லாவற்றுக்கும் பின்புலம் அன்புதான்.
 மார்கரெட் டிராவிக் எனும் அமெரிக்க அறிஞர் "தமிழ்க் குடும்பத்தின் அன்பு குறித்த குறிப்புகள்' எனும் நூலை 1992-ஆம் ஆண்டு வெளியிட்டார். மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தோடு ஒன்றாய் வாழ்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்நூலை எழுதியுள்ளார்.
 அந்நூலில் அவர், "அக்குடும்பத்தார் ஏதோ ஒரு வகையில் அன்பால் சுற்றிச் சூழப்பட்டிருந்தார்கள். அன்புதான் ஆகச்சிறந்தது என்று அறிவித்துக் கொண்டிருந்த ஒரு கலாசாரத்தால் அவர்கள் மனிதர்களாக ஆக்கப்பட்டவர்கள். ஆனால் அன்பு என்பது அவர்களுக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? அன்பு அவர்கள் மனங்களில் இருந்தது. அதை நம்பத்தகுந்த வழியில் எப்படி எழுத்தில் வடிப்பது?'
 மார்கரெட் மேலும் தொடர்ந்து ""தமிழ்நாட்டில் "நான் ஓர் அன்பான மனிதன்' என்று யாரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. காரணம் அன்பானவர் அடக்கமானவராகவும் இருப்பது அவசியம். அன்பை ஒருவரால் தம் செயல்களில்தான் காட்ட முடியும். அன்றாட வாழ்வில் அன்பு பற்றி தமிழ் மக்கள் பேசிக் கொண்டிருப்பதில்லை.
 இரவு உணவுக்கு என்ன சமைக்கிறோம், குழந்தைகளில் ஒருவர் அன்றைய நாளில் என்ன செய்தார், இப்போதே நிலத்தை உழ வேண்டுமா என்பது போன்றுதான் பேசிக் கொள்கிறார்கள். எப்போதாவது அன்பு பற்றி மறைமுகமாக ஏதாவது பேசிக் கொள்கிறார்கள்.
 அதே போல, அன்பான வார்த்தைகளையோ, அன்பு குறித்த வார்த்தைகளையோ எப்போதாவதுதான் பேசுகிறார்கள். ஆனால் உண்பது போன்ற கலாசார நிகழ்வுகளில் பொதிந்திருப்பதுபோல, அன்பானச் செயல்கள் பரவலாகக் காணப்படுகின்றன' என்று எழுதுகிறார்.
 கடல்சார் மக்களாயிருந்து, கப்பல் கட்டுதல், கடல்வழி வாணிபம் செய்தல், தூரதேசப் பயணம் புரிதல் என்றெல்லாம் வாழ்ந்த நம்மில் பலருக்கு இன்று நீச்சலடிக்கக்கூடத் தெரியாதிருப்பது போல, அன்புவழி மக்களாகிய நாம், நம்மிடையேக்கூட அன்புசெலுத்தும் வழிவகை அறியாது திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறோம். நம்மை வெறுப்பு, கோபம், வன்மம், வன்முறை என்று எதிர்வழியில் இட்டுச்செல்ல ஏராளமானோர் முயல்கின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையும், நம் ஒவ்வொருவரின் மனப்புண்களும் அவர்களுக்குச் சாதகமாக அமைகின்றன. இப்படியாக இனஅழிப்புக்கும் இனவெறிக்கும் இடையேயான கயிறுநடை பயிலும் இனமாக நாம் பரிதவிக்கிறோம்.
 அநீதிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடும்போது, கோபம் கொள்வது, கொந்தளிப்பது இயல்புதான். அது களத்தில் தேவையானதும் கூட. ஆனால் வன்முறையைத் தூண்டுவது, தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு பிறரை ஆபத்துக்குள் தள்ளிவிடுவது, வாய்ச்சொல் வீரம் பேசி உடன்வருவோரை வழிமாற்றி விடுவதெல்லாம் வெறுமனே வெப்பம் கக்குகிற அழிவுக் கோபம். சிந்திக்கத்தூண்டும், செம்மையாகச் செயல்படவைக்கும், அடிவயிற்றுத் தீயை அணையாதுக் காக்கும் கோபம்தான் வெளிச்சம் உமிழும் அறிவுக் கோபம்.
 பெரும் சமூகப் போராளிகள், விடுதலை வீரர்கள், மக்கள் தலைவர்கள் எல்லோருமே வெளிச்சம் உமிழும் அறிவுக் கோபத்தைத்தான் கைக்கொண்டிருக்கின்றனர். ஹவ்னானி கே டிராஸ்க் தன்னுடைய 1985-ஆம் ஆண்டு பேச்சு ஒன்றில் குறிப்பிட்டது போல, கலாசாரம் கொண்டிருக்கும் மக்கள் அரசியல்மயமாக்கப்பட வேண்டும். நமது எதிர்ப்பரசியலின், கோபத்தின், வசீகரத்தின் ஈரல்குலை நமது கலாசாரமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இருக்கிறது கலாசாரம். அப்படியானால் மார்கரெட் டிராவிக் விளக்கிச் சொல்வது போல, தமிழ் மக்களின் அன்பியல்பின் பின்புலத்தில் அறம்சார்ந்த அரசியல் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்க முடியும்.
 ஆகவேதான் பெருங்கவிஞர் பாரதியார் இப்படிப் பாடுகிறார்:
 அன்பென்று கொட்டு முரசே-அதில்
 ஆக்கமுண் டாமென்று கொட்டு;
 அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
 அத்தனை பேரும் நிகராம்;
 அன்பென்று கொட்டு முரசே!-அதில்
 யார்க்கும் விடுதலை உண்டு;
 நமது கலாசாரக் கருத்துரு அன்புதான். அன்பு வன்முறையற்றது, உரிமைகள் போற்றுவது, தகராறுகள் தீர்ப்பது, சமாதானம் உருவாக்குவது, வளங்களைக் காப்பது, வாழ்கையை வளர்ப்பது, வருங்காலத்தைத் தகவமைப்பது. அன்புதான் தமிழம். அத்துடன் அறம், அழகு, அறிவு கலக்கும்போது, நாம் உய்வடைவதற்கான ஓர் ஒப்பற்ற வழி துலங்கும்.
 
 கட்டுரையாளர்:
 தலைமைப் பணியாளர்
 பச்சைத் தமிழகம் கட்சி.
 



Read in source website

‘குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு’, ‘கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் மீட்பு’ எனச் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. கொடுமையான சூழலிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் எனும் நிம்மதியுடன் அந்தச் செய்திகளைக் கடந்துவிடுகிறோம். ஆனால், திரைவிழும் முன்பு அனைத்தும் சுபமாகிவிடும் என நம்பிவிட முடியாது. மீட்கப்பட்டவர்கள் - குறிப்பாகக் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்வது மிகமிக அவசியம்.

தமிழகத்தில் 2020ஐ ஒப்பிட, கடந்த ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% உயர்ந்திருப்பதாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார அமைப்பு (CACL) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.



Read in source website

வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மொழிக்கும் தனது இருப்பைத் தக்கவைக்கக் கலைக்களஞ்சியம் என்பது இன்றியமையாதது. அவ்வகையில், தமிழுக்காகப் பெரியசாமித் தூரன் தலைமையில் 1954இல் வெளிவந்த ‘தமிழ்க் கலைக்களஞ்சியம்’ ஒரு மாபெரும் படைப்பாகும். அதன் பின்னர், அவ்வப்போது சில துறை சார்ந்த களஞ்சியங்கள் வெளிவந்திருந்தாலும், பெயர் சொல்லும் வகையில் அவை இல்லை.

கடல் நீரில் கால் நனைக்க முடியாமல் கண் கசியும் சக மனிதர்களுக்கெல்லாம் எப்படித் தொழில்நுட்பத்தின் உதவியால் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைந்ததோ, அதுபோல இணையம் என்ற தொழில்நுட்பம் அமைத்துக் கொடுத்த பாதைதான் விக்கிப்பீடியா.

உலக மொழிகள் அனைத்துக்கும் அந்தந்த மொழியினரே கலைக்களஞ்சியங்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை விக்கிப்பீடியா ஏற்படுத்தித் தருகிறது. இதை நிர்வகிப்பது யார்? அரசா, அமைப்பா என்றால், இரண்டும் இல்லை. காரணம், உலகின் எந்த மொழியையும் அரசோ அமைப்போ உருவாக்குவதில்லை. மக்களே மக்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் மக்கள் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியாவாகும். இதனால், எந்த அரசுக்கோ அமைப்புக்கோ சார்புநிலையிலோ கட்டுப்பட்ட நிலையிலோ இது இருப்பதில்லை. உள்ளதை உள்ளபடி எழுதிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது விக்கிப்பீடியா.

தமிழும் விக்கிப்பீடியாவும்: தற்போதைக்கு உலக அளவில் 318 மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டுள்ளது. ‘அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் பாரதியார் வாக்கின்படி, இணையத்தில் அந்தந்த மொழியினரின் முழுத் தன்னார்வ அறிவுப்பகிர்வின் அடிப்படையில் இவை உருவாக்கப்படுகின்றன. அரசியல் சண்டை, ரசிகர் சண்டை, வகுப்புவாதச் சண்டையிட்டு முட்டிக்கொள்ளும் இணையவாசிகளிடையே ஆக்கபூர்வமாகத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவோரும் உள்ளனர் என்பதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவே சான்று.

ஆம், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தமிழ்க் கட்டுரைகளைக் கடந்து புதிய மைல்கல்லைத் தமிழ் விக்கிப்பீடியா இப்போது எட்டியுள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்து அச்சு நூலாக உருவாக்கவும் அதை மேம்படுத்தவும் சாத்தியமில்லாத நிலையில்தான், தமிழின் தற்போதைய மாபெரும் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளுள் மூன்றாவது இடத்திலும், உலக மொழிகளுள் அறுபத்து ஒன்றாம் இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.

இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியில் 1.54 லட்சம் கட்டுரைகள் இருக்கும்போது தமிழ் மொழியில் 1.5 லட்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் 4.12 கோடி சொற்கள் உள்ளன. சுமார் 400 தொடர் பங்களிப்பாளர்கள் உழைத்திருக்கின்றனர். சுமார் 36 லட்சம் முறை தமிழ் விக்கிப்பீடியா திருத்தப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா என்னும் தளத்தை 2001இல் ஜிம்மி வேல்ஸும் லாரி சாங்கரும் இணைந்து உருவாக்கினார்கள். அதில் 2003 செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியா பக்கம் பெயர் அறியாத ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், இலங்கையைச் சேர்ந்த இ.மயூரநாதன் உட்படப் பலரால் வளர்த்தெடுக்கப்பட்டு, இரண்டாண்டுகளில் ஆயிரம் கட்டுரைகளை அடைந்தது. 2017 மே 8 அன்று ஒரு லட்சம் கட்டுரைகளாக விரிவடைந்து, இன்று 1.5 லட்சம் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இதில் வரலாறு, கலை, அறிவியல், பொது அறிவு என இல்லாத துறைகளே இல்லை எனலாம். தமிழகத்தின் பல கல்லூரிகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா பயிற்சி வகுப்புகளால் விக்கிப்பீடியா, அதன் துணைத் திட்டங்களில் கணிசமான மாணவர்கள் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள். இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் கூடுதலாக ஒவ்வொரு செய்தியைச் சேர்த்து மேம்படுத்தும் பல ஆசிரியர்களும் உள்ளனர். எந்தவொரு பிழையையும் சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளும் வசதியை இத்தளம் கொண்டுள்ளதால், உயிரோட்டமான ஒரு கலைக்களஞ்சியமாக இது உள்ளது.

இயங்குமுறையும் தாக்கமும்: இணையத்துக்கென்றே இருக்கக்கூடிய தன்மையான பல்லூடக வடிவு, தேடல் வசதி, வகைப்பாடு ஆகியவற்றைத் தாண்டி யாரும் எழுதக்கூடிய வகையில் இருப்பதே இதன் சிறப்பு. அதற்காக விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், அவர்களில் நிபுணர்கள் என எவருமில்லை என்கிற கூற்று மேம்போக்கானது. அனைவராலும் வளர்த்தெடுக்கக்கூடிய தன்மையைத்தான் கொண்டுள்ளதே அன்றி, தான்தோன்றித் தனமானதல்ல விக்கிப்பீடியா.

விரிவான கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் கொண்டு மேற்கோள்கள், ஆதாரங்கள் அடிப்படையில்ஒவ்வொரு நொடியும் பிழைகள் களையப்பட்டு, குறிப்பிடத்தக்க தன்மையற்ற கட்டுரைகள் நீக்கப்பட்டே வருகின்றன. முறையான உரையாடல்களும் நீண்ட மீளாய்வுகளும் இதன் தரத்தை மேம்படுத்த நடைபெற்றுவருகின்றன. அவதூறுகளும் தாக்குதல்களும் நடைபெறாமல் இருக்க உலக அளவில் கண்காணிப்புக் குழுவும் உள்ளது.

நூறு நிபுணர்களால் உருவாக்கக்கூடிய ஒரு கலைக்களஞ்சியம் சென்றடையக்கூடிய கரங்களைவிட, முகமறியா இணையவாசிகளால் உருவாகும் இக்களஞ்சியம் சென்றடையக்கூடிய கரங்கள் நிச்சயம் பல மடங்காகும். மேலும், நிபுணர்களால் உருவாக்கப்படும் ‘தமிழ்.விக்கி’ உட்பட பல களஞ்சியங்களும் இந்த விக்கிப்பீடியப் படைப்புகளைப் பெரிதும் பயன்படுத்துகின்றன என்பது தன்னார்வலர்களுக்குக் கிடைத்த வெற்றிஆகும்.

2010இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கெனத் தனிப் போட்டிகள் நடத்தப்பட்டு, இக்கூட்டுழைப்பைத் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்தது. 2016இல் தமிழக அரசின் சில துறைகளின் தரவுகள் பொதுவுரிமையில் அளிக்கப்பட்டு, அவை விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாகவும் ஆக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு கூகுள் உதவியுடன் இந்திய அளவில் நடந்த வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் கூட்டுழைப்பாகத் தமிழ் விக்கிப்பீடியா வெற்றி பெற்றுப் பெருமை சேர்த்தது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 1.5 லட்சம் கட்டுரைகள் நிறைந்து, இரண்டு லட்சம் கட்டுரைகளை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள நகர்வு என்பது 20 ஆண்டு கால முயற்சி மட்டுமல்ல, 2,000 ஆண்டு கால இலக்கியத் தொடர்ச்சியுமாகும். - நீச்சல்காரன் தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு: neechalkaran@gmail.com



Read in source website

கடந்த இரண்டு மாதங்களில் அமேசான், மெட்டா, இன்டெல், டிவிட்டர் உள்ளிட்ட பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. உலகளாவிய வேலைவாய்ப்பு - பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை 60,000ஐத் தாண்டிவிட்டது. இத்தகைய அபரிமிதப் பணிநீக்கங்கள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளில், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

பணிநீக்கங்கள் ஏன் அதிகரித்துள்ளன? உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியம் என்பது வருங்கால நெருக்கடிகளை உணர்த்தும் ஓர் அபாய அறிகுறியாகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பணவீக்கம் அதிகரித்துவருகிறது. மத்திய வங்கிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வட்டி விகிதங்களை உயர்த்திவருகின்றன. இதன் காரணமாக, கடன் வாங்குவதற்கும் நுகர்வுக்குமான செலவு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் வேலைகளையும் பாதிப்பதிலேயே சென்று முடியும்.



Read in source website

வாசிப்பு எல்லா நிலைகளிலும் வடிவம் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில், அரசியல் முதல் பண்பாடுவரை சுவரொட்டிகள்வழி வாசித்துவிட முடியும். ஒவ்வொரு சாதிக்குமான பண்பாட்டை, மற்ற சாதிகளுடனான நுணுக்கமான வேறுபாட்டைத் திருமண அழைப்பிதழ்களில் வாசிக்க முடியும்.

ஒரு நூற்றாண்டு காலத் திருமண அழைப்பிதழ்களின் உள்ளடக்கங்களைக் கொண்டு காத்திரமான சமூக வரலாற்றை எழுதிவிட முடியும். மத நிறுவனங்களின் துண்டுப் பிரசுரங்களில் தனித்த ஒரு நடை இருந்தது; இடதுசாரி இயக்கங்களின் துண்டுப் பிரசுரங்கள் உலக அரசியல் குறித்த சாமானிய மக்களின் பார்வையை வளர்த்தன. அச்சுத் துறையின் அதீத வளர்ச்சியால், பத்திரிகைகள் ஏராளமாக வெளிவரத் தொடங்கின.



Read in source website