DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 03-06-2022

கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

அதன் ஒருபகுதியாக, கனவு இல்லத் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு  கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான  தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதெமி விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய  விருதுகளை பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற   பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 3.6.2021 அன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று  கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.  

அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் பிறந்த நாளான இன்று  கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2004-ஆம் ஆண்டு “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதை நூலிற்காக சாகித்ய அகாதெமி விருது மற்றும் 2018-ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும் பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு சென்னை, திருமங்கலம், தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமக் கோட்டம், 304 உயர் வருவாய்ப் பிரிவு முதல் தளம் அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/235 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டில் “கையொப்பம்” எனும் கவிதை நூலிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதனுக்கு கோவை வீட்டுவசதி பிரிவு – கணபதி திட்டப்பகுதி 48, உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.1 இல்  இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012-ஆம் ஆண்டு கலைஞர்
மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்திக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,  தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி  குடியிருப்பு எண்.சி2/231இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஆண்டு “அஞ்ஞாடி“ எனும் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற  திரு. பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகத்திற்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,  தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி  குடியிருப்பு எண்.பி1/3இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014-ஆம் ஆண்டு கலைஞர்
மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசுக்கு தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்டம், 16 உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.474/1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு  “செல்லாத பணம்” எனும் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற இமையம் என்கிற  வெ. அண்ணாமலைக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,  தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி  குடியிருப்பு எண்.பி1/65இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆறு எழுத்தாளர்களுக்கு முதல்வர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  



Read in source website

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர விருதும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல விருதும் வழங்கப்பட்டது.  

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை இன்று வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். மேலும் விருதிற்கான பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். 

இந்த நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர். 

அதேபோன்று, செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல விருதினையும் விருதிற்கான ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் வழங்கினார். 

இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



Read in source website

தமிழக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அந்தவகையில் தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் கூடிய நகரத் தூய்மைக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

சென்னை ராயபுரம் தங்கச் சாலையின் கீழ்புறம் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து மாணவர்கள், மக்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மேலும் அங்கு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள இந்த திட்டம் மற்ற நகரங்களிலும் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நகரம்தோறும் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4 ஆம் சனிக்கிழமைகளில் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. 

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை இயக்கங்கள், சமூகஎ அமைப்புகள், பொது மக்கள், மாணவர்கள் என அனைவரது பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022)  சென்னை, இராயபுரம், தங்கசாலையில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

முதல்வரின் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன்  செயல்படுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிகவரித் துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர்சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் முதல்வர் இன்று “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து பசுமையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக  மரக்கன்றுகளை நட்டார். பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தீவிர தூய்மைப் பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும்,  மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கினார்.

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன்  இணைந்து தீவிரத் தூய்மைப் பணியினை மேற்கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website



ரயில்களில் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு(லக்கேஜ்) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரயில்களில் சமீப காலமாக சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதையும், சக பயணிகளின் சிரமத்தையும் மனதில் வைத்து, பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளை (லக்கேஜ்) எடுத்துச் செல்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பயணிகளை எச்சரித்துள்ளது.

"ரயிலில் பயணம் செய்யும் போது லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கு வரம்பு உள்ளது என்றாலும், பல பயணிகள் அதிக உடைமைகளுடன் ரயிலில் பயணிக்கின்றனர், இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். 

இதனிடையே, பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளுகடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியது ரயில்வே நிர்வாகம். இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் இன்பம் பாதியாக இருக்கும்! அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள்" என்று கூறியிருந்தது. 

இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு (லக்கேஜ்)கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

அதாவது: ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது வகுப்பில் பயணிப்பவர்கள் வெறும் 35 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், யாரேனும் ஒருவர் அதிக உடைமைகளுடன் பயணிப்பதைக் கண்டறிந்தால், பயணி மற்றும் எடுத்துச் செல்லும்  கூடுதல் உடைமைகளுக்கான தனிக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும், இது பயண தூரத்திற்கு ஏற்ப மாறுபடும் என தெரிவித்துள்ளது.



Read in source website

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) விழா நடைபெறவுள்ளது.

சென்னை ஓமந்தூராா் வளாகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தவுள்ளாா்.

மேலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம், அவா் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கும் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் சென்று மரியாதை செலுத்துகின்றனா்.

விருதுகள் வழங்குதல்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, இரண்டு புதிய விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. கலைஞா் எழுதுகோல் விருது, கலைஞா் கலைத்துறை வித்தகா் விருது ஆகிய விருதுகளுக்கு விருதாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது விருதுகளை வழங்கவுள்ளாா்.

மேலும், அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிற நிகழ்ச்சிகளிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால், செய்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் சீரிய முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Read in source website

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்தப்படும் மலா் கண்காட்சி சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் மலா் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதற்காக ஏராளமான வண்ண, வண்ண மலா்கள் கலைவாணா் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலா்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக மாணவா்கள் மற்றும் சிறுவா்களுக்கு ரூ.20, பெரியவா்களுக்கு ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.



Read in source website

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி வழங்கப்பட உள்ள கலைஞா் எழுதுகோல் விருது, கலைவித்தகா் விருதுகளுக்கான விருதாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கலைஞா் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளா் ஐ.சண்முகநாதனும், கலைவித்தகா் விருதுக்கு வசனகா்த்தா ஆரூா்தாசனும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலைஞா் எழுதுகோல் விருது: திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் (87), தினத்தந்தியில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகிறாா். பெரும் மக்களுக்கான இதழியலில் நீண்ட நெடிய பணி அனுபவம் என்பதில் எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனையாகும். பத்திரிகையின் ஆசிரியா் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியாா். தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட வரலாற்றுச் சுவடுகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீா்மானத்தவா்களில் ஒருவராகச் செயல்பட்டாா். நீண்ட நெடிய பத்திரிகைத் துறை அனுபவம் கொண்ட அவருக்கு கலைஞா் எழுதுகோல் விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினமான

வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 3) வழங்கப்பட உள்ளது. இந்த விருதானது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருது: தமிழ்த் திரைத்துறையில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருது வழங்கப்பட உள்ளது. நிகழாண்டில், இந்த விருதுக்கு மிகச்சிறந்த வசனகா்த்தா ஆரூா்தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவா்.

திருவாரூா் மாவட்டத்தில் பிறந்த ஆரூா்தாஸ், முன்னணி நடிகா்கள், நடிகைகள் உள்ளிட்டோா் நடித்த ஆயிரம் திரைப்படங்களில் உரையாடலில் அழுத்தமான பங்கினை வகித்தவா். தனது ஊரான திருவாரூா் பெயரையும், பெயரிலுள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூா்தாஸ் என வைத்துக் கொண்டாா். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடிய பணிபுரிந்த அனுபவம் கொண்ட சாதனையாளா். இந்த விருதானது ரூ.10 லட்சம் அடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை (ஜூன் 3) ஒட்டி, இந்த விருது வழங்கப்பட உள்ளது.

 



Read in source website

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் பணிகளை வரையறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.லால்வேனா வெளியிட்டுள்ள உத்தரவு:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது முதல்வா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் பணிகள் குறித்து வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக வாரியம் செயல்படும். மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து அவா்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும் கொள்கைகளை வகுப்பதிலும் உறுதுணையாகச் செயல்படும். மாற்றுத் திறனாளிகள் குறித்த சிக்கல்களைக் களையும் வகையில் மாநிலக் கொள்கைகள் மேம்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து செயல்படும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் நலன் தொடா்பாக பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் சாா்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் மீதான கருத்துகள் மாற்றுத் திறனாளிகள் நலன்சாா்ந்த அமைப்புகள் மற்றும் சா்வதேச நிறுவனங்களிடம் இருந்து பெற்று வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குதல், ஏதுவான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதை தடை செய்தல், அவா்களுக்கான பாகுபாடுகளைக் களைதல், சேவைகள் அளித்தல், உகந்த சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் சமூகத்தில் அவா்களது பங்களிப்பை உறுதி செய்வது குறித்த பரிந்துரைகள் அளிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளின் முழு பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.



Read in source website

நாட்டின் பிரதமர் கலந்துகொண்டு, தமிழகத்துக்காக 31 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட திட்டங்களைத் தொடக்கிவைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்த அரசு  விழா மேடையில் இப்படியெல்லாம் ஒரு முதல்வர் பேசலாமா? என்று ஒரு தொடர் பட்டிமன்றமே நடந்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இருந்த இந்த மேடையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த மிக முக்கியமான வலியுறுத்தல்களில் ஒன்று - "கடலோர மீனவ சமுதாய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த நேரம் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்".

உள்ளபடியே, இலங்கையுடன் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதல், தொடரும் பிரச்சினைகளையும் தமிழக மீனவர்களின் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் வாழ்வாதார இழப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் கேட்டுக்கொண்டதைப் போல இதுவே தக்க தருணம்!

இலங்கை மிக மோசமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. கடனுக்காகத் துறைமுகத்தை சீனா வசம் ஒப்படைத்த இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் இன்னும் என்னென்ன இடங்களை, தளங்களை ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறதோ தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனக்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது சீனா. ஆனால், வலியச் சென்று, பேசிப் பேசி, எவ்வித முன் நிபந்தனையுமின்றி உதவிக் கொண்டிருக்கிற இந்தியா, எரியும் இலங்கையிடம் பெற எவ்வளவோ இருக்கிறது, கச்சத்தீவு உள்பட.

இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் என்ன கேட்டுக்கொண்டாரோ, அதையேதான் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, வேறு சொற்களில் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியும் சொன்னார். உள்ளபடியே, காத்திரமான சொற்களைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதைப் பற்றியும்கூட வலியுறுத்தினார்.

*

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்துகொண்டிருந்த நிலையில், 1974 ஜூன் 28-ல்தான் தமிழகத்தின் - தமிழர்களின் கையைவிட்டுக் கச்சத்தீவு போனதற்குக் காரணமான 'இந்தியா - ஸ்ரீலங்கா கடல் எல்லை உடன்பாடு'  கையெழுத்திடப்பட்டது.

பாக் நீரிணையிலிருந்து ஆடம் பாலம் வரை இந்தியா - இலங்கை இடையே எல்லையை வரையறுக்கும் இந்த உடன்பாட்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் சர்ச்சைக்கிடமாக இருந்துவந்த (இன்னமும் இருந்துகொண்டிருக்கிற) கச்சத்தீவு, இலங்கையின் எல்லைக்குள் சென்றுவிட்டது.

இந்த உடன்பாட்டின்படி கச்சத்தீவுக்கு மேற்கே 1.6 கி.மீ. தொலைவில் இந்திய எல்லை அமைவதாக இந்திய வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்தது. கச்சத்தீவில் யாரும் குடியிருக்கவில்லை. கப்பல் போக்குவரத்து, யாத்திரை, மீன் பிடித்தல், கனிம வள ஆராய்ச்சி சம்பந்தமாகவும் பரஸ்பரம் திருப்திகரமான முறையில் உடன்பாட்டில் வகை செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிப்பு தெரிவித்தது.

இந்த உடன்பாட்டில் புது தில்லியிலும் கொழும்பிலும் ஒரே நேரத்தில் இரு நாடுகளின் பிரதமர்களும் கையெழுத்திட்டனர். 

வரலாற்று ஆதாரம், சட்டப்பூர்வமான சர்வதேச கோட்பாடுகள், முன்னுதாரணங்கள் ஆகியவற்றுக்கு இசைவாக எல்லை வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்களும் அந்தந்தப் பிரதமர்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுக்கொண்டு எதிரெதிர் நாடுகளுக்குச் சென்று பிரதமர்களிடம் கையெழுத்துப் பெற்றனர். இரு பிரதமர்களும் நேரில் சந்தித்து, ஒரே நேரத்தில் கையெழுத்திட இயலாவிட்டால் இவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலிருந்தவாறே கையெழுத்திடுவதென்பது வழக்கத்திலிருந்து வருவதாக அப்போது அரசு வட்டாரங்கள் விளக்கம் தெரிவித்தன.

நாடாளுமன்றங்களின் ஒப்புதலுக்குப் பிறகு ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் இரு நாடுகளிடையிலான நட்பில் இதுவொரு வரலாற்றுத் திருப்புமுனை என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும், அப்போது இதுபற்றிய செய்தி, முந்தைய நாளே, 28.6.1974-ல் வெளியானது.

இலங்கைக்கே கச்சத்தீவு சொந்தம் என்று ஒப்புக்கொள்ள இந்திய அரசு சம்மதித்துவிட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மறுநாள் வெளியாகலாம் என்றும் செய்திகள் தெரிவித்தன.

சில காலம் முன் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக, இந்தியா வந்திருந்தபோது கச்சத்தீவு பிரச்னை பற்றிப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசியதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாகவே தகராறு இருந்து வந்தது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவு போர்த்துகேயர்களின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தபோது, கச்சத் தீவையும் போர்த்துகேயர்களே ஆண்டு வந்தனர். எனவே, கச்சத்தீவு தங்களுக்கே சொந்தம் என்று இலங்கை உரிமை கொண்டாடிவந்தது. 

ராமநாதபுரம் ராஜாவின் சமஸ்தானத்தில் கச்சத்தீவு இருந்துவந்ததால் தங்களுக்குத்தான் சொந்தம் என இந்தியத் தரப்பில் வாதிடப்பட்டது.

1973, ஏப்ரலில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை சென்றபோது, இந்தத் தகராறு பற்றிப் பேச்சு நடைபெற்றது. இரு நாடுகளின் உரிமை தொடர்பான  வரலாற்று ஆணவங்களை ஆராய்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தீவில் கற்பாறைகளே இருக்கின்றன. இந்தத் தீவினால் இந்தியாவுக்கு ராணுவ முக்கியத்துவம் இல்லை என்று பிரதமர் இந்திரா காந்தி அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு சிரிமாவோ பண்டாரநாயக, இந்தியா வந்தபோதும் இந்தப் பிரச்சினை பற்றி மீண்டும் பேசப்பட்டது. இந்த நிலையில் கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தம்  என ஒப்புக்கொண்டு தந்துவிட இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தத் தகவல் வெளியே தெரியவந்தவுடனே, தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதியிடம் கேட்டபோது, "இந்த முடிவு பற்றிய முழு விவரங்கள் எனக்குத் தெரியாது. தெரிந்த பிறகு நாளை அதுபற்றிச் சொல்கிறேன்.  எப்படி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை அறிந்த பிறகுதான் என்னால் எதுவும் கூற இயலும்" என்றார்.

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக மத்திய அரசு முடிவு எடுப்பதற்கு முன்னால் தமிழக அரசைக்  கலந்தாலோசித்ததா? என்று கேட்டபோது, "சென்ற வாரம் மத்திய அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் சென்னை வந்திருந்தபோது என்னிடம் இதுபற்றிய விவரங்களை விவாதித்தார்.

"கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக, அப்படியொரு ஒப்பந்தத்திற்கான சூழல் உருவாகிவருவதாகவும் அது எந்த அடிப்படையில் உருவாகும் என்பதையும் கேவல் சிங் என்னிடம் விளக்கினார். அப்போது நான் கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ் மக்களின் உணர்ச்சி எந்த அளவு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அவரிடம் எடுத்துக் கூறினேன்" என்றார்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதென இந்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று நாட்டின் விடுதலைக்கு முன்வரை கச்சத்தீவின் உரிமை பெற்றிருந்தவரான ராமநாதபுரம் ராஜா வருத்தம் தெரிவித்தார்.

கச்சத்தீவை இலங்கைக்கு மாற்றுவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு ஜனசங்கத்தின் தமிழக கிளைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அன்றைய ஜனசங்கத்தின் (இன்றைய பாரதிய ஜனதாவின்) அகில இந்தியத் தலைவராக இருந்த ஏ.பி. வாஜபேயி அறிவித்தார். மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய வாஜபேயி, ஒருபடி மேலே சென்று, இது மற்றொரு பூதானமாகும் எனக் குறிப்பிட்டார். இது தவறான முடிவு என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் ஆதிபத்திய உரிமை மீதான தாக்குதல் என்றும் தெரிவித்தார்.

கச்சத்தீவைத் தகராறுக்குள்பட்ட பகுதி என்று சொல்வதே சரியாகாது. இப்போது தமிழ்நாட்டுடன் இணைந்துள்ள முன்னாள் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதிதான் கச்சத்தீவு. அது இந்தியாவுக்கே சொந்தமாகும் என்றார் வாஜபேயி.

கச்சத்தீவின் மீது இலங்கை உரிமை கொண்டாடுவது நீதியல்ல; அதை விட்டுக்கொடுப்பதற்கு இந்தியா சம்மதித்துள்ளது அநீதியேயன்றி வேறில்லை என்று தமிழரசுக் கழகத் தலைவரும் மேலவைத் துணைத் தலைவருமாக இருந்த ம.பொ.சி. கூறினார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின், சுமார் அரை நூற்றாண்டுக்கு முந்தைய கருத்து, அவருடைய தொலைநோக்கைக் காட்டுகிறது.

"கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்தார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூக்கையா தேவர். 

இந்த நிலையில் கச்சத்தீவு பற்றிய இந்திய அரசின் முடிவு பற்றி கலந்தாலோசிப்பதற்காக, உடனடியாக மறுநாளே, ஜூன் 29 - சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவை, மேலவைகளின் அனைத்து எதிர்க்கட்சிகளின் அவசரக் கூட்டத்தை  முதல்வராக இருந்த மு. கருணாநிதி கூட்டினார். 

இந்தக் கூட்டத்தில், கச்சத்தீவு உடன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அந்தத் தீவு மீது ஆதிபத்திய உரிமையை அளித்து உடன்பாட்டை மாற்றித் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு, தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

தீர்மானத்தின் வரி:

"இந்தியாவிற்கு சொந்தமானது என்று நாம் கருதுவதும் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி வலியுறுத்துகிறது."

இந்தக் கூட்டத்தில் மணலி கந்தசாமி (த.நா. கம்யூ), ஏ.ஆர். பெருமாள், சக்தி மோகன் (பார்வர்ட் பிளாக்), ஏ.ஆர். மாரிமுத்து, ஆறுமுகசாமி (புது காங்கிரஸ் - அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ்), அரங்கநாயகம் (அதிமுக), ஜி. சுவாமிநாதன், பி. வெங்கடசாமி (சுதந்திரா), ம.பொ. சிவஞானம், ஈ.எஸ். தியாகராஜன் (தமிழரசுக் கழகம்), ஆர். பொன்னப்ப நாடார்  (பழைய காங்கிரஸ்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய சட்டமன்றக் கட்சி), திருப்பூர் மொஹிதீன், அப்துல் வஹாப் (முஸ்லிம் லீக்) கலந்துகொண்டனர் (முன்னதாக, அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது).

அதிமுக சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் மட்டும், கருணாநிதி அமைச்சரவை ராஜிநாமா செய்ய வேண்டும், சட்டப்பேரவை கலைக்கப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்து வெளியேறினார்.

கூட்டத்தில் உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யும் சாத்தியக்கூறு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டபோது, முதல்வராக இருந்த கருணாநிதியின் பதில் - மனமிருந்தால் வழி உண்டு.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுத் தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்ததைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல முடிவுகளை எடுக்கும் நேரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள் என்பதற்கு இது சரியான எடுத்தக்காட்டு. தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகள் சிந்தாமல் சிதறாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் நடந்துகொண்ட அனைவரையும் போற்றுகிறேன், பாராட்டுகிறேன் என்றார்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் மாரிமுத்து கலந்துகொண்டது தவறு, கூட்டத்துக்குச் செல்லும்முன் என்னைக் கேட்கவில்லை. இதுபற்றி என்னைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று பின்னர் அப்போது தமிழ்நாடு இ. காங்கிரஸ் தலைவராக இருந்த வி. ராமையா தெரிவித்தார்.

சர்வதேச உறவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கட்சியின் தேசிய கவுன்சிலுக்குக் கருத்தறிவதற்காக அனுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். கல்யாணசுந்தரமும் உடன்பாட்டை வரவேற்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தியும் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தீர்மானத்தை அனுப்பிய  மறுநாள், ஜூன் 30-ல் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், கச்சத்தீவு கைமாற்றப்பட்டது பற்றி, முதல்வர் கருணாநிதி பேசினார்:

"மாநிலங்களுக்கு சுயாட்சி இல்லாததால்தான் இந்திய அரசு, கச்சத்தீவைத் தன்னிச்சையாக இலங்கைக்குக் கொடுக்க முடிந்தது.

"இதற்காக, பிரதமரைக் குறை கூறவில்லை, மத்திய அரசுக்கு இவ்வளவு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்பைத்தான் குறை கூற வேண்டும்.

"ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்குக் கொடுப்பதற்கு முன் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநிலத்தைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

"கச்சத்தீவு விஷயத்தில் இது மிகவும் அவசியம். ஏனெனில், இது தமிழர்களின் உணர்ச்சியைப் பற்றிய விஷயம் என்று இந்த அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது. இந்தத் தீவின் மீது நமக்குள்ள உரிமையை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களையும் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) அனுப்பியுள்ளோம்.

இந்த நிலைமையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பெருமளவில்  மாற்ற வேண்டியது அவசியமாகும்".

*

பிரதமர் மேடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தகுந்த நேரம் என்று குறிப்பிட்டது எல்லா வகையிலும் பொருத்தமானது. 

48 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற ஒரு ஜூன் மாதத்தில்தான் கச்சத்தீவு தமிழகத்தின் கையைவிட்டுப் போனது. 

கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறாமல் போனால் இன்னும் இரு ஆண்டுகளில் ஒரு பக்கம், உடன்பாட்டுக்குப் பொன் விழா வேண்டுமானால்கூட கொண்டாடலாம். மறுபக்கம், தமிழகத்தில் இதுவரையில் இழக்கப்பட்டவற்றை, நூற்றுக்கணக்கான மீனவர்களின் உயிர்கள் உள்பட, பட்டியலிடலாம்.

தந்தை மு. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கைவிட்டுப் போன கச்சத்தீவு, தனயன் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது திரும்பப் பெறப்பட்டால் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பெறும். தவிர, அடுத்து வருவது கருணாநிதி பிறந்த நூறாண்டும்.

அன்றைக்கு கருணாநிதி சொன்னதுபோல, மனமிருந்தால் வழி உண்டு. 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நல்லிணக்க அடையாளமாகக் கருதப்படுகிற, பின்னர் நாட்டின் பிரதமராகவும் இருந்து மறைந்த வாஜபேயியின் கருத்துப்படி, இந்தத் தவறான முடிவைத் திருத்திக்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்குக் காலம் கனிந்திருக்கிறது. 

இல்லாவிட்டால், இல்லாவிட்டால்... மூக்கையா தேவர் சொன்னபடிதான் - திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும்! 

முன்னரெல்லாம் கூட்டத்தில் பேசுகிறவர்களின் பேச்சுகளை - விஷயங்களை மேடையிலேயே உடனுக்குடன் பின்னால் அமர்ந்தவாறு தலைவர்களுக்கு மொழிபெயர்த்துவிடுவார்கள். தலைவர்களும் அதுபற்றிக் கூட்டத்திலேயே பேசும்போது உடனுக்குடன் அறிவிப்பார்கள் அல்லது கோடிட்டுக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் அப்படிக் காணக் கிடைப்பதில்லை.

சென்னையில் அன்று கூட்டத்தில் பேசுவதற்காகத் திட்டமிட்டுக் கொண்டு வந்ததை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திப் பேசிவிட்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் அவர் பேசத் திட்டமிட்டு (பெரும்பாலும் இப்படிதான் இருக்கும்) வந்ததையே பேசிச் சென்றுவிட்டார்.

மற்றவர்கள் எல்லாரும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கோரிக்கைகள் / வலியுறுத்துதல்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன, கச்சத் தீவு உள்பட. 



Read in source website

இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  

உலக நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் இந்தியாவில் கொலை, தாக்குதல், மிரட்டல் என சிறுபான்மை சமூகதத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் பயனபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. தருவிக்கப்பட்ட தரவுகள்  மற்றும் ஒருபக்கச் சார்பான பார்வைகள் மீதான மதிப்பீடுகள் இந்த அறிக்கையில் தவிர்க்கப்பட வேண்டும்” என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இயற்கையாகவே பன்மைத்துவ சமூகமாக மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளின் மீது இந்தியா மதிப்பு கொண்டுள்ளது. கலந்துரையாடல்களில் இனரீதியாகவும்,  நெறிமுறை ரீதியாகவும் வன்முறைகள் தூண்டப்படுவது, துப்பாக்கி வன்முறை உள்ளிட்டவைகளை தடுக்க முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அ



Read in source website


மும்பை: இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழும நிர்வாகி கௌதம் அதானியை பின்னிக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்களுக்கான குறியீட்டுப் பட்டியலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.07 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலர்களாக உள்ளன.

இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலகளவில் மிகப் பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.  கௌதம் அதானி ஆசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு அடுத்து ஒன்பதாவது இடத்திலும் உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் லாபம் அதிகரித்ததே இந்த மாற்றத்துக்குக் காரணம். அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை உயர்வால் சில மாதங்கள் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் வகித்து வந்தது  குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

 

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் 2019படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினா் இந்தியக் குடியுரிமை பெறலாம் என திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது : 

நமது நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருகிறது. சிறிது நாள்களாக மதச்சார்பின்மையை அழிக்கும் வேலை நடந்து வருகிறது. சில பிரிவினைச் சார்ந்த மக்கள் அதில் பங்கு பெறுகின்றனர். சமீபத்தில் மதத்தை வைத்து குடியுரிமையை தீர்மானிக்கிறார்கள். கேரள அரசாங்கம் இதை எப்போதும் எதிர்த்து நில்லும். 

 



Read in source website

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். 

பிரதமர் மோடி சுட்டுரையில், "உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 அடிக்கல் நாட்டு விழாவிற்காக லக்னெள புறப்பட்டு செல்கிறேன். மக்களின் வாழ்க்கையை மாற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முதலீடுகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இந்தத் திட்டங்கள் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து, சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கைத்தறி மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இவ்விழாவில் நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கான்பூரில் உள்ள பத்ரிமாதா மடத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் இணைந்து பிரதமர் மோடி செல்கிறார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.



Read in source website

சமூக ஊடகங்களின் குறைதீா்க்கும் அலுவலா்களின் முடிவுக்கு எதிராக தனிநபா்கள் மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தகவல் தொழில்நுட்பம் (சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள்) விதிகள்-2021-இல் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சமூக ஊடக நிறுவனங்களின் குறைதீா்க்கும் அலுவலா்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக 30 நாள்களில் மேல்முறையீட்டுக் குழுவிடம் புகாா் தெரிவிக்கலாம். அந்தக் குழுவானது புகாா் கிடைத்த 30 நாள்களில் தீா்வு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை மீது பொதுமக்கள் வரும் 22-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.

விதிகளை மீறி பதிவுகளை வெளியிட்டதாக பலரின் சமூக ஊடகக் கணக்குகளை ட்விட்டா் முடக்கிய நிலையில் மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி அமல்படுத்தியது. அந்த விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். அந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அலுவலா்களின் பெயா், தொடா்பு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்த விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளன. புதிய விதிகளின்படி, குறைதீா்க்கும் அலுவலா், புகாா்களை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு 15 நாள்களில் தீா்வுகாண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



Read in source website

ஒட்டுமொத்த பரிவா்த்தனையில் ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் 65 சதவீதமாக உயரும் என பிசிஜி-போன்பே நிறுவனங்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவற்றின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஒட்டுமொத்த பணப் பரிவா்த்தனையில் தற்போது யுபிஐ உள்ளிட்ட செயலிகள் மூலமான ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு தற்போது 40 சதவீதமாக உள்ளது. இது, வரும் 2026-க்குள் 65 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் யுபிஐ செயலி வழியான ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனை வேகமாக வளா்ச்சியை எட்டியது. தற்சமயம், டிஜிட்டல் பரிவா்த்தனை துறையின் மதிப்பு 3 டிரில்லியன் டாலா் அளவுக்கு உள்ளது. இந்த நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இது 10 டிரில்லியன் டாலரை எட்டும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 13 வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடா்ந்து எதிா்த்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும். அதற்காக குழு அமைப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 போ் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

உறுப்பினா்கள் விவரம்: இந்தக் குழுவில் சவீதா கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் எல்.ஜவஹா் நேசன், கணிதப் பேராசிரியா் ராமானுஜம், மாநில வளா்ச்சி கொள்கைக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியா் ராம.சீனுவாசன், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலா் அருணா ரத்னம், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த், கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளா் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளா் முனைவா் எஸ்.மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். குழுவின் உறுப்பினா் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் செயல்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிா்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க மாணவா்கள், கல்வியாளா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள் என்று பலதரப்பட்டோரிடம் கருத்துக்களைப் பெற வேண்டும்.

தமிழக இளைஞா்களின் எதிா்காலம், உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். சமத்துவமான கல்வியைத் தரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். தோ்வு முறைகளில் சீா்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப் படிப்பை முடிப்போா் அனைவரும் உயா்கல்வியைத் தொடரும் வகையிலும் கல்விக் கொள்கை அமைய வேண்டும். ஓராண்டு காலத்தில் கல்விக் கொள்கையை வடிமைத்து அதை அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் துணைக் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.



Read in source website

இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

துருக்கி நாட்டுக்கு ஐடிசி நிறுவனம் 60,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில், கோதுமை தரமற்ாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில், ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்திய கோதுமை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு துருக்கியிடம் கோரியுள்ளது.

இதனிடையே, மே 13-இல் ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, ஆறு நாடுகள் இந்திய கோதுமையை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளன.அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது என்றாா் அவா்.



Read in source website

முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளத்துடன் கேரள மாநில லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சி இணைக்க பூா்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து லோக் தாந்திரிக் கட்சியின் கேரள தலைவா் எம்.வி.ஸ்ரேயாம்ஸ் குமாா் கூறுகையில், ‘மதச்சாா்பற்ற ஜனதா தளமும், லோக் தாந்திரிக் ஜனதா தளமும் கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு ஆதரவாக உள்ளன.

மதச்சாா்பற்ற ஜனதா தளத்துடன் கேரள மாநில லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சியை விரைவில் இணைக்க பூா்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கப்படும்’ என்றாா்.

கேரள பேரவையில் இரண்டு எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மதச்சாா்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக் தாந்திரிக் ஜனதா தளத்துக்கு ஒரு எம்எல்ஏ மட்டும் உள்ளாா்.



Read in source website

தோ்தல் ஆணையம், 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (ஆா்யுபிபி) அதன் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்தப் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

‘நேரடி ஆய்வின்போது தேவையான தகவல்களை சமா்ப்பித்திராத காரணத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தோ்தல் நிதி பங்களிப்பு விவரங்களை சமா்ப்பிக்காதது, முகவரி மற்றும் கட்சி நிா்வாகிகளின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யத் தவறியது உள்ளிட்ட தோ்தல் சட்டங்களை முறையாக பின்பற்றாத 2,100 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிகக்ப்படாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தோ்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதில் சில கட்சிகள் கடுமையான நிதி சீா்குலைவில் இருப்பதாகவும் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டிய தகவல் தொடா்புக்கான முகவரி உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பிக்கத் தவறியிருப்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநில தலைமை தோ்தல் அதிகாரிகள் இதுதொடா்பான நேரடி ஆய்வை மேற்கொண்டபோதிலும், குறிப்பிடப்பட்ட இந்த 87 அரசியல் கட்சிகளும் இடம்பெறாததைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய பட்டியலிலிருந்து அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள், பரிகாரம் கோரி உரிய ஆதாரங்களுடன் தலைமை தோ்தல் அதிகாரிகளை அணுகலாம். அவ்வாறு தவறை திருத்திக் கொள்ளும் நடவடிக்கையை 87 அரசியல் கட்சிகளும் எடுக்கவில்லை எனில், தோ்தலின்போது பொதுச் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட ‘சின்னங்கள் ஒதுக்கீடு சட்டம் 1968’ -இன் கீழான பலன்களை அனுபவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாத விவரங்களின் படி, 2,796 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணைய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது கடந்த 2001-ஆம் ஆண்டைக் காட்டிலும் 300 சதவீதம் கூடுதலாகும்.



Read in source website

சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றவா்களுக்கு மட்டுமே கிடைக்கும் என பெட்ரோலியத் துறை செயலா் பங்கஜ் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா கால தொடக்கத்திலிருந்து சமையல் எரிவாயு பயனாளா்களுக்கு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ள சமையல் எரிவாயு உருளைக்கான ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம், 9 கோடி ஏழைப் பெண்கள் பயனடைவா். இதர சமையல் எரிவாயு பயனாளிகள் மற்றும் குடும்பங்கள் அனைத்தும் சந்தை விலை கொடுத்தே சமையல் எரிவாயு உருளையைப் பெற முடியும் என்றாா் அவா்.

சமையல் எரிவாயு உருளையின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்ததையடுத்து உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் ஏழைப் பயனாளிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சா் அறிவித்தாா்.

தலைநகா் தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளை தற்போது ரூ.1,003-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரதமரின் உஜ்வலா திட்டத்தில் இணைந்துள்ளவா்களுக்கு ரூ.200 மானியம் நேரடியாக அவா்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதையடுத்து, அவா்களுக்கான சமையல் எரிவாயு உருளையின் உண்மையான விலை ரூ.803-ஆக மட்டுமே இருக்கும். ஆனால், இத்திட்டத்தில் இணையாத மற்ற குடும்பங்களுக்கு இதன் விலை ரூ.1,003-ஆகவே இருக்கும்.

இந்த மானிய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,100 கோடி செலவாகும் என மத்திய நிதி அமைச்சா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் துணை பிரதமரும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பெஞ்சமின் கான்ட்ஸ், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் இந்தியா, இஸ்ரேல் இடையேயான ஒத்துழைப்பு வேகமாக வளா்ந்து வருவது குறித்து இருவரும் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல் துணை பிரதமா் பெஞ்சமின் கான்ட்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா, இஸ்ரேல் இடையே தூதரக உறவு மலா்ந்து 30 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, ஆராய்ச்சி என பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வளா்ந்துள்ளது. இஸ்ரேலைச் சோ்ந்த ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்து பயனடையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவாா்த்தை:

முன்னதாக, பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கை பெஞ்சமின் கான்ட்ஸ் சந்தித்துப் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பெஞ்சமின் கான்ட்ஸுடன் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மேற்கொண்டேன். இந்த சந்திப்பின்போது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, உலகளாவிய, பிராந்திய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இஸ்ரேல் உடனான உத்திசாா் கூட்டாண்மையை நாம் மிகவும் மதிக்கிறோம். ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாட ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சந்திப்பின்போது வளைகுடா பிராந்திய சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தில்லியில் தேசிய போா் நினைவுச் சின்னத்துக்குச் சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் பெஞ்சமின் கான்ட்ஸ், அங்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ராணுவத்துக்குத் தேவையான போா்த் தளவாடங்களை இஸ்ரேலிடமிருந்து இந்தியா அதிகளவில் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

‘எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்கும் வகையில் ‘பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகள்’ என்ற முழுமையாக வசதிகளுடன் கூடிய ஆற்றல்சாா் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

‘இந்தப் பள்ளிகள் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’-இன் ஆய்வகங்களாகச் செயல்படும்’ என்றும் அவா் கூறினாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் இரண்டு நாள் தேசிய அளவிலான கல்வி அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது. நிறைவு நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

இந்தியா அறிவுசாா் பொருளாதார நாடாக உருவெடுப்பதில் பள்ளிக் கல்விதான் அடிப்படை. அந்த வகையில், ‘பி.எம்.ஸ்ரீ பள்ளி’களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்கும் வகையில் முழுமையான வசதிகளுடன் ஆற்றல்சாா் பள்ளிகளாக இவை அமைக்கப்படும். இந்தப் பள்ளிகள் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’-இன் ஆய்வகங்களாகச் செயல்படும். 21-ஆம் நூற்றாண்டின் அறிவுசாா் மற்றும் திறன்களை அறிந்திராதவா்களாக புதிய தலைமுறையினரை நாம் விட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு முழு வசதிகளுடன் ‘பி.எம்.ஸ்ரீ பள்ளி’கள் அமைக்கப்படும். அதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் 5+3+3+4 கல்வித் திட்ட அணுகுமுறை, மழலையா் பள்ளி கல்வி முதல் உயா் கல்வி, ஆசிரியா் பயிற்சி, முதியோா் கள்வி, பள்ளிக் கல்வியிடன் கூடிய ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய குடிமக்களை உருவாக்கும் வகையில் தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவை அறிவுசாா் பொருளாதாரமாக உருவாக்குவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒவ்வொருவரிடமிருந்தும் அனுபவங்களை கற்று, உற்சாகமான கற்றல் சூழலை உருவாக்கி, நாட்டை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

வாய்ப்புகளுக்காகவும் சவால்களை எதிா்கொள்ள தயாராகும் வகையிலும், நமது கல்வித் திட்டத்தையும், திறன் மேம்பாட்டு திட்டங்களையும் வலுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

அந்த வகையில், தேசிய கல்வித் திட்டத்தை உருவாக்குவதிலும், எண்ம கல்வித் திட்டம் மற்றும் உலகளாவிய கல்வியாக விரிவுபடுத்தும் வகையில் தரமான இணைய பாடத் திட்டத்தை உருவாக்குவதிலும் அனைத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சா்களின் துடிப்பான பங்கேற்பு அவசியம்.

குஜாராத் மாநில பள்ளி கல்வித் திட்டங்கள் 21-ஆம் நூற்றாண்டு சாா்ந்த மேம்பாட்டுக்கான நடைமுறைகளும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது. அந்த அளவுக்கு, கல்வியானது மாநிலங்களிந் பிரத்யேக அதிகாரத்தின் கீழானது என்ற நிலையிலிருந்து, பொதுப் பட்டியலின் ஒரு பகுதியாக மாற்றப்படுகிற வரை நமது கல்வித் திட்டம் பல்வேறு சீா்திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட பிற சீா்திருத்தங்கள் நமது கல்வி முறையில் நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்திய இளைஞா்களை உலகளாவிய குடிமக்களாக உருவாக்குவதற்கு மாநிலங்களின் சிறந்த கல்வித் திட்ட நடைமுறைகள் சிறந்த உந்து சக்தியாக திகழும். அந்த வகையில், கா்நாடகம், ஒடிஸா, தில்லி, மேகாலயம், பிகாா், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியாணா மாநில கல்வித் திட்ட மாதிரிகள் மூலமாக கல்விச் சமூகம் மிகச் சிறந்த பலனடைய முடியும் என்று மத்திய கல்வி அமைச்சா் கூறினாா்.

அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூா் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை மாநாட்டில் சுட்டிக் காட்டிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘குஜராத்தி, தமிழ், பெங்காலி, மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே. ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், எந்தவொரு மொழியும் ஹிந்திக்கோ அல்லது ஆங்கிலத்துக்கோ குறைந்தது இல்லை. அதனால்தான், புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூா் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

எதிா்க்கும் மாநிலங்களால் பிரச்னையில்லை:

மாநாட்டில் பங்கற்றுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சா்களும் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் பங்கேற்றுள்ளனா். இருந்தபோதும், சில மாநிலங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் அறிவோம். அதனை ஒரு பிரச்னையாக மத்திய அரசு கருதவில்லை. ஏனெனில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான திட்டங்களை அந்த மாநிலங்கள் அறிமுகப்படுத்தினாலும், அதுவும் மக்கள் நலன் சாா்ந்ததாகவே இருக்கும் என்பதால், அதனையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.



Read in source website

 முகநூலில் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும் இஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததாக அந்த சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முகநூலில் 53,200 வெறுப்புக் கருத்துகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்புக் கருத்துப் பதிவுகளோடு ஒப்பிடுகையில் 37.82 சதவீதம் அதிகமாகும்.

இது தவிர, இன்ஸ்டாகிராமில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் வன்முறையைத் தூண்டக் கூடிய 77,000 பதிவுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வன்முறையைத் தூண்டும் 41,300 பதிவுகளோடு ஒப்பிடுகையில் சுமாா் 86 சதவீதம் அதிகமாகும்.

முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பதிவுகளில் பெரும்பாலானவை, மற்ற பயன்பாட்டாளா்கள் அந்தப் பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் முன்னரே சிறப்பு செயலி மூலம் தாமாக கண்டறியப்பட்டன.

வெறுப்புக் கருத்துகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், பதிவுகளை நீக்குவது, படங்களை மறைப்பது அல்லது சிலருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பது ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

‘ஃபினாலிசிமா’ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது.

லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லௌதாரோ மாா்டினெஸ் (28’), ஏஞ்ஜெல் டி மரியா (45+1’), பௌலோ டைபாலா (90+4’) ஆகியோா் கோலடித்தனா்.

ஓராண்டு காலத்துக்குள்ளாக மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா வென்றிருக்கும் 2-ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் கோபா அமெரிக்கா சாம்பியன் ஆகியிருந்தது ஆா்ஜென்டீனா. ஒரு கேப்டனாக தனது தேசிய அணிக்கு மெஸ்ஸி பெற்றுத் தந்த முதல் பெரிய அளவிலான சாம்பியன் கோப்பை அது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபினாலிசிமா: ஆா்ஜென்டீனா 2-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கும் இந்தப் போட்டியானது, தென் அமெரிக்க கால்பந்து சங்கம் (கான்மெபோல்), ஐரோப்பிய கால்பந்து சங்கம் (யுஇஎஃப்ஏ) இணைந்து நடத்துவதாகும்.

இப்போட்டியில் நடைபெறும் ஒரே ஆட்டத்தில் கோபா அமெரிக்கா சாம்பியனாக இருக்கும் அணியும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கோப்பை வென்ற அணியும் மோதும்.

‘கப் ஆஃப் சாம்பியன்ஸ்’ என்ற பெயரில் முதன் முதலாக 1985-இல் நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் சாம்பியனாக, 1993-இல் ஆா்ஜென்டீனா வாகை சூடியது. அதன் பிறகு நீண்ட காலமாக நடத்தப்படாத இப்போட்டி, தற்போது ‘ஃபினாலிசிமா’ என்ற பெயரில் நடப்பாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 15.46% அதிகரித்து 3,729 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேநேரம், வா்த்தக பற்றாக்குறையும் 2,333 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இறக்குமதி 56.14% அதிகரித்து 6,062 கோடி டாலரானது.

கடந்த 2021 மே மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 653 கோடி டாலராக காணப்பட்டது.

2022-23 ஏப்ரல்-மே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22.26% உயா்ந்து 7,708 கோடி டாலராக இருந்தது. 2021-22 ஏப்ரல்-மே காலத்தில் இது 6,305 கோடி டாலராக காணப்பட்டது.

கடந்த மாதத்தில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய் இறக்குமதி 91.6 சதவீதம் அதிகரித்து 1,814 கோடி டாலரானது. நிலக்கரி இறக்குமதி 200 கோடி டாலரிலிருந்து 533 கோடி டாலராக உயா்ந்தது.

அதேபோன்று, தங்கத்தின் இறக்குமதியும் 67.7 கோடி டாலரிருந்து 582 கோடி டாலராக அதிகரித்தது என மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.



Read in source website

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கும் இலங்கை உணவுத் தேவைக்காக ஐக்கிய நாடுகள் அவையின் உதவியை நாடியுள்ளது.

கடும்பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளுக்குநாள் தீவிரமடையும் உணவுத் தேவையை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசு ஐக்கிய நாடுகள் அவையின் உதவியை நாடியுள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரம சிங்க இலங்கையில் நிலவும் உணவுத் தேவையை ஈடுகட்ட புதிய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க ஐநா உதவ வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

கடந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் சரிவை சந்தித்த இலங்கையில் நிலவி வரும் உரத்தட்டுப்பாடு உணவு தானிய உற்பத்திக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொழும்புவில் இலங்கைக்கான இந்தியத் தூதரை சந்தித்த அந்நாட்டின் அமைச்சர் மகிந்த அமரவீர நெல்சாகுபடிக்கு உரம் வழங்கி உதவ வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தரப்பிலிருந்து 3.3 டன்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இலங்கை சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கையில் நிலவும் கடுமையான மருத்துவ கருவிகள் மற்றும் மருந்து பொருள்களின் தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையிடம் இன்று ஆம்புலன்ஸ் ஒன்றும், 3.3 டன் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உயிர்காக்கும் மருத்துவ சேவை தடையில்லாமல் நடைபெறும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கடைகள், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்களில் மக்களின் கூட்டம் நீண்ட வரிசைகளில் காணப்படுகிறது. இதனால், அந்நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. இதில், மகிந்த ராஜபட்ச பதவி விலகியதால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றாா். இலங்கையின் சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்க உலக நாடுகளிடம் அவா் கடனுதவி கோரி வருகிறாா்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீண்ட கால திட்டங்களை வகுத்தால்தான் கடனுதவி கிடைக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உலக வங்கியின் மேலாளா் சியோ கண்டா கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரீஸை சந்தித்தாா். அப்போது, அவா் உலக வங்கியிடம் நீண்ட நாள் கடனுதவி திட்டத்தை கோரியிருந்தாா்.

இதையடுத்து, இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.5,430 கோடி) வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 



Read in source website

சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இந்த அறிக்கையை வெளியிட்டார். உலகின் பல்வேறு நாடுகளில் மத சுதந்திரத்தில் தலையிடும் போக்கு குறித்து இந்த அறிக்கை தனது நிலைபாட்டை எடுத்துரைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டில் நிகழ்ந்த விதி மீறல்கள் பற்றி தனி அத்தியாயங்கள் கொண்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது. அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட குடிமக்களின் நிலை குறித்து பேசுவதற்கு வெளிநாட்டு அரசுக்கு உரிமை இல்லை என்றும் இந்தியா விமரிசித்திருந்தது. 

அமெரிக்கா தற்போது வெளியிட்ட அறிக்கையில், இந்தியா குறித்து பேசப்பட்ட அத்தியாயத்தில் தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் அரசின் அறிக்கைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள், சிறுபான்மை நிறுவனங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்த குற்றசாட்டுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. 

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளின் விசாரணை முடிவுகள் மற்றும் அரசின் பதில்கள் குறித்து அறிக்கை பேசவில்லை. "கொலை, தாக்குதல், மிரட்டல் என சிறுபான்மை சமூகதத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளது. பசுவதை, மாட்டிறைச்சி விற்றது போன்றவற்றை காரணம் காட்டி இந்துக்கள் அல்லாதோர் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறையும் இதில் அடங்கும்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து குறித்து விவரித்த அறிக்கை, "இந்தியாவில் உள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏ-வை பகிர்ந்து கொண்டுள்ளனர். மதத்தால் அவர்களை வேறுப்படுத்தக் கூடாது என இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் கொள்கை ரீதியான தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். 

நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என யாருடைய ஆதிக்கமும் இருக்க கூடாது. இந்தியர்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று அச்சமூகத்தினர் பயப்பட வேண்டாம். பசுவைக் கொன்றதற்காக இந்துக்கள் அல்லாதவர்களைக் கொல்வது இந்து மதத்திற்கு எதிரான செயல் என அவர் தெரிவித்த கருத்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
 



Read in source website

சிச்சுவான்: சிச்சுவானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் முதற்கட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

 



Read in source website

இந்தியா-செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வியாழக்கிழமை செனகல் சென்றாா். தலைநகா் டாக்கா் விமான நிலையத்தில் அவரை, செனகல் வெளியுறவுத் துறை அமைச்சா் ஐசதா டால் சால் வரவேற்றாா். இருநாடுகளிடையே அரசியல் ரீதியாக 60 ஆண்டுகள் உறவு நீடித்து வரும் நிலையில், செனகலுக்கு இந்திய உயா்நிலைத் தலைவா் ஒருவா் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

தலைநகா் டாக்கரில், வெங்கையா நாயுடுவுடன், செனகல் அதிபா் மேக்கி சால், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

தூதரக மற்றும் பணி தொடா்பான கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்களுக்கு விசா இல்லாத நடைமுறையை கொண்டு வருவது தொடா்பான ஒப்பந்தம், 2022-26 ஆண்டுகாலத்தில் இரு நாடுகளிடையேயான கலாசார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் இருநாடுகளிடையே இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பான ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவா்களும் கையெழுத்திட்டனா்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல், ஜனநாயக நாடுகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தாா்.

கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இந்தியா-செனகல் இடையே வா்த்தகம் 37 சதவீதம் அதிகரித்து 15 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தது குறித்து அவா் நினைவுகூா்ந்தாா். மேலும் சுகாதாரம், விவசாயம், எரிவாயு, ரயில்வே, எண்ணெய், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்த செனகலுக்கு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தாா்.

குடியரசு துணைத்தலைவா் வெங்கையாவுடன் மத்திய இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மற்றும் அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக் குழுவும் சென்றுள்ளது.

 



Read in source website

தங்களது நாட்டின் பெயரை ‘தா்கியே’ என்று அதிகாரபூா்வமாக மாற்றக் கோரி ஐ.நா.வுக்கு துருக்கி முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. ‘வான்கோழி’ என்று பொருள்படும் ஆங்கில வாா்த்தையில் தங்களது நாடு அழைக்கப்படுவதை விரும்பாத துருக்கி, தங்கள் நாட்டின் பெயரை தங்களது மொழி உச்சரிப்பிலேயே உலகம் அழைக்கவேண்டுமென்று விரும்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



Read in source website

டென்மாா்க்கில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனின் பொது பாதுகாப்புக் கொள்கையை ஏற்க அந்த நாட்டு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். யூனியனில் அங்கம் வகித்தாலும், அதன் பொது பாதுகாப்புக் கொள்கையை ஏற்பதில்லை என்று டென்மாா்க் 30 ஆண்டுகளுக்கு முன்னா் முடிவு செய்தது. எனினும், உக்ரைன் போருக்குப் பிறகு அந்த நிலைப்பாட்டை தற்போது டென்மாா்க் மாற்றிக்கொண்டுள்ளது.



Read in source website

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில், ‘பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நாட்டு ஊடகங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். வூஹானில் அறிவிக்கப்பட்டதைப் போல் ஷாங்காயில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் பொதுமுடக்கம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதன் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டமைப்பில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் 13 நாடுகளும், ரஷியா உள்ளிட்ட இதர நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் கூட்டம், லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைக்கப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020-இல் கரோனா பொதுமுடக்க காலத்தில் பெட்ரோலியப் பொருள்களின் தேவை குறைவாக இருந்ததால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டிருந்தது. தற்போது கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 116.3 டாலராக அதிகரித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம் மெதுவாக மீண்டெழுந்து வருகிறது. பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிப்பது, சா்வதேச பொருளாதார வளா்ச்சியை பாதிக்கச் செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாளொன்றுக்கு 6,48,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.



Read in source website

மதுரை: விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரபு (35). இவர் 6.5.2016-ல் மோட்டார்சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்றார். அப்போது லாரி மோதி உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரபுவின் மனைவி பாண்டிமுத்து, மகள்கள் காவியா, திவ்யா, பிரபாவதி, பிரீதிகா, தந்தை வெள்ளைச்சாமி, தாயார் செல்வி ஆகியோர் சிவகங்கை வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த தீர்ப்பாயம் பிரபு குடும்பத்துக்கு ரூ.17,63,800 இழப்பீடு வழங்க 22.6.2020-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நேஷனல் காப்பீட்டு நிறுவனத்தின் மதுரைக்கிளை மேலாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.

அதில், விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்தில் தலையில் காயம் அடைந்து இறந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி செல்லத்தக்க காப்பீடு வைத்திருக்கவில்லை. லாரி ஓட்டுநர் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை. எனவே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. பாண்டிமுத்து தரப்பில் தலையில் காயம் அடைந்ததால் மட்டும் பிரபு இறக்கவில்லை. மார்பு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தின்போது அவருக்கு வயது 29. அவருக்குக் குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

10 சதவீதம் குறைப்பு

விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால், விபத்தில் உயிரிழந்தவரின் கவனக்குறைவுக்காக கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டு தொகையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அதன்படி கீழமை நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.17,63,800 இழப்பீட்டுத் தொகையில் பத்து சதவீதம் குறைத்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.15,12,800 மற்றும் அதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியும் 8 வாரத்தில் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்.

பின்னர் இப்பணத்தை விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் வசூலித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

கோவை: கோவை அவிநாசி சாலை கொடிசியா வர்த்தக மையவளாகத்தில் ‘இன்டெக் 2022’ என்ற சர்வதேச இயந்திர மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் நடைபெறும், இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு அதன் தலைவர்எம்.வி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். சென்னையை சேர்ந்த டைம்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சத்யகம்ஆர்யா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

தேசிய சிறு தொழில் நிறுவனங்கள் கழகத்தின் இயக்குநர் (திட்டம் மற்றும் சந்தைப்படுத்துதல்) பி.உதய்குமார் காணொலி வாயிலாக பேசினார். இன்டெக் கண்காட்சியின் தலைவர் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா, தைவான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி,ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய வெளி மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள்,

தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. மொத்தமாக 6 அரங்குகளில் 410 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இயந்திர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள், மின் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகள், நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிண்டில் டூலிங் தொழில்நுட்ப தயாரிப்புகள், ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள், தொழில் துறையினருக்கான கருவிகள், மோட்டார்பம்ப்கள், கம்ப்ரஸர், ஃபில்டர், வெல்டிங் மற்றும் கட்டிங், லேசர் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், வாயு சார்ந்த பொறியியல் சாதனங்கள், ஆட்டோமொபைல் உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், பேரிங், கியர், எடைகளைக் கையாளும் இயந்திரங்கள், டிரில்லிங், எலக்ட்ரானிக்ஸ் அம்சங்கள் உட்பட பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற் றுள்ளன.

இதுகுறித்து கொடிசியா நிர்வாகிகள் கூறும்போது, “கண்காட்சி வரும்6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். தொழில் துறையினர், தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனத்தினர், கல்விநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தமாக 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகையும், ரூ.800 கோடி வரை வர்த்தகமும்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.



Read in source website

ஸ்ரீநகர்: இன்னுமொரு பெரிய இடம்பெயர்தலுக்கு (மாஸ் மைக்ரேஷனுக்கு) காஷ்மீர் பண்டிட்டுகள் தயாராகும் சூழல் உருவாகியிருக்கிறதா? அப்படித்தான் சில விவாத அரங்கங்கள் களமாடிக் கொண்டிருக்கின்றன. காரணம் கடந்த சில நாட்களாக தங்களின் உயிருக்கு உத்தரவாதம் கோரி காஷ்மீர் பண்டிட்டுகள் சாலைகளில் இறங்கி நடத்தும் போராட்டங்கள்.

மே 1 ஆம் தேதி தொடங்கி அடுத்தடுத்து நடைபெறும் திட்டமிட்ட படுகொலைகள் காஷ்மீரி பண்டிட்டுகளை வீதிகளில் இறங்கி போராடச் செய்துள்ளது. எங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தருவீர்களா? என்ற கேள்விகளுடன் அவர்கள் போராடி வருகின்றனர்.

புல்வாமா மாவட்டத்தின் ஹால், புட்காம் மாவட்டத்தின் ஷேக்போரா முகாம்களில் உள்ள காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன் அன்றாடம் வீதிகளில் இறங்கிப் போராடிகின்றனர். 40 வயதான அமித் கவுல் அரசாங்க ஊழியர். அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே முகாமில் இருந்து வெளியேறிவிட்டேன். விரைவில் ஜம்முவுக்கு செல்லவிருக்கிறேன் என்றார். இன்னும் சிலர் முகாம்களில் இருந்து வெளியேறவிடாமல் ஆங்காங்கே தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

வேரிலிருந்து.. உடனே வெளியேறியாக வேண்டும் என்ற பதற்றத்தின் வேரைத் தேடினால் அது 1980களின் ஆரம்பத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களுக்கு அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் தூபம்போட ஆரம்பித்திருந்தன. 1984 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத் (JKLF) தலைவர் மக்பூல் பட்டுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதான் பிரிவினைவாதிகளுக்கு தீவிரவாத அமைப்புகள் மேலும் தூபம் போட காரணாமாக இருந்தது என்று வரலாறு சொல்கிறது.

இதன் நீட்சியாக 1986ல் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் மத வன்முறைகள் அன்றாட நிகழ்வாகியிருந்தன. காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்பட்டனர். இந்து கோயில்களும், இந்துக்களின் வீடுகளும் தான் முதல் இலக்கு என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய தேர்தல்: 1987ல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. ( 1984 முதல் 1989 வரை அந்த ஆட்சி இருந்தது). அந்த அரசு காஷ்மீரில் மீண்டும் ஃபரூக் அப்துல்லாவை முதல்வராக்க திட்டமிட்டது. அது நிறைவேறவும் செய்தது. இது உள்ளூர் பிரிவினைவாத சக்திகளை கடும் கோபத்தில் தள்ளியது.

1989 டிசம்பரில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதே மாதம் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம், உள்துறை அமைச்சராக இருந்த முஃப்தி சயீதின் மகள் ருபயா சயீதை கடத்திச் சென்றது. ருபாயாவை மீட்க சிறையில் இருந்து ஜேகேஎல்எஃப் வீரர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். இது பிரிவினைவாதிகளின் மிகப்பெரிய வெற்றி. அதே ஆண்டு நீலகந்த் கஞ்சூ என்ற நீதிபதி கொல்லப்பட்டார். இவர் தான் மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை வழங்கியவர்.

ஹிஜ்புல் அமைப்பு காஷ்மீர் பிரிவினைவாதிகளின் போராட்டத்திற்கு மதச் சாயம் பூசியது. ஆசாதி குரலுடன் மத வெறியும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. காஷ்மீர் பண்டிட்டுகளின் ஹிட் லிஸ்ட் என்று அச்சடித்து வெளியிடப்பட்டது.

கடத்தல், படுகொலை சம்பவங்களைத் தொடர்ந்து 19 ஜன 1990ல் அப்போதைய பிரதமர் விபி சிங் ஜம்முவில் மத்திய ஆட்சியை அமல்படுத்தினார். ஜக்மோகன் ஆளுநர் ஆக்கப்பட்டார். மாநில முதல்வர் ஃபரூக் அப்துல்லா அதிருப்தியில் ராஜினாமா செய்தார். அரசியல் அதிருப்தி கொந்தளிப்பாக மாறியது.

பண்டிட்டுகள் குறிவைக்கப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டு சமூக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். 20 ஜன 1990, ஆரம்பித்து ஒரே வாரத்தில் 75,343 காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறினர். மார்ச் 1990ல் மேலும் 70,000 பேர் வெளியேறினர். 650 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் புள்ளி விவரங்களை காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதி உறுதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் மொத்தமாக 1.5 லட்சம் பண்டிட்டுகள் வெளியேறினர்.

ஏப்ரல் 1990ல் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது பலியாகுங்கள் என்ற பகிரங்க மிரட்டல்கள் பண்டிட்டுகளுக்கு விடுக்கப்பட்டன. ஆனால் அதே வேளையில், சில கஷ்மீர் முஸ்லிகளும் இந்துக்களை பாதுகாத்தனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதுபோலவே, 1990 ஜனவரி 21, காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். ஜெக்மோகன் ஆளுநராக நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஸ்ரீநகரின் காவ்காடல் பாலத்தில் பொது மக்கள் மீது சிஆர்பிஎஃப் துப்பாக்கிச் சூடு நடத்தியது. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவர் (ஜெக்மோகன்) 1994ல் பாஜகவில் இணைந்தார். 1990ல் காஷ்மீரி பண்டிட்டுகளை பாதுகாக்க எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளானார் என்பதை வரலாற்றின் தனிப் பக்கங்கள்.

காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் ஜம்முவிலும், டெல்லியிலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மூச்சுமுட்டும் முகாம்களில் இருந்து சொந்த மண்ணுக்கு திரும்ப வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகள் முழுமையாக தீர்ந்தபாடில்லை. 1990 ஜனவரியில் 1.5 லட்சம் இந்துக்கள் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறினர். நிலங்களை, வீடுகளை, உடைமைகளை விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் ஏந்தி கிளம்பினர்.

இப்போது அவர்களின் அச்சம் மீண்டும் 1990 திரும்பிவிடுமோ என்பதுதான்.

காரணம் அண்மை நிகழ்வுகள். கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரே மாதத்தில் 7 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். 5 நாட்கள் இடைவெளியில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. இப்போது இந்த ஆண்டு மீண்டும் இந்த படுகொலைகள் ஆரம்பித்துள்ளன. மே 1 ஆம் தேதி தொடங்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இந்துக்கள், வெளிமாநிலத்தவரே அடங்குவர்.

இன்னுமொரு பெரும் இடம்பெயர்தலுக்கு தயாராகிறார்களா காஷ்மீர் பண்டிட்டுகள்?! என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொகுப்பு: பாரதி ஆனந்த்



Read in source website

பெங்களூரு: ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது. கர்நாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

இதில் ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனையை நடத்த முடியும். இந்த மையத்தில் உள்ள 4 அலகுகளும் தனித்தனியாக இயங்குபவை. விண்கலங்களை சோதிக்கும்போது இந்த அலகுகள் தனியாகவே இறுதிநிலை வரை ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி துறையின் தலைவர் எஸ்.சோமந்த் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தற்போது அதன் அடுத்தகட்டமாக தனியார் நிறுவனங்களும் சொந்தமாக செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் ஏவலாம் என்ற நிலையை எட்டியுள்ளது” என்றார்.



Read in source website

லண்டன்: தென் அமெரிக்க, ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பைனலிசிமா கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 3-வது ஆண்டுக்கான போட்டியில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா - இத்தாலி மோதின.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 28-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெஸ், 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா, 94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதில் இரு கோல்களை அடிக்க உதவியிருந்த லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Read in source website

வங்கிகளில் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று எக்ஸ்க்ளூசிவ் டீலிங். சில நேரங்களில் வங்கிகளில் கண்டிஷன் ஆஃப் எக்ஸ்க்ளூசிவ் டீலிங் இருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது, ‘ஒரு கடனாளி - ஒரு வங்கி’ என்பதே இதன் மறைபொருள். கடன் பெறுபவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறக்கூடாது என்பதில்லை. கணக்கே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம்.

சேமிப்பு கணக்கு இல்லை, கரன்ட் அக்கவுன்ட் எனப்படும் நடப்பு கணக்கு. அதாவது, வியாபாரம் செய்பவர்கள் ஒரே வங்கியில் தனது அனைத்து கணக்குப் பரிமாற்றங்களையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எக்ஸ்க்ளூசிவ் டீலிங்க்.

முதலில் இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு "கேஷ் கிரெடிட்" கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மற்றொரு வங்கியில் கரன்ட் அக்கவுண்ட் தொடங்கி அனைத்து வரவு செலவுகளையும் அந்த வங்கியிலேயே வைத்திருக்கிறார் என்றால், அது மிகப்பெரிய தவறு. அப்படி இருக்கும்போது கடன் கொடுத்த வங்கிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது.

அதனால்தான் யார் ஒருவர் கேஷ் கிரெடிட் அல்லது ஓவர் டிராஃப்ட் வாங்குகிறார் என்றால் அந்த வங்கியில் மட்டுமே நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வியாபாரத்தில் வரும் விற்பனையை அந்தக் கடன் தொகையில் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

வங்கி கண்காணிக்கும்: வங்கிகள் ஏனோதானோ என்று வங்கிக் கணக்குகளை தொடங்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கண்டிப்பான முறையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. சில வரிகளை பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று இருக்கும். அந்த வரிகளுக்கான தொகையினை மட்டும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். வேறு எந்த பணப்பரிமாற்றங்களையும் செய்யக் கூடாது. இதனை கடன் கொடுத்த வங்கி கண்காணிக்கும். இதனைத் தவிர வேறு ஏதாவது பணப் பரிமாற்றத்தில் வங்கிகள் ஈடுபடுமானால் அந்த வங்கி மீது குற்றம் சுமத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரே கடனாளி - ஒரே வங்கி: தற்போது இணையவழி தொடர்புகளும், பரிமாற்றங்களும் அதிகரித்துவிட்டன. கணினி மூலமாக வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி போன்றவைகள் தகவல்களை எடுத்துக் கொள்கின்றன. அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்கு இருந்தால் அவைத் தெரிந்து விடும். அதனால் கடன் பெறும் போது வங்கி, ரிசர்வ் வங்கி சொல்கிற படி கடன் பெறும் வங்கியிலேயே நடப்புக் கணக்கு தொடங்கி எக்ஸ்க்ளூசிவ் டீலிங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு கடனாளி - ஒரே வங்கி என்ற கொள்கையை கடைபிடித்து வியாபாரத்தைப் பெருக்குங்கள்.



Read in source website

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரியில் இருந்து ஜூலை மாதம் இறுதி வரையில் பத்திரிகைகள் தொடங்கி பொதுமக்கள் வரை அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று "இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்". குறிப்பாக அரசு, தனியார் துறை மாதச் சம்பளக்காரர்கள். நிதியாண்டு முடிந்த 120 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்ற விதியால் சம்பளக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பரபரத்துக் கொண்டிருப்பார்கள்.

கரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் அனைத்து பரிமாற்றங்களும் ஆன்லைன் வழி மாற்றப்பட்டு, முகமில்லா மதிப்பீடு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் மூலமாக வருமான வரி தாக்கல், அதன் மீதான மதிப்பீடு, ரீ ஃபண்ட், டிமாண்ட் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.



Read in source website

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இன்று பாலிசியை விற்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக முன்வைக்கப்படுவது யூலிப் பாலிசிகள். குறிப்பிட்ட காலத்துக்கு பணம் செலுத்தினால் போதும், அதிகமான இன்சூரன்ஸ் கவரேஜ், திரும்பக் கிடைக்கும் தொகையும் பெரிய அளவில் இருக்கும் என கூறி விற்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த சில அடிப்படை புரிதல்கள் அவசியமானதாகும்.

யூலிப் என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். முதலீடு மற்றும் அதில் இருந்து வரும் வருமானம் பாலிசியின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. எனினும் பாலிசி எடுத்தவர்கள் இறந்துபோனால் காப்பீட்டுத் தொகை என்பது வழக்கமான ஆயுள் காப்பீடுகளில் வழங்குவது போலவே இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், சில நிறுவனங்களின் காப்பீட்டுத் தொகை என்பது சற்று அதிகமாக இருக்கிறது.

எப்படி செயல்படுகிறது? - மொத்தத்தில் யூலிப் என்பது முதலீடும், காப்பீடும் ஒருங்கிணைந்த ஒரு கலவையான திட்டமாகும். இவை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தற்போது பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. யூலிப் திட்டங்கள் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட்களை போல செயல்படுகின்றன. மியூச்சுவல் பண்ட் போலவே இதிலும் முதலீட்டைக் குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளாகச் செலுத்தலாம்.

மியூச்சுவல் பண்ட் போன்றதா? - இந்த யூனிட்டுகளின் மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பாக (Net Asset Value) பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மொத்த தொகையானது ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், மொத்த முதலீட்டையும் மொத்த யூனிட்டின் எண்ணிக்கையையும் வைத்து கணக்கிடப்படும். திரும்பக் கிடைக்கும் பணத்தின் விகிதம் மொத்த சொத்து மதிப்பை கருத்தில் கொண்டு கணக்கிடப்படும். பாலிசியில் முதலீடு செய்த பணம் எவ்வாறு வளர்ந்தள்ளது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

பார்ப்பதற்கு மியூச்சுவல் பண்ட் போன்ற இது செயல்பட்டாலும் யூலிப் திட்டங்களில் குறைந்தபட்ச பண முடக்கக் காலம் (Lock in period) இருக்கும். இது காப்பீட்டையும் உள்ளடக்கியது என்பது முக்கியமாகும். பங்குகளுடன் இணைந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தில், பங்குகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாக விற்கலாம்.

ஆயுள் காப்பீடு: இந்த யூலிப் திட்டங்களில் ஆயுள் காப்பீடு திட்டம் என்பதால் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். செலுத்தும் பிரிமீயத்தில் ஒரு தொகை காப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது திட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஒட்டுமொத்தமாகவும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கொரு முறை எனத் தவணை முறையிலும் இதில் பிரிமீயம் செலுத்த முடியும். செலுத்தும் தொகையில் குறிப்பிட்ட பணம் முதலீடாக மியூச்சுவல் பண்ட் போன்று திட்டங்களில் முதலீடு செய்யப்படும். குறிப்பிட்ட தொகை இன்சூரன்ஸுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் காப்பீட்டுக்கான அம்சங்களையும் கொண்டிருப்பதால், ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பொதுவாக யூலிப் திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடியவை. காப்பீட்டுத் திட்டங்களைப் போலவே நீண்டகாலம் பிரீமியம் செலுத்தினால், இறுதியில் திட்டம் முதிர்ச்சியடையும் போது சிறப்பான லாபம் கிடைக்கும்.



Read in source website

பங்குச்சந்தை பற்றிய தகவல்கள் பற்றி தெரியும் பலருக்கும் அதில் முதலீடு செய்ய ஆசை ஏற்படும். ஆனால், பங்குச்சந்தை என்பது ஆபத்து என்பதும், முதலீட்டுத் தொகை நஷ்டமடைய கூடிய ஆபத்து உள்ளது என்பதால் அதில் முதலீடு செய்ய பலருக்கும் தயக்கம் இருக்கும்.

இதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதனை கற்று, புரிந்துகொண்டு முதலீடு செய்வதில் சிக்கல் இருப்பதால் தனக்கு பதில் யாராவது இதனைச் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அதற்காக ஒரு எளிய வழி மியூச்சுவல் பண்ட்.

முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபியில் மாதம் வெறும் ரூ.100 மட்டுமே கூட முதலீடு செய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம்.

மியூச்சுவல் பண்ட் நிதிகள் பங்குச்சந்தை, தங்கம், கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்யப்படுகின்றன. ஈக்விட்டி அல்லது குரோத் பண்டுகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை `டெப்ட் பண்டுகள்’ (Debt Funds). டெப்ட் பண்டுகளை, 'இன்கம் பண்டுகள்' என்றும் அழைப்பதுண்டு. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்வது ஹைபிரிட் பண்டுகள் என மூன்று வகையான முதலீடுகள் இருக்கின்றன.

ஈக்விட்டி பண்டுகள் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை. அதிக லாபம் கிடைக்கும். எனினும் அதே அளவு ரிஸ்கும் இந்த பண்டுகளில் உள்ளது. இந்த பண்டுகளில் கிடைக்கும் லாபம் மற்ற பண்ட் முதலீடுகளை விடவும் அதிகம்.

ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என 15 வருடத்திற்கு 15,00,000 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்வதாக வைத்துக்கொண்டால் மியூச்சுவல் பண்ட் வருமானம் வருடத்திற்கு சராசரியாக 15 சதவீதமாக இருக்கும். அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்பு மொத்தம் சுமார் 42 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.

டெப்ட் பண்டுகள் எனப்படும் கடன் பத்திரங்கள் முதலீடு செய்வது. இந்த வகை பண்டுகள் பாதுகாப்பானதாகவும், வருவாய்க்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. அரசு பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் டிரஷரி பில்கள் போன்றவற்றில் இந்த முதலீடு செய்யப்படுகிறது.

அடுத்தது ஹைபிரிட் பண்டுகள். இது ஓரளவு ரிஸ்க் மற்றும் நிலையான வருவாய் வரக்கூடிய முதலீடு. அக்ரசிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய் திட்டங்களில் இந்த பண்ட் முதலீடு செய்கிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கார் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற எந்த இலக்கை அடைய முதலீடு செய்ய விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதில் மதிப்பிடப்பட்ட வருமானம், காலம், ஆபத்து, பிற அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால் இலக்குக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கும்.

நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ஒருவர் மியூச்சுவல் பண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பொதுவாக ஆலோசகர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து போர்ட்போலியோவைக் கண்காணிக்க வேண்டும். நிதி அல்லது போர்ட்போலியோவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் இலக்குகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றுவது எளிதாக இருக்கும்.



Read in source website

முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம் என்பது எந்த ஒரு முதலீட்டாளர்களின் அடிப்படையான எண்ணம். இதன் காரணமாக உலகம் முழுவதும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் எப்போதுமே அதிகமோனார் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இருப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.

சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் வங்கிகள் வட்டி அளிக்கின்றன. எனினும் சேமிப்பு கணக்கில் பணத்தை விரும்பிய நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பெறாலாம் என்பதால் அதற்கான வட்டி என்பது ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் அடிப்படை வட்டி விகிதமே வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கி காலாண்டு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும்போது சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியிலும் மாற்றம் ஏற்படும்.



Read in source website

கிரெடிட் கார்டுகளுக்கு போட்டியாக இப்போது கிளம்பியிருப்பது கவர்ச்சிகரமான (Buy Now Pay Later) என்கிற `இப்போது வாங்குகள் பிறகு செலுத்துங்கள்` என்கிற திட்டமாகும். இதை வங்கிகள் மட்டுமல்லாமல் அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே, போஸ்ட்பே போன்ற பல நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன.

இந்தத் திட்டம் தற்போது இளைஞர்களிடம் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. சில கிரெடிட் கார்டோடு பிஎன்பிஎல்லும் சேர்ந்தே இருக்கும். குறைந்த விலையுள்ள பொருள்களை வாங்கி அதற்கானத் தொகையை வட்டியில்லாமல் சுமார் 15 நாட்களுக்குள் செலுத்தும் வசதியை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இருப்பினும் கிரெடிட் கார்டுக்கும் பிஎன்பிஎல் கார்டுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம் என்பதுதான். எனினும் இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.

> கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் நிலுவைப் பணத்தை வட்டியில்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் சுமார் 45 நாட்கள் ஆகும். பிஎன்பிஎல்லில் இது 15 நாட்கள் முதல் 35 நாட்கள் ஆகும்.

> கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதற்கான உச்சவரம்பு பயனளாரின் நிதிநிலைமையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால் பிஎன்பிஎல்லில் இது ரூ.10,000 முதல் ரூ.60,000 வரையாகும்.

> கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தால் அது பல காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதால் ஒருவருக்கு வழங்கப்படுமா, மறுக்கப்படுமா என்று தெரிவதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம். ஆனால் பிஎன்பிஎல் கார்டுக்கென்று கடினமான தகுதிக் காரணிகள் எதுவுமில்லை என்பதோடு மிக சீக்கிரமாகவே வழங்கப்பட்டுவிடும்.

> சில கிரெடிட் கார்டுகள் சேர்ப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

> கிரெடிட் கார்டில் இருக்கும் நிலுவைத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டவில்லையெனில் வட்டி வசூலிக்கப்படும். இது சுமார் ஆண்டுக்கு சுமார் 30-36 சதவிகிதமாகும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு திட்டத்தின் கீழ் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை ஆனால் திருப்பிச் செலுத்த நீண்ட நாட்கள் ஆகும்பட்சத்தில் தாமதக் கட்டணம் என்கிற பெயரில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

> கிரெடிட் கார்டை பலதரப்பட்ட வணிக நிறுவனங்களும் அமைப்புகளும் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் பிஎன்பிஎல் கார்டுகளில் அந்த நெகிழ்வுத் தன்மையும் ஏற்புத் தன்மையும் இல்லை.

இதுமட்டுமல்லாமல் சில வங்கிகள் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு கடன் அட்டைகளையும் (co-branded) வழங்கி வருகின்றன. இதுவும் தற்போது அதிகஅளவில் பிரபலமாகி வருகிறது.

மொத்தத்தில் கிரெடிட் கார்டுகள் என்பது தேவைபடுவோர், தேவைக்கு பயன்படுத்தினால் அதிக பயன். அதேசமயம் சரியான புரிதல் இல்லாமலோ, உரிய நிதி மேலாண்மை இல்லாமலோ பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படும். கிரெடிட் கார்டு மூலம் நெருக்கடிக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் இத்தகையவர்களே.



Read in source website

 

அதிவேக இணையப் பயன்பாட்டால், உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க அறிதிறன்பேசி மூலம் நாம் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த வளா்ச்சி, இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்திருக்கிறது.

ஒரு முறை மட்டும் பயன்படும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை (ஓடிபி) முறைகேடாகப் பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது, போலியான கடன்பற்று அட்டை, பண அட்டை மூலம் மோசடியில் ஈடுபடுவது, தானியங்கி பணம் வழங்கு இயந்திரத்தில் (ஏடிஎம்) கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய சாதனங்களைப் பொருத்தி வாடிக்கையாளா்களின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலம் ஏமாற்றுவது, வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என இணையத்தில் கவா்ச்சிகரமாக விளம்பரம் கொடுத்து மோசடி செய்வது, இணையவழியில் தொடா்பு கொண்டு பெண்கள், குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுதல், திருமணத்துக்கு வரன் தேடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுதல், சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்டவை இணையவழி குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இணையவழி குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 2018-இல் 27,248, 2019-இல் 44,735, 2020-இல் 50,035 என இணையவழி குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவலால் வேலையின்மை அதிகரிப்பால், கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இணையவழி குற்றங்கள் உயா்ந்திருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். கடந்த ஆண்டுக்கான இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக இன்னும் வெளியாகவில்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டில் 4,047 இணையவழி வங்கி மோசடிகளும், ஒரு முறை பயன்படும் பாதுகாப்பு குறியீட்டு எண் தொடா்பான 1,093 குற்றங்களும், கடன் பற்று அட்டை, பண அட்டை தொடா்பான 1,194 குற்றங்களும், தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்தது தொடா்பான 2,166 குற்றங்களும் அரங்கேறியுள்ளன. இதே ஆண்டில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11,097, கா்நாடகத்தில் 10,741, மகாராஷ்டிரத்தில் 5,496, தெலங்கானாவில் 5,024, அஸ்ஸாமில் 3,530 இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இத்தகைய இணையவழி குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையவழி குற்றங்களைப் பதிவு செய்வதற்கு தேசிய கணினிசாா் குற்றப் பதிவு இணையதளத்தை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவோா் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தங்களது புகாா்களை பதிவு செய்யலாம்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகாா்கள் உடனுக்குடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இணையவழி நிதி பரிவா்த்தனைகள், வேலைவாய்ப்புகள், திருமண வரன் தேடுதல் தொடா்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையவழி குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையும் தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் குறைவுதான் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் 2018-இல் 295, 2019-இல் 385 இணையவழி குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. புள்ளிவிவரப்படி குறைவாக இருந்தாலும்கூட, காவல்துறையின் கவனத்துக்கு வராமல் தமிழகத்திலும் பெரிய அளவில் இணையவழி குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.

கரோனா பொது முடக்கக் காலமான 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். இதையடுத்து, மாநில அளவில் ஏடிஜிபி தலைமையில் சைபா் குற்றப் பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் 12, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் 36 என சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையங்களும் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

இணையவழி குற்றங்கள் தொடா்பாக மாவட்ட காவல் தலைமையிடத்துக்குச் சென்று புகாா் அளிப்பதில் பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சைபா் குற்றப் பிரிவைத் தனியாகத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்தப் பிரிவில் கணினிசாா் குற்றத் தடுப்பு தொடா்பாக பயிற்சி பெற்ற காவலா்கள் நியமிக்கப்படுவா் என்றும் காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் இதுபோன்ற முனைப்பான நடவடிக்கைகளால் இணையவழி குற்றங்கள் குறையும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோா் பெரும்பாலும் படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞா்கள் என்பதுதான் கவலையளிக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கயமை எண்ணம் இளைஞா்கள் மத்தியில் அதிகரித்து வருவது நல்லதல்ல.



Read in source website

 அண்மையில் வெளியான 2021-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றவர்களை உரிமை கொண்டாடுவதில் தேர்வு பயிற்சி மையங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி, தேர்வர்களுக்கு தவறான பாதையை காட்டுவதாக உள்ளது.
 அரசு வேலைக்காக நாட்டில் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய அயலகப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட 24 பணிகளுக்கானது இந்தத் தேர்வு. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே பெற்று சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தேர்வான 685 பேரில் 177 பேர், அதாவது 25.84 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
 முதல் இடத்தைப் பெற்றுள்ள ஸ்ருதி சர்மா, தில்லியைச் சேர்ந்தவர். இவரது பூர்விகம் உத்தர பிரதேசம். 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ள அங்கிதா அகர்வால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள காமினி சிங்லா பஞ்சாப் மாநிலத்தவர்.
 தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அகில இந்திய அளவில் 42-ஆவது இடத்தைதான் தமிழக பெண் ஒருவர் பெற்றுள்ளார். அவர் கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ. இம்முறை தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 27 பேர் மட்டுமே. இது மொத்த தேர்ச்சியில் 3.94% ஆகும். 1990-க்கு பிறகு இது வரை மூன்று முறை மட்டுமே (இக்பால் தலிவால் 1995, எஸ். நாகராஜன் 2004, எஸ். திவ்யதர்ஷினி 2010) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
 தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து, குடிமைப் பணி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தத்தமது மையங்களில் பயின்று வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்களுடன் தங்களது வெற்றிக் கதைகளை பறைசாற்றி வருகின்றன. தங்கள் மையத்தில் பயின்றவர்களில் 320 பேர் தேர்ச்சி என்றும், சென்னை பயிற்சி மையங்களில் பயின்றவர்களில் 261 பேர் தேர்ச்சி, 101 பேர் தேர்ச்சி என்றும் கூறுவதோடு சிறப்பிடம் பெற்றவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கொண்டாடி வருகின்றன.
 இதைப் பார்க்கும்போது குடிமைப் பணி தேர்வில் வெற்றி என்பது எளிதான ஒன்றுதான் என்ற எண்ணத்தை தேர்வர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். அதே வேளையில், அந்த வெற்றி அத்தனை எளிதானது அல்ல என்ற பயிற்சி மையங்கள் மறைக்கும் உண்மையை தேர்வர்கள் உணர வேண்டியது அவசியம்.
 ஊக்கம், திட்டமிடுதல், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவை இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். இந்தத் தேர்வில் பெற்றி பெற்றவர்களின் சதவீதத்தை பார்த்தாலே தேர்வின் கடுமையும், வெற்றி பெற்றவர்களின் உழைப்பும் புரியும். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர் மிகமிகக் குறைவு.
 கடந்த ஆண்டில் குடிமைப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 10 லட்சத்து 93 ஆயிரத்து 984 பேர். இவர்களில் விண்ணப்ப நிலையிலேயே தகுதி இழந்தவர்கள், தேர்வை எதிர்கொள்ள அஞ்சியவர்கள் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து365 பேர். அதாவது 53.50 சதவீதம் பேர் முதல் நிலைத் தேர்வை எழுதவில்லை.
 அடுத்து, முதல் நிலைத் தேர்வை எழுதிய எஞ்சிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 619 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 9 ஆயிரத்து 215 பேர். இது 1.81 சதவீதம் மட்டுமே. முதன்மைத் தேர்வை எழுதிய இவர்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் 1,824 பேர். இது 19.79 சதவீதம்.
 நேர்காணலில் வெற்றி பெற்று இறுதியாக பணிக்கு தகுதி பெற்றவர்கள் 685 பேர்.
 விண்ணப்பித்தவர்களை ஒப்பிட்டால் இது 0.062 சதவீதம். தேர்வை எழுதியவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 0.13 சதவீதம் மட்டுமே. மிகமிகக் குறைவான தேர்ச்சி சதவீதம் என்பது புதிதல்ல. இதுவரை ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றையெல்லாம் பயிற்சி மையங்கள் சொல்வதில்லை.
 முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் என்றாலும், பலமுறை முயன்று வெற்றி பெற்றவர் என்றாலும் அவர் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுக்கு செல்வதுண்டு.
 ஒரு பயிற்சி மையத்தில் முழு நேர படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர் மற்றொரு மையத்தில் மாதிரி தேர்வு எழுத செல்வது உள்பட எந்த வகையான சிறு அனுகூலத்தை பெறச் சென்றாலும் அந்த மையத்தில் தனது பெயரை பதிவு செய்தாக வேண்டும். அப்போது அவர் அந்த மையத்திலும் மாணவராகி விடுகிறார்.
 தேர்வில் வெற்றி பெற்றால் அவர் அந்த மையத்துக்கும் சொந்தம். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து அவர்களை தங்களது மாணவர்கள்போல காட்டிக்கொள்வதும் உண்டு.
 குடிமைப் பணி தேர்வில் மட்டுமல்ல, எல்லா போட்டித் தேர்வுகளிலும் சிறப்பிடம் பெற்றவர்களை உரிமை கொண்டாடுவதில் பயிற்சி மையங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அது தேர்வர்களிடையே ஆசையை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான வியாபார உத்தியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு மாணவருக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் பெரும் வியாபாரம் இது.
 தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறுவோரை வைத்து சில பள்ளிகள் வியாபாரம் செய்து வந்தன. இது மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறி அரசு 2017-இல் சிறப்பிட முறையை தடை செய்தது. அதேபோல், இப்போது போட்டித் தேர்வு பயிற்சி மையங்களையும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
 



Read in source website

 

மத்திய அரசை நல்ல தமிழில் நடுவண் அரசு என்று கூறி வந்தோம். சென்டரல் கவா்ன்மென்ட் என்பதால் மத்திய அரசு என்கிறோம். அண்ணா காலத்திலிருந்தே அப்படித்தான் அவா்கள் கூறி வந்தாா்கள். அதனாலேயே ‘மத்தியில் கூட்டாச்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை வைத்தாா்கள்.

தமிழக முதலமைச்சா், சென்ற ஓராண்டாக மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றாா். திமுக மட்டுமல்ல, அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய கட்சிகளான இரண்டு கம்யூனிஸ்டுகளும் இப்போது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்றே மத்திய அரசைக் கூறி வருகின்றன. முன்பு இவை மத்திய அரசு எனச் சொல்லி வந்த கட்சிகள்.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக போன்றவை ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூட, லண்டனில் மே மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறி வருவது உண்மைதான் என்று பேசியுள்ளாா்.

இந்த வகையில், ஒன்றியம் எனச் சொல்ல விரும்பாத ஒரே கட்சி பி.ஜே.பி. மட்டுமே. அகில இந்திய அண்ணா தி.மு.க.வும் ஒன்றியம் என்று கூறினாலும், அதனை நல்ல நோக்கத்திலேயே பயன்படுத்தி வருகிறது. காரணம் அக்கட்சியின் பெயரில் உள்ள அகில இந்திய என்கிற ஒட்டுச் சொற்கள்தான்.

ஒன்றியம் என்பது நல்ல தமிழ் சொல்லாகவே இருந்தாலும், ஒன்று என்பது வேறு. ஒன்றியம் என்பது வேறு. பல ஒன்றுகள் சோ்ததுதான் ஒன்றியம். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு’ என்று கூறிய பாரதியாரின் கவிதை வரி கவனிக்கத் தக்கது. பலவாறாக உள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவதுதான் ஒற்றுமை. அதுவே நமது பலம். அதிலுள்ள நல்நோக்கம் நமக்கு நன்றாகப் புரியும்படி அப்படிப் பாடினாா்.

யூனியன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்தான் ஒன்றியம் என்பது. யூனியன் என்றும், யுனைடெட் என்றும், யூனிட்டி என்றும் பல சொற்கள் உள்ளன.

அமெரிக்காவை யுனைடெட் ஸ்டேட்ஸ் என்பாா்கள். யுனைடெட் ஸ்டேட்சை ஐக்கிய அமெரிக்க என்கிறோம். 50 மாநிலங்கள் அதில் உள்ளன. அமெரிக்கா ஒன்றியம் அல்ல. அது ஐக்கிய அமெரிக்கா. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவை யுஎஸ்எஸ்ஆா் என்றும் சோவியத் யூனியன் என்றும் சொன்னோம். அதனை சோவியத் ஒன்றியம் என்றும் கூறி வந்தோம்.

1991-க்குப் பிறகு சோவியத் யூனியன் சிதறிவிட்டது. இப்போது சோவியத் ஒன்றியம் இல்லை. ரஷியா என்கிற நாடு மட்டுமே உள்ளது. சீனா, வியத்நாம், கியூபா முதலிய கம்யூனிஸ்ட் நாடுகள் ரஷியாவை கம்யூனிஸ்ட் நாடாக ஒப்புக் கொள்வதில்லை என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காரணம் ரஷியா முதலாளித்துவ நாடுகளில் ஒன்றாகிவிட்டது என மாா்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ தலையங்கமே எழுதியுள்ளது.

ரஷியாவோடு இருந்த யூனியன் என்ன ஆனது? 28 குடியரசுகளால் உருவான சோவியத் ஒன்றியத்தில் இப்போது ஒரு குடியரசு நாடும் இல்லை. ரஷியாவின் தேசப்பிதா விளாதிமீா் லெனின் ஐரோப்பியாவில் பல குடியரசுகளை ரஷியாவோடு இணைத்தாா். ஸ்லோவிக்யா, செக்ஸ்லோவிக்கியா, அஜா்பைசன், ஆா்மீனியா எனப் பல்வேறு நாடுகளை 1917 முதல் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்தாா்.

அப்படி இணைத்தபோது, இணையும் அந்த நாடுகள் ரஷியாவுடன் சோ்ந்து செயல்பட விரும்பவில்லையானால், பிரிந்து சொல்வதற்கான உரிமையையும் அவற்றிற்கு உள்ளது என்றும் கூறினாா். லெனின் மட்டுமல்ல. அவருக்குப் பிறகு ஆட்சிசெய்த ரஷிய அதிபா் தோழா் ஜோசப் ஸ்டாலினும் அதனையே பின்பற்றி ஆட்சி செய்தாா். ஆனால் ரஷிய அதிபா் புதின் இதனை எதிா்த்துக் கருத்து கூறியுள்ளாா்.

பிரிந்து போகும் உரிமையை இந்தக் குடியரசுகளுக்கு வழங்கியது, அதன் இணைப்புக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுக்குச் சமமானது என்று அதிபா் புதின் உக்ரைன் போரின்போது விமா்சித்துள்ளாா். அதனால்தான் உக்ரைன் பிரிந்துபோனது என்றும் அவா் பேசியுள்ளாா்.

50 மாநிலங்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில், மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை உள்ளதா என்றால், கிடையாது. 1869 அமெரிக்க அரசியல் சட்டத்தில் பிரிவினை உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றே விதி வகுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா சென்ற 200 வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஆனால் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குள் சிதறிவிட்டது.

28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட இந்தியாவில் பிரிவினை தடைச் சட்டம் 1963-இல் ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

அச்சட்டம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்கிறது. இது அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தச் சட்டமாகும். அதனால்தான் இந்தியக் குடியரசில் உள்ள மாநிலங்கள் தனிநாடு கோர உரிமையில்லை.

இந்தியாவில் சீக்கியா்களின் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை பிரிவினைத் தடைச் சட்டத்தால்தான் தடுக்கப்பட்டது. பஞ்சாப் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஜொ்ஜெயில் சிங் பிந்தரன்வாலா தலைமையில் போராடி வந்தாா்கள். இந்திய ராணுவம் 1984-இல் பொற்கோயிலுக்குள் நுழைந்து அவா்களை அழித்து ஒழித்தது. இதனால் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவருடைய சீக்கிய மெய்காப்பாளா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் நாம் அதிா்ச்சியடைந்தோம்.

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுபவா்களின் நோக்கம், மத்திய அரசைப் பலவீனப்படுத்துவதோ எனக் கேட்க வேண்டியுள்ளது. மத்திய அரசு பலவீனமடையுமானல் அதன் பாரதூர விளைவுகள் என்னென்ன?

கா்நாடகத்தின் மேக்கேதாட்டில் புதிய அணை கட்டப்படுமானால், தமிழகத்திற்கான காவிரி டெல்டா விவசாயமே அழிந்துவிடும் என்றுதான் அதனைத் தடுக்க தமிழக அரசு முயல்கிறது. இதற்காக மத்திய அரசிடம்தான் முறையிட வேண்டியுள்ளது. மத்திய நீா்வள அமைச்சகத்தின் அனுமதியில்லாமல், மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று நாம் நம்புகிறோம். கா்நாடக அரசு அனுமதி கேட்பதும் மத்திய அரசிடம்தான்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டால்தான் கேரளத்தின் இடுக்கி அணையை நிரப்ப முடியும் என்று கேரளக் கட்சிகள் ஒரே குரலில் பேசுகின்றன. தமிழக அரசு மத்திய அரசு அனுமதித்தபடிதான் முல்லைப் பெரியாறு அணையில் 140 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க முடிகிறது.

மத்திய அரசை பலவீனப்படுத்திவிட்டால், மாநிலத்துக்கு மாநிலம் ஏற்படும் பிரச்னைக்கு எப்படித் தீா்வுகாண முடியும்? சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் என்ற ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. அதில் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினா்களாகின. இங்கிலாந்து தேசம் 2020-இல் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட்டது. இதற்கான பொது வாக்கெடுப்பில் 52% போ் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

ஒன்றியம் என்கிறபோது சோவியத் ஒன்றியத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் நினைவில் கொள்வது நல்லது. அடுத்தது, இந்தியாவை ஒரே தேசம் என்று வலியுறுத்துகிறபோது நமது பலத்தை அதில் பாா்க்க முடிகிறது. ஒரே தேசம் என்று சொல்வதற்கு பதிலாக வேறு எப்படிச் சொல்வது?

ஒரே தேசம், ஒரே தோ்தல், ஒரே நாணயம் போன்றவை நல்ல நோக்கமுள்ளவை. ஒரே தேசம், ஒரே தோ்தல் என்கிற வரிசையில் ஒரே மதம், ஒரே மொழி என்பவைதான் சிக்கல்களை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரே மொழி என்பது மற்ற மாநில மொழிகளைப் பின்னுக்குத் தள்ளுகிற முயற்சியாக தமிழ்நாட்டில் கருதப்பட்டுவிட்டது. ஒரே மொழி ஹிந்தி என்பதாகக் கருதி, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை நீடிக்கிறது.

இரு மொழிக் கல்வியை மும்மொழிக் கல்வியாக்கினால், மாணவா்களின் எதிா்காலம் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது ஒரு கருத்தோட்டமாகும். மும்மொழி என்பதில் ஹிந்தி மொழியைக் கற்காமல், ஏதேனும் ஓா் இந்திய மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்கிற புதிய கல்விக் கொள்கை தவறாகவே தமிழ்நாட்டில் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது.

வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாமானிய மக்கள் ஹிந்தியில் பேசுவது, தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்குத் தெரியும். ஹிந்தியை ராணுவத்தில் கற்பதுபோல, ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வது மிகமிக எளிது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள சுமாா் 60 கோடி பேருக்கு ஹிந்திதான் எளிய மக்களின் மொழி.

அவ்வளவு ஏன்? கேரளத்தில், ஆந்திரத்தில், கா்நாடகத்தில் மும்மொழிக் கல்விதான் மாணவா்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதேபோல நாமும் மொழிச் சிக்கலுக்குத் தீா்வுகாண முடியாதா? இதேபோல ஒரே மதம் என்பதில் அதிகமாக அரசியல்தான் பேசப்படுகிறது. இப்போது இந்தியாவில் உள்ள சுமாா் 20 கோடி முஸ்லிம்கள் சமத்துவ உரிமைகளோடுதான் வாழ்கிறாா்கள். குடியரசுத் தலைவா்கள், நீதிபதிகள், தோ்தல் ஆணையா்கள், உயா் அதிகாரிகள் பலா் இஸ்லாமியா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவின் ஆன்மிகம் என்பது உலகத்தையே ஒரே குடும்பமாகக் கருதும் ‘வசுதைவ குடும்பகம்’ என்கிற விசாலமான ஆன்மிகம். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், ஹிந்துக்கள் தங்களை மத ரீதியில் கம்பீரமாக மதத்தின் பெயரால் அழைத்துக் கொள்ளவும், அறிமுகப்படுத்திக் கொள்ளவும் தயங்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ஏனோ அந்தத் தயக்கம் உள்ளது.

இந்தியாவில் உள்ள நாத்திகா்கள்கூட தங்களை நாத்திகா்களாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். அவா்களுக்கு ஹிந்து மதத்தில் உரிமை உண்டு. அல்லாவை நம்பாத முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஏசுநாதரை ஏற்காத கிறிஸ்தவா்களுக்கு கிறிஸ்தவ மதத்தில் இடமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியா, ‘ஒரே இந்தியா’ என்பதிலுள்ள ஒரே என்பது ஒரு கருதுகோள்தானே தவிர, கட்டாயச் சட்டம் அல்ல. இந்த ஒரே என்பது மற்றவற்றை ஒழித்துவிடக் கூடியதல்ல. அடியில் ஒரு செடி முளைக்க விடாத ஆலமரம் அல்ல இந்த ஒரே என்பது. மற்றவற்றையும் வளா்த்து வளமாக்கி உடன் உறைகின்ற ஒன்றுதான் இந்த ஒரே என்பது.

ஐரோப்பிய யூனியனில் யூரோ டாலா் என்ற பொது நாணயம் புழக்கத்தில் உள்ளதுபோலத்தான் இந்த ஒரே என்பதையும் ஒரு சோதனையாகவே கருதலாம். இது சாத்தியமாகாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஒன்றுமில்லை. தவறான புரிதலால் ‘ஒரே’ என்பதை ‘ஆபத்தானது’ என நாம் எண்ண வேண்டிய அவசியமே இல்லை.

அரசியலைவிட விஞ்ஞானம் இதற்குரிய நல்ல தீா்வை எதிா்காலத்தில் தரலாம். ஒன்றியம், ஒரே என்பதைப் பற்றி எதாா்த்தமாக யோசிக்கும் தருணம் இது.

காரணம், பிரதமா் நரேந்திர மோடி ஹிந்திக்காரா் அல்ல, குஜராத்தி. குடும்ப பாரம்பரிய பெருமை உள்ளவா் அல்ல. அவருடைய ஆட்சியில் நடக்கும் முயற்சிகளுக்கு ஒரு சந்தா்ப்பம் தருவது தவறல்ல. தீா்ப்பளிக்க அடுத்தத் தோ்தல் வெகுதூரத்தில் இல்லை என்பதால், இவை குறித்து திறந்த மனதுடன் சிந்திக்கலாம்.

 



Read in source website

 

கடந்த 1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறை நடந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க, சிறில் மாத்தியூ உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

ஹிட்லர் கூட செய்யாத கொடூர உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்கள் மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அடைந்து கொண்டிருந்தபோது 1981 ஜுன் 1 இல் பகலில் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம்.செல்லப்பா என்னும் ஆர்வலர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.

இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பாவும் வேறு சிலரும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் மருத்துவமனை வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

1936-க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.

இது 20-ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜுன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400-க்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது அங்கு காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. புஞ்சிபண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு காவல்துறையினர் உயிரிழந்தனர். இவர்களில் கனகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். தவிகூ கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

அன்றிரவே (மே 31) யாழ் நகரின் பிரபலமான பல வணிக நிறுவனங்கள், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேசுவரனின் இல்லம், பழைய சந்தைக் கட்டடம், மருந்துக் கடைகள் தீயிடப்பட்டன.

யாழ்ப்பாண நகரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள சுன்னாகம் சந்தையிலும் தாக்குதல் நடத்தப்பட்டு சந்தை சேதமாக்கப்பட்டது. சுன்னாகம் சந்தையில் இருந்த யாழ் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், 'கூல் பார்' என்ற கடை உட்பட ஏழு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நெல்லியடி சந்தையும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. 15 மைல் தொலைவில் உள்ள காங்கேசன்துறையில் கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன. பொதுமக்கள் ஒரு வாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

ஜுன் 1 1981, திங்கள்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கா. பொ. ரத்தினம், மு. சிவசிதம்பரம் ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர். கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உள்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர். அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

திங்கள்கிழமை இரவு 09.20 மணியளவில் யாழ் நகரில் இருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கருகில் இருந்த கடைகள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பிற்கு வெளியே இருந்து வெளியிடப்பட்ட ஒரேயொரு தினசரிப் பத்திரிகை ஈழநாடு ஆகும். பத்திரிகை முகாமையாளர் ப. சிவானந்தன், உதவியாளர் சச்சிதானந்தன் ஆகியோர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாயினர்.

அன்றிரவு 10 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினுள் நுழைந்த தென்னிலங்கை வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு நூலகத்தை சேதப்படுத்தி கட்டடத்திற்குத் தீயிட்டனர். யாழ் காவல் நிலையம் நூலகத்திற்கு 700 அடி தொலைவில் அமைந்திருந்தது.

நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் சி. வி. கே.சிவஞானம் மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.

செவ்வாய் ஜுன் 2, 1981இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜுன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. ஜுன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

சீருடைகளில் வந்தோரால் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில், இரண்டு அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர், அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக நான்சி மறே என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்குச் சொந்தமான "டெய்லி நியூசு" பத்திரிகை 1981 நிகழ்வை "அன்றைய அரசினால் விடுவிக்கப்பட்ட குண்டர்களால்" இவை நடத்தப்பட்டதாக தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்தது.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண.டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழக இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த  “தி ஜாஃப்னா பப்ளிக் லைப்ரரி ரைசஸ் ஃப்ரம் இட்ஸ் ஆஷஸ்” (The Jaffna Public Library rises from its ashes) என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

1982இல் யாழ் நூலகத்திற்க்கு தமிழகத்தில் நாங்கள் சேகரித்த நூல்களை நெடுமாறன் தலைமையில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் வழங்கப்பட்டது. மயிலாப்பூர் கற்பகவிடுதி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர்க.ள் இராசராம், குன்றக்குடி அடிகளார், சிபிஐ மாநில செயலாளர் ப.மாணிக்கம் எம்.எல்.சி என பலர் பங்கேற்றனர். யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் அவருடைய யாழ் நொருக்கபட்ட நிலையில் அவருக்கு வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்களை அவருடைய துணைவியர் படு கொலை  செய்யப்பட்ட யாழ் மேயர் சரோஜா யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

பின் அவர் இதை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் ரயில் மூலம் சென்று அங்கிருந்து தலை மன்னார் சென்றார்.

நான் உடன் சென்று வழியனுப்பி வைத்தேன். பின்பு 1983 கலவரம் நடந்தது. கருப்பு ஜீலை என….

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

இதன் அருகே இந்திய உதவியில் சமீபத்தில் கட்டப்பட்ட யாழ் கலாசாரமையம் அமைந்துள்ளது.



Read in source website

தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். 

* 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்தவர்கள்,  காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் திமுகவினர்.

* அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர்.  தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார்.

* 1996-ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

* அனைத்துப் பள்ளிகளிலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தையும் நிறைவேற்றினார்.

* 2010-11-ஆம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, ஹிந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது.  தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கருணாநிதியே காரணம்.

* தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதை நிறைவேற்றியவர் கருணாநிதி.

* திருக்குறளை மீட்டு, திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு.

* கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “"பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்'-- அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

* தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார்.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிட்டவர் கருணாநிதி.

* அண்ணா வழியில், கருணாநிதியும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

* தமிழைச் செம்மொழியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவிப்பு.  இதற்கு முழு முயற்சி எடுத்தவர் கருணாநிதி.

* தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியவர்.

* 1974-ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவினார்.

* சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியை நிறுவி,  வெளிநாடுகளிலும் கல்வி மையங்களை ஏற்படுத்தினார்.

(ஜூன் 3-மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள்)



Read in source website

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசின் வாயிலாகவும்,  திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் எண்ணற்ற சாதனைகளை மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் நிறைவேற்றினார்.

கருணாநிதி திட்டங்களைத் தீட்டுகிறாரா அல்லது திட்டங்களுக்காகவே கருணாநிதி இருக்கிறாரா என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு.
தொழில் துறை வளர்ச்சியில் முன்னணி, கல்வி, மருத்துவ வசதிகளில் தன்னிறைவு, போக்குவரத்துத் துறை அரசு மயம் என்று முத்தான பல்வேறு திட்டங்கள் சிறப்புடையது. இதுதவிர, பூம்புகாரில் புதிய பூம்புகார், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை என்று சரித்திரம் பேசும் சாதனைகள் ஏராளம். கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் கருணாநிதி.
இவற்றில் கருணாநிதியின் ஆட்சிக்காலம் வாரியாக, முத்திரைப் பதித்தத் திட்டங்களைப் பார்க்கலாம்!

1969 - 76 ஆட்சிக் காலம்

பரனூரில் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் இலவசக் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டம்,  சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் -  ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது, பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம், அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம், சேலம் உருக்காலைத் திட்டம், 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம், 1,78,880  ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கியது, சிப்காட் தொழில் வளாகங்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கோயில்களில் கருணை இல்லங்கள், கை ரிக்ஷாக்களை ஒழித்துச் சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம்,   அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம், பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம், மாநிலத் திட்டக் குழு உருவாக்கம், காவல்துறை மேம்பாட்டுக்கு காவல் ஆணையம். 

 

1989 - 91 

தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகைகள், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம், ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம். ஈ.வெ.ரா.  நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், ஆதி திராவிடர்,  மிக பிற்படுத்தப்பட்டோர், வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி,
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்,  மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட இதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 சதவீதம் இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு. 

1996 - 2001

உயர்கல்வி, நெடுஞ்சாலை, தகவல் தொழில்நுட்பம், சமூக சீர்திருத்தம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைகள் உருவாக்கம், சென்னையில் டைடல் பூங்கா, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கால்நடைப் பாதுகாப்புத் திட்டம், பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள், தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை,  ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல், கிராமங்கள்தோறும் சிமென்ட் சாலைகள், வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்,  சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு, கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம், சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம், சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,  மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை,  அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,  13 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.

2006 - 2011 

இலவச கலர் டி.வி. திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,  விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி,  பயிர்க்கடன் வட்டி ரத்து,  புதிய பயிர்க் கடன்கள், நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை அதிகரிப்பு,  மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள், மேலும், புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு,  பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில்  காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கியது,  விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, ஆதிதிராவிட விவசாயிகள் "தாட்கோ' நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி,  நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத்தினால் கடன் ரத்து, மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்,  தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம்.

(ஜூன் 3 - மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள்)



Read in source website

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்ய வேலூர் கோட்டைக்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடைக்கு வந்தபோது, இரவு 9.55-ஐ தாண்டிவிட்டது. சில நிமிடங்கள்தான் இருந்தன. அப்போது, கருணாநிதி என்னப் பேசுவார் என்று ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தார்.

அவர், இன்று வேலூர் கோட்டையில்.. நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்..' என்று ஒரே வரியில் 2 நிமிடத்தில் பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்பின்னர், 2008-இல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் விழாவில் பங்கேற்க முதல்வராக வந்த கருணாநிதி, இதை நினைவுபடுத்தியும் காட்டினார்.

தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கருணாநிதி!

ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்துகளால் வெளியே வந்தவர் அவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் வந்தவர்.

* டி.எம்.கருணாநிதி என்றுதான் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். பின்னர், மு.க. இருப்பினும், அனைவராலும் அழைக்கப்படுவது கலைஞர் அல்லது தலைவர்.

* உடல்நலம் பாதிக்கப்படும் வரை, அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது!

* கருணாநிதிக்குப் பிடித்தது  வேட்டிதான்.

*அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்ததால், சைவமே பெரும்பாலும் சாப்பிட்டார்.  கீரை கட்டாயம் இருக்க வேண்டும். மற்றபடி இட்லி, சாதம், சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை. ஆற்காடு பிரியாணி கருணாநிதிக்கு ரொம்பவும் பிடிக்கும். 1990 - களில் பல முறை பிரியாணி ஆற்காட்டில் இருந்து காரில் சென்னைக்கு பயணித்துள்ளது.

* 1960-களில் திமுக தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் வசூலித்துத் தந்து, அண்ணாவின் பாராட்டையும் பெற்றார்.

*சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி.  கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!

*"வீரன் ஒருமுறைதான் சாவான். கோழை பலமுறை சாவான்' என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி,  "வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்.

*ஆரம்பத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் 'உடன்பிறப்பே' என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்.

* பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி.  "ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று ஒரு முறை கேட்கப்பட்டது.  "அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா?'  என்றுதான் பார்க்க வேண்டும்' என்று திருப்பி கேட்டார்.

* கருணாநிதி 100 - க்கும் மேலான படங்களுக்கு கதை - வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம், "மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது'.

* சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதை, வசனங்கள், பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.

* 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்', 'கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது',  வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' - கருணாநிதி சொல்லிய பிரபலமான வாக்கியங்கள்!

* 12 முறை எம்.எல்.ஏ., 5 முறை முதல்வர், 10 முறை தி.மு.க. தலைவர், 1 முறை எம்.எல்.சி.  என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்தான்!. எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர்.

* சிக்கலான நேரங்களில்  நள்ளிரவிலும் தலைமைச் செயலகத்தில் அமர்ந்திருப்பார்.

*படுக்கையில் உட்கார்ந்து கிளிப் அட்டையில் வெள்ளை காகிகத்தில் வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம். உயரத்துக்காக இரு தலையணைகள் உண்டு.
- மை பேனாவைத்தான் பயன்படுத்தினார்.

*கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம், முரசொலி ஆகிய 5 இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் கருணாநிதிக்காகவே காத்திருக்கும்.

*கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கியபடி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்கியுள்ளார். 2008 - இல் ஒருமுறை ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி மலையில் சில நாள்கள் தங்கியிருந்ததும் உண்டு.

*கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேஜையில் வைத்திருப்பது திருக்குறள்.

*தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பது கருணாநிதிக்கு உண்டான குணம். 'சாமானியனையும் முன்னணி தலைவராக்கும், அமைச்சராக்கும், மக்கள் பிரதிநிதியாக்கும் உள்ளாட்சி தலைவராக்கிய ஆக்கி கொண்டிருக்கும் இயக்கம் திமுக - ஜனநாயக இயக்கம் செயற்குழு பொறுப்பு கூட தேர்தலில் போட்டியிட்டே வர முடியும்' என்று கருணாநிதி அவ்வப்போது சொல்வதுண்டு.

* வேட்புமனு செய்ய காசில்லாதவருக்குக்கூட போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி.  பண, படை பலம் படைத்தவர்களைக் கூட சாமானியர்களை வேட்பாளர் ஆக்கி வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி. 

(ஜூன் 3 - மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள்)



Read in source website

தமிழக  அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தில்லித் தலைமையை உற்றுநோக்க வைத்தவர்.

ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தீவிரமாக இருக்கும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே என்று தேசியத் தலைவர்களால் பாராட்டும் பெற்றவர்.
கதாசிரியர், பத்திரிகை ஆசிரியர்,  அரசியல் தலைவர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். 1969-இல் முதன் முறையாக முதல்வரானார்.  

இளமையிலேயே போர்க்குணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக் கட்சியின் தூணாகக் கருதப்பட்ட அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது வயதில் சமூக இயக்கங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

"தூக்குமேடை' நாடகத்தை தஞ்சையில் நடத்திக் கொண்டிருந்தபோது,  அதன் மேடையில் எம். ஆர். ராதா,  கருணாநிதியை 'கலைஞர்' என்ற பட்டம் அளித்து அழைத்தார். அந்தப் பெயராலேயே எப்போதும் அழைக்கப்பட்டு வந்தவர் கருணாநிதி. முரசொலி என்ற பத்திரிகையையும் தொடங்கினார். 

'கல்லக்குடி' என்ற கிராமத்தைத் தேர்ந்தெடுத்து சிமெண்ட் ஆலையை உருவாக்கி 'டால்மியா சிமென்ட்' என்று பெயர் வைத்ததுடன், அந்த ஊரின் பெயரை 'டால்மியாபுரம்' என்று மாற்றினர். அந்தப் பெயரை கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. 1952-இல் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் மிகவும் கவனம் பெற்றது. கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

முரசொலி நாளிதழ் வாயிலாக, மாணவர் மன்றத் தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் கருணாநிதிக்கு நெருக்கமாக, உறுதுணையாகவும் இருந்தனர். 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1957-இல் நடைபெற்ற திமுக ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில், தமிழ்நாட்டில் மத்திய அரசால் ஹிந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக். 13-இல் நடைபெற்ற போராட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கியும் நடத்தினார். அண்ணா,  கருணாநிதி உள்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். திமுகவின் போராட்டமும், மாணவர்களின் எழுச்சியும் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடக் காரணமாயிற்று.

கருணாநிதியின் எழுச்சி

திமுகவின் தொடக்கக் கால உறுப்பினர். பின்னர், முன்னணித் தலைவராகி 1960- ஆம் ஆண்டில் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார். 1969 -ஆம் ஆண்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு நாள் வரை 50 ஆண்டுகள் பதவியை வகித்து, ஹிந்திய அரசியல் வரலாற்றில் சாதனையைப் படைத்தார்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்றார். 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். சட்ட மேலவை உறுப்பினராக இருந்ததால்,  1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் முக்கிய பங்கை இவர் ஆற்றினார்.

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை,  அண்ணா நகர்,  துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர் உள்பட பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப் பேரவையில் பொன் விழா நாயகராக விளங்கினார். 1962-இல் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார்.
1967-இல் திமுக ஆட்சியைப் பிடித்து, முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். அவர் மறைவுக்குப் பின்னர்,  1969-இல் கருணாநிதி முதல்வராகினார். பின்னர், 1971-1976,  1989-91 ,  1996-2001, 2006-11—என ஐந்து முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணியாற்றினார். பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி, இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
மத்தியில் 1989-91-ஆம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சி, 1996-98-ஆம் ஆண்டுகளில் தேவெ கௌடா,  ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி,  1999-2004-இல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 2004-14-இல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகள் அமைந்ததில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.  இதுதவிர,  பிரணாப் முகர்ஜி,  பிரதீபா பாட்டீல் உள்பட பல குடியரசுத் தலைவர்களைத் தேர்வு செய்ததிலும் கருணாநிதிக்கு உள்ள பங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசியலில் பங்காற்ற வாய்ப்பு கிடைத்தும், ஆளுநராக, மத்திய அமைச்சராக என பல்வேறு உயர்பதவிகள் தேடி வந்தபோதும் அவற்றை மறுத்து தமிழக அரசியலிலே முழு பங்காற்றினார்.
அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்துவந்தார்.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதியானது முரசொலி,  குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன.  இந்த நூல் ஐந்து பாகங்களாக வெளிவந்துள்ளது.

விருதுகளும், பெற்ற சிறப்புகளும்..

உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில ஹிந்திய திரைப்பட தொழிலாளர்கள் என்ற பெப்சி மாநாட்டில்,  2009-ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

1970-இல் பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கௌரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-இல், அவர் மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010-க்கான "உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்' அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.  இதுபோன்று நூற்றுக்கணக்கான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.

மறைவு

2016- ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதி 2018-ஆம் ஆண்டு ஜூலை 27-இல் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு,  ஆகஸ்ட்  7-இல், தனது 94-ஆவது வயதில் சென்னையில் காலமானார். “மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர். அவரது வாழ்க்கை ஒரு சகாப்தம். 



Read in source website

சென்னை மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளங்கள் விரைவில் களையப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 13வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவின் பெயர்ப் பலகையில் சாதிப் பெயரை நீக்கியிருப்பதை அடுத்து எழுந்துள்ள இந்த எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்துப் பாடநூல்களிலும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னால் குறிப்பிடப்பட்டுவரும் சாதிப் பெயர்கள் தவிர்க்கப்பட்டன.



Read in source website

சீருடன், சிறப்புடன், செல்வத்துடன், புகழுடன் விளங்கி பின்னர் சீரழிந்த நாடுகள் உண்டு. செழித்து சிறந்து பின்னர் சிதைந்து நலிந்துபோன சமுதாயங்கள் உண்டு. அவை மீண்டும் துளிர்த்து எழுந்து புகழ்பெற்று நின்ற வரலாற்று நிகழ்வுகள் நிறையவே உண்டு. இந்த மாற்றங்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் அடித்தளமாக, மூலமாக யாரோ ஒரு தலைவன் இருந்திருப்பார். அதைக் கண்டு உணர நேர்கிறபோதுதான், இருந்ததும், இழந்ததும், மீண்டும் அதை அடைந்ததற்கும் அந்த யாரோ சில தலைவர்கள்தான் காரணம் என்பது சிந்திக்கவும், சிலிர்க்கவும் வைக்கக்கூடிய பேருண்மை. இதை பலர் உணர்ந்தும், சிலர் இன்னும் உணராததும் சமூக யதார்த்தம்.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிமுறைகள், அவற்றை அடைவதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் என்கிற அடித்தளத்தில் உருவாகும் அமைப்புகள் அனைத்தும் வெற்றி முகட்டை எட்டியதில்லை. உருவாக்கிய தலைவர்களுக்குப் பின்னால் உருகிப் போனவை ஏராளம். தொடர்ந்து அந்தக் கடமையினை ஏற்று, ஓய்வின்றி லட்சியப் பாதையில் பயணம் மேற்கொண்ட, அடுத்தக்கட்ட தலைவர்களாலேயே அமைப்பின் வலிமையோ, மாற்றத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியின் பொலிவோ குன்றாமல் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. நாடுகள் பல. அவற்றில் உருவான பிரச்சினைகளும், அவற்றின் தன்மைகளும் பற்பல. உதிர்வதும், துளிர்ப்பதும் இயற்கையின் நியதி என்பதைப் போலவே மனித குலத்தில் மாற்றங்கள் நிகழும்.

ஒளிவீசும் தமிழகத்தின் பின்னணியில் திராவிட இயக்கம்

தமிழ்நாடு..! இந்திய துணைக் கண்டத்தின் தனிப்பெரும் குணங்கள் நிரம்பிய நிலம். இங்கு சிறந்த ஆட்சிகளும் உண்டு. சீரழித்த ஆட்சிகளும் உண்டு. தொன்மை மொழி, வாழும் வகை சொல்லும் இலக்கியங்கள், வாழ்ந்து காட்டிய மனிதர்கள், பார் புகழும் பண்பாடு, செறிந்த கலாச்சாரம், இத்தனைக்கும் மீறிவந்த மொழி, இன அரசியல், பண்பாட்டுப் படையெடுப்புகள், இவற்றை எதிர்கொண்டு தனித்தன்மை மங்காமல் ஒளிவீசும் தமிழகத்தின் இன்றைய வளமான வாழ்வின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியாக திராவிடப் பேரியக்கம் இருந்திருக்கிறது என்பது, ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.
என் போன்ற ஒருவன் இத்தனை சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் காரணம் இப்பேரியக்கம்தான். மனதில் எழுந்த எண்ணங்களும், அவற்றின் அடிப்படையில் விளைந்த கேள்விகளும், ஆதாரத்தோடு கிடைத்த விடைகளும், இவ்வழியே வளர்ந்த ஆர்வமும் எங்களைக் கொண்டுவந்து நிறுத்திய இடம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிடப் பேரியக்கத்தின் அடித்தளமான சர்.பி.டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோரின் முயற்சியால் உருவான இந்த இயக்கத்தினரின் உழைப்பு, பயன்களால் தமிழகம் சிறந்து விளங்கத் தொடங்கியது.

அண்ணா விட்ட இடத்திலிருந்து தொட்டு வளர்த்தவர் கலைஞர்

மூடப் பழக்க வழக்கங்களால் முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்த சமுதாயத்திலிருந்து தந்தை பெரியாரால் விடுதலை கிடைத்தது. சமூக நீதி என்கிற அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்குவதையே தன்னுடைய முதல் கடமையாகக் கொண்டு தந்தை பெரியார் செயல்பட்டார். அதில் முகிழ்ந்த இயக்கம்தான், திராவிடர் கழகம். அதிலிருந்து அறிஞர் அண்ணா கண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம். பொருளாதாரம், சமூகம் என இரண்டுக்கும் பாடுபடக்கூடியதாக அண்ணா அதைத் தந்தார். அவரது பேச்சுகள் பாமரனையும் சென்றடைந்தன. படித்தவர்களின் மனதையும் பண்படுத்தி தன்பக்கம் திருப்பின. அவர் எழுதிய கட்டுரைகளும் கடிதங்களும் உலக வரலாற்றினை, அரசியல் மாற்றங்களை, தமிழ்நாட்டின் தொன்மையை, இலக்கியச் செழுமையை சாதாரணமானவர்களுக்கும் கொண்டு சேர்த்து, அவர்களைப் படைவீரர்களாக மாற்றின.

பண்டிதர்களின் சபைகளிலே உலவிய தமிழ், பாமரர்களின் மன்றங்களில் முழங்கத் தொடங்கியது. ஆலமரத்தடியில் இருந்தவனும் அரசியல் பேசத் தொடங்கினான். இலக்கியம் என்பது எல்லோருக்கும் கைவரப் பெற்றது. தமிழ் புத்துணர்ச்சி பெற்றது. அதேநேரத்தில், சமுதாயத்தில் படர்ந்திருந்த சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள் அகன்று எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்கிற இலக்கை அடையவும், உழைப்பவர்கள் உயரவும், சமதர்மப் பூங்காவை உருவாக்கிடுவதற்குமான முயற்சியில் அறிஞர் அண்ணாவின் இயக்கம் ஈடுபட்டது. அந்த அண்ணாவுடன் சேர்ந்து வளர்ந்து, அவர் விட்ட இடத்திலிருந்து தொட்டு வளர்ந்த மாபெரும் தலைவர்தான் கலைஞர் கருணாநிதி.

எண்ணிப் பார்த்தால் இவர்களெல்லாம் யாரோ தனி மனிதர்கள் அல்ல. பெரியார் என்கிற பெருந்தலைவனின் சமூக சீர்திருத்தக் கருத்துகள், அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல் இயக்கம், அவற்றால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மனமாற்றம், சமுதாய மாற்றம், மொழிப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பண்பாட்டுக்கு மிகப்பெரிய படைக்கலனாக திமுக கிடைத்தது. கலைஞர் என்கிற தலைவன், இவற்றின் மொத்த உருவமாக மாறினார். சர். பிட்டி தியாகராயரையோ, பனகல் அரசரையோ, நாயரையோ படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இடத்தில்தான் எங்களைப் போன்றோர் இருந்தோம். தந்தைப் பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அறிஞர் அண்ணாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கலைஞருடன்தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். பெரியார், அண்ணாவின் ஒட்டுமொத்த வடிவமாக கலைஞர் திகழ்ந்தார்.

வயதில் குறைவானவர்களையும் சரிக்கு சமமாக நடத்துவார்

1971ஆம் ஆண்டிலிருந்தே கலைஞரின் பொதுக்கூட்ட பேச்சுகளைக் கேட்டு வந்தேன். வளர்ந்தேன். அவருடைய திரைப்படங்களைப் பார்த்து, வசனங்களைக் கேட்டு பரவசப்பட்ட அந்த தலைவருடன், அவசர நிலை காலகட்டத்தின்போது மிசா சட்டத்தில் கைதாகி, ஓராண்டுக்குப் பின் விடுதலையாகி வெளியே வந்ததிலிருந்து நெருங்கி பயணம் செய்கின்ற பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தலைவர் கலைஞரிடமுள்ள தனிப்பெரும் குணமே, இளைஞர்களையும் சரிசமமாக நடத்துவது, திறமையுள்ளவனை உயர்த்தி உரிய இடத்தில் உட்கார வைப்பது, எல்லோரையும் தனது நெஞ்சத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் அன்புகாட்டுவதுதான்.

ஒரு இயக்கத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் கொள்கைகளாக இருக்கலாம். லட்சியங்களாக இருக்கலாம். அணுகுமுறைகளும், செயல்பாடுகளுமாக இருக்கலாம். இவை, எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரிடம் உள்ள ஈடுபாடும், அதேபோல் தலைவர், தொண்டர் மீது காட்டக்கூடிய அக்கறை, அன்பினால் ஏற்படக்கூடிய தொடர்பும், நெருக்கமும் தொண்டரின் தொடர் இருப்புக்கு காரணமாக இருக்கும். சலனங்கள் இல்லாமல், சபலங்கள் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பொருட்படுத்தாமல், தொடர் லட்சியப் பயணத்தில் செல்வதற்கு தலைமையிடம் ஏற்படக்கூடிய தனிப்பெரும் அன்பும், ஈடுபாடும் மிக முக்கிய காரணமாக அமையும்.

அந்த வகையில் தலைவர் கலைஞருடன் காரில் பயணம் செய்கின்ற வாய்ப்பும், தனியாக பேசுகின்ற நேரங்களும் எனக்கு நிறையவே அமைந்திருக்கின்றன. அவருடன் பயணம் செய்யும்போது, சில நிகழ்வுகளை எதேச்சையாக சொல்வதுபோல் சொல்வார். ஆனால், அதன் நோக்கம் என்ன என எனக்குத் தெரியும். அவர் சொல்லக்கூடிய ஒரு செய்தி, தகவல் அல்லது ஒரு நிகழ்வு பல பேருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதை என் போன்றவர்களிடம் சொல்லும்போது, நாங்கள் கூட்டங்களில், அவற்றை மக்களிடம் எளிதில் சென்று சேரும் வகையில் எடுத்துச் சொல்வோம் என்பதும் அவருக்குத் தெரியும்.

அத்துடன் மட்டுமின்றி, யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்பதும் கலைஞருக்கு நன்கு தெரியும். பின்னாளில் அவர் கூறியவற்றைப் பொதுக்கூட்ட மேடைகளில் நான் பயன்படுத்தும்போதும், மாநாடுகளில் பேசும்போதும் அந்த தகவல்கள் பலருக்கு புதியதாக மட்டுமின்றி, பெரும் வரவேற்பை பெறக்கூடியதாகவும் இருக்கும். அதைக்கண்டு கலைஞர் பெருமகிழ்ச்சி அடைவார். ஏதோ ஒரு காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்த ஒரு அரசியல் நிகழ்வினை, அவர் எடுத்த முடிவினை, அவர் செய்த செயலால் ஏற்பட்ட மாற்றத்தினை பலரிடம் சென்று சேர்க்க வேண்டும் என்று கருதுவார். அதைக் கொண்டு செல்ல, அவரைவிட வயதில் பலமடங்கு குறைவான என்னைப் போன்றோரைக்கூட சரிக்கு சமமாக நடத்தும் பாங்கு தனித்துவமானது. அவரைப் பற்றி பல புத்தகங்கள் எழுதும் அளவுக்கு நினைவுகள் உள்ளன.

கலைஞருக்குக் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசு

அவரது குணம் எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக, ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். 1984ஆம் ஆண்டு, அவரது மணிவிழாவின்போது, அவருக்கு ஏதாவது பரிசு தர வேண்டுமென தற்போதைய திமுக தலைவரும், முதல்வரும், அப்போதைய இளைஞரணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலினும், அவருடன் துணைச் செயலாளராக பணியாற்றிய நானும், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களும் ஒன்றுசேர்ந்து கொஞ்சம் பொருள் திரட்டி பரிசு தர முனைந்தோம். கலைஞரிடம் ஒரு குணம் இருந்தது. அவருக்கென்று எதையுமே வைத்துக் கொள்ள மாட்டார்.

அவரது சட்டப்பேரவை வெள்ளிவிழாவைப் பாராட்டி, திருச்சியில் மறைந்த அன்பில் தர்மலிங்கம் 60 பவுனுக்கு ஒரு ஆரம் அணிவித்தார். அதைக் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சியின் கருவூலத்துக்கு வழங்கினார். அதேபோல், சென்னையில் அவரது எடைக்கு 3 மடங்கு அளவுக்கு வெள்ளிக்கட்டியாகக் கொடுத்தார்கள். அதையும் கட்சிக்குக் கொடுத்தார். பிரச்சாரப் போக்குவரத்துக்கு வசதியாக நல்ல கார் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நிதி கொடுத்தார்கள். அதையும் கட்சிக்கே கொடுத்தார். எனவே, எதைக் கொடுத்தாலும் கட்சிக்கு கொடுத்துவிடும் மனநிலையில் உள்ள கலைஞருக்கு, அவர் வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு பரிசினைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் யோசித்து திட்டமிட்டோம்.

அன்றைய காலகட்டத்தின் பொருள் மதிப்பு, பண மதிப்புக்கு எங்களால் மாவட்டத்துக்கு சுமார் ரூபாய் 2 ஆயிரம் வீதம் தமிழகம் முழுவதும் இருந்து 60 ஆயிரம் வரை சேகரித்தோம். அறிவாலயம் கட்டுகிறபோதுகூட, அதற்காக கலைஞரிடம் 2 ரூபாய், 5 ரூபாய் நிதியாக கொடுக்கப்பட்டது. அந்த விவரம், முரசொலியிலும் வெளிவந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் நாங்கள் ரூ.60 ஆயிரம் சேகரித்து, தளபதி ஸ்டாலின் யோசனையின்பேரில், கலைஞரின் வீட்டில் அவரிடம் இல்லாத புத்தகங்களை ரூபாய்.50 ஆயிரத்துக்கு வாங்கினோம். அவற்றை வைப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சுழல் அலமாரி வாங்கினோம். இதனை, சென்னை கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தலைவர் கலைஞரிடம் கொடுத்தோம். அதைப் பெற்றுக்கொண்டபோது அவரின் மனமும், முகமும் மிகுந்த மலர்ச்சியாக, மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. அதன்பின் அந்த அலமாரியும், புத்தகங்களும் நீண்ட நாள் வரை, அவரது வீட்டில் அவர் உட்காரும் இடத்துக்குப் பின்னாலேயே இருந்தது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தலைவரையும், அவருக்குப் பின்னால் நாங்கள் பரிசளித்த புத்தகங்கள் மற்றும் அலமாரியைப் பார்க்கும்போதெல்லாம் பரவசமடைவோம்.

நாம் கொடுக்கும் பரிசு தகுதி வாய்ந்ததாகவும், வைத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு பயன்தரக் கூடியதாகவும் இருக்குமேயானால், அதை அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் என்பதை அந்த நூல்களும், அலமாரியும் எங்களுக்கு எடுத்துக் காட்டியது. தலைவர் கலைஞர் விலை மதிப்பில்லாததாக கருதியது நூல்களை மட்டும்தான். அனைத்து நூல்களையும் படிப்பார். அனைத்து மொழிகளின் இலக்கியங்களையும் படிப்பார். வரலாற்றைப் படிப்பார். எனவேதான், அவற்றைத் தேடித்தேடி சேகரித்துக் கொண்டு போய் கொடுத்தோம்.

அகில இந்திய அரசியலுக்கு அழைப்பும் மறுப்பும்..

அந்த பரிசினை நாங்கள் கொடுத்த நிகழ்வு நடைபெற்றபோது, சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் அன்றைய மிகப்பெரிய தலைவர்களான பாபு ஜெகஜீவன் ராம், பகுகுணா, அப்போதுதான் அரசியலில் தலையெடுத்து வைத்திருந்த பரூக் அப்துல்லா, முகமது கோயா என பல தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

நானும், தளபதி ஸ்டாலினும் பரிசினைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கலைஞரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்கள். அப்போது அவர்கள், “நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஒரு மாநிலக் கட்சியின் தலைவர். ஆனால், அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில் இருந்த பல காலகட்டங்களில் நீங்கள் எடுத்த உங்களின் முடிவுகளும், நீங்கள் ஈடுபட்ட செயல்களும்தான் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அகில இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்றோர் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து பேசும்போது, முக்கிய பேசுபொருளாக உங்கள் பெயரும், உங்களின் செயல்களும் இருக்கின்றன. இவ்வளவு அறிவாற்றல் உடைய ஒருவர், ஒரு மாநிலத்தின் மூளையில் முடங்கிக் கிடக்கக் கூடாது. இப்போது வேண்டுகோள் வைக்கிறோம். நீங்கள் அகில இந்திய அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு மிகப்பெரிய பதவி காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்குரிய இடத்தை நாங்கள் தருவோம்" என்றுகூறி, கலைஞரை அகில இந்திய அரசியலுக்கு அழைத்தனர்.

அப்போது, எங்களைப் போன்ற இளைஞர்கள் அனைவரும், இந்த வேண்டுகோளை தலைவர் கலைஞர் ஏற்கப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால் கலைஞர் பேசும்போது, அவருக்கே உரிய வகையில் நேரடியாக பதில் சொல்லாமல் வேறு உதாரணத்தைச் சுட்டிக் காட்டி குறிப்பிட்டார். கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. அதை எடுத்துக்காட்டி “இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்தியா ஏவிய விண்கலம் வெற்றிகரமாக வானத்தில் பறந்துகொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தில் முதன்முதலாக ராகேஷ் சர்மா, மல்கோத்ரா ஆகிய இரண்டு இந்திய விண்வெளி வீரர்கள் பறக்கின்றனர். அவர்களைப் பார்த்து நாட்டு மக்கள் பரசவத்துடன் பாராட்டுகிறார்கள். நானும் பாராட்டுகிறேன். இதை ஏன் சொல்கிறேன் எனில், வானில் பறக்கும் விண்கலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்குத் தெரியாது, அந்த விண்கலத்தையும் அதில் பயணம் செய்பவர்களையும் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு சாதனம் பூமியில்தான் இருக்கிறதென்று. அதுபோல், இங்குள்ள தலைவர்களே.. நீங்களெல்லாம் அரசியல் வானில் மின்னும் நட்சத்திரங்களாக இருக்கலாம். பெரிய தலைவர்களாக இருக்கலாம். நீங்கள் சார்ந்திருப்பது பெரிய கட்சிகளாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய அரசியல் போக்கின் திசை எப்படி இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு சாதனமாக திமுக தமிழகத்தில் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, என் கைகள் நடுங்காமல், நான் எழுதும் கடைசி எழுத்து எழுதுகிறவரை, என் நாக்கு தடுமாறாமல் கடைசி தமிழ்ச் சொல்லை உச்சரிக்கும் வரை, என் பேச்சு, எழுத்து, செயல் என அனைத்தும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்பதாகவே இருக்கும் என்பதை சூளுரையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பெரிய இடம், அதில் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை விட, நாம் யாராக இருக்கிறோம் என்பதில்தான் நமக்கு நிரந்தர மரியாதை இருக்கக்கூடும் என்பதை அவரது பேச்சில் சொல்லியதுடன், பின்னாளில் அதன்படியே நடந்தும் காட்டினார். பெரிய பதவி, புகழ், அதனால் கிடைக்கக்கூடிய அதிகாரம், பெருமை ஆகியவற்றைவிட, நோக்கம், லட்சியமே எந்த காலத்திலும் உயர்ந்தது என்பதை இந்த நிகழ்வின்மூலம் என் போன்றோர் உணர்ந்து இன்றளவும் அவர்வழி நின்று வருகிறோம். கலைஞரிடம் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறோம்

இந்திய அரசியலில் அவசர நிலை காலத்தில் மட்டுமின்றி, குடியரசுத் தலைவர்களாக எப்படிப்பட்டவர்கள் உட்கார வேண்டும், பிரதமராக யார் வரவேண்டும், எந்த நேரத்தில் எப்படிப்பட்டக் கூட்டணி அமைக்க வேண்டும், அரசியல் சட்டத்தின் மாண்புகள் என்ன, மாநிலங்களின் அதிகாரங்கள் என்ன, கூட்டாட்சித் தத்துவம் என்றால் என்ன என்பதையெல்லாம் விளக்கும் நேரங்களில் தலைவர் கலைஞர் ஒன்றை மறக்காமல் அடிக்கடிச் சொல்வார்.

“மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம் என்கிறபோது, இந்தியாவின் வலிமையைக் குன்றச் செய்துவிட்டு கேட்கிறோம் என யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்தியாவின் வலிமை குன்றாமல், அனைத்து மாநிலங்களும் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை” என வலியுறுத்துவார். அதைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களால், இன்னமும் இதில் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞரைப் போல் தெளிவான கொள்கை உடையவர்கள், அதை வெற்றிகரமாகச் செய்திட வழிமுறைகளைக் கண்டவர்களை வரலாற்றில் தேடிப் பார்த்தால் மிகச் சிலர் மட்டுமே இருப்பர். வாழ்ந்த 90 ஆண்டுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தன. எத்தனை சாதனைகள், எழுத்து, பேச்சு, திரைப்பட வசனங்கள், தனிப்பட்ட பண்புகள், நகைச்சுவை உணர்வுகள் என கலைஞரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். என்னைப் போன்றவர்கள் இன்று நிலைத்து நின்று, எந்த நேரத்திலும் கட்சியின் கொள்கைகளை காப்பாற்றிட மன உறுதியுடன் இருப்பதற்கு தலைவர் கலைஞரே காரணம். இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்து கண்ணியம் குறையாமல், கொள்கையின் வலிமையை மாற்றாரின் மனம் புண்படாமல் அழுத்தமாக எடுத்துச் சொல்லும் பண்பு என்னிடம் வளர்ந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இந்த பயிற்சியெல்லாம் அவர் கற்றுக் கொடுத்தது. இளையவர்களுடன் இணைந்து சென்றால்தான் ஒரு இயக்கமும், அமைப்பும் எல்லா கால ஓட்டங்களிலும் வெற்றிகரமாக இருக்க முடியும் என அடிக்கடி கூறுவார். தொய்வில்லாமல் தொடர் சங்கிலி போல், அடுத்தடுத்த தலைமுறைகளுடன் ஏற்ற, இறக்கங்களுடன் பழகும் பாங்கு எல்லோருக்கும் கைவராது. அது, கலைஞரிடம் இருந்தது. அவரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறோம்.

கட்டுரையாளர்: திருச்சி சிவா எம்.ஏ.பி.எல்., திமுக மாநிலங்களவைத் தலைவர், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்.


தொகுப்பு: அ. வேலுச்சாமி.



Read in source website

மக்கள் தலைவர்களில் ஒருவராக எதிர்க்கட்சிகளாலும்கூட தவிர்க்க முடியாதவர் மு.கருணாநிதி. மாற்றுக் கருத்து கொண்டவர்களாலும் வியந்து போற்றப்படுபவர். மிக இளம் வயதிலேயே ‘வெற்றிகரமான’ திரைப்படக் கதை வசனகர்த்தாவாக நிலைபெற்றவர். அரசியல், இதழியல், திரைப்படம் என்று ஒவ்வொரு துறையிலும் அவரது வெற்றிகள் முன்னுதாரணங்களாகக் கருதப்படும் நிலையிலும், பல்வேறு வகைமைகளில் 173 நூல்களை எழுதியிருக்கும் அவரை ஓர் எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஏற்றுக்கொள்வதில் நிலவிவரும் தயக்கம் விவாதத்திற்குரியது.

ஒரு பக்கம், கருணாநிதியின் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் அரசின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவை என்பதால், அந்த மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்குப் பின் தெளிவான அரசியல் நோக்கங்களும் உண்டு. இன்னொரு பக்கம், கருணாநிதி என்றாலே அவரை அரசியல் தலைவர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடைத்துவிட்டு அவரது இலக்கிய ஆக்கங்கள் அனைத்தும் பிரச்சார ஊடகங்கள், சமகால இலக்கியப் போக்கிலிருந்து விலகி நிற்பவை என்று முத்திரை குத்திவிட தனிநபர் இயக்கங்கள் முயல்கின்றன.



Read in source website

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழு உறுதிமொழிகளை அளித்தார். அவற்றில் இரண்டு அம்சங்கள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. நீர்வளப் பாதுகாப்பு, குடிமக்களுக்குத் தண்ணீர் வழங்குவதை உறுதிசெய்தல், வேளாண்மைக்கு ஊக்கம், பசுமைப் பரப்பளவை 25% உயர்த்துதல், உழவர்கள் மகசூல் பெருக்க உதவி உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தார். ஆட்சியமைக்க வாய்ப்புள்ள பெரிய கட்சி ஒன்று வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளாக அவை அமைந்திருந்தன.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மக்களின் வாழ்வாதாரத்தை ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டிருந்த நிலையில், முதன்முறையாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கவனம் பெற்றன. ஆட்சியமைப்பதற்கு முன்னதாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்துவந்தது. தேர்தலுக்கு முன்னதாக நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கும் வேளாண்மைக்கும் முன்னுரிமை வழங்குவதாகக் கூறியிருந்த திமுக அரசின் இன்றைய செயல்பாடுகள் அந்த வகையில் உள்ளனவா?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்துக்கு ஆதாரமாக இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான கல்லணைக் கால்வாய் முழுக்கக் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேற்கில் பாய்ந்து வளம் சேர்த்துவரும் கீழ் பவானி கால்வாயின் 200 கி.மீ. தொலைவுக்குக் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கடும் எதிர்ப்புகளை மீறி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

கல்லணைக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.2,639 கோடியும் கீழ் பவானி கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.933 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட உள்ளதாக 2021 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். கீழ் பவானி கால்வாய்த் திட்டத்தைப் பிரதமர் மோடி 2021 பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். இதேபோல் பாசனப் பகுதியை விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் என்கிற திட்டங்கள் காவிரி ஆற்றின் கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், மேற்கில் நொய்ய லாற்றுப் பகுதி ஆகியவற்றிலும் முன்னெடுக்கப்பட உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு அடிப்படையாகத் திகழ்பவை ஆறுகளும் வளமான நிலமுமே. நீர் சேகரிப்பு, நீர் வளத்தைப் பராமரிப்பது சார்ந்து நெடிய மரபு நமக்கு இருக்கிறது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டுக் கால்வாய்த் திட்டங்களைப் பின்பற்றி, கான்கிரீட் தளம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரானது. இயற்கை வளம் மிகுந்த ஒரு வெப்பமண்டல நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பருவமழைக் காலத்தில் நமக்குத் தேவையான அளவு நீரை இயற்கை வழங்கிவருகிறது. அந்த நீரை உரிய வகையில் சேகரித்து, புவியியல் அமைப்புக்கு ஏற்ப நீர்நிலைகளைப் பராமரித்தால் வேளாண்மையும் நிலத்தடி நீரும் செழிப்பாக இருக்கும். ஆனால் அவற்றை விடுத்து, கடைமடைக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்லப் போகிறோம் என்கிற பிரச்சாரத்துடன் ஆற்றுப் பாதை முழு வதும் கான்கிரீட் தளம் அமைப்பது, மனிதர்களை உயிருடன் கல்லறையில் வைத்து சமாதி கட்டுவதற்கு ஒப்பானது.

ஆறு, வாய்க்கால், குளம், ஏரி என எந்த ஒரு நீர்நிலையும் வெறுமனே தண்ணீரை மட்டும் சுமந்துகொண்டிருப்பதில்லை. இந்த நன்னீர் நிலைகளிலும் அவற்றை ஒட்டியும் தாவரங்கள் வாழ்கின்றன. மீன்கள், நீர்-நிலவாழ்விகள், பறவைகள் எனப் பல்வேறு வகை உயிரினங்கள் நீர்நிலைகளைச் சார்ந்து வாழ்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவுச் சங்கிலியும் உயிர்ச் சூழல் மண்டலமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு உயிர்ச் சுழற்சிகளை இயற்கை நெடுங்காலத்தில் வளர்த்தெடுத்திருக்கிறது.

நீர்நிலைகளின் மூலம் ஒரு பகுதியின் வெப்பநிலை குறைக்கப்படுவது முதல் மீன் உற்பத்தி, வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் செயல்பாடுகள் மனிதர்களின் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இதையெல்லாம் இலவசமாக நாம் அனுபவித்துவருகிறோம். இவை அனைத்தையும் ஒரேயொரு செயல்பாடு மூலம் கொன்றுவிட முடியும். அதுவே, கான்கிரீட் தளம் அமைப்பது. ஒருபுறம் இயற்கை நமக்கு வழங்கும் சேவைகள் தடுக்கப்படுவதுடன், மற்றொருபுறம் இந்தத் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கரையோர மரங்களும் வெட்டப்படுகின்றன.

உள்ளூர் அளவில் நீர்நிலைகளைப் பராமரிப்பது, சிறு தடுப்பணைகள் மூலம் நீரைச் சேமிப்பது போன்றவற்றைத் தவிர்த்தும், ஆறு-வாய்க்கால்களில் இயல்பாகத் தண்ணீர் பாய்வதைத் தடுத்தும், கடைமடைக்குத் தண்ணீர் கொண்டுபோகிறோம் என்கிற பொய்ச்சாக்கு சொல்லி, கான்கிரீட் தளம் அமைக்கும் செயல்பாட்டை நியாயப்படுத்துவது தவறு. ஆறுகளும் வாய்க்கால்களும் வேளாண்மைக்கும் குடிநீர் தேவைகளுக்கும் மட்டுமில்லாமல் பாயும் பகுதிகளில் கசிவுநீர் வழியாகத் தோட்டங்கள், வயல்களை வளப்படுத்துவதுடன் நிலத்தடியில் நீரேற்றம் பெறவும் காரணமாக இருக்கின்றன. கான்கிரீட் தளம் அமைக்கும்போது இந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன.

கான்கிரீட் கால்வாய் மூலம் கடைமடைக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல இருப்பதாகவும், தண்ணீர் வீணாகாமல் தடுப்பதாகவும் கூறும் மாநில அரசு, கால்வாயிலிருந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படும்போது, 100% தண்ணீரும் பயன்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளிப்பது சாத்தியமில்லை. ஆவியாதல், நீர்க்கசிவு எனப் பல்வேறு இயற்கை நடைமுறைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மட்டுமில்லாமல், வேதி வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு நெல்லையும் கரும்பு, பருத்தி போன்ற பணப் பயிர்களையும் பயிரிடுவது அதிக நீரை உறிஞ்சுகிறது. இவற்றை முறைப்படுத்தாமல் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் கான்கிரீட் தளம் அமைப்பதால் மட்டும் எப்படித் தண்ணீரைப் பாதுகாக்க முடியும்?

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தெர்மாகோலால் வைகை அணை நீர் ஆவியாவதைத் தடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது நகைக்கப்பட்டது, மீம்ஸ் வெளியிட்டு விமர்சிக்கப்பட்டது. இன்றைக்குக் கான்கிரீட் தளம் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது என்று கூறப்படும்போது நகைக்கவோ, இதன் அறிவியல்பூர்வமற்ற தன்மை குறித்து விமர்சிக்கப்படவோ இல்லை. கீழ் பவானி திட்டக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதை ‘கீழ் பவானி விவசாயிகள் நலச் சங்கம்’ கடுமையாக எதிர்க்கிறது. திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சேனாதிபதியும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு மாநில அரசு முயற்சி எடுக்கவில்லை. இதுபோன்று கட்டுமானத் திட்டங்களின் பின்னணியில் புரளும் பெரும் பணமே இந்தத் திட்டங்கள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைமுறைப் படுத்தப்படுத்துவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மத்திய மாவட்டங்களில் கல்லணைக் கால்வாய், மேற்கு மாவட்டங்களில் கீழ் பவானி திட்டக் கால்வாய் போன்ற சூழலியலுக்கு எதிரான செயல்பாடுகள் எதிர்ப்பை சந்தித்திருப்பதுபோல், வட மாவட்டமான திருவண்ணாமலையில் சிப்காட் வளாகத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மக்களின் வாழ்வாதாரம், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைகள் மாநிலம் தழுவிய பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் முன்னுதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆழமான கவனம் செலுத்தப்படாத துறையாகவே உள்ளது. மக்கள் நலன், ஒட்டுமொத்த புவியின் நலன், அதை அடுத்த தலைமுறைக்கு நாம் கையளிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவையே முந்தைய தலைமுறை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் முதன்மைக் குறிக்கோள்களாக இருந்தன. தங்கள் போராட்டங்களில் தோல்வி கிடைக்கும் என்று அறிந்திருந்தபோதிலும்கூட, அதிகாரத்துக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பை வலுவாகத் தெரிவிக்க அவர்கள் தயங்கியதோ பின்தங்கியதோ இல்லை. ஆனால், இன்றைய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் சிலரின் அதிகபட்ச நோக்கம் சுற்றுச்சூழல் சார்ந்த அரசுக் குழுக்களில் இடம்பெறுவதாகச் சுருங்கிவிட்டது.

சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளில் தேசிய, சர்வதேச அளவிலான முன்னுதாரண ஆளுமைகளின் ஆலோசனை கள், செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், வருங்காலத் தலைமுறைக்கும் உயிர்ப்புள்ள தமிழ் நிலம் கையளிக்கப்பட வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாகச் சூழலியல் புரிதலுடன் தமிழ்ச் சமூகம் நிலத்துடன் கொண்டுள்ள ஆரோக்கியமான உறவும், மண்ணைக் காக்கும் செயல்பாடுகளும் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website