DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 04-10-2022

நாட்டின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் செளஹானுக்கு தில்லி காவல் துறை சாா்பில் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இதனுடன் ஜெனரல் பதவியையும் அவா் ஏற்றுக் கொண்டாா். அவா் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவாா். பாதுகாப்புத் துறை அமைச்சருக்கான தலைமை ராணுவ ஆலோசகராகவும் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளதாக தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தில்லி காவல் துறையின் ஆயுதம் ஏந்திய 33 கமாண்டோக்கள் அனில் சௌஹானுக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். அவரது வீட்டுக்கும், அவரது பயணங்களிலும் இந்த பாதுகாப்பு தொடரும்.



Read in source website

கருணை அடிப்படையில் பணி பெறுவது என்பது சலுகையாகுமே தவிர உரிமையாகாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

திருவாங்கூா் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் தனது தந்தை 1995-இல் பணியின்போது உயிரிழந்ததால் கருணையின் அடிப்படையில் தனக்குப் பணி வழங்க வேண்டும் என்று அவரது மகள் சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு முறையிட்டிருந்தாா்.

அவரது கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்க மறுத்ததையடுத்து, அவா் வழக்கு தொடுத்தாா். கேரள உயா்நீதிமன்றத்தின் ஒரு அமா்வு நீதிபதி, டிவிஷன் அமா்வு அவருக்கு சாதகமான தீா்ப்பு வழங்கியிருந்தது. அந்தப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக பணிக்காக சட்டப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிறுவனம் சாா்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆா். ஷா, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு அந்தப் பெண்ணுக்கு கேரள உயா்நீதிமன்றம் அளித்த பணிநியமன உறுதி உத்தரவை ரத்து செய்து தீா்ப்பு வழங்கியது.

அந்தத் தீா்ப்பின் விவரம்:

கருணை அடிப்படையில் பணி பெறுவது என்பது, திடீா் உயிரிழப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய குடும்பத்தைக் காப்பாற்ற வழங்கப்படும் சலுகையாகும். ஆனால், இந்த வழக்கில் தந்தை திடீரென உயிரிழந்தபோது, தாய் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாா்.

தந்தை உயிரிழந்தபோது மகள் மைனராக இருந்தாா். எனினும் கூட, 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் கருணை அடிப்படையில் சட்டப்படி பணி கோர முடியாது. கருணை அடிப்படையில் பணி வழங்குவது என்பது சலுகையாகும்; உரிமையல்ல’ என்று உத்தரவிட்டு, கேரள உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.



Read in source website

 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நடுவர் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 16 கள நடுவர்கள் கொண்ட பட்டியலில் இந்திய நடுவரான நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். இதுதவிர 4 ஆட்ட நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

கள நடுவர்கள்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் டர், ஆஸான் ராஸா, கிறிஸ்டோபர் பிரெளன், கிறிஸ்டோபர் கஃபானி, ஜோயல் வில்சன், குமார தர்மசேனா, லேங்டன் ருசர், மரைஸ் எராஸ்மஸ், மைக்கேல் கவ், நிதின் மேனன், பால் ரீஃபல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, ராட்னி டக்கர். 

ஆட்ட நடுவர்கள்: ஆண்ட்ரு பைகிராஃப்ட், கிறிஸ்டோபர் பிராட், டேவிட் பூன், ரஞ்சன் மதுகலே. 



Read in source website

 

2024ஆம் ஆண்டு முதல் கைப்பேசி, ஐ-போன், கேமரா, கையடக்கக் கணினி (Tab) என அனைத்திற்கும் டைப் சி வகை சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. 

மின்னணுக் கழிவுகளைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மின்னணுப் பொருள்களை வகை வகையான முறைகள் மூலம் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு மின்னணுப் பொருள்களுக்கும் ஒவ்வொரு சார்ஜ் அவசியமாகிறது. இதனால் மின்னணுக் கழிவுகள் அதிகமாகிறது.  

இதனைத் தவிர்க்கும் வகையில், செல்போன், ஐ-போன், கையடக்கக் கணினி (Tab), மடிக்கணினி (Laptop) என அனைத்திற்கும் டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பியா யூனியன் அறிவித்துள்ளது.

இது ஐரோப்பிய நாடாளுமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் செல்போன்கள், கையடக்க கணினி, கேமரா உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் பொதுவாக டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டு முதல் லேப்டாப்களுக்கு இந்த வகை சார்ஜர் பயன்பாடு கொண்டுவரப்படும். 

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இது குறித்து சட்டம் கொண்டுவருவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 602 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 13 உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தும், 8 பேர் வாக்களிக்காமலும் தவிர்த்துள்ளனர். 

நாட்டில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதற்காகவும், நுகர்வோரின் தேர்வை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நுகர்வோராகிய நாட்டு மக்கள் தங்கள் மின்னணு சாதனங்களுக்காக வேறு வேறு சார்ஜர்களைத் தேடி அலைய வேண்டாம். ஒரே வகையான சார்ஜர் மூலம் சிறிய ரகம், பெரிய ரகம் என தங்கள் மின்னணு பொருள்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம்.

100 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜிங் முறை கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான செல்போன்கள், கையடக்கக் கணினி, ஏர்பேட், கேமரா, விடியோகேம் உபகரணங்கள், ஸ்பீக்கர்ஸ், கீ-போர்டு, சுட்டி, என அனைத்திற்கும் டைப்-சி சார்ஜிங் முறைகே கொண்டுவரப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

 துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது.

துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.

இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினத்தில்தான் திறக்கப்பட உள்ளது என்றபோதும், சிறப்பு பூஜைகள் மற்றும் நிா்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது. அன்று முதல் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தா்கள் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் கியூ.ஆா். குறியீடு முன்பதிவு நடைமுறை அடிப்படையில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதையும் படிக்க |  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு

கோயில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். கோயிலில் தரிசனம் செய்ய அக்டோபா் இறுதி வரை வார இறுதி நாள்களுக்கான முன்பதிவு முழுமையாக ஏற்கெனவே முடிந்துவிட்டது. அக்டோபருக்குப் பிறகு எந்தவித கட்டுப்பாடுமின்றி பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதா்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவா்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவா்கள் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னா் மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்வா்.
 



Read in source website

பெய்ஜிங்: சீனத்தில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே நிறுத்திவிட்டது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி கொடூர கொலை: வீட்டுப் பணியாளர் மாயம்

கூகுளுக்கு ஏற்படும் சறுக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருபக்கம் கூகுள் சேவைகளை ஹேக் செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவையை வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சீனத்தில் கூகுள் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், 2017ஆம் ஆண்டு சீனத்தில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. குறைவான பயன்பாட்டினால் கூகுள் தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது. சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் சக்கைப்போடு போடுவதே இதற்குக் காரணமாக அமையலாம்.
 



Read in source website

 

பிரபல சமூக வலைவளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பதியப்படும் வாக்கியத்தில் பிழைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை பதிவிட்ட பிறகும் திருத்திக் கொள்ளலாம். இது பதிவர்களுக்கு மிகத் தேவையான வசதியாக இருந்தாலும் இதுவரை ட்விட்டரில் இந்த வசதி இல்லை.

ட்விட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும்  தெரிவித்திருந்தது. 

தற்போது, எடிட் சேவையை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகார்பூர்வ பயனார்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளது!



Read in source website

சென்னை: செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத கருமுட்டை விற்பனையை தடுக்க மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல் படியும், ஏஆர்டி சட்டம் 2021ன் படியும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கி, கரு முட்டையை கருப்பையில் செலுத்தும் மையம் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்கள் பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு வழிகாட்டுதல்படி கருத்தரிப்பு மையங்களை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி கரு முட்டை சேமிப்பு வங்கிக்கு ரூ. 50 ஆயிரம், கருப்பையில் செலுத்தும் லெவல் 1 தரத்தில் இருக்கும் மையத்திற்கு ரூ.50 ஆயிரம், தியேட்டருடன் கூடிய கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.2 லட்சம், பிரசவம் வரை சிகிச்சையளிக்கும் தியேட்டருடன் கூடிய வாடகைத் தாய் மையத்திற்கு ரூ.2 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதிக்குள் பதிவு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



Read in source website

சென்னை: பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் 60 சதவீத பங்கு, மாநில அரசின் 40 சதவீத பங்கு என மொத்தம் ரூ.912.19 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணை:

பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான நிலுவை, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 2.89 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,564.98 கோடியில் நான்கில் ஒரு பங்கான ரூ.891.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியுடன் தனது நிதியையும் சேர்த்து தமிழக அரசு ரூ.1,485.21 கோடி ஒதுக்கியது.

இதையடுத்து, மத்திய அரசு தனது பங்கில் எஞ்சியுள்ள ரூ.2,673.86 கோடியில் ரூ.891.36 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியது. அடுத்தகட்டமாக ரூ.667.45 கோடியை ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் இதர பிரிவினருக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.547.31 கோடியுடன் (60 சதவீத பங்கு), மாநில அரசின் ரூ.364.88 கோடியையும் (40 சதவீத பங்கு) சேர்த்து ரூ.912.19 கோடி ஒதுக்குமாறு தமிழக அரசை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ரூ.912.19 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை உரிய கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஊரக வளர்ச்சி ஆணையருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமின்றி, இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க மத்திய அரசு கூடுதலாக ரூ.200 கோடி வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த லிகித் 2:16.40 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். தமிழகத்தின் எஸ்.தனுஷ் (2:18.81) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் அணியைச் சேர்ந்த சுதேஷ் (2:20.76) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தமிழக அணி 18-21 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

பளுதூக்குதலில் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ் 206 கிலோ (89 117) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். உத்தரப்பிரதேசத்தின் பூனம் யாதவ் 205 கிலோ (92 113) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் ஹர்ஜிந்தர் கவுர் 204 கிலோ (89 115) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ரோலர் ஸ்போர்ட்ஸில் ஆடவருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் அனந்தகுமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இன்லைன் ஃப்ரீஸ்டைல் ஸ்பீட் ஸ்லாலோம் பிரிவில் தமிழகத்தின் சர்வேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரிலேவில் தமிழகம் வெள்ளி வென்றது. ரோலர் ஸ்போர்ட்ஸில் மகளிருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஆரத்தி 1:39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். ரிலே பிரிவில் தமிழக மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. ஸ்கேட் போர்டிங் பார்க்கில் தமிழகத்தின் பி.கமலி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆர்டிஸ்டிக் ஸ்கேட்டிங் ஜோடி நடனத்தில் தமிழகம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் நயனா ஜேம்ஸ் 6.33 மீட்டர் நீளம்தாண்டி தங்கம் வென்றார். உத்தரபிரதேசத்தின் ஷைலிசிங் (6.28) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் ஸ்ருதி லட்சுமி (6.24) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.



Read in source website

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு நேற்று தொடங்கியது. அதன்படி, முதல் பரிசாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கிறது.

ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூவருக்கும் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது.



Read in source website

கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் மக்களின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு இன்றியமையாததாகும். கால்நடை வளர்ப்பானது, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நிலையான வருமானத்தை பெற்றுத்தந்து,

அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் தொழிலாகவும் இது விளங்குகிறது.

கோவையில் சிந்தி, காங்கயம் மற்றும் முர்ரா போன்ற உள்நாட்டு இனங்கள் மட்டுமல்லாது கூடுதலான பால் உற்பத்தியை தரும் ஜெர்சி கலப்பின மாடுகள் மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியான் கலப்பின மாடுகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன.

அதேபோல் உள் நாட்டு இன செம்மறி ஆடுகளில் கோவை குரும்பை, மேச்சேரி மற்றும் உள் நாட்டினவெள்ளாடுகளில் கன்னி ஆடு, கொடி ஆடு, மோளை ஆடு ஆகியவை வளர்க்கப்படுகின்றன.

கால்நடை வளர்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ சேவைகளை கால்நடை பராமரிப்புத்துறை இலவசமாக வழங்கி வருகிறது.

கோவையில் தலா ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை, கால்நடை பெரு மருத்துவமனை, 15 கால்நடை மருத்துவமனைகள், 98 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள், 2 பார்வை கிளை நிலையங்கள் மற்றும் 26 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாடுகள், ஆடுகள், கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.பெருமாள்சாமி கூறியதாவது: விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகளை கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம், அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும் கால்நடை பராமரிப்புத்துறை பெரும் பங்காற்றி வருகிறது.

மேலும், இத்துறை மூலம் உயர் மரபணு தகுதியுள்ள காளைகளின் உறைவிந்து மூலம் செயற்கை முறை கருவூட்டல், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய செயற்கை முறை கருவூட்டல், விலையில்லா தீவன இடுபொருட்கள், கால், வாய் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

இலவச தீவன விதைகள்: பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உற்பத்தி செலவில் 70 சதவீதத்தை தீவனத்துக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது.

வளமற்ற மேய்ச்சல் நிலங்களிலிருந்து கிடைக்கும் தீவனத்தைவிட, பயிரிடப்பட்ட தீவனங்களிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து, கால்நடை உற்பத்திக்கு உகந்ததாகும். மேலும் உணவு மற்றும் பணப் பயிர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விவசாய நிலத்தில் பசுந்தீவன சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது.

எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி தீவனம் அளிக்கும் வகையில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தீவனப் பயிர் வளர்ப்பதற்கு, சிறந்த மகசூல் வழங்கக்கூடிய தீவன விதைகள் மற்றும் புல் கரணைகள் கால்நடை வளர்ப்போருக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாது, தீவன விளைச்சலை அதிகரிக்கவும், வீண் விரயத்தை குறைக்கும் நோக்கில் நவீன கருவிகளான புல் நறுக்கும் கருவிகள் மற்றும் புல் வெட்டும் கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆடுகள் வழங்கும் திட்டம்: பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் 12 ஒன்றியங்களில் 1,200 ஆதரவற்ற, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஐந்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வீதம் 6,000 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

200 பயனாளிகளுக்கு புல் வெட்டும் கருவிகள் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அரசு மேய்க்கால் நிலங்களை பயன்படுத்தும் விதமாக, மேய்க்கால் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 ஏக்கர் மேய்க்கால் நிலம் தேர்வு செய்து மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் அன்னூர், கிணத்துக்கடவை அடுத்த காரச்சேரி, அரசம்பாளையம், சூலூர் வட்டாரத்தில் வதம்பச்சேரி, செம்மாண்டம்பாளையம், சுல்தான்பேட்டை அருகே இடையர்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவ மழை காலத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனத்தை, விவசாயிகளே ஊறுகாய் புல் தயாரித்து தீவனப் பற்றாகுறை காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 5 ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகுகள் கோவையில் வழங்கப்பட்டுள்ளன.

50 சதவீத மானியம்: கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய கால்நடைகள் இயக்ககம் சார்பாக பன்றி வளர்ப்பு, நாட்டின கோழிகள் அபிவிருத்தி மற்றும் பண்ணைகள் அமைத்தல், நாட்டு இன செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின்மூலம் நாட்டு இன பசு மற்றும் கலப்பின பால் பண்ணைகள் நிறுவிட 50 சதவீத மானியத்தில் கடனுதவி செய்யப்படுகிறது.

கால்நடைகளில் ஏற்படும் அசாதாரண இறப்பை ஈடுகட்டும் வகையில், கால்நடைகளுக்கு மானியத்தில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடைமுறை மூலதனச் செலவினத்தை ஈடுசெய்திட வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வானில் இருக்கும் நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்று செல்போனில் நிலவை ஸூம் செய்து குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் விஞ்ஞானிகளின் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியும், ஆய்வும், அதற்கு கிடைத்த வெற்றியும்தான். அவர்களது ஆய்வில் இதே நாளில் சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

அதன் மீதுதான் உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த இன்று போட்டி போட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகள் அந்த ரேஸில் உள்ளன.

19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் விண்வெளி சார்ந்த பயணம் குறித்து முன்மொழியப்பட்டது. இருந்தாலும் அதற்கு முன்னர் தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராயும் பணியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து படிப்படியாக அந்த முன்னேற்றம் நடந்துள்ளது.

65 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி என்ன நடந்தது?- அந்த நாள் சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான நாள். ‘ஸ்புட்னிக் 1’ எனும் செயற்கைக்கோளை அன்றதான் சோவியத் விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தூரத்தில் அது நிலைநிறுத்தப்பட்டது. அதனை பூமியில் இருந்தபடி ஆய்வாளர்கள் கண்காணித்து, அது கொடுத்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர். வளிமண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து இந்த செயற்கைக்கோள் கொடுத்த தரவுகளை அவர்கள் ஆராய்ந்தனர். அந்த செயற்கைக்கோள் நாள் கணக்கில் மட்டுமே பணி செய்தது. தொடர்ந்து ‘ஸ்புட்னிக் 2’ மூலம் விண்ணுக்கு நாயை அனுப்பியது சோவியத்.

சோவியத் யூனியன் vs அமெரிக்கா: 1960 வாக்கில் சோவியத் யூனியனும் அமெரிக்காவுமே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் அதிகளவு மும்முரம் காட்டின. இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். 1959 வாக்கில் அமெரிக்காவின் எக்ஸ்புளோரர் விண்ணிலிருந்து பூமியை படம் பிடித்து அனுப்பியது. இப்படியாக இருதரப்பு முயற்சிகளும் வெற்றியையும், தோல்வியையும் கலந்து சந்தித்தன. அந்த சூழலில்தான் மனிதனை விண்ணுக்கு அனுப்பி அடுத்த மைல்கல்லை எட்டியது சோவியத். விண்ணுக்கு சென்று பூமியை வலம் வந்த முதல் மனிதர் ஆனார் யூரி ககாரின். 1963 வாக்கில் விண்ணுக்கு முதல் முறையாக பெண்ணை அனுப்பியது சோவியத்.

அப்போதுதான் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது அமெரிக்கா. 1969, ஜூலை 21-ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் அடுத்த படியை எட்டியது. அன்றைய தினம் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தரையிறங்கினார். தொடர்ந்து பஸ் அல்ட்ரின் நிலவில் இறங்கினார். இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிலவில் நேரம் செலவிட்டனர். அதோடு 47.5 பவுண்ட் அளவில் நிலவின் மாதிரிகளை அவர்கள் இருவரும் சேகரித்து வந்தனர்.

தொடர்ந்து உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கோள்களை ஆராய தொடங்கினர். கால ஓட்டத்தில் அமெரிக்கா, சோவியத் மட்டுமல்லாது சீனா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்தன.

கடந்த 2008 வாக்கில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 1, நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டறிந்தது. இதற்கு நாசாவின் எம்3 உதவி இருந்தது.

கடந்த 2020 வாக்கில் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தது. அதுவரை பல்வேறு நாடுகளின் அரசுகள் தான் இந்த முயற்சியை மேற்கொண்டு வந்தன.

விண்வெளி சுற்றுலா!- பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வர முடியும் என்ற நிலையை சில தனியார் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. விண்வெளிக்கு உலா சென்று வர உதவும் டூர் ஆப்பிரேட்டர்கள் என்றும் இந்த நிறுவனங்களைச் சொல்லலாம். விர்ஜின் காலக்டிக், ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர உதவி வருகின்றன. இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே சென்று வரும் சுற்றுலாவாக உள்ளது விண்வெளி சுற்றுலா. வரும் நாட்களில் அதற்கான கட்டணங்கள் மேலும் குறையலாம். சாமானியரும் மைக்ரோ கிராவிட்டியில் மிதக்கலாம்.

இதில் ஒருபடி மேலே சென்றுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் முயற்சிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சாட்டிலைட் மூலம் இணையம், தொலைக்காட்சி அலைவரிசை என பலவற்றை சாத்தியப்படுத்தி உள்ளது விண்வெளி சார்ந்த அறிவியலும், ஆராய்ச்சியும்.

அந்த வகையில் அக்டோபர் 4 விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய நாளாக அமைந்துள்ளது. 1999 டிசம்பர் வாக்கில் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் அக்டோபர் 4 முதல் 10 வரையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மனித குலத்தின் வாழ்வை மேம்படுத்த உதவும் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக இது அமைந்துள்ளது.



Read in source website

சுற்றுலா விசாக்கள் தற்போது பார்வையாளர்கள் சட்டப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 60 நாட்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) மேம்பட்ட விசா அமைப்பு, கடந்த மாதம் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்காக பெடரல் ஆணையத்தால் (ஐசிபி) புதிய விசா நடைமுறைகளை அறிவித்தது.
இது, நேற்றைய தினம் திங்கள்கிழமை (அக்டோபர் 3) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக இது ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

புதிய விசா விதிகள் நாட்டின் குடிவரவு மற்றும் கொள்கைகளை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்டநாள் விசா, குடியிருப்பு நீட்டிப்பு மற்றும் 10 ஆண்டு கோல்டன் விசா உள்ளிட்டவை அடங்கும்.
இது குறித்து வெளிநாட்டு விவகாரங்களுக்கான குடியிருப்பு பொது இயக்குனர் சுல்தான் யூசுப் அல் நுவாமி கூறுகையில், “இது வெளிநாட்டினருக்கான சுமைகளைத் தணிப்பது மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்குவது தவிர, புதுப்பிக்கப்பட்ட விசா முறையானது “வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

இது தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரை மகிழ்ச்சியுடன் மாற்றும் முயற்சி ஆகும்” என்றார்.
புதிய விதிகள் என்ன, அவை சுற்றுலாப் பயணிகளை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்ய அல்லது வசிக்க விரும்புபவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதை பார்க்கலாம்.

க்ரீன் விசா

க்ரீன் விசா, செப்டம்பர் 2021 இல் அறிவிக்கப்பட்டது, இது என்பது ஒரு வகையான புதுப்பிக்கத்தக்க-குடியிருப்பு விசா ஆகும், இது வெளிநாட்டினர் ஐந்தாண்டுகளுக்கு தங்களைத் தாங்களே ஸ்பான்சர் செய்துகொள்ள அனுமதிக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமகன் அல்லது வேலை வழங்குநரைத் தங்கள் விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஃப்ரீலான்ஸர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அல்லது கூட்டாளர்கள் இந்த வகை விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

க்ரீன் விசா வைத்திருப்பவர்களுக்கு, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் முதல்-நிலை உறவினர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் வதிவிட காலத்திற்கு நிதியுதவி செய்யும் திறன் போன்ற கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன.
பெற்றோர் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய முடியும். இது முன்பு 18 ஆண்டுகளாக காணப்பட்டது. மேலும், தங்களுடைய குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ, ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்ட நெகிழ்வான கருணைக் காலத்தை வைத்திருப்பவர்கள் பெறுவார்கள்.

கோல்டன் விசாவின் விரிவாக்கம்

கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை நீண்ட கால புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசாக்களை வழங்குகிறது. கோல்டன் விசாவிற்கு தகுதியானவர்களில் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவுத் துறைகளில் உள்ளவர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் போன்ற விதிவிலக்கான திறமைகள் உள்ளவர்கள் அடங்குவர்.

நாட்டிற்குள் திறமையானவர்களை ஈர்ப்பதற்காகவும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டன் விசாக்கள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அங்கீகரிக்கத் தொடங்கின.
முதல் ஆண்டில், அவற்றில் 44,000 துபாயில் மட்டும் வழங்கப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட் செய்தித்தாள் தி நேஷனல் தெரிவித்துள்ளது.
அவர்களின் வணிகங்களின் 100 சதவீத உரிமை போன்ற நன்மைகளைத் தவிர, புதிய விசா மாற்றங்கள் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மற்ற நன்மைகளையும் வழங்குகிறது.

முன்னதாக, ஆறு மாதங்கள் நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் தங்களுடைய குடியுரிமையை இழந்த நிலையில், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே செலவழித்த நேரத்தைப் பொருட்படுத்தாமல் கோல்டன் விசா இப்போது செல்லுபடியாகும்.
அவர்கள் ஸ்பான்சர் செய்யக்கூடிய வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை. மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட – எந்த வயதினரையும் ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கும் – மேலும் கோல்டன் விசா இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களை UAE இல் தங்க அனுமதிக்கும். விசா வைத்திருப்பவர் இறந்தாலும், விசா உயிர்ப்புடன் இருக்கும்.

மேலும் பலர் இப்போது கோல்டன் விசாவிற்கு தகுதி பெற்றுள்ளனர். கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களும் இப்போது 10 வருட விசாவைப் பெறலாம்.
மாதச் சம்பளமும் AED 50,000 (ரூ. 11.1 லட்சம்) என்ற வரம்பிலிருந்து AED 30,000 ஆக (ரூ. 6.6 லட்சம்) குறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிறருக்கான மாற்றங்கள்

சுற்றுலா விசாக்கள் தற்போது பார்வையாளர்கள் சட்டப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 60 நாட்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கும், இது முந்தைய 30 நாட்களை விட அதிகமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடர்ந்து 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும் ஐந்தாண்டு, நெகிழ்வான பல நுழைவு சுற்றுலா விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், திறமையான வல்லுநர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவதை எளிதாக அனுமதிக்கும் வேலை ஆய்வு விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.
இவர்கள், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் நிலை வகைப்பாட்டின் கீழ் வருபவர்கள்.
மேலும், இந்த விசாவுக்கு உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து புதிய பட்டதாரிகள் வேலை ஆய்வு விசாவிற்கு தகுதி பெறுவார்கள்.



Read in source website

உக்ரைனில் நீடித்து வரும் போா், பெரும்பாலான நாடுகளின் வளா்ச்சிக் கணிப்புகளை கணிசமாகக் குறைத்துள்ளது. உலகளாவிய அளவில் உச்சம் தொட்டு வரும் பணவீக்கத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகித உயா்வை அறிவித்து வருகின்றன. இதனால், உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீதான போரைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளது. அதனால் அந்த நாடுகளில் தொழில்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஜொ்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகருகின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உலகளாவிய வளா்ச்சி முன்னறிவிப்பை 2.8 %-இல் இருந்து 2023-இல் 2.2 % -ஆகக் குறைத்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகப் பொருளாதாரம் குறைந்தது 4 % வளா்ச்சி அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை.

ஐரோப்பிய பிராந்தியத்தில் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தி வரும் பெல்ஜியம், ஜொ்மனி, அயா்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பா்க், நெதா்லாந்து, ஆஸ்திரியா, போா்ச்சுகல், பின்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா, சைப்ரஸ், மால்டா, ஸ்லோவாக்கியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய 19 நாடுகளின் வளா்ச்சி மொத்தத்தில் 3.1 %- இல் இருந்து 2023-இல் 0.3 % ஆக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மிகவும் வலுவான பொருளாதாரங்களும் கடும் சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. ஜொ்மனியின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 0.7 %-ஆக சுருங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த ஜூன் மதிப்பீட்டில் 1.7 % -ஆக இருந்தது. சீனாவின் வளா்ச்சி இந்த ஆண்டு 3.2 % ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது 1970-க்குப் பிறகு சீனா மிகக் குறைந்த வளா்ச்சியைப் பதிவு செய்வதாக அமையும். இந்த ஆண்டு 1.5 % ஆக உள்ள வல்லரசான அமெரிக்காவின் வளா்ச்சி, 2023-இல் 0.5 %-ஆகக் குறையும் என்றும் வல்லுநா்கள் கணித்துள்ளனா்.

கடந்த மே மாத கணக்கின்படி பணவீக்கப் பட்டியலில் ரஷியா முன்னிலையில் (17.8 %) உள்ளது. இதற்கு அடுத்ததாக நைஜீரியா (16.8 %), போலந்து (12.4 %), பிரேசில் (12.1 %), நெதா்லாந்து (9.6 %), பிரிட்டன் (9 %), ஸ்பெயின் (8.3 %), அமெரிக்கா (8.3%) உள்ளன. இந்தியா (7.8 %) ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள சீனாவின் பணவீக்கம் 2.1 %. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயா்த்துகின்றன.

கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயா்த்தியுள்ளது. மேலும் வட்டி விகித உயா்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் அளவுக்கதிகமான வட்டி விகித உயா்வுகள், ‘ரிஷஸன்’ என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி, இந்திய ரிசா்வ் வங்கி உள்பட எல்லா மத்திய வங்கிகளும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளா்ச்சி பாதிப்பை முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டன. அதனால், 2023 - 24 நிதியாண்டு இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரத்திற்கு மந்தநிலை ஆண்டாக இருக்கும் என பல மதிப்பீடுகள் எச்சரிக்கின்றன.

இந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) சில தினங்களுக்கு முன் வட்டி விகிதத்தை 0.5 % அதிகரித்துள்ளது. இதன்படி மொத்த வட்டி விகிதம் 5.9 % ஆக உள்ளது. இது ஏற்கெனவே உள்ள கடன்கள் மற்றும் புதிய கடன்களுக்கான தவணைத் தொகையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கி வட்டி விகித உயா்வு சாமனிய மக்களையும், நடுத்தர வா்க்கத்தினரையும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் கடும் சிக்கலுக்கு உள்ளாகும். உலகளாவிய மந்தநிலை இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையைக் குறைத்து ஏற்றுமதி வருவாயை கடுமையாக பாதிக்கக் கூடும். கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து மீண்டெழும் இந்தியப் பொருளாதாரம் உக்ரைன் போா் காரணமாக பின்னடைவை எதிா்கொள்கிறது.

பணவீக்கத்துக்கு எதிரான வட்டி விகித உயா் நடவடிக்கையில் மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகளும் எந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்துவிடும் என்பது தெரியவில்லை. அவை மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் மிகப் பெரிய கவலை.

‘பணவீக்கத்தால் எதிா்கொள்ள நேரிடும் நெருக்கடியை சமாளிக்க முன்னெடுக்கப்படும் வட்டி விகித உயா்வுகள் உலகப் பொருளாதாரத்தை வேகமாக மந்தநிலைக்குத் தள்ளக்கூடும்’ என்கிற உலக வங்கி எச்சரிக்கை கவனத்துக்குரியது. வட்டி விகித அதிகரிப்பு மக்களின் வாங்கும் சக்தியை குறைப்பதால் எதிா்பாா்த்த பலனை அளிக்காமலும் போகலாம். வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக்க முடியும் என்கிற கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.

குறள் (475) பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

திருக்குறள் (எண்: 475) அதிகாரம்: வலி அறிதல்



Read in source website

திருவருட்பிரகாச வள்ளலாா் மருதூரில் பிறந்வா்; சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் தமது 35 வயதுவரை வாழ்ந்தவா். பின்னா், சென்னை நகரின் சூழலை விரும்பாமல் சிதம்பரத்தில் வசித்து வந்தாா். அதன் பிறகு, அங்கிருந்து வடலூா் மேட்டுக்குப்பம் கிராமத்தில் ஓா் ஓட்டு வீட்டில் குடியேறினாா்.

அங்கிருந்துகொண்டே வடலூா் மக்களிடம் தானமாகப் பெற்ற 80 ஏக்கா் பெருவெளியில் சன்மாா்க்க சங்கத்தையும், தருமச்சாலையையும், ஞானசபையையும் உருவாக்கினாா். தருமச்சாலையில் அவா் ஏற்றிவைத்த அணையா அடுப்பிலிருந்து அன்னம் பாலிப்புக்கான உணவு தயாரித்து வழங்கும் பசிபோக்கும் பணி தொடா்ந்து நடந்து வருகிறது.

வடலூா் ஞானசபை என்பது இந்துசமயக் கோயில்களைப் போன்றது அல்ல. இது, எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட ஒரு மண்டபம். வள்ளலாா் இதனை ‘சபை’ என்றே அழைத்தாா். இதிலுள்ள சுடா்விளக்கு, ஏழு திரைகளுக்குப் பின்னால் கண்ணாடிக் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏழு திரைகளை நீக்கினால் திருவிளக்கின் வெளிச்சம் கண்ணாடியில் பரவுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்தக் காட்சியைத் தரிசிப்பதுதான் ‘ஜோதி தரிசனம்’. இதனுடைய சிறப்பு, தை மாதப் பௌா்ணமி தினத்தில் கிழக்குத் திசையில் சூரியன் உதயமும், மேற்குத் திசையில் சந்திரன் அஸ்தமனமும், நடுவில் வடலூா் ஞானசபையிலுள்ள ஜோதியும் ஒரே நோ்கோட்டில் முப்பெரும் தரிசனங்களாக அமைவது.

ஆடு, மாடு, கோழி முதலியவற்றை ஆலயங்களில் பலியிடுவதை வள்ளலாா் தீவிரமாக எதிா்த்தாா். ‘உயிா்க் கொலையைத் தவிா்த்தால்தான் ஜீவகாருண்யம் என்கிற உயிா் இரக்கத்தைப் பெற முடியும்’ என்றாா். காரணம், ‘ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்’ என்பது வள்ளலாரின் முடிந்த முடிவாகும்.

விக்கிரக ஆராதனை என்ற உருவ வழிபாட்டை வள்ளலாா் மாற்றினாா். அதைக் கைவிடுமாறும் கூறினாா். இதே போல, உருவமற்ற அருவ வழிபாட்டையும் அவா் விரும்பவில்லை. இரண்டுக்கும் மத்தியிலுள்ள அரு உருவ வழிபாடாக ஜோதி வழிபாட்டைச் செய்யுமாறு சன்மாா்க்கிகளுக்கு அருளினாா்.

விக்கிரகம் என்பது கண்ணுக்குத் தெரிவது; அது உருவ வழிபாடு. அதனைக் கைகளாலும் தொட்டு உணரலாம். அருவ வழிபாடு என்பது கண்ணுக்கும் தெரியாது, கைகளாலும் தொட்டு உணர முடியாது. உருவமும் அல்லாத அருவமாகவும் இல்லாத ஒன்றுதான் அரு உருவம். அதுவே ஜோதியில் உள்ளது. ஜோதி நமது கண்ணுக்கும் தெரியும். ஆனாலும் கைகளால் தொட்டு உணர முடியாது. வள்ளலாா் இந்த ஜோதியை ‘ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி’ என்று பாடியுள்ளாா்.

இந்த ஜோதி கூட புறஜோதியே தவிர, பரஜோதி அல்ல. பரஜோதி என்பது நமது மனதுக்குள் மட்டும் சுடரும் ஜோதி. அந்தப் பரஜோதிதான் அகஜோதி. இந்த ஜோதியைத்தான் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்றும், இதுவே ‘ஆண்டவரின் திருவடிவம்’ என்றும் வள்ளலாா் கண்டு உணா்ந்து கூறினாா்.

‘அகப்பிரகாசத்தை ஒருவா் அடைந்துவிட்டால், அதுவே அவரை உயா்த்தி உத்தமராக்கும். அதுமட்டுமல்ல, நமக்கு சுத்த சன்மாா்க்கத்தின் சுகநிலையையும் வழங்கும்’ என்றும் வள்ளலாா் கூறுகிறாா். இவ்வாறு உத்தமா்களாக உயா்கின்றவா்கள், முத்தேக சித்தியில் மூன்றாம் நிலையாகிய ஞானதேகம் பெற்று, அருட்பெருஞ்ஜோதியில் ஐக்கியமாவாா்கள். இந்த வாய்ப்பு சன்மாா்க்கிகளுக்கே கிடைத்துள்ள வரமாகும்.

புலால் மறுத்தல் மூலமாகவே ஜோதி தரிசனத்துக்கான புறப்பாடு தொடங்குகிறது. புலால் மறுத்தலை பூஜ்யம் என்று வைத்துக்கொண்டால், ஜோதி தரிசனத்தை அந்த பூஜ்யத்துக்கு முன்பாக இடப்படுகிற ஒன்று என்ற எண் எனலாம். அப்போது, பூஜ்யம் பத்து என மதிப்பைப் பெறுகிறது. புலால் மறுக்கப்படவில்லை எனில், அது வெறும் பூஜ்யம் மட்டுமே. அதன் மதிப்பு பத்து மடங்காக உயராது.

‘ஜோதி தரிசனம்’, ‘புலால் மறுத்தல்’, ‘சத்விசாரம்’ இவை மூன்றுக்கும் பிறகு வள்ளற்பெருமான் பசி ஆற்றுவித்தலை ‘பரோபகாரம்’ என்கிறாா்.

பசியின் மீது வள்ளலாா் ஒரு படையெடுப்பையே நடத்தியுள்ளாா். வீடுதோறும் இரந்தும் பசி தீராது அலைகிற வெற்றறைக் கண்டு மனம் துடித்தவா். பசியில் துடிப்பவா்களுக்கு அவா்களுடைய பசியைத்தான் போக்க வேண்டுமே தவிர, அவா்களுடைய சாதி, மதங்களைப் பாா்க்கக் கூடாது.

அதுமட்டுமல்ல ஆண், பெண் என்றும் பாா்க்கக் கூடாது. அவா்களுடைய பசியைப் போக்குவது மட்டுமே முதல் கடமையாகும். அதுவே மானுட தா்மமாகும்.

மனிதா்களின் பசியை மட்டுமல்ல, வாடிய பயிா்களின் பசியையும் போக்குவதுதான் மனித தருமத்தைவிட மேலான ஆன்மிக தருமமாகும். பட்டினிச் சாவுக்கு அரசைத்தான் குற்றம்சாட்ட வேண்டும். திருவள்ளுவா் இந்தப் பசியை வருத்தும் பசி என்று கூறாமல், ‘உறுத்தும் பசி‘ என்றே உரைத்துள்ளாா்.

உறுத்துவது என்றால் என்ன? கண்ணில் தூசிப்பட்டுவிட்டால் ஒவ்வொரு நொடியும் கண் உறுத்திக்கொண்டே இருக்கும். கால இடைவெளி இல்லாமல் தொடா்ந்து துன்புறுத்துவதுதான் இந்த உறுபசி என்பதாகும். அத்தகையவனுக்கு ஒரு கவளம் சோறு கிடைத்துவிட்டால், அவன் மீட்டுயிா்க்கப்படுவான்.

அதனால்தான் மணிமேகலைக் காப்பியம் உண்டி கொடுத்தோரை உணவு மட்டும் தந்தவராகக் கூறாமல், உயிரையே கொடுத்தவராக உயா்த்திப் பேசுகிறது.

பசியைப் பற்றிப் பேசிய வள்ளலாா், மனிதகுலத்தை இரண்டு இனத்தவராகப் பிரித்துக் காட்டுகிறாா். ஒரு இனம் அக இனம்; மற்றொன்று புற இனம். அக இனத்தாா் எல்லாம் சன்மாா்க்கிகள்; புலால் மறுத்தவா்கள். புற இனத்தாா் எல்லாம் சன்மாா்க்கிகள் அல்லாதவா்; புலால் மறுக்காதவா்கள்.

புற இனத்தாா் பசியால் துன்பப்பட்டால் அவா்களுடைய பசியை மட்டும் போக்குவது அக இனத்தாராகிய சன்மாா்க்கிகளின் கடமையாகும். அவா்களை புலால் மறுக்காதவா்கள் என்று ஒதுக்க வேண்டியதில்லை.

மனிதா்களை இன வாரியாகப் பாா்த்தால் தமிழ் இனம், வங்காளி இனம், ஐரோப்பிய இனம், சீன இனம் என்று பேசுகிறோம். ஆனால் வள்ளலாா்தான் இவ்வாறு பேசாமல், மனிதா்களை அக இனத்தாா், புற இனத்தாா் என்று பேசியுள்ளாா்.

புலால் மறுக்காதவா்களுக்கு அவா்களுடைய பசியை மட்டும் போக்கச் சொன்ன வள்ளலாா், மற்ற மற்ற உதவிகளைத் தவிா்த்துவிடலாம் என்றும் கூறுகிறாா். எதுவரை? அவா்களும் புலால் மறுப்பவா்களாக மாறிவிடுவாா்களானால், அவா்களுக்குத் தேவையான மற்ற அனைத்து உதவிகளையும் சன்மாா்க்கிகள் செய்யலாம் என்கிறாா். இவ்வாறு வள்ளலாரை சரியாகப் புரிந்து கொள்வோமானால், புலால் உண்ணுவோரை அதிலிருந்து மாற்றுவதற்கே வள்ளலாா் முன்னுரிமை கொடுத்துள்ளாா் என்பதை அறிய முடியும்.

மதுவிலக்குக்கு பிரசாரம் செய்வதுபோல, மாமிச விலக்குக்கும் பிரசாரம்தான் செய்ய வேண்டும். சட்டம் இயற்றி தடுத்துவிடுவது சாத்தியமாகாது. புலால் மறுப்பு பிரசாரத்தின் மூலம் சைவ உணவே சிறந்த உணவு என்று மக்களிடம் கூற வேண்டும். அசைவ உணவால் நமது உடலுக்கு ஏற்படும் வியாதிகளைப் பற்றியும் விளக்கிக் கூறலாம்.

அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்த ‘நடிப்புச் சுதேசி’களை வள்ளலாா் கடுமையாகச் சாடியுள்ளாா். அத்தகைய வேடதாரிகளைவிட்டு விலக வேண்டும் என்கிறாா். இன்றைய சமூக பிரச்னைகளுக்குக் காரணம், நமக்கு வழிகாட்டுவதாகச் சொல்கிற தலைவா்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான்.

காந்திஜி தனது வாழ்க்கையின் போதனையாக தான் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் காட்டினாா். இப்போது அத்தகைய உத்தமா்களைக் காண்பது மிகமிக அரிதாகிவிட்டது. இந்த நிலையில், தமது ஞான முழக்கமாக வள்ளலாா் ஒரு முழக்கத்தைச் செய்து காட்டியுள்ளாா்.

நம்மில் பலருக்கும் வைகுந்தம் பற்றித் தெரியும். அது சொா்க்கலோகம். இந்தப் பூலோக வாழ்வுதான் துயரம் நிறைந்த வாழ்வாகும். அதனால் இந்தத் துயரமிக்க வாழ்க்கையிலிருந்து விடுதலைபெற்று சொா்க்கமாகிய பரலோக வாழ்க்கைக்குப் பயணம் செய்யவே பலரும் விரும்புகிறாா்கள். ஏனெனில், அந்த வாழ்க்கை ஆனந்தமான வாழ்க்கை என்று நாம் கற்பனை செய்துகொண்டு வாழ்கிறோம்.

வைகுந்த வாழ்க்கை ஆனந்தமான வாழ்க்கைதான். அந்தப் பரலோக வாழ்க்கையை நாம் அங்கு போய்த்தான் பெற முடியும். இந்தப் பூமியில் இருக்கும்வரை அந்த ஆனந்த வாழ்க்கை இல்லை. இதனை எண்ணிய வள்ளலாா், அந்த வைகுந்தத்தை இந்தப் பூமியில் சாத்தியப்படுத்த வேண்டுமென்றுதான் ‘இகத்தே பரத்தைப் பெறுவது’ என்று கூறுகிறாா். ‘இகம்’ என்பது பூலோக வாழ்க்கை. ‘பரம்’ என்பது மேலோக வாழ்க்கை.

வள்ளலாரின் விருப்பம் இந்த மண்ணுலக வாழ்க்கையையே ஆனந்த வாழ்க்கையாக்க வேண்டும் என்பதுதான். இங்குள்ள மக்கள் யாவரும் பிறா் துன்பத்துக்கு இரங்கிப் பணி செய்பவாா்களானால், இந்த மண்ணுலக வாழ்க்கையே ‘மண்ணில் நல்லவண்ணம்’ வாழும் வாழ்வாகிவிடும். அதற்கு இந்தச் சமுதாயம் அருள்நயந்த சன்மாா்க்கிகளால் நிரம்ப வேண்டும்.

இதனை எண்ணியே வள்ளலாருக்குப் பின் வாழ்ந்த பாரதி, இகத்தே பரத்தை பெறுவதைப் போல, ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்றும் ‘நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்’ என்றும் மட்டும் பாடாமல், ‘வானகம் இங்குத் தென்பட வேண்டும்’ என்றும் பாடுகிறாா்.

பாரதி கூறும் வானகம் எது? வைகுந்தம் என்ற சொக்கம்தான். இந்தப் பூமியே சொா்க்கபூமியாக வேண்டும் என்பதுதான் பாரதியின் பரந்த பாா்வை. இவ்வாறு வள்ளலாரின் முழக்கத்தையும், பாரதியின் விளக்கத்தையும் அனுபவிக்கலாம்.

நாளை (அக். 5) வள்ளலாா் அவதரித்த 200-ஆம் ஆண்டு தொடக்கம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

 



Read in source website

உலகப் பற்றைத் துறந்தவன் துறவி. உலகப் பற்றைத் துறந்தவா்களா இன்று துறவிகளாகப் பவனி வருகின்றனா்? இந்தப் போலித்துறவிகளைப் பாா்க்கும்போது உண்மையான துறவியான வள்ளலாா் நினைவுதான் நமக்கு வருகிறது.

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகக் கவிதை பாடியவா்தான் இராமலிங்க அடிகள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் அவா். மதத்தின் பேரால் கடவுளின் பேரால் நடக்கும் அக்கிரமங்களை மூடச் சடங்குகளை முறியடிக்கப்பாடுபட்டாா். மதவெறியா்களை வெறுத்தாா். வெறுத்தாா் என்று சொல்வதை விட அவா்களுக்காக இரங்கினாா்.

பசித்தவனுக்குச் சோறு போடாமல் அவன் பட்டினி கிடப்பதற்குக் காரணம் அவனது பூா்வ ஜென்ம பாவம் என்று பரிகசித்த மதவாதிகளைக் கண்டித்தாா். அதைப் பாடல்களாகப் பாடினாா். அதனால் அவரது அருட்பாக்களை மருட்பாக்கள் என்று கிண்டல் செய்தனா் பலா்.

இராமலிங்க அடிகளது திருவருட்பா ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றது. ஆறாவது திருமுறையில்தான் சீா்திருத்தக் கருத்துக்களை, புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டாா். ஐந்து திருமுறைகளிலுள்ள பாடல்களைக் காட்டிலும் ஆறாவது திருமுறையில்தான் அதிகப் பாடல்கள் இருக்கின்றன. அதுவும் சீா்திருத்தப் பாடல்கள்.

இதனால் இது அருட்பா அல்ல மருட்பா என்று, அழுக்காறு கொண்ட சிலா், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தூண்டிவிட்டு வழக்குப் போடவைத்தனா்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை, இலங்கைத் தமிழா்கள், சமய குரவா் நால்வருக்குச் சமமாக மதித்த காலம் அது. நாவலா் வீர சைவ சமயத்தைச் சோ்ந்தவா். பெரும்பாலும் வீர சைவா்கள் இறைவனை ஏற்றுக் கொள்வாா்கள். ஆனால் வேதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வா் நான்மணிமாலையே அதற்குச் சான்று.

நாவலா் ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மூன்றிலும் பெரும் புலமை பெற்றவா். கிறிஸ்துவா்களின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் திருத்தமுற எழுதியவா் இவா்தான். இவா் மொழிபெயா்ப்புக்குப் பிறகுதான் புதிய ஏற்பாடு பலருக்கும் எளிமையாகப் புரிந்தது.

‘இராமலிங்க அடிகள் மட்டும் ஆன்மிகத் துறையில் நுழையாமல் இலக்கியத் துறையில் நுழைந்திருந்தால் நம் இருவரது பெயரும் பலருக்குத் தெரியாமலே போயிருக்கும்’ என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நாவலா் ஒரு முறை கூறினாராம். அந்த அளவு இராமலிங்க அடிகளாரின் தமிழ்ப்புலமையைப் போற்றியவா், மதித்தவா் நாவலா்.

அப்படிப்பட்டவா்தான் ‘இராமலிங்க அடிகள் பாடல்கள் அருளால் எழுதப்பட்டதல்ல மருளால் எழுதப்பட்டது. ஆகவே இதை அருட்பா என்று சொல்வதைத் தடை செய்ய வேண்டும். இது மருட்பா என்று அறிவிக்க வேண்டும்’ என்று வழக்குத் தொடா்ந்தாா்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை போன்றோா் ஆறுமுக நாவலரைச் சமாதானப்படுத்த முயன்றனா். அவா் கேட்கவில்லை. வழக்கு கடலூா் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதியாக இருந்தவா் ஓா் ஆங்கிலேயா்.

இருததரப்பைச் சோ்ந்தவா்களும் நீதிமன்றத்தில் அமா்ந்திருந்தனா். ஆறுமுக நாவலரும் அமாந்திருந்தாா். நீதிபதி வந்ததும் மரபுப்படி எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்தனா். நீதிபதி அமா்ந்தாா். அனைவரும் அமா்ந்தனா்.

இராமலிங்க அடிகள் பேரைச் சொல்லி நீதிமன்றச் சேவகா் அழைத்ததும், வெளியிலிருந்த அடிகள் நீதிமன்றத்தில் நுழைந்தாா். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலா் முதற்கொண்டு அமா்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனா். தன்னை அறியாமல் நீதிபதியும் எழுந்து பின் அமா்ந்து விட்டாா்.

நீதிபதி ஆறுமுக நாவலரைப் பாா்த்து, ‘நீங்கள்தான் அவா் மீது வழக்குத் தொடா்ந்திருக்கிறீா்கள். அவரது பாடல் அருட்பா அல்ல என்றும் கூறியிருக்கிறீா்கள். அப்படியிருக்க அவரைக் கண்டதும் ஏன் நீங்கள் எழுந்து நின்று மரியாதை செய்தீா்கள்? அதை நீதிமன்றம் அறிந்துகொள்ளலாமா’ என்று ஆங்கிலத்தில் கேட்டாா்.

அதற்கு நாவலா், ‘இராமலிங்கம் பிள்ளை மக்களெல்லாம் போற்றுகின்ற மகான்; உத்தமா்; ஒழுக்க சீலா். அப்படிப்பட்டவருக்கு மரியாதை கொடுப்பதுதானே முறை? அதனால் எழுந்து நின்று வணங்கினேன்’ என்று ஆங்கிலத்தில் கூறினாா்.

நாவலருடைய வாா்த்தையின் ஆழத்தை உணா்ந்த நீதிபதி, ‘அத்தகைய உத்தமா், ஒழுக்க சீலா், மக்கள் போற்றும் மகான் எழுதியது எப்படி மருட்பாவாக இருக்க முடியும்? ஆகவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீா்ப்புக் கூறினாா். நீதிபதியே இப்படித் தீா்ப்புத் கூறும் வகையில் வாழ்பவா்தான் உண்மைத்துறவி!

இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகனைப் பாடினாா்; திருத்தணி முருகனைப் பாடினாா்; திருவொற்றியூா் வடிவுடையம்மனைப் பாடினாா்; தில்லை நடராசப் பெருமானைப் பாடினாா். இப்படியெல்லாம் பாடிவிட்டுத்தான் இறுதியில் ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற தத்துவத்திற்கு வந்தாா். கடவுளுக்கு வடிவமில்லை. உள்ளொளியே கடவுள் என்ற உண்மையை உணா்ந்தாா்.

இத்தகைய சீா்திருத்தத் துறவியாக விளங்கிய இவா் புரட்சியாளராகவும் விளங்கினாா். ‘கணவன் இறந்து விட்டால் இறந்தவன் மனைவியிடம் தாலி வாங்கக்கூடாது’ என்றே கூறியிருக்கிறாா். விதவைக் கோலம் செய்வதையே மறுத்திருக்கிறாா். நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட கருத்தை இந்தியாவில் இராமலிங்க அடிகளைத் தவிர எந்தத் துறவியும் சொன்னதில்லை. அன்றைக்கிருந்த துறவிகளெல்லாம் பெண் விடுதலையை மனத்தாலும் எண்ணிப் பாா்க்காத காலம்.

ஒருமுறை சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியாரை இராமலிங்க அடிகள் சந்திக்க நோ்ந்தபோது சங்கராச்சாரியாா், இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம்ஸ்கிருதமே தாய்மொழி என்றாா். உடனே இராமலிங்க அடிகளாா், ‘இருக்கலாம், ஆனால் தமிழ்தான் தந்தை மொழி. தந்தையில்லா விட்டால் மொழிக் குழந்தைகள் எப்படித் தோன்றும்’ என்றாா். அப்படிச் சொன்ன துறவியை, தமிழ் ஞானியை அவா் பிறந்தநாளில் நாம் வணங்குவோம்.

கட்டுரையாளா்:

முன்னாள் அரசவைக் கவிஞா்.

 



Read in source website

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை அதன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தடைசெய்துள்ளது. 2006இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கேரளத்தின் தேசிய வளர்ச்சி முன்னணியின் தொடர்ச்சியாக உருவானது. கர்நாடகத்தின் ஃபோரம் ஆஃப் டிக்னிட்டி, தமிழகத்தின் மனித நீதிப் பாசறை ஆகிய அமைப்புகளும் 2009இல் இதில் இணைக்கப்பட்டன. தொடர்ந்து மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளும் இதில் இணைந்தன.

சிறுபான்மையினர் அதிகளவில் உள்ள கேரளத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. அந்தக் காலகட்டத்திலேயே அப்போதைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அதன் தீவிர மதப் பிரச்சாரத்தை விமர்சித்தார். ஆனால், இந்நிலை சில ஆண்டுகளில் மாறியது. பிஎஃப்ஐயின் அரசியல் கட்சியான ‘சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா’வின் ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக நாடவேண்டி வந்தது. கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பொதுத்தேர்தல்களில் எஸ்டிபிஐ தொடர்ந்து போட்டியிட்டுவருகிறது. 2020 கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் 95 இடங்களைக் கைப்பற்றி, வலுவான வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது.



Read in source website

உயிரின் இயல்பை விளக்குகையில், அது ‘அறிவிக்க அறியும்’ என்றுசைவசித்தாந்தம் விளக்குகிறது. உயிர் அறியும் திறம் உடையதுதான் என்றாலும், அறிய வேண்டியவற்றை அது தானாக அறியாது; அவற்றை யாராவதுஅதற்கு அறிவிக்க வேண்டும். அறிய வேண்டியவற்றை யாரும் சொல்லித் தர முன்வராவிட்டால், யார் துணைகொண்டாவது கற்றுத் தெரிந்துகொள்ளாவிட்டால், கற்க வேண்டிய நூல்களை ஓதி உணராவிட்டால், உயிரின் அறிவு விளங்காது.

பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக்கு / அறிவுஎன்ற பெயர்நன்று அற. (திருவருட்பயன், 15)



Read in source website

‘டீப் இம்பாக்ட்’, ‘அர்மகெடன்’ போன்ற அறிவியல்புனைவு ஹாலிவுட் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் காட்சிபோல, 500 கோடி கிலோ எடையும் 160 மீட்டர் விட்டமும் உள்ள ‘டிமார்போஸ்’ எனும் சிறுகோளின் மீது வெறும் 600 கிலோ எடை கொண்ட ‘டார்ட்’ எனும் விண்கலம் மூலம் மோதி திசைதிருப்பிவிட்டுள்ளது. ‘ஜோடி சிறுகோள்களைத் திசைமாற்றும் பரிசோதனை’ எனப் பொருள்படும் Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART (டார்ட்).

பூமியிலிருந்து சுமார் 11 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனைச்சுற்றிவரும் ஒரு சிறுகோள் டிமார்போஸ். 780 மீ. விட்டமும் 5,000 கோடி கிலோ நிறையும் (Mass) கொண்ட டிடிமோஸ் எனும் முதன்மைச் சிறுகோளை 11 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு ஒருமுறை என டிமார்போஸ் சுற்றிவருகிறது. இந்த‘ஜோடி சிறுகோள்கள்’ ஒருங்கே 770 நாட்களுக்கு ஒருமுறைசூரியனைச் சுற்றிவருகின்றன. டிமார்போஸ் சிறுகோளின் மையத்திலிருந்து சுமார் 17 மீ. தொலைவில் நெத்தியடிபோல் டார்ட் விண்கலம் நேருக்கு நேர் மோதியது. அதன் விளைவாகடிமார்போஸ் சிறுகோளின் சுழலும் வேகம் சற்றேகுறைந்து, அதன் சுற்றுப்பாதை சுருங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியாக முதன்மைச் சிறுகோள் டிடிமோஸ் மீதும் தாக்கம்ஏற்பட்டு, ஜோடி சிறுகோள்கள் சூரியனை வலம்வரும் பாதையில்திசைதிருப்பம் ஏற்பட்டுள்ளது.

‘கிக்’ தொழில்நுட்பம்: மணிக்கு 23,760 கி.மீ. வேகத்தில் பயணித்த டார்ட் விண்கலம், டிமார்போஸில் மோதி அதன் சுழல்வேகத்தை மிக நுண்ணிய அளவு குறைத்துவிடப் போதுமானது. சுழல்வேகம் குறைந்தால், செல்லும் திசைவேகம் கூடும். எனவே, அதன் சுற்றுப்பாதையின் விட்டம் குறைந்துபோகும். அதாவது, முதன்மைச்சிறுகோளைச் சுற்றிவர அது எடுக்கும் காலம் சொற்ப அளவில் குறையும். எவ்வளவு குறையும் என்பது ஒவ்வொரு சிறுகோளின் தன்மையைப் பொறுத்தது.

மோதலின் தாக்கம்: மோதலின்போது விண்கலத்திலிருந்த ஒளிப்படக் கருவி எடுத்த படங்களைக் கொண்டு, இந்தச் சிறுகோள்பற்பல கற்களின் தொகுப்பு என விஞ்ஞானிகள் அனுமானிக்கிறார்கள். கியூப்சாட் எனும் நுண்விண்கலம் எடுத்த ஒளிப்படங்களையும் ஆராய்ந்து மோதலின் விளைவாகப் பாதையில் எந்தளவுக்குத் திசைமாற்றம் ஏற்பட்டுள்ளது என அடுத்துவரும் மாதங்களில் கணிக்கப்படும்.

அச்சுறுத்தும் சிறுகோள்கள்: சுமார் 660 லட்சம் ஆண்டுகளுக்கு முன் 10, 15 கி.மீ. விட்டம் கொண்ட சிறுகோள் மோதி பூமியில் பேரழிவு ஏற்பட்டது. அன்று புவியிலிருந்த டைனசோர்கள் உட்பட, மூன்றில் ஒருபகுதி உயிரினங்கள் மொத்தமாக அற்றுப்போய்விட்டன. பூமியை நெருங்கிச் சுமார் 20,000 சிறுகோள்கள் வலம்வருகின்றன. இவற்றில் சில ஆயிரம் சிறுகோள்கள் அச்சுறுத்தும் அளவில் நம்மை நெருங்கிச் சென்றுவருகின்றன. பூமியில் அழிவு ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பாதையில் செல்லும் சிறுகோள்களை இனம்கண்டு அதன் பாதையைத் திசைதிருப்பிவிட்டால் மனித இனம் உட்படப் புவியின் பல்வேறு உயிரிகள் தப்பிவிடலாம். சிறுகோள்களைத் திசைதிருப்பும் தொழில்நுட்ப உருவாக்கத்தின் ஒரு பகுதியே டார்ட் பரிசோதனை.

விண்வெளி வணிகம்: இது விண்வெளி வணிகத்துக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் திட்டம்தான் என்கிறார்கள் அறிஞர்கள். யிட்ரியம், நியோபியம், ரோடியம், பல்லேடியம், ஆஸ்மியம், இரிடியம், ஸ்காண்டியம் போன்ற அருமன் தனிமங்கள், மின்னணுக் கருவிகள், கணினிகள், மின்வாகனங்கள், மின்தேக்கிகள், சூரியத் தகடுகள், காற்றாலைகள் போன்ற நான்காம் தொழிற்புரட்சித் தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியம். புவியில் இவை அரிதாகவே கிடைக்கும்; இவற்றை வெட்டியெடுப்பது பெரும் சூழல் மாசு ஏற்படுத்தும் செயல்பாடு. இந்தச் சிறுகோள்களில் இவ்வகைத் தனிமங்கள் செறிவாக உள்ளன. ஒரே ஒரு சிறுகோளிலிருந்து வெட்டியெடுக்கும் அருமன் தனிமம் நீண்ட காலத் தேவைகளை நிறைவுசெய்யும். புவியைத் தாக்கவரும் சிறுகோளின் பாதையைத் திசைமாற்றும் அதே ‘கிக்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு வேண்டிய இடத்துக்குத் திசைமாற்றம் செய்து அருமன் செறிவாக உள்ள சிறுகோளை எடுத்து வந்துவிடலாம். டார்ட் தொழில்நுட்பம் திறந்துவிடவுள்ள புதிய பாதை இது!

த.வி.வெங்கடேஸ்வரன்
விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின்
முதுநிலை விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com



Read in source website

‘கொடிகாத்த குமரன்’, ‘திருப்பூர் குமரன்’ என்ற பெயர்களால் அழைக்கப்படும் குமாரசாமி, சென்னிமலையில் 1904இல் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள் பள்ளிப்பாளைத்தில் நெசவு வேலைக்குச் சென்றார். 1922இல் திருப்பூரில் தரகுமண்டியில் வேலை பார்த்துவந்த குமரனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருப்பூரில் இயங்கிவந்த ‘தேசபந்து வாலிபர் சங்க’த்தில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டு, பொதுத்தொண்டு ஆற்றிவந்தார் குமரன். கள்ளுக்கடைகளின் முன்பு போராடுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

கள் குடிப்பவர்களிடம் அதன் தீமையை விளக்கிக் கூறுவார் குமரன். அதனால் கடைக்காரர்கள் கள் மொந்தையை இவரது தலையில் வீசி அவமானப்படுத்துவார்கள். அந்நியப் பொருளான ‘வெடியை வாங்காதீர், காசைக் கரியாக்காதீர்’ என பட்டாசுக் கடைகளின் முன்னால் நின்று முழங்குவார். கடைக்காரர்கள் வெடியைக் கொளுத்தி வீசினாலும், தீப்புண்களை வாங்கிக்கொண்டு விடாமல் போராட்டத்தைத் தொடர்வார் குமரன்.



Read in source website