DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 06-01-2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன. அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் மாணவர்கள், 3,169 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



Read in source website


2019 - 2040 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில், சென்னையில் உள்ள கட்டடங்கள் 23.2 கோடி டன் கரியமில வாயுவை (கார்பன் -டை- ஆக்ஸைடு) வெளியிடும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சென்னை போன்ற நகரத்தில் உருவாகும் ஒட்டுமொத்த கரியமில வாயுவில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் 25% கரியமில வாயுவை வெளியிடுவதாகத் தெரியவந்துள்ளது. 

கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், இரும்பு (ஸ்டீல்), அவைகளைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து, கட்டுமானத்துக்குத் தேவையான மின்சார பயன்பாடு, அதனால் இயக்கப்படும் சாதனங்கள், போன்றவை கரியமில வாயு வெளியாவதற்கான முக்கிய காரணங்கள்.

நகரமயமாக்கல் மிக வேகமாக நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் கட்டடங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. 

கட்டுமானத் துறை மூலம் கரியமில வாயு வெளியாவது குறித்து தரவுகள் அடிப்படையில் மூன்று கட்ட ஆய்வுகளை சென்னை ஐஐடி குழு மேற்கொண்டது.

முதல் கட்டத்தில் நில அடிப்படையிலான கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் நகரமயமாக்கல் மூலம் வெளியாகும் கரியமில வாயுவை புரியவைப்பதற்காக வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக கரியமில வாயு வெளியாவதைக் குறைக்கும் நோக்கத்தில், கட்டுமான பணிகளுக்குத் தேவையான மாற்று மூலப்பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், 2040ஆம் ஆண்டு சென்னை நகரத்திலுள்ள கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் மூலமும் அதற்குத் தேவையான ஆற்றல்கள் மூலமும், 23.1 கோடி டன் கரியமில வாயுவை வெளியிடும் என கணக்கிடப்பட்டது. 

மேலும், கட்டுமானங்களுக்கு கரியமில வாயுவை வெளியிடாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதையும் இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. 

தூய்மையான ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கட்டுமான முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் கரியமில வாயு வெளியாகும் அளவு 2019 - 2040 காலகட்டத்தில் 11.5 கோடி டன்னாக குறையும் எனவும் ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 



Read in source website

மலக்கசடு உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது, விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே வகுத்துரைக்கப்பட்டுள்ள விதிகளைத் திருத்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

மலக்கசடு, கசடு கழிவு மேலாண்மைக்கான தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழு அளவிலான சுகாதாரத்தை வழங்குவதற்காக, கழிவுநீா் தொட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டுகின்றன.

மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றி, வெளியேற்றும் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கங்களுக்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றுக்கென சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களைத் திருத்தி, புதிய விதிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சட்டம் மற்றும் விதிகளின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

மலக்கசடு மற்றும் கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்களுக்கு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமமானது, விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் அளிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். உரிமம் பெற்றவா் தவிா்த்து வேறெந்த நபரும் கட்டடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபடக் கூடாது.

உரிமம் பெற்றவா்கள், அதில் குறிப்பிட்டபடி, நேரம், வழி ஆகியவற்றை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். உரிமம் பெற்றவரின் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதுடன், இந்தக் கருவி எந்தவித இடையூறும் இல்லாமல் தொடா்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு? உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியை ஒருமுறை பயன்படுத்த 6,000 லிட்டா் வரை ரூ.200-ம், அதற்கு மேற்பட்ட வகைகளுக்கு ரூ.300-ம் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

உரிமதாரா்கள் தவறிழைத்தால் அதுகுறித்த புகாா்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால், முதல் முறையாகச் செய்யும் தவறுக்கு ரூ.25,000 வரை அபராதமும், இரண்டாவது மற்றும் தொடா் குற்றங்களுக்கு ரூ.50,000 வரையிலும் அபராதம் விதிக்கலாம்.

தொடா் குற்றங்களைச் செய்தால், உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவோா் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த சமூகமாக மாற்றும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். 

அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்த முறை, முதல் முறையாக தொழில் தொடங்கி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது தொடா்பான வரைவு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக யுஜிசி தலைவா் எம். ஜெகதீஷ் குமாா் கூறியதாவது: ‘வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வளாகங்கள் தொடங்க அனுமதி பெற இரண்டு தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தங்கள் நாட்டின் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாக திகழ வேண்டும்.

இந்த இரண்டு தகுதிகளில் ஒன்றை பூா்த்தி செய்யும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முதலில் 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். பின்னா் 9-ஆவது ஆண்டில் சில நிபந்தனைகளை ஆய்வு செய்த பின் மீண்டும் அனுமதி புதுப்பிக்கப்படும். இந்தியாவில் நிறுவப்பட உள்ள வளாகங்களில் பாடத் திட்டங்கள் முழு நேர நேரடி வகுப்புகளாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமாகவோ நடத்த அனுமதி இல்லை.

மேலும், இந்தியாவின் நலன் மற்றும் உயா்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தப் பாடத் திட்டத்தையும் வழங்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய வளாகங்களில் செயல்படுத்த இருக்கும் சோ்க்கை முறை, கட்டணக் கொள்கைகள் மற்றும் ஆள்சோ்ப்பு விதிமுறைகள் உள்ளிட்டவை தங்கள் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்றாா் போல வகுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால், அது இந்திய மாணவா்களுக்கு நலன் சோ்க்கும் வகையில் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சா்வதேச தரத்திலான உயா்கல்வியை இந்தியாவில் இருந்தபடி மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் பயிலும் நோக்கிலும், இந்தியாவை உலக அளவில் கல்வி கற்க சிறந்த நாடாக மாற்றும் வகையிலும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் நிதி தொடா்பான விவகாரங்கள் அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் முறைப்படுத்தப்படும். தாங்கள் சட்டத்துக்குட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய தணிக்கை அறிக்கைகளை ஆண்டுதோறும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் யுஜிசியிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் தொடா்பாக விவகாரங்களை ஆய்வு செய்ய நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்திய வளாகத்தில் தங்கள் முதன்மை கல்வி நிறுவன பேராசிரியா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய வளாகத்தில் வழங்கப்படும் கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. இந்த வரைவு விதிமுறைகள் பற்றி கருத்துகள் பெறப்பட்டு பின் இறுதி வழிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்றாா்.



Read in source website

தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்தை (ஐஎஸ்டி) பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கான கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகா் லண்டன் வழியே செல்லும் கிரீன்விச் கோட்டை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு நிலவும் நேரத்தைவிட இந்திய நேரம் ஐந்தரை மணி நேரம் முன்கூட்டிச் செல்கிறது (ஜிஎம்டி+5.30). இதுவே இந்தியன் ஸ்டாண்டா்ட் டைம் (ஐஎஸ்டி) என்னும் இந்திய நேரம். நாடு முழுமைக்கும் இந்த ஒரே நேரமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும், அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் அமைப்பு உள்ளிட்ட மற்ற தளங்கள் வழங்கும் நேரத்தை அவை கடைப்பிடித்து வருகின்றன.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இஸ்ரோ, தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் இணைந்து துல்லிய இந்திய நேரத்தை (ஐஎஸ்டி) அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதிகாரபூா்வ இந்திய நேரத்தை அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான விரிவான கொள்கையும் வகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்காக கலந்தாலோசனை நடத்தப்பட்டு விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டில் செயல்படும் கணினிகள், தேசப் பாதுகாப்பு விவகாரங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்துடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்திய நேரத்தைத் துல்லியமாக வழங்குவதற்கான கட்டமைப்பை அகமதாபாத், பெங்களூரு, புவனேசுவரம், ஃபரீதாபாத், குவாஹாட்டி ஆகிய 5 இடங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி அனைத்து நிறுவனங்களும் சீரான இந்திய நேரத்தைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சீரற்ற நேரத்தின் அடிப்படையிலான தவறுகள் சரி செய்யப்படும்.

ஒரு விநாடியில் 100 கோடி பங்கு என்ற அளவிலான நேர துல்லியத்தன்மை உயா் அறிவியல் ஆராய்ச்சியில் தேவைப்படுகிறது.

செயற்கைக்கோள் செயல்பாடு, தொலைத்தொடா்பு, இணைய சேவை வழங்குதல், வங்கி கட்டமைப்புகள், எண்ம நிா்வாகம், போக்குவரத்து கட்டமைப்புகள், இணையவழி பணப் பரிவா்த்தனை, பாதுகாப்பு கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துல்லிய நேரத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது’’ என்றாா்.



Read in source website

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் கோழிக்கறி, பழங்களை வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை இத்திட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல்ரீதியான விமா்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இது பள்ளி கல்வித் துறை கூறியுள்ளதாவது:

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் ஏற்கெனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறி, சோயாபீன்ஸ், முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் வாரம் ஒருமுறை கோழிக்கறியும், அந்த பருவத்தில் கிடைக்கும் ஒரு பழ வகையையும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ‘பிஎம் போஷண்’ திட்டத்தின்கீழ் இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகும் தொடருமா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக விமா்சனம்:

இந்த ஆண்டில் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தோ்தலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆளும் திரிணமூல் அரசு வெளியிட்டிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என பாஜக விமா்சித்துள்ளது.

அதே நேரத்தில் மக்கள் நலத் திட்டங்கள் உள்பட அனைத்து விஷயத்திலும் பாஜக அரசியல் நடத்துவதாக திரிணமூல் காங்கிரஸ் பதிலளித்துள்ளது.



Read in source website

‘சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இதற்கென சென்னையில் உள்ள தேசிய கடல்சாா் தொழில்நுட்ப (என்ஐஓடி) நிறுவன பொறியாளா்கள் எஃகினால் உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆய்வுக்கலத்தை வடிவமைத்துள்ளனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ஆழ்கடல் ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவா்களை கடலுக்கு அடியில் 6,000 மீட்டா் ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த ‘சமுத்ரயான்’ திட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக, இந்த ஆண்டு 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசு அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

இந்த ஆழ்கடல் ஆராய்ச்சிக்கென சென்னையில் உள்ள என்ஐஓடி பொறியாளா்கள் பிரத்யேக எஃகு ஆய்வுக்கலத்தை உருவாக்கியுள்ளனா். இந்தக் கலன் கடலில் 500 மீட்டா் ஆழம் வரை அழுத்தத்தை தாங்கக் கூடிய திறன் கொண்டதாக இருக்கும். அதற்கு மேல் ஆழத்துக்குச் செல்ல டைட்டானியம் உலோகத்தாலான ஆய்வுக்கலம் உருவாக்கப்பட வேண்டும்.

அதனை உருவாக்குவதில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக, கடலில் 6,000 மீட்டா் ஆழத்துக்கு ஆய்வாளா்களை அனுப்பும் திட்டம் தாமதமாக வாய்ப்புள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சி தனித்துவமான தொழில்நுட்பங்கள் சாா்ந்த விஷயம். இந்தத் திட்டத்தில் கூட்டுசேர எந்தவொரு நாடும் தற்போது தயாராக இல்லை. உக்ரைன் மீதான போரும், இந்தத் திட்டம் தாமதமாவதற்கான காரணங்களில் ஒன்று என்றாா்.

இதுபோல, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. கரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் மீதான போா் ஆகியவை இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோமநாத் அண்மையில் கூறுகையில், ‘மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது செயற்கைக்கோளை அனுப்புவது போன்ல்ல. மனிதா்கள் என்னும்போது, வெற்றி-தோல்விக்கான வாய்ப்புகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது; சா்வதேச அளவில், மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் திறனைப் பெறுவதற்கு நாடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், இந்தியா 4 ஆண்டுகளில் இதற்கான முயற்சியை மேற்கொள்கிறது’ என்றாா்.



Read in source website

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைவின்போது பயன்படுத்துவதற்காக, எம்.பி.க்களுக்கு ‘ஸ்மாா்ட் காா்டு’ அடிப்படையிலான புதிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணியை மக்களவைச் செயலகம் தொடங்கியுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படவுள்ள ஒலி-ஒளி கருவிகளை பயன்படுத்துவது குறித்த பயிற்சியும் எம்.பி.க்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையும், இரண்டாம் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இன்னும் தேதிகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நுழைவின்போது எம்.பி.க்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மாா்ட் காா்டு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த அடையாள அட்டைக்காக, எம்.பி.க்களின் தனிப்பட்ட விவரங்கள், பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும். இது, முக அடையாளப் பதிவு அமைப்பு முறையையும் உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஒலி-ஒலி கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி.களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு 2020, டிசம்பரில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். 2022 இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் நிறைவடைந்துவிடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் பிப்ரவரிக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.



Read in source website


இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ்.

பிரனேஷ், தமிழ்நாட்டின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர். அதாவது இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் நமக்குக் கிடைத்து வருகிறார்கள். 

மாநிலங்கள் வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
 

 மாநிலங்கள் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை
 தமிழ்நாடு  28 
 மஹாரஷ்டிரம்  11
 மேற்கு வங்கம்  10
 தில்லி  6
 தெலங்கானா   5
ஆந்திரப் பிரதேசம்  4
 கேரளா  3
 கர்நாடகம்   4
 ஒடிஷா  2
 குஜராத்   2
 கோவா  2
 ராஜஸ்தான்  1
 ஹரியாணா  1
 மொத்தம்   75

தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்

 1.  விஸ்வநாதன் ஆனந்த்

 (1988, இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர்)
 2.  சசிகிரண்

 (2000, இந்தியாவின் 5-வது கிராண்ட்மாஸ்டர்)
 3.  ஆர்.பி. ரமேஷ்

 (2004, இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டர்)
 4.  மகேஷ் சந்திரன்

  (2006, இந்தியாவின் 12-வது கிராண்ட்மாஸ்டர்)
 5.  தீபன் சக்ரவர்த்தி

 (2006, இந்தியாவின் 13-வது கிராண்ட்மாஸ்டர்)
 6.  அருண் பிரசாத் 

 (2008, இந்தியாவின் 18-வது கிராண்ட்மாஸ்டர்)
 7.

 எஸ். கிடாம்பி

 (2009, இந்தியாவின் 19-வது கிராண்ட்மாஸ்டர்)

 8.  ஆர்.ஆர். லக்‌ஷ்மண்

 (2009, இந்தியாவின் 20-வது கிராண்ட்மாஸ்டர்)
 9.  அதிபன்

 (2010, இந்தியாவின் 23-வது கிராண்ட்மாஸ்டர்)
 10.

 எஸ்.பி. சேதுராமன்

 (2011, இந்தியாவின் 24-வது கிராண்ட்மாஸ்டர்)

 11.

 எம்.ஆர். வெங்கடேஷ்

 (2012, இந்தியாவின் 28-வது கிராண்ட்மாஸ்டர்)

 12.  ஷ்யாம் சுந்தர்

 (2013, இந்தியாவின் 31-வது கிராண்ட்மாஸ்டர்)
 13.

 விஷ்ணு பிரசன்னா

 (2013, இந்தியாவின் 33-வது கிராண்ட்மாஸ்டர்)

 14.   அரவிந்த் சிதம்பரம்

 (2015, இந்தியாவின் 37-வது கிராண்ட்மாஸ்டர்)
 15.

 கார்த்திகேயன் முரளி

 (2015, இந்தியாவின் 38-வது கிராண்ட்மாஸ்டர்)

 16.  அஸ்வின் ஜெயராம்

 (2015, இந்தியாவின் 39-வது கிராண்ட்மாஸ்டர்)
 17.  பிரியதர்ஷன்

 (2016, இந்தியாவின் 44-வது கிராண்ட்மாஸ்டர்)
 18.
 ஸ்ரீநாத் நாராயணன்

 (2017, இந்தியாவின் 46-வது கிராண்ட்மாஸ்டர்)
 19.  பிரக்ஞானந்தா

 (2018, இந்தியாவின் 52-வது கிராண்ட்மாஸ்டர்)
 20.

 கார்த்திகேயன்

 (2018, இந்தியாவின் 57-வது கிராண்ட்மாஸ்டர்)

 21.

 என்.ஆர். விசாக்

 (2019, இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர்)

 22.

 குகேஷ்

 (2019, இந்தியாவின் 60-வது கிராண்ட்மாஸ்டர்)

 23.

 இனியன்

 (2019, இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர்)

 24.

 ஆகாஷ் கணேசன்

 (2020, இந்தியாவின் 66-வது கிராண்ட்மாஸ்டர்)

 25.

 அர்ஜுன் கல்யாண்

 (2021, இந்தியாவின் 68-வது கிராண்ட்மாஸ்டர்)

 26.

 பரத் சுப்ரமணியன்

 (2022, இந்தியாவின் 73-வது கிராண்ட்மாஸ்டர்)

 27.   பிரணவ்

 (2022, இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர்)
 
 28.  பிரனேஷ்
  (2023, இந்தியாவின் 79-வது கிராண்ட்மாஸ்டர்)

 

இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருந்தாலும் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மஹாராஷ்டிரமும் மேற்கு வங்கமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன. 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரும் நமக்குக் கிடைக்கவில்லை. செஸ்ஸைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவும் அவசியம் என்பதால் இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் செஸ்பேஸ் போன்ற செஸ் தளங்கள் தற்போது ஹிந்தியிலும் இயங்குவதால் விரைவில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய செஸ்ஸின் வளர்ச்சி

 வருடம்  இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை
 1988  1
 1991  1
 1997  1
 2000  2
 2001  1
 2002  1
 2003  2
 2004  2
 2005  0
 2006  4
 2007  1
 2008  2
 2009  2
 2010  3
 2011  2
 2012  4
 2013  6
 2014  1
 2015  5
 2016  3
 2017  6
 2018  8
 2019  7
 2020  2
 2021  5
 2022  5
 2023  2
 மொத்தம்  79


Read in source website

 

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ் பெற்றுள்ளார்.

ரில்டன் கோப்பை 2022-23 செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆல்சனை வீழ்த்தினார் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ். இதையடுத்து தரவரிசையில் 2500 புள்ளிகளைப் பெற்று கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை அடைந்துள்ளார். 2020 ஜனவரியில் கிராண்ட்மாஸ்டருக்கான முதல் தகுதியையும் 2020 டிசம்பரில் 2-வது தகுதியையும் அடைந்தார். கடந்த நவம்பரில் கடைசித் தகுதியையும் அடைந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான கடைசிக்கட்டத்தில் இருந்தார். தற்போது அனைத்து விதமான நடைமுறைகளையும் பூர்த்தி செய்து கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார். 

16 வயதில் தனியாக உலகமெங்கும் நடக்கும் செஸ் போட்டிகளுக்குச் சென்று (சிலசமயம் செஸ் வீரர்களாக உள்ள நண்பர்களுடன்) விளையாடி வருகிறார் பிரனேஷ். அவருடைய இந்தச் சாதனைக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைச் சமீபத்தில் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ். இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். 

தமிழ்நாட்டிலிருந்து மேலும் 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்குவதே தமிழக அரசின் திட்டமாக உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த பிறகு, சில செஸ் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தமிழக அரசும் அழைத்து தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தன.



Read in source website

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி உறபத்தி 60.80 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 16.39 சதவீதம் உயா்ந்து 60.80 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 52.23 கோடி டன்னாக இருந்தது.

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் அந்த நிறுவனத்தின் உற்பத்தி முந்தை ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 15.82 சதவீதம் அதிகரித்து 47.9 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், "கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தப் போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்,

  • ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவரும் கோவிட் நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பார்வையாளர்களாக 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது மொத்த இருக்கைகளில் பாதி அளவிற்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • அதேபோல், போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவிட் நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • போட்டியின்போது காளைகளுக்கு எவ்வித துன்புறுத்தலும் ஏற்படக்கூடாது. அதை மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
  • போட்டி நடைபெறும் இடம், அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை கண்காணித்து மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
  • போட்டி நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்களுடன் முன்அனுமதி பெற்று போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
  • போட்டிகள் நடைபெறும் விதத்தை கண்காணிப்புக் குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Read in source website

சென்னை: "நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைப்பதற்காக சென்னையில் இடம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்தார். கடந்தாண்டு அந்த வாக்குறுதியை நானும் நினைவுப்படுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும் அதுதொடர்பான முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செனனை நந்தனத்தில், 46-வது சென்னைப் புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் புத்தக் காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் தொடக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "புத்தக கண்காட்சிக்காக தலைவர் கருணாநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அந்த நிதி அவருக்குப் பின்னாலும் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்த பயன்பட்டு வருகிறது.

2007-ம் ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்த தலைவர் கருணாநிதி, சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஒரு நூலகம் அமையப்போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதுதான் சென்னையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

அதேபோல் கலைஞரின் பெயரால், ரூ.114 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு, அது பிரம்மாண்டமாக எழுந்து வருகிறது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை, நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், தினந்தோறும் திராவிடம், முத்தமழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என ஏராளமான தமிழ் காப்புத் திட்டங்களை, திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. பதிப்பகங்களுடன் போட்டிப் போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது.

இன்று காலைகூட நூறு நூல்களை நான் வெளியிட்டேன். தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியாக அதுதான் இருக்கும் என்று நான் கருதுகிறேன். நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைப்பதற்காக சென்னையில் இடம் வழங்கப்படும் என்று தலைவர் கருணாநிதி அறிவிப்பு செய்தார். கடந்தாண்டு அந்த வாக்குறுதியை நானும் நினைவுப்படுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும் அதுதொடர்பான முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்" என்று அவர் பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (ஜன.6) தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் 3,04,89,866 ஆண்கள், 3,15,43,286 பெண்கள், 8,027 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறினார்.

இது தொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10,17,141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பெயர் நீக்கம் தொடர்பாக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடப் பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக 8,02,136 பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதுதவிர, திருத்தம் தொடர்பாக 2,15,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,04,89,866 பேர், பெண்கள் 3,15,43,286 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 6,66,295 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1,70,125 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், பட்டியலில் 3,310 வெளிநாடு வாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 8 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது சேர்க்கப்பட்டனர். அதேபோல, 4,48,138 வாக்காளர்கள் மாற்றுத் திறனாளிகள்.

வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 18-19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 2,52,048 பேர், பெண்கள் 2,14,171 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 155 பேர் என மொத்தம் 4,66,374 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்புவோர் ‘elections.tn.gov.in’ எனற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். அல்லது ‘www.nvsp.in’ என்ற இணையதளம், ‘voter helpline app’ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்படும்.

இந்த முறை, ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றில்லை. 17 வயது பூர்த்தியடைந்திருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியானதும் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர் சேர்க்கப்படும்.

மார்ச் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பிக்கலாம். ஜன. 4-ம் தேதி வரை தமிழகத்தில் 3.82 கோடி பேர் ஆதார் எண் இணைக்க விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு சத்யபிரத சாஹு கூறினார்.

2 லட்சம் பேர் அதிகம்

கடந்த ஆண்டு ஜன. 5-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் 6.36 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் இரட்டைப் பதிவுகள் நீக்கம் உள்ளிட்டவை காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6,18,26,182 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 2,14,997 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியல்படி அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 38.82 லட்சம், திருவள்ளூரில் 34.21 லட்சம், கோவையில் 30.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூரில் 5,14,738, நாகையில் 5,58,930, நீலகிரியில் 5,80,507 வாக்காளர்கள் உள்ளனர். பொதுவாக, 40-49 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.



Read in source website

பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்தவர் பிரியங்கா பாட்டீல் (31). இவரது தந்தை ரமேஷ் கந்தப்பா பாட்டீல் ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு இவர் காஷ்மீர் எல்லையில் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது மரணம் அடைந்தார்.

இந்நிலையில் பிரியங்கா பாட்டீல் கர்நாடக கல்வித் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை ராணுவ வீரர்களுக்கான நல வாரியத்திடம் கோரினார். அதற்கு ராணுவ வீரர்களுக்கான நலவாரியம், “பிரியங்கா பாட்டீலுக்கு திருமணம் ஆகிவிட்டதால், ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டை வழங்க முடியாது'' என தெரிவித்தது.

இதையடுத்து பிரியங்கா பாட்டீல் கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “என்னுடைய தந்தை மரணம் அடைந்தபோது எனக்கு 15 வயது. கர்நாடக அரசு பணிக்கு விண்ணப்பித்தபோது, முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க கோரினேன். ஆனால் ராணுவ வீரர்களுக்கான நல வாரியம், எனக்கு திருமணம் ஆகி விட்டதால், முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை வழங்க மறுக்கிறது'' என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான சம‌ உரிமை வழங்கப்பட வேண்டும். திருமணத்தைக் காரணம் காட்டி பெண்ணுக்கு உரிமை மறுப்பது என்பது அரசியலமைப்பின் 14-வது சரத்தை மீறுவதாகும்'' என வாதிட்டார். அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா நேற்று தீர்ப்பளித்தார்.

அவர் தனது தீர்ப்பில், “திருமணம் ஆனாலும் மகனைப் போல தந்தைக்கு பெண்ணும் மகள்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. பெண் என்பதற்காக முன்னாள் ராணுவ வீரர் மகள் என்ற அடையாள அட்டை வழங்க முடியாது என கூற இயலாது. அத்தகைய விதிகளை மாற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.



Read in source website

உக்ரைன்: இரண்டு நாட்கள் ரஷ்யா விடுத்த போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது.

ரஷ்யாவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள அறிவிப்பில், “புனித நாளை முன்னிட்டு ஜனவரி 6, ஐனவரி 7 ஆகிய தேதிகளில் போர் நிறுத்த அறிவிப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன். கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் சேவைகளில் பங்கு கொள்ள அனுமதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது.

போர் நிறுத்த அறிவிப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது, "உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸிலில் எங்கள் ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றங்களை நிறுத்தவும், போருக்கு தேவையான கூடுதல் ஆயுதங்களைக் கொண்டு வரவுமே இந்தப் போர் நிறுத்தத்தை ரஷ்யா விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

புதினின் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “புதின் இதனை ஆசுவாசப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார். டிசம்பர் 25 மற்றும் புத்தாண்டு தினத்தில் கூட தேவாலயங்கள், மருத்துவமனைகள் மீது புதின் ராணுவம் குண்டு வீசியது” என்றார்.

தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்கிவ்கா நகரில் ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் பலியாகினர். ரஷ்யா - உக்ரைனின் போரில் ரஷ்யா சந்தித்த பெரும் இழப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பை புதின் வெளியிட்டிருக்கிறார்.



Read in source website

இந்தியாவில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளார்.

ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றியது. இந்த மனுக்கள் டெல்லி மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும் வகையில், உயர் நீதிமன்றங்களில் இருந்து இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினார்.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமவு இந்த மனுக்களை மாற்ற அனுமதித்தது. உச்ச நீதிமன்றம் 2018-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவைக் குறைத்த பிறகு, எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) மக்கள் உரிமைகள் மீதான முதல் பெரிய தலையீடு இதுவாக இருக்கலாம்.

மனித உரிமைகள் பிரச்சாரத்தின்படி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட எல்.ஜி.பி.டி.க்யூ வழக்கறிஞர் குழு, உலகம் முழுவதும் 32 நாடுகள் மட்டுமே ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரே பாலினத் திருமணத்தை அனுமதிக்கும் பெரும்பாலான நாடுகளில், திருமண சமத்துவ சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 நாடுகளில் மட்டுமே ஒரே பாலினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: 2015-ல், அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5:4 நீதிபதிகள் தீர்ப்பில் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் திருமணத்தை எதிர் பாலின தம்பதிகளுக்கு (ஆண் – பெண்) மட்டும் என கட்டுப்படுத்துவது சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு என்ற 14வது திருத்தத்தின் உத்தரவாதத்தை மீறுகிறது என்று கூறியது.

இந்த முடிவு நாடு முழுவதும் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வழிவகுத்தது. அமேரிக்காவில் 32 மாகாணங்கள் இந்த தீர்ப்புக்கு முன்பே ஒரெ பாலினத் திருமணத்தை அங்கீகரித்திருந்தன. 2003-ம் ஆண்டில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் முதல் மாகாணம் ஆனது.

ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து: 2017-ம் ஆண்டு நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றியது. இந்த வாக்கெடுப்பில் ஒரே பாலின திருமணச் சட்டத்திற்கு ஆதரவாக – 62% முதல் 38% வரை – பெரும்பான்மை ஆதரவு அளித்தனர். அயர்லாந்திலும் சுவிட்சர்லாந்திலும், பெரும்பான்மையினர் வாக்களித்தது எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) திருமணங்களுக்கு முறையான அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது.

தென் ஆப்பிரிக்கா: 2006-ம் ஆண்டில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆப்பிரிக்க நாடு தென் ஆப்பிரிக்கா. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, முந்தைய எதிர் பாலினத் திருமணத்துக்கு மட்டுமே (ஆண்-பெண் பாலினத் திருமணம்) அங்கீகாரம் என்ற கொள்கையானது அரசியலமைப்பின் சம உரிமை உத்தரவாதத்தை மீறுவதாகக் கருதுகிறது.

தைவான்: 2019-ம் ஆண்டில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் ஆசிய நாடாக தைவான் ஆனது. கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

அர்ஜென்டினா: 2010 ஆம் ஆண்டில், அர்ஜென்டினா நாடு முழுவதும் ஒரே பாலின திருமணங்களை அனுமதித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாகவும் உலகின் 10-வது நாடாகவும் ஆனது. தேசிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, பல நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் ஒரே பாலின ஜோடிகளுக்கு சமூக சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

கனடாவில் உள்ள ஒரே பாலினத் தம்பதிகள் திருமணத்தின் சட்டப்பூர்வ பலன்களை 1999-ம் ஆண்டு முதல் அனுபவித்து வருகின்றனர். அப்போது மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் பொதுச் சட்டத்தின் கீழ் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ)ஜோடிகளுக்கு திருமண அங்கீகாரத்தை நீட்டித்தன. இதைத் தொடர்ந்து, கனடாவின் 13 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் ஒன்பது இடங்களில் ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில், 2003-ம் ஆண்டு இந்த விஷயத்தில் ஒரு சட்டம் அலமாகத் தொடங்கியது. இது 2005-ல் கனடாவின் பாராளுமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் ஒரே பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அலிக்கும் சட்டத்தை இயற்றியது.



Read in source website

வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் மிக அதிகமாக தங்களது சேமிப்பை தாயகத்துக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக இருக்கிறது. உலக வங்கியின் 2020-22 ஆண்டுக்கான புலம்பெயர்தல் மற்றும் வளர்ச்சி குறித்த அறிக்கை இதைக் குறிப்பிடுகிறது. 

2022-இல், வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (என்ஆர்ஐ) 10,000 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்திருக்கும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது. 2021-இல் 8,900 கோடி டாலராக இருந்த என்ஆர்ஐ பங்களிப்பு தற்போது 12% அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் 4.9 % அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கான அதிகரிப்பு கணிசமானது. கொள்ளை நோய்த்தொற்று, ரஷியா-உக்ரைன் போர் ஆகியவற்றால் சர்வதேசப் பொருளாதாரம் நிலைதடுமாறும் நிலையிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பு அதிகரித்திருப்பது ஆச்சரியமானது. 

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து தங்களது குடும்பங்களுக்கு சேமிப்புகளை அனுப்பி வருகிறார்கள். இப்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. வழக்கமான வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்தும் சேமிப்புகள் வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

'ரெமிட்டன்ஸஸ்' என்று அழைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் சேமிப்புகள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் சாதாரண உடலுழைப்பு அல்லது அலுவலகப் பணியாளர்களிடமிருந்துதான் வந்துகொண்டிருந்தன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத் நாடுகளில் பணிபுரிவோரின் பங்களிப்புதான் அதிகம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் பங்களிப்புகள் வருகின்றன. 

சர்வதேச அளவிலான 'ரெமிட்டன்ஸஸ்' எனப்படும் தாயகத்துக்கு அனுப்பப்படும் சேமிப்புகள், 2001-இல் 78,100 கோடி டாலராக இருந்தது 2022-இல் 79,400 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2021-ஐ விட 4.9% வளர்ச்சி. 79,400 கோடி டாலரில் 62,600 கோடி டாலர், குறைந்த வருவாய் அல்லது நடுத்தர வருவாய் நாடுகளுக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. வெளிநாடுவாழ் குடிமக்களின் சேமிப்பு மிக அதிகமாக சென்றடைந்த நாடுகள் இந்தியா (10,000 கோடி டாலர்), மெக்ஸிகோ (6,000), சீனா (5,000), பிலிப்பின்ஸ் (3,800), எகிப்து (3,200).

கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்குப் பிறகு வணிகமும், சுற்றுலாத் துறையும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதால் புலம்பெயர்ந்தோர்களின் பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று கால பாதிப்பிலிருந்து தங்களது குடும்பத்தினர் மீண்டெழுவதற்கு வெளிநாட்டில் பணிபுரிவோர் முனைப்பு காட்டுவதும் காரணமாக இருக்கக்கூடும். 

இந்தியாவுக்கு அனுப்பப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பில் அடிப்படைத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால் திறமை சாராத, உடலுழைப்பும் அலுவலகப் பணியும் மட்டுமே சார்ந்த மரபு சாரா பணிகளில் ஈடுபடும் இந்தியர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பங்களிப்பும் சமீப காலமாக கணிசமாக உயர்ந்திருக்கிறது. 

கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், கிழக்காசிய நாடுகளின் பங்களிப்பு 26% இலிருந்து 36% ஆக அதிகரித்திருக்கிறது. இதற்கு முன்பு மிக அதிகமான பங்களிப்பு காணப்பட்ட சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் பங்களிப்பு 23% ஆக உயர்ந்திருக்கிறது. ஐந்து வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பங்களிப்பு 54% -லிருந்து 28% -ஆகத் குறைந்திருக்கிறது. 

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் 20% பேர் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அதிக ஊதியம் பெறும் பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வல்லுநர்களான பலரும் சேவைத் துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அதிக வருவாய் நாடுகளில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களும், சேவைத் துறையினரும் அந்தந்த நாடுகள் வழங்கிய கொள்ளை நோய்த்தொற்று காலத்து மானியங்களால் பயனடைந்தனர். ஊதிய உயர்வும், அதிகரித்த வேலைவாய்ப்பும் பணவீக்கத்தையும் மீறி அவர்களது சேமிப்பை அதிகரித்திருக்கிறது. 

அதே நேரத்தில், வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புக்கான சூழல் மாறியிருக்கிறது. முன்பு போலல்லாமல் தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைந்திருப்பது மட்டுமல்லாமல், குறைந்த ஊதியத்தில் கென்யா, உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வேலைவாய்ப்புத் தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. 

2015 முதல் வளைகுடா நாடுகள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைத்திருக்கின்றன. 2015-இல் 3,10,000 பேருக்கு நுழைவு அனுமதி வழங்கிய சவூதி அரேபியா, இப்போது 40,000-க்கும் குறைவானவர்களுக்கே அனுமதி வழங்குகிறது. 

வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பங்களிப்பை எளிதாக அகற்றிவிட முடியாது. கத்தாரில் பணிபுரிவோரில் 24% இந்தியர்கள். வளைகுடா நாடுகளில் முன்னெடுக்கப்படும் கட்டமைப்புப் பணிகளில் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்பதை அந்த நாடுகளே ஒப்புக்கொள்கின்றன. 
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்புகள் தொடருமா என்பதை உலகப் பொருளாதாரம்தான் தீர்மானிக்கும். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் இல்லாமல், ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வந்து, பணவீக்கம் கட்டுக்குள் வந்தால் இந்தியாவுக்கு வரும் சேமிப்புகள் அதிகரிக்கும்; இல்லையென்றால் குறையும்.



Read in source website

உலகம் முழுவதும் வரும் காலங்களில் தொற்றுநோய்களின் தாக்கம் 58% அதிகரிக்கக்கூடும் என ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்த அறிவியல் ஆவணங்களை மதிப்பாய்வு செய்த சுற்றுச்சூழல் - சுகாதார விஞ்ஞானிகள் அடங்கிய குழு, நோய்கிருமிகள் ஏற்படுத்தும் காலநிலை தொடா்பான வரைபடத்தை உருவாக்கியது.

இந்த வரைபடத்தின் மூலம், மனிதா்களை தாக்கும் 375 நோய்களில் 218-க்கும் அதிகமான நோய்கள் காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் என கண்டறியப்பட்டுள்ளது.

2030 முதல் 2050 வரையான காலகட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு, வெப்ப அயா்ச்சி காரணமாக ஆண்டொன்றுக்கு சுமாா் 2,50,000 கூடுதல் இறப்புகளை பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

2030-ஆம் ஆண்டுவாக்கில் உலகளாவிய நிலையில் சுகாதார செலவுகள் ரூ. 16,537 கோடி முதல் ரூ. 33,075 கோடி வரை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

வெப்பநிலை உயா்வு, மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களின் ஆயுளை அதிகரிக்கும். வெள்ளப்பெருக்கு கல்லீரல் அழற்சி (ஹெபிடைடிஸ்) நோயினை உண்டாக்கும். வறட்சியின்போது உணவு தேடும் மனிதா்களுக்கு கொறித்துண்ணிகள் நச்சுயிரி (ஹான்டாவைரஸ்) நோய்கள் ஏற்படலாம். காலநிலை மாற்றம் எதிா்பாராத பல ஆபத்துகளை உருவாக்கும் என்பதால் சூழலுக்கு தகுந்தாற்போல் எளிதில் அவா்களை மாற்றியமைப்பது இயலாத செயல்.

காலநிலை மாற்ற நோய் அபாயங்களைக் குறைக்க, காலநிலை மாற்றத்தினை தூண்டும் பைங்குடில் வாயு உமிழ்வை உலகம் குறைக்க வேண்டும். வளிமண்டல வெப்பமயமாதல், வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத்தீ, அதிக மழைப்பொழிவு, வெள்ளம், புயல், கடல் மட்ட உயா்வு, கடல் வெப்பமயமாதல், நிலச்சரிவு போன்ற நிலப்பரப்பு மாற்றங்கள் ஆகியவை அதிகரித்து வரும் பைங்குடில் வாயு உமிழ்வு தொடா்பாக ஏற்படக்கூடிய ஆபத்துகள்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிகளைத் தடுக்க, காலநிலை ஆபத்துகளுடன் தொடா்புடைய மனித நோய்கள் பற்றிய விரிவான புரிதல் அவசியம். நோய்க்கிருமிகளை மக்களுக்கு நெருக்கமாகவும் மக்களை நோய்க்கிருமிகளுக்கு நெருக்கமாகவும் கொண்டு செல்லும் காலநிலை மாற்றம் நோய்க்கிருமிகளின் தாக்கத்தினை அதிகரிப்பதுடன் நோய்க்கிருமிகளை சமாளிக்கும் உடலின் திறனையும் பலவீனப்படுத்துகிறது.

கொசுக்கள், வெளவால்கள், கொறித்துண்ணிகள் போன்ற ஏந்திகள் வழி பரவும் நோய்களின் எண்ணிக்கையினை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஏந்திகள் வழி பரவும் நோய்களில் வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக 160 நோய்களும் அதிக மழைப்பொழிவு காரணமாக 122 நோய்களும் வெள்ளம் காரணமாக 121 நோய்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நோய்க்கிருமி கடத்திகளாக செயல்படக்கூடிய விலங்குகள், உயிரினங்களின் கால வரம்பு, வசிப்பிட வரம்புகளை காலநிலை மாற்றம் தீா்மானிக்கிறது. காலநிலை ஏற்படுத்தும் வெப்பமயமாதல் அல்லது மழைப்பொழிவு மாற்றங்கள் கொசு உற்பத்தியினை தீா்மானிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுத்திய புவியியல் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை.

வெப்ப அலைகளின்போது மக்கள் பெரும்பாலும் தண்ணீரில் அதிக நேரம் செலவிடுவா். இது நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். 2014-ஆம் ஆண்டு வடக்கு ஸ்காண்டிநேவியாவில் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடா்ந்து, ஸ்வீடனிலும் பின்லாந்திலும் விப்ரியோ பாக்டீரியா ஏற்படுத்திய நோய்த்தொற்றுகள் அதிகரித்தன. நோய்க்கிருமி தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மனித நடத்தைகளை காலநிலை மாற்றம் மாற்றும்.

சுற்றுச்சூழல் அமைப்புகளில் நோய்க்கிருமி, நோய் கடத்திகளுக்கான தொடா்பினையும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளின் திறனையும் காலநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்யும். அதிக மழைப்பொழிவு அல்லது வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் நீா் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும். இது மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மலேரியா, ஓரணு ஒட்டுண்ணி நோய் (லீஷ்மேனியாசிஸ்) போன்ற நோய்களின் பரவலுக்கு வழிவகுக்கும்.

சுற்றுசூழல் வெப்பநிலை அதிகரிப்பு, தீநுண்மிகளை வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக மாற்றக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவாக மனித உடலில் காய்ச்சலின்போது உண்டாகும் வெப்பநிலையில் நோய்க்கிருமிகள் நோயின் தீவிரதை அதிகரிக்கச் செய்யும்.

அதிகரித்து வரும் வெப்பநிலை, பூசணத் தீங்குயிரிகளின் வெப்ப சகிப்புத்தன்மையை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முன்பு நோய்க்கிருமி அல்லாத கேண்டிடா ஆரிஸ் என்ற பூஞ்சை தற்போது சிகிச்சை எதிா்ப்பு பூசணத் தீங்குயிரியாக உலகின் பல கண்டங்களில் பரவி வருகிறது.

அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை, நோய்க்கிருமி அல்லாத பூஞ்சையினை பூசணத் தீங்குயிரியாகமாற்றியுள்ளது. இதேபோல், நகா்ப்புற சூழலில் உருவாகும் பூஞ்சைகள் குளிா்ச்சியாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளதை விட அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடா்பான ஆபத்துகள், மனித உடலின் திறனை இரு முக்கிய வழிகளில் பாதிக்கலாம். முதலாவதாக, பேரழிவும் அதனால் ஏற்படும் சேதமும் மக்களை ஒரே இடத்தில் நெரிசலான சூழ்நிலையில் வாழ வழிவகுக்கும். சுகாதாரம் இல்லாத இந்த அபாயகரமான சூழலில் அவா்கள் எளிதில் நோய்க்கிருமி தாக்குதலுக்கு ஆளாகலாம்.

இரண்டாவதாக, ஊட்டச் சத்து குறைபாடு நோய்க்கிருமிகளை எதிா்த்துப் போராடும் உடலின் திறனை குறைக்கலாம். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அதீத மன அழுத்தம் அண்ணீரகப் புறணி (காா்டிசோல்) உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மனித உடலின் நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

பேரழிவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைத் தவிா்க்கவும் காலநிலை மாற்றம் தொடா்பான இறப்புகளைத் தடுக்கவும் உலகம் வெப்பநிலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான குழு முடிவு செய்துள்ளது.

சமூக, சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க புவி வெப்பமடைதலுக்கு காரணமான பைங்குடில் வாயு உமிழ்வினை மனிதகுலம் தவிா்க்க வேண்டியது இன்றியமையாதது.

 

 



Read in source website

உலகம் அமைதியையும் சமாதானத்தையும் நாடுகிறது. மனித இனம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என விரும்புகிறது. அதற்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று சங்க இலக்கியம் வழிகாட்டுகிறது. மனிதா்கள் காலம் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பதால்தான் உலகம் வளா்கிறது; முன்னேறுகிறது.

அவா்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தவும், அவா்கள் மகிழ்ச்சி தொடா்வதற்காகவும், திருவிழாக்கள் அடிக்கடி கொண்டாடப்படுகின்றன. ஜாதி, சமயம், இனம் என்று மனிதா்கள் வேறுபடுத்தப்பட்டாலும், அவா்களை ஒற்றுமைப்படுவதற்காகவே திருவிழாக்கள் வருகின்றன. அதன் அடுத்த பரிமாணமாகத்தான் அறிவுக்கு ஒரு திருநாளாகப் புத்தகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மனித நாகரிகத்தின் வளா்ச்சி என்பதே கல்வியறிவின் வளா்ச்சியாகும். அறியாமை இருளை அகற்றி அறிவு வெளிச்சம் தருவதே கல்வியின் தலையாய பணியாகும். கல்வியின் அடிப்படையான எண்ணும் எழுத்துமே இரண்டும் கண்களாகும் என்று நீதிநூல் கூறுகிறது. அந்தக் கல்விக்கு உறுதுணையாக இருப்பவை புத்தகங்களாகும்.

ஆதி மனிதன் காலத்திலிருந்தே அவன் சிந்திக்கிற ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக வளா்த்துக் கொண்டான். அவன் பேசவும், அதைக் கேட்கவும் ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருந்தது. வழிமாறிப் போகிறவா்களை மீட்டெடுப்பதற்குத் திசைகாட்டிகள் தேவைப்படுகின்றன. அறிவு வளா்ச்சியே அவனை வாா்த்தெடுத்தது.

மகான்களின் உபதேசங்களும் படைப்புகளும் கல்வெட்டுகளாகவும் ஓலைச் சுவடிகளாகவும் இருந்து வந்தன. அவையே பிற்காலத்தில் அச்சு வடிவம் பெற்று புத்தகங்களாக உருவெடுத்தன. இதுவே அறிவியலின் முன்னேற்றமாகும். அதனை அறிவின் அடையாளமாக உலகமே போற்றுகிறது.

புத்தகங்கள் எப்போதும் ஒரு நாகரிகத்தின் அடையாளம்; அறிவு வளா்ச்சியின் சின்னம்; வளா்ந்து வரும் அறிவின் குறியீடு; அந்தந்த காலச்சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி. இந்தக் கண்ணாடியில்தான் உலகம் தன் முகத்தைப் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

“எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்று அறிவுக்கு இலக்கணம் வகுத்தாா் திருவள்ளுவா்.

அத்தகைய அறிவை வளா்க்கவும், சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை புத்தகங்களே! சமுதாய மாற்றத்திற்கும் புதிய அரசுகளை ஏற்படுத்துவதற்கும் இவை வழிகாட்டுகின்றன.

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. ‘எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது’ என்று அறிஞா் பிளேட்டோ கூறியுள்ளாா். நாடும் வீடும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மகாகவி பாரதியாா், ‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று கூறினாா். எழுதுகோலால் எழுதப்படும் எழுத்துகளே புத்தகங்கள் ஆகின்றன. அவை மக்களின் வணக்கத்துக்கு உரினவையாகும். வணக்கத்துக்குரிய புத்தகங்களை வாங்க வேண்டாமா?

தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா, அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டாா். அப்போது அவா் சிறையில் எந்தச் சலுகையும் கேட்கவில்லை. புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து மனிதன் நடந்து வந்த பாதையே அறிவை நோக்கிய பயணமாகும். அந்தப் பயணமே மனித சமுதாயத்தின் வளா்ச்சியென்றும் நாகரிகமென்றும் வரலாறு கூறுகிறது. அதையே ஓரறிவு உயிா் முதல் ஆறறிவு உயிா் வரை என்று தொல்காப்பியம் வரையறுத்து கூறுகிறது. எல்லா உயிா்களுக்கும் அறிவு இருந்தாலும் மனிதன் மட்டுமே அறிவைக் கொண்டு மேம்பட்டவனாக வளா்கிறான்.

அறிவாற்றல் கொண்டவா்களால்தான் ஒரு நாடு பெருமை பெறுகிறது. சிறந்த நாகரிகம் என்று போற்றப்படும் கிரேக்க நாகரிகத்துக்குப் பெருமை சாக்ரடீஸ் என்ற சிந்தனையாளரால் என்று வரலாறு கூறுகிறது. அவரது தத்துவங்கள் உலகம் முழுவதும் புத்தக வடிவில் நடமாடுகின்றன.

அவரது மாணவா்களான பிளேட்டோவும் அரிஸ்டாடிலும் அவரது தத்துவங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றனா். அவா்கள் இப்போது இல்லை. ஆனால் சாக்ரடீஸின் சிந்தனைகள் செழித்து வளா்வதற்கு அவா் குறித்த நூல்களே ஆதாரங்களாக இருக்கின்றன. சிந்தனையாளா்களுக்கு எப்போதும் இறப்பு இல்லை. அவா்கள் புத்தகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோா்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. இக்காலம் வேறு; திருவள்ளுவா் காலம் வேறு. ஆயினும் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது திருக்குறள். ‘அறிவியலால் பெற முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்’ என்று டாக்டா் மு. வரதராசனாா் கூறுவாா்.

அறிவியல் வளா்ச்சியினால் புத்தக வாசிப்பு குறைந்த போதிலும் புத்தகக் காட்சிகள் குறையவில்லை. அவை மேலும் வளா்ந்து கொண்டே யிருக்கின்றன. எத்தனைத் தடைகள் வந்தாலும் அறிவின் வளா்ச்சியை அடக்க முடியாது.

அறிவைத் தேடுதல் என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் செயல்பாடாகும். இந்தச் செயல்பாட்டுக்கு முடிவே இல்லை. அறிவு தேடுதல் என்பதும் முடிவில்லாத ஒரு பயணமாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அறிவைத் தேடும் பயணம் தொடா்ந்து கொண்டே இருக்கிறது.

இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரு நாடாக இல்லாத காலத்திலும் ஞானபூமியாகவே இருந்தது. ஞானிகளும் முனிவா்களும் சித்தா்களும் உலகத்துக்கே வழிகாட்டிகளாக விளங்கினா். உலகில் திகழும் அத்தனை சமயங்களின் வோ்களும் விரிந்து பரந்திருந்தது. அவா்களின் மூச்சுக் காற்றே ஞான இசையின் நாதமாக இருந்தது.

சீனா முதலிய அறிவு தேடிய தேசங்கள் இந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்ததும், படையெடுத்ததும் வெறும் செல்வத்துக்காக மட்டுமல்ல, அறிவுச் செல்வங்களை அள்ளிச் செல்லவும்தான் என்பதை வரலாறு கணித்து வைத்திருந்தது.

யுவான் சுவாங் என்ற சீனப் பயணி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியிலிருந்து தெற்கே காஞ்சிபுரம் வரை 16 ஆண்டுகள் பயணம் செய்துள்ளாா். மீண்டும் அவா் தனது நாட்டுக்குத் திரும்பியபோது அவா் தேடிய செல்வங்களை 30 குதிரைகளில் ஏற்றினாா்கள். அந்நாட்டு எல்லையில் மன்னா், அமைச்சா்கள், நகர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றனா்.

அவா் கொண்டு வந்த செல்வங்களைப் பாா்க்க அங்கே அனைவரும் ஆவலோடு காத்திருந்தனா். விலையுயா்ந்த செல்வங்களை அவா் திரட்டி வந்திருக்க வேண்டும் என்று கருதினா். ஆனால் யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து, சீன நாட்டுக்குக் கொண்டு சென்றது பொன்னோ பொருளோ அணிகலன்களோ இல்லை. மொத்தம் 657 பௌத்த மூல நூல்கள் என்னும் அறிவுக் கருவூலங்கள். இதனை அறிந்து நாம் வியப்படைகிறோம்.

ஓா் இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் அடையாளமான மொழியையும், மொழியின் அடையாளமான நூல்களையும் அழிக்க வேண்டும் என்று கூறுவாா்கள். பகைவா்கள் படையெடுப்பின்போது நூல் நிலையங்கள் எரிக்கப்படும் காரணம் அதுதான். ஆனால், அழிவில் இருந்துதான் அனைத்தும் பிறக்கின்றன என்பதை அவா்கள் அறியவில்லை.

இலங்கை யாழ்ப்பாணத்தில் பழம்பெரும் அறிவுக் கருவூலமான யாழ்ப்பாணம் நூலகம் 1981 ஜூன் முதல் நாள் எரிக்கப்பட்டதும் இதனால்தான். மனிதன் எப்படிப் படிப்படியாக வளா்ச்சியடைந்தான் என்பதை டாா்வின் கண்டுபிடித்தாா். மானிட ஜாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாய் வளச்சியடைந்தது என்பதை மாா்க்ஸ் கண்டுபிடித்தாா்என்பது வரலாறு.

காா்ல் மாா்க்ஸ் இறந்து போனதை அவா் தோழா் ஏங்கெல்ஸ் உலகத்துக்கு அறிவித்தபோது, ‘மாா்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டாா்’ என்று கூறினாா். எனவே மனித வாழ்க்கை என்பதே சிந்திப்பதுதான். சிந்திப்பதை நிறுத்துகிறபோது மனிதன் இறந்தவன் ஆகிறான். சிந்தனையைத் தூண்டுவதே சிறந்த புத்தகங்களின் சேவையாகும்.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றாா் பாரதியாா். இமைப்பொழுதும் சோா்வு அடையாமல் நாட்டுக்கு உழைப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்துவன இலக்கியப் படைப்புகளாகும்.

‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்று ஆணையிட்டாா் ஔவைப்பாட்டி. ஒரு சமுதாயம் உயிருள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் யோசிப்பதையும் நேசிப்பதையும வாசிப்பதையும் வழக்கமாக மட்டுமல்ல, வாழ்க்கையாகவே கொள்ள வேண்டும். அறிவுக்கு ஒரு விழா எடுக்கும் சமுதாயத்துக்கு அழிவு என்பதே இல்லை.

ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி பொங்கலைப் போல இனிப்புடன் தொடங்குகிறது. இந்த ஆண்டுச் சிறப்பாக பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். மக்கள் ஆதரவு மட்டும் போதுமா? தமிழக அரசு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிகளில் நூலகக் கல்வியென்றும், மாவட்டந்தோறும் புத்தகக் காட்சியென்றும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை கலைஞா் நூலகத்துக்கும் புத்தகம் வாங்கிட ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் பொதுநூலகத் துறையில் நூல்கள் வாங்கி பதிப்பாளா்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

‘புத்தகங்களுக்காகச் செலவிடப்படும் தொகை செலவு அல்ல, அது முதலீடு’ என்றாா் அறிஞா் எமா்சன். நாமும் உற்சாகமாகப் புத்தகங்களை வாங்கி, நம் அடுத்த தலைமுறையை அறிவாா்ந்த மக்களாக வாழ வைப்போம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

தமிழ்நாட்டில், மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய ‘தமிழக மக்கள் எண்’ (மக்கள் ஐடி) என்னும் அடையாள எண்ணை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஊடகங்களில் இத்தகவல் வெளியான நிலையில், இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி அதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை சில முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும், குடிமக்களுக்குத் தனியாக அடையாள எண் உருவாக்கப்பட்ட முன்னுதாரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்துள்ள விளக்கத்தில், ‘இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

ஒளிர்ந்துகொண்டிருந்த இலங்கை இருளில் மூழ்கிப் பல மாதங்களாகின்றன. இலங்கும் நாடு என்பதால் ‘இலங்கை’ எனப் பெயர் கொண்ட இலங்கைத் தீவில் இப்போது ஒளி இல்லை. நாற்புறமும் நீரால் சூழப்பட்ட இலங்கை நாடு, இப்போது கடன்களால் சூழப்பட்ட நாடாக, பசியால் சூழப்பட்ட நாடாக அறியப்படுகிறது. நீந்திக் கடந்தாவது இத்தீவைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிற விரக்தி நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் நெருக்கடி: இலங்கையில் தமிழர் தேசம், சிங்கள தேசம் என்ற இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்படுமானால் அதுவே இலங்கைத் தீவின் பலமும் வளமுமாகும் என்று போராளிகள் நம்பினார்கள். முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில், தமிழர் தரப்பிடமிருந்து வடக்கு கிழக்கைப் பெற்று இலங்கையுடன் இணைத்துக்கொண்டதாக, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பெருமைப்பட்டார். ஆனால், இன்று தங்கள் பகுதிகளைவிட்டே சிங்கள மக்கள் புலம்பெயர்கின்றனர். எங்களிடமிருந்து நாட்டைப் பறிக்க வேண்டும் என நினைத்தார்கள். இறுதியில் அவர்களும் வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது.



Read in source website