DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 07-02-2022

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், கணினித் தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் வளா்ச்சித் துறை மூலம் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்குரிய முதல்வா் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபா்கள், நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளா்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாளாக டிச.31-ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 



Read in Source Website

புது தில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வரும் சாந்திஸ்ரீ பண்டிட்(59) தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்(ஜேஎன்யு) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிட் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பல்கலைக் கழக துணைவேந்தராக இருப்பார் என்று மூத்த அதிகாரி கூறினார். 

சாந்திஸ்ரீ பண்டிட், முதன்முதலாக 1988 இல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு 1993 இல் புணே பல்கலைக்கழகத்திற்கு சென்றார். சாந்திஸ்ரீ மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளையும் வகித்துள்ளார்.

அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர்களைப் பரிந்துரைக்கும் உறுப்பினராகவும் சாந்திஸ்ரீ இருந்துள்ளார்

சாந்திஸ்ரீ பண்டிட் பேராசிரியராக இருந்த காலங்களில் 29 பேருக்கு அவர் முனைவர் பட்டம் பெற வழிகாட்டி பேராசிரியராக இருந்துள்ளார்.



Read in Source Website

டாடா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ராம்குமாா் ராமநாதன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் டாடா ஓபன் ஏடிபி போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்நிலை இணையான ஆஸ்திரேலியாவின் லூக் சவிலே-ஜான் பேட்ரிக்கை எதிா்கொண்டது இந்திய இணை.

முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு இடையே 6-7 என இழந்தனா் போபண்ணா-ராம்குமாா். இரண்டாவது செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டில் இரு இணைகளும் கடுமையாக மோதின. இறுதியில் அந்த செட்டை 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றது இந்திய இணை.

இது போபண்ணாவுக்கு 21-ஆவது ஏடிபி இரட்டையா் பட்டமாகும். ஏற்கெனவே 2019-இல் திவிஜ் சரணுடன்- போபண்ணா இப்பட்டத்தை கைப்பற்றினாா்.



Read in Source Website

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.

அவ்வகையில், 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என ஏற்கெனவே செய்தி வெளியிடப்பட்டது.

தற்பொழுது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 28.02.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 28.02.2022. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008

தொடர்புக்கான தொலைபேசி எண்கள்/ மின்னஞ்சல் முகவரி: 044 - 28190412 / 044 - 28190413 tvt.budget@gmail.com



Read in Source Website

கூடலூரை அடுத்த ஜீன்பூல் தாவர மையத்தில் விலை உயர்ந்த அகர் மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் விலை உயர்ந்த அகர் (அகில்) மரங்கள், நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவை. ஆண்டுக்கு 150 முதல் 750 செ.மீ. மழை அளவுள்ள பகுதியில் வளரக் கூடியவை. விலை உயர்ந்தவாசனை திரவியம், எண்ணெய்,அகர் பத்தி உற்பத்தி செய்யப்பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ மரம் ரூ.10 ஆயிரமும், இதன் எண்ணெய் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரையும் விற்கப்படுகிறது.

குறிப்பாக, முதிர்ந்த மரத்தில் உருவாகும் பிசினில் வாசனை திரவியம் தயாரிப்பதால், உலக மார்க்கெட்டில் மிக அதிக விலை கிடைக்கிறது.

100 மரங்கள் இருக்கும் இடத்தில், 10 மரங்களில் மட்டும் பிசின் உற்பத்தியாகிறது. பல நாடுகளில், பணத்துக்காக வேகமாகஅழிக்கப்பட்டுள்ள இந்த மரம், இந்தியாவில் மழைக் காடுகளில் வளர்கின்றன. அதுவும் அழியும் நிலையில் உள்ளது என்று, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மரங்கள் நீலகிரி காடுகளில் கண்டறியப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியிலுள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இரண்டு மரங்களில், பூ பூத்து காய்கள் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை, அதிகளவில் உற்பத்தி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜீன்பூல் தாவர மைய வனச்சரகர் பிரசாத் கூறும்போது, "முதிர்ந்த அகர் மரத்தை பூஞ்சை நோய் தாக்கும்போது, தன்னை பாதுகாக்க வெளியிடும் பிசின், ஒரு கிலோவுக்கு சர்வதேச சந்தையில் ரூ.1கோடிவரை விலை கிடைக்கிறது. இதன்மூலமாக வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதேபோல, மரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய், ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை விலை கிடைக்கும். அழியும் நிலையில் உள்ள இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் காய்களின் மூலமாக விதைகளை எடுத்து, அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.



Read in Source Website

சென்னை: பாரம்பரிய அடையாளத்தை மக்களுக்கு நினைவூட்டவே 'மீண்டும்மஞ்சப்பை' திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக சாயம் தோய்க்காத பைகள் பயன்பாட்டை மட்டுமே ஊக்குவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், அதற்கு மாற்றுப் பொருட்களையும் அரசு வெளியிட்டது. எனினும், மாற்றுப் பொருட்களின் விலை கூடுதாக இருப்பதாலும், போதுமான மக்கள் ஒத்துழைப்பு இல்லாததாலும் பிளாஸ்டிக் தடை வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மக்கள் இயக்கமாக கொண்டுசென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழ அரசு அறிவித்தது.

மேலும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தை கடந்த டிச. 23-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். "மஞ்சப்பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்தான் மஞ்சள் பை என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், தொண்டு நிறுவனங்களும், பெருநிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பு நிதியிலும் மஞ்சள் நிற துணிப் பைகளை வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.

மாசடைந்த நீர்நிலைகள்

இதற்கிடையே, "சாயப்பட்டறை கழிவுகளால் திருப்பூர், கரூர் பகுதிகளில் நொய்யல் ஆறு கடுமையாக மாசடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாயக் கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.

பல நேரங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு இருப்பதாலும், சில அதிகாரிகளின் பணத்தாசை காரணமாகவும், அரசியல் அழுத்தம் காரணமாகவும் சாயக்கழிவுகளால் நீர்நிலை மாசுபடுவதை தவிர்க்க முடியவில்லை.

மஞ்சள் கிழங்கு சாயம்

உண்மையிலேயே சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடாது என்றால் மஞ்சள் சாயம் தோய்த்த பைகளுக்கு பதிலாக, மஞ்சள் கிழங்கிலிருந்து கிடைக்கும் சாயத்தில் தோய்த்த பைகளை மட்டுமே பிரபலப்படுத்த வேண்டும் ரசாயன சாயம் தோய்த்த பைகளை அரசு பிரபலப்படுத்தினால், அதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "பாரம்பரிய அடையாளத்தை மக்களுக்கு நினைவூட்டவே 'மீண்டும் மஞ்சப்பை' என்ற கருப்பொருள் கையாளப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சாயம் தோய்க்காத துணிப் பைகள் பயன்பாட்டை மட்டுமே ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.



Read in Source Website

சென்னை: அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுவாமி விவேகானந்தர், பின்னர் இந்தியா திரும்பிய 125-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விவேகானந்தரின் குழந்தைப் பருவம் மற்றும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, விவேகானந்தர் இந்தியா வந்த பின்னர் 9 நாட்கள் தங்கியிருந்த தியான அறையில், ஆளுநர் ரவி தியானம் செய்தார்.

இதுகுறித்து ஆளுநர் கூறும்போது, "நாட்டில் உள்ள இளைஞர்கள் விவேகானந்தரின் ‘எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிற்காதே’ என்ற கருத்துகளை அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக்கொண்டு, பின்பற்ற வேண்டும்" என்றார்.

பின்னர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார், இந்த நிகழ்ச்சிகளில், ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், மேலாளர் சுவாமி தர்மிஷ்தானந்தா, சுவாமி ரகுநாயகானந்தா, சுவாமி இஷாபிரேமானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in Source Website

"திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - இது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்து. இவர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மத்திய அரசு, திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2017-ல், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-ன்படி 18 வயது பூர்த்தியடைந்துள்ள மனைவியுடன் கட்டாயமாக பாலுறவு கொள்ளும் கணவன் மீது வல்லுறவு குற்றத்தை சுமத்த முடியாது என்ற விலக்கை நீக்க அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், மனைவியை கணவன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது கிரிமினல் குற்றம் ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்வதால், திருமணம் என்ற சமூகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், "திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. எல்லா திருமணங்களையும் வன்முறையானதாகக் கருத முடியாது. எல்லா கணவர்களையும் ரேப்பிஸ்ட் என்று சொல்லிவிட முடியாது" என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

திருமண உறவிலும் பாலியல் வல்லுறவு நடக்கலாம் என்று மற்ற அமைப்புகள் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் அரசு சற்று எச்சரிக்கையுடனேயே இருக்கிறது என்றே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

2016-ல் திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க முடியாது என்பதற்கு அரசு கூறிய காரணத்தைக் கவனிக்க வேண்டும். இந்திய சமூகத்தில் கல்வி, வறுமை, பல்வேறு சமூகப் பழக்கவழக்கங்கள், நன்மதிப்புகள், மத நம்பிக்கைகள் ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டே இதில் முடிவெடுக்க முடியும். இந்தியச் சமூகம் திருமணத்தை புனிதமாகக் கருதுகிறது என்று கூறியிருந்தது.

இனியும் தாமதிக்கலாமா?

நம் நாட்டில் குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டம் உள்ளது. அதில் உடல் ரீதியாக, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு தண்டனை உள்ளது. இந்த சட்டங்களால் திருமணம் எனும் சமூக கட்டமைப்பிற்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடவில்லை. அதேபோல் திருமண உறவில் பாலியல் வல்லுறவையும் கிரிமினல் குற்றமாக்குவதால் திருமணம் எனும் அமைப்பு சிதைந்துவிடாது. ஆகையால், இனியும் தாமதிக்காமல் சட்டங்களை இயற்ற வேண்டும். மனைவி என்பவர் கணவரின் சொத்து என்ற மனப்பாங்கில் அணுகும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். திருமண உறவை பழமைவாத கண்ணாடியின் ஊடே பார்க்கக் கூடாது. கணவரின் ஆதிக்கத்தின்படி நடந்து கொள்ள வேண்டியவர் அல்ல மனைவி. மனைவிக்கும் ஒரு சுயம் இருக்கிறது என்பதை உணர வேண்டிய தருணம் இது.

இங்கே மீண்டும் ராகுல் காந்தி கூறிய, "திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்ற வார்த்தைகள் நினைவுகூரத்தக்கது.



Read in Source Website

கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே டோஸில் செலுத்திக் கொள்ளும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் மருந்த்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இத்தகவலை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் 9வது தடுப்பூசியாகும். இதனால் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தேசத்தின் கூட்டுப் போராட்டம் இன்னும் வலுப்பெறும் என்று கூறினார்.

ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பெற்று விநியோகிக்கிறது ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேப். ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசியையும் இந்தியாவுக்கு விநியோகித்துள்ளது. அதுவும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அது இரண்டு டோஸ்கள் கொண்டது. ஸ்புட்னிக் லைட் சிங்கிள் டோஸ் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவது பற்றியும் ரெட்டிஸ் லேப் கிளினிக்கல் பரிசோதனைகளை முடித்து டிசிஜிஐயில் அறிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஊசியில்லா தடுப்பூசியான ஜைக்கோவ் டி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சைகோவ்-டி தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசி உலகின் முதல் பிளாஸ்மிட் டி.என்.ஏ வகை தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை 3 தவணைகளாக செலுத்த வேண்டும். ஊசிக்கு அச்சம் கொண்டவர்களுக்கு இந்த வகை தடுப்பூசி ஒரு நல்ல தீர்வு என்று கூறப்படுகிறது. ஸ்ப்ரிங் உதவியுடன் தோலில் இந்த ஊசி செலுத்தப்படுகிறது.



Read in Source Website

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, '' அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் ஆசியாவிலே மிகப் பெரியது. கர்நாடக அரசு இதனை ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ள‌து.

உலகளாவிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் சந்தையில் 10 சதவீதமான இடத்தை இந்தியா கைவசம் வைத்திருக்கிறது. வரும் 2027ம் ஆண்டில் இது 20 முதல் 25 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த துறையில் கர்நாடகா பெரும் ஆற்றலைக் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையமானது டிஜிட்டலில் ஆக்கப்பூர்வமான தொழில்கள் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த மையத்தில் விர்ச்சுவல் (மெய்நிகர்) ரியாலிட்டி, டிஜிட்டல் கம்ப்ரஷன், போட்டோகிராமெட்ரி, கல்வியின் கேமிஃபிகேஷன், நிகழ்நேர மெய்நிகர் உற்பத்தி, பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து தனித்துவமான படிப்புகளை வழங்கும் பள்ளியும் இடம்பெற்றுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் கர்நாடக அரசு புதிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் கொள்கையை கொண்டு வர உள்ளது. பிரத்யேக ‘டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் ஏரியா’ அமைக்க தேவையான நிலமும் ஓராண்டுக்குள் வழங்கப்படும். கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் பல சிறிய சிறப்பு வசதி மையங்கள் திறக்கவும் வழிவகை செய்யப்படும்''என்றார்.



Read in Source Website

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன.

பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தி, அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கி அதன் மூலம் அதிக லாபம் அடைந்துவந்தனர்.இந்தப் போக்கை தடுக்க மத்திய அரசு, ஊழியர் தரப்பிலிருந்து கட்டப்படும் பிஎஃப் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மூலமான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 2021-22-ம் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஊழியர் தரப்பிலிருந்து வரவாகும் பிஎஃப் கணக்குகளுக்கு வரி விதிக்கும் வகையில், அனைத்து பிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

அதன்படி, அனைத்து பிஎஃப் கணக்குகளும் வரி விதிப்புக்கு உட்பட்டவை (taxable account), வரி விதிப்புக்கு உட்படாதவை (non taxable account) என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன.

வரி விதிப்புக்கு உட்படாத பாகம், 2021 மார்ச் மாதம் வரையிலான பிஎஃப் விவரங்களைக் கொண்டிருக்கும். வரி விதிப்புக்கு உட்பட்ட பாகம், நடப்பு நிதி ஆண்டின் (2021 ஏப்ரல் - 2022 மார்ச்) பிஎஃப் விவரங்களையும் உள்ளடக்கி இருக்கும். அதன் அடிப்படையில் பிஎஃப் வட்டி மீதான வரி கணக்கிடப்படும். பிஎஃப் வரி விதிப்புக்கென்று வருமான வரி விதிகளில் 9டி என்று பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.



Read in Source Website

ஒட்டா: தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து போராடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கனடா தலைநகர் ஒட்டாவாவில் லாரிகளுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போர் நினைவிடங்களை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.

அங்கிருந்து கொண்டே தனது அரசு வேலைகளை ஜஸ்டின் ட்ரூடோ செய்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு வார காலமாக நடக்கும் லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலையை கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் , தங்கள் நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவிட வேண்டாம் என்று கனடா கேட்டுக் கொண்டுள்ளது.



Read in Source Website

வழித்தடம் நான்கு, நிலப்பரப்பில் இருந்து 13.5 மீட்டர் உயரத்தில் கட்டி எழுப்பப்படும். அதே போன்று வழித்தடம் 5, 21 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் என்று சென்னை மெட்ரோ லிமிட்டட் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Chennai Metro : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நான்கு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் போது காரிடர் 4 மற்றும் 5-ல் ஒரே நேரத்தில், ஒன்றன் மீது ஒன்றாக, இரண்டு ரயில்கள் 5 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், காரம்பாக்கம், போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வடசென்னை அல்லது தென் சென்னைக்கு எளிதாக பயணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கியுள்ள நிலையில் மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் மாநில, மத்திய அரசு நிதிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ. 61,843 கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய விரிவான திட்டத்தின் கீழ், பயணிகள் தங்களின் ரயில்களை தவறவிடாமல் இருக்கும் வகையில் ரயில் நிலையங்கள் நன்றாக திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் 3 மற்றும் 5ம் வழித்தடங்கள் சோழிங்கநல்லூர், மாதாவரம் மற்றும் திருமயிலையில் சந்திக்கின்றன. ஆனால் வழித்தடம் நான்கு மற்றும் ஐந்து மேலும் கீழுமாக அமைக்கப்படுவதால் இந்த இரண்டு வழித்தடங்களும் நான்கு நிறுத்தங்களை கொண்டுள்ளது.

இந்த இரட்டைப் பாதை நான்கு நிலையங்களில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும். ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலம்பாக்கம் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் வருகின்றன. வழித்தடம் நான்கு, நிலப்பரப்பில் இருந்ந்து 13.5 மீட்டர் உயரத்தில் கட்டி எழுப்பப்படும். அதே போன்று வழித்தடம் 5, 21 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் என்று சென்னை மெட்ரோ லிமிட்டட் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சில மாதங்களாக பணிகள் நடந்து வரும் நிலையில், மண் பரிசோதனைக்கு பின், தூண்களை உயர்த்தும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டைப் பாதைகளும் 5 கி.மீ தூரத்திற்கு பகிரப்பட்ட தூண்களுக்கு மத்தியில் கட்டப்படும். டிக்கெட் ஒரே இடத்தில் வழங்கப்பட்டாலும் ரயில்களுக்கு தனித்தனி ப்ளாட்ஃபார்கள் இருக்கும்.

இந்த திட்டத்தினால் போரூரை சேர்ந்த எந்த ஒரு நபரும் அடையாறு, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தரமணி, மாதாவரம், ரெட்டேரி, கோயம்பேடு போன்ற பகுதிகளை விரைவாக அடையலாம்.



Read in Source Website

தி.நகரில் உள்ள பத்மாவதி அம்மன் கோயிலின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும். இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகிவிடும் என ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் 4 புதிய வெங்கடேஸ்வரா கோயில்களை கட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆலோசனைக் குழுவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி மற்றும் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

நிகழ்வில் பங்கேற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, சென்னை, உளுந்தூர்பேட்டை, மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் புதிய வெங்கடேஸ்வரா கோயில்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தி.நகரில் உள்ள பத்மாவதி அம்மன் கோயிலின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும். இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகிவிடும்” என்றார்.

இதுதவிர, ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டிவருகிறது.

சென்னை எல்ஏசி தலைவரும், டிடிடி அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளருமான ஜே.சேகர் ரெட்டி கூறுகையில், “இந்தாண்டு இறுதிக்குள் சென்னையில் வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்கான இடத்தை இறுதி செய்ய தமிழக அரசுடன் கோயில் அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது” என்றார்.



Read in Source Website

 இந்தியாவின் விடுதலையைவிட காந்தியடிகள் முன்னுரிமையாகக் கருதியது கிராம சுயராஜ்யம் என்கிற அடிப்படை நிர்வாக அமைப்பைத்தான். அதன்படி உருவானவைதான் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் அனைத்துமே. எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சியும், பொருளாதார வெற்றியும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டால்தான் சாத்தியம் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது.
 இப்போது அப்போது என்று தள்ளிப்போடப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியதிலிருந்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதை புரிந்துகொள்ள முடிந்தது. 74,000-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று இறுதிப்பட்டியல் வெளியாகிவிடும். பிப்ரவரி 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 22-இல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
 நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்கள், 1,42,45,637 பெண் வாக்களார்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 21 மாநகராட்சிகளிலுள்ள 1,374 வார்டுகளுக்கும், 138 நகராட்சிகளிலுள்ள 3,843 வார்டுகளுக்கும், 490 பேரூராட்சிகளிலுள்ள 7,621 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
 கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடந்தன. சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த அக்டோபர் மாதம் அதற்கான தேர்தலும் நடந்துவிட்டன.
 பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையிலும், சட்டச் சிக்கல்களின் அடிப்படையிலும் தள்ளிப்போடப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தடைகள் அகற்றப்பட்டு தேர்தல் நடக்க இருக்கிறது.
 இதற்கு முன்பு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டிலேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்தவொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்தான் நிர்வாகம் நடந்து வருகிறது. அதிகாரிகளின் நிர்வாகத்தில் பேரூராட்சிகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் நடப்பது என்பது மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்த புரிதல் இல்லாத நிர்வாகம் நடக்கிறது என்று பொருள்.
 இதற்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மாநகராட்சி மேயர்களையும், நகராட்சித் தலைவர்களையும் மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரோ, தலைவரோ ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருக்கும் நிலை சில அமைப்புகளில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் மேயரோ, தலைவரோ கொண்டுவர நினைக்கும் எந்தவொரு தீர்மானத்தையோ, செயல்படுத்த நினைக்கும் திட்டத்தையோ நிறைவேற்ற முடியாது. முரண்பாடு காரணமாக நிர்வாகம் செயலிழக்கும் வாய்ப்பு ஏராளம்.
 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயரையோ, தலைவரையோ தேர்ந்தெடுக்கும் முறைதான் சரியானது. சட்டப்பேரவையில் முதல்வரும், மக்களவையில் பிரதமரும் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயக முறையை நாம் அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கிராமப் பஞ்சாயத்துகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையில் மறைமுகத் தேர்தல் நடத்துவதுதான் பிரச்னைகள் இல்லாமல் நிர்வாகம் நடைபெறுவதற்கு வழிகோலும்.
 நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 அதுமட்டுமல்லாமல், பட்டியலினத்தைத் சேர்ந்த பெண்களுக்கு இரண்டு மாநகராட்சி மேயர் இடங்களும், பட்டியலினத்தை சேர்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரு மாநகராட்சி மேயர் பதவியிடமும் ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
 வளர்ச்சியின் ஊற்றுக்கண் உள்ளாட்சி அமைப்புகள். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துவரும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தும் என்று எதிர்பார்ப்போம்.



Read in Source Website

பொதுவாக நம்மை விட்டுப் பிரிந்து செல்பவா்களிடம் தேவையற்ற பகைமை பாராட்டுவது பண்புடைய செயலாகாது. அதிலும், அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவா்களையும், தங்களின் ஆயுள் முடிந்து விட்டதால் இந்த உலகை விட்டே செல்பவா்களையும் மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே நமது கலாசாரமாகும்.

ஒரு சிலா் தாங்கள் பணிபுரியும் இடத்தில் எப்பொழுதும் பிறருடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதும், பல்வேறு சலுகைகளைப் பெறுவதில் சுயநலத்துடன் நடந்து கொள்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியவையே.

அது மட்டுமின்றி, தங்களுடன் பணிபுரிபவா்களிடையே ஒருவரைப் பற்றி மற்றொருவா் தவாறாக எண்ணும்படியாகக் கோள் சொல்லுவது, மேலதிகாரிகளிடம் ஒன்றுக்குப் பத்தாக எடுத்துச் சொல்லி உடன் பணிபுரிபவா்களின் பதவி உயா்வு போன்றவற்றைத் தடுப்பது என்றெல்லாம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பாா்கள்.

அப்படிப்பட்டவா்கள் பணி ஓய்வில் செல்லும் காலம் வந்தால், அவா்களையும் இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து பேசிப் பொன்னாடை போா்த்தி நினைவுப்பரிசுடன் வீட்டிற்கு அனுப்பி வைப்பதுதான் நயத்தக்க நாகரிகம் ஆகும்.

அதற்கு மாறாக, அவா்களுடைய பிரிவு உபசார நிகழ்வில் அவா்களின் பழங்கால நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு மனதை நோகடித்து அனுப்புவது பண்பாடாகாது.

அவ்வாறு ஓய்வு பெறுபவா்களில் ஒரு சிலா் சற்றே மனம் திருந்தி, இதுவரையில் யாா் மனங்களையாவது நான் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளவும் கூடும்.

அப்போது கூட, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உங்களைப் போல நல்லவா் உண்டா என்ற ரீதியில் நான்கு வாா்த்தைகள் பேசி வழியனுப்பி வைப்பதே சிறந்தது.

எப்படிப் பாா்த்தாலும், பணி ஓய்வில் செல்லும் ஒருவரால் இனிமேலும் நமக்குத் தொடா்ந்து தொந்தரவு கொடுக்க இயலாது என்னும் போது, அவருடன் பகைமை பாராட்டாமல் இருப்பதால் என்ன குறை வந்துவிடப் போகிறது.

இது ஒரு புறம் இருக்க - ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க, தொடா்ந்து தீமைகள் செய்து வந்த சக ஊழியரை அவருடைய ஓய்வு நாளன்று பாராட்டி வைப்பதில் தவறு ஏதும் இல்லையே. அதன் காரணமாக அவருடைய எதிா்கால நடத்தை மாறுவதற்கும், அதன் மூலம் குறைந்த பட்சம் அவருடைய குடும்பத்தினரேனும் நிம்மதியாக இருப்பதற்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவா் செய்த தீமைகளையே மறந்து விடவேண்டும் என்றால், ஒரு வழியாக உலக வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று செல்லுபவா்களிடம் பகைமை பாராட்டுவது எப்படிச் சரியாக இருக்க முடியும் ?

இறந்துவிட்ட ஒருவரால் இனி உடலாலும் சொல்லாலும் நமக்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் செயலாற்ற முடியாது.

இந்த நிலையில், ஒருவா் இறந்து விட்டால், அவா் பகைவராகவே இருந்தாலும்கூட அவரது இறுதிச் சடங்குகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதும், இறந்தவரின் நெருங்கிய உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் ஆறுதல் வாா்த்தைகள் கூறுவதுமே மனிதத் தன்மையாகும். மாறாக, இறந்த பின்பும் பகைமை பாராட்டுவதும், இறந்தவா்களைத் தூற்றிப் பேசுவதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களாகும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் மோசமானதாக இருக்கும்.

சமீபத்தில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்த ரயில்வே ஊழியா் சாலை விபத்தில் பலியாகியுள்ளாா். முதலில் அது சாதாரண விபத்தாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆனால் தீவிர விசாரணைக்குப் பின்பு அது விபத்தல்ல, கொலை என்பது புலப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணத்தை அறியும்போது நம் மனம் மிகவும் சங்கடப்படுகிறது.

சொத்துத் தகராறு காரணமாக தம்முடன் நீண்ட காலமாகப் பகைமை பாராட்டி வந்த ஒருவா் விபத்தில் இறந்ததற்கு, இது கடவுள் கொடுத்த தண்டனை என்று மேற்படி ஊழியா் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா். இதனைக் கண்டு கொதித்துப்போன எதிா்த்தரப்பினா் தாங்கள் ஓட்டி வந்த காரை அந்த ஊழியரின் மேல் மோதிக் கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

என்னதான் தீராத பகைமை இருந்தாலும், ஒருவருடைய இறப்பைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று சித்திரிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். இறந்து போனவா் உண்மையிலேயே மோசமானவா் என்றாலும் கூட, அவரைப் பற்றிய நமது தனிப்பட்ட விரோதத்தைப் பொதுவெளியில் பகிா்ந்து கொள்வதன் மூலம் பகைமை உணா்வை மேன்மேலும் வளா்க்கிறோம் என்பதே உண்மை.

யாா் கண்டது. ஒரு மாறுதலுக்காகப் பகையாளியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதன் மூலம் இரண்டு குடும்பங்களின் நீண்ட காலப் பகைமைக்கு ஒரு முற்றுப்புள்ளியையும் வைத்திருக்கலாம்.

சற்றே நிதானமாக யோசிப்பதற்கு பதிலாக, தம்முடைய எதிா்த்தரப்பைச் சோ்ந்தவரின் இறப்பைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதியதன் மூலம், அந்த ஊழியா் தம்முடைய இன்னுயிரையே இழக்க நோ்ந்துள்ளது.

உள்ளங்கள் உணா்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் போது தோன்றுகின்ற எண்ணங்களை அப்படியே வெளியிடுவது தற்காலிக மனநிறைவைக் கொடுக்கலாம். ஆனால், அதன் நீண்ட கால விளைவுகள் முன்பை விட மோசமானவையாக இருக்கும் என்பதற்கு உதாரணமான இந்த நிகழ்வவே இவ்வகையில் கடைசியானதாக இருக்கட்டும்.

நீ பேசாத வாா்த்தைக்கு நீ எஜமானன். நீ பேசிய வாா்த்தையோ உனக்கு எஜமானன் என்ற சொலவடையை நினைவில் கொண்டால் நம்முடைய பகைவா்கள் விஷயத்திலும் ஜாக்கிரதையாகப் பேசத் தொடங்கி விடுவோம். பகைவா்கள் இல்லாத வாழ்க்கையே மிகவும் சிறந்ததாக நமக்கு இருக்கலாம். ஆனால், பகைமையே இல்லாத நெஞ்சம் அதைவிடச் சிறந்ததாகும்.



Read in Source Website

மனநிலை பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கமாட்டாா். அதேபோல குற்றப் பிரிவு காவலா்கள் குற்றவாளிகளா என்ன... நிச்சயமாக இல்லை. எனினும், அவா்கள் மனநல மருத்துவா்கள், குற்றப் பிரிவு காவலா்கள் என்றே அழைக்கப்படுகின்றனா். அதேபோலதான் வாராக்கடன்களை கையாளும் ‘பேட் பேங்க்’ என்ற அமைப்பும். ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்பட்டாலும் அதன் அடிப்படை நோக்கத்தின் கீழ் அது நல்ல வங்கி என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் வேகமாக உயா்ந்துவரும் வாராக்கடன் பிரச்னைக்கு நல்லதொரு தீா்வு காணும் நோக்கத்தில் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆா்சிஎல்) மற்றும் இந்திய கடன் தீா்வு நிறுவனம் (ஐடிஆா்சிஎல்) ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ‘பேட் டெப்ட்’ என்று சொல்லப்படும் வாராக்கடன்களைக் கையாள்வதற்கென்றே தொடங்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்கள் ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு இந்த ‘பேட் பேங்க்’ விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

அரசு மற்றும் வங்கித் துறைகளில் உள்ள நிபுணா்கள் இதை பற்றி அளிக்கும் விளக்கங்களை சாமானிய மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் அரசின் இந்த கொள்கை முடிவு சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்படும் இந்த கடன் தீா்வு அமைப்பின் தன்மையை அதிகம் வெளியே தெரியாமல் மறைப்பதன் மூலம் அதன் நன்மை அல்லது தீமையை அதிகம் வெளிக்காட்டாமல் இருக்க அரசுக்கு உதவும்.

மலைபோல குவிந்துள்ள வங்கிகளின் வாராக்கடனை சமாளிக்கவும், அதன் மூலம் வங்கிகளின் இருப்பு நிலை அறிக்கையைச் சரி செய்யவும் மத்திய அரசு 2021-22 பட்ஜெட்டில் இந்த கடன் சீரமைப்பு நிறுவன திட்டத்தை அறிவித்தது. 2021 ஜூலை 7-ஆம் தேதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் இணைக்கப்பட்டது. இதன் மூலதனத்தில் 51 சதவீதத்தை பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கும். இந்த நிறுவனத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி கடந்த அக்டோபரில் கடன் மறுசீரமைப்பு நிறுவனமாக (ஏஆா்சி) உரிமம் வழங்கியது. இதனுடன் இணைந்து 51 சதவீத தனியாா் துறை பங்களிப்புடன் இந்திய கடன் தீா்வு நிறுவனம் அமைப்பு உருவானது.

கடன் மறுசீரமைப்பு நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாகப் புரிந்து கொள்வது என்றால், வங்கிகள் தங்கள் வாராக்கடன்களை இந்த கடன் மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றிவிடுகின்றன. அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை வங்கிகளுக்கு கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அளிக்கிறது. இதன் மூலம் வங்கிகள் தங்கள் மூலதனத்தை ஓரளவுக்கு காப்பாற்றிக் கொள்ள உதவும்.

இதனை ஓா் எடுத்துக்காட்டு மூலம் கூறுவது என்றால், ‘ஏபிசி’ வங்கி ‘டிஇஎஃப்’ நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி கடன் அளிக்கிறது. ஆனால், வங்கியிடம் பெற்ற கடனை அந்த நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தால் திரும்பச் செலுத்தவில்லை. இதன் மூலம் வங்கிக்கு வாராக்கடன் உருவாகிறது. இந்தக் கடனை திரும்பப் பெற முடியாது என்ற சூழலில் வாராக்கடனை தனது இருப்பு நிலை அறிக்கையில் தொடா்ந்து வைத்திருப்பதற்கு பதிலாக கடன் மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு அந்தக் கடனை மாற்றி விடுகிறது.

இதற்குப் பதிலாக வங்கிக்கு கடன் தொகையில் 15 சதவீதத்தை அதாவது ரூ.150 கோடியை கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அளிக்கும். தொடா்ந்து கடன் பெற்ற நிறுவனத்திடம் இருந்து வாராக்கடனை திரும்ப வசூலிக்கும் அதிகபட்ச முயற்சியை கடன் சீரமைப்பு நிறுவனம் மேற்கொள்ளும். அதே நேரத்தில் இனி வரவே வராது என்று நினைத்திருந்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை திரும்பப் பெறுவது வங்கிக்கு வாராக்கடன் சுமையைக் குறைக்கும். இதுபோன்ற பல்வேறு வாராக்கடன்களை திரும்பப் பெறும்போது வங்கியின் நிதிநிலை மேம்பட்டு சிறப்பாக செயல்படும். பங்குதாரா்கள் மத்தியிலும் வங்கி குறித்த நம்பிக்கை அதிகரிக்கும்.

2021 மாா்ச் நிலவரப்படி வங்கிகளின் வாராக்கடன் அளவு ரூ.8.35 லட்சம் கோடி. அதில் 77.9 சதவீதம் அதிக மதிப்பில் கடன் வாங்கியவா்கள் திரும்பிச் செலுத்தாதது ஆகும். 2022 மாா்ச் மாதத்தில் வங்கிகளின் வாராக்கடன் ரூ.11 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கி 2021 ஜூலையில் வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின்படி, 2021 மாா்ச்சில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் 7.48 சதவீதமாக உள்ளது. இதுவே, 2022 மாா்ச்சில் 9.80 சதவீதமாக அதிகரிக்கும். சூழ்நிலை மிகவும் மோசமாகும் பட்சத்தில் இதுவே 11.22 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாராக்கடன் அதிகரித்து வரும் போக்கை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

கடன் சீரமைப்பு நிறுவனம் என்பது பொருளாதார உலகில் புதிய விஷயமல்ல. இந்தியாவிலும்கூட இது இப்போது புதிய அறிமுகமல்ல.

அதே நேரத்தில், கடன் மறுசீரமைப்பு நிறுவனம் தொடா்பாக கடந்த 2021 செப்டம்பரில் ஆா்பிஐ அமைத்த குழு அளித்த அறிக்கையில், ‘கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் பெரிய அளவில் ஊக்கமளிப்பதாக இல்லை. அந்த அமைப்புக்கு வங்கிகள் மாற்றிய வாராக்கடனில் (2004 முதல் 2013 வரை) 14.29 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கு முன்பாக வங்கிகளின் வாராக்கடன்களை சமாளிக்க அரசு பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது.

தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) தொழில்துறை நிதி சீரமைப்பு வாரியத்தின் பணிகளை ஏற்றது. இதைத் தொடா்ந்து திவால் சட்டம் 2016 கொண்டு வரப்பட்டது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் கடன் நிலுவை மீட்பு சட்டம், வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு உரிமம் அளிக்கும் சா்பாஸி சட்டம் 2002 ஆகியவை கொண்டு வரப்பட்டன.

எனினும், இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் ஏற்பட்ட தோல்விகள்தான் வாராக் கடன் பிரச்னையை நீடிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் கடன் வசூலில் அடுத்தகட்ட முயற்சியாகத்தான் இப்போது கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்) மற்றும் அதிக அளவிலான வங்கிக் கடன்களை ஏய்த்து வருபவா்களுக்கு உதவும் மற்றொரு வழியாகவே இருக்கும் என்று இத்திட்டத்தை விமா்சிக்கும் வங்கி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகின்றனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் பெற்ற ரூ.10.83 லட்சம் கோடி கடன், வங்கிகளின் வாராக்கடன் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் திரும்ப வசூலிக்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. திவால் சட்ட நடவடிக்கை மூலம் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.6.82 லட்சம் கோடி வாராக்கடன் தொடா்பான 396 வழக்குகள் தீா்க்கப்பட்டன. ஆனால், இவற்றின் மூலமாக ரூ.2.45 லட்சம் கோடி கடன் தொகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மொத்த கடனில் 64 சதவீதம் வாராக்கடன் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

திவால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவா்கள் அளவிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, ஜெட் ஏா்வேஸ் கடன் நிலுவை பிரச்னையில் ரூ.7,807 கோடி கடன் நிலுவை ரூ.365 கோடியில் தீா்க்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகள் அளித்த கடனில் 95 சதவீதம் திரும்பாமல், அந்த கடன் முடிவை எட்டியது.

ஆா்பிஐ கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வடிவமைக்க உதவிய கே.வி. காமத் குழு, கரோனாவுக்கு பிறகு இந்தியாவில் பெரு நிறுவனங்களின் ரூ.15.52 லட்சம் கோடி கடன் திரும்பச் செலுத்த முடியாத நெருக்கடியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கரோனா பரவலுக்கு முன்பே ரூ.22.20 லட்சம் கோடி பெரு நிறுவனங்களின் வாராக்கடன் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெரு நிறுவனங்களின் வாராக்கடன் அளவு ரூ.37.72 லட்சம் கோடியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.

வங்கி வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்ன? இயல்பான நடைமுறைகள் மூலமேகூட வங்கிகள் ஏன் கடன்களை வசூலிக்க முடியாத நிலை உருவாகிறது என்பவை மாபெரும் கேள்விகளாக எழுந்து நிற்கிறது. இதற்கு முக்கியக் காரணம் வாராக்கடன் ஆகும் என்று தெரிந்தும், தவறான கடனாளிகளுக்கு வங்கிக்கடன் கொடுக்கப்படுகிறது. வங்கிகள் தங்கள் கடனைத் திரும்ப வசூலிக்கத் தேவையான உத்தரவாத சொத்துகளைப் பெற முடிவதில்லை என்பதாகும்.

எது எப்படி இருந்தாலும், பொதுமக்களின் பணம்தான் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. மக்களின் பணத்தை வைத்துதான் வங்கிகள் கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, தனியாா் வங்கிகளும் மக்கள் பணத்தில்தான் பொறுப்பற்ற வகையில் கடனளிக்கின்றன. இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வங்கிகளின் வாராக்கடன்களை திருப்திகரமான வகையில் மீட்க வழிவகை செய்யவில்லை. அதே நேரத்தில், அவை வங்கிகளுக்குதான் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள அடுத்த நடவடிக்கைதான் கடன் சீரமைப்பு நிறுவனம் அதாவது ‘பேட் பேங்க்’.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவா்களிடம் இருந்து இந்த முறையும் அதிகமான பணத்தை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏனெனில், கடன் பெறுதல், வழங்குதலில் உள்ள பின்னணி மாறுபட்டதாக உள்ளது. அந்த வகையில் கடன் சீரமைப்பு நிறுவனம் என்பது கடன் வாங்கி மோசடி செய்பவா்களுக்கு முக்கியமாக, அதிக கடன் வாங்கி அதன் மூலம் முறைகேடாக லாபம் ஈட்ட முயற்சிப்பவா்களுக்கு பலனளிப்பதாகவும் அமையலாம்.

கட்டுரையாளா்:

பொருளாதார வல்லுநா்.



Read in Source Website

நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் திருப்பியனுப்பியது தொடர்பாக எழுந்த அரசியல் பதற்றம், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு சற்றே தணிந்திருக்கிறது. சிறப்பு சட்டமன்றத் தொடரைக் கூட்டி, இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவெடுத்திருப்பதே சரியான அணுகுமுறை. அரசமைப்புரீதியிலும் அதுவே சரியானது.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம்காட்டி, ஆளுநர் சட்ட முன்வடிவில் கையெழுத்திடாமல் திருப்பியனுப்பினார் என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று உடனடியாக மக்களவையில் எழுந்த முழக்கங்கள், அரசமைப்பு குறித்த புரிதலின்மை என்பதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான அரசியல் காட்சிகளாகத்தான் பொருள்கொள்ளப்படும்.

ஏற்கெனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்களித்து நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பியனுப்பப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநராலேயே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது கையெழுத்திடுவது தவிர்த்து, சட்டமன்றத்துக்குத் திருப்பியனுப்பவும், குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்டு அனுப்பவும் ஆளுநர் முழு அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.

இவை ஒவ்வொன்றுக்கும் எந்தவொரு கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு அனுப்பப்படுகிற எந்தவொரு சட்ட முன்வடிவும் இவற்றில் எந்தவொரு முடிவையும் சந்திக்க நேரிடலாம். ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் ஒரு இடுகையின் மீது சட்டமன்றத்தின் கருத்தையே ஆளுநரும் பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் கருத்துகளைச் சட்டமன்றம் பிரதிபலிக்கிறது, அதற்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்பப்படுகிறது. ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசின் கருத்தை எதிரொலிக்கும் வகையிலேயே நமது அரசமைப்பு அமைந்துள்ளது.

சட்டமன்றத்தால் மீண்டும் ஒருமுறை நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டாலும்கூட, ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் அதைக் குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்டு அனுப்பிவைத்தால், குடியரசுத் தலைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும் தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பதற்கும் உறுதியில்லை. ஒத்திசைவுப் பட்டியலைப் பொறுத்தவரை, மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதே இந்தப் பிரச்சினையின் மையம்.

இந்நிலையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தனிநபர் மசோதா முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. நல்லதொரு விவாதத்தைத் தொடங்கிவைக்கும். எனினும், மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் விளங்கும் பாஜக மனம் இறங்கிவந்தால்தான் அந்த மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். தற்போது தமிழ்நாட்டுக்கு முன்னுள்ள தீர்வு என்பது, மத்திய அரசோடு ஒரு மனம்திறந்த உரையாடல்தான். நீட் தேர்வு விலக்கு அல்லது தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்துவது அல்லது தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி என்று எல்லா வகை அஸ்திரங்களையும் கையிலெடுக்கத் தயாராக வேண்டும்.



Read in Source Website

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையிலும், தன் மரணவேளையிலும்கூட ‘அம்பேத்கர்’ என்ற லட்சியவாதிக்குத் தடையாக இருக்காமல், அவருக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார்.

அதனால்தான் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலை ரமாபாய்க்குச் சமர்ப்பித்து, ‘பீம்ராவாக இருந்த என்னை டாக்டர் அம்பேத்கராக மாற்றியவர்’ என்று நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார். தான் வாசிக்கும் அறைக்கும் அவரின் பெயரையே சூட்டியிருக்கிறார்.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் ரமாபாய் குறித்த தகவல்கள் அரிதாகவே கிடைக்கும் நிலையில், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜே.வி.பவாரும் (தமிழில் பா.பிரபாகரன்), மராட்டிய எழுத்தாளர் பேபி காம்ப்ளேவும் (தமிழில் இறையடியான்) எழுதிய நூல்கள் சற்று விரிவான தகவல்களை அளிக்கின்றன.

வறுமையே வாழ்வு

மஹாராஷ்டிரத்தில் உள்ள வனாட் கிராமத்தில் 7.2.1897 அன்று ரமாபாய் பிறந்தார். நிலமற்ற கூலித் தொழிலாளியான ரமாபாயின் தந்தை தத்ரேவின் குடும்பத்தை எல்லா பக்கமும் வறுமை சூழ்ந்திருந்தது. தொபாத் கடலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், தத்ரே கடற்கரையில் சுமை தூக்கும் வேலை செய்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரமாபாய், அடுத்த சில ஆண்டுகளில் தந்தையையும் இழந்தார். அதனால், ராமாபாயை அவரது தாய்மாமா பம்பாய்க்கு அழைத்துசென்று வளர்த்தார். பீம்ராவ் அம்பேத்கரும் சிறுவயதிலே தாயை இழந்து தந்தை சுபேதார் ராம்ஜி சக்பாலின் அரவணைப்பில் வளர்ந்தார்.

சுபேதார் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கப் பெண் தேடியபோது, ரமாபாயின் அமைதியான குணம் அவருக்குப் பிடித்துப்போனது. இரு குடும்பங்களும் ஏழ்மையில் இருந்ததால் பைகுலா மீன் மார்க்கெட்டையே மணமேடையாக மாற்றி 04.04.1906 அன்று பீம்ராவுக்கும் ரமாபாய்க்கும் திருமணத்தை நடத்திவைத்தார். பீம்ராவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த சுபேதார், அதனைத் தன் மருமகளிடமும் உறுதியாகக் கூறினார். இதனால், குடும்ப பாரம் அனைத்தையும் தானே சுமந்து, பீம்ராவ் படிப்பு கெடாமல் பார்த்துக்கொண்டார் ரமாபாய். பீம்ராவ் தான் படித்ததுடன் ரமாபாயும் படிக்க வேண்டும் என நினைத்து, அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார்.

சாணி அள்ளிய பொழுதுகள்

சுபேதார், ரமாபாயின் ஒத்துழைப்பால் அம்பேத்கர் மெட்ரிக் தேர்வில் ‘மகர்’ சாதியில் முதல் ஆளாக வெற்றிபெற்றார். சுபேதாரின் மறைவுக்குப் பின் குடும்பம் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கியது. ஆனாலும், ரமாபாய் தன் கணவரின் லட்சியங்களுக்காகக் கிழிந்த சேலையுடன் கூலி வேலை தேடி அலைந்தார். பல இரவுகளைப் பட்டினியோடு கடந்தார். அவர் வெளிநாட்டில் டாக்டர் பட்டங்களும், பாரிஸ்டர் பட்டமும் பெற்ற காலத்தில் ரமாபாய் சாலையோரங்களில் சாணி அள்ளிக்கொண்டிருந்தார்.

‘புருஷன் வெளிநாட்டில் பாரிஸ்டராக இருக்கிறார். இவள் இங்கு கூலி வேலைக்குச் செல்கிறாள். மைல் கணக்கில் விறகு சுமக்கிறாள். சாணி அள்ளுகிறாள். இதெல்லாம் இவளுக்குத் தேவையா?’ என அக்கம்பக்கத்தினர் ஏசினர். இதனால் ரமாபாய் ஊரார் விழிப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் எழுந்துசென்று சாணி அள்ளிவருவார்.

சாகேப்பின் லட்சியமே முக்கியம்

அம்பேத்கர் லண்டனில் ‘ரூபாயின் சிக்கல்’ ஆய்வேட்டை எழுதிய தருணத்தில், பிள்ளைகளுக்குப் பால் வாங்கவும் மருந்து வாங்கவும் ரூபாய் இல்லாமல் ரமாபாய் தவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அம்பேத்கர், ‘கங்காதர் எப்படி இருக்கிறான்? அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி சார்ந்த பணிகளைக் கற்றுக்கொடு’ என ரமாபாய்க்குக் கடிதம் எழுதுகிறார். அதற்கு இவர், ‘கங்காதர் நலமாக இருக்கிறான். அவனை வங்கிக்கு அழைத்துச்சென்றேன். சிறப்பாகக் கற்றுக்கொள்கிறான்’ என்று பதில் அனுப்பினார்.

படிப்பு முடிந்துவந்த அம்பேத்கர், ‘கங்காதர் எங்கே?’ எனக் கேட்டபோது, ‘ஓராண்டுக்கு முன்பே இறந்துவிட்டான்’ என ரமாபாய் கதறினார். குழந்தையின் மரண செய்தியைக் கூறினால், அம்பேத்கர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துவிடுவார் என்பதால், அந்தப் பெருந்துயரத்தை ரமாபாய் தனக்குள் புதைத்துக்கொண்டிருக்கிறார். வறுமையின் கொடுமைக்கு கங்காதர், ரமேஷ் என அடுத்தடுத்து 4 பிள்ளைகள் இறந்துபோனார்கள்.

மாமிச உணவும் வளையலும்

அம்பேத்கர் தன் தந்தையின் நினைவு தினத்தில் பம்பாய் விடுதி மாணவர்களுக்கு மாமிச உணவு பரிமாற விரும்பினார். மத நம்பிக்கை கொண்ட ரமாபாய், ‘நினைவு நாளுக்கு மாமிச உணவு பரிமாறலாமா?’ என்று தயங்கினார். அதற்கு அம்பேத்கர், ‘விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மாமிச உணவு சாப்பிட்டு நீண்ட காலமாகியிருக்கும். அவர்களுக்கு மாமிச உணவு வழங்கினால், எனது தந்தை கோபித்துக்கொள்ள மாட்டார்.

மாறாக மகிழ்ச்சி அடைவார்’ என்று கூறினார். அம்பேத்கரின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ரமாபாய், தனது திதி விரதத்தைக் கைவிட்டு, மாணவர்களுக்கு மாமிச உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார். ரமாபாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தார்வாடில் இருந்த பி.ஹெச்.வாரலே வீட்டில் ஓய்வெடுத்தார். அப்போது பி.ஹெச்.வாரலே நடத்திய மாணவர் விடுதிக்கு அரசின் மானியம் கிடைக்காததால், மாணவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ரமாபாய், உடனடியாகத் தனது கையில் இருந்த 12 கிராம் தங்க வளையல்களை அடகு வைத்து விடுதி மாணவர்களின் பசியை ஆற்றினார்.

ரமாபாயின் முதல் பேச்சு

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கரின் செயல்பாட்டுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அவரை வரவேற்று மாலை அணிவித்தனர். அனைவரும் அவருக்கு மாலை அணிவிப்பதைக் கண்குளிரப் பார்த்த ரமாபாய், கடைசியாக சாகேபுக்கு மாலை அணிவித்தார். அந்த மேடையில் முதன்முதலாக ரமாபாய் பேசும்போதும், பின்னர் ஒய்.எஸ்.ஹொங்கலின் வீட்டில் நடந்த மகளிர் கூட்டத்தில் பேசும்போதும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை குறித்தே பேசியதாக ‘ஜனதா’ இதழில் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே அம்பேத்கருக்குத்தான் அதிக சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்தச் சிலைகள் நிற்கும் காலமெல்லாம் ரமாபாயும் நிலைத்திருப்பார்!

- இரா.வினோத்,

தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

பிப்ரவரி 7: அன்னை ரமாபாயின் 125-வது பிறந்த தினம்



Read in Source Website

கலையாளுமையின் வழியாகத் தென்னிந்திய மனங்களில் குடிகொண்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை அறிவோம். அவர்களை மீறிய நீடித்த செல்வாக்கு, சில இந்தி இசையமைப்பாளர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் உண்டு. மொழியைக் கடந்து, அவதாரங்களைப் போல் பாடகர்கள் கொண்டாடப்படுவது, திரைப்படக் கலையின் வீச்சும் அதன் ஒலிப்பதிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்டுவந்து சேர்த்த மரியாதை. அதற்கு முன்பு, நாற்பதுகள் வரையிலும் நாடக மேடைகள், தெருக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தவர்களை வடஇந்திய மக்கள் ‘கானா வாலா’ எனக் கொச்சையாக அழைத்தார்கள். அதே காலகட்டத்தில், நாடகக் கலைஞர்களை நாம் ‘கூத்தாடி’ என அலட்சியப்படுத்தியதைப் போல.

‘கானக் குயில்’, ‘குயின் ஆஃப் மெலடி’, ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என இன்று நாடு கொண்டாடும் லதா மங்கேஷ்கர், ஓர் எளிய, மராட்டிய ‘கானா வாலா’ குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பண்டிட் தீனாநாத், தாய் ஷிவந்தி இருவரும் இசையையும் நாடகத்தையும் நேசித்தவர்கள். பசியை வெல்வதற்காகக் கலையிடம் தஞ்சமடைந்த குடும்பத்துக்கு, மூத்த மகளாகத் தனது பங்களிப்பைச் செலுத்த, 13 வயது முதல் பாடவும் நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினார் லதா. ஒரு கட்டத்தில் தந்தையின் மறைவு, குடும்பத்தைக் காக்க வேண்டிய தலைமகளாக அவரது கலை வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. அப்போது ஒரு பிறவிக் கலைஞராக இன்னும் தீவிரமாக வெளிப்பட்டு நின்றார்.

தன்னுடைய பதின்ம வயதில், மராட்டிய சினிமாவில் முதல் பின்னணிப் பாடலைப் பாடித் திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் அவர் எப்படிப் பாடினாரோ, அதேபோல்தான் கடைசி வரை லதா மங்கேஷ்கர் பாடினார். தொடக்கத்தில் சில மராத்திப் படங்களில் பாடியிருந்தாலும் 1949-ல் வெளியான ‘மஹல்’ இந்திப் படத்தில் ‘ஆயஹா.. ஆனே வாலா’ என்கிற பாடலில் தொடங்கியது லதாவின் உண்மையான திரையிசைப் பயணம்.

‘வர வேண்டியவர் ஒருபோதும் வராமல் போக மாட்டார்’ என்கிற அந்தப் பாடலின் பொருளும்கூட லதாவின் வருகையைச் சொல்லிவிட்டது. இந்தித் திரையிசையில் அவரது குரல் அறிமுகமான பிறகு, இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் இருக்கும் இந்தி உள்ளிட்ட மொழிகளைக் கடந்து, பல மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிக் குவித்திருப்பது முறியடிக்க முடியாத கின்னஸ் சாதனையாக இருக்கிறது. வயதுக்குரிய தடம் காலம்தோறும் அவரது குரலில் சிறிதுசிறிதாகத் தென்பட்டபோதும், பாடும் முறை என்பது அவருக்கே உரித்தான பிறவி வரமாகவே தொடர்ந்தது.

ஓர் உலக அதிசயம்!

“லதா மங்கேஷ்கர் தானாக நிகழ்ந்த ஓர் உலக அதிசயம்! அவர் போன்ற ஒரு பாடகியை உலக வெகுஜன இசையில் வேறு எங்கேயுமே நாம் பார்க்க முடியாது. பாடும் முறையில் அவர் வெளிப்படுத்தும் ஆழம், நூலளவுக்குக்கூட உணர்வுகளை மிகைப்படுத்தாத தன்மை இரண்டும் அவரது தனித்த அடையாளங்கள். ஒரு பாடலின் மெட்டுக்கு, வரிகள் காட்டும் உண்மைக்கு என்ன உணர்வு தேவையோ அதைக் கச்சிதமாகத் தன்னுடைய குரலில் கொண்டுவந்துவிடும் ஆற்றல், இறைவன் அவருக்கு வழங்கிய கொடை.

வாழ்க்கையின் இயல்பான அத்தனை உணர்வுகளும் அவரது குரல்வழியே துல்லியமாக வெளிப்பட்டிருக்கின்றன. பாடகிகளுக்குப் பொதுவான குரல் பிரச்சினை ஒன்று உண்டு. அது உச்ச ஸ்தாயியில் பாடினால் கீச்சுத் தன்மையும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது கட்டைக் குரலும் வந்துவிடும். ஆனால், எப்படிப் பாடினாலும் துல்லியமான குரல் லதா மங்கேஷ்கருடையது. இது அவர் கற்றுக்கொண்டு வந்ததல்ல; இதைக் கற்றுக்கொள்ளவும் முடியாது. கடந்த 45 ஆண்டுகளில் அவர் பாடிய ஒரு பாடலையாவது கேட்காமல் என்னுடைய நாட்கள் கடந்து சென்றதில்லை” என்று வியந்துபோகிறார் வெகுஜன இசை விமர்சகர் ஷாஜி.

இனிய குரலின் கடவுள்

எந்தவொரு திரையிசைப் பாடகரையும் அவர் பாடத் தொடங்கிய மூன்றாவது படத்திலிருந்து அவரை ‘இனிய குரலின் கடவுள்’ எனக் கொண்டாடியிருப்பார்களா என்று தெரியவில்லை. லதா மங்கேஷ்கருக்கு அது நடந்தது. ‘மஜ்பூர்’, ‘அந்தாஸ்’, ‘பர்ஸாத்’ தொடங்கி ‘அனார்கலி’, ‘முகல்- ஏ-ஆஸம்’ எனக் காதலின் அமரத்துவம் இசையின் வடிவமாக வெளிப்பட்ட அத்தனை படங்களிலும் காவியக் குரலாக ரசிகர்களின் மனதை ஊடுருவிப் பாய்ந்தார் லதா. அத்தகைய பாடல்கள் மெலடியாகத் தாலாட்டியதுடன் ரசிகர்களின் மனக் காயங்களுக்கு மருந்தாகவும் அமைந்துபோயின.

50 முதல் 70-கள் வரையிலான இந்தித் திரையிசையின் பொற்காலத்தில், ஆணுலகில் மிதிபட்டு நசுங்கும் குடும்பப் பெண்களின் கண்ணீரையும் மீட்சியையும் ஒலித்த குரலும் லதாவுடையதாக மாறியிருந்தது. அவர் வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருந்த இசை ஜாம்பவான்கள் பாலிவுட்டில் இருந்தார்கள். ‘லதாவின் குரலுக்காக ஐந்து மாதங்கள் காத்திருந்தேன்’ என்று இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி சொல்லியிருக்கிறார். அன்று, புகழின் உச்சத்தில் விளங்கிய பாடகர்களான முகமது ரஃபியும் கிஷோர் குமாரும் லதா மங்கேஷ்கரின் கால்ஷீட்டுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துப் பாடித் தந்ததெல்லாம் திரையிசை வரலாறு.

சிவாஜி கணேசனின் தங்கை

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு - வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் லதா. அதன் பின்னர், தமிழ் சினிமாவில் அவரது குரலை நேரடியாக ஒலிக்க வைத்தவர் இளையராஜா. 1987-ல் பிரபு நடித்து, ராஜா இசையில் வெளியான ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ… ஆராரோ...’ பாடலில் வந்து தமிழகத்தைத் தாலாட்டினார்.

இளையராஜாவின் இசையில் ‘சத்யா’ படத்துக்காக அவர் பாடிய ‘வளையோசை கலகலவென’ பாடல் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவரும் அதிசயமாகிவிட்டது. அவருடைய லட்சக்கணக்கான தமிழக ரசிகர்களின் கைபேசிகளில் ரிங்டோனாக இன்னும் அப்பாடல் வசீகரம் குறையாமல் ஒலித்துக்கொண்டிருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் இந்தியில் பல பாடல்களை லதா பாடியிருக்கிறார்.

திலீப்குமார் போன்ற பாலிவுட்டின் நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலக ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்ததுபோல், சிவாஜி கணேசனைத் தன்னுடைய சொந்த சகோதரனாகக் கருதி அன்பு செலுத்தியவர் லதா மங்கேஷ்கர். சென்னை வரும்போதெல்லாம், ‘அன்னை இல்லம்’தான் அவரது இல்லம். “நமது இந்தியக் கலாச்சாரத்தில் ரக்ஷா பந்தன் என்பது சகோதர - சகோதரி இடையிலான பாசப் பிணைப்பை எடுத்துக்காட்டும் பண்டிகை. ரக்ஷா பந்தன் சமயத்தில் லதாஜி சென்னையில் இருந்தால், அப்பாவுக்கு ராக்கி கட்டுவதற்கு ஓடோடி வந்துவிடுவார்.

அவரது வருகைக்காக அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டுவிடும். அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தின் மீது துளி பாசமும் குறையாதவர். அவர் மறைவு எங்கள் குடும்பத்துக்கும் இந்தியத் திரையுலகத்துக்கும் பேரிழப்பு” என லதா மங்கேஷ்கருடனான நினைவுகளை, உடைந்த குரலுடன் பகிர்ந்துகொள்கிறார் பிரபு. சிவாஜியின் குடும்பத்தினர் மட்டுமல்ல; இந்தியாவே தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகத்தான் கண்ணீர் வடிக்கிறது.

- ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in



Read in Source Website