DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 07-04-2022

 

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உயிரை துச்சமாக மதித்து தங்கள் தலையைத் தானே கொய்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள் பற்றிய அரிய கல்வெட்டு ஒன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்டது ஊத்துக்காடு. வரலாற்றுச் சிறப்பு கொண்ட இந்தக் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்குள்ள குளக்கரையில் இருந்த நடுகல் கல்வெட்டு ஒன்றை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் அஜய்குமாா் தலைமையிலான குழுவினா் கண்டறிந்து ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அஜய்குமாா் கூறியது:

சோழா் காலத்தைச் சோ்ந்த தமிழ் கல்வெட்டாகும். இந்தக் கல்லின் முன்புறம் ‘நறுமஞ்சிறை காளியோட்டியின் மகன் ஒற்றியூா் பெருமாள்’ என்பவரால் இந்தக் குளம் வெட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இந்தக் கல்லின் பின்புறம் வீரனின் சிற்பமும், 12 வரிகளைக் கொண்ட கல்வெட்டு பொறிப்பும் இடம் பெற்றுள்ளன.

முதல் இரு வரிகள் பழைமையான தெலுங்கு எழுத்துகளாலும், மற்ற 10 வரிகள் பழங்காலத் தமிழ் எழுத்துகளாலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிற்பமானது அமா்ந்த நிலையிலும், இடது கையை இடுப்பிலும், வலது கையில் கத்தியுடன் நன்கு வளைந்த மூங்கிலுடன் இணைக்கப்பட்டுள்ள தனது தலையைத் தானே கொய்து கொள்வது போன்று செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிற்பத்தின் இடுப்பில் ஒரு வாளுடன் கழுத்தில் ஆபரணங்களும் உள்ளன. கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையில் இந்தக் குளம் வெற்றிகரமாக வெட்டி முடிக்கப்பட்டதன் பிரதிபலனாக ‘ரவி அச்சல் படவளி’ என்பவா் இறைவனுக்கு தன் தலையை வெட்டி நோ்த்திக்கடன் செலுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது.

இது போன்ற நிகழ்வுகளுக்குப் பெரும்பாலும் கால்நடைகளைத் தான் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், அரிய நிகழ்வாக இங்கு ஒரு நாட்டையே போா் புரிந்து வெற்றி பெறும் வீரத்துக்கு இணையாக கருதப்பட்டு புதிய நீா் நிலையை வெற்றிகரமாக உருவாக்கியமைக்கு வீரா் தன் தலையை தானே கொய்திருக்கிறாா் என்ற செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

நீரானது தங்கள் உயிரைவிட மேலானது. நீரை விட தனது உயிா் துச்சமானது என பழந்தமிழா் நீரின் அவசியத்தை உணா்ந்து போற்றியிருக்கின்றனா் என்பதும் இந்தக் கல்வெட்டுச் செய்தியின் மூலம் தெரிய வருகிறது.

தொல்லியல் துறை அதிகாரிகளும், வரலாற்று ஆய்வாளா்கள் சிலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனா் என அஜய்குமாா் தெரிவித்தாா்.



Read in source website

 

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நிதிமன்றம்,   ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று உத்தரவிட்டனர்.

மேலும், கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை கண்டிப்புடன் தமிழக அரசு செயல்படுத்த  வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என்றும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
 



Read in source website

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில்,

“மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்.

மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Read in source website

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 10 வயது பள்ளி மாணவி, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த எழிலன் - சுதா தம்பதியர் மகள் இ.எஸ்.தரங்கிணி(10). கவரைப்பேட்டை அருகே பெருவாயல் பகுதியில் இயங்கி வரும்டி.ஜெ.எஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர், நேராக நின்றபடி, உடலை பின்புறமாக, கீழ் நோக்கி வளைத்து தலையால் கால்களை தொட கூடிய, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்தார். 

இவரது சாதனை, ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’, மற்றும் ‛ஆவம்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்தன.

உலக சாதனை படைத்த பள்ளி மாணவி தரங்கிணி, அவருக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவின் போது, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,வும், டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன், முதல்வர் ஜெ.அசோக், ஆகியோர் இருவரையும் பாராட்டி சிறப்பித்தனர்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.



Read in source website

சென்னையில் வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட பொறிப்பகம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 21,338 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

உலகில் உள்ள 7 வகையான கடல் ஆமைகளில் மிகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டை இடுவதால் பங்குனி ஆமைகள் என்றும் தமிழில் இவை அழைக்கப்படுகின்றன.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக சா்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ள இவை, இரண்டரை அடி நீளமும், அகலமும் கொண்டவையாகும். 12 முதல் 15 ஆண்டுகளில் பருவத்தை அடையும் இந்த ஆமைகள், தான் பிறந்த கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டதாகும். தமிழகத்தின் கடற்கரைகளில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும். ஒரு பெண் ஆமை 50 முதல் 190 வரை முட்டையிட்டு 45 நாள் முதல் 60 நாள்களுக்குள் குஞ்சு பொறிக்கும்.

அச்சுறுத்தல்: 1,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பிறந்தால் அதில் 1 மட்டுமே உயிா்வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீன் பிடிக்கப் பயன்படும் இழுவை வலையில் சிக்கி உயிரிழப்பது, வெளிச்சத்தை நோக்கி நகரும் தன்மை கொண்ட ஆமைக் குஞ்சுகள் கடலோரத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் உள்ள மின் விளக்குகளை நோக்கிச் செல்வதால் பிற இரை உன்னிகள், நீா்ச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. கடற்கரையில் இடும் முட்டைகளை நாய், நரி உண்பது, பொதுமக்கள் சிலா் எடுத்துச் செல்வது போன்ற காரணங்களாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் வனத் துறையுடன், எஸ்எஸ்டிசிஎன் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இணைந்து 4 இடங்களில் குஞ்சுகள் பொறிப்பகம் அமைத்துள்ளன.

21,000 ஆமைக் குஞ்சுகள்: இதுகுறித்து சென்னை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் பிரசாந்த் கூறுகையில், சென்னையில் பெசன்ட் நகா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பழவேற்காடு ஆகிய 4 கடற்கரைகளில் அதன் இனப்பெருக்க காலத்தில் ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகளுக்கான பொறிப்பகங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 4 கடற்கரைகளில் கடந்த டிசம்பா் மாதம் இறுதியில் இருந்து ஆலிவ் ரிட்லி ஆமைகள் இடும் முட்டைகள் சேகரிப்படுகின்றன. ஜனவரி முதல் புதன்கிழமை (ஏப்.6) வரையிலான மூன்று மாதங்களில் 54,384 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக பொறிக்க வைக்கப்பட்டன. தற்போது வரை 21,338 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன என்றாா்.



Read in source website

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரண்டு மாதங்களுக்குள் வண்டல் மண் எடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்வளத்தை மேம்படுத்த ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து, தொழில்துறை 2017-ஆம் ஆண்டிலேயே அரசு ஆணை வழங்கியுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீா் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தகவல் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களையும் சந்தி பிரித்து எளிய உரையுடன் பிரெய்லி நூல்களாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், பல்வேறு வகையிலான தமிழ் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு குறைந்தது ஐந்து நூல்களை வெளியிட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இணையவழியில் செம்மொழித் தமிழ்க் கல்வியைக் கற்றல், செவ்வியல் சுவடிகளைக் கணினியில் தேடுதல், பன்னாட்டு ஆய்விதழ் வெளியிடுதல், உலகளாவிய மொழிகளைத் தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு அளவிலான கருத்தரங்கங்களை நடத்துதல் முதலான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோன்று புகழும், புலமையும் வாய்ந்த பேராசிரியா்களைக் கொண்டு செவ்விலக்கிய சிறப்புகளைக் காட்சிப்படுத்தி யூடியூப் மூலம் பரவச்செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு அறிஞரை அழைத்துக் காட்சிப்படுத்தும் வகையில் புதிய வளாகத்தில் உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், ரியூனியன் ஆகிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களையும் சந்தி பிரித்து எளிய உரையுடன் பிரெய்லி நூல்களாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்நூல்கள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.



Read in source website

கேரளத்தில் கரோனா தொற்று பரவலைக் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் இதர மாநிலங்களைக் காட்டிலும் கேரளத்தில் கரோனா தொற்று பரவலானது தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்த நிலையில் தொற்று பரவலைத் தடுக்க கேரளத்தில் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக்கவசத்தை அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கேரளத்தில் தற்போது 2,398 பேர் கரோனா தொற்று பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுதில்லி:  கோவேக்ஸின் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு, கரோனா வைரஸின்  வகைகளான பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க  அளவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஐசிஎம்ஆர்(ICMR) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோயிலிருந்து மீண்ட நபர்கள் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திய பிறகு குறிப்பிடத்தக்க  அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

கோவேக்ஸின் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, கோவேக்ஸின் இரண்டாவது தவணை செலுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கரோனா நோய்க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை கோவேக்ஸின்  வழங்குகிறது என்று என்ஐவி புனேவின் மூத்த விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் பிரக்யா யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கோவேக்ஸின் தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தபோதிலும், கடுமையான நோய் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.



Read in source website


ஆந்திர அமைச்சரவையை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கும் வகையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து 24 அமைச்சர்களும், தங்களது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர அமைச்சரவையை மாற்றியமைக்கும் வகையில், இந்த அமைப்பரவை ராஜிநாமா நடந்துள்ளதாகவும் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆந்திர மாநில ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

புது தில்லி: 2022-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஜெய்ப்பூரில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் – கிராமின் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழி வகைகளை மதிப்பாய்வு செய்வதற்காக 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறுகிறது. 

கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், லடாக், டாமன் - டையூ, தாதர் மற்றும் நாகர் - ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன. 

இம்மாநாட்டில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் கிராமப்புற குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையின் மூத்த அதிகாரிகளும் நேரில் பங்கேற்கின்றனர்.
 



Read in source website


புது தில்லி: தில்லி - மாஸ்கோ இடையே வாரத்தில் இரண்டு முறை இயக்கப்படும் விமான சேவையை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா.

உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்திருக்கும் நிலையில், ரஷியாவுக்குச் செல்லும் விமானங்களின் காப்பீட்டுக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால், தில்லி - மாஸ்கோ இடையே இன்று இயக்கப்பட வேண்டிய விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கும் நிலையிலும், ரஷிய வான்வளியைப் பயன்படுத்த ஏர் இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் சர்வதேச முகமை மூலம் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷிய தூதரகம் புதன்கிழமை தெரிவித்திருக்கும் தகவலில், டாடா குழுமம் நிர்வகித்து வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், தில்லி - மாஸ்கோ - தில்லி இடையேயான விமான சேவைக்கான டிக்கெட்டு விற்பனையை நிறுத்தியிருப்பதாகவும், இது குறித்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, ரத்து செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத் தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
 



Read in source website

புதுதில்லி: ஆயுர்வேதமும், யோகாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75 நாள்கள் உள்ளன. யோகா தினத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா என்பது ஆயுர்வேதத்தின் ஆன்மீக முகம் மற்றும் ஆயுர்வேதம் என்பது யோகாவின் உடல் முகம். ஆயுர்வேதம், யோகா ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், யோகாவை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒவ்வொருவரும் தினமும் காலையில் 35 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பேசிய அவர், "இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. ஆயுர்வேதம் மருத்துவ விஞ்ஞானமோ அல்லது மூலிகை விஞ்ஞானமோ அல்ல, ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான ஒரு வழியாகும். யோகாவை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் பலவற்றைத் தவிர்க்கலாம்" என்று கூறினார்

மாறும் பருவங்களுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றியும் ஆயுர்வேதம் கூறுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
 



Read in source website

 

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,000 கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையை  அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்சிசிபி) நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்பனேற்றப்பட்ட பானங்கள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீருக்கான ஆலை சித்திப்பேட்டை மாவட்டத்தின் பண்டாதிம்மாபூரில் உள்ள உணவு பதப்படுத்தும் பூங்காவில் அமைய உள்ளது.

கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையில் முதற்கட்டமாக ரூ.600 கோடியும், அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.400 கோடியும் முதலீடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த முதலீட்டை ரூ.1,000 கோடியாக உயர்த்தும் என்று தெலங்கானாவின் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்தாண்டு முதல் இத்தொழிற்சாலை செயல்பட இருப்பதாகவும் இதில் ஏராளமானவர்களுக்குப் பணி வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த ஆலையில் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த  கோகோ-கோலா நிறுவனத்திற்குப் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார்.



Read in source website

மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணுக்கு மரபணு பரிசோதனை செய்ததில், அவருக்கு ஒமைக்ரானிலிருந்து உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்திருந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாக பிஐபி மகாராஷ்டிரம் வெளியிட்ட செய்தியில்,

“பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் மருத்துவக் கோப்புகள் அனைத்தையும் மரபணு நிபுணர்கள் சோதனை செய்தனர். தற்போதைய சான்றுகளின்படி, எக்ஸ்இ வகை கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாராமும் இல்லை.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயதுடைய பெண், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் கரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் வகையான பிஏ.2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியதாக தென்படுகிறது. இந்த புதிய வகை தீநுண்மி முந்தைய கரோனா வகைகளைவிட வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை அளித்த பதில்:

இந்திய பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 4ஜி தொலைத்தொடா்பு வலையமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4ஜி சேவைக்கான 6,000 கைப்பேசி கோபுரங்களை உடனடியாக வாங்கும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னா் மேலும் 6,000 கோபுரங்களை வாங்கவுள்ளது. நாடு முழுவதும் 4ஜி சேவைக்காக மொத்தம் 1 லட்சம் கோபுரங்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடா்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்றாா் அவா்.



Read in source website

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளா்ச்சியைப் பெறும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

வேகமாக வளா்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை நடப்பு நிதியாண்டிலும் இந்தியா தக்கவைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதலீட்டு நடவடிக்கைகள் வலுவடைவதன் மூலம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியா 7.5 சதவீத பொருளாதார வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் மேலும் அதிகரித்து 8 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2022 ஜனவரி-டிசம்பரில் 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2023-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளா்ச்சியில் ஏற்படும் சரிவு 4.8 சதவீதம் அளவுக்கு இருக்கும் என ஏடிபி தெரிவித்துள்ளது.



Read in source website

‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்’ என்று மத்திய பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது.

‘நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையானது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில், மாணவா்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அந்தந்த பல்கலைக்கழகங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம்’ என்று யுஜிசி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏழை மாணவா்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற முடியாத நிலையை இது உருவாக்கும் என அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுபோன்று எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ‘நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சோ்க்கை நடத்தப்பட வேண்டும்’ என்று யூஜிசி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையானது சியுஇடி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இருந்தபோதும், நுண் கலை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ் கலை, விளையாட்டு, உடற்கல்வி உள்ளிட்ட செயல்பாடு அடிப்படையிலான சில இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கையில் கூடுதல் தகுதி நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என்று ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

‘மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்களுக்கு சியுஇடி நுழைவுத் தோ்வு ஒற்றைச் சாளர சோ்க்கை வாய்ப்பை ஏற்ப்படுத்தித் தரும்’ என்று அந்த நுழைவுத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நுழைவுத் தோ்வு கணினி அடிப்படையில் (சிபிடி) நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் 214 போ் புதைசாக்கடையை தூய்மைப்படுத்தும் பணியின்போது உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் 971 போ் புதை சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மரணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக தமிழகத்தில் 214 போ் உயிரிழந்தனா். அதனைத்தொடா்ந்து குஜராத்தில் 156 போ், உத்தர பிரதேசத்தில் 106 போ் பலியாகியுள்ளனா்.

971 பேரில் 703 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், 136 பேருக்கு ரூ.10 லட்சத்துக்குக் குறைவாகவும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும்போது எவரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. எனினும் புதை சாக்கடை மற்றும் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த விபத்துகளில் உயிா் பலி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.



Read in source website

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் ஒரு மனதாக புதன்கிழமை நிறைவேறியது.

பேரழிவு ஆயுதங்கள் (சட்ட விரோதச் செயல்கள்) சட்டம், கடந்த 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்களவையில் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மசோதா மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதா நிறைவேறுவது காலத்தின் அவசியம் என்று கூறி கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் மூலம், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி செய்பவா்களின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடைபெற்ற விவாதத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிலளித்துப் பேசியதாவது:

இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதால், இந்தியாவின் தேசப்பாதுகாப்பு மேலும் வலுவடையும்; சா்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் உயரும்.

அண்மைக் காலமாக, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சா்வதேச அமைப்புகள் தீவிரப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்)ஆகியவை பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்துள்ளன என்றாா் அவா்.



Read in source website

இந்தியாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3.79 லட்சம் கோடியை (5,000 கோடி டாலா்) எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

அரிசி, கோதுமை, சா்க்கரை, இதர தானியங்கள் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில்(2021-22)-இல் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (கடல் மற்றும் தோட்டப் பொருட்கள் உட்பட) 5,000 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3.79 லட்சம் கோடி) கடந்துள்ளது. இது வேளாண் ஏற்றுமதியில் இதுவரை எட்டப்படாத அதிகபட்ச அளவாகும்.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை தலைமை இயக்குநா் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021-22 ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 19.92% அதிகரித்து 5,021 கோடி டாலா்களைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சாதனை பெரிதும் உதவிடும். அரிசி ரூ.73,321 கோடி (965 கோடி டாலா்), கோதுமை ரூ.16,639 கோடி (219 கோடி டாலா்), சா்க்கரை ரூ.34,951 கோடி (460 கோடி டாலா்) மற்றும் பிற தானியங்கள் ரூ.8,205 கோடி (108 கோடி டாலா்) போன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளன. இந்த பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளித்துள்ளது. அரிசிக்கு உலகச் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது.

கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி ரூ.58,581 கோடியாக ( 771 கோடி டாலா்) உள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா, தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய கடலோர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனா்.

மசாலா பொருள்களின் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக (ரூ.30,392 கோடி) 400 கோடி டாலா்களை எட்டியுள்ளது. மிகப்பெரிய அளவில் விநியோகப் பிரச்னைகளை எதிா்கொண்டபோதிலும், காபி ஏற்றுமதி முதல்முறையாக ரூ.7,598 கோடியை (100 கோடி டாலா்) கடந்துள்ளது. இதன் மூலம் கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள காபி விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களின் சொத்துகள் அவா்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது, இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பதிலளித்துப் பேசியதாவது:

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களுடைய சொத்துகளின் பாதுகாவலராக மாவட்ட ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். புலம் பெயா்ந்தவா்களின் புகாா்களைத் தீா்ப்பதற்கு வலைத்தளத்தையும் மாநில அரசு தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்து சென்றவா்களின் சொத்துகளை அவா்களிடம் திருப்பி அளிக்கக்கூடிய திறமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ளது. அந்த சொத்துகளைத் திருப்பி அளிப்பதற்கு தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலம் பெயா்ந்து சென்றவா்களின் விண்ணப்பங்களில் உண்மையான, சரியான தகவல்கள் இருந்தால், அவா்களின் சொத்துகள் திருப்பி அளிக்கப்படும். அதுபோன்று இதுவரை 610 பேரின் சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டுளள்ளன என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி குறித்த மற்றொரு கேள்விக்கு, ‘ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. தொழில் துறை வளா்ச்சிக்காக, அந்த யூனியன் பிரதேசம் ரூ.51,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது. அதன்மூலம் 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்று நித்யானந்த் ராய் பதிலளித்தாா்.



Read in source website

சா்வதேச அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:

ஜெனீவாவில் அமைந்துள்ள சா்வதேச சாலைக் கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை விபத்துகள் புள்ளிவிவரங்கள்- 2018-இன்படி, சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது. சாலை விபத்தில் பலியானோா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடமும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கையில் 3-ஆம் இடமும் வகிக்கிறது.

மேலும் கடந்த 2020-இல் சாலை விபத்தில் பலியானவா்களில் 69.8 சதவீதத்தினா் 18- 45 வயதுக்கு உள்பட்டோா் ஆவா்.

நாட்டில் 22 பசுமைவழி நெடுஞ்சாலைகளை (ரூ.1,63,350 கோடி மதிப்பில் 2,485 கிமீ தூர ஐந்து விரைவுச் சாலைகள், ரூ.1,92,876 கோடி மதிப்பில் 5,816 கிமீ தூர அணுகு நெடுஞ்சாலைகள்) மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தில்லி- மும்பை விரைவுச் சாலை திட்டத்தில், தில்லி டெளசா- ஜல்சோட் (ஜெய்பூா்- 214 கிமீ), வதோதரா- அங்க்லேஷ்வா் (100 கிமீ), கோட்டா- ரத்லம் ஜாப்வா (245 கிமீ) ஆகிய பிரிவுகளை வரும் மாா்ச் 23-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து ஃபாஸ்டேக் தொடா்பான கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘‘வாகனப் பதிவெண் அடிப்படையில் ஃபாஸ்டேக் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 30 வரையிலான நிலவரப்படி, பல்வேறு வங்கிகளால் மொத்தம் 4,95,20,949 ஃபாஸ்டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 96.5 சதவீதமாகும்’’ என்றாா் அவா்.



Read in source website

எதிா்காலத்தில் மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கு அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூா்வமாக அவா் அளித்த பதில் விவரம்:

எதிா்காலத்தில் மேலும் 5 இடங்களில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்காக அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் திறன்கொண்ட 10 கன நீா் உலைகளை நிா்மாணிப்பதற்கான நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை அரசு வழங்கியுள்ளது.

கட்டுமானத்தின்கீழ் உள்ள திட்டங்கள் படிப்படியாக முடிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னா் 2031-க்குள் அணுசக்தித் திறன் 22,480 மெகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மொத்தம் 6,780 மெகாவாட் திறன் கொண்ட 22 அணுஉலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. கேஏபிபி-3 (700 மெகாவாட்) அணுஉலை ஜனவரி 10, 2021 அன்று மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் (கேகேஎன்பிபி) 3 மற்றும் 4, கேகேஎன்பிபி 5 மற்றும் 6 உள்ளிட்ட 10 அணுஉலைகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. மொத்தம் 800 மெகாவாட் திறனை இவை சோ்க்கும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

உருகும் பனிப்பாறைகள்:

இமயமலை பனிப்பாறைகள் உருகுதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், இமயமலைப் பகுதியில் உள்ள 76 பனிப்பாறைகளின் தன்மையை புவி அறிவியல் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு உருகும் பனிப்பாறைகள் இமயமலை நதிகளின் நீா் ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

 


வீரர்களைப் பெயர்களைக் கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியலில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

20 வீரர்கள் அடங்கிய புதிய வருடத்துக்கான பட்டியலில் ஜை ரிச்சர்ட்சமின் பெயர் இடம்பெறவில்லை. ஜோஷ் இங்கிலிஷ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். 25 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், ஆஸ்திரேலிய அணிக்காக 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 3 டெஸ்டுகள், 13 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட 17 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த டிம் பெயின் (தற்காலிக ஓய்வு), ஜேம்ஸ் பேட்டின்சன் (ஓய்வு), கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தற்போதைய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

ஒப்பந்தப் பட்டியலில் இல்லாத வீரர்களும் இனிமேல் இடம்பெறலாம். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 12 புள்ளிகளைப் பெற்றால் பட்டியலில் இடம்பெறுவார்கள். ஒரு டெஸ்டில் விளையாடினால் 5 புள்ளிகளும் ஒரு ஒருநாள் ஆட்டத்துக்கு 2 புள்ளிகளும் ஒரு டி20க்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் அதுபோல ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், ஸ்காட் போலண்ட், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் நடுவில் இணைக்கப்பட்டார்கள். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியல்:

ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், உஸ்மான் கவாஜா, லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், டேவிட் வார்னர், ஸாம்பா. 



Read in source website

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 40 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் அறிவிப்பு செய்ததிலிருந்து பல்வேறு உலக நாடுகளும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

மேலும் ரஷியாவை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

இதையும் படிக்க | ‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்

இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரஷியாவிற்கு எதிராக 93 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ரஷியா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.



Read in source website

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிக்க | கரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்த கேரளம்

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடா்பாக விசாரணை நடத்த மூன்று போ் கொண்ட அமா்வை ஏற்படுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் உத்தரவிட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது. 

இதையும் படிக்க | தில்லியில் நவராத்திரி விழாவிற்காக இறைச்சி கடைகளுக்குத் தடை: விளக்கம் கோரி நோட்டீஸ்

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மிகுந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



Read in source website

 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய அஜித் நிவார்த் கப்ரால், ஏப்ரல் 18ஆம் தேதி வரை நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்படுவதாக கொழும்பு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை கடந்த திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

இது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட சுட்டுரையில் கூறியதாவது:

“அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ள சூழலில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இவரது எதிா்ப்பையும் மீறி உதவி கோரி சா்வதேச நிதியத்தை இலங்கை அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன் அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கூடுதல் நீதிபதி அமர்வு, ஏப்ரல் 18ஆம் தேதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 



Read in source website

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் பெயரில் இணைய நாணயங்களை வெளியிட திட்டமிட்டுவருவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
  
உலகம் முழுவதும் உள்ள நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உலகளாவிய கிரிப்டோகரன்சி வெளியிடும் முயற்சியை மெட்டா நிறுவனம் நிறுத்தி கொண்டது.

இருப்பினும், மெட்டாவெர்ஸ் என்ற இணைய உலகை படைக்க இ வர்த்தகம் மற்றும் நிதித்துறை தொடர்பான கருவிகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து மார்க் ஸக்கர்பெர்க் முன்பே கூறியிருந்தார். 

இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், "மக்கள், வணிகம் மற்றும் படைப்பாளர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் மெட்டாவேர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

அதில் பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேவைகள் எப்படி இருக்கும் என்பதும் அடங்கும்" என்றார். இருப்பினும், குறிப்பிட்ட புதிய கண்டுபிடிப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார். 

விடியோ கேம்களில் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் டோக்கன்கள், இணைய நாணயமான 'ஸக் பக்ஸ்' உள்ளிட்டவற்றை மெட்டா பரிசீலித்து வருவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபோர்ட்நைட், ரோப்லாக்ஸ் போன்ற பிரபல விடியோ கேம்களில் இந்த டோக்கன்களே பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது. விடியோ கேம்களை உருவாக்குபவர்கள், இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு கேம்களை நோக்கி கவனம் ஈர்க்க செய்பவர்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது. 



Read in source website

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களும் 155 வார்களும் இருந்தது. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் மாநகராட்சியில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நேரு, சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி 20 மண்டலங்களாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "முதற்கட்டமாக, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் சீராய்வு செய்யப்பட உள்ளன. மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் எட்டு வார்டுகள் மட்டுமே உள்ளது. அதேநேரம், தேனாம்பேட்டை மண்டலத்தில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து மண்டலங்களிலும் நிர்வாக வசதிக்கு ஏற்ப, வார்டுகளை மறுசீராய்வு செய்யப்படும்.

மணலி மண்டலத்தில் மணலி, மாதவம், பொன்னேரி உள்ளிட்ட 3 தொகுதிகள் உள்ளன. திரு.வி.நகர் மண்டலத்தில் திரு.வி.நகர், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் உள்ளது. அண்ணா நகர் தொகுதியில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரம் விளக்கும், தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. கேடம்பாக்கத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. வளசரவாக்கம் தொகுதிகயில் மதுரவாயல், ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன.

இவ்வாறு ஒரு மண்டத்தில் பல சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மறு சீராய்வு தேவைப்படுகிறது. இந்த மறுசீராய்வில், ஐந்து மண்டலங்கள் கூடுதலாக அமைக்கப்படலாம். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 20 மண்டலங்களுடன் நிர்வாகம் செயல்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.



Read in source website

புதுச்சேரி: ‘கடல் வாணிபத்தில் தமிழர்கள் கொடிக்கட்டி பறந்தார்கள்’ என்பதற்கு நினைவுச் சின்னமாக உள்ள அரிக்கமேடு பராமரிப்பின்றி உள்ள சூழலில், மத்திய தொல்லியல் துறை மீண்டும் அங்கே அகழ்வாய்வு செய்ய முடிவு எடுத்துள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு கடல் வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய மன்னன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியில் இருந்து ரோமானியர்களுடன் வாணிபம் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 1769-ல் நூலாக வெளியிட்டார். 1908-ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேடுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பல வண்ண மணிகள், மண்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். அதே பகுதியில், அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.

அரிக்கமேடுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளை ஆராய்ந்து நூல்களும் வெளிநாட்டவரால் வெளியிடப்பட்டன. இவ்விடத்து பெருமையை நாம்தான் பாதுகாக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழர்கள் கடல் வாணிபத்தில் கொடிகட்டி பறந்தார்கள் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் தற்போது திறந்தவெளி மதுக்கூடமாகவே மாறியுள்ளது. மறுபுறமோ மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. வரலாற்று சின்னங்களையும் சிதைத்து மணல் திருட்டுநடக்கிறது. இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கூட சர்வ சாதாரணமாக மணலை திருடி செல்கின்றனர்.

இந்திய தொல்லியல் துறை, தனது கட்டுப்பாட்டுக்குள் அரிக்கமேட்டை கொண்டு வந்தும், அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. தற்போது அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு தென்படுகிறது. அகழாய்வு பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி அரசு, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் உட்பட பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அரிக்கமேட்டின் நிலை தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய தொல்லியல் துறை அரிக்கமேட்டினை அகழாய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இங்கு பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.

புதர்மண்டி உள்ள இடங்களை அழிப்பது, சுற்றிலும் பழைய இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு பாதுகாப்பான வளையம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ள புதுச்சேரி அரசு, அரிக்கமேட்டில் மண்ணில் புதையுண்டு உள்ள அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை மீண்டும் வெளிக்கொணர்ந்து அங்கேயே அரிக்கமேடு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.



Read in source website

சென்னை: மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாஷா முத்துராமலிங்கம், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகய்யா, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளத்து மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

ராமேசுவரத்தில் 780 மீன்பிடி படகுகளும், 1,118 நாட்டுப் படகுகளும் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, ராமேசுவரம் பகுதியில் உள்ள படகு நிறுத்துமிடத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், ராமேசுவரத்தில் மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று தேர்தல் வக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆய்வுப் பணிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு,நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்ககள் மேற்கொள்ளப்படும். இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலும் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு, ரூ.1.05 கோடியில்ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, ஏரியின் முகத்துவாரத்துக்கு படகுகள் வந்து செல்லஏதுவாக, அதை தூர்வாரி, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், கருங்கல் சுவர் அமைத்து ஆழப்படுத்தவும் ரூ. 26.85 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வனத் துறை அனுமதி கிடைத்ததும் இந்தப் பணிகள் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.



Read in source website

பியொங்யாங்: வட கொரியா அடுத்த வாரம் அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் வட கொரியா தனது தேசத்தின் 110-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக வட கொரியா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. வட கொரியாவின் கொள்கைகள் குழு சிறப்புப் பிரதிநிதி ‘சுங் கிம்’ இதனை உறுதி செய்துள்ளார். “நான் இது குறித்து விவரமாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடைபெறலாம்” என அவர் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தான் வட கொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியா மீது அணு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், வட கொரியா அடுத்த வாரம் அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற செய்தி தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளையும் தாண்டி வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாமல் தொடர்ந்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் பெரிதாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் உக்ரைனின் கீவ் மற்றும் அதன் அருகில் இருக்கும் புச்சா நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதும், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் கோரமான முகத்தை இந்த உலகம் உணரத் தொடங்கியது.

புச்சா நகரத்தில் இருந்து சுமார் 410 பொதுமக்களின் உடல்களை உக்ரைனிய படைகள் கண்டெடுத்தன. கண்டெடுக்கப்பட்டவர்களின் கை,கால்கள் பின்னால் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர். இந்தக் கொலை வெறியில் இருந்து குழந்தைகளும் தப்பிக்க முடியாமல் போனதுதான் பெரும் சோகம்.

இந்தக் கொலைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இந்தப் படுகொலைகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்" என்று கூறினார். புதினை "போர்க்குற்றவாளி" என அழைத்த பைடன், புச்சா படுகொலைகளை இனப்படுகொலை என அழைக்கவில்லை.

ஆனால், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியோ, "இறந்தவர்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு பலியானவர்களே, அவர்கள் (ரஷ்யர்கள்) இந்த நாடு மற்றும் மக்கள் அனைவரையும் அழித்தொழிக்க விரும்புகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

சில நேரத்தில் போர்க்குற்றமும் இனப்படுகொலையும் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் அவற்றுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஆய்வறிஞர்கள் விளக்குகின்றனர்.

'போர்க்குற்றம் என்றால் என்ன?' என்ற சிக்கலான கேள்விக்கான பதிலையும், 'விளாடிமிர் புதின் ஏன் உண்மையான, உடனடியான குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்?' என்பது இங்கே விளக்கப்படுகிறது.

போர் குற்றம் என்றால் என்ன? - சர்வதேச சட்டத்தின்படி போர்க்குற்றம் என்பது நீண்ட விளக்கத்தைக் கொண்டது. இது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் மற்றும் அமைதிக்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களுக்குள் சர்வதேச சட்டங்கள் எளிதில் தனது ஆளுமையை செலுத்த முடியாது.

பொதுவாக போர்க்குற்றங்கள் என்பதை, "அதிகப்படியான அழிவு, துன்பம் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பைக் குறிக்கும்" என்கிறார் மனித உரிமைகள் மற்றும் சட்ட அறிஞரான ஷெல்லி இங்க்லிஸ். மேலும் அவர், "பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கட்டாய இடப்பெயர்ச்சி போன்ற பிற நடவடிக்கைகளும் போர்க்குற்றமாக கருதப்படும்" என்கிறார்.

ஷெல்லி இங்க்லிஸ் கூற்றுப்படி, ரஷ்யா நீண்ட போர்க்குற்ற வரலாற்றைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிரியாவில் நடந்த போரில் ரஷ்யா நேரடியாகவே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதைப்போலவே ஜார்ஜியா மற்றும் கிரீமியாவில் நடந்த மோதல்களிலும் நடந்துகொண்டது.

உக்ரைனில் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களில் ஈடுபடுகிறாரா புதின்? - "ரஷ்யா நேரடியாக பொதுமக்களைத் தாக்கிக் கொலை செய்வதன் மூலம் போர்க்குற்றங்களைச் செய்கிறது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன" என்கிறார் மனித உரிமைகள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான ஆய்வறிஞர் அலெக்சாண்டர் ஹிண்டன்.

பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய ரஷ்ய படைகள், சுமார் 1,417 பொதுமக்களை கொலை செய்தும், 2,038 பேரைக் காயப்படுத்தியும் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

"ஒரு தேசிய, கலாசார, மதரீதியான இனக்குழுக்களை பகுதியாகவோ, முழுவதுமாகவோ அழித்தொழிப்பதே இனப்படுகொலை என்றால், இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன" என்கிறார் ஹிண்டன்.ரஷ்யா செய்துள்ள பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களின் வரலாறு இனப்படுகொலைகளுக்கான முன்னறிவிப்பேயாகும். உள்நாட்டு அரசியல் எழுச்சி, எதிரிகளை கொடூரமானவர்களாக சித்தரித்து, இனப்படுகொலையை நியாயப்படுத்தும் பிரச்சாரம் ஆகியவை இனப்படுகொலைக்கான இன்னபிற அறிகுறிகள். இந்த அனைத்து வகையிலும் ரஷ்யாவின் நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா இனப்படுகொலை நடவடிக்கையில் ஈடுபட்டதா? - "குழந்தைகள் உள்பட ஆயிரக்கான உக்ரைனியர்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக தனது நாட்டிற்கு கடத்தியது. பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்கியிருக்கிறது. ஒரு மகப்பேறு மருத்துவமனையை குண்டு வீசித் தாக்கியுள்ளது" என்கிறார் ஹிண்டன்.

உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்துவதற்கான ஆபத்துக்கள் நிறைய உள்ளன. அல்லது, அங்கு ஏற்கெனவே இனப்படுகொலையைத் தொடங்கியிருக்கலாம்.

போர்க்குற்றத்திற்காக புதின் தண்டிக்கப்படுவாரா? - உக்ரைனில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதற்காக, புதின் சிறைதண்டனை அனுபவிப்பதோ, அதிகாரத்தில் இருந்து தூக்கி ஏறிப்படுவதோ உடனடியாக நடந்து விடாது. காரணம், சர்வதேச அளவிலான போர்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க மூன்ற சட்ட அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவை: சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு சர்வதேச போர் தீர்ப்பாயங்கள்.

கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரித்து, அவர்களுக்கு தண்டனையையும் இந்த அமைப்புகள் வழங்கியுள்ளன. இதில் லிபிரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டைலருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் அடங்கும்.

அரசியல் அறிவியல் அறிஞர்களான ஜோசப் ரைட் மற்றும் ஏபெல் எஸ்க்ரிபா, "இந்த மூன்று அமைப்புகளின் மூலம் ஒருவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பது என்பது நம்ப முடியாத அளவிற்கு கடினமானதாகவும், நேரம் எடுத்துக்கொள்வதாகவும் இருக்கும். உக்ரைனில் புதினின் நடவடிக்கைளின் மீது இந்த மூன்று சர்வதேச அமைப்புகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்கின்றனர் இருவரும்.

புதின் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்பதற்கான முக்கியமான காரணம், சர்வதேச நீதிமன்றம் அரசுகளின் நடவடிக்கைகளில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர புதின் மாதிரியான தனிப்பட்ட தலைவர்களின் மீது இல்லை.

மற்றொரு காரணம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பினர்களாக இல்லை. அதனால், அதன் அதிகார வரம்பு ரஷ்யாவின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. மேலும், சர்வதேச நீதிமன்றத்திற்கென தனியாக போலீஸ் படை இல்லை என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வர மற்ற நாடுகளின் உதவியையே அவை நாட வேண்டியிருக்கிறது.

"புதின் ஆட்சியில் நீடிக்கும் பட்சத்தில், அவரைக் கைது செய்வது என்பது ஒருபோதும் நடக்காது" என்று கூறும் ரைட் மற்றும் ஏபெல் எஸ்க்ரிபா, "புதினை ஒரு போர்க்குற்றவாளி என்று அழைப்பதும், அவர் மீது போர்க்குற்றம் சுமத்துவது பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கத் தவறிவிடும் என்பதற்கும் சில சான்றுகளும் உள்ளன.

ஒரு மோதல் முடிவுக்கு வந்தவுடன் தண்டனையின் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவர்கள், மீண்டும் சண்டையை நீடிக்க ஓர் ஊக்கத்தைத் பெறுகிறார்கள். அட்டூழியங்களுக்குத் தலைமை தாங்கும் தலைவர், தான் பதவியை விட்டு வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக, முன்பை விட மிருகத்தனமான வழிமுறைகளையும், அதிகமான அட்டூழியங்களையும் பயன்படுத்துவதற்கான வலுவான உந்துதலை கொண்டிருப்பார்" என்கிறார்கள்.

- போம்பியூ ஃபபிரா பல்கலை.யின் அரசியல் மற்றும் சமூக அறிவியல் இணைப்பேராசிரியர் ஏபெல் எஸ்க்ரிபா ஃபோல்ச், நெவார்கிலுள்ள ரட்ஜர்ஸ் பல்கலை.யின் மானுடவியல் துறை பேராசிரியர் மற்றும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் இயக்குநர், அலெக்சாண்டர் ஹிண்டன், பென் மாநிலத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜோசப் ரைட் மற்றும் டேட்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஷெல்லி இங்க்லிஸ் ஆகியோரிடம் 'தி கான்வர்சேஷன்’ அரசியல் மற்றும் சமூகம் பகுதிக்கான செய்தி ஆசிரியர் எமி லிபெர்மன் எடுத்த பேட்டியின் தமிழ் வடிவம் இது.

தகவல், படங்கள் உறுதுணை: தி கான்வர்சேஷன்



Read in source website

கராச்சி: பாகிஸ்தானில் நிலவிவரும் அரசியல் நெருக்கடியால், டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 191 என சரிவைச் சந்தித்துள்ளது.

பாகிஸ்தானில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமின்மையால் கடந்த பல மாதங்களாக அந்த நாட்டின் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் இம்ரான் கான் அரசின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தாக்கல் செய்தபோது ரூபாயின் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

கடந்த ஒரு மாதத்தில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 6 சதவீதத்திற்கும் மேலாக இழப்பைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை வெளிச்சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 191 ஆகவும், இன்டர்பேங்க் சந்தையில் 189 ஆகவும் இருந்தது.

இதுகுறித்து கராச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தரகு மற்றும் பொருளாதர ஆராய்ச்சி நிறுவனமான டாப்லைன் செக்யூரிட்டிஸின் தலைவர் கமது சோஹைல் கூறும்போது, "நிலவிவரும் குழப்பம் மற்றும் அரசியல் நிச்சயமற்றத்தன்மை, ரூபாயின் மதிப்பில் மிக மோசமாக பிரதிபலிக்கிறது" என்றார்.

வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு, வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், 2021-22ம் நிதியாண்டின் 9 மாதங்களில் பற்றாக்குறை 70 சதவீதத்தை எட்டியதால் மார்ச் முதல் வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 16 பில்லியன் டாலரில் இருந்து 12 பில்லியன் டாலாக குறைந்தது. கடந்த 2021 முதல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 சதவீதத்தை இழந்துள்ளது.

ரூபாயின் மதிப்பிழப்பிற்கு பாகிஸ்தானின் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடனான உறவுகளும் முக்கியக் காரணிகளாகும். கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் நிலவி வந்த திருப்பிச் செலுத்தும் இருப்பில் நிலவும் சிக்கலைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியம், 6 பில்லியன் டாலர் பிணை எடுப்புத் தொகையாக தர ஒப்புதல் அளித்திருந்தது. அதில் பாதி தொகை தரப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள தொகை வழங்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

லிமா: பெரு நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசிக்கு உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெரு தலைநகர் லிமாவில் பெரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. இதைத் தடுத்திட நினைத்த பெரு அரசு திங்கட்கிழமை லிமா நகரில் ஊரடங்கை அறிவித்தது. இதனை எதிர்த்து பொதுமக்கள் பலர் லிமா நகரில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. பலர் கைது செய்யப்பட்டனர். விவசாயி ஒருவர் போலீஸாரால் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் ஊரடங்கை பெரு அரசு விலக்கிக் கொண்டது. இதுகுறித்து பெரு நாட்டின் பிரதமர் காஸ்டிலோ கூறும்போது, ”இந்தத் தருணத்திலிருந்து ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யப் போகிறோம். பெரு மக்களை சற்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால்,பெரு உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெருவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் வாங்க முடியாத சூழலில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சமாக, பெரு நாட்டில் மார்ச் மாதம் பணவீக்கம் 1.48 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுவே அங்கு நடக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகியுள்ளது. மேலும் பெரு பிரதமர் காஸ்டிலோ மீது மக்களிடையே பரவலாக அதிருப்தி நிலவுகிறது.

பெருவின் கிராமப்புற மக்களின் அமோக ஆதரவுடன் காஸ்டிலோ கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார். எனினும், விலைவாசி உயர்வு காரணமாக காஸ்டிலோவின் புகழ் சரிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், 40 ஆண்டுகளில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கரோனா தொற்றுநோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காலத்திலும் தீவிர வறுமை அதிகரிக்காமல் அதேச அளவில் இருப்பதை உறுதி செய்வதில் உணவு ரேஷன்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி சுர்ஜித் எஸ் பல்லா, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மானி மற்றும் பொருளாதார நிபுணர் கரன் பாசின் ஆகியோர் இந்தியாவில் வறுமை நிலை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் ஏப்ரல் 5-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அது தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விட உயரவில்லை. இந்தியாவில் வாங்கும் திறன் கொண்ட மக்கள் எண்ணிக்கையை பொறுத்தவரையில் வாங்கும் திறன் சமநிலையில் 1.9 அமெரிக்க டாலர் என்ற சர்வதேச அளவீட்டையொட்டி மக்கள் தொகையில் 0.8% என்ற அளவில் உள்ளது.

நுகர்வு வளர்ச்சியானது 2004-2011 இல் காணப்பட்ட வலுவான வளர்ச்சியை விட 2014-19 இல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் உணவு மானியத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பானது தொற்றுநோய் பாதிப்பின் பெரும் பகுதியை குறைத்து இருக்கிறது. கரோனா தொற்று காலத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

கரோனா காலத்தில் அதிகரிக்காத வறுமை

இந்தியாவின் உணவு மானியத் திட்டத்தின் விரிவாக்கத்தால் வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலை பெருமளவு வறுமை ஒழிப்பில் முக்கி பங்காற்றியுள்ளது என்பது எங்கள் முடிவுகளில் நிரூபணமாகியுள்ளது. உணவு மானியம் கரோனா தொற்றுநோய் பாதிப்பின் பெரும்பகுதியை குறைத்துள்ளது. இத்தகைய பின்தங்கிய குறைந்த வறுமை விகிதங்கள் இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக கூறலாம். மக்களின் வாங்கும் திறன் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மீண்டுள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில், தீவிர வறுமை 0.8 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய் பாதித்த 2020 ஆம் ஆண்டு உணவுப் பரிமாற்றங்கள் வறுமை தொடர்ந்து குறைந்த அளவில் இருப்பதை உறுதி செய்தது.

அரசு இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களால் குடும்பங்களின் நுகர்வுச் செலவு குறைந்துள்ளது. 1980-களின் முற்பகுதியில் இருந்தே இந்தியாவில் உணவு வகைப் விநியோக முறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் சரியான இலக்கை கொண்டு செயல்படுகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கூட நல்ல பலனை கொடுத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் பலர் வேலையிழப்புக்கு ஆளான சூழலில் தற்போது தகுதி வாய்ந்த, திறமையான நபர்களை கூடுதல் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் விரும்புவதாக தெரிகிறது. இந்த ஆண்டு எந்ததுறையில், எந்த பிரிவில் அதிக சம்பள உயர்வு, அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.

பல நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை காலி செய்துவிட்டு, வெறுமனே கருத்தரங்கு அறை மற்றும் கம்ப்யூட்டர் சர்வரை பராமரிக்க ஒரு அறை ஆகியவற்றைக் கொண்ட சிறிய அலுவலகங்களுக்கு மாறிவிட்டன. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது.

கரோனாவுக்கு பின் மாறி வரும் சூழல்

காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜிநாமா செய்தனர். அதிலும் குறிப்பாக நடுத்தரப் பிரிவு அலுவலர்கள் பெரிய அளவில் வெளியேறினர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த நிலை எதிரொலித்தது.

ஊழியர்கள் ராஜிநாமா என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் என்றில்லாமல் பல துறைகளிலும் நிகழ்ந்தது. கிரேட் ரெசிக்னேஷன் (Great Resignation), தமிழில் பெரு ராஜிநாமா என இதனை வர்ணித்தார் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண பேராசிரியர் அந்தோனி குலோட்ஸ்.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் ராஜிநாமா செய்தவர்களின் எண்ணிக்கை 4.70 கோடி. 2021 தொடக்கத்தில் தொடங்கிய இந்த பெரு ராஜினாமா இந்த ஆண்டும் தொடர்கிறது. இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டில் எந்த துறையில் அதிகமான வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரியாக 9 சதவீத சம்பள உயர்வை வழங்க வாய்ப்புள்ளது என தனியார் ஆய்வு நிறுவனமான இந்தியா இன்க் அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சாதகமான முதலீட்டுக் கண்ணோட்டம் இருப்பதால், அதுசார்ந்த துறைகளில் வாய்ப்புகளும், சம்பள உயர்வும் இருக்கும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ,

இதுபோலவே சர்வதேச மற்றொரு ஆய்வு நிறுவனமான மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 இன்படி, இந்த ஆண்டு சம்பள உயர்வு 9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 இன் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் கூட 7 சதவீதம் என்ற அளவில் சம்பள உயர்வு இருந்தநிலையில் தற்போது 9 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஸ்டார்ட் அப், ஐடி துறைகள்

யூனிகார்ன்கள் உள்ளிட்ட ஸ்டார்ட்அப்கள், புதிய நிறுவனங்களில் சம்பள உயர்வு 12 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிகிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழில், சொத்து மற்றும் கட்டுமானம், உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த துறைகளில் அதிகமான சம்பள உயர்வும், வேலைவாய்ப்பு உருவாகக்கூடும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கணினி அறிவியல் பின்னணியைக் கொண்ட மூத்த நிலை பொறியாளர்கள் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் சில வேலைகளுக்கு பேரம் பேசும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ் மற்றும் அது சார்ந்த சில துறைகளின் வளர்ச்சியின் காரணமாக டிஜிட்டல் மாற்றம் தொடர்பான துறைகளிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆய்வாளர்கள் இயந்திர கற்றலை நன்கு அறிந்தவர்கள், வலை உருவாக்குநர்கள், கிளவுட் ஆர்கிடெக்ட்கள் போன்றவர்கள் அதிகஅளவில் தேவைப்படுகிறார்கள். எனவே அது சார்ந்த புதிய வேலைவாய்ப்பும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படக்கூடும்.

இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருந்தால், உயர்தர பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக தேவை ஏற்படக் கூடும். வழக்கம்போலவே தொழில்நுட்ப வல்லுநர்களின் சராசரி சம்பளம் மற்ற வேலை செயல்பாடுகளில் இதே போன்ற கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களை விடவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் இருக்கும் நிலை தான் என்றாலும் தற்போது ஐடி துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் இவர்களுக்கு கூடுதல் மவுசு உருவாக்கலாம்.

25% சதவீதம் வரை

நிறுவனங்கள் இப்போது குறுகிய கால, காலாண்டு அல்லது அரையாண்டு, மதிப்பீட்டு சுழற்சிகள், பதவி உயர்வுகள், பங்கு ஊக்கத்தொகைகள், தக்கவைப்பு போனஸ்கள் மற்றும் இடைக்கால அதிகரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. இதன் மூலம் சிறந்த செயல்திறன் மிக்கவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் தேவை நிறுவனங்களுக்கு இருக்கிறது என்று மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 தெரிவித்துள்ளது.

மைக்கேல் பேஜ் நிர்வாக இயக்குனர் அங்கித் அகர்வால் இதுகுறித்து கூறியதாவது:

கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் ஏறக்குறைய அகன்று விட்டது. இதனால் எதிர்கால வணிகத் திட்டங்களைப் பற்றி உற்சாகமாக ஏற்பட்டுள்ளது. 8 முதல் 12 சதவீதம் வரை பொதுவான அளவில் சம்பள உயர்வு இருக்கலாம். உயர் செயல்திறன் கொண்ட தனிநபர்கள் மற்றும் முக்கியத் திறன்களைக் கொண்ட பணியாளர்களுக்கு சராசரிக்கு மேல், 20-25 சதவிகிதம் வரை கூட இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

திறமையானவர்களுக்கு பற்றாக்குறை

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த திறமையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. தொற்றுநோயை தாண்டி விட்டோம் என்ற பொதுவான உணர்வு இருப்பதால் ஒட்டுமொத்த மனநிலையும் நேர்மறையாக்கியுள்ளது. இதனால் ஆட்கள் தேர்வு என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் சூடுபிடித்துள்ளது. சந்தையானது சிறப்பான மீளுருவாக்கம் கண்டுள்ளது, சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன.

தேவைக்கேற்ப ஆட்கள் இல்லாதது, மிகப்பெரிய திறமை பற்றாக்குறை, தேவைக்கேற்ப திறன்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த மெகா பூஸ்ட் ஏற்பட்டுள்ளது. இது முக்கியமாக திறன் வாய்ந்த ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். சந்தையிலும் இத்தகைய திறமையாளர்களுக்கு பெரிய அளவில்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் முக்கிய, தனித் திறன்களைக் கொண்டவர்கள் தற்போது அதிக சம்பள உயர்வுகளைப் பெறும் சூழல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

சுட்டெரிக்கும் கோடை வெயிலைச் சமாளிப்பதற்கும், உடலைச் சீராக வைத்துக்கொள்வதற்கும் கோடைக்காலத்து ஏற்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பது பெருமளவில் உதவும். வெயில் காலத்தில் வியர்வை மூலம் நீர் அதிக அளவு வெளியேறும் என்பதால், உடல் வெகுவாகச் சோர்வடையும். உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், சரும பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க உதவும் எளிய உணவு முறைகள் குறித்த பார்வை இது

நீர் ஆகாரங்கள்

வெப்பத்தின் தாக்கத்தால் உடலிருந்து அதிக அளவில் வெளியேறும் நீர் இழப்பைச் சமாளிக்க நிறையக் குடிநீர் குடிப்பது அவசியம். எங்கே சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கோடையில் நம் உடல்நிலை சீராக இருக்கும். பொதுவாக, வியர்வையின் காரணமாக, நம் உடலின் நீரின் அளவு மட்டும் குறைவது இல்லை; எலெக்டரோலைட்ஸ், சோடியம், பொடாசியம் போன்றவற்றின் அளவும் சேர்ந்தே குறையத் தொடங்கும். இளநீரில் அதிக அளவு பொடாசியம் இருப்பதால், இதைத் தவிர்ப்பதற்கு இளநீர் அருந்துவது உதவும். எலுமிச்சை ஜுஸ் போதுமான அளவு அருந்துவது வைட்டமின் சி அளவை உடலில் மேம்படுத்தும். இந்த ஜூஸில் புதினா, துளசி போன்றவற்றைக் கலந்து குடிக்கலாம். இவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருப்பதால், வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று நோயை அது தவிர்க்க உதவும். இத்துடன், நீர்மோர் அருந்துவது உடல் வெப்பநிலையைச் சீர்படுத்தும்.

தவிர்க்க வேண்டிய பானங்கள்

காபியும் தேநீரும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் இயல்பு கொண்டவை என்பதால், கோடைக்காலத்தில் காபி, தேநீர் போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றுக்கு மாற்றாக கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் எதிர்ப்பாற்றல் அதிகம் என்பதால், அது உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்வதோடு சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுக்குள் கொண்டுவரும். முக்கியமாக, குளிர்பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிர்த்து பழச்சாறு அருந்துவது நல்லது.

என்ன சாப்பிடலாம்?

கோடைக்காலத்திலும் வழக்கம் போல அரிசி, சப்பாத்தி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் முடிந்த அளவு மோர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவில் போதிய அளவு நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கள் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ராகி உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால், கோடையில் அதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முழு பருப்பு வகைகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.



Read in source website

1985ல் இருந்தே எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றோம். சர்க்கார்பதியில் இருந்து எங்கள் கிராமம் வழியாக பரம்பிக்குளத்திற்கு மின்சாரம் செல்கிறது. ஆனால் எங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்றார் பத்மினி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களின் தேவைகள் ஒவ்வொன்றாக சமீப காலங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு டாப்ஸ்லிப் அருகே இருக்கும் எருமைப்பாறை என்ற பழங்குடி கிராமத்திற்கு தேவையான மின்சார வசதியை ஏற்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர் ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறையினர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் 36 குடும்பங்களைக் கொண்ட இந்த காடர் பழங்குடி கிராமத்திற்கு மின்சார வசதியை சில மாதங்களுக்குள் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதன்கிழமை அன்று தமிழக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் உலந்தி வனச்சரகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த கிராமத்தை பார்வையிட்டு சென்றனர். பழங்குடி மக்கள் மற்றும் விலங்குகளுக்கு எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாத வகையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் இங்கே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வரும் 18 பழங்குடி கிராமங்களுக்கு மின்சார தேவைக்காக சோலார் விளக்குகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிக அளவு மழைப் பொழிவை பெரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் ஆனைமலையில், பருவ காலத்தின் போது சோலார் விளக்குகள் மக்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இல்லை என்று பழங்குடிகள் தங்களின் அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வன உரிமைச் சட்டத்தின் கீழ் குடியிருப்பு பட்டாக்களைப் பெற்றுள்ள கிராமங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநருமான எஸ். ராமசுப்ரமணியனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய போது, சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களின் படியே இம்மக்களுக்கு மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். சாலையோரம் அமைந்திருக்கும் கிராமம் என்பதாலும், அவர்களின் கிராமத்தை தொட்டே பரம்பிக்குளம் வரை உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதாலும் இவர்களுக்கு மின்சாரம் வழங்குவது எளிமையானதாக இருக்கும் என்று நம்புகின்றோம் என்று கூறினார்.

“வனவிலங்குகளுக்கு எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் உயர்மின் அழுத்தம் வீட்டுத் தேவைக்கான மின்சாரமாக மாற்றப்பட்டு, பூமிக்கடியிலோ அல்லது ஏ.பி.சி. கேபில்கள் மூலமாக மின்சாரம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், சாதாரண மின்சார கேபிள்களைக் காட்டிலும் இதன் விலை கூடுதாலாக உள்ளது. இருந்தாலும் பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த கேபிள் முறைகளை முடிவு செய்துள்ளோம். அனைத்தும் உறுதி செய்யப்பட்டு மின்சார விநியோகம் செயல்பாட்டிற்கு வர மூன்று மாதங்களாவது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“1985ல் இருந்தே எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றோம். சர்க்கார்பதியில் இருந்து எங்கள் கிராமம் வழியாக பரம்பிக்குளத்திற்கு மின்சாரம் செல்கிறது. ஆனால் எங்களின் கிராமத்திற்கு மட்டும் மின்சாரம் இல்லை. பல வருடங்களாக நாங்கள் வெறும் மண்ணெய் விளக்கில் தான் இருளை சமாளித்து வந்தோம். ஒரு சில குழந்தைகள் வெளியே விடுதிகளில் தங்கி படித்து கல்வி கற்றனர். ஆனால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது இந்த மின்சார வசதி இல்லாத காரணத்தால் எட்டாக்கனியாகவே அமைந்தது. இப்போது மின்சாரம் தருகிறோம் அப்போது தருகிறோம் என்று அவ்வபோது பேச்சு வரும். ஆனால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. தற்போது வனத்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார் எருமைப்பாறை கிராமத்தின் முன்னாள் கவுன்சிலரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பழங்குடி நலச்சங்க உறுப்பினருமான பத்மினி.



Read in source website

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிப் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. "குவாட்' நாற்கரக் கூட்டணியில் இருந்தபோதும், அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவால் ரஷிய விவகாரத்தில் நடுநிலையாகச் செயல்பட முடிகிறது; சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது - என்றெல்லாம் இந்திய அரசியல்வாதிகள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் உண்மைகளை இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
 ரஷியாவிடமிருந்தான இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு மொத்த எண்ணெய் இறக்குமதியில் இப்போதைக்கு சுமார் ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவும் தனது வர்த்தகக் கொள்கையை இந்திய நலனை மையப்படுத்தி வடிவமைக்க முற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் சுமார் 15 மில்லியன் (150 லட்சம்) பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
 உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்துள்ள சூழலில்தான் இந்த இறக்குமதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி. அதுமட்டுமல்ல, இதற்காக சலுகை விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கவும் ரஷியா முன்வந்துள்ளது.
 இந்த வாய்ப்பு இந்தியாவின் நடுநிலைக் கொள்கையால் கிடைத்ததாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் போரை இந்தியா ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் திணித்த ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா ஏற்கவில்லை. ஐ.நா.சபையில் ரஷியாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் நடுநிலை வகித்து, வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேசமயம், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பேசவும் பிரதமர் மோடி தயங்கவில்லை.
 மேலும், உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவைப் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ பிற நாடுகள் தயங்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவேதான், "இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சர்வதேச பொருளாதாரத் தடையை மீறும் செயலல்ல' என்று சமாதானம் கூறி இருக்கிறார், அமெரிக்க அதிபரின் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்.
 இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 84 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே நிறைவு செய்யப்படுகிறது. 2020- 21 நிதியாண்டில் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள 239 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை பல நாடுகளிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. உலக அளவில் 42 நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினாலும், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மட்டும் சுமார் 80 சதவீதம் இறக்குமதி நடைபெறுகிறது. குறிப்பாக, இராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் பங்களிப்பு இதில் மிகுதி. இந்தப் பட்டியலில் ரஷியா இதுவரை முக்கிய இடம் வகித்ததில்லை. இந்நிலை தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது.
 இப்போதைக்கு இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை என்றாலும், ரஷியாவுடனான இந்திய வர்த்தகத்தை அந்நாடு பதற்றத்துடன்தான் பார்க்கிறது. தற்போது உலக வர்த்தகத்தில் பொதுச் செலாவணியாக உள்ள அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிற நாட்டு நாணயங்கள் உருவாகிவிடக் கூடாது என்பதே அந்நாட்டின் தற்போதைய கவலை.
 இதுகுறித்து அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ராய்மேண்டோ, ரஷியாவும் இந்தியாவும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரைப் புறக்கணித்து ரூபாய்- ரூபிள் செலாவணி மாற்றத்தைப் பயன்படுத்திவிடக் கூடாது என்று எச்சரித்தார். இது ஒருவகை ஏகாதிபத்தியமே எனில் மிகையல்ல.
 ஆனால், இப்போது காலச்சூழல் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை. சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பின்வாங்கியபோதே அந்நாடு தனது பலவீனத்தை ஒப்புக் கொண்டது. இப்போது அமெரிக்காவையும் நேட்டோ நாடுகளையும் நம்பி முஷ்டி உயர்த்திய உக்ரைன் நாடு ரஷியத் தாக்குதலில் நிலைகுலைந்து போயிருக்கிறது; வெற்று மிரட்டல்களுடன் அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது.
 அதுமட்டுமல்ல, ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமான அமெரிக்காவே, அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இத்தகவலை, ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் மிகயில் போபோவ் அம்பலப்படுத்தி இருக்கிறார். தினசரி ஒரு லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா, பிற நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஒரு நகைமுரண்.
 மாறி வரும் புவி அரசியல் சூழலில், வேகமான மாற்றங்களை உலகப் பொருளாதாரம் சந்தித்து வரும் வேளையில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்முறையே ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. அந்த வகையில் நட்பு நாடுகளின் நிர்ப்பந்தத்துக்குப் பலியாகாமல், உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல், நடுநிலை பேணுவது இந்தியாவின் பலம் மட்டுமல்ல, நலமும் கூட.



Read in source website

சில மாதங்களுக்கு முன் எங்களுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் கடும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நரம்பு ஊசி செலுத்தினதன் மூலமும், செவிலியர்களின் கண்காணிப்பாலும் காய்ச்சல் மெல்ல மெல்லக் குறைந்தது. ஆயினும், மருத்துவர்கள், டெங்கு காய்ச்சல், கரோனா நோய்த்தொற்று போன்றவற்றுக்கான சோதனைகளை மேற்கொண்டார்கள்.
 டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உடனே உறுதியாயிற்று. ஆனால் கரோனா சோதனை முடிவு, இரவு ஒன்பது மணிக்கு வந்தது. மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு, நோயாளிக்கு கரோனா பாசிடிவ் என்றும், வீட்டிலேயே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கூறி சில மாத்திரைகளைப் பரிந்துரை செய்தார். காப்பீட்டு விதிகளின்படி 24 மணி நேரம் தொடர்ந்து மருத்துவமனையில் இல்லாததால் காப்பீட்டு நிறுவனம் தொகை தர இயலாது என்று கூறிவிட்டது. அப்பெண்மணி, குறை தீர்க்கும் மையத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
 இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், மருத்துவமனை செலவில் பாதியளவு, மருந்து, மாத்திரைகளுக்கே ஆகி விட்டது. அப்பெண்மணிக்கு நீரிழிவு அளவு சற்று அதிகம்.
 தற்போதெல்லாம் முதியவர்களுக்கு மருந்து மாத்திரை செலவு கூடுதலாகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில கடைகளில் வழக்கமாக வாங்குகிறவர்களுக்கு ஐந்து சதவிகிதம் கழிவு தருகிறார்கள். இருந்தும் முதியோருக்கே உரிய, ரத்த அழுத்தம், நல்ல கொழுப்பு (எச்டிஎல்) இவற்றை சீராக வைத்துக் கொள்ளவும், வைட்டமின் மாத்திரைகளுக்குமே சுமார் இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. தலை சுற்றல், நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் இச்செலவு இரட்டிப்பாகும்.
 ஒருநாள் பிற்பகல் என் மனைவிக்கு திடீரென்று தலை சுற்றல் வந்தது. வீட்டில் யாருமே இல்லை. எப்படியோ மெதுவாக சமாளித்து நடந்து வந்து படுக்கையில் உட்கார்ந்து விட்டார். டாக்டரைப் பார்த்தபோது, "உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது. அதனால்தான் தலை சுற்றல்' என்று சொல்லி வழக்கமாக சாப்பிடும் மாத்திரையின் 'வலிமை'யைப் பாதியாகக் குறைத்துவிட்டார் (40 எம்ஜிக்கு பதில் 20 எம்ஜி).
 நல்ல காலமாக, தெரிந்த மருந்துக் கடையானதால் பண்டமாற்று செய்ய முடிந்தது. ஒரு சில சமயங்களில் மருத்துவர்கள், மாத்திரைகளை மாற்றி எழுதும்போது, "இருக்கிறதை முழுதுமாக பயன்படுத்திவிட்டு, பிறகு இதை எடுத்துக் கொள்ளலாம்' என்பார்கள்.
 எங்கள் பகுதியிலேயே உள்ள மருந்துக் கடையில், மிகப் பிரபலமான எங்கும் இருக்கக் கூடிய மாத்திரை (தலை சுற்றலுக்கானது) கிடைக்கவில்லை. வேறொரு வைட்டமின் மாத்திரையைக் கேட்டபோது, முன்பே பதிவு செய்ய வேண்டுமென்று பதில் அளித்தார்கள்.
 மத்திய அரசு தொடங்கியுள்ள "மக்கள் மருந்தகம்' அனைத்து இடங்களிலும் பரவலாக இருப்பதில்லை. அங்கு கிட்டத்தட்ட 50% கழிவு தருகிறார்கள். ஆனால், பொதுவாக மருத்துவர் சீட்டில் குறிப்பிட்டிருக்கும் மாத்திரைகள் கிடைப்பதில்லை என்கிறார்கள்.
 அதே மூலக்கூறு (ஜெனரிக்) கொண்ட வேறு மாத்திரைகள்தான் இருப்பிலிருக்கும். என் அலுவலக நண்பர்கள் சிலர் டாக்டரின் ஆலோசனையைக் கேட்டு பயனடைந்திருக்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலானோருக்கு அவர்கள் வழக்கமாக சாப்பிடுவதைத் தவிர வேறு பெயர் கொண்ட மாத்திரைகள் ஒத்துக் கொள்வதில்லை.
 குடும்ப மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் மாத்திரைகளை உட்கொள்ளுவதில் ஒரு வசதி உண்டு. உடனடியாக ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அவரிடமே உரிமையுடன் கைப்பேசியிலோ, மின்னஞ்சலிலோ ஆலோசனை கேட்டுத் தெளிவு பெறலாம்.
 தற்செயலாக என் மகன் வலைதளத்தில் தேடியபோது இருபது சதவிகிதம் குறைவாக மருந்துகள் விற்கும் கடைகள் தென்பட்டன. ஆனால் அவை மொத்த வியாபாரிகளுக்கானவை. எனவே அவற்றுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் உண்டு. சிறப்பு நிபுணர் பரிந்துரைத்த ஒரு மாதத் தேவைக்கான மருந்துகளை வாங்கியபோது, அது மிகவும் மலிவாக இருந்தது. அதாவது சுமார் 16% குறைவு.
 இத்தகைய கடைகளில் மருந்துகளைப் பெறுவதற்கு ஒரு சில நடைமுறைகள் உண்டு. மருந்துச் சீட்டை நகலெடுத்து, நோயாளியின் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களில் மருந்துகள் வீட்டுக்கே வந்துவிடும். ஒரு கடையில், தொகை செலுத்திய மறுநாள், நாமே சென்று மாத்திரைகளைப் பெற வேண்டும். இவற்றில் முக்கியமான விதி என்னவெனில், விற்கப்பட்ட மாத்திரைகள் எக்காரணத்துக்காகவும் திரும்பப் பெற மாட்டாது.
 மத்திய அரசின் "தேசிய மருந்துவிலை அதிகார மையம்' ஒன்று உள்ளது. அது நிர்ணயித்த பட்டியலில் சில "அத்தியாவசிய' மருந்துகள் உள்ளனவாம். அது சரிதான். ஆனால் எது அத்தியாவசியம் என்பதை யார் முடிவு செய்வது? இதய வால்வில் லேசான பிரச்சனை உள்ள ஒருவருக்கு தினம் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டிய மாத்திரையின் விலை அதிகம்தான்.
 "தற்சார்பு இந்தியா என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம். ஆனால் மருந்துகளின் மூலப்பொருளில் 70 சதவிகிதம் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன. இதைக் குறைக்க வழிமுறைகளைக் கண்டறிவதுதான் முக்கியம்' என்கிறார் ஒரு மருத்துவ நிபுணர்.
 மருந்துகளின் விலையும், மொத்த விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைந்துள்ளது. இடுபொருள், மின்சாரம், போக்குவரத்து செலவு போன்றவற்றால் அண்மையில் மருந்துகளின் விலை மேலும் உயர்ந்துள்ளது. மனிதரின் ஆரோக்கியத்துக்கு உடல் நலமும் மன நலமும் முக்கியம். மனநலம் பெரும்பாலும் குடும்பச் சூழலைப் பொறுத்தே அமைகிறது. என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், திடீரென்று உடல் நலிந்து போனால் மருத்துவர்களையும், மருந்துகளையும்தான் நாட வேண்டியிருக்கிறது.
 பிறருக்கு இடைஞ்சல் அளிக்காமல் இயல்பாக நடமாடத் தேவையான மருந்துகளில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் தரலாமே? எல்லா மருந்துகளிலும் 15 சதவிகிதம் குறைத்து உதவினால், அது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாமாகவே அமையும்.
 
 இன்று (ஏப். 7) உலக சுகாதார நாள்.



Read in source website

 கற்காலத்தில் மனிதர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி வாழ்ந்து வந்தார்கள். நாகரிகம் வளர வளர அவர்கள் தாங்களாகவே சில குறிக்கோள்களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையை நன்முறையில் எடுத்துச்செல்ல, அவர்களுக்கு ஒரு பற்றுக்கோல், ஒரு பிடிமானம் தேவைப்பட்டது. அதுவே பக்தி நெறி அல்லது ஆன்மிகம். அதன் வெளிப்பாடாக அவர்கள் தங்களுக்கு நன்மை செய்யும் காற்று, சூரியன், நெருப்பு, நீர் முதலானவற்றை வணங்க ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்ல தாம் காணும் மரங்கள், மிருகங்கள், கோள்கள், இடி, மின்னல், மழை ஆகியவற்றையும் வணங்கலானார்கள்.
 அவை எல்லாவற்றுக்கும் வடிவமும் பெயரும் கொடுத்து அவற்றுக்குத் தனிப்பட்ட சக்திகளைத் தொடர்புபடுத்தித் தங்கள் வாழ்க்கையை இச்சக்திகளோடு இணைத்துக் கொண்டார்கள். நல்லவை செய்தால் இச்சக்திகளின் அருள் கிடைக்கும் என்றும், தீயவை செய்தால் இச்சக்திகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று நம்பி, முடிந்த வரையில் நல்லறம் பேணி வாழ்ந்தார்கள்.
 இவ்வாறு, மனித குலத்தை ஆற்றுப்படுத்த மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதே ஆன்மிகம் எனும் பக்திநெறி. ஆன்மிகம் என்னும் பற்று, தான் வளர்ந்ததோடல்லாமல், சமயம், கலை, மொழி, இலக்கியம், அறிவியல், நல்லொழுக்கம் என்று பலவற்றையும் சேர்த்து வளர்த்தது. ஆன்மிகத்தின் பாதையிலேயே மனித குலத்தின் பயணம் தொடர்ந்தது.
 ஆனால், அதே ஆன்மிகம், இன்று மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் மாறிவிட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. அன்றைக்கு மனித குலத்துக்கு அமைதியையும் அடக்கத்தையும் போதித்த ஆன்மிகம், இன்று ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றின் பாதையில் செல்வது மிகவும் வருந்தத்தக்கது.
 பல்வேறு மதங்களும் சமயங்களும் மொழிகளும் வழக்கிலிருக்கும் நமது நாட்டில், அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய பக்தி நெறி, பிரிவினைக்கு வித்திடலாமா? ஒரு சாராரின் பக்தி சார்ந்த நடைமுறைகள், பிற சாராருக்கு இடையூறாக இருக்கலாமா? ஆன்மிகம் தற்போது எப்படியெல்லாமோ உருமாறியிருப்பதால் சமுதாயத்தில் பல்வேறு சிக்கல்கள் விளைந்திருக்கின்றன.
 முதலாவதாக, ஒலி மாசு. தற்போது அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களிலும் பக்திப் பாடல்களை ஒலிபெருக்கிகள் மூலம் மிகுந்த சத்தத்துடன் ஒலிபரப்புவது வாடிக்கையாகிவிட்டது. முன்பு, கோயில்களில் ஓதுவார்கள் பக்திப் பரவசத்துடன் தேவாரத்தையும் திருவாசகத்தையும் மனமுருகிப் பாடுவார்கள். அவற்றைக் கேட்கும்போதே நம் மனதில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். இப்போது குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்ட இரைச்சலான பாடல்களை ஒலிபெருக்கியின் மூலம் அலற விடுகிறார்கள். அவற்றைக் கேட்கும்போது எரிச்சலும் ஆத்திரமுமே உண்டாகின்றன.
 கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. இரு மதங்களுக்கான பண்டிகையும் சேர்ந்து வரும் காலங்களில் இரு மத வழிபாட்டுத் தலங்களிலும் ஒலிபெருக்கி சத்தம் காதைத் துளைக்கிறது. வேறு வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் ஒரே பகுதியில் இருக்கும் பட்சத்தில் பல சமயங்களில் இது மோதலுக்கு வழி வகுக்கிறது.
 திருவிழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். இரவு முழுதும் பாட்டு, கூத்து, விடிய விடிய பட்டாசுகளை வெடிப்பது என்று எல்லோருக்கும், குறிப்பாக முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாகி விட்டிருக்கிறது இன்றைய பக்தி!
 ஒலி மாசு உண்டாக்கும் காரணத்தால் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2018-இல் ஒரு பொதுநல வழக்கின் தீர்ப்பில் உத்தரவிட்டது. மேலும், அவ்வாறு பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ஒலிபெருக்கிகளையும் உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டது.
 இந்த உத்தரவுகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் "ஒலிபெருக்கி பக்தி' கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு வழிபாட்டுத் தலம் கட்டப்படும்போதே, ஒலிபெருக்கிக்கென பிரத்யேகமாக கம்பம் வைக்கப்படுகிறது. சில வழிபாட்டுத் தலங்களில், திசைக்கொன்று என்று நான்கு திசைகளிலும் நான்கு ஒலிபெருக்கிகளின் துணையுடன் பக்தி நெறி பரப்பப்படுகிறது.
 ஒலி மாசு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரிந்தும் யாரும் இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. இது குறித்து காவல் துறையிடமோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமோ புகார் அளித்தாலும் இந்த பிரச்னை, மத நம்பிக்கை தொடர்பானது என்பதால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
 இரண்டாவதாக, ஆக்கிரமிப்புகள். ஒரு சாதாரண கட்டடத்தைக் கட்டுவதற்கும் கோயிலைக் கட்டுவதற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. கோயில்களைக் கட்டுவதற்கென்று சில ஆகம விதிகள் இருக்கின்றன; வழிபடுவதற்குரிய கால நேரங்கள் உள்ளன; வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் இன்று இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஒரு கோயிலைக் கட்டலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
 சாலையோரம் திடீரென்று ஒரு சூலம் முளைக்கும்; அடுத்த நாள் இரண்டு சாமி படங்கள் காணப்படும்; பிறகு ஒன்றிரண்டு கடவுள் சிலைகள் வந்து சேரும்; இரும்பினால் மறைப்பு தோன்றும்; யார்யார் வீட்டிலிருந்தோ வீட்டுக்குப் பயன்படுத்தியது போக மிச்சமிருந்த செங்கற்களும் ஓடுகளும் பளிங்குக் கற்களும் வந்து சேர, ஒரே மாதத்தில் கலவையான ஒரு கட்டடம் எழும்பி, கோயில் என்ற பெயருடன் சாலையையே மறைத்து நிற்கும். யாரோ ஒருவர் மணியடித்து பூசை செய்ய, பக்தி மயமான கூட்டம் ஒன்று சாலை வரை நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு போகும்.
 இதுதான் இன்றைய ஆன்மிகம்; இன்றைய பக்தி. இப்படி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்களில் உள்ள சுவாமிக்கு காலத்துக்குத் தகுந்தாற்போல் பெயர்களை வைத்து ஊரறிய ஆன்மிக சேவை நடந்து கொண்டிருக்கிறது.
 இப்படிப்பட்ட கோயில்கள் காடுகளையும் விட்டுவைப்பதில்லை. நம் நாட்டு வனங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு தெய்வம் இருக்கிறது. மக்கள் குறிப்பிட்ட காலங்களில் வனங்களுக்குள் சென்று அத்தெய்வங்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள். சபரிமலை, திருவண்ணாமலை, அழகர் கோயில், சதுரகிரி, வெள்ளியங்கிரி, மருதமலை, திருப்பதி போன்ற கோயில்களுக்கு பத்தர்கள் முறைப்படி விரதமிருந்து, புலால் தவிர்த்து, நாட்கணக்கில் நடந்தே சென்று கடவுளை வழிபட்டனர். அப்போது மிகவும் கடினமான பயணம் என்ற காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சென்றனர்.
 அதனால் வனங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமலிருந்தது. இப்போதோ சிறியனவாக இருந்த கோயில்களெல்லாம் பெரிதாக வளர்ந்து, பக்தர்களின் வசதிக்கெனச் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள், கடைகள் எல்லாம் வந்துவிட்டன. மக்களும் பக்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொழுபோக்கும் புதுமையும் வேண்டி கூட்டம் கூட்டமாக கூச்சலிட்டும் கும்மாளமிட்டும் செல்கிறார்கள். இதன் பெயரா பக்தி?
 இந்த ஆக்கிரமிப்பு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிட்டு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாமக்கல்லில் ஒரு பொதுப் பயன்பாட்டு வீதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. "ஒரு பொது இடத்தை ஆக்கிரமிப்பது கடவுளே என்றாலும், அதை அகற்ற இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்,' என்று கூறியதோடல்லாமல், " நமக்குப் போதுமென்ற அளவில் கோயில்கள் உள்ளன. எந்தக் கடவுளும் பொது இடத்தை ஆக்கிரமித்துத் தனக்குக் கோயில் கட்டுமாறு கேட்கவில்லை. ஆகவே இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை இந்நீதிமன்றம் அனுமதிக்காது' எனக் குறிப்பிட்டு இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை இடித்துத்தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
 ஆன்மிக வளர்ச்சியில் இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். காலை பத்துமணி. அன்று வெள்ளிக்கிழமை. வங்கி ஊழியர் ஒருவர் நிதானமாக மணியடித்து பூசை செய்து எல்லோருக்கும் பிரசாதம் தந்தார். வாடிக்கையாளர்கள் எரிச்சலோடும் கோபத்தோடும் ஒன்றும் சொல்ல முடியாமல் காத்துக் கொண்டிருந்தனர். வேலை அப்படியே நின்று விட்டது. ஒருவரின் தனிப்பட்ட பக்தி உணர்வால், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் தடைப்படுவது, அதுவும் பணி நேரத்தில் தடைப்படுவது சரியா?
 இன்னொரு நிகழ்ச்சியையும் குறிப்பிட்டாக வேண்டும். மாநாகராட்சியின் மண்டல அலுவலகத்திற்குத் துணை ஆணையாளரை, பணி நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்தேன். காலை பதினொரு மணி. அவ்வலுவலகத்துக்கு இரண்டு வாசல்கள் உண்டு. நான் ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தால் யாரையும் காணோம். மற்றொரு வாசலருகில் சென்று பார்த்தால் ஒரே கூட்டம்.
 அங்கு ஒரு சிறு கோயில் உண்டு. அன்று ஆடி வெள்ளியாம். அதனால் ஒரு ஊழியர் பூசை செய்ய, துணை ஆணையாளர் வழிபட, ஊழியர்களும் பார்வையாளர்களும் மற்றவர்களும் பக்தி வழிய கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
 பிறகு தட்டு தட்டாக பொங்கலும் புளி சாதமும் வழங்கப்பட்டன. எல்லோரும் சாப்பிட்டு முடித்து அலுவலகப் பணியை ஆரம்பிக்க மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. "செய்யும் தொழிலே தெய்வம்' என்று முன்னோர் கூறியிருப்பதை மறந்து, தொழிலை, கடமையை புறக்கணிக்கச் செய்வதா ஆன்மிகம்?
 மனிதனை நல்வழிபடுத்த வேண்டிய ஆன்மிகம், பாதை மாறி, பக்தி நெறி பக்தி வெறியாக மாறுவது நாட்டுக்கு நல்லதன்று. அரசும், உண்மையான இறை பக்தர்களும் சேர்ந்து, சில கட்டுப்பாடுகளை வகுப்பது நலம் பயக்கும்.
 
 கட்டுரையாளர்:
 சமூக ஆர்வலர்.
 



Read in source website

அனைவரும் ஆதாம் வழியினரே

உலக மக்கள் அனைவரும் ஆதிப் பிதா ஆதாம் வழி வந்தவர்களே என்ற அடிப்படைக்கிணங்க மனிதர்களிடையே உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமோ, நிற, மொழி எனும் வேற்றுமைகளோ ஏற்பட ஏதுவில்லை. குலம், கோத்திரம் போன்ற முறைகள் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளவேயன்றி வேறு எதற்காகவும் இல்லை என்பதைத் திருமறை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை” (திருக்குர்ஆன் 49:13)

உலகெங்கும் இறை தூதர்கள்

காலந்தோறும் மக்களிடையே ஏற்படும் மனமாச்சரியங்களைப் போக்கி அவர்களை இறைநெறியில் வழி நடத்த உலகெங்கும் இறை தூதர்கள் அவ்வப்போது இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் என இஸ்லாமிய மரபு மொழிகிறது. இவர்கள் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இனத்திலும் மொழியிலும் பிறந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இவர்களுள் முதல் இறை தூதர் முதல் மனிதராகிய ஆதாம் (அலை) ஆவார். இறுதி நபி முஹம்மது (சல்) ஆவார். இஸ்லாமிய நெறியானது முதல் மனிதரும் நபியுமான ஆதாம் தொடங்கி வளர்ந்து வந்ததாகும். இஸ்லாமிய மார்க்கமாகிய இறைநெறியை நிறைவு செய்தவர் நபிகள் நாயகம் (சல்) ஆவார்.

இன்றையத் தேவை சகிப்புணர்வே

இன்றைய மனிதகுலமாச்சரியங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது சகிப்புத்தன்மை இன்மையேயாகும். சிறுபான்மை சமய, இன, மொழி பேசும் மக்களிடையே பெரும்பான்மையினரும், அதேபோன்று பெரும்பான்மையினரிடம் சிறுபான்மையினரும் எவ்வாறு ஒத்திணங்கி சகிப்புணர்வோடு வாழ்ந்து வளம் பெறுவது என்பதற்கு நாயகத் திருமேனியின் வாழ்வும், வாக்கும் அரிய சான்றாக அமைந்துள்ளதெனலாம். பல்வேறு இன, மொழி, சமயங்களைக் கொண்ட இந்திய மக்களிடையே சகிப்புணர்வு அழுத்தம் பெற வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகும்.

இந்திய சமயங்களின் அடித்தளப் பண்பு

இந்திய சமயங்கள் அனைத்தும் சகிப்புணர்வையே பெரிதும் வலியுறுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால் சமயங்களின் அடித்தளப் பண்பாக அமைந்துள்ள இவ்வுயர் பண்பை மறந்துவிட்டதால் அல்லது பேணி நடக்க விழையாத காரணத்தால் எத்தனையோ இடர்பாடுகள் இன்றைய வாழ்வில் தலைதூக்கி, அமைதியின்மைக்கும் கலவரச் சூழலுக்கும் காரணமாகின்றன.

எந்தவொரு சமய, இன, வகுப்பு, மொழி மக்களாயினும் அவர்கள் இணக்கத்தோடும் ஒற்றுமையோடும் ஒத்திணங்கி வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

அது மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மதங்களும் அவற்றின் வேதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவையே என்பதையும் அவை அனைத்தையும் முஸ்லிம்கள் மதிக்க வேண்டும் என்பதையும் இஸ்லாமிய அடித்தளப் பண்புகளாக வற்புறுத்தப்படுகின்றன. இதற்கு மாறு செய்வோர் பாவம் செய்தவர்களாவர் என இஸ்லாம் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறது. 

அடிநாள் தொட்டே சகிப்புணர்வு

பெருமானாரின் பெருவாழ்வில் அடிநாள் தொட்டு அரசோச்சி வந்த பண்பு சகிப்புணர்வாகும். சகிப்புத் தன்மைக்கோர் இலக்கணமாக ஆரம்ப காலம் தொட்டே விளங்கியவர் என்பதை அவரது வரலாற்றுச் சுவட்டில் தெளிவாகக் கண்டுணர முடிகிறது.

ஹிரா குகையில் வானவர் மூலம் இறைநெறி பெற்ற பெருமானார், அதைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மக்காவில் நண்பர்களிடையே ரகசியமாகப் பரப்பி வந்தார். மதினா நகர் வந்த பிறகே பெருமானார் பகிங்கரமாகப் பிரசாரம் செய்யலானார்.

நபிகள் நாயகம்(சல்) மதினா வருமுன்னர் அந்நகர மக்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரே இஸ்லாமிய நெறியை ஏற்று ஒழுகினர். மற்றபடி கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் மற்றும் பற்பல சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் பெருமளவில் கொண்ட நகரமாகவே மதினா விளங்கியது.

அகதிப் பிரச்சினை தீர்த்த அண்ணலார்

நபிகள் நாயகம் (சல்) மதினாநகர் சென்றபின்னர் மக்காக் குறைஷியர்கள் செய்த கொடுமைகளைத் தாள முடியாத முஸ்லிம்கள் தங்கள் சொத்து, சுகம், உற்றார் உறவினர்களையெல்லாம் துறந்து அகதிகளாக மதினா நகர் வந்தனர். இவ்வாறு வந்து சேர்ந்த அகதிகளிடம் வேறு எதுவும் இல்லாத நிலை. இவர்களின் தொகை சில நூறுகளாகும்.

இவ்வாறு வந்து சேர்ந்த மக்கா நகர முஸ்லிம் அகதிகளுக்கு மறுவாழ்வு அமைத்துத் தர வேண்டிய அவசிய, அவசரப் பிரச்சினை எழுந்தது.

அகதிப் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை இந்திய மக்களாகிய நாம் பலமுறை பார்த்து அனுபவித்தவர்கள்; இன்றும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள்.

அன்றைய மதினா நகரின் பொருளாதார நிலையும் வளமானதல்ல. வறுமைக் கோட்டை ஒட்டிய நிலை. அந்நிலையில் மதினா வந்த முஸ்லிம் அகதிகளை மக்கா நகருக்கே விரைந்து திருப்பியனுப்புமாறு மக்கா குறைஷியர் விடுத்த எச்சரிக்கை வேறு; இதனால் மதினா வந்திருந்த மக்கா முஸ்லிம் அகதிகளின் நிலை இக்கட்டானதாக இருந்தது.

இந்நிலையில் மதினா வாழ் முஸ்லிம் குடும்பத் தலைவர்களைப் பெருமானார் அழைத்தார். அகதிகளாக வந்துள்ள மக்கா நகர முஸ்லிம் குடும்பமொன்றை மதினா முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றும் ஏற்றுக்கொள்ள வேணடும் என்றும் அவ்வாறு இணைந்த இரு குடும்பத்தவர்களும் ஒன்றாக உழைத்துப் பெருளீட்டிச் சமமாகப் பகிர்ந்து ஒத்திணங்கி ஒரே குடும்பமாக வாழ வேண்டும் எனவும் யோசனை கூறினார். ஆக்கப்பூர்வமான இவ்வாலோசனையை ஏற்ற மதினா முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் முழுமனதுடன் முஸ்லிம் அகதிகளை விரும்பி ஏற்றனர். இதன் மூலம் அகதிக் குடும்பத்தவர்க்கு இருப்பிடமும் வேலை வாய்ப்பும் உடனடியாகக் கிடைத்தது. மனிதநேய அடிப்படையில் சகிப்புணர்வும் புரிந்துணர்வும் கொண்ட சூழ்நிலையில் மலைப்பூட்டும் மாபெரும் அகதிப் பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது.

பல்வேறு சமயங்களுக்கிடையே உருவான ஒருங்கிணைப்பு

பெருமானார் மதினா நகர் வந்து சேர்ந்தபோது அங்கு பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள்ளும் கிறிஸ்துவ, யூத சமய மக்கள் பெருமளவில் வாழ்ந்தனர். அவர்களுக்கிடையே எவ்வித ஒற்றுமை உணர்வும் இல்லை. ஒரே இனத்தைச் சார்ந்த இரு வேறு கூட்டத்தால் அற்பக் காரியங்களுக்காக முடிவில்லாத சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபடுவது அவர்தம் வழக்கமாகவே இருந்து வந்தது. இதற்கிடையில் வெளியார்களின் தாக்குதலும் அடிக்கடி நிகழ்ந்தது. இதனால் கடுமையான உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது. இக்காரணங்களால் எல்லா வகையிலும் மதினா நகர் மக்கள் ஒற்றுமையுணர்வற்றவர்களாகவும் சகிப்புணர்வில்லாதவர்களாகவும் பிளவுண்டு கிடந்தனர். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒட்டு மொத்தத் தலைமை ஏதும் அந்நாளில் அப்போது மதினாவில் உருவாகியிருக்கவில்லை.

இந்நிலையை மாற்றி பல்வேறு சமயத்தவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட முனைந்தார் பெருமானார் (சல்) அவர்கள்.

முதல் சர்வசமயக் கூட்டம்

முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களான கிறிஸ்துவர்கள், யூதர்கள் மற்றும் பல்வேறு சிறு சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் கொண்ட சர்வமதக் கூட்டத்தைப் பெருமானார் முதன்முறையாகக் கூட்டினார்.

மதினா நகர் மக்கள் சகிப்புணர்வின் அடிப்படையில் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து வாழ வேண்யடிதன் அவசியத்தை அப்போது வலியுறுத்தினார்.

வெளியார்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் தங்களுக்கிடையே மதமாச்சரியங்களோ, சண்டை சச்சரவுகளோ, இன்றி அமைதியாக வாழ வழி காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பல்வேறு சமயங்களை, இனங்களைச் சார்ந்தவர்களாயினும் தங்களின் சக்தி சிதறாமல் ஒருங்கு திரண்டு அமையுமாறு செயல்பட வழிகாண வற்புறுத்தினார். 

முதல் பொது அரசு

பெருமானாரது ஆலோசனை அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. விழிப்புற்ற பல்வேறு சமயத் தலைவர்களும் இவ்வகையில் தங்களுக்கு ஆக்கப்பூர்வமாகத் தொடர்ந்து வழிகாட்ட பெருமானாரை வேண்டினர். இதற்காக மதினா நகரின் தலைவராகவும் அண்ணலாரைத் தேர்ந்தெடுத்தனர். நகர அரசு ஒன்றை அமைத்து வழிகாட்டுமாறும் வேண்டினர். மதினாவின் வரலாற்றிலேயே அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அரசமைத்ததும், தங்களுக்கென ஒரு பொதுத் தலைவரைத் தேர்ந்தெடுத்ததும் அதுவே முதன் முறையாகும்.

உலகின் முதல் பொது அரசு அமைப்புச் சட்டம்

பல்வேறு சமய, இன மக்களின் தலைமையில் பொறுப்பேற்ற பெருமானார் கல்வி கற்காதவராக இருந்தபோதிலும் மதினா நகர அரசுக்கு என பல்வேறு சமயத்தவர்க்கும் பொதுவான அரசு அமைப்புச் சட்டம் (Constitution) ஒன்றை எழுத்துப்பூர்வமானதாக உருவாக்கினார்.

மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக எழுத்து வடிவில் உருவாக்கப்பட்ட முதல் அரசமைப்புச் சட்டம் (Constitution) இதுவேயாகும். அதுவரை மதினா மக்கள் எழுத்துருப் பெறாத சில பொது விதிமுறைகளை மட்டுமே அனுசரித்து வந்தனர்.

எழுத்துருவில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஐம்பத்திரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் பல இன மக்கள் சகிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து வாழ வழிகாட்டும் ஒளி விளக்காக இச்சட்டம் அமைந்துள்ளதெனலாம்.

ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய அடிப்படையில், மனச்சாட்சிக்கிணங்க, ஒருங்கிணைந்து வாழ இச்சட்டம் வழி காட்டுகிறது. முஸ்லிம்கள் தங்கள் மார்க்க அடிப்படையிலும் கிறிஸ்துவ, யூத சமயத்தவர்கள் தங்கள் மத நியதிப்படியும் வாழ முழு உரிமையுண்டு. தங்கள் விருப்பம்போல் சமயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ சடங்கு முறைகளைச் செய்து பேணி நடக்கவோ முழு உரிமை உண்டு. ஒருவர் மற்றவர் சமயத்தைப் பழிக்கவோ இழிவாகப் பேசவோ அறவே கூடாது. மாற்றார் வழிபாட்டுத் தலங்களையும் புனித இடங்களையும் காப்பதில் அனைவருக்கும் சமயப் பொறுப்பு உண்டு.

இதற்கெல்லாம் முடிமணி வைத்தாற்போல் எந்தச் சமயத்தவரிடையேனும் சச்சரவு ஏதாவது ஏற்பட்டால், அவர்தம் சமயச்சூழலுக்குள் தாங்கள் தங்கள் வேத நியதிப்படி அவ்வச் சமயத் தலைவர்களே தீர்ப்பு வழங்கிக்கொள்ள பூரண உரிமை பெற்றவர்களாவர் என அச்சட்டம் விளக்கிக் கூறுகிறது.

இம்மதினா நகர அரசமைப்புச் சட்டத்தில் காணும் மற்றொரு சிறப்பம்சம் சமயப் பாதுகாப்பு மட்டுமின்றி சமூகப் பாதுகாப்புமாகும்.

ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடையே ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளை அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் தங்கள் பிரச்சினையாக்க கருதித் தீர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டவர்களாவர் என விதித்திருப்பதாகும்.

இன்றைய ஐரோப்பிய நாடுகளில் காணும் சமூகப் பாதுகாப்பு உத்திரவாதச் சட்டங்களுக்கு அன்றே முன்னோடிச் சட்டம் உருவாக்கப்பட்டதெனலாம்.

இவ்வாறு முஸ்லிம், கிறிஸ்துவ, யூத சமயங்களைச் சார்ந்த மக்கள் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்ற எண்ணிக்கை பேதமின்றி ஆழ்ந்த சகிப்புணர்வுடன் எவ்விதப் பாகுபாடுமின்றி, முழுச் சுதந்திரத்துடன் தங்கள் சமய அடிப்படையில் வாழவும், தங்கள் மத நம்பிக்கையின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழிவகை ஏற்பட்டது.

இன்றைய மக்களும், அரசுகளும் ஏற்றிப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில் அன்றே பல்வேறு சமய மக்களிடையே சகிப்புணர்வையும், ஒற்றுமையையும், ஒருங்குணர்வையும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டிய பெருமை பெருமானாரையேச் சாரும். 



Read in source website

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தற்காலிகமாக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தைச் செல்லாது என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரின் பிற்பட்ட நிலைமையைக் காட்டுவதற்குப் போதுமான தரவுகளின்றி, எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே அரசு இச்சட்டத்தை இயற்றியிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிவருகின்றன. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் வாயிலாகவே ஒவ்வொரு சமூகத்தவரும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதற்கான விவரங்களைத் தெள்ளத் தெளிவாகப் பெற முடியும். ஆனால், இந்த முறை பெருந்தொற்றின் காரணமாகக் காலதாமதமாக மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்துவிட்டே மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நேரத்தில், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட வன்னியர் சமூகத்தவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் பின்னணியில் அரசியல் கணக்கீடுகள் இருந்தன. அச்சட்டத்தின் காரணமாகவே அதிமுக-பாமக கூட்டணிக்கான நியாயங்கள் கற்பிக்கப்பட்டன. ஏற்கெனவே, மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்துவந்த வழக்குகளின் போக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளியாக இருந்தாலும், இயற்றப்படவிருக்கும் புதிய சட்டம் குறித்து அப்போதைய அதிமுக தலைமையிலான அரசால் போதிய அக்கறை காட்டப்படவில்லை.

சமூகநீதிக் கருத்தையே தமது முதன்மைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள், தேர்தல் அரசியலுக்காக அவசரகதியில் நிறைவேற்றும் இத்தகைய இடஒதுக்கீட்டுச் சட்டங்கள், அவற்றுக்கான தேவையை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில், செல்லாது என்று நீதிமன்றங்களால் அறிவிக்கப்படுவதோடு, கூடவே சமூகநீதிக் கொள்கையையும் பலவீனப்படுத்திவிடுகின்றன.

வன்னியர் சமூகத்தின் அரசியல் குரலாக ஒலிக்கும் கட்சிகளும் அமைப்புகளும் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அடங்கும் மற்ற சமூகங்களின் அமைப்புகளும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அறிவியல்பூர்வமான முறையில் பிற்படுத்தப்பட்ட நிலையை உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டும் தீர்ப்புகளுக்கு இசைந்ததாக அமையும்.

வாக்கு வங்கிக் கணக்கீடுகளோடு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை அணுகுவது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களிடையே தேவையற்ற கருத்து முரண்பாடுகளை உருவாக்கி, சமூக நல்லிணக்கத்தைக் குலைத்துவிடக்கூடும் என்பதை இனிமேலேனும் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் இடைக்கால ஏற்பாடுகளை நாடுவது மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் மற்ற சமூகங்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. கல்வியிலும் சமூக நிலையிலும் பின்தங்கியுள்ள அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அது அவரவர் நிலைக்கேற்ப அறிவியல்பூர்வமாக அமைய வேண்டும். அதுவே சமூகநீதி.



Read in source website

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.

மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக நாடாளுமன்றம் கூடியதும் அங்கே செல்லும் வழியில் மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் நாடாளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை முடியப்போவதை அறிந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகப் பொதுமக்கள் இரவும் பகலுமாக வெயிலிலும் மழையிலும் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னதான் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைதளங்களைத் தடைசெய்திருந்தும் அனைத்துச் சமூகங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, குழந்தைகளைக்கூட கைகளில் ஏந்தியவாறு தெருவில் இறங்கி கோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எ

ந்த அரசியல் கட்சியையோ அமைப்பையோ இனத்தையோ சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக்கொள்வதற்காக அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரம்மாண்டமானதும் ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.

உண்மையில், உயிர் வாழ்வதற்காகவும் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள்தான் அவர்களை இவ்வாறு ஒன்றுகூடவும் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழவும் செய்திருக்கின்றன. அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து, ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களினதும் நெருங்கிய உறவினர்களினதும் நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடு இரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய்விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் முறைகேடாகச் சேர்த்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது.

ஆகவே, மக்கள் ஒன்றுதிரண்டு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சர்களினதும் வீடுகளையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும், அவர்களுக்குச் சார்பான அதிகாரிகளும் பயந்துபோயிருக்கிறார்கள். எந்த அளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, பதவி விலகியுள்ள ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கியிருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாகப் பதவிகளிலிருந்து அகற்றிவிட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்துப் பிரதான அமைச்சுகளிலும் துறைகளிலும் அறிவும் நிபுணத்துவமும் கொண்ட தகுதிவாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்துவதற்காகத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் மக்கள் பணத்தையும் பொதுச் சொத்துகளையும் முறையற்ற வழிகளில் பயன்படுத்தி, ஊழல்களில் ஈடுபட்டு, கறுப்புப் பணம் பெருக வழிவகுத்து நாட்டைக் கடனுக்குள் தள்ளி இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி, தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்கு.

இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டமாகும். காவல் துறையாலும் ராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைதுசெய்யப்படக்கூடுமான, சித்ரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில், பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கியும், வீடுகளிலும் வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்கவிட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் அரசியல்வாதிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டு, நாடே தூய்மையாகிவிடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படாவிட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக்கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

ஜனநாயகத்துக்காகப் பொதுமக்கள் ஒன்றுதிரண்டிருக்கும் இந்தப் போராட்டமானது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும் ஊழல்களும் சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com



Read in source website

ஆட்சியமைத்து ஓராண்டு காலமே ஆகியிருக்கும் தமிழ்நாடு அரசு, காலநிலை பாதிப்பைக் குறைக்கும் தகவமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றைச் சார்ந்து வெளிப்படுத்தும் உத்வேகம், ஆர்வத்தை 2022-23-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை பிரதிபலித்துள்ளது.

மகாத்மா காந்தி நூறு நாள் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குப் (MNREGS) பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 2,800 கோடி ரூபாய் நிதி, தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உருவாக்கும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மட்டுப்படுத்தும் தகவமைப்புடன் மேற்கண்ட திட்டத்தை இணைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர்கள் கடந்த ஆண்டில், 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி 1,000 குளங்களை ஒரு மாதத்துக்குள் உருவாக்கினர். 541 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் உருவாக்கப்பட்ட இந்தக் குளங்கள் மூலம், சுமார் 3.6 லட்சம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஏற்கெனவே சேமிக்கக்கூடிய 40.69 கோடி லிட்டர் சேமிப்புத் திறனையும் தாண்டிய கூடுதல் அளவு இது.

இந்திய மக்கள்தொகையில் 4 சதவீதமும், இந்திய நிலப்பரப்பில் 6 சதவீதமும் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த நன்னீரில் 2.5 சதவீதத்தை மட்டுமே தமிழ்நாடு பெறுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தைத் தவிர்த்து, மொத்த வருடமும் மாநிலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் திருவண்ணாமலையில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி ஆண்டு முழுவதும் விவசாயம், வீட்டுத் தேவைக்குப் போதுமான தண்ணீரை உறுதிசெய்யும். அதே நேரத்தில், எதிர்காலத்தில் நேரக்கூடிய வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் சமூகத்தைத் தயார்ப்படுத்தும். சிறு காடுகளை உருவாக்குதல், குன்றுகளைப் பசுமையாக்குதல், நாற்றங்கால் வளர்ப்பு, காட்டில் மரங்கள் நடுதல், மேய்ச்சல் நில மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த அம்சங்களிலும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்திவருகிறது. இவை எல்லாமும் ஒன்றிணைந்து, காலநிலை மாற்ற நெருக்கடியின்போது விவசாய வளங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மட்டுப்படுத்த முடியும்.

இதேபோன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையில், கால்வாய், நீர்த்தேக்கத் தூர்வாருதல், நீர்நிலைகளை மீட்பது, அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு சதுப்புநில இயக்கத்தின் மூலம் 100 சதுப்புநிலங்களின் சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தற்போதைய 24 சதவீதத்திலிருந்து 33% சதவீதத்துக்குக் காடுகளை அதிகரிப்பது என்பது போன்ற இலக்குகளை முன்வைத்துப் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தணிப்பதற்கான செயல்பாடுகளை வலுவாக மேம்படுத்தலாம்.

அதே நேரம், நகர்ப்புற நிலப்பரப்புகளிலும் எரிசக்தித் துறையிலும் கார்பன் வாயு வெளியிடப்படும் சூழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில், காலநிலை மீட்சிக்கான முயற்சி முழுமையடையாது. வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புறச் சூழலில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் தகவமைப்புக்குத் தேவையான ஒருங்கிணைந்த அணுகுமுறை கடந்த ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இருந்ததைப் போல், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளில் இல்லை.

2040-ல் நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நகர்ப்புறம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. நகர்ப்புறக் கட்டமைப்புகளில் கார்பன் உமிழ்வை நீக்குவது அவசியம். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்படும் ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கை இந்திய நகரங்கள்தான் பயன்படுத்துகின்றன. மேலும், உலகளவிலான ஆற்றலில் 32 சதவீதத்தைக் கட்டிடத் துறையே பயன்படுத்திவிடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், ஆறு புதிய மாநகராட்சிகள், 28 புதிய நகராட்சிகளை உருவாக்குவதன் மூலம் கட்டிடங்கள், கட்டுமானத் துறை அடுத்த பத்தாண்டுகளில் பெரிய வளர்ச்சியைக் காணும். இதற்கு வலுசேர்க்கும் வகையில், நடப்பு நிதிநிலை அறிக்கையில், சென்னை வண்டலூர் புறநகர்ப் பகுதியில் 62 கி.மீ. நீளத்துக்கு, ‘வளர்ச்சிப் பாதை’யை அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் உள்ள தரைவெளிக் குறியீடு (கட்டிடத் தளத்தின் தரைப் பகுதிக்கும் கட்டிடத்தின் தரைப்பகுதிக்கும் இடையே இருக்கும் விகிதம்) தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 60 திட்டங்களை மறுவடிவமைக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது. வீடற்ற கிராமப்புறக் குடும்பங்களுக்கு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட’த்தின் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளை அடுத்த ஐந்தாண்டுகளில் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆற்றல் திறன் மேம்பாடு, குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் அவற்றை உறுதிசெய்வதற்குமான ஒரு முன்னுதாரண வாய்ப்பும் இதில் உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில், கார்பன் உமிழ்வு நீக்க முயற்சிகளில் நகரங்களை அரசு புறக்கணித்துவிட்டது என்று சொல்ல முடியாது. உண்மையில், 2021-22 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும், பூங்காக்கள் கட்டுவதற்கும், மாநிலம் முழுவதும் மரம் வளர்ப்பதற்கும் அறிவிக்கப்பட்ட ‘நமக்கு நாமே திட்டம்’ போன்ற முயற்சிகள் நகரங்களுக்குள்ளேயே கார்பனை கிரகிக்கும் தீவுகளை உருவாக்கும். 80 லட்சத்துக்கும் அதிகமான தாவரங்கள், மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்ட லண்டனின் உலகப் புகழ்பெற்ற, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 326 ஏக்கர் கியூ ராயல் தாவரவியல் பூங்காவைப் போல் சென்னையிலும் கார்பன் உமிழ்வை உள்வாங்கும் நுரையீரல் போன்றதொரு இடத்தை உருவாக்குவது சார்ந்து நடப்பு நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. காலநிலை மீட்சி பெரிய அளவில் சாத்தியப்படுவதற்குக் கட்டிடங்களில் கார்பன் உமிழ்வு நீக்கும் முயற்சிகளும் இத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படாத மற்றொரு முக்கியமான துறை எரிசக்தித் துறை. தமிழ்நாடு ஏற்கெனவே புதுப்பிக்கத்தக்க - சூரிய, காற்று ஆற்றல் (RE) உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஆனால், உற்பத்தி மாறுபாடு காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்துச் செல்வது சவாலாக உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்து, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை மின் விநியோகக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கத் தவறியதே 2,500 மெகாவாட் நிகர மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளானதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பரந்த அளவில் நிறுவப்பட்டு, சரியாகப் பயன்படுத்தப்படுவதை, மின்கல சேமிப்பகம் கொண்ட விநியோகக் கட்டமைப்பை உறுதிசெய்து, முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு உருவாக முடியும். காலநிலை மீட்சி, காலநிலை மாற்றத் தணிப்பு, கார்பன் உமிழ்வு நீக்கம் ஆகியவை சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், கொள்கைகள், நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்படுகிறது.

- கட்டுரையாளர்கள் இருவரும் உலக ஆதார நிறுவன (WRI) காலநிலை, ஆற்றல் திட்டத்தின் இந்திய இயக்குநர்கள். தமிழில்: ராஜசங்கீதன்

தொடர்புக்கு: nambi.appadurai@wri.org, bharath.jairaj@wri.org



Read in source website