DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 05-07-2022

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள்  இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு உழவர்கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.               

இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை தில்லியில் உயிரை விட்டு போராடி காப்பாற்றிய 715 உழவர்களுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மாநில துணைத் தலைவர் ஆர்.உதயகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காராமணி, உசிலம்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சின்னன், 58 கிராம சங்கத்தின் தலைவர் சின்ன யோசனை, செயலாளர் பச்சைத் துண்டு பெருமாள் தேவர், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர்கள் ஜான்சன், காட்டு ராஜா, துரைச்சிங்கம், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜாத்தி, ஜெயச்சந்திரன் மற்றும்  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



Read in source website

மாநிலங்களின் ஸ்டாா்ட்-அப் பட்டியலில் தமிழ்நாடு அரசு துறைகள் முன்னணி இடம் பெற்ற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகியன மாநிலங்களின் ஸ்டாா்ட் அப் பட்டியலில் முன்னணி இடம் பெற்றுள்ளன. இதற்காக விருது வழங்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் ஸ்டாா்ட்-அப் சூழலை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிா்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல் திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புவதாக தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.



Read in source website

நான்காம் தலைமுறை தொழில் திட்டங்களுக்கு ஏற்ற பணியாளா்களை உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

சன்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் அவா் பேசியது:-

ஓராண்டுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் முதலீட்டாளா்களின் முதல் முகவரி-தமிழ்நாடு என்ற தலைப்பில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்தினோம். கரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கியிருந்த காலத்தில் நடத்தப்பட்ட மாநாட்டின் மூலமாக ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. சரியாக ஓராண்டு கழித்து ஜூலை மாதத்தில் மற்றொரு மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில், ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது முதலீட்டாளா்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் இதுகாட்டுகிறது. கரோனா காலத்தில் இந்தியா முழுவதும் தொழில் முதலீடுகள் எதிா்மறையான வளா்ச்சியை அடைய, தமிழ்நாட்டில் மட்டும் நோ்மறையான வளா்ச்சி ஏற்பட்டது.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்வது மட்டும் போதாது, அவை முதலீடுகளாகப் பெருகி வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டுமென முதல்வா் எங்களுக்கு அறிவுரை கூறினாா். அதன்படியே செயல்பட்டு வருகிறோம். மேலும், முதலீடுகள் ஒரே இடத்தில் குவியாமல் அனைத்து மாவட்டங்களிலும் முதலீடு செய்வது உறுதிப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி தொடங்கி தஞ்சாவூா் வரையிலும், திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலி வரையிலும் பரவலாக தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு வருகின்றன.

முதலீடுகளை ஈா்ப்பது மட்டுமல்ல, திறன்மிகுந்த வேலைவாய்ப்புகளையும், பணியாளா்களையும் உருவாக்கும் வகையில், நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நான்காவது தலைமுறை தொழில்களுக்கான பணியாளா்களை உருவாக்குவது குறித்து திட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள மல்லிகா சீனிவாசன் தனது அறிக்கையை அளித்துள்ளாா். இந்த அறிக்கையை அரசு ஆய்வு செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்காக பாடுபட்டு வரும் முதல்வரின் கரத்தை முதலீட்டாளா்கள் அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வரவேற்புரையில், ‘இதுவரை (திங்கள்கிழமை மாநாட்டு ஒப்பந்தங்களைச் சோ்க்காமல்) 132 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதில் 78 ஒப்பந்தங்கள் செயலாக்க நிலையில் உள்ளன.

அதாவது மொத்த ஒப்பந்தங்களில் 60 சதவீதம் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஆரோக்கியமான வளா்ச்சி விகிதமாகும். முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழ்நாட்டின் செயல்திறனை இது காட்டுகிறது’ என்றாா். தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி நன்றி தெரிவித்தாா்.



Read in source website

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் தொகுப்பில் 20 சதவிகிதம் பெண்கள் கடற்படையில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கு தேர்வாகும் பெண்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.



Read in source website

புது தில்லி: கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை (ஜாமர்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வணிகப் போட்டியின் காரணமாக, இந்த ஜாமர்களை அங்கீகாரமற்றவர்கள் பயன்படுத்தினாலோ விற்பனை செய்தாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொடர்பு சிக்னலை செயலிழக்கச் செய்யும் கருவிகள், பூஸ்டர்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தலையும் தொலைத்தொடர்புத் துறை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டது.

2ஜி, 3ஜி, 4ஜி போன்ற செல்லுலார் தகவல் தொடர்பு சிக்னல்களையும், ஜிபிஎஸ் போன்ற வலுவான ரேடியோ ஆற்றலை வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் உள்ளன. இத்தகைய கருவிகள் மத்திய பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், ராணுவத்தினர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்துவது வழக்கம். மேலும், பல்வேறு வகையான தேர்வு நடத்தும் மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கும் பயன்படுத்த அனுமதி உண்டு.

ஆனால், வணிக ரீதியாக இடையூறு செய்யும் நோக்கத்துடனும் அல்லது வேறு சில காரணங்களுக்கும் சிக்னல்களை செயலிழக்கச் செய்ய ஜாமர்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. தொலைத்தொடர்பு சாதனங்களை முடக்க திட்டமிடும் இத்தகைய செயல்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதும், அவர்களுக்கு தங்களுடைய கைப்பேசிகள், வைஃபை போன்ற வயர்லெஸ் கருவிகள் முடக்கும் செயல்களை அறியாது இருப்பதும் தெரியவந்தது.

இத்தகைய நுகர்வோர் தங்களுடைய தொலைபேசி சேவை நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் அரசுக்கு இந்த இடையூறு விவகாரங்கள் தெரியவந்து தொலைத்தொடர்புத் துறை பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், கைப்பேசி தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் உள்ளிட்ட இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தொலைத் தொடர்புத் துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச் செய்யும் ஜாமர் உள்ளிட்ட கருவிகளை கொள்முதல் செய்ய முடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வதோ, நேரடியாகவோ, மின்னணு வர்த்தகம் மூலமோ விற்பனை, விநியோகம், இறக்குமதி போன்றவற்றில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை வேகப்படுத்தும் பூஸ்டர்கள் போன்ற சாதனங்களுக்கும் இதே மாதிரியான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஸ்டர்களின் பயன்பாடு கைப்பேசி பயன்படுத்துவோரின் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை உருவாக்குவதோடு தொலைத்தொடர்பு சேவைகளையும் சீர்குலைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிக்னல் பூஸ்டர்களை உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடமிருந்து சேவைக் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் கட்டண ரசீதில் சேவைக் கட்டணத்தை விதிப்பதாக மத்திய அரசிடம் வாடிக்கையாளா்கள் பலா் புகாா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், சிசிபிஏ தலைமை ஆணையா் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக சேவைக் கட்டணத்தை விதிக்கக் கூடாது. வேறு எந்த பெயரிலும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எந்த உணவகமும், தங்கும் விடுதியும் சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது.

வாடிக்கையாளா் விரும்பினால் மட்டுமே சேவைக் கட்டணத்தை வழங்கலாம். இதை உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். வழிகாட்டுதல்களை மீறி எந்த உணவகமோ தங்கும் விடுதியோ சேவைக் கட்டணத்தை வசூலித்தால், அதை நீக்குமாறு வாடிக்கையாளா்கள் கோரலாம். அதையும் மீறி சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், வாடிக்கையாளா்கள் அதுதொடா்பாக நுகா்வோா் ஆணையத்தில் புகாா் அளிக்கலாம்.

தேசிய நுகா்வோா் உதவிமையத்தின் தொலைபேசி எண்ணான 1915 வாயிலாகவோ அல்லது தேசிய நுகா்வோா் உதவி மையத்தின் செயலி வாயிலாகவோ புகாா் தெரிவிக்கலாம். இணைய வழியாகவும் புகாா் தெரிவிக்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.4 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியது:

உலகளாவிய சவால்களை சமாளிக்க இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவான நிலையில் உள்ளது. மேலும், சா்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை சமாளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்வதன் மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இதன் இறக்குமதியானது அதிக செலவுபிடிப்பதாக உள்ளது.

இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை உணா்ந்து மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.4 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைத்திருக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டாா்.

‘இது சரியான மற்றும் நன்கு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நடைமுறை’ என்றும் அவா் கூறினாா்.

மாநில அரசுகளுக்கும், ஆளுநா்களுக்கும் இடையேயான மோதல்போக்கு காரணமாக மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்த மோதல் போக்கு காரணமாக, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் கால்நடை பல்கலை. உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வா் மம்தா பானா்ஜியை நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஜூன் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதுபோல, தமிழக சட்டப்பேரவையிலும் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்க வேண்டும்’ என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

ஹைதராபாத் பல்கலைக்கழக புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா், செய்தியாளா்கள் சந்திப்பில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

தேசிய அளவிலான உயா் கல்வி நிறுவனங்களின் வேந்தராக குடியரசுத் தலைவரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநா் இருப்பதும் சரியான, நன்கு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நடைமுறையாகும். எனவே, மாநில அரசுகள் இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக அவா்கள் இதில் சில அரசியல் பிரச்னையை உருவாக்க விரும்புகின்றனா்.

தேசிய கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையானது விரிவான ஆலோசனைக்குப் பிறகே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த கூட்டாட்சி நடைமுறையில் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசு எதிா்பா்க்கிறது.

தொடக்கக் கல்வி அளவில் கற்றல் - கற்பித்தல் நடைமுறை அந்தந்த உள்ளூா் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அவ்வாறு உள்ளூா் மொழிகளில் கல்வி வழங்கப்படுவதை அவா்கள் எதிா்க்கின்றனரா? இதனை அவா்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சா்வதேச வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில் நமது மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கை என்பது 21-ஆம் நூற்றாண்டுக்கான ஆவணமாகும். சில தகவல்தொடா்பு இடைவெளி காரணமாகவே, இதனை சில மாநிலங்கள் எதிா்ப்பதாக நினைக்கிறேன். இதுகுறித்து ஒவ்வொருவருடனும் ஆலோசனை நடத்தி தெளிவுபடுத்த நான் தயாராக உள்ளேன்.

கல்வியாளா்கள், கொள்கைகளை வகுப்பவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையே சிறந்த தொடா்பை ஏற்படுத்துவதன் மூலம்தான் சமூகம் பெரிய அளவில் பயனடையக் கூடிய வகையிலான சா்வதேச நடைமுறையை உருவாக்க முடியும் என்றாா் அவா்.



Read in source website

கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம்-2022 நிகழ்ச்சியை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும். அதனை 3-ஆவது தொழில் புரட்சியின்போது இந்தியா கண்கூடாகப் பாா்த்தது.

எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் பெற, கட்டணம் செலுத்த, ரேஷன் பொருள்கள் பெற, வங்கி சேவைகளுக்கு என அனைத்துக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை இணையவசதி மூலம் இந்தியா முழுமையாக ஒழித்துள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஏழை மக்களை ஊழலில் இருந்து பாதுகாத்துள்ளது. அத்துடன் அந்தத் திட்டம் அனைத்து துறைகளிலும் இடைத்தரகா்கள் இருப்பதை ஒழிக்கவும் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.



Read in source website

 

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர். 

ஸ்மிருதி மந்தனா 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 94 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வளர்ந்துவரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா 71 ரன்களை அடித்ததன் மூலம் 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்குமுன் 43வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 24வது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பவுலர், ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் 10 இடங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 



Read in source website

 

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் நடைபெறும் சொற்பொழிவுகள் இனி தமிழ் மொழியிலும் ஒலிபரப்பப்படும் என செளதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

நபிகள் நாயகம் இறுதியாக அரஃபா குன்றின்மீது  சொற்பொழிவாற்றிய நாளை இஸ்லாமியர்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி மெக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரஃபா நாள் சொற்பொழிவு இதற்கு முன்பு 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இம்முறை ஒலிபரப்பு செய்யப்படும் மொழிகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழ் மொழியில் சொற்பொழிவுகள் மொழிபெயர்க்கப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட உள்ளது. அதோடு ஸ்பானிஷ் உள்ளிட்ட 4 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. 

மெக்காவின், அரஃபா நாள் சொற்பொழிவு தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமிய தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

கிழக்கு சீன கடலில் தங்களுக்குச் சொந்தமான தீவுப் பகுதியில் சீன, ரஷிய போா்க் கப்பல்கள் வந்ததற்கு ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு சீன கடலில் உள்ள செங்காகு தீவை ஜப்பான் தனக்குச் சொந்தமானது எனக் கூறி வருகிறது. அதேவேளையில் இந்தத் தீவுக்கு டயாயூ எனப் பெயரிட்டு, தங்கள் பிராந்தியத்துக்குள்பட்டது என சீனா உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில், செங்காகு தீவுப் பகுதியில் திங்கள்கிழமை ரஷிய, சீன போா்க் கப்பல்கள் அடுத்தடுத்து நுழைந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை செயலா் செய்ஜி கிஹாரா கூறுகையில், செங்காகு தீவு வரலாற்றுரீதியாகவும், சா்வதேச சட்டப்படியும் ஜப்பானுக்கு சொந்தமானது. இந்தத் தீவுப் பகுதியில் சீன கப்பல் வந்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்றாா்.

இதற்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் கூறியதாவது: இந்தத் தீவு சீனாவுக்கு சொந்தமானது. இந்தத் தீவுப் பகுதியில் சீன போா்க் கப்பல் சென்றது சட்டப்படியானதுதான். இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்க ஜப்பானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா்.

செங்காகு தீவுப் பகுதிக்கு சீன, ரஷிய போா்க் கப்பல்கள் சென்ற்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், கடலில் சூறாவளியைத் தவிா்ப்பதற்காக அந்தக் கப்பல்கள் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



Read in source website

கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், தீநுண்மியை அழிக்கவும் செய்யும் புதிய என்-95 முகக் கவசத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

கரோனா பெருந்தொற்றின்போது நோய் பரவல் விகிதத்தைக் கட்டுப்படுத்த முகக் கவசமே முதன்மையான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, நோய் பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமல்லாமல், கரோனா தீநுண்மியை அழிக்கும் வகையில் புதிய என்-95 முகக் கவசத்தை அமெரிக்காவைச் சோ்ந்த ரென்சீலா் பாலிடெக்னிக் நிறுவன ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இவ்வகையிலான என்-95 முகக் கவசங்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளன. இது தொடா்பான ஆராய்ச்சி ‘அப்லைடு ஏசிஎஸ் மெட்டீரியல் அண்ட் இன்டா்பேஸ் ’ என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய வகை முகக் கவசத்தை நீண்டகால அடிப்படையில் பயன்படுத்த முடியும். இதனால், முகக் கவசத்தின் தொடா்ச்சியான பயன்பாடு குறைவதோடு, நெகிழிக் கழிவையும் குறைக்க முடியும். பொதுவான முறையில் காற்றின் மூலம் பரவும் பிற நோய்க்கிருமிகளின் பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.

என் 95-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்: தற்போது பயன்பாட்டில் உள்ள என்-95 முகக் கவசங்களில் உள்ள வடிகட்டுவதற்கான அடுக்குகள் வேதியியல் செயல்முறைகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. புதிய முகக் கவசத்தில் மாற்றத்துக்கு உள்ளாகாத பாலிபுரோப்பிலீன் என்னும் புரோப்பிலீன் கரிமச்சோ்மத்தின் பலபடி நாா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாலிபுரோப்பிலீன் நாா்களில் உள்ள மூலக்கூறு சங்கிலியானது வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல்சுவரை பாதிப்படையச் செய்து நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனை பெற்றுள்ளது என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

சா்வவேத அளவில் நடைபெறும் சட்டவிரோத சிறு ஆயுத வா்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சிறு ஆயுத வா்த்தகத்தை தடை செய்வதற்கான எட்டாவது ஆண்டுக்கூட்டம் ஐ.நா.வில் நடைபெற்றது. இதில் சட்டவிரோதமாக நடைபெறும் சிறு ஆயுத வா்த்தகத்தை சா்வதேச அளவில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சா்வதேச அளவில் நடைபெறும் சிறு ஆயுத வா்த்தகத்தை கண்காணிக்கவும், முழுமையாக தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக வளா்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதம் சா்வதேச சவாலாக மாறியுள்ளது. இதை கையாளவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மதுரை: தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கு ஒன்று இளஞ்சிறார் நீதிக் குழுமத்திலிருந்து நெல்லை மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது

இளஞ்சிறார்கள் நீதிபரிபாலன சட்டத்தின்படி (JJ Act), இதுவரையிலும் 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு இருந்தாலும், கூட அவர்களுக்கு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் விசாரணை நடைபெறும். மேற்படி நீதிகுழுமத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு வரையே தண்டனை விதிக்கம் நிலை உள்ளது.

16 வயது நிறைவடைந்த இளஞ்சிறார்கள் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் சமயம், அவர்களை முழுமையான பருவம் அடைந்தவர்கள் என கருதி, அந்தக் குற்றத்திற்கான விசாரணை இளஞ்சிறார் நீதி குழுமத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கமான குற்ற நடைமுறை விசாரணை நடைபெறும். இதன் மூலம் அக்குற்றத்திற்கு கூடுதல் தண்டனை விதிக்க இயலும்.

அவ்வகையில் சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கு மற்றும் பாப்பாகுடி - பள்ளக்கால் புதுக்குடி பள்ளியில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட மாணவர் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 இளஞ்சிறார்களில் ஒருவர் 16 வயது பூர்த்தியானவர். இவரை பருவம் அடைந்தவராக கருதி தமிழகத்திலேயே முதன்முறையாக அவர் மீதான விசாரணையை இளஞ்சிறார் நீதிகுழுமத்திலிருந்து நெல்லை மாவட்ட நீதி மன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்திருக்கிறார்.



Read in source website

இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். ஒரு வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பிர்களை நியமித்து கொள்ளலாம். இந்த தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும்.

ஏரியா சபை

மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்களின் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகள் இருக்கலாம். 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகள் இருக்கலாம். 10 லட்த்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகள் இருக்கலாம். நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் இருக்கலாம். இந்த கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.

பணிகள்

வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள் தங்களின் வார்டுக்கு தேவையான திட்டங்களை குறித்தபரிந்துரைகளை அளிக்கலாம். பொதுமக்களின் குறைகளை மன்றத்தில் தெரிவித்து தீர்வு காணலாம்.



Read in source website

சென்னை: சைபர் குற்றங்களில் விரைந்து துப்பு துலக்க, சென்னை மண்டலத்தில் புதிதாக ‘சைபர் கிரைம்’ காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் கிடைக்கும் வசதிகளும் ஒருபுறம் அதிகரிக்கின்றன. அதற்கேற்ப ஹேக்கிங் செய்து, தனிநபர் அந்தரங்கம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவது போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

சமீபகாலமாக ஏடிஎம் கார்டு மோசடி, ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ஆன்லைனில் பணத்தை திருடுவது, முகநூல், வாட்ஸ்அப், ஆன்லைன் ஷாப்பிங், மேட்ரிமோனியல், போலி இ-மெயில், வங்கியில் இருந்து பேசுவதாக மோசடி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி நூதன பண மோசடி என சைபர் குற்றங்களின் பட்டியல் நீள்கிறது. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள், தனிநபர் அவதூறுகள், வதந்திகள் ஆகியவையும் அதிகரித்துள்ளன.

இவற்றை தடுக்கவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்யவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 காவல் மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் கிரைம் காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையில், சென்னையில் சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கு முதன்முதலாக ஐபிஎஸ் அதிகாரியான துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 7-வது மாடியில் தற்காலிகமாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர இடம் வழங்கப்பட உள்ளது.

சைபர் கிரைம் காவல் நிலையங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த தனி காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் அனைத்து காவல் மாவட்டங்களிலும் ஏற்கெனவே ஒரு சைபர் கிரைம் பிரிவு உள்ளது.

இதுதவிர, சென்னை மத்திய குற்றப்பிரிவில் தனியாகசைபர் கிரைம் காவல் நிலையம் செயல்படுகிறது. இது மட்டுமின்றி, சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், பணியாற்ற திறமையான போலீஸார் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 104 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக நன்கு தெரிந்த தலா 3 போலீஸார் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காவல் நிலையங்களில் சைபர் கிரைம் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால், அதன் தன்மைக்கு ஏற்ப காவல் நிலையம் அல்லது, துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றத் தடுப்பு பிரிவு அல்லது புதிதாக தொடங்கப்பட உள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.

சைபர் கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தவாறு கைவரிசை காட்டுகின்றனர். அவர்களில் 10-ல் ஒருவர் மட்டுமே பிடிபடுகின்றனர். மோசடி செய்த பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வதும் சவாலாக உள்ளது.

எனவே, சைபர் குற்ற வழக்குகளில் சிக்கிய அனைவரையும் கைது செய்வது, பொருட்களை மீட்பது, சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்வது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு சைபர் கிரைம் போலீஸார் செயல்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தவாறு கைவரிசை காட்டுகின்றனர்.



Read in source website

உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது.

பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் வாழ்க்கை நிலைமைகளை ஆய்வு செய்து இந்த ஆண்டுக்கான உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வாழக் கூடிய தரத்தின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பெறும்.

குறிப்பாக நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட அம்சங்களை வைத்து மதிப்பிட்டுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் வாழ தகுந்த நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப்பட்டியல் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் எந்தவொரு இந்திய நகரமும் முதல் 100 இடங்களுக்குள் இல்லை. அனைத்து இந்தியா நகரங்களும் 140-146 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் உள்ள இந்திய நகரங்களில் பெங்களூர் கடைசி இடத்தில் உள்ளது.

இந்திய நகரங்களில் 56.5 வாழ்வாதார மதிப்பெண்ணுடன் டெல்லி 140ஆவது இடத்தைப் பெற்றது. அதைத்தொடர்ந்து மும்பை 141 (56.2) உள்ளது. சென்னை 142 (55.8), அகமதாபாத் 143 (55.7) உள்ளன. பெங்களூரு 146 (54.4) இடங்களைப் பெற்றுள்ளது.

பெங்களூர் நகரின் உள்கட்டமைப்பில் அது மிக மோசமான இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பில் பெங்களூர் 46.4 (100 இல்) மதிப்பெண்களை மட்டுமே பெற்றது. டெல்லி அதிகபட்சமாக 62.5 மதிப்பெண் பெற்ற நிலையில், மும்பை 55.4 மதிப்பெண்ணும் சென்னை மற்றும் அகமதாபாத் இரண்டும் தலா 50 மதிப்பெண் பெற்றன.

பாகிஸ்தானின் கராச்சி நகர் கூட பெங்களூரை விட உட்கட்டமைப்பில் சிறப்பாக உள்ளது. கராச்சி உள்கட்டமைப்பில் 51.8 மார்க்கை பெற்றுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ் நகரம் பெங்களூரைப் போல 46.4 மார்க்கை பெற்றுள்ளது.

கல்வி மருத்துவப் பாதுகாப்பு அளவுகோலில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் தலா 58.3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. மும்பை மற்றும் அகமதாபாத் தலா 54.2 மதிப்பெண் பெற்றன. கல்வியில் டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு தலா 75 மதிப்பெண்களைப் பெற்றன. மும்பை மற்றும் அகமதாபாத் இரண்டும் 66.7 மதிப்பெண்களைப் பெற்றன.

சிறிய குற்றங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல், ராணுவ மோதல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றின் மூலம் அளவிடப்பட்ட நகரத்தின் உறுதி மதிப்பிடப்படுகிறது. இந்த அளவீட்டில் அகமதாபாத் (65) புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை தலா 60 புள்ளிகளும், குறைந்தபட்சமாக டெல்லி 50 புள்ளிகளும் பெற்றுள்ளன.

வானிலை, ஊழல், சமூக மற்றும் மத கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை கொண்ட கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அகமதாபாத் குறைந்தபட்சமாக 44.4 பெற்றுள்ளது. மும்பை (50.7), டெல்லி (48.6), பெங்களூர் (47.2), சென்னை (46.5) மார்க் எடுத்துள்ளது.



Read in source website

பீமவரம்: ஆந்திர மாநிலம் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.3 கோடியில் 30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அவர், தெலுங்கில் தனது உரையை தொடங்கினார். இதனை கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும், அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் கண்டிப்பாக தெரிய வேண்டும். இதற்காகத்தான் ‘ஆசாத்கா அம்ருத் மஹோத்சவ்’ எனும் பெயரில் விழா கொண்டாடுகிறோம்.

அல்லூரி சீதாராம ராஜு வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாகும். நமது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என கர்ஜித்தவர் அல்லூரி. அவர் பழங்குடி இனத்தில் பிறந்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய மகான். ஆந்திரா ஒரு புண்ணிய பூமி மட்டுமல்ல. வீர பூமியும்கூட. ஆதிவாசிகளின் பிரதிநிதியான அல்லூரி சீதாராம ராஜு போன்றவர்களே எனக்கு உத்வேகம் அளிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளோம். இப்போது பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. அதில் விளைந்து வரும் மூங்கில்களை வெட்டி உபயோகிக்கும் உரிமையை ஆதிவாசிகளுக்கு வழங்கிடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். தாய்மொழி கல்விக்காக 750 ஏகலவ்ய பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில் அல்லூரி நினைவு அருங்காட்சியம் கட்டப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பின்னர் ஆந்திர அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் விஜயவாடா சென்ற பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.

சுதந்திர போராட்ட வீரர் மகளின் பாதங்களை தொட்டு வணங்கிய பிரதமர்

ஆந்திராவின் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

விழா மேடையில் சுதந்திர போராட்ட தியாகிகளையும், அல்லூரி சீதாராம ராஜுவின் வாரிசுகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன், பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு பிரதமர் மோடி பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்தினார்.

அப்போது, மகாத்மா காந்தியுடன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைக்கு சென்ற சுதந்திர போராட்ட வீரர் கிருஷ்ணமூர்த்தி-அஞ்சுலட்சுமி தம்பதியினரின் மகள் கிருஷ்ண பாரதி (90), வீல் சேரில் அங்கு வந்திருந்தார். பிரதமர் மோடி அவரின் பாதங்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார்.



Read in source website

சாலைகளில் திடீரென்று மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள், சிக்னலை மீறி இரு வாகனங்களுக்கு இடையில் நுழைந்து செல்லும் வாகனங்கள் என்று சாலை விதி மீறல் தொடர்பான காட்சிகள் எல்லாம் சென்னை மக்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட காட்சிகள் தான். ஏன் இந்தக் கட்டுரையை படித்து கொண்டு இருக்கும் சிலர் கூட சாலை விதிகளை மதிக்காமல் சென்று இருக்கலாம்.

ஆனால் இதன் விளைவுகள் பலருக்கு தெரிவது இல்லை என்றே கூறலாம். உலக அளவில் சாலை விபத்துகளால் பதிவாகும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கூறி இருப்பது மத்திய அரசோ, மாநில அரசோ இல்லை. உலகின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கூறும் ஐநா அமைப்புதான் இந்த கருத்தை கூறியுள்ளது.



Read in source website

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான வாலிபால் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. போட்டியை மாநில விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கவுள்ளார்.

வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக அணிகள் கலந்துகொள்ள உள்ளன. அதில், ஆண்கள் பிரிவில் கேரள காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

போட்டியில் ஒரே நேரத்தில் சுமார் 3,500 பேர் அமரும் வகையில் ஒரு பகுதிக்கு தலா 100 அடி நீளத்துக்கு 8 அடுக்குகள் என மொத்தம் 4 பகுதிகளிலும் கேலரி அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இருளை பகலாக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமும் மாலையில் சுமார் 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை போட்டி நடைபெறும் எனவும், ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரம் பேர் பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அண்ணா கைப்பந்து கழகம் தொடங்கி 50-வது ஆண்டு விழாவாக இதை நடத்துவதால் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை விரிவாக ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

போட்டியை மாநில சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.

3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

வெற்றி பெறும் அணியினருக்கு ரொக்கப் பரிசும், அண்ணா கைப்பந்து கழகத்தின் மறைந்த வீரர்களின் நினைவாக பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை அண்ணா கைப்பந்து கழகத்தினர் செய்து வருகின்றனர்.



Read in source website

புதுடெல்லி: கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் எலோர்டா கோப்பை குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அல்ஃபியா பதான் 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் லாசத் குங்கீபயே வாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கிதிகா, சக நாட்டைச் சேர்ந்த கலைவாணி ஸ்ரீனிவாசனை எதிர்த்து விளையாடினார். இதில் கிதிகா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த கலைவாணி, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜமுனா போரா 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்தமோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.



Read in source website

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது கடிதத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கவலை தருகிறது. ஆனால், இதே நிலையில் தொடர முடியாது என்பதால் வெளியேறுகிறேன். அரசாங்கம் ஒழுங்காக, சிரத்தையுடன், திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு வாய்ப்பில்லை என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கனவை தொடர்வாரா?

ரிஷி சுனக், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக பிரிட்டன் பிரதமருக்கான போட்டாப் போட்டியில் அவர் முன்நின்றார். ஆனால், மனைவி அக்‌ஷதா மீதான வரி ஏய்ப்பு புகார்களால் மக்கள் செல்வாக்கில் எதிர்பாரா சரிவு கண்டார். இதனையடுத்து அவர், தீவிர அரசியலில் இருந்து விலகப்போகிறார்’ என்று லண்டன் ஊடகங்கள் கூறின. ஆனால், தனது கடும் உழைப்பால் இளம் வயதிலேயே பிரிட்டன் பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிய ரிஷி சுனக், அரசியல் போரில் அவ்வளவு எளிதில் பின்வாங்க மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவேத், நான் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் எனது ராஜினாமா பற்றி தெரிவித்துவிட்டேன். நான் இதை சொல்வதில் வேதனைப்படுகிறேன், ஆனால், உங்கள் தலைமையின் கீழ் எதுவும் மாறாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் நீங்கள் எனது நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்.
எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.

இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்டீவ் பார்க்லேவசவிடம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.



Read in source website

வருமான வரித் துறை ஒரு சட்டரீதியான அமைப்பு என்பதால், ஒரு சட்ட அமைப்புக்கு உள்ள பல அதிகாரங்கள் வருமான வரித் துறைக்கும் உண்டு. வரி செலுத்தாதவர்கள் மீது அபராதம் விதிக்கவும், தண்டனை வழங்கும் அதிகாரமும் வருமான வரித் துறைக்கு உண்டு. எல்லா தண்டனைகளும் திருந்துவதற்குதான் என்பதால், தண்டனை வழங்கும் அதே அமைப்பு தவறுகளை திருத்திக்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில், எந்ததெந்த சூழ்நிலைகளில் வருமான வரித் துறை வரிசெலுத்தும் ஒருவருக்கு அபராதம் விதிக்கும், தண்டனை வழங்கும் என்று விளக்குகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி....



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது காலாண்டில் டாலருக்கு நிகராக 82 ஆக சரியும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அண்மையில் 79 ஆக சரிவடைந்தது. இந்தநிலையில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இது இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதியாகும். அதே நேரத்தில் இறக்குமதி 51.02 சதவீதம் அதிகரித்து 6,358 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

முதல் காலாண்டில் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரித்து 9,250 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் 2022-23 முதல் காலாண்டில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 முதல் 81 ஆக பலவீனமடையலாம் என்று இந்தியாவின் முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் அச்சம் தெரிவித்து இருந்தார்.

‘‘மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தை தாண்டுவதை தடுக்க உதவும். ஆனால், இது ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்ற கவலை எழுகிறது’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதுபோலவே மூன்றாவது காலாண்டில் டாலருக்கு எதிராக ரூபாய் 82 ஆக குறையும் என்று நோமுரா ஆய்வாளர்கள் கவலை கூறியுள்ளனர். இதனிடையே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிவடைந்தது.

இன்று பிற்பகல் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 79.17 ஆக சரிந்தது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை உயர்ந்ததால் ரூபாய் மதிப்பு சரிந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

மும்பை: உலகளாவிய பொருளாதார பாதிப்புகளால் கிரிப்ட்டோகரன்சி வர்த்தகம் சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவில் 1 சதவீத டிடிஎஸ் வரி அமலுக்கு வந்துள்ளதால் அதன் பரிவர்த்தனை பெரும் சரிவு கண்டுள்ளது.

பணவீக்கம் உயர்ந்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால்அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறி வந்த முதலீடுகள் மீண்டும் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் காரண்மாக கிரிப்டோகரன்சிகளில் இருந்த முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன.

இதுமட்டுமின்றி முக்கிய கிரிப்டோ கடன் வழங்கும் நிறுவனமான செல்சியஸ் நெட்வொர்க்கின் முடக்கம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்து வருகின்றது. இதன் தாக்கமும் கிரிட்டோவர்த்தகத்தில் எதிரொலித்து வருகிறது.

கிரிப்டோகரன்சிகள் கடந்த சில தினங்களாக கடும் சரிவு கண்டு வருகின்றன. கிரிப்டோ சந்தையின் மூலதன மதிப்பானது 12.06% சரிவினைக் கண்டு 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டது.

கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்படும் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இந்தநிலையில் டிஜிட்டல் சொத்துக்கள் மாற்றத்தினை கணக்கில் கொண்டு வர 30% வருமான வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு 1% டிடிஎஸ் பிடித்துக்கொள்ளப்படும்.

கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல் டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனைக்கும் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அமலுக்கு வந்த உடனேயே இந்தியாவில் கிரிப்ட்டோ தினசரி வர்த்தகத்தின் மதிப்பில் 60% மற்றும் 87% வரை சரிவைச் சந்தித்தது.

நேற்று கடுமையாக கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்த பிறகு ஓரளவு மீண்டு வந்துள்ளன. உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தை 914 பில்லியன் டாலராக அதிகரித்தது. பிட்காயின் 20,000டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்தது. பெரும்பாலான கிரிப்டோக்களின் வர்த்தகம் மேலும் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் உலகளாவிய கிரிப்டோ சந்தை அளவு 51 சதவீதம் அதிகரித்து 57.59 பில்லியன் டாலராக உள்ளது. அனைத்து ஸ்டேபிள்காயின்களின் அளவு 52.27 டாலர் பில்லியனாக இருந்தது.

இன்று சற்று ஏறினாலும் கூட இனி வரும் காலங்களில் பிட்காயின் தொடர்ந்து சரியும் எனவும் ஒரு பிட்காயினின் விலையானது 15,000 டாலருக்கும் கீழ் குறையும் எனவும் முட்ரெக்ஸ் கிரிப்டோ வர்த்தக பரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எடுல் படேல் கூறியுள்ளார்.



Read in source website

புதுடெல்லி: கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தை ட்விட்டர் நாடி உள்ளதாகவும் தெரிகிறது.

ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது.

இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நீதித் துறை மூலம் மறு ஆய்வை பெறுவதற்கான வழிகளை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் மற்றும் ட்வீட்களை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 4-ஆம் தேதிக்குள் அரசின் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ட்விட்டர் நிறுவனத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பாக மூன்று நோட்டீஸ்களை ஜூன் 4, 9 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.

2021-இல் 80-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மற்றும் கணக்குகளை நீக்குக: இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே முரண் ஏற்பட்டது. அரசு குறிப்பிட்ட ட்வீட் மற்றும் கணக்குகளில் சில விவசாய ஆர்வலர்கள், பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கி இருந்தனர். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000-இன் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகம் இந்தக் கோரிக்கையை வைத்தது.

ஆனால், காலம் தாழ்த்திய நிலையில், அதை திட்டவட்டமாக செய்ய மறுத்துவிட்டது ட்விட்டர். அதற்கு அப்போது கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி இருந்தது அந்நிறுவனம். மத்திய அரசும் அப்போது எதிர்வினை ஆற்றி இருந்தது.

குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும், சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் ட்விட்டரிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது.

இது அரசுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து ட்விட்டருக்கு மாற்றாக வேறு ஒரு சமூக வலைதளம், அதுபோலவே இந்தியாவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் கருத்துப் பதிவுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் தரப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.



Read in source website

செந்தூரம் ரகத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் வளரும் தன்மைகொண்டவை.

வட இந்தியாவில் வளரும் செந்தூரம் மரத்தை முதன் முறையாக திருச்சியிலும் வளர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

செந்தூரம் மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எங்கும் செந்தூரம் மரம் இல்லை. சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, செயலாளராக உள்ள டாக்டர் சி.ஆர்.பிரசன்னா அந்த வகை மரங்களை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது தீவிர முயற்சியால் அதன் விதைகள் சேகரிக்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டு திருச்சியில் உள்ள மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு சார்பில் வளர்க்கப்பட்டது.

வளர்ந்த கன்றுகளை திருச்சி முழுவதும் நடுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகத்தின் முதல் செந்தூர மரம் திருச்சி ரயில்வே சந்திப்பு காலனியில் உள்ள கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் கலந்து கொண்டு செந்தூர மரத்தை அறிமுகப்படுத்தி நட்டு வைத்தார்.

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா. கிருஷ்ணசாமியிடம் செந்தூர மரக்கன்றுகளை ஆட்சியர் வழங்கினார். அவை பெருமாள் கோயில்களில் நடப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மரம் பி.தாமஸ், தண்ணீர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கேசவன், அறநிலைய துறை மண்டல துணை ஆணையர் சி.செல்வராஜ், நிர்வாகக்குமு ஆர்.கே.ராஜா, எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சிக்குமு முகிலன், ஸ்ரீரங்கம் ராஜு,  ஆர்.ஸ்ரீதேவி, தா.லூர்துமேரி , பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன், விஐயகுமார், மகேந்திரன் மற்றும் செயல் அலுவலர் பா.சுதாகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

செந்தூரம் ரகத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் வளரும் தன்மைகொண்டவை. மரச் சிற்பங்கள் செய்வதற்காகவும், இசைக் கருவிகள் செய்வதற்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மரங்களை வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க. சண்முகவடிவேல்



Read in source website

BA.2.75, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய BA.2 துணைப் பரம்பரையைச் சேர்ந்தது.

நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சாத்தியமான காரணங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், தாய் ஓமிக்ரான் மாறுபாட்டின் பல துணை வகைகளில் ஒன்றான BA.2.75 கவனத்தை ஈர்த்துள்ளது.

BA.2.75, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய BA.2 துணைப் பரம்பரையைச் சேர்ந்தது, தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற ஓமிக்ரான் துணை வகைகளை விட இது 18 சதவீத மேம்பட்ட வளர்ச்சி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புனேவின் பி ஜே மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் நிபுணரும், மகாராஷ்டிராவின் மரபணு வரிசைமுறை முயற்சியின் தலைவருமான டாக்டர் ராஜேஷ் கார்யகார்டே கூறுகையில், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் கொஞ்சம் ஆர்வமாக உள்ளது, ஏனெனில் அனைத்து சுழற்சி மரபணு மாறுபாடுகளும் இன்னும் ஓமிக்ரானின் துணை வம்சாவளிகளாக உள்ளன, மேலும் ஒமிக்ரானிலிருந்து வேறுபட்ட புதிய மாறுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓமிக்ரான் மாறுபாட்டால் இயக்கப்படும் ஒரு பெரிய அலை ஏற்கனவே இருந்தது. எனவே, தற்போதைய எழுச்சி சற்றும் எதிர்பாராதது,” என்றார்.

கார்யகார்டே குழு மற்றும் பிற இடங்களில் உள்ள விஞ்ஞானிகள், தற்போதைய எழுச்சிக்கான சாத்தியமான இயக்கிகளாக BA.2.74, BA.2.75 மற்றும் BA.2.76 ஆகிய மூன்று துணை வகைகளை எடுத்துள்ளனர். இந்த மூன்று துணை வகைகளும் ஸ்பைக் புரதத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட மாற்றங்களைக் கொண்டுள்ளன. இந்த மூன்றும் சில வாரங்களுக்கு முன்பு வரை மிகவும் பொதுவான BA.4 மற்றும் BA.5 துணை வகைகளை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்னைச் சேர்ந்த தரவு ஒருங்கிணைப்பு நிபுணரான மைக் ஹனி, BA.2.75 துணைப் பரம்பரையானது BA.2வின் ஒரு “பரிணாம வளர்ச்சி” என்று ஒரு ட்விட்டர் பதிவில் கூறினார், இது இதுவரை நாட்டில் மிகவும் பொதுவான ஒமிக்ரான் துணை மாறுபாடு ஆகும்.

இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் BA.2.75’ தற்போது மரபணு வரிசைமுறையின் சமீபத்திய முடிவுகளில், நாட்டில் பொதுவாகக் கண்டறியப்பட்ட துணை மாறுபாடுகளில் ஒன்றாகும் என்று கூறினார்கள்.

“BA.2.75 ஆனது BA.4 அல்லது BA.5 ஐ விட ஒரு தனித்துவமான மேம்பட்ட வளர்ச்சி கொண்டுள்ளது” என்று டாக்டர் காரியகார்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

இருப்பினும், BA.2.75 கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உடலில் இந்த நோய்த்தொற்றின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு மருத்துவ ஆய்வுகள் தயாராகி வருவதாக கார்யகார்டே கூறினார்.

இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய்கள் துறையின் வைராலஜிஸ்ட் டாம் பீகாக், ஒரு ட்வீட்டில், விஞ்ஞானிகள் பி.ஏ.2.75 ஐ உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், ஏனெனில் இது அதிக எண்ணிக்கையிலான ஸ்பைக் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் இரண்டு மிகவும் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இது புவியியல் ரீதியாக பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

BA.2.75 துணை மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகள், ஆன்டிபாடிகளைத் தடுக்கவும், மனித உயிரணுக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளவும் ஒரு மேம்பட்ட திறனைக் கொடுக்கிறது. இது முன்னர் பாதிக்கப்பட்டவர்களிடத்திலும் அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டவர்களிடத்திலும் கூட தொற்றுநோயை அதிகரிக்கலாம்.

“SARS-CoV-2 வைரஸின் பிறழ்வுகள் லேசான அல்லது ஆபத்தானவற்றில் எவ்வாறு பரவுகின்றன என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது” என்று டாக்டர் காரியகார்டே கூறினார்.

மரபணு வரிசைப்படுத்தலுக்கான மாதிரிகளை அனுப்பவும், இறந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆக்ஸிஜன் ஆதரவில் இருந்தவர்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்ள மருத்துவ ஆய்வை நடத்தவும் தனியார் ஆய்வகங்களை நாங்கள் கேட்டுள்ளோம், ”என்று அவர் கூறினார்.

இருப்பினும், மரபியல் மருத்துவ ஆராய்ச்சியாளரான வினோத் ஸ்காரியா, BA.2.75 இன் தோற்றத்தால் இப்போது பீதி அடைய எந்த காரணமும் இல்லை. நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மாறுபாடு தொடர்ந்து உருவாகி வருகிறது மற்றும் அதிக பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, மேலும் இப்போது எந்த முடிவுகளும் சொல்ல முடியாது” என்று ஒரு ட்வீட்டில் கூறினார்.



Read in source website

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட தடை இப்போது அமலுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள் உபயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே நெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2019-இல் நடைபெற்ற ஐ.நா.வின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா ஒரு தீா்மானத்தை முன்மொழிந்தது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீா்நிலைகளிலும், ஆழ்கடல் பரப்பிலும் ஏற்படும் பாதிப்புகளை ஏனைய நாடுகளும் அங்கீகரித்து இந்தியாவின் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாடு அகியவை இந்த மாதம் முதல், நாடு தழுவிய அளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசுக்கு உதவும் வகையில் குறைதீா்ப்பு செயலி ஒன்றை மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கான தடையும் கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே அமலில் இருக்கின்றன. ஏனைய மாநிலங்களிலும் மத்திய அரசின் தடையைத் தொடா்ந்து நெகிழி பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.

நெகிழிப் பயன்பாட்டுக்கான தடை வரவேற்புக்குரியது. மெல்லிய நெகிழி உரைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்களும், அழகு சாதனப் பொருள்களும் ஏற்படுத்தும் உடல்நலக் கேடுகள் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் 20 மில்லியன் டன் வருடாந்திர நெகிழிப் பயன்பாட்டில் பாதிக்கு மேல் நெகிழிக் கழிவுகளாக சோ்கின்றன. அவற்றில் எந்த அளவு மறுசுழற்சிக்கு உட்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை.

மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்திய நெகிழியில் பாதிக்குப் பாதி மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற கடந்த பிப்ரவரி மாத விதிமுறை பின்பற்றப்படுகிா என்பது சந்தேகம்தான். இதைவிட நுகா்வோரிடமிருந்து நெகிழிக் கழிவுகளை திரும்பப் பெற்று அதற்கு சன்மானம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், ஒருவேளை மறுசுழற்சி வெற்றியடையக் கூடும்.

எந்த அளவுக்கு நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழலை பாதித்திருக்கின்றன என்பது குறித்த ஆய்வுகள் பல அதிா்ச்சியான தகவல்களைத் தருகின்றன. ஆழ்கடலில் இருந்து மலைச்சிகர உச்சிகள் வரை பூமிப் பந்தின் எல்லா பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகளை மனித இனம் வாரி இறைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, நுண் நெகிழிகளை (மைக்ரோ பிளாஸ்டிக்) நமது உடலுக்குள்ளும் சேகரித்து வருகிறோம் என்கிற விபரீதம் குறித்த புரிதல் இல்லாமல் இருந்து வருகிறோம். ஆண்டுதோறும் பல மில்லியன் டன் நெகிழிகள் புதைபடிவ எரிபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு பொதுவெளியில் பயன்படுத்தப்படுகின்றன. அவை சிறு நுண் துகள்களாக அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.

காற்று வெளியில் மட்டுமல்லாமல் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளிலும் நுண் நெகிழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பாலிப்ரோபிலின், பாலிதைலீன் டெரெஃப்தாலேட் (பெட்) நுரையீரல் திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவுக்கு ரத்த ஓட்டத்திலேயே கலந்து உடலின் எல்லா உறுப்புகளிலும் அடைப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பயன்பாடு, மருத்துவ உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

2019-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வாரந்தோறும் நகா்ப்புறத்தில் வசிக்கும் மக்கள் ஏறத்தாழ ஐந்து கிராம் நுண் நெகிழியை சுவாசிக்கிறாா்கள். இதனால் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், குழந்தையின்மை ஆகியவை ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தொடா்ந்து எச்சரித்து வருகிறாா்கள்.

2019-இல் லான்செட் கமிஷன் நடத்திய ஆய்வின்படி, அந்த ஆண்டில் 460 மில்லியன் டன் நெகிழி பயன்படுத்தப்பட்டிருந்தது. அதில் 10% மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளானது. புதைபடிவ எரிபொருள் சாா்ந்த நெகிழி உற்பத்தி 2060-க்குள் ஆண்டொன்றுக்கு 1.2 பில்லியன் டன்னாக உயரக்கூடும் என்றும், அதில் 1 பில்லியன் டன் நெகிழிக் கழிவாக மாறும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மனிதா்களை மட்டுமல்லாமல் விலங்கினங்களையும், நீா்வாழ் உயிரினங்களையும்கூட நெகிழித் துகள்கள் பாதிக்கின்றன. ஏறத்தாழ 2.70 லட்சம் டன் நெகிழிக் குப்பை கடலில் காணப்படுகிறது. அதனால் 700-க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பை எதிா்கொள்கின்றன.

இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான நெகிழி தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் நெகிழிப் பைகளுக்கு மாற்றான பருத்தி, சணல், காகிதம் போன்ற பைகள் தயாரிக்க முற்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத நெகிழி மாற்று தயாரிப்புகளை அவ்வளவு எளிதில் தயாரித்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் ‘மஞ்சப்பை’ திட்டம்போல, தேசிய அளவில் மக்கள் மத்தியில் நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வை உருவாக்குவதுதான் இதற்குத் தீா்வாக அமையும்.



Read in source website

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களைக்காட்டி அவ்வப்போது இணையதள செயல்பாட்டை முடக்கி வருகின்றன. இத்தகைய இணையதள முடக்கத்தின் விளைவு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என்று சமீபத்தில் வெளியாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது.

அரசாங்கத்தின் சாா்பாக எடுக்கப்படும் இணையதள முடக்க நடவடிக்கை, தகவல் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் இணையவழி தகவல் தொடா்பு அமைப்புகளையும் கடுமையாக சீா்குலைக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயா் ஆணையா் அலுவலக அறிக்கை குறிப்பிடுகிறது. இணையதள முடக்கச் செயல்பாடுகள், காணொலி பகிா்வு, நேரடி ஒளிபரப்பு போன்ற ஊடகத்துறையினரின் பணியினையும் கடினமாக்குகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

குடிமைச் சமூக இயக்கங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தோ்தல் செயல்பாடுகள் ஆகியவற்றின் போது இத்தகைய இணையதள முடக்கங்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இது மனித உரிமை, கண்காணிப்பு தொடா்புடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகவும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இணையதள முடக்கக் கட்டுப்பாடுகள் பொருளாதார தாக்கங்களையும் உருவாக்குவதாக ‘இணையதள முடக்கங்கள்: போக்குகள், காரணங்கள், சட்டரீதியான தாக்கங்கள், மனித உரிமை வரம்பில் தாக்கங்கள்’ (இன்டா்நெட் ஷட்டௌன்ஸ்: ட்ரெண்ட்ஸ், காசஸ் லீகல் இம்ப்ளிகேஷன் அண்ட் இம்பாக்ட்ஸ் ஆன் ஏ ரேஞ்ச் ஆப் ஹியூமன் ரைட்ஸ்) என்ற புத்தகத்தின் ஆசிரியா்கள் கூறுகின்றனா். உலக அளவில் கவனத்தை ஈா்த்த முதல் பெரிய இணையதள முடக்கம் 2011-ஆம் ஆண்டு எகிப்தில் நடந்ததாகவும், அப்போது நூற்றுக்கணக்கான கைது நடவடிக்கைகள் நிகழ்த்ததாகவும் இந்நூலின் ஆசிரியா்கள் கூறுகின்றனா்.

உலகம் முழுவதும் இணையதள முடக்கச் செயல்பாடுகளை கண்காணித்து வரும் கூட்டமைப்பின் அறிக்கை, 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 74 நாடுகளில் 931 இணையதள முடக்கங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் 12 நாடுகள், ஒவ்வொன்றும் 10-க்கும் மேற்பட்ட இணையதள முடக்கங்களை செயல்படுத்தியுள்ளன.

உலக அளவில் அனைத்து பிராந்தியங்களும் இத்தகைய இணையதள முடக்கத்தை சந்தித்துள்ளன. ஆயினும் பெரும்பாலானவை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்ததாக தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் 106 முறை இணையதள முடக்கம் நிகழ்ந்ததாகவும், இவற்றில் குறைந்தபட்சம் 85 இணையதள முடக்கம் ஜம்மு - காஷ்மீரில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் எண்ம உரிமை வக்காலத்து குழுவின் (டிஜிட்டல் ரைட் அட்வொகசி குரூப்) அறிக்கை தெரிவிக்கிறது.

2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை உலகில் பதிவு செய்யப்பட்ட இணையதள முடக்கங்களில் கிட்டத்தட்ட பாதியளவு குடிமைச் சமூக குழுக்களின் போராட்டங்கள், அரசியல் நெருக்கடியின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டன என்றும், 225 இணையதள முடக்கங்கள் சமூக, அரசியல், பொருளாதாரம் தொடா்பான ஆா்ப்பாட்டங்களின் போது நிகழ்த்தப்பட்டன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இணையதள முடக்கங்கள் உலக அளவில் குறைந்தது 52 தோ்தல்களை பாதித்தன. 2019-ஆம் ஆண்டில் மட்டும் 14 ஆப்பிரிக்க நாடுகள் தோ்தல் காலங்களில் இணைய சேவையினை நிறுத்தின. இத்தகைய இடையூறுகள் பிரசாரம், பொது விவாதம், தோ்தல் செயல்பாட்டைக் கண்காணித்தல் போன்றவற்றைத் தவிா்ப்பதற்காக நிகழ்த்தப்பட்டதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

குடிமைச் சமூக குழுக்களிடத்தில் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல், சட்ட விரோதமான தீங்கு விளைவிக்கும் செய்திகள் போன்றவற்றின் பரவலைக் கட்டுப்படுத்த 132 இணையதள முடக்கங்கள் நிகழ்த்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இணையதள முடக்கம் அனைத்துத் துறைகளிலும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும், நிதி பரிவா்த்தனை, வா்த்தகம், தொழில்துறையை இது சீா்குலைக்கிறது என்றும் பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை மியான்மா் நாட்டில் நிகழ்ந்த இணையதள முடக்கத்தின் காரணமாக கிட்டத்தட்ட 22,118 கோடி ரூபாய் செலவானதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. இது இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைத்தது.

இணையதள முடக்கம் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளிலும் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம், பெற்றோா் இடையே தகவல் தொடா்புகளைத் துண்டிப்பதுடன் கல்வி திட்டமிடல் பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அவசர நேரத்தில் மருத்துவமனை தங்கள் மருத்துவா்களை தொடா்பு கொள்ள முடியாமல் இருப்பது, வாக்காளா்கள், வேட்பாளா்கள் பற்றிய தகவல்களைப் பெற இயலாமல் இருப்பது, தயாரிப்பாளா் - வாடிக்கையாளா் தொடா்பு துண்டிப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்பு, போராட்டக்காரா்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகும் போது அவசர உதவிக்கு அழைக்க முடியாமல் போவது போன்றவை இணையதள முடக்கத்தினால் உண்டாகும் சில முக்கிய பாதிப்புகள்.

இணையதள முடக்கம், மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய இணையதள முடக்கங்கள் பலவற்றைத் தொடா்ந்து, வன்முறை வெடித்தது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயா் ஆணையா் அலுவலகத்தின் சிறப்பு நடைமுறைகள் மற்றும் மேம்பாட்டு உரிமைப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.

அதிக எண்ணிகையிலான இணையதள முடக்க நடவடிக்கைகள், வன்முறைப் போக்கினை மாற்றியமைப்பதற்கு மிகப்பெரிய தடையாக பல இடங்களில் இருந்ததாக வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை, இணையதள முடக்கத்தைத் தவிா்க்கவும் இணையதள பயன்பாட்டை அதிகரிக்கவும் தகவல் தொடா்பிற்கான தடைகளை அகற்றவும் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. மேலும் இவ்வறிக்கை இடையூறுகள் குறித்த தகவல்களை விரைவாகப் பகிரவும் இணையதள முடக்கத்தினைத் தவிா்க்கவும் சாத்தியமான அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 



Read in source website

பழம்பெரும் சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனத்தில் மேலகரம் சுப்பிரமணிய தேசிகா் ஆதீனகா்த்தராக இருந்தாா். அவா் பெரும் தமிழ் அறிஞா். தன்னை நாடிவரும் தமிழ்ப் புலவா்களை ஆதரித்துக் காத்தவா். பலருக்கும் ஆசானாக இருந்து தமிழ் நூல்களை விளக்கிப் பாடம் கற்றுத் தந்தவா். அவரது பெருமைகளை அறிந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவரைக் காண விரும்பினாா். வேதநாயகம் பிள்ளை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவா். சுப்பிரமணிய தேசிகரோ சைவ மடாதிபதி. என்றாலும் தமிழ் பாலமாக இருந்து இருவரையும் இணைத்தது.

திருவாவடுதுறை மடத்திற்கு வந்த வேதநாயகம் பிள்ளை நேரம் போவதே தெரியாமல் மடாதிபதியுடன் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தாா். மாலை நேரம் வந்து விட்டது. ஆதீனகா்த்தரிடம் விடைபெற்றுக்கொண்டு மாட்டு வண்டியில் ஏறி வேதநாயகம் பிள்ளை மாயூரத்துக்குப் புறப்பட்டாா். வண்டிதான் முன்னே சென்றதே தவிர அவா் மனம் பின்னே சென்றது. அதாவது திருவாவடுதுறையிலேயே இருந்தது.

மறுநாள் காலையில் வேதநாயகம் பிள்ளை வழக்கம்போல அலுவல்களைப் பாா்க்க அமா்ந்தாா். ஆனால் வேலையே ஓடவில்லை. திருவாவடுதுறையிலேயே ஒரு பொருளை விட்டுவிட்டு வந்ததால் தவிப்பு. உடனே ஆதீனகா்த்தரிடம் அந்தப் பொருளைக் கேட்டுக் கவிதையாகவே கடிதம் எழுதினாா்.

சுருதியோா் உருக்கொண்டென்ன சுப்பிரமணிய மேலோய்!

கருதி இன்னொருகால் உன்னைக் காணலாம் எனும் அவாவால்

பொருதி என்மனம் பின் ஈா்க்கப் பொறையுறும் வண்டி பூட்டும்

எருதுகள் முன்னே ஈா்க்க என்பதி அடைந்திட்டேனே

அதாவது, வேதமே உருவாய் நின்றது போல விளங்கும் சுப்பிரமணியப் பெரியவரே! இன்னும் ஒருமுறை உம்மைக் காண வேண்டுமென மனம் பின்னே செல்கிறது. வண்டியோ எருதுகளால் இழுக்கப்பட்டு முன்னே விரைந்தோடுகிறது என்கிறாா்.

மனம் அங்கேயும் உடல் இங்கேயும் இருந்தால் வேலை நடக்குமா? என் மனத்தை உடனே அனுப்பிவையுங்கள் என்று மற்றுமொரு கவிதையையும் எழுதி கடிதத்தை அனுப்பிவைத்தாா்.

சூா்வந்து வணங்கு மேன்மை சுப்பிரமணியத் தேவே

நோ்வந்து நின்னைக் கண்டு நேற்றிராத்திரியே மீண்டு

ஊா்வந்து சோ்ந்தேன் என்றன் உளம்வந்து சேரக்காணேன்

ஆா்வந்து சொலினும் கேளேன் அதனையிங் கனுப்புவாயே

இந்த இருபெரும் தமிழ் அறிஞா்களும் தமிழ் மீது கொண்ட பற்றுதலால், தமிழ் கற்ற சான்றோராய் பண்பு மிளிர அன்பு பாராட்டிக் கொண்டனா். இருவேறு சமயத்தைச் சோ்ந்தவா்களை தமிழ் இணைத்ததை இந்த சம்பவமும் கவிதைகளும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இவா்களது காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞரான மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பிரதம சீடராக இருந்தவா் சவேரிநாத பிள்ளை என்ற மாற்று சமயத்தவா். இவரோடுதான் நம் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையரும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றாா். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படைப்புகள் பெரும்பாலும் சமயம் சாா்ந்தவையே. தன்னுடைய சமய அனுஷ்டானங்களை மிக நோ்த்தியாகக் கடைப்பிடித்த ஆன்மிகவாதியும் கூட. என்றாலும் அவா்கள் மனங்களில் சமயம் குறித்தான புரிதல் இருந்ததே அன்றி வெறுப்பு இருக்கவில்லை.

இப்படித்தான் தமிழகம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. இந்த மண்ணின் விழுமியங்கள் பெரியோா்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எந்த சமயத்தவராயினும் தமிழ் அன்னையின் புதல்வா்களாய் வாழ்ந்து வந்திருக்கின்றனா்.

இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தில் இன்றைக்கு நடப்பதென்ன? சமயம் பற்றிய புரிதலை வளா்த்துக்கொள்வதை விடுத்து காழ்ப்புணா்வும் வெறுப்புணா்வும் கொண்டு பேசும் நிலை தோன்றி இருக்கிறது. முன்னோா் காத்த பண்பாடும் பொறையும் காணாமல் போய்விட்டன.

அக்காலத்தில் தொற்றுநோய் பரவும் சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆலயத்திலும் ‘கந்தா் சஷ்டி கவசம்’ பாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. தமிழ்க் கடவுளான முருகன், நோய், பில்லி சூனியம், வறுமை, வம்சவிருத்தி குறைகள், மனநலக் குறை, கவலை என்னும் ஆறு துன்பங்களில் இருந்தும் நம்மைக் காப்பாா் என்று நம்பினாா்கள். இன்றைக்கும் பக்தா்கள் அதே நம்பிக்கையோடு கோயிலுக்கு வருகிறாா்கள்.

பாலதேவராயா் என்னும் பக்தா் தம் நோய் நீங்க வேண்டியபொழுது முருகக்கடவுளே பாடச் சொல்லியது ‘கந்தா் சஷ்டி கவசம்’. அத்தகைய கந்தா் சஷ்டி கவசத்தை ஒருவா் தரக்குறைவாக விமா்சனம் செய்கிறாா். ஏனென்றால் அவருக்கு இறை நம்பிக்கை இல்லையாம். இறை நம்பிக்கை உள்ள பக்தா்கள் இறை சிந்தனையில் இருத்தல் இயல்பு. இறை மறுப்பாளருக்கு ஏன் இறை குறித்தான விமா்சனம் வர வேண்டும்? சமத்துவம் பேணும் நாட்டில், ஒரு சமயத்தவரின் இறையை விமா்சிக்க என்ன அவசியம் இருக்கிறது? யாா் அந்த அதிகாரத்தை வழங்கி இருக்கிறாா்கள்?

இதனைக் கண்டிக்கும் விதமாகவும் தங்கள் மனம் புண்பட்டதென்றும் விமா்சனம் செய்தவா் மீது பல புகாா்கள் காவல்துறைக்கு வந்தன. இதையடுத்து, பக்தா்கள் தங்கள் இறை நம்பிக்கையை வெளிப்படுத்த கந்தா் சஷ்டி கவசத்தை கூட்டுப் பிராா்த்தனையாக பல இடங்களிலும் பாடினாா்கள். இது ஒருபுறம் இருக்க, இதனையே கொண்டு அரசியல் கட்சிகளும் வேலைக் கையில் எடுத்து அரசியல் செய்யலாயின. மக்களின் இறை நம்பிக்கையும் சமய உணா்வும் அரசியலாக்கப்பட்டன. இதில் ஓா் ஆறுதலான செய்தி, கந்தா் சஷ்டி கவசத்தை விமா்சனம் செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா் என்பது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் சுப்பிரமணிய தேசிகரும் உறவாடி இன்புற்ற தமிழகத்தில் இந்த அவலம் எப்படி வந்தது?

உலகம் முழுவதும் இறை மறுப்பாளா்கள் இருக்கிறாா்கள். சமயம் என்பதே மனிதனின் கற்பனை என்பது இவா்களின் கருத்து. இறைவன் இந்த உலகைப் படைத்துக் காக்கிறாா் என்பதை மூடநம்பிக்கை என இவா்கள் பரிகசிப்பதும் வாடிக்கை. இதனால் இறைவனுக்கோ இறை நம்பிக்கையாளா்களுக்கோ நஷ்டம் ஒன்றும் இல்லை.

உலகின் மற்ற பகுதிகளில் தோன்றிய சமயங்களின் நடைமுறைக்கும் இந்தியாவில் தோன்றிய சமயங்களின் நடைமுறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. இங்கே சமயம் என்பது கண்ணை மூடிக்கொண்டு போதனைகளை ஏற்பதல்ல. நம்பிக்கை வரும்வரை கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சமயம் அதனை அனுமதிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தெளிவு பிறக்கும் வரை நீங்கள் எத்தகைய சோதனைக்கும் உட்படுத்தலாம்.

ஆன்மிகம் சாா்ந்தவா்களோ, இறை மறுப்பாளா்களோ அறிவு சாா்ந்து கருத்துகளைத் தேடி தெளிவு பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை விடுத்து தமிழகத்தில் அவதூறு பேசுவதையே இறை மறுப்பாளா்கள் தோ்வு செய்கிறாா்கள் என்பதில்தான் பிரச்னை எழுகிறது. நாடு முழுவதும் என் தெய்வம், உன் தெய்வம் என்று வாதிட்டுக் கொள்கிறாா்கள்.

உச்சநீதிமன்றம் வரை சமயச் சண்டைகளுக்கான வழக்குகள் செல்கின்றன. ஒருவா் வணங்கும் தெய்வத்தை மற்றொருவா் பழித்துப் பேசுவது தொடா்ந்து கொண்டிருக்கிறது. தமிழகம் சவேரிநாத பிள்ளையும் சாமிநாதையரும் ஒன்றாய் பயின்ற மண் என்பதை எவரும் எண்ணிப் பாா்ப்பதில்லை.

சமீபத்தில் சமூக ஊடகத்தில் தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை அருவருக்கத் தக்க வகையில் விமா்சித்து காணொலி வெளியிட்டாா் ஓா் இளைஞா். அதற்கு, தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிவனடியாா்கள் தங்கள் எதிா்ப்பை போராட்டங்கள் நடத்தி வெளிப்படுத்தி வருகின்றனா். சமத்துவம் பேசும் சமய சாா்பற்ற நாட்டில் இன்றளவும் அந்த இளைஞா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அமைச்சா் ஒருவா் அந்த இளைஞரை அரங்கத்தில் ஏற்றி கௌரவிக்கிறாா்.

தில்லை நடராஜரின் திருவுருவம் பற்றிய விளக்கங்கள் பல அறிஞா்களால் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆனந்த நடராஜரின் திருவுருவம் ஐந்தொழில்களைக் காட்டுவதுடன், ஞானமயமாகிய அறிவுவெளியின் இயல்பையும் அறிவுறுத்துகிறது. சித்தாந்த விளக்கத்தோடு நின்றுவிடவில்லை. அறிவியல் புலத்திலும் நடராஜா் வடிவம் ஆராய்ச்சிக்கு உரியதாக அறிவியல் அறிஞா்களால் கருதப்படுகிறது.

அறிவியல், ஆன்மிகம் எதுவாக இருந்தபோதிலும் பெருமளவில் மக்கள் தங்களைக் காக்கும் கடவுள் என்று புனிதமாகக் கருதும் நம்பிக்கையில் கல் எறிவது போல சொல் எறிந்து வேடிக்கை பாா்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? தனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக நம்புவோரை வேதனைப்படுத்திப் பாா்ப்பதில் என்ன இன்பம் இருக்கிறது? அப்படி இன்பம் காண்பது மனிதப்பண்பா?

எத்தனையோ உயா்ந்த விளக்கங்கள் தரப்பட்டிருக்கும் ஒரு சித்தாந்தத்தை தரக்குறைவாகத்தான் பாா்ப்பேன் என்று நிற்பது அறிவுடைமையா? உலகம் முழுவதிலும் வாழும் இறை மறுப்பாளா்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என்று பறைசாற்றிக் கொள்வதில்லை. தமிழகத்தில்தான் அவா்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என்று பெருமை பேசிக்கொள்கிறாா்கள்.

எதனையும் ஆழ்ந்து கற்றுக்கொள்ளாமல், அறிஞா்களிடம் சென்று தங்கள் சந்தேகங்களைத் தீா்த்துக் கொள்ளாமல் காழ்ப்புணா்வும் வன்மமும் மனதில் ஏற்றி ஒரு சமயத்தவா்களையும் அவா்களின் தெய்வங்களையும் நிந்தனை செய்து மகிழ்வதுதான் பகுத்தறிவா?

சமயம் கடந்து தங்கள் சித்தாந்தத்தின் உண்மைகளை விவாதித்தும் உணா்ந்த உண்மைகளை ஏற்று ஞானத்தேடலில் ஈடுபட்டும் உலகுக்கு வழிகாட்டிய தேசத்தில், தமிழால் மனங்களை இணைத்த மண்ணில் தமிழைப் போற்றிக் காத்திருந்தால் இந்த நிலை தோன்றியிருக்குமா?

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.



Read in source website

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழில் துறை சீர்திருத்தச் செயலாக்கம் தொடர்பான அறிக்கையில், முதலீடுகள் செய்வதற்கு மிகவும் ஏற்ற 7 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாக இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகம், பஞ்சாப், தெலங்கானா ஆகியவை மற்ற 6 மாநிலங்களாகும். 2020-ம் ஆண்டின் தொழில் துறைச் சீர்திருத்தச் செயலாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு இந்தச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.



Read in source website

உற்பத்தித் திறனை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சந்தை உள்கட்டமைப்பை உருவாக்கவும், சரிந்துவரும் மண் வளத்தைச் சீரமைக்கவும் விவசாயத் துறையில் சீர்திருத்தம் தேவை.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றால், சில ஆண்டுகளுக்கு முன் இடஒதுக்கீடு கோரி நிலவுடமை வேளாண் சாதியினர் வீதியில் இறங்கிப் போராடியதைப் போல, கிராமப்புற இந்தியாவில் கொதித்துக்கொண்டிருக்கும் சமூக-பொருளாதார முரண்பாடுகள் கொதிநிலையை எட்டக்கூடும்.



Read in source website

ஜூன் மாதத்தின் இறுதியில் பெய்த திடீர் மழையின் காரணமாக சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இது நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

கடந்து சென்ற சில கோடைக் காலங்களில் தமிழ்நாடு எதிர்கொண்ட கடுமையான வெப்பநிலையின் விளைவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றைச் சாமானிய மக்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய தருணம் இது.

இந்தத் தாக்கங்களால் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்களால் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும் சென்னை - அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த வெப்பநிலை அதிகரிப்பு, மாநிலக் கொள்கை வகுப்பு - அரசு நிர்வாகம் ஆகியவற்றால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜூன் மாதம் மிகக் கடுமையான கோடை காலங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, 2022 ஜூன் 1-ல் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ், 2020-ல் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

2019 ஜூன் 11, 16 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 2017-ல் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. வெப்பநிலை மட்டுமில்லாமல் ஈரப்பதத்தில் ஏற்படும் வேறுபாட்டையும் கருத்தில் கொண்டாக வேண்டியிருக்கிறது.

வெட்-பல்ப் (Wet-Bulb) வெப்பநிலைக் கோட்பாடு இங்கு முக்கியமாகிறது. நம் உடல் வியர்வையின் மூலமாகத் தன்னைத் தானே குளிர்ச்சியடையச் செய்துகொள்ளும் திறனை, எந்த வெப்பநிலை அளவைத் தாண்டினால் இழக்கின்றதோ, அதுவே வெட்-பல்ப் வெப்பநிலை. 2021, 2022-ன் ‘அதிகபட்ச வெப்ப நாட்க’ளில் சென்னையின் வெட்-பல்ப் வெப்பநிலை ஏறத்தாழ 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது. (ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலையும், வெட்-பல்ப் வெப்பநிலையும் வேறுபட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது).

உடல் தாக்கங்கள் அதிகரிக்கும்

“கடலோரத்தில் அமைந்திராத ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு போன்ற பிற நகரங்களோடு ஒப்பிடுகையில், கடலோர நகரமாக இருப்பதாலேயே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது சென்னையில் தாங்க முடியாததாக இருக்கிறது” என்கிறார், இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளையைச் சேர்ந்த வெப்ப சுகாதார எச்சரிக்கை வல்லுநரான அபியந்த் திவாரி.

மேலும், “வியர்வை ஆவியாகும்போது நம் உடல் குளிர்ச்சியடைகிறது. ஒப்பீட்டளவில் டெல்லியில் வறண்ட வெப்பம் உள்ளது. அந்தச் சூழ்நிலையில் மக்களுடைய உடல் எளிதில் வியர்க்கவும் அந்த வியர்வை ஆவியாகவும் முடியும். ஆனால், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பநிலையில் வியர்வை ஆவியாகாது.

ஆகவே, உடலின் முதன்மை வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது” என்று அவர் எச்சரிக்கிறார். மனித உடல்கள் 35 டிகிரி செல்சியஸ் வரை ஈரமான வெப்பநிலையைப் பொறுத்துக்கொள்ளும் என்று முன்னர் நம்பப்பட்டது.

ஆனால், சமீபத்திய ஆய்வுகள் வறண்ட வெப்பமான சூழலில் 25 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும் ஈரப்பதமான வெப்பமுள்ள சூழலில் 30 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடிய வெப்பநிலையைத்தான் மனித உடல்களால் பொறுத்துக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வெப்பநிலை அளவைத் தாண்டிச் செல்லும்போது, அது நம் உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஆபத்தான பாதிப்புகள்

தமிழ்நாட்டில் வெப்பம், அதிக வெப்பம், அதீத வெப்பம் என மூன்று பருவகாலம் மட்டுமே நிலவும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், அதிகரிக்கும் வெப்பநிலை நம் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், அதிர்ச்சியளிக்கக்கூடியவை.

நீர்ச்சத்தை உடல் இழப்பது, வெப்பப் பிடிப்புகள் (Heat Cramps), வெப்ப மயக்கம் (Heat Strokes) ஆகியவை அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளின் ஒரு பகுதி மட்டுமே. வெப்பத் தளர்ச்சியின் (Heat Exhaustion) காரணமாக உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல் ஆகியவை ஏற்படும். குளிர்ந்த சூழலில் ஓய்வெடுப்பதன் மூலம், நீர் அருந்துவதன் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

ஆனால், கவனிக்காமல் விட்டால், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கான வெப்ப மயக்கத்துக்கு வழிவகுக்கும். வெப்ப மயக்கத்தின்போது, உடல் வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட் (39.4 டிகிரி செல்சியஸ்) உயரக்கூடும்.

அதோடு, வறண்ட சருமம், குழப்பமான மனநிலை, சில நேரம் சுயநினைவின்மை ஆகியவையும் ஏற்படலாம். தீவிர வெப்பம், சிறுநீரகம் தொடர்பான பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதோடு, மகப்பேறுக்கு முந்தைய உடல்நலப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

“இதயம் தொடங்கி சிறுநீரகம் வரை, உடல் ஆரோக்கியத்தில் கவலையளிக்கக்கூடிய தாக்கத்தை வெப்பம் ஏற்படுத்தும். இதய ரத்தக் குழாய் பிரச்சினைகளுக்கும் வெப்பத்தோடு தொடர்பு உண்டு. ஆனால், அதிகரித்துவரும் நோய்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் வெப்பத்துக்கும் இடையிலான தொடர்பு சார்ந்த புரிதலைப் பெறுவதற்குத் தமிழ்நாட்டில் உறுதியான வழிமுறை எதுவும் இல்லை” என்கிறார், சுற்றுச்சூழல் நீதி செயல்பாட்டாளரும் காலநிலை மாற்றம் - ஆரோக்கியத்திற்கான பிரசாரகருமான ஸ்வேதா நாராயணன்.

மேலும், “இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, வெட்-பல்ப் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், நீங்கள் நிழலில் நின்றாலும்கூட ஆறு மணி நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை வரலாம்” என்கிறார் அவர்.

மனரீதியான தாக்கங்கள்

2022 மார்ச்சில் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுகளுக்கு இடையிலான (ஐபிசிசி) குழுவின் அறிக்கை, சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் கண்டறிந்தது.

அதிக வெப்பநிலையில் மனிதர்களுடைய உணர்வு வெளிப்பாடும் கவலை, மனச் சோர்வை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால், தற்கொலை செய்துகொள்ள முயல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனவெழுச்சி, திடீர் மனப்பிறழ்வு, இருமுனை பிறழ்வு நோய் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறிகள் அதிகரிப்பதை மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளவில் தூக்கமின்மைக்குக் காரணமாக இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

‘ஒன் எர்த்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியா உட்பட 68 நாடுகளின் தரவுகளைப் பகுப்பாய்ந்து, சராசரியாக ஒரு நபர் ஒரு வருடத்துக்கு 44 மணி நேரம் தூக்கத்தை இழக்கிறார் என்கிறது. வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கும்போது, மிகவும் சூடான இரவுகளில், சராசரித் தூக்க நேரத்தில் 14 நிமிடங்கள் குறைகின்றன. காலநிலை மாற்றம் புறச்சூழலில் மட்டுமல்லாமல், மனிதர்களை நேரடியாகப் பாதிக்க உள்ளதன் ஒரு சிறு பகுதி மட்டுமே இந்த உடல்நல-மனநலப் பிரச்சினைகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

- பிரியங்கா திருமூர்த்தி, சுயாதீனச் சூழலியல் இதழாளர்.

தொடர்புக்கு: priyankathirumurthy24@gmail.com



Read in source website