DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 02-01-2022

 

புது தில்லி: ஒமைக்ரான் முந்தைய கரோனா தொற்று வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்றும், இது நுரையீரலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெள்ளெலிகள் மற்றும் எலிகள் பற்றிய அமெரிக்க மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், உடல் எடையைக் குறைப்பதாகவும், கரோனா தொற்றின் பிற வகைகளால் பாதித்தவர்களைக் காட்டிலும், ஒமைக்ரான் பாதிப்பால் இறப்பவர்களின் வாய்ப்பு குறைவாக இருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த மற்ற வகைகளுடன் ஒமைக்ரானை ஒப்பிடும்போது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட எலிகளின் நுரையீரலில் தொற்று பாதிப்பு பத்தில் ஒரு பங்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதனை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் மனித திசுக்களை ஆய்வு செய்து வரும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் குழு ஆதரிக்கின்றன.

ஒமைக்ரான் பாதித்தவர்களில் 12 பேரின் நுரையீரலை ஆய்வு செய்ததில் முந்தைய தொற்று பாதிப்புகளை விட ஒமைக்ரான் கணிசமான அளவில் மெதுவாக வளர்ந்துள்ளது கண்டறிப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனவே ஒமைக்ரான் நுரையீரலின் கீழ் பகுதிகளில் அதிகமாகன பாதிப்புகளை ஏற்படுத்தாது, அது குறைவான குறிப்பிடத்தக்க சேதத்தை மட்டும் ஏற்படுத்துகிறது, இது அதன் தீவிரத்தன்மையைக் குறைக்கும் என்று நம்புவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர். 

தென்னாப்பிரிக்காவின் தரவுகள் படி, டெல்டா தொற்று நோயாளிகளை விட ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே இறக்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இதேபோன்று இங்கிலாந்து ஹெல்த் அண்ட் செக்யூரிட்டியின் நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்புகள் 70 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாக கூறுகின்றது. 

பெர்லின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் கணக்கீட்டு உயிரியலாளரான ரோலண்ட் ஈல்ஸ், உருமாற்றம் அடைந்து பரவி வரும் ஒமைக்ரான் தொற்றானது நுரையீரலுக்கு வெளியே இருந்து பாதிப்பை ஏற்படுத்த முனைகிறது என்று கூறியுள்ளார். 

இதையும் படிக்க | மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?



Read in source website

இந்த கல்வியாண்டில், மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தற்போது அமலில் உள்ள அளவுகோல்களே பின்பற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று இதுகுறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றுவரும் சமயத்தில், விதிகள் மாற்றப்பட்டால் குழப்பம் உண்டாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுத்தாண்டு முதல் அமல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமான அளவுகோல் புதிய விதிகளில் தக்கவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்கள், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், அவர்கள் இந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற முடியாது என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது, அமலில் உள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான வருமான அளவுகோல்கள் மறு சீராய்வு செய்யப்படும் என அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நவம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14, 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு ஏற்ப 8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமானம் அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது என அரசு நீதிமன்றத்தில் வாதம் மேற்கொண்டது. அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், "உங்களிடம் மக்கள்தொகை அல்லது சமூக அல்லது சமூக - பொருளாதார தரவு இருக்க வேண்டும். எட்டு லட்சம் என்ற அளவுகோலை மெல்லிய காற்றிலிருந்து பறித்து நிர்ணயிக்க முடியாது.

நீங்கள் 8 லட்சம் வரம்பை விதித்து சமமற்றவர்களை சமமாக்குகிறீர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில், 8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அரசியலமைப்பின் கீழ், பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு பெறுபவர்கள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் அல்ல. இது ஒரு கொள்கை விவகாரம். ஆனால். அதன் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிப்பதற்காக கொள்கை முடிவிற்கு வருவதற்கான காரணங்களை அறிய நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு" என தெரிவித்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், நீட் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால், தில்லியில் உள்ள மருத்துவர்கள் கடந்த வாரம் போராட்டத்தை தொடங்கினர்.



Read in source website

எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தை அடுத்த மாதத்தில் விமானப் படை முதல்முறையாக நிறுவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தின் முதல் தொகுப்பை பஞ்சாபில் உள்ள ஒரு விமான தளத்தில் நிறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

இன்னும் 6 வாரங்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்துவிடும்.

முதல்முறையாக அமைக்கப்படவிருக்கும் அந்த வான்பாதுகாப்புத் தளவாடப் படைப் பிரிவு, சீனாவின் வடக்குப் பகுதியிலிருந்தும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்தும் வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை எதிா்கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது.

அதற்குத் தேவையான முக்கிய கருவிகள் பஞ்சாப் விமானதளத்தில் நிறுவப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடமான எஸ்-400-இன் ஐந்து தொகுதிகளை ரஷியாவிடமிருந்து ரூ.37,172 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

 

 



Read in source website

ஆன்லைனில் செய்யப்படும் உணவு ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் நடைமுறை நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆன்லைனில் உணவுகளுக்கான ஆா்டா்களைப் பெற்று சேவையளித்து ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்ற நிறுவனங்களுக்குசரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பை விரிவுபடுத்தும் விதமாக ஆன்லைன் மூலமாக ஆா்டா்களைப் பெற்று உணவு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பை மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடா்ந்து, ஸ்விக்கி, ஸோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் டெபாசிட் வரியாக 5 சதவீதம் வசூலிக்கும் நடைமுறை நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

அதேபோன்று, உபோ், ஓலா போன்ற செயலிகளை பயன்படுத்தி இரு சக்கரம், மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்வோருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதுவும், ஜனவரி 1-லிருந்து அமலுக்கு வந்துள்ளது.

மேலும், அனைத்து விதமான காலணிகளுக்கும் விதிக்கப்பட்ட 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி நடைமுறையில் செய்யப்பட்ட மிக முக்கிய மாற்றமாக இது அமைந்துள்ளது.



Read in source website

அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் இவர். பொதுவாக அங்கீகாரம் குறித்தோ பேட்டிகள், விருதுகள் குறித்தோ கவலைப்படாதவர் அம்பை.

அம்பைக்கு முன்னும் பின்னும் பெண்கள் பலர் எழுதாமல் இல்லை. ஆனால், அம்பை எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்துவப் பாதையைத் தேர்ந்துகொண்டவர். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார். ஆனால், பார்வை வேறு; கோணம் வேறு. சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் அவர் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டவோ கோரவோ இல்லை. ஆனால், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாகச் செயல்படுத்தினார்.

அறுபதுகளின் பின்பகுதியில் பெண்களுக்குப் பளீரென்ற விடியல் வாய்த்துவிடவில்லை. சமையல் குறிப்புகளை எழுதுவதும் குடும்பச் சித்திரங்களை வாசிப்பதும் பெரும் சாதனையாகக் கருதப்பட வேண்டிய சூழலில்தான் சி.எஸ். லஷ்மி, அம்பையாக மாறிய வெளிப்பாடு நிகழ்ந்தது. குடும்பச் சித்திரங்களுக்குள் புதைந்திருந்த பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியவர்களும் அதில் மீறலை நிகழ்த்தியவர்களும் உண்டுதான் என்கிறபோதும் நவீன இலக்கியத்தில் அம்பை நிகழ்த்திய உடைப்பு முக்கியமானது.

சிறகுகளுக்கு என்ன வேலை?

பெண்ணின் அறிவை, தெளிவை, அவை புறக்கணிக்கப்படும் பேதமையை எளிமையாகவும் எள்ளலோடும் சொன்னார் அம்பை. தன்னைப் பற்றிப் பெண் வரைகிற சித்திரம் அனைத்தும் பெண்ணியப் படைப்பு ஆகிவிடாது. நுண்ணுணர்வும் அரசியல் தெளிவும் கைகூடிவருபவையே காலத்தைத் தாண்டி நிற்கும். அந்த வகையில் பீறிட்டுப் பாய்ந்த பெண்ணிய எழுத்துக்கு அம்பையே முன்னோடி.

கணவன், மனைவி உறவுக்குள் மனைவி என்பவள் கணவன் கையாளக் கிடைத்த பொருளாகவே இருப்பதை 1972-ல் வெளியான இவரது ‘சிறகுகள் முறியும்...’ சிறுகதை உணர்த்தியது. தோற்றப் பொருத்தம் இல்லை என்கிற அம்மாவின் கருத்தைப் புறந்தள்ளி உடல் பருத்த பாஸ்கரனை மணந்துகொண்டாள் சாயா. தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக அவனை வரித்துக்கொண்டு கனவுகள் கண்டவளை, திருமணம் வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றது. அவள் கனவில் கண்ட பாஸ்கரன் அல்ல அவன். இப்போது தமிழ்ப் படக் கதாநாயகன் செத்துத் தொலையட்டும் பாவி, வாழ்ந்து என்ன ஆகப்போகிறது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாள். ‘ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக் கூடாது, மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக் கூடாது என்று கட்டாய வாஸக்டமி செய்துவிட வேண்டும்’ என்று மனத்துக்குள் ஆயிரமாயிரம் சட்டங்களை இயற்றுகிறாள். கட்டுகள் ஏதுமின்றி நிச்சலமான அமைதியில் சிறகுகள் அசைய வேண்டும் என நினைக்கிறாள் சாயா.

இந்தியாவின் பெரும்பான்மையான இந்துப் பெண்களின் நிலை என்னவோ அதுதான் சாயாவின் நிலையும். அம்பை இந்தக் கதையை எழுதி நாற்பது ஆண்டுகள் ஆன பின்னும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. வாழ்க்கை நவீனப்பட்டிருக்கிறதே தவிர குடும்ப அமைப்புக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் புதுப்புது வடிவம் எடுத்திருக்கின்றன.

கற்களும் முட்களும் சூழ்ந்த பாதை

தமிழகம் தாண்டி வெவ்வேறு நிலத்தின் வாழ்க்கையை, மனிதர்களை, அங்கே நிலவும் அரசியலைக் கதைகளின் வழியாகப் பதிவுசெய்தவர் அம்பை. மனிதர்களும் சூழலும் மாறுகின்றனவே ஒழிய பெண்ணின் மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தங்களிலும் கற்பிதங்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்பதையும் அவரது கதைகளில் நாம் உணரலாம். ஆய்வுப் படிப்புக்குத் தயாராகிற பெண்கள் பேராசிரியர்களால் நடத்தப்படுகிற விதத்துக்கு ‘த்ரிசங்கு’ அஞ்சனாவும் சாட்சி. இப்போது வாசிக்கும்போது ‘#மீடூ’ நினைவுக்கு வருகிறது.

அப்பாவின் செயலால் ஏற்பட்ட அவமானம் உடலெங்கும் புழுக்களாக நெளிய, கல்வியின் மூலம் அனைத்தையும் கடக்க நினைக்கிறாள் அஞ்சனா. அச்சமும் தாழ்வுமனப்பான்மையும் வதைத்தெடுக்க, பக்கத்தில் இருக்கும் மாணவனிடம் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை ஊதுகிற பெண்களின் தன்னம்பிக்கையில் அதிர்ந்துபோகிற அஞ்சனா, இன்றைக்கும் உயர் கல்வி என்பது கனவாக நிலைத்துவிடுகிற பெண்களை நினைவூட்டுகிறாள். ஹிதாவும் ஆராய்ச்சி மாணவிதான். கௌதமனோடு சேர்ந்து வாழ்கிறாள். ஹிதாவுக்குப் புரட்சி மேல், அதனுள் ஒளிந்திருக்கும் போலித்தன்மையின் மேல் விமர்சனம் உண்டு (சக்கர நாற்காலி). பெண்ணின் அறிவை அவ்வளவு எளிதாக இந்தச் சமூகம் அறிவென்று ஏற்றுக்கொள்ளாது. அசட்டுக் களை என்றே பட்டம்சூட்டும் என்றாலும் ஹிதாவைப் போன்ற விதிவிலக்குகள் ஜெயிக்கிறார்கள் என்று முடிக்கிறார் அம்பை. ஆனால், அந்த நிலையைக் கடந்துவர அவர்கள் எவ்வளவு கற்களை அகற்றி, முட்களை விலக்க வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்துதான் அம்பை எழுதுகிறார்.

சமையலறை என்னும் சிறை

நாற்பது வருடங்களாகத் தோசை சுட்டுக்கொண்டிருக்கும் அண்ணிக்கு (வெளிப்பாடு), தான் அதுவரை சுட்ட தோசைகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டும் என்று தெரியாது. அது தெரிந்திருந்தால் எந்நேரமும் இட்லி, வடை, அப்பம், பொரியல், குழம்பு என்று அடுக்களைக்குள்தான் தன் ராஜ்ஜியம் என்று கோலோச்சி மகிழ்ந்திருக்க மாட்டாள். “பொம்பளைக பத்தி எளுத என்ன இருக்கு?” என்று வெள்ளந்தியாகக் கேட்டிருக்க மாட்டாள். “புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம். இதுக்கு நடுவுல ரோசிச்சோம் போங்க” என்று சொல்லிவிட்டு மௌனமாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள். சமையலறை தாண்டி வெளியுலகம் அறியாத இருபது வயது சந்திராவுக்குத் திருமணம் ஆனதும், ‘தெருல நடக்குணும், தெனம் ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும், கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும், சினிமா போகணும், நெறைய ஊர் பாக்கணும்’ என்று சின்ன சின்ன ஆசைகள். ஆனால், கைநீட்டாத கணவன் வாய்க்க வேண்டுமே என்கிற பதற்றத்தை நமக்குக் கடத்திவிடுகிறார் அம்பை.

டெல்லியிலிருந்து திருநெல்வேலிக்குத் தனியாக பயணம் செய்கிறவளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, அடக்குமுறைதானே. ‘என் கரிசனத்தைப் பார். எவ்வளவு அக்கறை பார் எனக்கு’ என்கிற கவனிப்பு இம்சைதானே. பெண்ணால் முடியாது என்று திரும்ப திரும்ப நிரூபிக்கிற எத்தனம்தானே. பெரும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் அமர்ந்துவிட்டார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு விடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. சமையலறை இல்லாத வீடு ஏது? அதைத்தான் அம்பை தன் கதைகளின் மூலமாக நுட்பமாகப் பதிவுசெய்கிறார்.

உடல் மீது ஏற்றப்படும் சுமை

ஆணுக்கு உடல் என்பது உடல் மட்டுமே. பெண்ணுக்கு அது பெரும்சுமை என நினைக்க வைக்கிறது இந்தச் சமூகம். அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ எக்காலத்துக்குமான கதை. எப்போதும் தண்ணீர் ஊறியிருக்கும் சமையலறையிலிருந்து சற்றே ஆசுவாசம் பெறும் எண்ணத்தில் மலையைப் பார்க்க நினைத்தால் துணி மறைக்கிறது என்கிறாள் மருமகள். உடனே ஒன்றுக்கு இரண்டு கொடிகளில் துணி உலர்த்தப்படுகிறது. குடும்பத்துடன் ஏரிக்குப் போவதற்காக மருமகள்கள் அதிகாலையில் எழுந்து சமைத்து, வியர்வை மழையில் ரவிக்கை ஒட்டிக்கொண்டு எண்ணெய்ப் புகை கண்ணில் படிய, முழுத் தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகளோடு இருக்க, மாமனாரோ, “ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டுவிடுமே உங்களுக்கு?” என்கிறார். ஆண், பெண்ணைப் புரிந்துகொள்வது இந்த லட்சணத்தில்தான். ஆண்கள் ஏரியை ரசிக்க, பெண்களோ பக்கோடாவும் பஜ்ஜியும் பொரித்துத் தள்ளினார்கள். எவ்வளவு பெரும்பேறு என்று அம்பை எழுதுகையில் அவமானமும் குற்றவுணர்வும் ஏற்படாத மனங்களில் ஆணாதிக்கம் குடிகொண்டிருக்கிறது எனப் பொருள்.

வரலாற்று ஆவணம்

வன்முறை என்பது அடித்து நொறுக்குவது மட்டுமே என்று ஒற்றைத் தன்மையுடன் புரிந்துகொண்டிருந்த மனங்களில், நுட்பமான வன்முறையின் வடிவங்களைத் தெளிவுபடுத்தினார் அம்பை. காலந்தோறும் பெண்கள் அடைந்திருக்கும் மாற்றங்களைச் சொல்லிக்கொண்டு அவர்கள் மீதான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் பதிவுசெய்தார். வன்முறையை ஆண்தான் நிகழ்த்த வேண்டும் என்பதில்லை; பெண்ணின் வழியாகச் செயல்படுத்தப்படும் வன்முறையையும் அவர் சுட்டிக்காட்டினார். குடும்ப அமைப்புக்குள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையைக் கவனப்படுத்தும்விதத்தில் அம்பை எழுதிய ‘மைமல் பொழுது’ (அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு) குடும்ப கௌரவத்தின் பெயரால் நாம் இழைக்கிற அநீதியைக் கவனப்படுத்தியது. மூப்பின் காரணமாக ஒருவரைப் புறக்கணிப்பதும் கைவிடுவதும் வன்முறைதான் என்பதையும் சுட்டிக்காட்ட அம்பை தவறவில்லை. பெண்ணின் உடல் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சுமைகளைப் புனைவாக மட்டுமல்லாமல், கட்டுரைகளாகவும் பதிவுசெய்திருக்கிறார் (உடலெனும் வெளி).

பெண்களின் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்கில் ‘ஸ்பாரோ’ (SPARROW-Sound and Pictures Archives for Research on Women) என்கிற பெண்கள் ஆவணக் காப்பகத்தை நிறுவி, அதன் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார் அம்பை. குரல் நெரிக்கப்பட்டு, ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்களின் அனுபவங்களுக்கு குரலும் மொழியும் அளித்து அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவது இந்த அமைப்பின் முக்கியப் பணி. இந்த அமைப்பின் சார்பில் படைப்பாளிகளுக்கு விருதும் வழங்கப்படுகிறது.

அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை இன்னும் அணுக்கமாக, நெருக்கமாக உணர்ந்து பாலினச் சமத்துவத்தை நோக்கி நம்மை நாமே அழைத்துச் செல்வதற்கான செயல்பாடு. அவை கதைகள் மட்டுமே அல்ல; காலத்தைத் தாங்கி நிற்கும் வரலாற்றுப் பதிவுகளும்தாம்!

-பிருந்தா சீனிவாசன்,
தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in



Read in source website