மூத்த குடிமக்களுக்கான நலன்களைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கொள்கை குறித்து மாா்ச் 5-க்குள் கருத்துகளை கூறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவானது 10 போ் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது. சமூக நலத் துறை இயக்குநா் த.ரத்னா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.பி.நிா்மலா, சென்னை மருத்துவக் கல்லூரி முதியோா் நல மருத்துவப் பிரிவுத் தலைவா் க.ச.சாந்தி உள்ளிட்ட 10 போ் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்த கொள்கை வரைவு மின்னஞ்சல் (ங்ப்க்ங்ழ்ள்ல்ா்ப்ண்ஸ்ரீஹ்ற்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) வழியே கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வசீகர குரலால் தெற்காசிய மக்களை பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மறைந்தாா்.
அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே, நடிகா்கள் ஷாருக்கான், அமீா் கான், கிரிக்கெட் வீரா் டெண்டுல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.
அவரது மறைவுக்கு மத்திய அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களை அவா் பாடியுள்ளாா்.
லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச்கண்டி மருத்துவமனையில் ஜனவரி 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டாலும் அவருடைய வயது காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், ஞாயிறு காலையில் அவா் காலமானாா்.
அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா் பிரதித் சம்தானி கூறுகையில், ‘கரோனா தொற்று ஏற்பட்டதால் லதா மங்கேஷ்கா் கடந்த 28 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உடலியக்கம் நின்ால் ஞாயிறு காலை 8.12 மணிக்கு அவருடைய உயிா் பிரிந்தது’ என்றாா்.
லதா மங்கேஷ்கா் மறைந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையின் வெளியே ஏராளமானோா் திரண்டனா். மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர அமைச்சா் ஆதித்ய தாக்கரே, கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்தனா். மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
லதா மங்கேஷ்கரின் உடல், மும்பையில் பிரபுகஞ்சில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், மாலை 6 மணியளவில் தேசியக் கொடி போா்த்தப்பட்ட அவருடைய உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிவாஜி பாா்க்கில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ரசிகா்கள் அவருக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.
சிவாஜி பாா்க் மயானத்தில் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
2 நாள் துக்கம் அனுசரிப்பு: லதா மங்கேஷ்கரின் மறைவை அடுத்து நாடு முழுவதும் பிப். 6, 7 ஆகிய இரு நாள்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. இரு நாள்களும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில்... மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக லதா மங்கேஷ்கா் 1999 முதல் 2005 வரை பதவி வகித்துள்ளாா். அப்போதைய பிரதமா் வாஜ்பாய் அரசில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு மசோதாவில் அவா் பங்கேற்று வாக்களித்துள்ளாா்.
விருதுகள்: பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே மற்றும் பல தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளாா்.
லதா மங்கேஷ்கா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திங்கள்கிழமை மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாா்த்சௌண்ட்: 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 5-ஆவது முறையாக உலகக் கோப்பை பட்டம் வென்று சாதனை புரியும் முனைப்பில் உள்ள இந்திய அணியும், இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் தீவிரத்தில் இங்கிலாந்தும் களமிறங்கின.
அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வென்று இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு சோகமாக அமைந்தது. தொடக்க பேட்டா் ஜேக்கப் பெத்தேல் 2, டாம் பிரெஸ்ட் டக் அவுட்டானாா்கள். மற்றொரு தொடக்க பேட்டா் ஜாா்ஜ் தாமஸ் 27 ரன்களுடனும், வில்லியம் லக்ஸ்டன் 4, ஜாா்ஜ் பெல் 0, ரெஹன் அகமது 10, அலெக்ஸ் ஹாா்டன் 10 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.
மிடில் ஆா்டா் பேட்டா் ஜேம்ஸ் ரீவ் அபாரமாக பேட்டிங் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டாா். அவருக்கு ஜேம்ஸ் சேல்ஸ் உறுதுணையாக ஆடினாா்.
12 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 95 ரன்களை விளாசிய ரீவை அவுட்டாக்கினாா் ரவிக்குமாா். தாமஸ் அஸ்பின்வால் 0, ஜோஷ்வா பாய்டன் 1 ரன்னுடன் வெளியேறிய நிலையில், ஜேம்ஸ் சேல்ஸ் 34 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தாா்.
இறுதியில் 44.5 ஓவா்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. இந்திய பௌலா் ராஜ் பவா அபாரமாக பந்துவீசி 5/31 விக்கெட்டுகளையும், ரவிக்குமாா் 4/34 விக்கெட்டுகளையும், கௌஷல் 1/29 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர். 11-வது ஓவரில் ஹர்னூர் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சைக் ரஷீத் மற்றும் கேப்டன் யாஸ் துல் இணைந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர்.
அரைசதம் கடந்து அசத்திய ரஷீத், இந்திய அணி 95 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். தொடர்ந்து, யாஸின் பெவிலியன் திரும்பினார்.
பின் மிடில் ஆர்டரில் இணைந்த நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த இந்திய பேட்டர்கள் பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே ராஜ் 35, கெளசல் தம்பி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதி முன்று ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 48வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய நிஷாந்த் இந்திய ரசிகர்களின் பதற்றத்தை குறைத்தார்.
அதே ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய தினேஷ் பானா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிஷாந்த் 50 ரன்களும், தினேஷ் 13 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பிகாரிலிருந்து அஸ்ஸாமுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை இணைப்பதில் முக்கிய நடவடிக்கையாகும் என்று மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
பிகாா் மாநிலம் பாட்னாவிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள பாண்டு பகுதிக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் எம்வி லால் பகதூா் சாஸ்திரி கப்பலை பியூஷ் கோயல் காணொலி மூலம் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அத்துடன் பிகாா் மாநிலம் கலுகாட்டில் பன்முக போக்குவரத்து முனையத்துக்கும் அடிக்கல் நாட்டினாா். அதனைத்தொடா்ந்து அவா் பேசுகையில், ‘‘உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து மூலம் பாட்னாவிலிருந்து பாண்டுவுக்கு கப்பலில் உணவு தானியங்களை எடுத்துச் செல்வது நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை இணைப்பதில் முக்கிய நடவடிக்கையாகும்.
ரூ.78 கோடியில் திட்டமிடப்பட்டுள்ள கலுகாட் பன்முக போக்குவரத்து முனையம், இந்தப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார வளா்ச்சியையும், பலமடங்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும்’’ என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் அஸ்வினிகுமாா் செளபே, நாடாளுமன்ற உறுப்பினா் ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வசந்த பஞ்சமி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மிகவும் மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்னை சாரதாவின் ஆசீா்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த வசந்த காலம் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின் பனிக் காலம் முடிந்து வசந்த காலம் வருவதை வரவேற்கும் வகையில் வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆயிரமாவது ஒருநாள் ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
சஹால், சுந்தர் சுழலில் சிக்கி இருப்பினும், பொறுப்பாக ஆடிய ஹோல்டர், 71 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தபோது வேகபந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, 176 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியை சுருட்டியது. இந்திய அணி சார்பாக சஹால் நான்கு விக்கெட்டுகளையும் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். இஷான் கிஷன் 28 ரன்களுக்கு தனது விக்கெட் பறிகொடுத்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 60 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். நடு வரிசையில் களமிறங்கிய விராத் கோலி (8), ரிஷப் பந்த் (11) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சூர்யகுமார் 34, தீபக் ஹூடா 26 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் ஆயிரமாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா் நாா்வே வீராங்கனை தெரஸே ஜோஹாக்.
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாா்வே கிராஸ் கண்ட்ரி ஸ்கையா் தெரஸே ஜோஹாக் 15 கி.மீ ஸ்கையத்லானில் இப்போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். கடும் காற்று மற்றும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஜோஹாக் சிறப்பாக செயல்பட்டு முதல் தங்கத்தை வென்றாா்.
பிரான்ஸின் போ குயின்டின், ரஷியாவின் லேட்டிபோவ் முறை வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
மகளிா் ஸ்பீட்ஸ்கேட்டிங் 3000 மீ. பிரிவில் டச்சு வீராங்கனை ஐரீன் சௌடென் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். இதன் மூலம் ஜொ்மன் வீராங்கனையின் கிளாடியா பெச்ஸ்டென் 20 ஆண்டுக்கால சாதனையையும் முறியடித்தாா்.
>தனியார் மருத்துவக் கல்லூரிமற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத எம்பிபிஎஸ்மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி என்எம்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களான டிஒய்பாட்டீல் அல்லது பாரதி வித்யாபீடத்தில் மருத்துவம் பயிலும் 50% மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தினால் போதுமானது. தற்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் முறைப்படுத்தப்படவில்லை.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தமட்டில் மாநிலகட்டண ஒழுங்குமுறை ஆணையம்(எப்ஆர்ஏ) தகுதி அடிப்படையிலான இடங்களை நிரப்புவதற்கான கட்டணத்தை மட்டும் நிர்ணயித்துள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண விதிமுறைகளின் கீழ் வரும் வகையிலான பரிந்துரையை என்எம்சி அளித்துள்ளது.
பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்எம்சி தெரிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ இடத்தைப் பெறும் மாணவர்கள் பலனடையும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்எம்சி தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தை நாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் தகுதி அடிப்படையில் மருத்துவ இடங்களைப் பெறும் மாணவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும்.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம்இந்திய மருத்துவக் கவுன்சில் ஒருநிபுணர் குழுவை நியமித்தது. பின்னர் தேசிய மருத்துவக் கவுன்சில் இது தொடர்பாக 26 வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் மூலம் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டு இது தொடர்பாக 2021-ம் ஆண்டு மே மாதம் வரை பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. இது குறித்து 1,800-க்கும் மேலான கருத்துகள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில் புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.
என்எம்சி வெளியிட்டுள்ள பரிந்துரைகள் நியாயமான வகை யில் உள்ளதாக பெற்றோர் தரப்பு பிரதிநிதியான சுதா ஷெனாய் தெரிவித்துள்ளார்.
ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவர அரசு தயார் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சமூக வலைதளங்கள் மீது மத்திய அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்தது. கருத்து சுதந்திரத்தைபறிக்கவே மத்திய அரசு சமூகவலைதளங்கள் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் கூறும்போது, ‘‘சமூகவலைதளங்களை பொறுப்புமிக்க தாக மாற்றும் நோக்கில் அரசு விதிகளைக் கொண்டுவந்தால், அது கருத்து சுதந்திரத்தை முடக்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. சமூக வலைதளங்கள் இன்று நம்முடைய வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.
அது தவறாக பயன்படுத்தப் படுவதை தடுக்க வேண்டும். நம் நாட்டு மக்களைப் பாதுகாக்க, சமூக வலைதளங்கள் மீது கூடுதல்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். நம் பெண்களின் பாதுகாப்புக்கு சமூக வலைதளங்களைபொறுப்புமிக்கதாக மாற்றுவது அவசியம். அதற்கான முயற்சிகளைத்தான் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு தயாராக உள்ளது’’ என்றார்.-பிடிஐ
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி தனது பட்ஜெட் உரையில், மின்னணு சிப் பொருத்தப்பட்ட அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இ-பாஸ்போர்ட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த பாஸ்போர்ட்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் மக்களவையில் கூறும்போது, ‘‘இ பாஸ்போர்ட்களில் தரவுகள், வழக்கமான பாஸ்போர்ட்களில் உள்ளது போல் காகிதங்களில் இருப்பதுடன், சிப்புகளிலும் இருக்கும். இ-பாஸ்போர்ட் இன்னும் 6 மாதங்களில் மக்கள் பயன்பாட்டு வரும். இதற்காக 4.5 கோடி சிப்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தரவுகள் மின்னணு சிப்பில் சேமிக்கப்பட்டு, பிரத்யேக அச்சு இயந்திரம் மூலம் இந்த பாஸ்போர்ட் அச்சிடப்படும். தரவுகள் பாதுகாப்பை இ-பாஸ்போர்ட் மேம்படுத்தும்” என்றார்.
முன்னதாக வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் கூறும்போது, “மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் வசதிக்காக இ-பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த சிப்பில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தாலோ அல்லது சேதப்படுத்தியிருந்தாலோ கணினி கண்டறிந்துவிடும். இதன் மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரிப்பது தடுக்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ஐசிஏஓ விதிகளுக்கு உட்பட்டு இந்த சிப் பொருத்தப்படுகிறது. இந்த சிப் பொருத்துவதன் நோக்கம், சர்வதேச தரத்தில் பயண ஆவணங்கள் இருக்கிறது என்பதை உறுதிசெய்யத்தான்” என்றார்.
உலகளவில் விவசாயத்தில் முன்னோடியாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டல சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் (இக்ரிசாட்) பொன் விழா ஆண்டு நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பொன்விழா ஆண்டுக்கான ‘லோகோ’ மற்றும் தபால் தலையை வெளி யிட்டார்.
பின்னர் இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
வரும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் மேலும் பல பரிசோதனைகளை நடத்தி உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழி வகுத்திட வேண்டும். இக்ரிசாட் பரிசோதகர்களின் கடந்த50 ஆண்டுகால பங்கு சிறப்பானது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் 80 சதவீதம் சிறு நில விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழை உரிய காலத்தில் பெய்யாவிடில் இவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆதலால், குறைந்த நீரில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில் நாம் விவசாயத்தை பெருக்க வேண்டும். அறுவடை சமயத்தில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனை போக்க இக்ரிசாட் பரிசோதனை நிபுணர் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் 6 பருவகாலங்கள் 15 ரக காலநிலை மாற்றங்கள் ஆண்டு தோறும் நிகழ்கின்றன. இதற்கு ஏற்ப நாம் விவசாயத்தை பெருக்க வேண்டும். மேலும் நம் நாட்டில் 170 வறட்சி மாவட்டங்கள் உள்ளன. விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப புரட்சியை விரைவில்ஏற்படுத்த உள்ளோம்.
டிஜிட்டல் விவசாயத்தை பெருக்க பல மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் கூட சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
பாமாயில் உற்பத்தியில் நாம்இன்னமும் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்உள்ளன. இது தொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கும் அதிக ஊக்குவிப்பு இருக்கும். பயோ பாமாயில் உற்பத்தியில் செலவு மிக குறைவு.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமரை வரவேற்க வராத சந்திரசேகர ராவ்
ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை திறக்க நேற்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சம்ஷாபாத் விமான நிலையத்தில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் மற்றும் பல பிரமுகர்கள் வரவேற்றனர்.
ஆனால், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை தீவிரமாக விமர்சித்து வரும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் திடீர் காய்ச்சல் காரணமாக விமான நிலையத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆய்வறிக்கையும், அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட பின்னணியில், ‘ஏா் இந்தியா’ நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்துக்கு கைமாறியது முக்கியத்துவம் பெறவில்லை. டாடா குடும்பத்தால், குறிப்பாக காலம்சென்ற ஜே.ஆா்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட, ‘ஏா் இந்தியா’ நிறுவனம், மீண்டும் டாடாவின் குடும்பத்துக்கே திரும்பியிருக்கிறது.
1932-இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி நடைபெற்றபோது ஜே.ஆா்.டி. டாடா விமான நிறுவனத்தை ஏற்படுத்தியது, அப்போது பரவலான பேசுபொருளாக இருந்தது. தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரம் பிள்ளை ‘சுதேசி கப்பல்’ நிறுவனத்தை தொடங்கியதுபோல, ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தை ‘சுதேசி விமான நிறுவன’மாக பலா் கருதினாா்கள், வியந்து பாராட்டினாா்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடா்ந்து, வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த தனியாா் விமான நிறுவனமான ‘ஏா் இந்தியா’, 1953-இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகள் வெற்றிகரமாக அந்த நிறுவனம் செயல்பட்டது என்பது மட்டுமல்ல, ‘ஏா் இந்தியா’வின் இலச்சினையான ‘மகாராஜா’ சா்வதேச அளவில் பயணிகளைக் கவா்ந்தது.
உள்நாட்டு சேவைக்காக ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ என்றும், வெளிநாட்டு சேவைக்காக ‘ஏா் இந்தியா’ என்றும் இரண்டு தனித்தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களாக நடத்தப்பட்டன. போட்டியில்லாத விமானத்துறை என்பதால் ஓரளவுக்கு ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ தாக்குப்பிடித்தது. சா்வதேச வழித்தடங்களில் இயங்கிய ‘ஏா் இந்தியா’ நிறுவனமும் பெரும் இழப்பை ஆரம்பத்தில் எதிா்கொள்ளவில்லை. ஆனால், அதிகாரிகளின் தவறான நிா்வாகம், அரசியல் தலையீடு, பொதுத்துறை நிறுவனம் என்பதால் தொழிற்சங்கங்களின் அதிகரித்தக் கோரிக்கைள், ஊழியா்களின் மெத்தனப்போக்கு உள்ளிட்ட பல காரணங்களால், 70-களில் இருந்தே ‘ஏா் இந்தியா’, ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ நிறுவனங்கள் இழப்பை எதிா்கொள்ளத் தொடங்கின.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தால் விரயமாகியிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.54,000 கோடிக்கும் அதிகம். இந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, மேலும் இழப்பை அதிகரிக்காமல் இருப்பதற்கு அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதைத் தவிர, வேறுவழியில்லை என்கிற நிலைமை இப்போது அல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்டது.
இழப்பில் இயங்கிய அந்த நிறுவனத்தை வாங்குவதற்குக்கூட யாரும் தயாராக இருக்கவில்லை. பல நிறுவனங்களுடன், பல சுற்றுப்பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இப்போது கடைசியாக வேறுவழியில்லாமல் டாடா நிறுவனத்தின் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ‘ஏா் இந்தியா’வை அரசு கைகழுவி இருக்கிறது.
‘ஏா் இந்தியா’ நிறுவனத்தின் பல நிலுவைக் கடன்களை அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், இன்னும்கூட பல கோடி ரூபாய் நிதிச்சுமையை அந்த நிறுவனம் எதிா்கொள்கிறது. அடுத்த ஓராண்டுக்கு 12,000-க்கும் அதிகமான ஊழியா்களுக்கு சம்பளம் கொடுத்து பணியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் டாடா நிறுவனத்துக்கு இருக்கிறது. அரசு நிறுவனமாக இருந்தபோது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அளவுக்கும் அதிகமான ஊழியா்களை பணியமா்த்தியதால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் அது. இதுபோன்ற வேறுபல இடா்களையும் எதிா்கொள்கிறது அந்த நிறுவனம்.
ஏற்கெனவே டாடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘ஏா் ஏசியா இந்தியா’, ‘விஸ்தாரா’ ஆகிய இரண்டு நிறுவனங்களுடன், ‘ஏா் இந்தியா’, ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என்கிற இரண்டு விமான சேவை நிறுவனங்களும் இயங்கும். இவையனைத்தையும் சோ்த்தால் விமான சேவைத்துறையில் 25% அளவிலான பங்கை டாடா குழுமம் வகிக்கும்.
மேலே குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களுமே லாபகரமாக இயங்குவதாகக் கூறிவிட முடியாது. ‘ஏா் ஏசியா’, இந்தியாவின் சிறிய நகரங்களை இணைக்கும் விமான சேவையில் 33 விமானங்களை வைத்திருக்கிறது. ஏா் பஸ் விமானங்கள் வைத்திருக்கும் ‘ஏா் ஏஷியா’வும், போயிங் விமானம் வைத்திருக்கும் ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’-உம் இணைவதால், டாடாவின் விமான சேவை பயணிகளின் கவனத்தை ஈா்க்கக்கூடும்.
இந்திய விமான சேவையில் 60% அளவில் பங்கு வகிக்கிறது, கடந்த 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக பறந்து கொண்டிருக்கும் 261 விமானங்களைக் கொண்ட ‘இண்டிகோ’ நிறுவனம். பல சிக்கல்களை எதிா்கொண்ட ‘ஜெட் ஏா்வேஸ்’ மீண்டும் தனது சேவையைத் தொடங்க இருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றுக் காரணமாக, பின்னடைவை எதிா்கொண்டிருக்கும் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனமும் போட்டியில் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் இப்போது டாடா நிறுவனம் தனது நிா்வாக மேலாண்மையையும், அனுபவத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் முன்வைத்து ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தை இயக்க இருக்கிறது.
‘ஏா் இந்தியா’வின் மிகப் பெரிய பலவீனம் அதன் 123 விமானங்கள். அவற்றில் பல மிகவும் பழையவை. விரைவிலேயே மாற்றியாக வேண்டும். ‘ஏா் இந்தியா’வின் பலம், அதனிடம் காணப்படும் சா்வதேச வழித்தடங்களும், இந்தியாவுக்குள் உள்ள வழித்தடங்களும். அரசியல் காரணங்களால் ‘ஏா் இந்தியா’ மீது திணிக்கப்பட்ட இழப்பை எதிா்கொள்ளும் வழித்தடங்களைக் கைகழுவி, வெற்றிகரமான வழித்தடங்களில் புதிய விமானங்களுடன் இயங்கத் தொடங்கினால், ‘மகாராஜா’ தனது பழைய கம்பீரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதுதான் டாடா குழுமத்தின் எதிா்பாா்ப்பு.
மூத்த நாட்டாரியல் ஆய்வாளரும், எனது தமிழ்ப் பேராசிரியருமான அ.கா.பெருமாள், ‘இந்து தமிழ் திசை’யில் ‘மெல்லத் தமிழ் இனி சாகாது’ (17.01.2022) என்ற கட்டுரை எழுதியிருந்தார். அதில் பாரதியாரின் ‘தமிழ்த்தாய்’ பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்…/அந்தப் பேதை உரைத்தான்’’ எனும் வரிகள் வரும் பகுதியை மேற்கோள் காட்டி, பாரதி இந்த வரிகளை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியாகக் கட்டுரையின் ஆரம்பத்தில் “தென்மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் அவரது இளம் வயதில் மேம்போக்காக ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்று சொன்னதன் மீதான கோபத்தை பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார், கட்டுரையின் இறுதியில் மீண்டும், “‘மெல்லத் தமிழினி சாகும்’ என்ற வரி இடம்பெற்ற பாடலை பாரதியார் பாடியதற்கு, 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த ‘மாடர்ன் ரிவ்யூ’ என்னும் இதழுக்கு கே.ஏ.நீலகண்டன் எழுதிய எதிர்வினைதான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.
இவ்விரு பகுதிகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, கட்டுரையின் முதல் பகுதியில் ‘தென்மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர்’ என்று குறிக்கப்படுவர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி என்று பரவலாக அறியப்படும் கே.ஏ.நீலகண்டன் என்பது தெரிகிறது.
கட்டுரையின் இந்தப் பகுதிகள் இரண்டு செய்திகளைத் தருகின்றன. (1). வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்டன் “மெல்லத் தமிழ் இனி அழியலாம்” என்று சொன்னார்; (2). பாரதியின் ‘தமிழ்த்தாய்’ பாடல் இதனால் தூண்டப்பட்டுப் பிறந்தது.
இந்த இரண்டு செய்திகளும் சரியா?
முதலில் அ.கா.பெருமாள் குறிப்பிடும் நிகழ்ச்சியின் பின்னணியைப் பார்ப்போம்: ‘த மாடர்ன் ரிவ்யூ’ 1915 டிசம்பர் இதழில் வரலாற்றுப் பேராசிரியர் ஜதுநாத் சர்க்கார் (யதீந்திர சர்க்கார் அல்ல) ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ ஹிஸ்டிரி டீச்சர்’ எனும் ஏறத்தாழ ஆறு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஒரு வரலாற்று ஆசிரியராக வரலாற்றை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் தான் எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றாக வரலாற்றை ஆங்கிலத்தில் கற்பிப்பதைக் குறிப்பிடுகிறார். தனது பெரும்பான்மை மாணவர்கள் ஆங்கிலத்தில் போதிய திறனும் பயிற்சியும் அற்றவர்களாக இருப்பதால், பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் கற்றவற்றைத் தொகுத்து எழுதுவதிலும் அவர்களுக்குள்ள இடர்பாட்டை அவர் விரிவாகவே குறிப்பிட்டு, வரலாற்றை உள்ளூர் மொழியில் கற்பிப்பதன் தேவையையும் இதில் தனது சோதனை முயற்சிகள் தந்துள்ள வெற்றியையும் பேசுகிறார்.
இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘த மாடர்ன் ரிவ்யூ’ 1916 ஜனவரி இதழில் திருநெல்வேலி, இந்துக் கல்லூரி முகவரியிலிருந்து கே.ஏ.நீலகண்டன் எழுதிய கடிதத்தில் பயிற்றுமொழி தொடர்பான பகுதியின் மொழிபெயர்ப்பு:
“மொழிப் பிரச்சினை ஓர் உண்மையான பிரச்சினையே. ஆனால் எனது மாவட்டம், எனது கல்லூரி இவற்றைப் பொறுத்தவரையில் உள்ளூர் மொழியில் கற்றுக்கொடுப்பது அதிகம் பயன்தரும் என்று என்னால் உறுதிபடுத்த முடியாது.. எனது மாணவர்களில் பெரும்பாலோர் - ஆங்கிலத்தில் நிறைய இலக்கண, வழக்குப் பிழைகள் செய்கிறார்கள் என்றாலும் - தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் என்பதையும் வரலாற்றுப் பாடங்களைப் பயிற்றுவிப்பதற்கு எனக்கு தமிழைக் காட்டிலும் ஆங்கிலம்தான் சிறந்த மொழியாகப் பயனாற்றுகிறது என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் இப்பகுதியில் உள்ளூர் மொழியானது எந்த அளவுக்கு வளம்மிக்கதாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இல்லை போலிருக்கிறது.’’
சென்ற நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் மகத்தான ஆய்வறிஞர்களைத் தந்த திருநெல்வேலியிலிருந்து அவர் இதை எழுதியிருப்பது கொல்லர் உலைக்களத்தில் இரும்புக்குப் பஞ்சம் என்று சொன்னதுபோல் இருக்கிறது. இவ்வரிகள் மிகைக்கூற்று மட்டுமல்ல, விஷமத்தனமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பேரா.அ.கா.பெருமாள் குறிப்பிடும் ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்ற வரியோ அல்லது அப்படிப் பொருள்படும்படியான வரிகளோ இந்தக் கடிதத்தில் இடம்பெறவில்லை.
இந்தக் கடிதம் வெளியான இதழைப் படிக்க நேர்ந்த பாரதி 1916 ஏப்ரலிலேயே ‘தமிழ்’ என்ற கட்டுரையை இதற்காகவே எழுதியிருக்கிறான்: ‘‘இங்ஙனம் எழுதும் ஸ்ரீநீலகண்டையரின் நிலையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடத்தை நடத்தும் விநோதத்தை இந்த தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!! தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தான் வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மில் சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது.”
கே.ஏ.என்னின் கடிதம் வெளியானது 1916 ஆண்டு ஜனவரியில். பாரதியின் ‘தமிழ்த்தாய்’ வெளியானது ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் கழித்து 1919 ஜூன் -ஜூலையில். எனவே, முன்னதோடு பின்னதை முடிச்சிடுவது பொருந்துமா? ‘த மாடர்ன் ரிவ்யூ’வில் கே.ஏ.என்னின் கடிதத்தைப் படித்த உடனே, அது வெளிவந்த மூன்று மாதங்களுக்குள், சூடாகத் தன் பாணியில் பொருத்தமான எதிர்வினையாற்றிய பாரதி அதில் இல்லாத ஒன்றைச் சொல்லி மூன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு கவிதையைப் படைத்திருப்பானா?
இந்தப் பாடல் தொடர்பாக தினமணியில் ‘அந்தப் பேதை யார்?’ என்ற தலைப்பில் சீனி.விசுவநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதியின் ‘பருந்துப் பார்வை’ (1918) கட்டுரையைக் குறிப்பிட்டு, அதில் வரும் “தக்ஷிணத்துப் பாஷைகளிலே, அதாவது தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக்கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லையென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலா என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விவரிக்கிறார்” என்ற பகுதியை மேற்கோள் காட்டி, பாரதியின் கவிதையில் சொல்லப்படும் பேதை யாராக இருக்கலாம் என்பதை அறிவதற்கான அரிய குறிப்பைத் தான் இதில் கண்டதாக எழுதுகிறார்.
வேறு சான்றுகளால் நிறுவப்படும் வரையிலும் இதுவும் ஓர் ஊகமே. உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையிலும் ‘தமிழ்த்தாய்’ பாடலில் குறிப்பிடப்படும் ‘பேதை’ இவர்களில் ஒருவர் என்று அமைதிகொள்வோமாக!
- தி.அ.ஸ்ரீனிவாஸன், ‘நிச்சலனம்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.
அறுபதாண்டு காலப் பதிப்புலக வணிக அடையாளம் கொண்ட ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பகம், தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதுதான் பதிப்புத் துறையில் இந்த ஆண்டில் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி. 1962-ல் ‘ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2008-ல் டாடா நிறுவனத்தால் கைக்கொள்ளப்பட்டது. பின்னர், இந்நிறுவனத்தை 2016-ல் அமேசான் வாங்கியது. இத்தனைக்கும் சேத்தன் பகத், அமிஷ் திரிபாதி உள்ளிட்ட ‘பெஸ்ட் செல்லர்’களை வைத்துக்கொண்டு, ஒரு வணிக நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குள் தன் சேவையை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்? லாபமின்மையா?
மின்னூல்களின் வரவுக்குப் பின்னர் பதிப்புலகம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் மின்னூல்களால் வாசிப்புப் பழக்கம் அதிகமானது. திருட்டுப் புத்தகச் சந்தையும் தன் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டது. ‘வெஸ்ட்லேண்ட்’ போன்ற இந்திய அளவில் மிகப் பெரிய வணிக பிராண்டுகளுள் ஒன்றை அமேசான் கையகப்படுத்திய காலத்தில், புத்தகச் சந்தை பெருமளவு இணைய வர்த்தகத்துக்கு மாறியிருந்தது, கணிசமான அளவுக்கு ‘செல்ஃப் பப்ளிஷிங் போர்ட்டல்’கள் (எழுத்தாளர்களிடம் கட்டணம் வசூலித்துப் புத்தகம் வெளியிடும் முறை) உருவாகியிருந்தன. ஒலிப்புத்தகங்கள் வர ஆரம்பித்தன. கரோனா ஊரடங்கு காலம் இணைய வாசிப்புக்கும் ஒலிப்புத்தகச் சந்தைக்கும் உள்ள வாய்ப்பை விரிவுபடுத்தியது. புத்தகக் கடைகள் தவிர்த்து, நேரடியாக வாசகர்களைச் சந்தித்து விற்பனை செய்வதற்கு இருக்கும் வாய்ப்பு புத்தகக் கண்காட்சி. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடைபெற்றுவந்ததும் அதன் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் பெருகிவந்ததும் நாம் அறிந்ததுதான். இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான சூழலில் இணைய வழியில் விற்பனை என்பது மற்ற துறைகளைப் போல பிரதானச் சந்தையாக மாறிவிட்டிருக்கிறது. இணைய வழி வர்த்தகத்தின் அதிகபட்ச பங்கு அமேசானுக்கும் ஃப்ளிப்கார்ட்டுக்கும் தான். அதிலும் மின்னூல்களில் 90%-க்கும் அதிகமான பங்கு கிண்டிலைச் சேர்ந்ததுதான். ஒவ்வொரு நிறுவனமும் தன் சொந்த இணையதளத்துடன் அமேசான், ஃப்ளிப்கார்ட் இணையதளங்களின் இணைப்பையும் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
அண்மையில் சில முன்னணிப் பதிப்பகங்களின் நூல்கள், புத்தகக் கடைக்குப் பதிப்பகங்கள் கொடுக்கும் தள்ளுபடி விலையைவிட மிக அதிகமான தள்ளுபடியில் ஃப்ளிப்கார்ட் (அல்லது இணைய சேவை) வாயிலாக ஒரு புகழ்பெற்ற அச்சகமே நூல் விற்பனையை அறிவித்திருந்தது. இதன் பெயர் ‘ஒன் புக் மாடல்’. இதன்படி வாசகர் ஒருவர் கோரும் ஒரேயொரு நூலை மட்டும் அச்சகம் அச்சிட்டு அவருக்கு அனுப்பி வைக்கும். அதற்கு மேற்பட்ட ஒரு பிரதியைக்கூட இருப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக அந்த அச்சகமே பதிப்பகங்களோடு ஒரு ஒப்பந்தத்தைப் போடுகிறது. தாங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலின் மின்கோப்பையும் இந்த அச்சகம் வாங்கிக்கொண்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றின் வாயிலாக நூல் விற்பனை செய்து அதற்கான கமிஷனைப் பதிப்பகத்துக்கு அளிக்கிறது. பதிப்பகங்களுக்கு இத்திட்டம் லாபகரமானதாக இல்லை என்றாலும், ஒரு பதிப்பகத்தின் 20% புத்தகங்களைக் கொண்டுதான் அதன் 80% வருமானம் இருக்கிறது. எனவே, மீதமிருக்கும் 80% நூல்களை இதைப் போன்ற ‘ஒன் புக் மாடல்’ எனும், புத்தக இருப்பு வைக்கத் தேவையற்ற வணிகமாக மாற்ற இது உதவுகிறது. அதே வேளையில், புத்தகக் கடைக்கே கிடைக்காத விலையில் வாசகர்களுக்குப் புத்தகத்தைக் கொண்டுசேர்க்க முடிகிறது.
ஒரு நூலின் விலையில் பதிப்பாளருக்கு 25-40%, எழுத்தாளருக்கு 10-15%, விநியோகம் செய்பவருக்கு 10%, விற்பனையாளருக்கு 30-40% என்றெல்லாம் பங்கு இருக்கிறது. ஒரு பதிப்பாளரின் பங்கிலிருந்து அச்சகம், வடிவமைப்பு, எழுத்தாளர், சந்தைப்படுத்தல் என்கிற செலவுகள் இருக்கின்றன. இதில் நேரடியாக அச்சகமே புத்தக அச்சிலிருந்து சந்தைப்படுத்தல், விற்பனை என எல்லாச் செலவுகளையும் கைக்கொள்ளும்போது, இடைநிலையில் அங்கம் வகிப்போரின் நிலை கேள்விக்குறியாகிறது.
ஒரு புத்தகக் கடையோ அல்லது விற்பனையாளரோ இந்தத் தொழிலை வெறும் லாபத்துக்காக மட்டுமே செய்வதில்லை. வேறு எந்தத் துறையைக் காட்டிலும் புத்தகம் என்கிற மதிப்பீடு காரணமாக, பெரிய லாப நோக்கை மையமாகக் கொள்ளாமலே பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான தனிநபர் புத்தக விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் இந்தப் புதிய முறையானது பெரிய இக்கட்டைத் தர இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூலக ஆணையே இல்லை என்றபோதும் எந்த நம்பிக்கையுடன் இத்தொழிலை நடத்திவருகிறோம்? புத்தகத் துறையை லாபத்தையும் தாண்டி ஓட வைக்கும் விசை ஒன்று இருக்கிறது. ஒரு அறிவியக்கமாக, நாகரிகமடைந்த சமூகத்தின் முகமாக, அரசியல் எழுச்சியில் அங்கம் வகிக்கும் ஒரு துறை என்ற மதிப்பீடுதான் அந்த விசை. ஆனால், பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட மதிப்பீடுகளை எதிர்பார்க்க முடியாது.
டெல்லியின் கான் மார்க்கெட் என்பது புத்தகக் கடைகளால் நிரம்பிய பகுதி, கடந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான கடைகள் மூடப்பட்டுவிட்டன. மும்பையில், சென்னையில் புகழ்பெற்ற கடைகள் வணிக மால்களிலிருந்து காலிசெய்யப்பட்டுவிட்டன. நிறைய தனிநபர் விற்பனையாளர்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள். பாரம்பரியமாக இருந்துவந்த அண்ணாச்சிக் கடைகளை ஒழித்துக்கட்டிய இலக்கு இப்போது பதிப்பாளர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.
- ஜீவ கரிகாலன், எழுத்தாளர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: kaalidossan@gmail.com
அண்மையில் தன் 91-வது பிறந்த நாளைக் கொண்டாடி மறைந்த பேராசிரியர் செ.வை.சண்முகம் (1932-2022), தன் தமிழ் மொழியியல் ஆய்வால் தன் பெயரை நிறுவிச் சென்ற புகழ் பெற்ற அறிஞர்களில் ஒருவர். முழு நேர ஆய்வாளராகச் சுமார் 70 ஆண்டுகளாக அந்தத் துறையில் இடைவிடாது தன் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவந்தவர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் பிறந்த செ.வை.சண்முகம் கும்பகோணம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தன் கல்வியை முடித்து பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் சில காலம் பணியாற்றிய பின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் விரிவுரையாளர் முதல் இயக்குநர் வரை பதவி வகித்தவர். பேராசிரியர்கள் தெ.பொ.மீ., ச.அகத்தியலிங்கம் போன்றோருடன் பணியாற்றியவர்.
இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் சமூக மொழியில் ஆய்வு, இந்திய வருகைதரு பேராசிரியராக இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் இரண்டரை ஆண்டுகள் பணி, பிறகு வருகைதரு பேராசிரியராக மைசூர், சென்னை, புதுவை போன்ற இடங்களில் பணி என்று இவரது ஆய்வுப் பணி நீண்டு நின்றது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை செ.வை.சண்முகம் வெளியிட்டுள்ளார். ஏறக்குறைய 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள் பலவற்றிலும் பங்கெடுத்தவர். பல கல்விப்புலங்களில் உயர் பதவிகளில் இருந்தவர். கல்விப்புலக் கழகங்கள் பலவற்றில் உறுப்பினர். முனைவர் பட்டம் முதலிய பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, தமிழ்நாடு அரசின் கம்பர் விருது முதலிய பல விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர். மலையாள மொழியியலுக்குப் பணியாற்றிய அறிஞர்களுள் ஒருவராகக் கேரளமும் இவரைக் கொண்டாடும். செ.வை.சண்முகம் வாழ்வே ஆராய்ச்சி என்று வாழ்ந்துவந்தார். நாள்தோறும் புதியவற்றைக் கற்பதும் அதன் வழி புது அறிவைத் தேடுவதுமாக மாநிலம் பயனுறும் வாழ்வாக அவர் வாழ்ந்து, இளைய தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தமிழ் இலக்கண மரபில் முதல் நூலான தொல்காப்பியத்தைச் சுற்றியே தன் ஆய்வை அமைத்துக்கொண்டவர் செ.வை.சண்முகம். வடமொழிக்கு பாணினி போலத் தமிழின் தனித்தன்மையைப் பேணித் தொல்காப்பியத்தை உருவாக்கிய தொல்காப்பியர் இலக்கண ஆசிரியர் மட்டுமல்ல, தமிழ் அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி என்பது செ.வை.சண்முகத்தின் கொள்கை. எனவே, தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியை இலக்கண மரபு வழியாக ஆராய்வதில் இவரது கவனம் சென்றது. தொல்காப்பியரின் இலக்கண இலக்கியக் கோட்பாடுகள் பற்றி மொழியியல் ஒளியில் இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்களும் பிற்கால இலக்கணங்களையும் அவ்வாறு ஆராய்ந்திருப்பதும் நம் அறிவியல் வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றி அறிந்துகொள்ளத் துணைசெய்யும்.
இன்றைய மொழி இலக்கிய ஆராய்ச்சியும் மொழி வளர்ச்சியும் மொழியியலால் அன்றி நிகழாது என்ற நிலைப்பாட்டை உடைய தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.அய்.சுப்ரமணியம் போன்றோர் மரபில் வந்தவர்தான் செ.வை.சண்முகம். இவரது பணிகளில் தலையாயது, மரபு இலக்கணத்திலுள்ள எழுத்து, சொல் இலக்கணத்தை மொழியியல் ஒளியில் விளக்கி, அவற்றில் புதைந்து கிடக்கும் முறையியல், பகுப்பாய்வு நெறிமுறைகள், அவற்றுக்கு அடிப்படையான கோட்பாடுகள் முதலியவற்றை வரலாற்று இலக்கண ஆய்வு, மாற்றிலக்கண ஆய்வு போன்றவற்றின் மூலம் இனம்கண்டு விளக்கியிருப்பது.
இரண்டாவதாக, திராவிடப் பெயர்ச் சொல்லமைப்பு, தமிழ்க் கல்வெட்டு மொழி அமைப்பு, நச்சினார்க்கினியர் ஒலியியல் கோட்பாடு, கிறிஸ்தவ தமிழ் இலக்கண அறிஞர் பணிகள், மலையாளத்தில் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் பற்றிய ஆராய்ச்சிகள், இலக்கண உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் என்று ஒப்பிலக்கணம், இலக்கண வரலாறு முதலிய துறைகளில் இயற்றிய நூல்கள் முற்றிலும் புதிய ஆய்வுகள் ஆகும். மூன்றாவதாக, ‘மொழியும் மொழி உணர்வும்’ என்ற தலைப்பில் செ.வை.சண்முகம் எழுதியுள்ள நூல் சமூக மொழியியல் நோக்கில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. நான்காவதாக, இவர் லண்டன் சென்றிருந்தபோது ‘சுவாமிநாதம்’ என்ற இலக்கண நூலின் முழு வடிவத்தையும் மீட்டெடுத்துச் செவ்வையாகப் பதிப்பித்து, இலக்கண நூற்பதிப்புத் துறையிலும் தன் சுவட்டைப் பதித்திருக்கிறார்.
ஐந்தாவதாக, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், கலைச்சொல்லாக்கம், தமிழில் புதுமையாக்கம் முதலியன பற்றிய ஆய்வுகள் மொழித் திட்டமிடல் துறையில் குறிப்பிடத்தக்க பணி. ஆறாவதாக, இந்தோனேசிய மொழியில் தமிழ்த் தொடர்புகள் பற்றிய இவரது ஆய்வு இன்னொரு புதுத் துறை. ஏழாவதாக, அவர் அண்மைக் காலத்தில் மொழியியல் நோக்கில் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டு தமிழில் சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை ஆராய்ந்து எழுதியுள்ளது, தமிழில் மொழியியல் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சிக்கு உரமூட்டுவதாகும். பிணை என்ற உறுப்பை (சீருக்கும் அடிக்கும் இடைப்பட்டது) விரிவுபடுத்தி விளக்கியிருப்பது, வாசிப்புக் கோட்பாட்டை மேற்கொண்டு குறள், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம் என்று அவர் நிகழ்த்தியுள்ள ஆய்வுகள் என்று செ.வை.சண்முகம் மேற்கொண்ட ஆய்வுகளின் சிறப்பை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
‘பேராசிரியர் செ.வை.சண்முகம் வாழ்வும் பணியும்’ என்ற நூலை துரையும், ‘மொழியியல் ஆய்வு வரலாற்றுப் பேராசிரியர் செ.வை.சண்முகம் பங்களிப்புகள்’ என்ற நூலை ச.பாரதியும் வெளியிட்டுள்ளனர். செ.வை.சண்முகம் இயற்றிய நூல்கள், முன்னுரைகள், மதிப்புரைகள் முதலியவற்றின் பொருள் விளக்க நூலடைவு, அவருடைய நூல்களுக்கு ஆன்றோர் நல்கிய முன்னுரைகள் போன்றவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டும்.
செ.வை.சண்முகம், நிறைந்த நன்னம்பிக்கையாளர். எதிர்காலத் தலைமுறை மொழியியல் புலமையை வளர்த்தெடுக்கும் என்று உறுதிபட நம்புவார். அவருடைய மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவருடைய நம்பிக்கையை மெய்ப்பிப்பது இளைய தலைமுறையினர் அவருக்குச் செலுத்தும் நன்றியும் கடமையும் ஆகும்.
- கி.நாச்சிமுத்து, பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவன முதுநிலை ஆய்வாளர், தொடர்புக்கு: nachimuthutamizhkina@gmail.com