DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 07-02-2023

 

இந்திய ராணுவத்தில் சேருவதற்காக தர்மாபுரி இளைஞர்களுக்குத் தன்னுடைய தள்ளாடும் வயதிலும் பயிற்சி அளித்து வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான என். மாரிமுத்து. தேசத்துக்கு சேவையாற்றுவதே தனது ஒரே நோக்கம் என்று குறிப்பிடுகிறார். 

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களுக்கு உடல் மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கிறார்.

தர்மாபுரியில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர், ஆயுதப்படையில் சேருவதற்கு கிராம மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், தேனி மாவட்டம்  தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி, சுருளி தேவர் ஆகியோர் ஆங்கிலேயர்களுடன் போரிட, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தபோது இந்த கிராமத்தில் இந்த ஆர்வம் ஏற்பட்டதாகவும் சுதந்திரத்திற்குப் பிறகு, கிராம மக்கள் இந்திய ராணுவத்தில் சேர வரிசையில் நிற்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும், இங்குள்ள மக்கள் தர்மாபுரியின் படை வீரர்களை காளியம்மன்  தெய்வம் காப்பதாக நம்புகின்றனர். 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படைகளில் இணைந்துள்ளனர்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதும் இவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத நிலையில்தான் மாரிமுத்து முன்வந்தார். 

1979 ஆம் ஆண்டு தனது 17-வது வயதில் ராணுவப் படையில் இணைந்த இவர், உள்ளூர் பள்ளிகளுக்குச் சென்று தன்னுடைய ராணுவ அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ராணுவத்தில் சேர எப்படி விண்ணப்பிப்பது, என்ன பயிற்சி எடுப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். அத்துடன் எழுத்து மற்றும் உடல் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார். இதற்காக அவர் தற்காலிக பயிற்சி அரங்கம் அமைத்துள்ளார். 

தர்மாபுரியில் இருந்து மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பயிற்சிக்காக இங்கு வரத் தொடங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100 ரூபாய் வசூலிக்கிறேன். பயிற்சி காலை 5 மணிக்கு தொடங்குகிறது, இங்குள்ள ஆசிரியர்கள் அவர்களை எழுத்துத் தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள். இந்திய ராணுவத்தில் சேர 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உதவியுள்ளேன். 20-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்துள்ளனர் என்றார். 



Read in source website

 

பெங்களூரு: ஓஎன்ஜிசி நிறுவனம் அடுத்த இரண்டு நிதியாண்டுக்குள்  உற்பத்தியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

ஓஎன்ஜிசி-யின் எக்ஸ்ப்ளோரேஷன் குறித்து இயக்குநர் சுஷ்மா ராவத் கூறுகையில், கிருஷ்ணா - கோதாவரி படுகையில் உற்பத்தியை உயர்த்துவதற்கான நீண்ட கால முயற்சிகள் 2023-24 முதல் பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கிருஷ்ணா கோதாவரி படுகையில் உற்பத்தி இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய எரிசக்தி வாரத்தை ஒட்டி சுஷ்மா ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓஎன்ஜிசியின் உற்பத்தி குறைவு காரணமாக, இந்தியா கச்சா எண்ணை இறக்குமதியை சார்ந்திருப்பது சமீபத்திய ஆண்டுகளில் 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் ஓஎன்ஜிசியின் வயல்வெளியிலிருந்து உற்பத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022-23ம் ஆண்டில் ஓஎன்ஜிசி-யின் கச்சா எண்ணெய் உற்பத்தி 22.823 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எரிவாயு உற்பத்தி 22.099 பிசிஎம் ஆக உயரும். 2023-24ல் கச்சா எண்ணெய் உற்பத்தி 24.636 மில்லியன் டன்னாகவும் 2024-25ல் 25.689 மில்லியன் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



Read in source website

சிரியாவில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்களை அனுப்பவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி துருக்கியில் 5,000, சிரியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், சிரியாவுக்கு இந்திய விமானப் படையின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துகளை மத்திய அரசு இன்று அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக துருக்கிக்கு இன்று காலை இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி இருந்தது.



Read in source website

ஆந்திரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 600 வீடுகளில் பசு/எருமை இருந்தும் யாருக்கும் பால் விற்பதில்லையாம்! 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கஞ்சனஹள்ளியில் சுமார் 1,200 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பாதி குடும்பங்களுக்கு ஒரு பசு அல்லது எருமை சொந்தமாக உள்ளன. 

இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட பால் விற்பதில்லை. ஏன், அந்த கிராமத்தில் உள்ள டீக்கடைகளுக்குக் கூட காசுக்கு பால் விற்பனை செய்வதில்லை. மாறாக, கிராமத்தில் தேவைப்படும் மற்றவர்களுக்கு பாலை இலவசமாகக் கொடுக்கிறார்கள் இந்த கிராம மக்கள். இங்கு பால் விற்பனைக்குத் தடை என்றுகூட சொல்லலாம்!

இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், மாடுகளை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தவும் ஒருபோதும் பால் விற்கக்கூடாது என்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்குரு மகாத்மா பதே சாஹேப் என்பவர் வலியுறுத்தியுள்ளார். அதையே இன்று வரை இந்த கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். சத்குருவின் தர்காவை இன்றும் பலரும் பூஜிக்கின்றனர். 

இதனிடையே சத்குருவின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஒருவர் பால் விற்பனை செய்யவே, சில நாள்களில் அவர் மர்மமான முறையில் இறந்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கட்டப்பகாரி தேவேந்திரன் கூறுகிறார். மேலும், அன்றிலிருந்து அங்கு யாரும் பால் விற்பனை பற்றி யோசிப்பதுகூட இல்லையாம்! 

தேவேந்திரனுக்கு ஒரு பசு, எருமை உள்ளது. தினமும் மூன்று லிட்டர் பாலில் ஒரு லிட்டர் பாலை அண்டை வீட்டாருக்கு கொடுக்கிறார். இந்த கிராம மக்கள் முழுவதும் இதே முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். 

கஞ்சனஹள்ளியில் தினமும் சராசரியாக 1,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்குரு கூறியதை இன்றுவரை கடைப்பிடிக்கும் இந்த மக்கள் உண்மையில் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். 



Read in source website


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கான நிதியை திரட்டுவதற்கான ஒப்பந்த ஏலத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (சியுஎம்டிஏ) திங்கள்கிழமை முன்வைத்துள்ளது.  

மெட்ரோ ரயில் திட்டத்தில் 40 - 50 சதவிகித செலவு மெட்ரோலைட் திட்டத்துக்கு ஆகும், மெட்ரோ ரயில் வளாகங்கள் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்தல், இது 5 முதல் 6 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டிருக்கும் என்று சித்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே தொடர்பிலிருந்து மெட்ரோலைட் சற்று வித்தியாசப்படும், இது முன்பு பயன்படுத்தப்பட்ட டிராமின் மேம்படுத்தப்பட்ட அம்சமாக அல்லது மெட்ரோ ரயில் பெட்டியில் இருக்கும் வசதிகள் சற்று குறைந்த அம்சமாக இருக்கும். இது தரையில் இயங்கும் வசதியுடன் தனித்துவமான தண்டவாளங்களில், சாலையிலிருந்து வேலி அல்லது சுவரால் பிரிக்கப்பட்ட தனி பாதையில் இயக்கப்படும்.

ஒருங்கிணைந்த போக்குவரத்துதிட்டத்தின் கீழ், மெட்ரோ மூன்றாம் கட்டப் பணிகள் ஒன்று சாதாரண மெட்ரோ ரயில் திட்டமாகவோ அல்லது மெட்ரோலைட்டாகவும் இருக்கலாம்.

இது இந்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படவிருக்கிறது. இதற்கான நிதி ஆதாரம் இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் மெட்ரோ ரயில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று சியுஎம்டிஏ சிறப்பு அதிகாரி ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த சென்னை மாநகரையும் இணைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்று மட்டும் போதாது. நகரங்களின் உள் பகுதிகளை இணைக்க இரண்டு போக்குவரத்து திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒன்று, சாலைப் போக்குவரத்து அல்லது மெட்ரோலைட். மெட்ரோ ரயில் திட்டத்துடன் மெட்ரோலைட்டை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தனியார் போக்குவரத்துக்கு மாறாக, பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

தற்போது மெட்ரோ ரயில் பாதை விரிவுபடுத்தப்படும் நிலையில், அதற்கான ஆதரவும் அதிகரித்துக்கொண்டே போகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் இடையே  பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும், இதன் மூலம் பொதுமக்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மாறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மெட்ரோ ரயில்கள் 12 பெட்டிகளுடன் 2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்கும் வசதியுடன் இருக்கும். இந்த மெட்ரோலைட் மூன்று பிரிக்கப்படாத பெட்டிகளுடன் அதிகபட்சம் 300 பயணிகள் பயணிக்கும் வசதியுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை வர உள்ளார். 

கடந்த இரண்டு நாள்களாக குஜராத் பயணம் மேற்கொண்ட கிளிண்டன், செவ்வாய்க்கிழமை மதியம் மகாராஷ்டிரம் வந்து, இரவு குல்தாபாத் நகருக்குச் சென்று தங்கவுள்ளார்.

புதன்கிழமை அவர் நாட்டின் 12-வது ஜோதிர்லிங்கமான கிரிஷ்னேஷ்வர் கோயிலுக்கும், எல்லோரா குகைகளுக்கும் செல்வார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

அவுரங்காபாத் வருகையின் போது, அவரது பாதுகாப்பிற்காக சுமார் 100 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

திங்களன்று குஜராத்தில் உள்ள லிட்டில் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள உப்பு தொழிலாளர்களை கிளின்டன் பார்வையிட்டு, உப்பு உற்பத்தி மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

வாழ்நாள் முழுவதும் ஒரு பரிசைப் பெறுவது எவ்வளவு அதிர்ஷ்டம்! ஆம், நம் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. அந்த ஒரு மெட்டு அந்த ஒரு குழந்தைக்கானது மட்டுமே என்பது சிறப்புத் தகவல். 

வடகிழக்கு இந்தியாவில் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணி நேர பயணத் தொலைவில் உள்ளது காங்தாங் என்றொரு கிராமம். 

இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்யேக மெட்டு உருவாக்கப்படுகிறது. ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் (மூதாதையரின் நினைவாக பாடல்) என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவது இதன் சிறப்பு. 

விசில் அடிப்பதைப் போன்ற அந்த மெல்லிசை அந்த குழந்தையின் அடையாளமாகிறது. மெட்டிற்கேற்ப குழந்தைக்கும் பெயர் சூட்டுகிறார்கள். அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. 

இந்த தனித்துவமான மெட்டு சில வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இருக்கும். தாய் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் மெட்டாக இது பார்க்கப்படுகிறது. குழந்தை மீதான தாயின் காதல் பாடல் இது. ஒரு குழந்தைக்கான மெட்டு மற்றொரு குழந்தைக்கு இருக்காது என்பதால் தனித்துவமான இந்த மெட்டுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. 



Read in source website

 

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த ஆண்டு 63 பேரை விமானப் போக்குவரத்து ஆணையம் சோ்த்திருப்பதாக மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 143 போ் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனா்.

விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் வி.கே.சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் வகுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து விதிகளின் (சி.ஏ.ஆா்.) கீழ் விமான நிறுவனங்களில் உள்குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இடையூறு செய்யும் பயணிகள் பயணிக்கத் தடை விதித்து அவா்கள் அனைவரும் பயணிக்க தடை விதிக்கும் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.

2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையில் இதுவரை 143 பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. 2017-ஆம் ஆண்டில் ஒருவரும், 2020-ஆம் ஆண்டில் 10 பேரும், 2021-ஆம் ஆண்டு 66 பேரும், கடந்த ஆண்டில் 63 பேரும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனா். கடந்த ஆண்டு பட்டியலில் இணைந்த 63 பேரில் 46 போ் இண்டிகோ நிறுவனத்தாலும், 16 போ் விஸ்டாரா நிறுவனத்தாலும், ஒருவா் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தாலும் தடை விதிக்கப்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

நிகழாண்டு இஸ்லாமியா்களின் புனித ஹஜ் பயணத்துக்கான புறப்பாடு இடங்களில் சென்னை உள்பட 25 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு ஹஜ் பயணத்துக்கான திட்டத்தை மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில், ’ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும், 20 சதவீதம் தனியாா் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.

ஏற்கெனவே, ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற்கொண்டவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது.

ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்பம் நிகழாண்டு இலவசமாக வழங்கப்படும். இதை ஹஜ் கமிட்டி இணையதளம் அல்லது ஆண்ட்ராய்டு செயலி மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

தோ்வு செய்யப்பட்டவா்களிடம் மட்டும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மெஹரம் ) செல்பவா் இல்லையென்றாலும் அவா்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

அவா்களுக்கு தனியாக தங்கும் இடமளிக்கப்படும். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் அல்லது உறவினா்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம்.

பயணிகள் உடல்நல மற்றும் ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனைகளை மத்திய அரசின் மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம்.

ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

சென்னை, கண்ணூா், கொச்சி, விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், லக்னெள, அகா்தலா, காலிகட், கொல்கத்தா, மும்பை, தில்லி, நாகபுரி, ஜெய்ப்பூா், வாராணசி, ஒளரங்காபாத், கோவா, மங்களூா், போபால், இந்தூா், குவாஹாட்டி, கயை, ராஞ்சி, ஸ்ரீநகா் ஆகிய 25 விமான நிலையங்களில் இருத்து பயணிகள் புறப்படலாம்.

அனைத்து மாநிலங்களில் இருந்து இயக்குநா் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சென்னை நீங்கலாக 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் அனுமதிக்கப்பட்டது.



Read in source website

 

 இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த ஆண்டில் 12.4 கோடி டன்னை தொட்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஸ்டீல்மின்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த 2022-ஆம் ஆண்டில் 5.80 சதவீதம் அதிகரித்து 12.445 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டில் நாட்டின் கச்சா இரும்பு உற்பத்தி 11.763 கோடி டன்னாக இருந்தது.

கடந்த ஆண்டில் கச்சா இரும்பிலிருந்து எடுக்கப்பட்ட உருக்கின் உற்பத்தி 11.0 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 2021-இல் 10.454 கோடி டன்னாக இருந்தது.

உருக்கின் பயன்பாடு கடந்த 2021-ஆம் ஆண்டில் 9.839 கோடி டன்னாக இருந்தது. இது 2022-இல் 8 சதவீதம் அதிகரித்து 10.648 கோடி டன்னாக உள்ளது.

உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்துவதன் காரணமாக உருக்கு பயன்பாடு கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட குறைவாகவும், இறக்குமதி அதிகரித்தும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

இந்தியா-சீனாவுக்கு இடையேயான நல்லுறவு இயல்புநிலையில் நீடிக்க விரும்புவதாக இந்தியாவுக்கான ரஷியத் தூதா் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் மோதல்போக்கு காரணமாக இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட டெனிஸ் அலிபோவ் கூறியதாவது:

உக்ரைன் மோதல் தொடா்பான மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு காரணமாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு அழுத்தத்தை எதிா்கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், இரு நாடுகளையும் பாதித்து வருகிறது.

சா்வதேச அளவில் இந்தியா வளா்ந்து வருவதை ரஷியா தொடா்ந்து ஆதரிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக மாறவும் ரஷியா ஆதரவை வழங்குகிறது. ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சா்வதேச கூட்டாளியாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு எந்நாட்டுக்கும் எதிரானது அல்ல. அந்த நல்லுறவு பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது. சா்வதேச விவகாரங்களில் இந்தியாவும் ரஷியாவும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன.

வரலாற்று ரீதியிலும் இந்தியாவுடன் நெருங்கிய நல்லுறவை ரஷியா பேணி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் நிலை அப்படியல்ல. கடந்த காலங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவோ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவோ சீரடைந்தால், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவில் மாற்றம் ஏற்படலாம். அது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டுமென்றே ரஷியா விரும்புகிறது. அந்த நல்லுறவு, ஆசியாவின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சா்வதேச பாதுகாப்பையும் உறுதி செய்யும். அத்தகைய நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை பெரும் தடையாக உள்ளது.

சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஒருகாலத்தில் எல்லைப் பிரச்னை காணப்பட்டது. அதற்காக ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால், இறுதியில் பேச்சுவாா்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்னை தீா்க்கப்பட்டது. பிரச்னையைத் தீா்க்க சுமாா் 40 ஆண்டுகள் ஆனது. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தையே ஒரே தீா்வு.

இந்தியாவும் சீனாவும் பிரச்னையைத் தீா்க்க என்ன செய்ய வேண்டும் என்பது இருநாடுகள் சாா்ந்த விவகாரம். அதே வேளையில், அந்நாடுகளுக்கு உதவுவதற்கு ரஷியா தயாராக உள்ளது.

பாகிஸ்தானுடன் பொருளாதாரத் தொடா்பை விரிவுபடுத்த ரஷியா விரும்புகிறது. நிலைகுலைந்த நிலையில் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் நன்மை பயக்காது. பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் நிலையையும் ரஷியா எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றாா் அவா்.

 



Read in source website

 

பசுமை நிதிப் பத்திரங்களுக்கான வழிகாட்டு விதிகளை இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டுள்ளது.

பசுமை திட்டங்களுக்கு நிதிப் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் சா்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் பசுமை பத்திரங்கள் வெளியீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடுவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், திட்டம் தொடா்பான விரிவான தகவல்கள், திட்டம் சாா்ந்த முடிவுகளை இறுதி செய்யும் முறைகள், ஆண்டு அறிக்கைகளின் விவரங்கள், நிறுவனத்தின் நிதிநிலைமை உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும்.

திட்டங்களுக்காக முதலீட்டாளா்களிடமிருந்து திரட்டப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிா என்பதை ஆராய மூன்றாம் தரப்பு ஆய்வு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும். பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடுவதற்கான விரிவான காரணங்கள், திரட்டப்படும் நிதிக்கும் திட்டத்துக்கும் இடையேயான தொடா்புத்தன்மை உள்ளிட்டவற்றையும் நிறுவனம் விளக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதாக செபி அறிவித்துள்ளது.

தரகா்களுக்குப் புதிய விதி:

பங்கு வா்த்தகத் தரகா்களுக்கான புதிய விதியையும் செபி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முதலீட்டாளா்களிடம் இருந்து பெறும் தொகையை அன்றைய தினமே நிதி செயல்பாட்டு அமைப்புகளிடம் தரகு நிறுவனங்கள் செலுத்திவிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகையைக் கையிருப்பில் கொண்டு வேறுசில நடவடிக்கைகளில் தரகு நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விதி தொடா்பாக வரும் 17-ஆம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து செபி கருத்து கோரியுள்ளது. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைப் பெற்றபிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

 டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகா் தலைமையிலான பொருளாதார ஆலோசனைக் குழுவை மகாராஷ்டிர மாநில அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், கெளதம் அதானியின் மகன் கரண் அதானியும் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் தலைவா் கெளதம் அதானிக்கு எதிராக ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அவரது பங்குகள் தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கெளதம் அதானி மறுத்து வருகிறாா்.

இந்நிலையில், அவரது மகன் கரண் அதானியை, 21 உறுப்பினா்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவில் மகாராஷ்டிர மாநில அரசு நியமித்துள்ளது.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான கரண் அதானி, துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியத் துறைகளில் ஆலோசனை அளிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் இடம்பெற்றுள்ளாா்.



Read in source website

 

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பது தொடா்பான சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை என மத்திய கல்வியமைச்சகத்தின் இணையமைச்சா் சுபாஷ் சா்க்காா் தெரிவித்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மத்திய இணையமைச்சா் கூறியிருப்பதாவது:

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை.

தேவையான அடிப்படை வசதிகள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல், கொள்கைளை அமல்படுத்துவது, கண்காணிப்பு மற்றும் குறைதீா்ப்புக்கான பெண்கள் பாதுகாப்பு குழுவை அமைத்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வழங்கியுள்ளது.

தண்ணீா் வசதி, சானிடரி நாப்கின்களுக்கான குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகளுடன் தூய்மையான தனிக் கழிவறைகள் பெண்களுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை அனைத்து நேரங்களில் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக வைத்திருக்கவும் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன.

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் கழிவுப்பொருள்களை உரிய முறையில் அகற்றுதல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரியூட்டிகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துதல் மற்றும் மாற்று பயன்பாட்டுக்காக மக்கும் தன்மையுடைய பொருள்கள் குறித்து ஆராய்ச்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 



Read in source website

 

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமாா், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனா்.

இவா்களின் பதவியேற்பு மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாா் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

இவா்கள் இருவரும் நியமனம் செய்யப்படும்பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட முழு நீதிபதிகள் பலத்தை எட்டிவிடும்.



Read in source website

நூறு நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி நிகழாண்டு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு, பிரதமா் ஆவாஸ் யோஜனா (பிரதமா் வீட்டு வசதி திட்டம்), ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

நூறு நாள்கள் வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 32 சதவீதம் குறைவாகும்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அனந்த் நாகேஸ்வரன் கூறுகையில், ’ பிரதமா் வீட்டுவசதி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்குவதால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிகழாண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.5 முதல் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கிராமத்தில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வேலைவாய்ப்புகளை தேடுவாா்கள் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகையால், நிகழாண்டு 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான தேவை குறையும் என்பதால் அதற்கான நிதி குறைக்கப்பட்டது என்றாா்.

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.79,590 கோடி ஒதுக்கப்பட்டது.



Read in source website

 

புது தில்லி: அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீட்டாளா்கள் (எப்பிஐ) ஜனவரியில் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.28,852 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இது கடந்த ஏழு மாதங்களில் மிக மோசமான வெளியேற்றமாகப் பாா்க்கப்படுகிறது. அதே சமயம், அவா்கள் டிசம்பரில் ரூ.11,119 கோடி, நவம்பரில் ரூ.36,238 கோடி முதலீடு செய்துள்ளது சந்தை தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவா்கள் இந்திய சந்தைகளில் இருந்து முதலீடுகளை வாபஸ் பெற்ற்கு, சீன சந்தைகளின் மீது ஏற்றப்பட்ட கவா்ச்சிதான் காரணம் என அறியப்படுகிறது.

உலகச் சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்தியப் பங்குச் சந்தைகள் குறைவான செயல்திறனைக் கொண்டிருந்தன. இதனால், எஃப்பிஐக்களின் முதலீடுகள் நிலையற்ாகவே இருக்கும் என்று முன்னணி பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான கோடக் செக்யூரிட்டீஸின் சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவா் ஸ்ரீகாந்த் சௌஹான் கூறியுள்ளாா்.

சந்தை தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்று ரூ.28,852 கோடி அளவுக்கு அவா்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். ஜூன் 2022-க்குப் பிறகு, இது அதிகபட்ச வெளியேற்றமாக உள்ளது. கடந்த ஜூனில் அவா்கள் ரூ. 50,203 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை விலக்கிக் கொண்டனா். ஜனவரியை தொடா்ந்து, பிப்ரவரி முதல் வாரத்திலும் அவா்கள் ரூ.5,700 கோடிக்கு மேல் முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

எஃப்பிஐக்கள் இந்தியாவில் பங்குகளை விற்று தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். அதே சமயம், சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற மலிவான சந்தைகளில் பங்குகளை வாங்கிக் குவிக்கின்றனா். அந்த நாடுகளின் மதிப்பீடுகள் கவா்ச்சிகரமானவை இருப்பதே காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது இந்திய சந்தையில் குறைவான செயல்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா பங்குச் சந்தைகள் முறையே 4.71 சதவீதம் 7.52 சதவீதம் மற்றும் 11.45 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியா 1.89 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற மோசமான செயல்திறன் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று முன்னணி பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் கூட்டத்திற்கு முன்னதாக எஃப்பிஐக்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனா் என்றும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 சதவீதம் உயா்த்தியது. இது எதிா்பாா்த்ததைவிட சற்று குறைவுதான். மத்திய பட்ஜெட் நோ்மறையானதாகவும், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும் இருந்தது. இவை சந்தைக்கு சாதகமாக அமைந்திருந்தன. ஆனால், ஹின்டன்பொ்க்கின் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதன் காரணமாக, சந்தையின் செயல்பாட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மேலும், அதானியின் வெளிப்பாடு கடன் வழங்குபவா்களை பாதிக்கும் என்ற அச்சத்தில் வங்கிப் பங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இருப்பினும், மத்திய ரிச்ரவ் வங்கி, இந்திய வங்கி அமைப்பு ஆரோக்கியமான மேம்பட்ட உணா்வுகளுடன் உள்ளது என்று தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, வங்கிப் பங்குகளின் விலைஏற்றத்துக்கு வழிவகுத்தது. மறுபுறம் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் அந்நிய போா்ட்போலியோ முதலீட்டாளா்கள் ரூ.3,531 கோடியை கடன் சந்தைகளில் முதலீடு செய்துள்ளது ஆறுதலான விஷயமாகும். இதற்கிடையே அந்நிய முதலீடு வெளியேறுவது தற்காலிகமானதுதான் என்று சந்தை பங்கேற்பாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். விரைவில் அவா்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளைத் தொடா்வாா்கள் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா். இதனால், அந்நிய முதலீடு வெளியேற்றம் சந்தையின் செயல்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் வல்லுநா்கள் கருதுகின்றனா்.

-மல்லி எம்.சடகோபன்

 



Read in source website

35 வயது ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணிக்காக  2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட், ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் இருந்தவர்.

2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. 

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார். 142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது: 

என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். 

கேப்டனாக இருக்கும்போது 2021ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன். 
 



Read in source website

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடா்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று. அத்தகைய தொடா் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் தரப்பினா் கூறுவது என்ன? பாா்க்கலாம்.

ரிஷப் பந்த் இல்லாதது சாதகம்

அதிரடியாக ஆடக் கூடிய ரிஷப் பந்த், ஒரே செஷனில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டவா். காா் விபத்து காரணமாக இந்தத் தொடரில் அவா் பங்கேற்க முடியாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருக்கும் என நினைக்கிறோம். அந்த வகையில் இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது.

பௌலிங்கில் சாமா்த்தியமாகச் செயல்படும் அஸ்வின் எப்போதுமே ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறாா். அவா் தனது திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில் எங்கள் பேட்டா்கள் விளையாட வேண்டும்.

எங்கள் பௌலா்களில் நேதன் லயன் இந்திய வலது கை பேட்டா்களுக்கு எதிராக எவ்வாறு பந்துவீச இருக்கிறாா் என்பதை எதிா்நோக்கியிருக்கிறோம். அவா் ஆதிக்கம் செலுத்தினால் ஆஸ்திரேலிய பேட்டா்கள் பணி சுலபமாகும். லோயா் ஆா்டரில் வரும் பேட்டரான ஆஷ்டன் அகரை, 2-ஆவது ஸ்பின்னா் வாய்ப்பாக பயன்படுத்தும் எண்ணம் இல்லை. விக்கெட்டுகள் எடுக்க வேண்டியது பௌலரின் பணியாகும். அதை அவரிடம் அளிப்பதை விரும்பவில்லை - இயான் சேப்பல் (முன்னாள் ஆஸி. கேப்டன்)

அஸ்வின் முக்கியமான பௌலா்

இந்தத் தொடரின் போக்கை தீா்மானிப்பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமானவா். பௌலிங்கில் திட்டமிட்டதை தகுந்த முறையில் செயல்படுத்தக் கூடிய அவா், ரன்கள் சேகரிப்பவராகவும் இருக்கிறாா். இந்திய ஆடுகளங்களில் அவரது பௌலிங்கில் பந்து தக்க முறையில் சுழன்றுவிட்டாலே, பேட்டா்களுக்கு அது கடும் சவால். எனவே அவா் அதிகமாகத் திட்டமிட வேண்டிய தேவை இல்லை.

அணியின் 3-ஆவது ஸ்பின்னராக குல்தீப் யாதவை தோ்வு செய்யலாம். ஜடேஜா, அக்ஸருடன் ஒப்பிடுகையில் அவரின் பௌலிங் சற்று வித்தியாசமானது. இந்தியா டாஸ் தோற்கும் பட்சத்தில், முதல் நாளில் பௌலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக குல்தீப் இருப்பாா். பேட்டிங் வரிசையில் சூா்யகுமாா் யாதவ், ஷுப்மன் கில் இருவரில் ஒருவரை பிளேயிங் லெவனில் விடுவதென்பது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சிறப்பாகவே விளையாடியிருப்பதால், அவருக்கு ஃபாா்ம் அமையும் பட்சத்தில் ரன்கள் குவிப்பாா். விக்கெட் கீப்பிங்கை பொருத்தவரை, பேட்டிங்கில் சிறந்த இஷான் கிஷணை தோ்வு செய்வதா, கீப்பிங்கில் சிறந்த கோனா பரத்தை சோ்ப்பதா என்பது கடினமான தோ்வு - ரவி சாஸ்திரி (முன்னாள் இந்திய பயிற்சியாளா்)



Read in source website

 

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிபா் ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.



Read in source website

சென்னை: மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை வலைதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி, மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்நிலையில், மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற வலைதளத்தில் உங்களின் மின் பகிர்மான வட்டத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த உடன் அந்த மாதத்தில் உங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணி தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் மின் தடை தொடர்பான விவரங்களை பல நாட்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ள முடியும்.



Read in source website

சென்னை: “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மொழிஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேய பாவாணர்.

திமுக அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'திமுக அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து - தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்!

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!" என்று அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



Read in source website

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தொண்டைமானேந்தல், புதுவாக்காடு ஊருணிக் கரையில் புத்த சமயச் சின்னமான தர்மச் சக்கரத் தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுவாக்காடு ஊரணிக்கரையருகே நிலத்தை சீர் செய்யும்போது தர்மச் சக்கர சிற்பத்துடன் சுமார் 2 அடி உயரத்தில் கல் தூண் வெளிப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும் புதுவாக்காடு கிராம இளைஞர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்துக்கு தகவல் அளித்தனர். தர்மச்சக்கரம், புத்த சமயத்தில் மிக முக்கிய சின்னமாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியது: தர்மச் சக்கரம் அல்லது அறவாழி என்பது புத்தம், சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கியச் சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள தர்மச் சக்கரம் 8 ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கிப் பலகையில் சக்கரத்தின் அடிப் பகுதியில், தெளிவற்ற நிலையில் மான் உருவமும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக்கிறது. இது, புத்ததர்மச் சக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், சக்கரத்தின் மேல்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது, புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவ சக்கரங்களில் இந்த தீச்சுவாலை அமைப்பு 3 புறங்களில் காட்டப்படும்.

சிற்பத்தில் தெளிவான காலவரையறையைக் கொண்ட எழுத்து பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும், 9-ம் நூற்றாண்டு தொடங்கி 11-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகக் கருதலாம். தர்மச் சக்கரத்தின் 8 ஆரங்கள் கூறும் தத்துவம் என்னவெனில், சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பார்வை மற்றும் முயற்சி, கவனம், நோக்கம், நினைவாற்றல், செயல், பேச்சு என்பதாகும்.

புத்தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில், 5 துறவிகளுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சிதான் முதல் தர்மச் சக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையிலே, தர்மச் சக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்மச் சக்கரத் தூண் நீர் நிலைக்கு அருகில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர்நிலையை ஏற்படுத்தியவர்களால் நடப்பட்டிருக்கலாம் என கருத முடிகிறது. மேலும், இதுபோன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளை குறிப்பதற்கும், தாம் செய்வித்த பொதுப்பணியை, எந்நோக்கத்துக்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.

இது பவுத்த துறவிகள் அல்லது அந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. கடற்கரை அருகே அமைந்துள்ள கிராமமாகவும் உள்ளது. மேலும், ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்தில் புத்தர் சிற்பம் உள்ளது. மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிற்பம் இருந்ததை புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ஜெ.ராஜாமுகமது கண்டறிந்தார். பின்னர், திருடுபோன அந்த புத்தர் சிற்பம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இங்கிருந்து இலங்கைத் தீவும் அண்மைப் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் பவுத்தம் பரவியிருந்ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பை கருதமுடிகிறது என்றார்.



Read in source website

கோவை: உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீட்டை நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவியும், உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மரியாதை செய்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினர், திமுக மாவட்டச் செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த அவர், கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து நிறைவேற்றித் தந்த மாமனிதர்.

நாராயணசாமி நாயுடுவின் நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். அவர் வாழ்ந்த வீட்டை நூலகமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். வரக்கூடிய ஆண்டு அவரது நூற்றாண்டாகும். இதை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட விக்ராந்த் போர்க் கப்பலின்விமான ஓடுதளத்தில் இந்தியதொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்ட தேஜஸ் விமானம் முதல் முறையாக வெற்றிகரமாக தரை யிறக்கப்பட்டது. இது, இந்திய தற்சார்பு திட்டத்தின் ஒரு வரலாற்று மைல்கல் நிகழ்வாகும்’’ என்று தெரிவித்துள்ளது.

ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இதில், 30 விமானங்களை கொண்டு செல்ல முடியும்.

அத்துடன் இந்த போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும்.



Read in source website

சென்னை: யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (8-ம் தேதி) தொடங்குகிறது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டியை தமிழக டேபிள்டென்னிஸ் சங்கம் நடத்துகிறது. 15 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தேசிய சாம்பியன்ஷிப்பை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம்நடத்துகிறது. வரும் 16-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரில்30 மாநிலங்கள், நிறுவனங்களைச்சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.

அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரிவில் 15 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.6 லட்சம் ஆகும். இரு பாலருக்கான யு-19 பிரிவில் சாம்பியன் பட்டம்வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரம்மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.36 ஆயிரமும், அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

அதேவேளையில் இரு பாலருக்கான யு-17 பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நாளை மாலை 5 மணி அளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவநாதன், செயலாளார் ஏ.வி.வித்யாசாகர், துணை தலைவர் முரளிதர ராவ், போட்டி ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: அகில இந்திய கேரம் கூட்டமைப்பு சார்பில் 47-வது ஜூனியர் மற்றும் இளையோர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இதில் சிறுமியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த எம்.காஸிமா முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை ஷாலு குமாரி (பிஹார்), 3-வது இடத்தை கசன் நிர்கன் (மகாராஷ்டிரா) கைப்பற்றினர்.

சிறுவர் பிரிவில் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கே.நவீன் குமார் முதலிடம் பிடித்து அசத்தினார். 2-வது இடத்தை சென்னையை சேர்ந்த ஏ.அப்துர் ரகீம், எம்.மிதுன் ஆகியோர் பிடித்தனர். மகளிருக்கான இளையோர் பிரிவில் சென்னையை சேர்ந்த எல்.கீர்த்தனா 3-வது இடம் பிடித்தார்.

ஆடவருக்கான இளையோர் பிரிவில் விதர்பாவைச் சேர்ந்த குரு சரண் முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை மகாராஷ்டிராவைச் சேர்ந்த துஷ்யந்த் குப்தாவும், 3-வது இடத்தை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிப்தயாள் யாதவும் கைப்பற்றினர். தமிழகத்தின் திண்டுக்கலைச் சேர்ந்த டி.பெலிக்ஸ் 4-வது இடம் பிடித்தார்.

அணிகள் சாம்பியன்ஷிப்பில் சிறுமியர் பிரிவில் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. சிறுவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 8 தங்கம், ஒரு வெற்றி, 7 வெண்லகப் பதக்கம் வென்றனர்.



Read in source website

நம் தாத்தா, பாட்டியிடம் நமக்குத் தெரியாத விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். அவர்களுக்கு அதையடுத்து பெற்றோரிடம், பின்னர் நூலகத்தில் புத்தகங்களின் ஊடாக தெரிந்து கொண்டோம். இன்றைய தொழில்நுட்ப உலகில் கூகுள் துணை கொண்டு அதை தெரிந்து வருகிறோம்.

நொடிக்கு 99,000 தேடல்களை கூகுள் செயல்படுத்துகிறது. கூகுள் ஒரு நாளைக்கு 850 கோடி தேடல்களை செயலாக்குகிறது. நாம் மேற்கொள்ளும் ஒரு சிறிய தேடலுக்கு கூகுள் தேடுபொறியில் அது தொடர்பான பலதரப்பட்ட தகவல்களை கொடுக்கிறது. இப்போது அதை விடவும் வல்லமை கொண்ட தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. அதில் என்னென்ன உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த புதுவரவின் பெயர் சாட் ஜிபிடி (Chat GPT). சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ என்ற நிறுவனம் உருவாக்கியது. இதுவும் மற்றொரு தேடு பொறி தானே என்று அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது. இது அதுக்கும் மேலானது.

உலகத்தின் இப்போதைய பேசு பொருள் இதுதான். இதைப்பற்றி ஆயிரக்கணக்கான செய்திகள், கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா என்ற தலைப்பில் உலகம் முழுவதும் மக்கள் பேசி வருகின்றனர்.

ஆரம்ப காதல், அடுத்த நிலைக்கு சென்ற கதைதான் இங்கு நடந்துள்ளது. இந்தத் தெருவில் கணினி அறிவியல். அடுத்த தெருவில் செயற்கை நுண்ணறிவு. இந்த இரண்டு நண்பர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மிக மெதுவாக பல ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்கள்.

இப்போதைய உலகளாவிய அச்சம் என்னவென்றால் அந்தப் பழக்கம் மிக நெருக்கமான பழக்கமாக மாறி அடுத்த நிலையை அடைந்து விட்ட காரணத்தால்தான். செயற்கை மனிதர்கள் அதாவது இயந்திர மனிதர்கள் பெருக்கம் ஏற்பட்டு இயற்கையாக தோன்றிய நமது மனித குலத்திற்கு என்ன ஆகுமோ? என்ன நடக்குமோ? என்ற அச்சம் மக்களின் மனதில் வந்துவிட்டது.

‘டெக்னாலஜி அரக்கர்களும், அதனால் துன்பப்படும் மனித குலமும்’ இந்த நிகழ்வு அறிவியல் கற்பனை கதைகளில் மட்டுமா அல்லது எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள உள்ளோமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த சாட் ஜிபிடி என்னென்ன செய்யும்?

ஷேக்ஸ்பியர் பாணியில் ஆங்கிலத்தில் கவிதை கேட்டால் அதனை ஓரிரு நிமிடங்களில் கொடுக்கும். புதிர் கேட்டால், விடையும் கொடுக்கும். மிக நீண்ட சாப்ட்வேர் புரோகிராமில் தவறு எங்கு உள்ளது என்று கேட்டால் அதனையும் இது கண்டுபிடித்து சரியாக விடை தரும். அடுத்து நான் ஆரம்பிக்கக்கூடிய சிறிய வியாபாரத்திற்கு என்ன செய்ய வேண்டும்? அதனை எப்படி நடத்த வேண்டும்? என்று கேட்டால், ஓரிரு வார்த்தைகளில் விடை தராமல் மிக விளக்கமாக கொடுக்கும்

சாட் ஜிபிடி? மனிதர்கள் உடன் பேராசிரியர், வல்லுநர் போல உரையாடி, உரையாடல் மூலம் தகவல்களை வழங்கும் மற்றும் கேள்விகளுக்கும் இது பதில் வழங்கும். சாட் ஜிபிடி ஒரு சாட்பாட். இந்த சாட்பாட் என்பது ஆன்லைன் அரட்டை உரையாடல் சாப்ட்வேர் அப்ளிகேஷன். உதாரணம் தானியங்கு சாட்பாட் சேவை சில வெப்சைட்டுகளில் இருக்கும். பெரும்பாலும் இதனை வங்கி சார்ந்த வெப்சைட்டுகளில் பார்க்கலாம்.

சாட் ஜிபிடி குறித்த 3 முக்கிய தகவல்கள்

GPT என்பதன் விரிவாக்கம் Generative Pre-trained Transformer. ஜெனரேட்டிவ் மாடல் என்பது புள்ளியியல் படிப்பு துறையை சார்ந்தது. புதிய டேட்டா புள்ளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தும் ஒரு மாடல். உதராணமாக பல மனிதர்களால் எழுதப்பட்ட பலவிதமான கருத்துக்களையும், செய்திகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, முன்னரே சொல்லப்பட்ட அந்த பலவிதமான கருத்துக்களை எடுத்து பயன்படுத்தி நவீன கட்டுரைகள் அல்லது கதைகளை சாப்ட்வேர் எழுத ஜெனரேட்டிவ் மாடல் பயன்படுகிறது.

Pre-trained language models (PLM) எடுத்துக்காட்டு BERT. கூகுள் இதை பயன்படுத்துகிறது. ஒரு வாக்கியத்தில் அடுத்து என்ன வார்த்தை வரும் என்பதை துல்லியமாக கணிக்க அதிக அளவிலான தரவுகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த ஸ்பெஷல் டொமைன் நாலேஜ் கொண்டு முன்கூட்டியே பயிற்சி தரப்படாத மாடல்கள் இவை. ஆனாலும் அதனால் டொமைன் சார்ந்த பணிகளை முடிக்க முடியும். உதாரணம் மொழிபெயர்ப்பு.

Transformer: இது ஆழ் கற்றல் மாடல். இது ஒரு பிரபலமான செயற்கை நியூரல் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர். தொடர்ச்சியான தரவுகளில் (Sequential Data) உள்ள தொடர்புகளை கவனிப்பதன் மூலம் இந்த நியூரல் நெட்வொர்க், சூழலையும் அதன் பொருளையும் கற்றுக் கொள்ளும்.

முக்கிய அம்சங்கள் என்ன?

சாட் ஜிபிடி மிகவும் தனித்துவமானது. மொழி மாதிரியில் 175 பில்லியன் பேராமீட்டர்ஸ் உள்ளன. அதாவது, பயிற்சியின் போது ஒரு neural நெட்வொர்க் மேம்படுத்தும் மதிப்புகள். மனிதன் எப்படி பேசுகிறானோ, எப்படி எழுதுகிறானோ அதை அப்படியே புரிந்து கொள்ள வல்லமை படைத்தது இந்த சாட் ஜிபிடி.

கேட்கின்ற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பெரும்பாலான நியூரல் நெட்வொர்க்குகள் ஆம் அல்லது இல்லை அல்லது எளிய வாக்கியங்களை விடையாக கொடுக்க மட்டுமே திறன் கொண்டவை. ஆனால், சாட் ஜிபிடியால் உரைநடை மாதிரி நீண்ட வாக்கியங்களை விடையாக தர முடியும்.

மற்றவர்கள் குறை சொல்ல இயலாதவாறு, வேலைகளை மிக நேர்த்தியாக சிறப்பாக உன்னதமாக செய்து முடிக்கும் கலையை இது கொண்டுள்ளது. இயந்திர மொழிபெயர்ப்பு, கேள்வி பதில் மற்றும் க்ளோஸ் டாஸ்க்குகள் முதலிய வேலைகளில் சாட் ஜிபிடி அருமையாக செய்து முடித்து, மனித குலத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சாட் ஜிபிடி வருவதற்கு முன்பே ஏறத்தாழ இதே மாதிரி செயல்பாடு கொண்ட சில கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

  • BLOOM (Developed through the BigScience Workshop by HuggingFace )
  • GlaM (Developed by Google)
  • Gopher (Developed by DeepMind )
  • OPT (Built by Meta)
  • AlexaTM (Amazon )

இதன் தொழில்நுட்ப பக்கம்: சாட் ஜிபிடிக்கு மிகப்பெரிய இணைய உரை தரவு தொகுப்புகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 570GB. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ் கற்றல் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மொழி செயலாக்க ஏஐ மாதிரியாக்கம் என்ற தொழில்நுட்பத்தை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதுவும் இந்த மொழி மாடல் மிக மிகப் பெரியது.

ஓபன் ஏஐ நிறுவனத்தில் மூன்று பிரிவின் மூலம் உரை தகவல்கள் சேகரிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கிப்பீடியாவின் உரை, பிற உரைகள், இணையத்தில் பொதுவில் கிடைக்கும் தரவுத் தொகுப்பு. ஆக மொத்தம் 570GB உரை தகவல் மூலம் இயங்குகிறது.

இது திறந்து பார்க்க முடியாத மூடப்பட்ட சிஸ்டம் அல்லது black-box system. அதன் அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை ஓபன் ஏஐ வெளியிடவில்லை. அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை முழுமையாக மற்றவர்களால் உறுதியாக அறிய முடியாது.

சாட் ஜிபிடிக்கான ஆராய்ச்சி 2018-ல் தொடங்கப்பட்டது. முந்தைய 2 பதிப்புகள் பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் 3வது பதிப்பு கிடைக்கிறது.

எப்படி வேலை செய்கிறது இது?

சாட் ஜிபிடி பிராம்ட்டில் (Prompt) பேச்சு அல்லது எழுத்துக்கள் வார்த்தைகளை டைப் செய்து அல்லது கேள்விகள் கேட்பது மூலம் அந்தக் கேள்வியை புரிந்து கொண்டு, மீண்டும் பேச்சு வார்த்தைகளால் அல்லது ஸ்கிரீனில் எழுத்து மூலம் பதிலை காட்டும்.

சாட் ஜிபிடியின் பயன்பாடுகள்: சாட் ஜிபிடி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பாணியில் கவிதைகள், பாடல்கள் மற்றும் சிறுகதைகளை எழுத முடியும். அதிக அளவிலான தகவல்களை, சுருக்கி பகுப்பாய்வு செய்வதன் மூலம், பயனர் கருத்து மற்றும் சமூக ஊடக உரையாடல்களை புரிந்து கொள்வதில் சாட் ஜிபிடி உங்கள் நேரத்தையும், முயற்சியையும் பெரிய அளவில் சேமிக்கும். சுமார் ஒரு லட்சம் பேர் உங்களது பொருளுக்கு (Product) பின்னூட்டம் (Feedback) கொடுத்துள்ளார்கள் என்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் அத்தனை பின்னூட்டங்களையும் மிக விரைவாக ஆராய்ச்சி செய்து உங்களுக்கு அதன் முடிவுகளை தெரிவிக்கும்.

உங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து சிறந்த, விரைவான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும். இது உங்களுக்கு சில யோசனைகளை உருவாக்க உதவும். குறைந்த நேரத்தில் அதிக மற்றும் உயர்தர வேலைகளை செய்து முடிக்கும். உதாரணமாக ஆன்லைன் டியூஷன் தொழில் நடத்தும் போது அந்த வெப்சைட்டில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டால் இந்த சாட் ஜிபிடி அருமையான விளக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.

வரி வரியாக பல வரிகளில் இருக்கும், கணினி புரோக்ராமில் தவறு எங்கு உள்ளது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தத் தவறை திருத்தி கொடுப்பதும் சாட் ஜிபிடியின் மிகப்பெரிய பயன்பாடாக பார்க்கப்படுகிறது

சாட் ஜிபிடியும் சமுதாய மாற்றமும்: குழந்தைகளின் படிப்பு செலவை தாங்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த சாட் ஜிபிடி அப்ளிகேஷன் வரமா அல்லது சாபமா? இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கல்வி செலவை சாட் ஜிபிடி அப்ளிகேஷன் குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .

அலைபேசிக்குள் எந்நேரமும் இருக்கும் இளைஞர் கூட்டம் இந்த கருவி மூலமாக நல்ல நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

குழந்தை கல்வியையும், வேலையும், வீட்டையும், சமாளிக்க முடியாமல் வாழும் குடும்ப தலைவிகளுக்கு, இந்த கருவி குழந்தைகளின் படிப்புக்கு அன்றாட வீட்டுப் பாடம் துவங்கி மாத அசைன்மென்ட், அறிவியலில் மிகப் பெரிய அளவில் உதவலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது

மனிதனுடைய வேலை வாய்ப்பு பல வருடங்களாகவே குறைந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அதி அறிவுடன் விளக்கத்துடன் செய்திகள் பல விதத்தில் உங்கள் அலைபேசியில் வரிசையாக வரும் இந்த டெக் யுகத்தில், இந்த சாட் ஜிபிடி கருவியால் மனிதர்களது வேலை வாய்ப்புகள் குறையாது என்று யார் கூறினாலும் , அதனை நம்ப யாரும் தயாராக இல்லை.

மைக்ரோசாப்ட் மற்றும் சில நிறுவனங்கள் இதாய் வெகு விரைவில் பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த சாட் ஜிபிடி மனித சிந்தனையும், உற்பத்தி திறனையும் முடக்குமா அல்லது ஆச்சரியப்படும் அளவுக்கு உற்பத்தி திறனை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது. அதிக நேரம் உட்கார்ந்து வாழுதல் ஆரோக்கியம் கேள்வி குறி. சாட் ஜிபிடி அதை குறைத்தால் அருமை.

Data-Driven தொழில்நுட்பத்தையும், மனித படைப்பாற்றலையும் சமநிலைப் படுத்துவது எவ்வாறு என்று ஆராய நமக்கு இது வழிகாட்டும் என கருத்து நிலவுகிறது.

மனிதர்கள் தரக்கூடிய செய்திகள் அல்லது தகவல்களில் இருந்து இந்த Programக்கு தெரியாத விஷயங்களை (RLHF) Reinforcement Learning மூலம் தெரிந்து கொள்ளும் திறமை உண்டு. இந்த Reinforcement Learning, சாட் ஜிபிடியை மிகவும் சக்திவாய்ந்தது, பல்துறை சார்ந்தது ஆகவும் உருவாக்குகிறது.

சாட் ஜிபிடியின் சிறப்பு என்னவென்றால், கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான தகவல் அல்லது பதில் இல்லை என்றால் அது அதன் அறியாமையை ஒப்புக்கொள்கிறது. தற்போது, செயற்கை நுண்ணறிவு ​​, பெரிய தரவு மற்றும் மெஷின் லேர்னிங் சார்ந்த சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், வேலைவாய்ப்பில், பணி அமர்த்தலில் தற்போது, ​​அமெரிக்கா ஒரு முன்மொழியப்பட்ட ஏஐ சட்டத்தை பயன்படுத்துகிறது.

சில நேரங்களில் இதில் கிடைக்கும் சில பதில்கள் இன்னும் சரியாக பொருத்தமாக இல்லை என்றாலும், அனைத்து வகையான மனிதர்களும் அதனுடைய பதில்களை பார்த்து, புருவத்தை உயர்த்தி, வாயடைத்து ஆச்சரியத்துடன் செய்வது அறியாமல் இதனுடைய செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மொத்தத்தில், சாட் ஜிபிடி நல்ல விதத்தில் செயல்பட்டால் மனித குலம் வரவேற்கும்.

கட்டுரை: சி.ஆர்.சத்தியமூர்த்தி



Read in source website

நிலநடுக்கத்தை கணிக்க பூமிக்குள் இருந்து முன்னறிவிப்பு சமிக்ஞை தேவைப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பம் வரவிருக்கிறது என எச்சரிக்கை செய்ய கருவி தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. பூகம்பம் குறித்த முன்னறிவிப்பு சிக்னல் வழங்கும் கருவி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்-மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவும் மீட்புக் குழு, மருத்துவ குழுவினரை அங்கு அனுப்பியுள்ளது.

இது மிகவும் மோசமான நிலநடுக்கம் என பல்வேறு நாடுகள் தெரிவித்து வருகிறது. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காசியான்டெப்பில் இருந்து 33 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், அதன் தாக்கம் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. துருக்கிக்கு இதுவரை இந்தியா உள்பட 45 நாடுகள் உதவி வழங்கி உள்ளது. இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் நிவாரணப் படையின் (NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பொருட்களுடன் மேற்கு ஆசிய நாட்டிற்கு அனுப்பபட்டுள்ளது.

நிலநடுக்கம் என்றால் என்ன?

நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் உள்ள பகுதி அசைவதால் நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வு ஆகும். யு.எஸ்.ஜி.எஸ் கூற்றுப்படி, பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து செல்லும் போது இது நிகழ்கிறது. இது செஸ்மிக் அலைகள் வடிவில் சேமிக்கப்பட்ட ‘எலாஸ்டிக் ஸ்ட்ரெய்ன்’ ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமியில் பரவுகிறது மற்றும் நிலத்தை அதிர வைக்கிறது.

நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன?

நமக்குத் தெரியும், பூமியின் வெளிப்பரப்பு, மேலோடு டெக்டோனிக் தட்டுகளாக உள்ளது. தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன. டெக்டோனிக் தகடுகள் எப்போதும் மெதுவான வேகத்தில் நகர்கின்றன. தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால், மற்ற தட்டு நகரும் போது
அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்கின்றன. தட்டு வேகமாக நகர்ந்து செல்லும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர் கூறகின்றனர்.

யு.எஸ்.ஜி.எஸ் கூறுகிறது, “பூகம்பம் தொடங்கும் பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள இடம் ஹைப்போசென்டர் என்றும், பூமியின் மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள இடம் எபிசென்டர் என்றும் அழைக்கப்படுகிறது.”

நிலநடுக்கத்தை கணிக்க முடியுமா?

இல்லை. நிலநடுக்கம் பற்றிய துல்லியமான கணிப்புக்கு, பூமிக்குள் இருந்து ஒரு பெரிய நிலநடுக்கம் வரப்போகிறது என்பதைக் குறிக்கும் ஒருவித முன்னறிவிப்பு சிக்னல் தேவைப்படுகிறது. மேலும், இது பெரிய அளவிலான நிலநடுக்கத்திற்கு மட்டும் சிக்னல் கொடுக்கும். சிறிய அசைவுகளுக்கு கொடுக்காது என்று கூறப்படுகிறது. தற்போது அத்தகைய சிக்னல் கண்டுபிடிக்கும் கருவி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னையில் உள்ள ஏழு கடற்கரைகளில் பெசன்ட் நகர் கடற்கரை தூய்மையானதாகத் தரவரிசைப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மற்ற ஆறு கடற்கரைகள் மெரினா, திருவான்மியூர், திருவொற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை மற்றும் அக்கரை.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கடற்கரைகளில் தூய்மையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தரவுகளைத் தொகுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

குப்பைகளை தரம் பிரிக்கும் வசதி உள்ள கடைகளின் எண்ணிக்கையில் இருந்து, கடைகளில் இருந்து நேரடியாகக் கழிவுகளைச் சேகரிப்பது, பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், சர்வீஸ் சாலைகளில் மணலைச் சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான மனிதவளம், போன்ற பல்வேறு அளவுகோல்களின்படி ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை கடற்கரைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

திருவொற்றியூர் 91 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், பாலவாக்கம் மற்றும் அக்கரை முறையே 81.36 புள்ளிகள் மற்றும் 73.68 புள்ளிகளுடன் 5வது மற்றும் 6வது இடத்தையும் பிடித்தன. நீலாங்கரை 71.67 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.

தரவுகளின்படி, பெசன்ட் நகரில் உள்ள அனைத்து 336 கடைகளிலும் கழிவுகளை பிரித்தெடுக்க இரண்டுக்கும் மேற்பட்ட தொட்டிகள் உள்ளன.

மணல் சுத்தம் செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் பெசன்ட் நகர் கடற்கரை முழு மதிப்பெண்களைப் பெற்றது.

கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) நீலங்கரை மற்றும் அக்கரை ஆகியவை மனிதவளத்தைப் பொறுத்தவரை பூஜ்ஜிய புள்ளிகளைப் பெற்றன.

மெரினாவில் மொத்தம் உள்ள 2,500 கடைகளில் 200 கடைகளில் இன்னும் குப்பைகளை பிரிக்கும் பணி தொடங்கவில்லை.

மேலும் குப்பைகள் இல்லாத தெருக்களாக மாற்ற மாநகராட்சி முயற்சித்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில், நகரின் 18 தெருக்களில் 442 சிறிய குப்பைத் தொட்டிகளை நிறுவ மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த தொட்டிகளில் இருந்து கழிவுகளை சுழற்சி முறையில் அவ்வப்போது சேகரிக்க பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.



Read in source website

மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது.

அம்ரிதா நாயக் தத்தா

ரஷ்யாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு எதிராக சுமார் ரூ.28,000 கோடி ரூபிள் மதிப்பிலான, நிலுவைத் தொகையை செலுத்த இந்தியா குறைந்தது மூன்று வழிகளை ஆராய்ந்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனுடனான அதன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து ரஷ்யா கடுமையான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை, இந்தியாவால் இந்தப் பணம் செலுத்த முடியவில்லை.

இந்தியாவின் பெரும்பாலான இராணுவ தளவாடங்கள், ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவை என்பதால், பணம் செலுத்துவது மேலும் தாமதமானால், முக்கியமான உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களின் விநியோக தேவையை பூர்த்தி செய்யும் ரஷ்யாவின் திறன் குறித்து, அரசாங்கத்தில் கவலைகள் உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. துபாயை தளமாகக் கொண்ட வர்த்தகர்கள் மூலம் வாங்கப்படும் ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்களில், இந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பணம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை சனிக்கிழமை, செய்தி வெளியிட்டது.

ஒரு உயர் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், இந்தியா தற்போது, ஆயுதங்களுக்கான ரஷ்யாவின் நிலுவைத் தொகையை செலுத்த மூன்று விருப்பங்களை பரிசீலித்து வருகிறது, அதில் ஒன்று சீன யுவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாமில் ரூபிள் நிலுவைத் தொகையை செலுத்த ஆராய்ந்து வருகிறது.

இந்த விவகாரம் ரஷ்யாவுடன் கடந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகங்களின் அதிகாரிகளுக்கு இடையில் விவாதிக்கப்பட்டது, மேலும் இந்த வழிமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் விவாதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது. “நாங்கள் திர்ஹாம் விருப்பத்தை ஆராய்ந்து வருகிறோம், ஆனால் யுவான் விருப்பத்தில் குறைவான வசதியே உள்ளது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன் கருவியான இறையாண்மைப் பத்திரங்களின் (sovereign bonds) கலப்பின வடிவத்தின் மூலம் ரூபிள் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதில் வட்டி உட்பட நிலையான தொகையை பின்னர் செலுத்த அரசாங்கம் உறுதியளிக்கும்.

ரஷ்யாவிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இந்தியாவில் ஒரு தனி கணக்கிற்கு மாற்ற முடியுமா மற்றும் அத்தகைய வைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கப்படுமா என்பது விவாதிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

இறையாண்மைப் பத்திரங்கள் பொதுவாக நிலுவைத் தொகையைச் செலுத்தப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், இது ஹைப்ரிட் என்று அழைக்கப்படுகிறது என்று ஒரு அதிகாரி விளக்கினார். இதில் விவாதிக்கப்படும் மூன்றாவது விருப்பம், அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் ரஷ்யாவிற்கு சில பங்குகளை வழங்குவதாகும், இது எதிர்காலத்தில் கலைக்கப்படலாம் – இந்த பரிந்துரை ரஷ்ய தரப்பிலிருந்து வந்ததாக புரிந்து கொள்ளப்பட்டது.

இரண்டாவது அரசாங்க அதிகாரி, இந்த விருப்பம் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சிகளில் கூட பயன்படுத்தப்படலாம் என்று கூறினார், அங்கு இந்தியா, தற்காலிகமாக, தேவைப்படும் போது ரஷ்யாவின் தரப்பில் இருந்து தேவையான முதலீடுகளை செய்யலாம்.

ரஷ்யாவின் பணம் செலுத்துவதில் இந்தியா சிக்கலை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்க்கும் சட்டத்தை (CAATSA) அமெரிக்கா நிறைவேற்றிய ஒரு வருடத்திற்குப் பிறகு – 2018 ஆம் ஆண்டில், ரஷ்யாவுடன் S-400 ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டபோது- பாதுகாப்பு தொடர்பான பொருட்களுக்கான ரூபிள் நிலுவைத் தொகை செலுத்துவதில் சவால்கள் இருந்தன.

எவ்வாறாயினும், VTB மற்றும் Sberbank ஆகிய இரண்டு ரஷ்ய வங்கிகளின் இந்திய கிளைகள் மூலம், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரை வழங்குவதன் மூலம், பாதுகாப்பு தொடர்பான பொருட்களுக்கான ரஷ்ய கொடுப்பனவுகளை இந்தியா சமாளித்தது.

இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்த பிறகு இவையும் பொருளாதாரத் தடைகளின் கீழ் வைக்கப்பட்டன.

உக்ரைனுடனான போரை அடுத்து அந்நாட்டின் மீது பல தடைகள் விதிக்கப்பட்ட பின்னர், இந்திய வங்கிகள் ரஷ்ய கொடுப்பனவுகளைச் செயல்படுத்த திறக்கவில்லை.

28,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபிள் நிலுவைத் தொகையில், இந்திய விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை, அத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பல்வேறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் அடங்கும்.

2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் ரஷ்யாவுக்கு இந்தியா ரூ.11,500 கோடி செலுத்த வேண்டியிருந்தது.

ரஷ்யாவுடனான சில ஒப்பந்தங்களில், இராணுவத்தின் சரக்குகளில் பல ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிபாகங்கள் தவிர- S-400 வான்வழி ஏவுகணை; ரஷ்யாவில் கட்டப்படும் இரண்டு துஷில் வகை கப்பல்கள்; ஸ்மெர்ச் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகளின் குறிப்பிடப்படாத எண்ணிக்கை; ராக்கெட் எறிகணைகள் மற்றும் ரஷ்ய தயாரிப்பான X-31 ஏவுகணைகள், மற்ற ஏவுகணைகள் அடங்கும்.



Read in source website

எந்த ஒரு தடையும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதைவிட, அது குறித்த ஆவலை அதிகரிக்கும் என்பதுதான் அனுபவம் கற்றுத்தரும் பாடம். அதேபோல பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும், விற்பனைக்காகவும் உருவாக்கப்படும் பொய் பரப்புரைகள் முதலில் நிமிர்ந்து பார்க்க வைத்தாலும், கடைசியில் ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம்.

லண்டனின் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'இந்தியா - தி மோடி கொஸ்ட்டின்' (இந்தியா - மோடி கேள்வி) என்கிற ஆவணப்படம் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, 2002-இல் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது கோத்ரா மதக்கலவரத்தை கையாண்ட விதம் குறித்த ஆவணப்படம் அது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல முறை பலராலும், பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்ட பிரச்னைதான் அது. கீழமை நீதிமன்றத்தில் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு தீர்ப்பளித்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிரச்னையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிதான் பிபிசி-யின் ஆவணப்படம்.

சட்டை செய்யாமல் ஒதுக்கியிருந்தால் நீர்க்குமிழியாக மறைந்திருக்க வேண்டிய ஒன்று, ஊடகப் பரபரப்பு பெற்றதற்கு காரணம் ஆவணப்படம் வழங்கியிருக்கும் புதிய தரவுகளோ, வெளிவராத தகவல்களோ அல்ல. அவசரத்திலும் ஆத்திரத்திலும் பாஜக-வின் சமூக ஊடகப் பிரிவின் பதிவுகளும், அதைத் தொடர்ந்து அரசு விதித்த தடையும்தான் நம்பகத்தன்மையற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கின்றன. 

மின்னல் வேகத்தில் தகவல்கள் பரவும் தொழில்நுட்ப யுகத்தில், தடையை அமல்படுத்துவது என்பது எளிதல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தடையை மீறி அந்த ஆவணப்படத்தை மாணவர்கள் மத்தியில் திரையிடுகின்றன. ஊடகங்களில் அதுகுறித்த செய்திகளும், கட்டுரைகளும் வெளிவருகின்றன. அதைத் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் கொதித்தெழ வைக்கும் எதுவும் பிபிசி செய்தி நிறுவன ஆவணப்படத்தால் ஏற்பட்டுவிடவில்லை. 

பிரிட்டிஷ் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் நூற்றாண்டுகால பழைமையான செய்தி நிறுவனத்தின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், காலனிய மனோபாவத்துடன் தொடரும் அந்த நிறுவனம் குறித்து பிரிட்டிஷாருக்கே நம்பிக்கை இல்லை எனும்போது, உலக அளவிலான மரியாதை குறித்து விவரிக்கத் தேவையில்லை.

1987-இல் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு எதிராக பிபிசி நிறுவனம் நடத்திய பரப்புரைகளை அவர் சட்டை செய்யவே இல்லை. அதையும் மீறி தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. 

1995-இல் இளவரசி டயானாவை வற்புறுத்தி ராஜகுடும்பத்திற்கு எதிராக பேசவைத்து பரபரப்பை ஏற்படுத்தியது பிபிசி. இரண்டாம் எலிசபெத் மகாராணி, அது குறித்து தான் எதுவும் பேசத் தயாராக இல்லை என்று மெüனத்தைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டின் பஷீர் என்கிற பத்திரிகையாளரைப் பயன்படுத்தி இளவரசி டயானாவை ராஜகுடும்பத்துக்கு எதிராக பேட்டியளிக்க பிபிசி வற்புறுத்திய தகவல் வெளிவந்தபோது, அந்த நிறுவனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. 

நார்மன் டெபிட் என்கிற பிரிட்டனின் முன்னாள் அமைச்சர், பிபிசி-க்கு வைத்த பெயர் போல்ஷ்விக் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன். 1986-இல் லிபியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த ஒருதலைபட்ச பிபிசி செய்திகள் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாயின.

1947 முதல் 2008 வரை தெற்காசிய அரசியல் குறித்தும், பொருளாதாரம் குறித்துமான பிபிசி-யின் செய்திகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகள் காணப்பட்டதை லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அலாஸ்டேர் பிங்க்கர்டன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம், பிபிசி-யில் காணப்படும் காலனிய மனோபாவம் என்பதை அவரது ஆய்வு தெரிவிக்கிறது. 

பிரிங்ஆர்க் என்கிற இந்திய நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்த பிபிசி ஆவணப்படம் 'புலிட்சர்' விருது பெற்றது. அதனால் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டது. 2011-இல் அந்த ஆவணப்படம் புனைவு என்று தெளிவானபோது, பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்து தனது தவறை ஒப்புக்கொண்டது.

இவையெல்லாம்தான் பிபிசி செய்தி நிறுவனத்தின் தரமும், நம்பகத்தன்மையும். ஒருகாலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த நிறுவனம், இப்போது பொய் பரப்புரைகளுக்கான கருவியாக மாறிவிட்டது. 

கடந்த 21 ஆண்டுகளில் பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகும், குஜராத் கலவரத்தையும், நரேந்திர மோடியையும் இணைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது முட்டாள்தனம். இப்போது  இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்திய வம்சாவளி ஒருவர் பிரிட்டனின் பிரதமராகி இருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது காரணமாக இருக்கக் கூடும். 2024 தேர்தலில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான பரப்புரை முயற்சியாகவும் இருக்கலாம்.

மத்திய அரசு ஏன் அவசரப்பட்டு அந்த ஆவணப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்? ஒருவேளை, அந்த ஆவணப்படத்தால் கிடைக்கும் விளம்பரம், தனது வாக்குவங்கியை அதிகரிக்கக் கூடும் என்று பாஜக நினைக்கிறதோ என்னவோ, யார் கண்டது?



Read in source website

 

தேசிய நீர் மேம்பாட்டு முகமை அமைப்பின் 36-ஆவது ஆண்டுக் கூட்டமும், நதிநீர் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 20-ஆவது கூட்டமும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் தில்லியில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது. 

இதில், கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை விரைவாக மேற்கொள்ளவும், தமிழகத்தில் இந்த இணைப்புக் கால்வாயை, கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை அணையில் இணைப்பதற்கும் தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நதிநீர் இணைப்புக்கு ரூ. 60 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, கங்கையையும், காவிரியையும் இணைக்கும் கார்லண்ட் திட்டம் 1972-இல் முன்வைக்கப்பட்டது. 2,640 கி.மீ. தொலைவுக்கிடையே உள்ள இந்த நதிகளை இணைக்க அப்போது, ரூ. 15 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1,465 கிமீ தொலைவில் இருக்கக்கூடிய கோதாவரி நதியை, காவிரியுடன் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது நல்ல திட்டம்தான். ஆனால், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இது போன்று பெரிய பொருட்செலவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எதுவும் விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்ததில்லை என்பதே நிதர்சனம்.

சர்வதேச அளவில், கணக்கற்று உமிழப்படும் கார்பன் டை ஆக்ûஸடு காரணமாக, புவி வெப்பமயமாதல் அதிகரித்து, அதன் விளைவான சீரற்ற பருவநிலை மாற்றத்தால் மக்கள் படும் இன்னல்களுக்கு இதுவரை விரைவான எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

கனடாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15-ஆவது சர்வதேச மாநாட்டில் 190-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன. இதில், பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்கான இலக்கை ஏற்கெனவே உள்ள 27 %-லிருந்து 30 % ஆக உயர்த்த 2030-ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில், பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான உறுதியான வாக்குறுதிகள் தீர்மானத்தில் இடம்பெறவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்டை மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரைப் பெறுவதிலேயே பல பிரச்னைகள் உள்ள நிலையில், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி நதியில் இருந்து தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்து குழாய் வழியாக வரும் தண்ணீர், கடைக்கோடி மாநிலமாக உள்ள தமிழகத்துக்கு எந்த அளவு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

தமிழ்நாட்டுக்குள் உள்ள ஆறுகள், கால்வாய்களை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கி விரைந்து செயல்பட வேண்டும் என்பதே இப்போது அவசர அவசியம். 1957-இல் முதன் முதலாக சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி இணைப்புத் திட்டம் 2016-இல்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

34 மாதங்களில் திட்டம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டாலும், 2018-இல் நிர்வாக அனுமதி, 2019-இல் சுற்றுச்சூழல் அனுமதி என கடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 

அதேபோல, தாமிரபரணி - கருமேனி ஆறு இணைப்புத் திட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. ஆனால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன.

நூறாண்டு கோரிக்கையான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் 2021-இல்தான் தொடங்கப்பட்டது. 262 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கு சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி செலவாகும் என கூறப்படும் நிலையில், இதில் பத்தில் ஒருபங்கு நிதிகூட இதுவரை ஒதுக்கப்படவில்லை என இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் காவிரியுடன் இணைக்கும் திட்டம் போன்ற பல திட்டங்கள் இன்னும் ஏட்டளவிலேயே உள்ளன.  

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பருவமழை இயல்புக்கு அதிகமாகவும், இயல்பான அளவிலும் பெய்து விவசாயிகளின் தண்ணீர் தேவையை ஓரளவு சரிகட்டி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 25 மாவட்டங்களில் இயல்பான அளவும், ஏழு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், எட்டு மாவட்டங்களில் மட்டும் இயல்பைவிட குறைவாகவும் பெய்துள்ளது. 

இதன் மூலம், பொதுப்பணித் துறையின் கீழ்உள்ள 14,138 பாசன ஏரிகளில் 4,087 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 3,022 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும், 2,952 ஏரிகள் 75 % வரையும் நிரம்பியுள்ளன. தமிழகத்தின் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது. வறட்சி மாவட்டம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.85 மீ. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

இந்த நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டமும், ஆறுகளில் தடுப்பணை கட்டும் திட்டமும் முக்கிய காரணங்களாகும். 

கடந்த சில ஆண்டுகளாக இயல்பை ஒட்டி பெய்துவரும் மழையால் கிடைக்கும் நீர், காவிரியில் தென்மேற்குப் பருவமழை காலங்களில் வரும் கட்டற்ற வெள்ளம் போன்றவற்றை தமிழகத்தின் வறட்சி மாவட்டங்கள் பக்கம் திருப்பிவிடும் திட்டங்களை செயல்படுத்தினாலே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் முப்போகம் விளையும் மாவட்டங்களாக மாறிவிடும்.



Read in source website


உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்தியாவில் 1,652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.  2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 19 ஆயிரத்து 569 தாய்மொழிகள் பேசப்படுகின்றன. மொத்த மக்கள்தொகையில் 96.76 % பேர் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில் ஏதோ ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

அனைத்திந்திய அளவில் மொத்தம் 270 மொழிகள் அடையாளம் காணக்கூடிய தாய்மொழிகளாக உள்ளன.  ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். 

செம்மொழித் தமிழ் 5-ஆவது பெரிய மொழியாக உள்ள இந்திய நாட்டில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 இலட்சத்து 6 ஆயிரத்து 368 எனவும், இந்தியாவில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 6.32 % ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.  தமிழகத்தை விட சிறிய மாநிலமான புதுச்சேரியில்தான் தமிழ் பேசுபவர்கள் அதிகம் உள்ளதாகவும்,  புதுச்சேரியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 89.2 % என்றும்,  தமிழகத்தில் இது 86.7 % ஆகும் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

குட்டித் தீவுகளான அந்தமான நிக்கோபர் தீவுகளில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை 19.1 % அளவிலும்,  கேரள மாநிலத்தில் 2.1 % ஆகவும், சண்டிகரில் 0.8 % ஆகவும் இருப்பதாக அறியமுடிகிறது.

கலைச்சொல்லியல் என்பது கலைச்சொற்களைப் பற்றிய ஆய்வு, கலைச்சொற்கள் தொடர்பான கோட்பாடு, கலைச்சொற்களைத் தரப்படுத்துதல், பயன்படுத்துதல் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு துறையாகும்.  கலைச்சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ்மொழியில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே.  கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகக் கலைச்சொற்களின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து உள்ளது.

கலைச் சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையாகத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை எடுத்தாள்வதும், தேவையெனில் பொருத்தமான புதிய சொற்களை உருவாக்குவது ஆகும். ஒரு மொழி, தன் வேர்ச்சொற்களைக் கொண்டு புதிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கலைச்சொற்களை உருவாக்கும்போது நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். சொற்கள் வடிவில் சிறியதாகவும், எளிதாகப் பொருள் புரியும் வகையிலும் இருப்பது சிறந்தது. மேலும், ஓசை நயமுடையதாகவும், தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். 

சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும். ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ அல்லது உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்று வேறு பல சொற்களை உருவாக்க உதவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, "லைப்ரரி' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு "நூலகம்', "நூல் நிலையம்' ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன. இதில் நூலகம் எனும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது. இதுவே கலைச்சொல். லைப்ரரி - நூலகம்; லைப்ரரியன் - நூலகர்; லைப்ரரி சயின்ஸ் - நூலக அறிவியல்.

அறிவியல்  உலகத்தில் பொதுவாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருளுக்கு அவரவர்களின் பெயர்கள், அந்நாட்டின் மொழிச்சொல், குடும்பப் பெயர், ஊர்ப்பெயர் எனப் பல பெயர்களை வைத்துள்ளார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் வேற்றுமொழி வழங்கும் நாடுகளுக்கு வரும்போது அந்தப் பெயராலே அழைக்கப்படுகின்றன. இது உலகம் முழுவதும் பொருந்தும். அந்தச் சொற்களைத்தான் நாம் "அறிவியல் கலைச்சொல்' என்கிறோம்.

அப்படிப்பட்ட கலைச்சொற்களுக்குத் தமிழ் மொழியில் சொற்களைத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளனர் நமது தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும். அச்சொற்களைப் பொதுமக்களும் மொழிநலம் விரும்பிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தொன்மை வாய்ந்ததும், இலக்கண- இலக்கிய வளம் மிக்கதும், பரந்துபட்ட மக்கள் வழக்கும் கொண்ட தமிழ்ச் சொல்லமைப்பை, அதன் பொருளை நுட்பமாக உணர்த்தவல்லவை அகரமுதலிகள் ஆகும். தமிழில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கணநூலான தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்தின் உரியியலிலும், மரபியலிலும் சில சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளதிலிருந்து அகராதிக்கான தொடக்கப்புள்ளி தொல்காப்பியம் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.   

பழங்காலத்தில் நிகண்டு, உரிச்சொல், உரிச்சொல் பனுவல், அரும்பதவுரை, அருஞ்சொற் பொருள் விளக்கம் எனப் பல சொல்லாட்சிகள் நிலைபெற்றுள்ளன. 

"அகர முதல னகர இறுவாய்' என்ற தொடரால் அகரவரிசையின் தொடக்கமும் னகர வரிசையில் முடிவும் அமையும் நிரல் வரிசை நெறிமுறைக் கோட்பாடு அகராதியின் களமாக அமைகிறது.

ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு, 9,500 சொற்களைக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிங்கல நிகண்டு, 14,700 சொற்களைக் கொண்டது. 16-ஆம் நூற்றாண்டில் உருவான சூடாமணி நிகண்டு 11,000 சொற்களைக் கொண்டு உருவானது. சிதம்பர இரேவண சித்தரால் உருவாக்கப்பட்ட அகராதி நிகண்டு அகரம் முதலாகச் சொல் நிரல் அமைப்பில் ஒப்புநோக்கில் அமைந்தது.  

1732-இல் தொகுக்கப்பெற்று 1824-இல் வெளிவந்த  வீரமாமுனிவரின் "சதுரகராதி' மனனம்  செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து எளிய சொற்களைக் கையாண்டு அகராதிக் கலை வளர்ச்சியடையக் காரணமாய் அமைந்தது. 1830-இல் இராட்லர் தமிழ் - ஆங்கில அகராதியைத் தொகுத்தார். இதைத் தொடர்ந்து வின்ஸ்லோவின் "அமெரிக்கத் திருச்சபைப் பேரகராதி' 1842-இல் வெளிவந்தது.  

தமிழ்மொழி ஆர்வம் மக்களிடம் பெருகவும், தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் தேவையை நிறைவு செய்யவும் ஒரு மொழி அகராதி உருவாக்கம் பெற்றது. அவ்வகையில் 1918-இல் கா. நமச்சிவாயரால் தமிழ்மொழி அகராதி தொகுத்து வெளியிடப்பட்டது.  சுருக்கமாகவும் விரைந்தும் பொருள் கொள்ளத் தக்க வகையில் "கழகத் தமிழ் கையகராதி' 1940-இல் வெளி வந்தது. இது மாணவரிடையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது.

தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மொழிகளில் அதன் கொடை, பயன்பாட்டு பரவலாக்கம், அரசியல், வரலாறு, அயலக வாணிபம் உள்ளிட்ட மக்கள் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்குத் தமிழ்மொழியில் சொற்பிறப்பியல் அகராதிகள் மிகத் தேவையாகின்றன. பன்மொழியறிவோடு பைந்தமிழ் ஆய்ந்த தேவநேயப் பாவாணர் தமிழுலகிற்கு மொழிநூலறிவோடு சொற்பிறப்பியல் அகராதிக் கோட்பாடுகளையும் வளர்த்தெடுத்து வழங்கினார். 

மொழியில் உள்ள சொல் எந்த வேர்ச்சொல்லிலிருந்து, எங்கே, எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவதே சொற்பிறப்பியல். ஒரு சொல்லின் பொருளைக் காணும்போது அச்சொல் தோன்றிய மொழியில் அது என்ன பொருள் உணர்த்திற்று எனக் காண்பது அம்மொழிக்கு இன்றியமையாதது.  

தமிழ் பல மொழிகளுக்குத் தாய். "திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் ஒன்று' என்கிறார் கால்டுவெல். பாவாணர், "ஆதி'  என்ற சொல்லை வடமொழி எனக் கருதியதால் அகராதியை "அகரமுதலி' என்றார்.  

தமிழில் இடுகுறிச் சொற்கள் இல்லை. திரவிடச் சொற்களுக்குத் தமிழ் உதவிகொண்டே வேர்காண இயலும் என்ற கருத்துடையவர் தேவநேயப் பாவாணர். "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்ற தொல்காப்பியரின் அடியொற்றி, தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொல்லாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழின் தனித்தன்மை சொற்பிறப்பியல் அகரமுதலியில் நிறுவப்பட்டுள்ளது. 

"தமிழ், ஞால முதன்மொழி, திராவிடத்திற்குத் தாய், ஆரியத்திற்கு மூலம்' என்னும் பாவாணர் கொள்கை நெறிப்படி கூட்டுச் சொற்கள், மரபு வினைகள் ஆகிய அனைத்துச் சொற்களுக்கும் சொற்பிறப்பினைக் கண்டறியும் முனைப்பால் உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை எளிதாகக் கண்டறியச் சொற்பிறப்பியல் அகரமுதலி வழிகாட்டுகிறது. 

இலக்கியச் சொற்கள் மொழியின் இன்றியமையாத கூறுகளாகும். அதே சமயத்தில் இலக்கிய ஆட்சிகள் மட்டும் மொழியின் முழுத் தன்மையைக் காட்டுவன ஆகாது. எனவே, அதில் கிளை வழக்குகளும் இடம் பெற வேண்டும். சொல் உணர்த்தும் பொருளை நிறைவாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ளச் சொற்பிறப்பு உதவுகிறது.  

இலக்கியம், கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம், பேச்சுவழக்கு என மொழியின் அனைத்துப் பகுதிகளிலும் சொற்றொகுப்பு நடைபெற வேண்டும். பொருளியல், குமுகாய நிலை போன்ற காரணங்களால் ஏற்படும் வட்டார வழக்கு வேறுபாடுகளையும் காட்டுவதாக அகரமுதலி அமைதல் வேண்டும்.  

சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப் பாதுகாத்தால் மொழியைப் பாதுகாக்கலாம். சொற்கள் பெருகப் பெருக மொழியும் மேம்படும். தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பியல் தொடர்பாக வேர்ச்சொல் கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என வெளியிட்டார்.  

எனவே, இனி வரும் தலைமுறையினர், அகராதி படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் கொண்டு, நற்றமிழின் சொற்பிறப்பியலில் நாட்டம் கொண்டு, தனித்தமிழ்ப் பயன்பாட்டில் தணியாத தாகம் கொண்டு, மொழியியலிலும் முனைப்புகாட்டி, கலைச்சொல்லாக்கத்திலும் தன்திறன் நாட்டி அன்னைத் தமிழுக்குச் சொல்வளம் சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தேவநேயப் பாவாணரின் தமிழ்ப் படைப்புகளை ஆழக் கற்க வேண்டும். 

இன்று (பிப். 7) தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்.

கட்டுரையாளர்: இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்.



Read in source website

 

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்று சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் மகாத்மா காந்தியடிகள் கூறினார். அப்போது நகரங்களில் மக்கள் தொகை 30% ஆகவும் கிராமங்களில்  மக்கள் தொகை 70% ஆகவும் இருந்தது. ஆனால், தற்போதுள்ள மத்திய அரசு எடுத்து வரும் தாராளமயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்தும், அதிகரித்து வரும் மக்கள்தொகையினாலும், மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் அதிகரித்த நகரமயமாக்கல் நடவடிக்கையினாலும் தற்போது கிராமங்களில் உள்ள மக்கள் நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால், நகரங்களில் மக்கள்தொகை 50% ஆகவும் கிராமங்களில்  மக்கள் தொகை 50% ஆகவும் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் 2050-இல் நகரங்களில் மக்கள்தொகை 70% ஆகவும் கிராமங்களில் மக்கள்தொகை 30% ஆகவும் மாறும். 

மாற்று எரிபொருள் அவசியம் ஏன்? பின்னணி காரணங்கள் என்ன?

மேல்குறிப்பிட்ட விஷயங்களினால் நகரங்களில் மிகக் கடுமையான சிக்கல்களை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. இதனால் பொதுப் போக்குவரத்திலும் கொள்கை, இலக்கு என அதற்கான நடவடிக்கைகள் மாறுகின்றன. தற்போது பொதுப்போக்குவரத்தின் கொள்கை என்பது மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு எளிதில் பயன்படுத்தக்கூடிய அளவில் இலக்கினைக் கொண்டதாகவும் அதற்கான நடவடிக்கையாக சாலை நெரிசலைக் குறைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்ம் சரியான போக்குவரத்தை உறுதி செய்யவும் வேண்டியுள்ளது. மேலும், சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் டீசல், பெட்ரோலின் பயன்பாடு அதிகரிக்கிறது. தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் டீசலின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக  அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து , நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) பாதிக்கப்படுகிறது. மேற்கூறிய விளைவுகளினால், இந்தியாவில் டீசல், பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் தேவை அவசியமாகிறது. இந்த பெட்ரோல், டீசலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. நாம் ஏன் டீசலை பயன்படுத்தக்கூடாது என்றும் டீசலினால் ஏற்படும் விளைவுகளும் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

•    இந்தியா மொத்த மின் உற்பத்திக்கு 85% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. 
•    இரண்டு சக்கர, மூன்று சக்கர, கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதியை பயன்படுத்துகின்றன.
•    2013-14ல் பெட்ரோலிய இறக்குமதி 77%  சார்ந்து இருந்தது. தற்போது, இது உயர்ந்து 2021-22-ல் 85% ஆக இருந்தது. 
•    எரிபொருள் தேவைக்காக இந்தியா வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பது புவிசார் அரசியல் அபாயங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
•    டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 94.28 என அதிகமாக இருப்பதால் இயக்கச் செலவும் அதிகமாகிறது, இதன் விளைவாக நாம் மாற்று எரிபொருளுக்கு மாறுவதற்கு நிர்பந்தம் இருக்கிறது. 

டீசலினால் தமிழக போக்குவரத்து கழகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள்?
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்கள் அரசு நிர்ணயித்த பயணக் கட்டணத்தில் சராசரியாக கிலோமீட்டருக்கு ரூ. 25-லிருந்து ரூபாய் 30-க்குள் வருமானம் ஈட்டுகிறது .இதில் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் எரிபொருள் மைலேஜ் ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சமாக 4.5 முதல் 5.5 வரை சராசரியாகக் கிடைக்கிறது. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் சராசரியாக கிலோமீட்டருக்கு ரூ. 23 செலவழிக்கிறது. போக்குவரத்துக் கழகம் ஈட்டும் ரூபாய் 30-இல் ரூ. 23-வரை எரிபொருளுக்கே சென்றுவிடுகிறது. மீதம் உள்ள தொகை ரூ. 7 வைத்துக்கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் தங்களது மற்ற செலவினங்களுக்கு திண்டாடுகிறது . 

தற்போதைய ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 94.27.இதனால்  தமிழக அரசு ரூ. 66/-க்கு மேல்  உள்ள தொகையினை மொத்த டீசலின் பயன்பாட்டுக்கு கிட்டத்தட்ட லிட்டருக்கு ரூ. 28.27 என்ற அளவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குகிறது . மேலும், தமிழ்நாடு அரசு பெண்களுக்கான இலவச பயணத்திற்கும் ஒவ்வொரு பெண் பயணியின் ஒரு பயணத்திற்கும் ரூ. 15 வழங்குகிறது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவசப் பயணம், மாற்றுத்திறனாளிககளுக்கான இலவசப் பயணம், முன்னாள் பேரவை உறுப்பினர்களுக்கான இலவசப் பயணம் போன்றவற்றுக்கு நிதி அளிக்கிறது. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் போதிய நிதியின்றி  தள்ளாடுகிறது. இதனால் தமிழ்நாட்டு அரசின்  போக்குவரத்துத் துறைக்கு ஏராளமாக நிதியுதவி செய்யப்படுகிறது என்ற தவறான கருத்து உலவுகிறது. 

டீசல் பயன்பாட்டினால் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் என்ன? 

இந்த பெட்ரோல், டீசல் பயன்படுத்தி வரும் வாகனப் புகையால்  உருவாகும் புவிவெப்பமயமாதல் ஏற்படுத்தும் விளைவுகள் அதிகமாக உள்ளன. இதனால் புவியின் சராசரி வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

விளைவுகள்:

•    இயற்கை பேரழிவுகள் (Natural Resources)
•    உணவு பாதுகாப்பின்மை (No Food Security)
•    ஆரோக்கியமின்மை (Health Issues)
•    குடிநீர் பற்றாக்குறை (Water Scarcity)
•    பாலின அடிப்படையிலான வன்முறை (Sexual Abuse)
•    அதிகமான் தற்காலிக இடப்பெயர்ச்சி (Large Temporary transition) 
•    புலம்பெயர்தல்(Migration)

மாற்று எரிபொருள் மாறும்போது செய்யவேண்டியது என்ன?

டீசலிலிருந்து மாற்று எரிபொருளுக்கு மாறும்போது கீழ்க்கண்ட கொள்கைகளை கணக்கில் கொள்ளவேண்டும். 

•    பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் விலை மலிவானதா? (Economically competitive)
•    ஏற்கனவே உள்ள பேருந்துகளின் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் பொருந்தக்கூடியதா? (Technical acceptability for  existing vehicles)
•    பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா ? (Environmentally acceptability)
•    பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் வாகனங்களில் உபயோகிக்க பாதுகாப்பானதா?(user friendly/Safety)
•  பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா?

இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசலுக்கு பிறகு வேறு என்ன வகையான மாற்று எரிபொருள் உள்ளது? 

•    டீசல் (Diesel)
•    பயோ டீசல் (Bio Diesel)
•    மின்சாரம் (Electricity)
•    அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG)
•    திரவமாக்கப்பட்ட  இயற்கை வாயு (LNG)
•    ஹைட்ரஜன் (Hydrogen- H2)
•    ஹைட்ரஜன் பியூஎல் செல்கள் (Hydrogen Fuel Cells)

மாற்று எரிபொருள் மாறுவதினால் சமூகத்திற்கு என்ன பயன்?

•    பெட்ரோலிய எரிபொருட்களை சேமிக்கலாம் ( Conserve Fossil fuels)
•    மெதுவான காலநிலை மாற்றம் ஏற்படுவதைக் குறைத்தல் (Slow Climate Change) 
•    தலைகீழ் காலநிலை மாற்றம் செய்தல் (Reverse Climate Change)
•    புகையினால் ஏற்படும் மனித உயிர்கள்/விலங்கினங்கள் /நுண்ணுயிர்களுக்கு பாதிப்புகளிலிருந்து காப்பாற்றுதல் (Save Human/Animals/Micro organis)
•    கடுமையான வானிலை ஏற்படுவதைத் தடுத்தல் (Reduce Severe Weather Change)
•    இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் சார்புநிலையைக் குறைத்தல் (Minimise Fuel Dependency) 
•    பொருளாதாரம் & வேலை வளர்ச்சி அடைதல் (Economic and Job Development)

இதனால் கூடிய வரை மத்திய, மாநில அரசுகள், வாகன தயாரிப்பாளர்கள், மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாற்று எரிபொருளுக்கு மாறுவதற்கான நடவடிக்கை எடுத்தால் சமூகத்திற்கு மிகுந்த பயன் ஏற்படும். இந்தியாவில் மாற்று எரிபொருள் பல இருக்கிறது. ஆனால், நமக்கு மாற்றான எதிர்காலம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்!

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]

 



Read in source website

மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓபிசி) 27% இடஒதுக்கீட்டைச் சமமான முறையில் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம், 14ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது கால தாமதம் குறித்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மண்டல் ஆணையப் பரிந்துரைப்படியே வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் பலதரப்பட்ட ஓபிசி பிரிவினரைச் சென்றடையவில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே உண்டு. மிகவும் பின்தங்கிய ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பாதுகாக்கப் பல்வேறு பரிந்துரைகளை 2015-16இல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாகவே 2017 அக்டோபர் 2இல் நீதிபதி ரோகிணி ஆணையமும் அமைக்கப்பட்டது.



Read in source website

கரோனா பெருந்தொற்றுக்குப் பின், இளவயது மரணங்கள் அதிகரித்திருக்கின்றன எனும் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதிலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஒருபுறமும் கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் இதய நோய் அதிகமாக ஏற்படுகிறது என்று மற்றொருபுறமும் கருத்துகள் உலவிவருகின்றன.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி (National Crime Records Bureau), 2021இல் மாரடைப்பினால் ஏற்பட்ட மரணங்கள் 28,449; 2020இல் ஏற்பட்ட மாரடைப்பு மரணங்கள் 28,680. மேற்சொன்ன இரண்டும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய பின் வெளியான விவரங்கள். 2020இல், கரோனா தொற்றின் முதல் அலையைச் சந்தித்தோம். 2021 ஜனவரி 16 அன்று முதல் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 2021 இடையில் இரண்டாம் அலையைச் சந்தித்தோம்.

இந்தக் கணக்குகளின்படி 2020ஐ ஒப்பிடும்போது, 2021இல் மாரடைப்பு மரணங்கள் சிறிதளவு குறைந்துள்ளதாகத் தெரிகிறது. 2019இல் பதிவுசெய்யப்பட்ட மொத்த மாரடைப்பு மரணங்கள் 28,005. 2019ஐக் காட்டிலும் மாரடைப்பு மரணங்கள் 2021இல் 1.6% கூடியிருக்கின்றன. ஆயினும் 2017 மாரடைப்பு மரணங்களை 2021 உடன் ஒப்பிடும்போது 22% அதிகம். 2012 மாரடைப்பு மரணங்களைவிட, 2021இல் 54% அதிகமாக இருக்கிறது. ஆக, கரோனா பெருந்தொற்று இல்லாத நிலையிலும் மாரடைப்பு மரணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றன என்பது தெளிவாகிறது.

உண்மைக் காரணம்: இதுவரையிலான ஆய்வு முடிவுகளின்படி, தீவிர கோவிட் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்குக் கோவிட் நோயின் தீவிரத் தாக்கத்தினால் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்படுவது புலனாகிறது.

கரோனா வைரஸுக்கு எதிராக உடலின் எதிர்ப்புசக்தி செய்யும் போரின் விளைவாக, இதயத்தின் தசைகளும் காயத்துக்கு உள்ளாகக்கூடும். மேலும், ரத்த நாளங்களுக்குள்ளே ரத்தக் கட்டிகள் உருவாகும் தன்மை அதிகரித்து, அதனால் இதய ரத்த நாள அடைப்பும் மூளை ரத்த நாள அடைப்பும் கால்களில் ஆழ்சிரை ரத்த நாள அடைப்பும் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்கின்றன ஆய்வுகள். கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு எட்டு மாதங்கள்வரை இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருக்கக்கூடும்.

இதனுடன் படபடப்பு, இதயம் துடிக்கும் விசையில் சீரற்றதன்மை, துடிக்கும் முறையில் மாறுபாடு என்று பல பிரச்சினைகளைத் தீவிர கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள் அனுபவிக்கக்கூடும். இதனை ஆரம்பகட்டத்தில் கவனித்துச் சிகிச்சை பெறாமல் போனால், பின்பு மாரடைப்பு, இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசிக்குத் தொடர்பில்லை: கோவிட் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளால் 2021இல் மட்டும் 42 லட்சம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக ‘லான்செட்’ ஆய்வு தெரிவிக்கிறது. தடுப்பூசிக்கு அரிதினும் அரிதாகவே பக்கவிளைவுகள் தோன்றியுள்ளன.

102.7 கோடித் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதில் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி சார்ந்த பக்கவிளைவுகள் 0.009% என்ற அளவில் உள்ளன. இளவயது இதய நோய் மரணங்களுக்குக் காரணம் தடுப்பூசிதான் என்பதற்கு, எந்த வகையான ஆய்வுபூர்வமான தரவுகளும் இல்லை.

நாம் தவறவிடுபவை: இந்தியாவில் இளவயது (20 முதல் 45 வயதுவரை) மாரடைப்பு மரணங்களுக்கான பல்வேறு காரணங்களில் ஒன்று, உடல் பருமன். 20 முதல் 39 வயதுக்குட்பட்ட வயதினருள் 39.8% பேர் உடல் பருமனுடன் இருப்பதாக, தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கை (NFHS-5) கூறுகிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொதுமுடக்கம், வீட்டிலிருந்து பணிசெய்யும் முறை, பணியிழப்பு அபாயம், பணிப் பாதுகாப்பற்ற சூழல் - இவற்றால் ஏற்பட்ட அச்சம், படபடப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றாலும் அதிக மாவுச்சத்து நிறைந்த தின்பண்டங்களை அடிக்கடி உண்பது, மன அழுத்தத்துக்கு வடிகாலாக மது, புகை உள்ளிட்ட போதைப் பொருள்களை நாடுவது, காலப்போக்கில் அவற்றுக்கு அடிமையாவது என இளைய சமுதாயம் இதய நோய்க்கான அத்தனை காரணிகளையும் தன்னகத்தே வளர்த்துவருகிறது.

உடலின் உள்ளுறுப்புகளைச் சுற்றி மண்டிக் கிடக்கும் கொழுப்பின் அளவு (Visceral adiposity) ஐரோப்பியர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. நீரிழிவு உருவாகும் தன்மை இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தென்னிந்தியர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையன்றி இதயம் துடிக்கும் முறைகளில் ஏற்படும் கோளாறு (Arrhythmias), பிறவியிலேயே இதயத்தில் ஏற்படும் ஓட்டை, இதயத்தின் அறைகளில் ஏற்படும் ஊறு விளைவிக்கும் இணைப்புகள் என்று சிறு வயதிலேயே கவனித்துப் பார்க்க வேண்டிய இதயம் சார்ந்த பிரச்சினைகளைக் கவனிக்காமல் விடுவதாலும் இள வயது இதயச் செயலிழப்பு ஏற்படக்கூடும்.

பெருந்தொற்றின் மூன்றாம் அலையைக் கடந்திருக்கும் இக்காலத்தில் இளவயதினர் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்திகள் சில உள்ளன: உடல் எடையைச் சரியாகப் பராமரித்தல்; உணவு விஷயத்தில் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், தின்பண்டங்கள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல்; தேவையான அளவு புரதமும் ஆரோக்கியமான வழிகளிலிருந்து கொழுப்பையும் தரும் உணவுப் பழக்கத்துக்கு மாறுதல்.

தேகப் பயிற்சிக்கு நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சிக் கூடம் செல்லுதல் போன்றவற்றுக்கு அன்றாட வாழ்வில் கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். மது, புகை போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உடனே கைவிட வேண்டும்.

ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இருக்கின்றனவா என்பதை ஆண்டுக்கு ஒருமுறையேனும் பரிசோதித்துக் கொண்டு, முறையான தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை கண்டறியப்பட்டாலும் முறையான மருத்துவச் சிகிச்சையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ளாத போக்கு காணப்படுகிறது.

இதுவும் மிகவும் ஆபத்தானது. நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் இதய நலன், சிறுநீரக நலன் உள்பட ஏனைய உள்ளுறுப்புகளையும் நாளடைவில் பாதிக்கக்கூடிய நோய்கள் என்பதை உணர வேண்டும். முறையாகத் தூங்கி, மன அமைதி தரும் செயல்களில் ஈடுபட்டு, பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர் இதய நலனை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மூச்சுத்திணறல், படபடப்பு, மார்புப் பகுதியில் வலி, கெண்டைக் கால் தசைப் பகுதியில் வலி போன்றவை ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற வேண்டும். தீவிர கரோனா தொற்று ஏற்பட்டுக் குணமானவர்கள் இந்த அறிகுறிகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதய நோய் குறித்தும் அதைத் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான செயல்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், இளவயது இதய நோய் சார்ந்த மரணங்களை நிச்சயம் தடுக்க முடியும். மாறாக, கரோனா வைரஸ் மீதும் தடுப்பூசி மீதும் தேவையில்லாமல் பழி சுமத்துவது யாருக்கும் பலன் தராது.

- அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், எழுத்தாளர்; தொடர்புக்கு: drfarookab@gmail.com



Read in source website

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய அண்ணாவின் கொள்கை முழக்கம் இது. ஆனால், பொதுவெளியில் ‘கண்ணிய’த்தோடு நடந்துகொள்ள வேண்டிய அமைச்சர்களில், அண்மைக் காலமாகக் ‘கட்டுப்பாடு’ இன்றி நடந்துகொள்ளும் சிலரின் போக்கு, அக்கட்சியின் அடிப்படைக் ‘கடமை’களிலிருந்தே அவர்கள் பிறழ்ந்துவிட்டதைக் காட்டுகிறது.

திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சர் நாசர், தனக்கு நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால், தொண்டர்கள் மீது கல்லெறிந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் திமுக கவுன்சிலரைத் தாக்கியது, அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்த நிகழ்வில், கட்சித் தொண்டர் ஒருவரைத் தலையில் அடித்துத் தள்ளியது என இரு வேறு சம்பவங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.



Read in source website

ஒவ்வொரு குழந்தையும் வீட்டுக்கு வெளியே உள்ள உலகைப் பார்க்கத் தொடங்குவது பள்ளிகள் மூலமாகத்தான். ஆகவேதான் பள்ளிகளில் நல்ல காற்றோட்டமான அறைகள் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. கூடவே, பள்ளி வளாகம் துய்மையாக இருப்பதும் பசுமையாக இருப்பதும் அவசியமல்லவா?

பள்ளி வளாகத்தில் பாடங்கள்: இனிமையான கற்கும் சூழலுக்காக, ‘பள்ளியில் பசுமைத் தோட்டம்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்த இயலும். நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் எனப் பள்ளி வளாகத்திற்குள் தூய்மை, அழகு - சுற்றுச்சூழல் காத்திட இது உதவும். குழாய்களிலிருந்து வீணாகும் தன்ணீரையும், பாத்திரம் கழுவும், கை கழுவும் தண்ணீரையும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் வழிமுறைகளையும் உருவாக்கலாம்.



Read in source website