DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 01-12-2022


ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக 2022-23ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

ஒருங்கிணைந்த பண்ணையம்:

பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. 

ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000/- மானியமாக வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

பசுமைக்குடில் / நிழல்வலைக்குடில்:

வெள்ளரி, குடை மிளகாய், கார்னேஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House) / நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.

ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படு

வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள்: 

கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

வேளாண் இயந்திரமயமாக்கல், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் .

இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?


இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவோ தேவையான விவரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.  



Read in source website

 

வேதாந்தா லிமிடெட் மூலம் அமைக்கப்படும் மாபெரும் அலுமினிய பூங்காவிற்கு ஒடிசா முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார். 

மேக் இன் ஒடிசா 2022 மாநாட்டில் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் முன்னிலையில் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

ஜார்சுகுடாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேதாந்தா அலுமினிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் என்று அகர்வால் கூறினார். 

இந்த திட்டம் வேதாந்தா அலுமினியம் மற்றும் ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும். 

வேதாந்தா அலுமினியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், 

இந்த பூங்கா உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை வசதியாகவும், அங்கு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அலகுளை அமைக்கலாம் மற்றும் ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் ஸ்மெல்ட்டரில் உலோகத்தை உருக்கிப் பிரித்தும் எடுக்கலாம். 

ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் அலுமினியம் உருக்காலை, ஆண்டுக்கு 1.75 மில்லியன் டன்கள் கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக, வேதாந்தா 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து 5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்கியுள்ளது.

இப்போது வேதாந்தா அலுமினியப் பூங்கா, ஒடிசாவுக்கு அதிக மதிப்பைக் கூட்டி, மாநிலத்தில் தொழில் மயமாக்கலை மேலும் ஆழப்படுத்துவதற்கு கீழ்நிலை வீரர்களைக் கொண்டு வரும் என்று அகர்வால் கூறினார்.
 



Read in source website


தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிக்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சிறந்த பள்ளிக்களுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீடம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 



Read in source website

தமிழகத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது.

தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பாா்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்த வெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை அடைக்க முடியும். ஆனால், சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியே செல்லும்போது வேலையில் சோ்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும், வங்கிக் கடன் பெறுவதற்கும் ஆதாா் அட்டை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இதை உணா்ந்த சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு, சிறைகளில் ஒவ்வொரு கைதிகளுக்கு பராமரிக்கப்படும் கைதிகள் அடையாள பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதாா் அட்டை வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், முதல் கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை வழங்கும் விதமாக சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 300 கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் விதமாக, அவா்களது கைரேகை, புகைப்படம் உள்ளிட்டவை எடுக்கப்பட்டது.

இதேபோல மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.



Read in source website

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலங்குடி கிராமத்தில் முற்கால பாண்டியா்களின் விநாயகா் புடைப்புச் சிற்பத்தை கள ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டறிந்தனா்.

ஆலங்குடி கிராமத்தில் தேரடி கருப்பு கோயிலின் வெளிப்புறத்தில் மரத்தடியில் சுவாமிகளின் கற்சிற்பங்கள் உள்ளன. இதனை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், முனைவா் தாமரைக்கண்ணன், க. புதுக்குளத்தைச் சோ்ந்த சிவக்குமாா் ஆகியோா் புதன்கிழமை கள ஆய்வு செய்தனா்.

இதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியா் காலத்தைச் சோ்ந்த விநாயகா் புடைப்புச் சிற்பம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:

இதை ஆய்வு செய்ததில் இரண்டரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கல் பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது. இது நான்கு கரங்களுடன் வடிக்கப்பட்டது. வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்ற ஆயுதத்துடனும், வலது முன்கரத்தில் அபயகஸ்தத்திலும், இடது முன்கரத்தில் மோதகத்தை தனது துதிக்கையால் தொட்டபடியும் இந்த விநாயகா் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

மேலும், இதன் தலையில் கிரீடம் தரித்தும், அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக வடிக்கப்பட்டிருந்தது.

இந்த சிற்பத்தில் இரண்டு தந்தங்களும் சிதைந்து காணப்படுகிறது. மேலும் மாா்பு, கரங்களில் ஆபரணங்களும், இரண்டு கால்களிலும் தண்டையும் அணிந்தபடி அமா்ந்த கோலத்தில் முற்கால பாண்டியா்களுக்கே உரித்தான கலைநயத்தில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்க்கும் போது முற்கால பாண்டியா்களின் கோயில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்றனா்.



Read in source website


இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா வருகிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்னைகள் குறித்து  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேர்பாக் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை ஆதரிப்பதற்காக மொத்தம் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 22 திட்டங்களை இறுதி செய்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவியானது 10 சதவீதம் மானியங்களுடன் 90 சதவீதம் கடன் வடிவில் இருக்கும் என்று ஜெர்மனி தூதர் அக்கர்மேன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் இருமுறை ஜெர்மனிக்கு பயணம் செய்துள்ள நிலையில், முதலில் மே 2ஆம் தேதி பெர்லினில் நடைபெற்ற ஆறாவது இந்தியா-ஜெர்மனி இடையேயான ஆலோசனைக்காகவும், பிறகு ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவும் சென்றார்.

 



Read in source website

ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு ஒன்றினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின்படி கண்டிப்பாக செயல்பட வேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்த ஒரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் அந்த வானொலி நிலையங்கள் சட்டரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

வானொலி நிலையங்களில் ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கையினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website


குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த பழங்குடியினர் ஜூனாகத் மாவட்டம் ஜாம்பூர் கிராமத்தில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்முறையாக இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு வாக்காளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜாம்பூர் கிராமத்திலேயே பிரத்யேகமான பழங்குடியினர் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடைபெற்று வருகின்றது.

முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஜாம்பூர் கிராம மக்கள் பலவகை உணவுகளை சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு  19 மாவட்டங்களில் 89 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

 



Read in source website

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் யூடியூப் நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்ட 17 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான யூடியூப் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகள் அமலாக்கம் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக உலகம் முழுவதும் 56 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. அதில் 17 லட்சம் விடியோக்கள் இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்டவை. நீக்கப்பட்ட விடியோக்களில் 36 சதவீதம் யாரும் பாா்ப்பதற்கு முன்னரும், 31சதவீதம் 10 பாா்வையாளா்களைக் கடப்பதற்கு முன்னரும் கண்டறியப்பட்டவை.

மேலும், விதிமுறைகளை மீறியதாக யூடியூப் விடியோக்களில் பதிவிட்ட 73.7 கோடி கருத்துகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 99 சதவீதம் கருத்துகள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டவை. மீதி ஒரு சதவீதம் கருத்துகள் மட்டுமே பயனா்களால் புகாரளிக்கப்பட்டு நீக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவின்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டகப் படைப் பிரிவு அணிவகுப்பில் முதல்முறையாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருக்கின்றனா்.

குடியரசு தின விழாவையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் கலாசார பெருமையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பு தில்லி கடமைப் பாதையில் (முன்பு ராஜபாதை) நடைபெறும்.

குடியரசு தின அணிவகுப்பில், கடந்த 1976-ஆம் ஆண்டில் இருந்து பிஎஸ்எஃப்-இன் ஒட்டகப் படை பிரிவு பங்கேற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய வீரா்களும், வண்ணமயமான உடையணிந்த இசை வாத்திய குழுவினரும் அணிவகுப்பது கண்கவா் அம்சமாக இருக்கும்.

இந்நிலையில், எதிா்வரும் குடியரசு தின விழாவில் ஒட்டகப் படை அணிவகுப்பில் வீரா்களுக்கு சமமாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருப்பதாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். பிஎஸ்எஃப் படையின் பல்வேறு கடமைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக இது அமையும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் தனது செயல்பாடு மற்றும் சம்பிரதாய கடமைகளுக்காக ஒட்டகங்களைப் பயன்படுத்துவது பிஎஸ்எஃப் மட்டுமே. ராஜஸ்தானில் தாா் பாலைவனத்தையொட்டிய இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஒட்டகங்கள் மூலம் ரோந்துப் பணியில் இப்படையினா் ஈடுபடுகின்றனா்.

பாகிஸ்தான், வங்கதேசத்துடனான எல்லைப் பாதுகாப்புப் பணிக்காக கடந்த 1965, டிசம்பா் 1-இல் பிஎஸ்எஃப் நிறுவப்பட்டது. அதன் 58-ஆவது நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.



Read in source website

சம-பாலின திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

அந்த நாட்டில் சம-பாலினத்தவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலி திருமணங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரம் அண்மையில் தீா்ப்பு ரத்து செய்யப்பட்டு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடா்ந்து சம-பாலினத்தவா் திருமணங்களுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், செனட் சபை இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.



Read in source website

சா்வதேச அளவில் மருத்துவ செவிலியா்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பிலிப்பின்ஸில் இருந்து செவிலியா்களைப் பணியமா்த்த சிங்கப்பூா் முடிவு செய்துள்ளது.

மேலும், செவிலியா்களைப் பணியமா்த்துவதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் சிங்கப்பூா் அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஏராளமான செவிலியா்கள் வேறு நாடுகளுக்குப் பணிக்குச் சென்றனா். சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கிப் பணிபுரிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல், வெளிநாட்டு செவிலியா்கள் வெளியேறுவதற்கு காரணமாக உள்ளது.

2023-ஆம் ஆண்டுக்குள் 4,000 புதிய செவிலியா்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இதில் 60 சதவீதம் வெளிநாட்டவா்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தியா, பிலிப்பின்ஸ், மியான்மா் நாடுகளைச் சோ்ந்த செவிலியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பெரும்பாலான வெளிநாட்டு செவிலியா்கள் பணிக்காக சிங்கப்பூா் வந்தாலும், தங்கள் தாய்நாட்டுக்கு அடிக்கடி சென்று வர விரும்புகிறாா்கள். எனவே, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு சிங்கப்பூரில் இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



Read in source website

உக்ரைன் போரில் ரஷியாவின் போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் சட்டம், நிதி மற்றும் அரசியல் விவகாரங்களை கவனித்து வரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷியப் படையினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடா்பான விசாரணையை நடத்துவதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து அந்த நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க விரிவான சா்வதேச ஆதரவைப் பெறுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா் அவா்.



Read in source website

சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட 5-ஆவது நகரான குவாங்ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள், பொதுமக்களின் போராட்டத்தைத் தொடா்ந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

சீன அரசின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களைக் கலைக்கச் சென்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் நகரில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாக அதிகாரிகள் புதன்கிழமை மதியம் திடீரென அறிவித்தனா்.

இது குறித்து நிா்வாக வட்டாரங்கள் கூறியதாவது:

குவாங்ஷோ நகரின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

நோய் பரவல் அபாயம் அதிகமில்லாத அந்தப் பகுதிகளில், அத்தகைய கட்டுப்பாடுகள் தற்காலிகமாகவே அறிவிக்கப்பட்டிருந்தன.

இது தவிர, நகரவாசிகளுக்கு பெருந்திரளாக மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகளும் நிறுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், கரோனா பரவல் அதிகமிருக்கும் நகரின் சில பகுதிகளில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிகிறது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாவலா்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் வேறு பகுதிகளுக்கு வெளியேறத் தொடங்கியதாகவும் நகரவாசிகள் தெரிவித்தனா்.

உலகையே 2 ஆண்டுகளாக உலுக்கி வந்த கரோனா, சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இருந்தாலும், அந்த நோய்க்கு எதிரான சீனா மேற்கொண்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சீனாவில் மிகக் குறைவாகவே உள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் வெற்றி பாராட்டைப் பெற்றாலும், அதற்காக அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

குறிப்பிட்ட பகுதியில் புதிதாகக் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாகும் வரை அங்கு நோய்த்தொற்று பரிசோதனை, தொடா்புகளை ஆய்வு செய்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை சீனா தொடா்ந்து விடாப்படியாக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையிலும் சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினமும் அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிபட்ச அளவைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது. இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தக் கட்டடத்திலிருந்தவா்களை வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞா்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, குவாங்ஷோ நகரிலும் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக, அந்த நகரில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாக அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனா்.

குவாங்ஷோவ் நகரில் செவ்வாய்க்கிழமை மட்டும் சுமாா் 7,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

புதுடெல்லி: 5,000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும், அவதூறையும் கூறி நிறுத்தப் பார்க்கக் கூடாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான மனுக்கள் மீதான 4-வது நாள் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "காட்டு விலங்குகள் மற்றும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது என விலங்குகள் இரண்டு வகைப்படும். விலங்குகளுக்கென தனி உரிமை உண்டு. அதை பாதுகாப்பது கடமையென்று முந்தைய நாகராஜ் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது. அவ்வாறு உரிமை என்பது இல்லை. ஆனால், விலங்குகளுடனான உறவு என்பது உண்டு. அவற்றுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

நாகராஜ் வழக்கில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது என்ன கள நிலவரம் என்பது தொடர்பாக 2013-ல் விலங்குகள் நல வாரியம் 3 அறிக்கைகளை அளித்தது. அதன் அடிப்படையில் நாகராஜ் வழக்கில் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வேறு. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும், தற்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி, அரசின் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் குறித்து முன்னர் தாக்கல் செயப்பட்ட அறிக்கைகள் தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்

மேலும், ஜல்லிக்கட்டு மற்றும் காளைகள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கென தனி மைதானம் அமைத்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மது போன்றவை கொடுக்கப்படுவது இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. காளைகளின் வால் முறுக்கப்படுவதில்லை. காளைகள் அடிக்கப்படுவதோ, காயப்படுத்தப்படுவதோ இல்லை. அந்தக் காலம் எல்லாம் கடந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபு, பண்பாட்டோடு சேர்ந்த ஒன்று. மேலும் கடந்த 2013-ல் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடுமையான விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதிமீறல் தொடர்பாக ஒரு புகாரும் இல்லை. அதேவேளையில் தனியார் பலரும் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். காளைகளை கொடுமைப்படுத்தி, விதிகளை மீறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர்கள் வைத்தால், முதலில் அவர்கள் விலங்குகள் நல வாரியத்தை அணுகி கோரிக்கை வைக்கட்டும் அல்லது வழக்கு பதியட்டும்.

மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வந்த பின்னர் விதிமீறல் தொடர்பாக எந்தப் புகாரோ, வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு வந்தால், அதை விலங்குகள் நல வாரியம் கூறட்டும். மாறாக, பீட்டா அமைப்புக்கு அதுகுறித்து கூற, எந்த தார்மிக உரிமையும் இல்லை. அந்த அமைப்பு சட்டபூர்வமான அமைப்பும் இல்லை. எனவே, தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே, பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. அவர்களிடம் வெறும் குற்றச்சாட்டை தவிர வேறு எதுவும் இல்லை. பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என்பது முறையானது அல்ல. அதன் நம்பகத்தன்மையை முதலில் ஆராய வேண்டும். குறிப்பாக அந்த அமைப்பின் குற்றச்சாட்டுகள் செய்தி அடிப்படையிலானது.

புதிய விதிகளின்படி, கண்காணிப்பு, காளைகளை ஆய்வு செய்வது, அதற்கென உரிய குழு அமைப்பது, ஜல்லிக்கட்டுக்கென தனி இடம் ஒதுக்குவது என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜல்லிக்கட்டை ஏனோ தானோவென்று நடத்திட முடியாது. குறிப்பாக ஆட்சியர் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “ஜல்லிக்கட்டில் காளையானது அவிழ்த்து விட்ட உடன் குறிப்பிட்ட இடத்தில் ஓடுமா? அல்லது தாறுமாறாக ஓடுமா? அதனை எத்தனை பேர் அடக்குவர்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "காளைகள் குறிப்பிட்ட இடத்தில் அவிழ்த்து விடப்படும். 15 மீட்டர் தூரம் ஓடும்போது, அதன் திமிலை பிடித்து ஒருவர் தான் அடக்குவார். அதுவும் 10 முதல் 15 வினாடிகள் மட்டுமே அதன் திமிலை கொட்டியாக பிடித்து தொங்குவார். அந்த 15 மீட்டர் தாண்டிய பின்னர், காளையை யாரும் தொட மாட்டார்கள். அதன்பின்னர் சுமார் 100 மீட்டர் தூரம் களை ஓடும், அந்தப் பகுதியில் வைத்து காளையின் உரிமையாளர் அல்லது பயிற்சியாளர் அந்தக் காளையை பிடித்து வேறு வழியாக வெளியே அழைத்து செல்வர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஒரே நேரத்தில் எத்தனை காளை அவிழ்த்து விடப்படும்? 15 மீட்டர் அரங்கத்தை விட்டு காளை வெளியே செல்லும். இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளதா? எங்கெங்கு சிசிடிவி கேமரா வைக்கப்படும்? அவிழ்த்து விடப்பட்ட காளைகள் மாடுபிடி வீரர்களை எதிர்த்து சண்டையிடுமா? காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது எத்தனை பேர் பிடிப்பர்? ஏனெனில், பல வீரர்கள் கலந்துகொள்ளும்போது எத்தனை பேர் காளையைப் பிடிப்பர்?" என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், "வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும்போது, பலர் காளையை பிடிக்க முற்பட்டாலும் எவர் ஒருவர் திமிலை பிடிக்கிறாரோ, அவர் மட்டுமே அந்தக் காளையை அடக்க முற்படுவர். ஒருவரை தவிர்த்து வேறு எவரும் அதனைப் பிடித்து தொங்க மாட்டார்கள். ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவித்து விடப்படும். மேலும், காளைகளை எதிர்த்து சண்டையிடப்படாது. காளை ஒடும்போது அதன் திமிலை ஒருவர் பிடிப்பர். மேலும் அந்த அரங்கின் பல இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படும். அதனை நிகழ்ச்சி கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "காளையை அவிழ்த்து விடும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் என விதி எங்கு உள்ளது? அவ்வாறான விதி குறிப்பிடப்படவில்லை என்றால், ஒருவேளை பலர் காளையை ஒரே சமயத்தில் அடக்க பாய்ந்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "அனைத்தையும் பட்டியலிடப்படவில்லை என்றாலும், ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பர் என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் ஒருவரே பிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அங்கு அறிவிக்கப்படும்" என்று பதிலளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அவ்வாறு ஒருவரே காளையைப் பிடிக்க வேண்டும் என்று விதியில் கூறவில்லை என்றால்? இதனை அப்படியே நாங்கள் அனுமதித்தால் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது எனக் கூறி ஒரே சமயத்தில் பலர் காளை மீது அதனை அடக்க பாய்வார்களே?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "ஒருவேளை ஒரு காளையை பிடிக்க ஒருவருக்கு மேல் முற்பட்டால் அந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதுதான் காலங்காலமாக உள்ள எழுதப்படாத விதி, அது கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல போட்டியாளர்கள் இருந்தாலும், ஒருவரே காளையை அடக்க முயல்வர், பிறர் அந்தக் காளையை தொந்தரவு செய்ய மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அப்படியெனில் ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பர் என எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து" என்று தெரிவித்தனர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கூட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஆடை கட்டுப்பாடு என்றால், அதனை அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கொடுப்பார்களா? ஏனெனில் அந்த வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளில் புகைப்படம் உள்ளது" என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், "அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பல தனியாரும் ஸ்பான்சர் செய்வர். அதுமட்டுமல்ல தண்ணீர், பரிசுகள் என பலர் ஸ்பான்சர் செய்வர். இது அவர்களின் விளையாட்டு ஆகும். காளைகள் களத்துக்கு வருவதிலிருந்து முழுவதும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. அதன் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமற்றது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "மனிதர்களின் மகிழ்ச்சிக்காக விலங்குகளை பயன்படுத்த முடியுமா என்பதே நாகராஜ் வழக்கின் கேள்வி. மேலும் காளைகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது, எவ்வாறு பயிற்சி அழைக்கப்படுகிறது? எத்தனை வயது முதல் காளைகள் பயன்படுத்தப்படும்? எத்தனை வயதில் ஜல்லிக்கட்டு காளை ஓய்வு பெறும்? ஜல்லிக்கட்டு பண்பாட்டோடு ஒன்றிணைந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "காளைகள் அதன் உடற்தகுதி , தோற்றத்தை வைத்து வாங்கப்படுகிறது. லட்சத்துக்கும் மேலாக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. 18 மாதங்கள் முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். அதன்பின்னர் அந்த காளை வீடுகளில் வளர்ப்பர். வெளிநாட்டில் (ஸ்பெயின்) இருப்பது போன்று கொல்லும் வழக்கம் கிடையாது. ஏனெனில் அந்த காளைகளை குடும்ப உறவு, உறுப்பினர் என்றே வைத்திருப்பர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "உலகில் உயிரோடு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. அதனைப் பயமுறுத்தி, துன்பப்படுத்தி ஒரு காரியத்தை திணிக்க முடியாது. குறிப்பாக விலங்குகளை மனிதர்களின் மகிழ்ச்சிக்காக பொம்மைகளாக பன்படுத்த முடியாதே?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "ஒரு வீட்டு விலங்கை பழக்க வேண்டுமெனில் சில கஷ்டமான பயிற்சிகள் வழங்க வேண்டும், இல்லையேல் அவற்றை பல வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது" என்று பதிலளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அப்படியெனில் தேவையில்லாத துன்பம் கொடுக்கக் கூடாது என்று எடுத்துக்கொள்ளலாமா?” என்றனர். அதற்கு தமிழக அரசு, "நிச்சயமாக, அதேவேளையில் விலங்குகளை பழக்க சில கடுமையான பயிற்சிகள் கொடுக்க வேண்டியது வரும், அதை துன்பப்படுத்தல் என கூற முடியாது" என்று கூறியது.

நீதிபதிகள், “ஜல்லிக்கட்டு ஒரு கேளிக்கைக்கான விளையாட்டா?” என கேட்டதற்கு, "ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல. மனிதர்களின் மகிழ்ச்சிக்கான விளையாட்டு அல்ல, அது தமிழர் பண்பாடோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தது. இங்கு காளைகள் வேண்டுமென்று துன்பப்படுத்தும் கலாச்சாரம் இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான அரசியல் சாசன அமர்வின் விசாரணை நிறைவடைந்த பின்னர், இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நீதிபதிகள் நேரில் வர வேண்டும்.

இந்த ஜல்லிக்கட்டு காளைகள் பெரும் வருமானம் ஈட்டும் விலங்கு அல்ல. மாறாக, அவை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் அந்த மண்ணின் நாட்டு மாடுகள் ஆகும். எனவே, நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்ற இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டு கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது காளைகள் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்த தகுதி இல்லை என முந்தைய நாகராஜ் வழக்கில் கூறுவது எவ்வாறு ஏற்க முடியும். காயம்பட்ட காளைகள், கொம்பு முறிந்த காளைகள் என உடற்தகுதி இல்லாத காளைகள்தான் தகுதி இல்லாதவை. மேலும் நாகராஜ் வழக்கின்போது பல்வேறு விதிகள் இல்லை, ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.

மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டு அபாயகரமானது என்று கூறினால் குத்துச்சண்டை, ரக்பி, அமெரிக்கன் கால்பந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டும் அபாயமானது தான். விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் விளையாடுகின்றனர், யாரும் நிர்பந்தம் செய்யப்படுவதில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மிக அபாயகரமானதுதான். ஆனால் அதற்காக எவரெஸ்ட் சிகரத்தை ஏறாமல் இருக்கிறார்களா? விளையாட்டு என்றாலே அதில் சில ஆபத்து இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் தடை விதித்து விட முடியாது" என்று தமிழக அரசு பதிலளித்தது.

அப்போது நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் காளைகளுக்கு துன்புறுத்துவதாக இருக்கிறது என விலங்குகள் அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே" என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு, "அப்படி என்றால் திருமணங்களிலும் திருவிழாக்களிலும் கூட தான் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அங்கெல்லாம் கூட குதிரைகளும் யானைகளும் பயன்படுத்தப்பட்டு கொண்டு தானே இருக்கிறது. அதேபோல இதய நோயாளிகளும் அந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்கின்றனரே? ஜல்லிக்கட்டு காளைகள் என்பது வெறும் விளையாட்டுக்காக மட்டுமல்லாமல், அதனுடைய நலனுக்காகவும் தான் வளர்க்கப்படுகிறது.

5000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும் அவதூறையும் கூறி நிறுத்த பார்க்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதை உயர் நீதிமன்றமும் கண்காணிக்கிறது. போட்டிகள் நடக்கும்போது முழுமையாக அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கிறார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களத்திலிருந்து ஆய்வு செய்கிறார். இவை அனைத்தும் நடந்தும், எப்படி விதிமுறை மீறப்படுகிறது என்று கூறும் வாதத்தை ஏற்றுக் கொள்வது?” என்று வாதிட்டது.

அப்போது நீதிபதிகள், "ஒருவேளை ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை என்றால், இந்த விளையாட்டு என்பது குற்றமா? அப்படியெனில் என்ன நடந்திருக்கும்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு, "ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருந்தால், நாட்டு மாடுகள் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கும் அல்லது அவற்றின் எண்ணிக்கை மிக மிக குறைந்திருக்கும். ஜல்லிக்கட்டை ஒரு வெறுக்கத்தக்க விளையாட்டாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். காளைகள் அதன் உண்மையான குணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றன என கூறுகின்றனர்.

ஆனால், வன விலங்குகள் கூட அதனை பாதுகாக்க, அதன் நன்மைக்காக மனிதர்கள் பிடியில் வைக்கப் பழக்கப்படுகிறது. இது எதற்காக என்றால் அதன் இனத்தை பாதுகாக்க, எடுத்துக்காட்டாக புலி, சிறுத்தை உள்ளிட்டவை இனப்பெருக்கத்துக்காக பாதுகாக்கப்படுகின்றன. எனவே, குணத்தில் இருந்து மாற்றுவது என்பது கடினமான வழிமுறைதான், ஆனால் அந்த விலங்கின் நன்மைக்காக அதனை பழக்கப்படுத்துவது என்பதை எவ்வாறு கொடுமை என கூற முடியும்?”என்று தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள்,“வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும்போது எத்தனை நொடிகள் மாடுபிடி வீரர்கள் அதனை பிடித்து வைப்பர்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு, “மூன்று முறை காளை குதிக்கும். அந்த மூன்று முறை குதிக்கும்போது எவர் ஒருவர் அதன் திமிலை கெட்டியாக பிடித்து தொங்குகின்றனரோ அவர் வெற்றி பெற்றவர். அதே வேளையில் முதல் குதியில் வீரர் தூக்கி எறியப்பட்டால், காளை வென்றதாக அறிவிக்கப்படும். அந்தக் காளையை வேறு எவரும் அடக்க முற்பட மாட்டார்கள். அந்த காளை நேராக அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வழிக்குச் சென்றுவிடும். இந்த நடைமுறையை தான் கொடுமைப்படுத்துவது என்பதா? இந்த நடைமுறையில் எங்கு காயப்படுத்தப்படுகிறது? உயர் நீதிமன்றக் குழு, அரசின் உயர்மட்ட குழு, விலங்கள் நல வாரியத்தின் குழு என 3 குழுக்கள் ஜல்லிக்கட்டை கண்காணிக்கின்றன” என்று வாதிடப்பட்டது.

முன்னதாக, வழக்கில் ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை, அரங்கம், வாடிவாசலில் இருந்து காளைகள் வருவது, வீரர்கள் எவ்வாறு பிடிக்கின்றனர் ஆகியவை தொடர்பாக நீதிபதிகள் புரிதலுக்காக ஒரு சிறிய தொகுப்பை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்வதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



Read in source website

மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பரில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்களையும் அந்த மையம் வெளியிட்டுள்ளது.

கிராம பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதியில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் 8.96 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 7.55 சதவீதமாகவும் இது உள்ளது. கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் நகரப் பகுதியில் 7.21 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 8.04 சதவீதமாகவும் இருந்துள்ளது.

கடந்த நவம்பரில் ஹரியாணாவில் மட்டும் இந்த விகிதம் 30.6 சதவீதமாக இருந்துள்ளது. ராஜஸ்தானில் 24.5 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 23.9 சதவீதம், பிஹாரில் 17.3 சதவீதம், திரிபுராவில் 14.5 சதவீதம் என இருந்துள்ளது.

இந்த விகிதம் சத்தீஸ்கரில் 0.1 சதவீதம், உத்தராகண்ட் 1.2 சதவீதம், ஓடிசாவில் 1.6 சதவீதம், கர்நாடகாவில் 1.8 சதவீதம், மேகாலாயா 2.1 சதவீதம் என்ற எண்ணிக்கையில் குறைவாக இருந்துள்ளது. இந்திய அளவில் கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் 7.77 சதவீதமாகவும், செப்டம்பரில் 6.43 சதவீதமாகவும் இருந்துள்ளது.



Read in source website

புனே: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும்.

இந்தக் கப்பலுடன் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் (என்டிஏ) 143-வது குழு பயிற்சியை முடித்துள்ளது. பயிற்சி முடித்தவர்களை கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் விமானங்களை ஒருங்கிணைப்பது தொடர்பான சோதனை தொடங்கி உள்ளது. முதலில் போர் விமானம் இறங்கும் முறையை பரிசோதிக்க வேண்டும். இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்தப் பணிகள் முடிய 6 முதல் 8 மாதங்கள் ஆகும். இதன்படி அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி முடிவடையும் என எதிர் பார்க்கிறோம்.

கடற்படையில் ஆண், பெண் இருவரும் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், அதிகாரிகளாகவும் போர்ப்படை பிரிவில் வீராங்கனைகளாகவும் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இப்போது, பெண்களை மாலுமிகளாக சேர்க்கும் நடவடிக் கையை தொடங்கி உள்ளோம். இது மிகப்பெரிய சாதனை ஆகும். இப்போது 3 ஆயிரம் மாலுமி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக 82 ஆயிரம் பெண்கள் உட்பட மொத்தம் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு ஆர்.ஹரிகுமார் தெரிவித்தார்.



Read in source website

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியாஇன்று ஏற்கிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது..

ஜி-20 அமைப்பின் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை தளர்த்துதல் ஆகியவை அடங்கும். இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், மேலும் வளர்ச்சியடைவோம்.

இருப்பினும் இந்த முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா, அடிப்படையான மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக நாம் செயல்பட்டு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன் அளிக்க முடியுமா என எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மால் முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் ஜி-20 தலைமை பொறுப்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நமது கருப்பொருள் – ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச்சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது.

இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன. இன்று நாம் வாழ்வதற்கு போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை. நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை.

இன்று, பருவநிலை மாற்றம்,பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இந்தப் பிரச்சினைகளுக்குதீர்வு காணமுடியாது. அதே சமயம், ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காணமுடியும்.

அதிர்ஷ்டவசமாக, இன்றைய தொழில்நுட்பம், மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நமக்கு வழிகளை வழங்கியுள்ளது. இன்று நாம் வாழும் மிகப்பெரும் மெய்நிகர் உலகத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமாகும்.

6-ல் ஒரு பகுதி மனிதர்களைக் கொண்ட, வேறுபட்ட பல மொழிகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை உள்ளடக்கிய இந்தியா, உலகத்தின் ஒரு சிறிய வடிவமாகும். கூட்டாக முடிவெடுக்கும் பழமையான மரபுகளுடன் ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. ஜனநாயகத்தின் தாயகம் என்ற அடிப்படையில் இந்தியாவின் முடிவுகள் கட்டாயத்தின் அடிப்படையில் அல்லாமல் பலகோடிக்கணக்கான குரல்களின் நல்லிணக்க சங்கமத்தின் மூலம் அமைகிறது.

இன்று இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மக்களை மையமாக கொண்ட நமது ஆட்சி முறை, திறன்மிக்க இளைஞர்களின் படைப்பாற்றல் தன்மையை ஊக்குவிக்கும் அதேவேளையில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் கவனத்தில் கொள்கிறது.

தேசிய வளர்ச்சி என்பதை மேல்தட்டு மற்றும் அடித்தட்டு ஆட்சி முறையாக அல்லாமல் மக்கள் தலைமையிலான மக்கள் இயக்கமாக உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

பொதுமக்களுக்கான டிஜிட்டல் சேவைகள் சிறந்த முறையில் அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கும் இடையே செயல்படக்கூடியதாக அமையும் வகையில் தொழில்நுட்பத்தை ஊக்குவித்துள்ளோம். இது சமூக பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம், மின்னணு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றத்தை வழங்கியுள்ளது.

இந்த காரணங்களால் இந்தியாவின் அனுபவம் உலகப் பிரச்சி னைகளுக்கு தீர்வு காணக்கூடிய பார்வைகளை வழங்கும்.

நமது ஜி-20 தலைமை பொறுப்பின்போது நாம் இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும்.

நமது ஜி-20 முன்னுரிமைகள், ஜி-20 உறுப்பு நாடுகளுடனான ஆலோசனைகளோடு மட்டுமே வடிவமைக்கப்படாமல், இதுவரை இவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, தென்பகுதி நாடுகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே பூமியை சீர் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஒரே குடும்பம் என்ற நல்லிணக்கத்தை வளர்த்து, ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையை வழங்குவதில் நமது கவனம் திகழும்.

நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையைப் பாதுகாக்கும் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் நீடிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை நாம் ஊக்கப்படுத்துவோம்.

மனிதகுலத்திற்கு இடையே இணக்கத்தை மேம்படுத்த உணவு, உரங்கள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியல்மாக்கலிருந்து விடுவிக்கநாம் முயற்சிகளை மேற்கொள்வோம். இது புவி – அரசியல் பதற்றங்கள், மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்காமல் இருக்கும். நமது சொந்தக் குடும்பங்களில் கூட அதிகபட்ச கவனம் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது உலக அளவிலும் பொருந்தும். நமது எதிர்கால தலைமுறைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும் உலகளாவிய பாதுகாப்பை விரிவுபடுத்தவும் மிகவும் சக்தி மிக்க நாடுகளுடன் நேர்மையான உரையாடலை நாம் ஊக்குவிப்போம்.

இந்தியாவின் ஜி-20-ன் மையப்பொருள்என்பது அனைவரையும் உட்படுத்தியதாக, லட்சியமிக்கதாக, செயல்பாடுகள் சார்ந்ததாக, உறுதியானதாக இருக்கும்.

புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். மனிதநேயத்தை மையமாக கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.



Read in source website

கத்தார்: வரலாற்றில் முதல் முறையாக ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பெண் ஒருவர் நடுவராக பங்காற்றுகிறார்.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்-இ பிரிவில் உள்ள கோஸ்டாரிகா - ஜெர்மனி அணிகள் இன்று (வியாழன்) மோதவுள்ளன. இப்போட்டியில்தான் பிரான்ஸை ஸ்டெபானி ஃப்ராபார்ட் நடுவராக களம் காண்கிறார். ஸ்டெபானி ஃப்ராபார்ட் உடன் அவரது உதவியாளர்களாக நியூசா (பிரேசில்) மற்றும் கரேன் டயஸ் மெதீனா (மெக்சிகோ) ஆகியோரும் துணை நடுவர்களாக இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

38 வயதான ஸ்டெபானி ஃப்ராபார்ட் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் இதற்கு முன்னர் நடுவராக இருந்தவர்.

ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பெண் ஒருவர் நடுவராக பங்கேற்பது குறித்து ஜெர்மனி பயிற்சியாளர் ஹன்சி கூறும்போது, “நான் 100% நம்பிக்கையாக உள்ளேன். அவரது திறனுக்கு அவர் நிச்சயம் தகுதியானவர். நாம் இந்தப் போட்டியை எதிர்நோக்கி கொண்டிருப்பதுபோல் அவரும் எதிர்பார்ப்புடன் இருப்பார் என்று நம்புவோம்” என்றார்.

ஸ்டெபானி ஃப்ராபார்ட் மட்டும் கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை. ருவாண்டாவை சேர்ந்த சலிமா முகன்சங்கா, ஜப்பானை சேர்ந்த யோஷிமி யமாஷிதா ஆகிய இருவரும் பெண் நடுவர்களாக தேர்வாகி உள்ளனர். இவர்கள் இருவரும் வரும் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்பார்கள்.

கத்தார் உலகக் கோப்பையில் பிரான்சின் ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஜப்பானின் யோஷிமி யமாஷிதா, ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா ஆகிய 3 பெண் நடுவர்கள் பணியாற்றுகின்றனர். ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெண் நடுவர்கள் பணியாற்ற உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை. இதுதவிர உதவி நடுவர்கள் குழுவிலும் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பெர்த்: பெர்த்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் ஆஸ்திரேலியா- மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான வியாழக்கிழமை ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 402 ரன்கள் குவித்திருந்தது. லபுஷேன் 204 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்கு முன் ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் பிராட்மேன் எடுத்த 29 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை தன் 29-வது டெஸ்ட் சதத்தின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

முதல் நாளான புதன்கிழமை டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ். பிட்சில் பவுன்ஸ் இருக்கிறது, ஆனால் வேகம் இல்லை. டேவிட் வார்னர் 5 ரன்களை மட்டுமே எடுத்து மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் பந்தை ஆஃப் திசையில் விளாச முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். 9/1 என்ற நிலையிலிருந்து உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுஷேனும் ஒரு சதக் கூட்டணி அமைத்தனர். கவாஜா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து கைல் மேயர்ஸ் பந்தில் அவுட் ஆகிச் சென்றார். ஆஸ்திரேலியா 151/2 என்று இருந்தது.

அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் இறங்கினார். விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பந்து வீச்சு என்பதையே மறந்தது போல் வீசிய மே.இ.தீவுகள் கஷ்டப்பட்டது. விக்கெட்டே விழுமா என்ற சந்தேகமே எழுந்தது. ஸ்மித்தும், லபுஷேனும் தங்கள் இஷ்டத்துக்கு ஆடினர். கேப்டன் கிரெக் பிராத்வெய்ட் என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித்தும், லபுஷேனும் சேர்ந்து 251 ரன்களைச் சேர்த்தனர். லபுஷேன் 350 பந்துகளில் 20 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இப்போது இடது கை அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் இறங்கியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் நேற்று 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தவர் இப்போது பிராட்மேன் சாதனையைச் சமன் செய்யும் சதத்தை எடுத்து 119 ரன்களுடன் ஆடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே 21 ஓவர் 6 மெய்டன் 48 ரன்கள் என்று விக்கெட் எடுக்காவிட்டாலும் டைட்டாக வீசிவருகிறார் மற்ற பவுலர்கள் செஞ்சுரி அடிக்கும் நிலையில் தான் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்திருந்தால் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் பவுலிங்கை மறந்தது போல் வீசுகின்றனர்.

இன்னொரு விஷயம் லபுஷேன் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா மொத்தமாக ஆயிரம் ரன்களைக் கூட எடுத்திருக்க முடியும் என்ற நிலையே இருந்தது. இப்போது மட்டுமென்னா ஆயிரம் வரை செல்லலாம் என்று நினைத்தால் செல்லலாம், அந்த லட்சணத்தில்தான் மே.இ.தீவுகளின் பவுலிங் உள்ளது.

ஐசிசி என்ற ஒன்று கிரிக்கெட்டை வளர்க்க இருக்கிறதா அல்லது அழிக்க இருக்கிறதா என்ற சந்தேகமே மேலோங்கி நிற்கிறது. மே.இ.தீவுகள் இப்போது சிறுகச் சிறுக அழிந்து வருகிறது. இனி ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அவர்களை அழைக்க மாட்டார்கள்.

இப்போதுதான் ஆஸ்திரேலியா 424/3 என்ற ஸ்கோரை எட்டியுள்ளது. இன்னும் ஸ்மித் இரட்டைச் சதம் பாக்கியுள்ளதோ, ட்ராவிஸ் ஹெட் சதம் பாக்கியுள்ளதோ, இன்னும் கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி வேறு உள்ளனர். நிச்சயம் 1000 ரன்கள் எடுக்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா போகாது என்றே சொல்ல முடியும்.

இருந்தாலும் யார் கண்டார்கள் மே.இ.தீவுகள் கேப்டன் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியே ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.



Read in source website

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி சில்லறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் மொத்த பரிவர்த்தனைக்கு அறிமுகாகி இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் வடிவிலான இந்த கரன்சி ‘இ-ரூபாய்’ என அறியப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கும் சூழலில் டிஜிட்டல் கரன்சி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் என நான்கு நகரங்களில் சோதனை முறையில் சில்லறை பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி அறிமுகாகி உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளில் இவை வெளியிடப்பட உள்ளது.

டிஜிட்டல் கரன்சி? - இன்றைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகி உள்ளது. அது கரன்சி நோட்டுகளையும் விட்டு வைக்கவில்லை. மின்னணு சாதனங்களின் துணை கொண்டு இணையத்தின் மூலம் பணத்தை சேமிக்கவும், பரிமாற்றுவதும்தான் டிஜிட்டல் கரன்சி. இது முழுவதும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே இருக்கும். உலகில் டிஜிட்டல் கரன்சி முயற்சியை மேற்கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான பரிவர்த்தனை டேட்டாபேஸ் விவரங்களை நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ நிர்வகிக்கும். கிட்டத்தட்ட ஒரு சேமிப்பு கணக்கை வங்கிகள் எப்படி நிர்வாகிக்குமோ அதே முறைதான். ஆனால் அது டிஜிட்டல் முறையில் இருக்கும். பயணத்தின் பரிணாமங்களில் இதுவும் ஒன்று. ஆதி காலத்தில் நாணய முறை கரன்சி நோட்டுகளாக மாறியது அல்லவா அது போலத்தான்.

கிரிப்டோ கரன்சி, வெர்ச்சுவல் கரன்சி மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் (சிபிடிசி) கரன்சி என இது மூன்று வகைகளாக உள்ளன. தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

சிபிடிசி: பல்வேறு நாடுகளில் கரன்சி மற்றும் நாணயங்களை வெளியிடும் பணி உட்பட வங்கி, நிதி சார்ந்த பணிகளை முறைப்படுத்த மத்திய வங்கிகள் இருக்கும். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல. அந்த வங்கிகள்தான் டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். இந்தியாவில் இ-ரூபாயை ரிசர்வ் வங்கிதான் வெளியிட்டுள்ளன. கரன்சி ரூபாய்க்கு நிகரான அதே மதிப்பு இ-ரூபாய்க்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹாமாஸின் சேண்ட் டாலர்தான் உலகின் முதல் சிபிடிசி என தெரிகிறது. சீனா, கானா, ஜமைக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த சிபிடிசி முயற்சியை கையில் எடுத்துள்ளன.

இதனை பயன்படுத்துவது எப்படி?

  • இதுவும் இந்திய நாட்டின் அதிகாரபூர்வமான கரன்சிதான். வழக்கமான கரன்சிகளுடன் ஒப்பிடும்போது இதன் வடிவம் மட்டுமே மாறி உள்ளது.
  • QR கோடுகள் மூலம் தனிநபர், வணிகர்களுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
  • இ-ரூபாய் சேவையை வழங்கும் வங்கிகளின் டிஜிட்டல் வாலட் மூலம் பயனர்கள் மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனம் மூலம் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
  • இ-ரூபாய் டிஜிட்டல் டோக்கன்களாக இருக்கும் என தெரிகிறது. அதாவது ரூபாயின் அதே டினாமினேஷனில் இந்த டோக்கன்கள் இருக்குமாம்.
  • இந்த சேவை விரைவில் இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் வங்கிகளுக்கு விரிவு செய்யப்படும் என தெரிகிறது.
  • இப்போதைக்கு சியூஜி முறையில் சிறிய அளவிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிகிறது.



Read in source website

புதுடெல்லி: 2022-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், கவுதம் அதானி முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி ஆகும்.

நடப்பு ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்த போதிலும், இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மிகப் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி (25 பில்லியன் டாலர்) உயர்ந்து ரூ.65.60 லட்சம் கோடியாக (800 பில்லியன் டாலர்) உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு 1,000 சதவீத அளவில் வளர்ச்சி கண்டன. இந்தப் பட்டியலில், 2-வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7.1 லட்சம் கோடி ஆகும். டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷான் தமனி ரூ.2.2 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு 3-வது இடத்தில் உள்ளார்.



Read in source website

அழிந்து வரும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பறவையைப் பாதுகாக்க, ‘ஜி.ஐ.பி’ திட்டம் தொடங்கலாமா என, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த பறவை என்பது என்ன, அது ஏன் ஆபத்தில் உள்ளது? என்னென்ன பாதுகாப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன?

அழிந்து வரும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் (கானமயில்) பறவையைப் பாதுகாக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘புராஜெக்ட் டைகர்’ மாதிரியான ‘புராஜெக்ட் ஜி.ஐ.பி’ (Project GIB) தொடங்கலாமா என்று புதன்கிழமை கேட்டது.

“நம்மிடம் புராஜெக்ட் டைகர் உள்ளது, ‘புராஜெக்ட் கிரேட் இந்தியன் பஸ்டர்ட்’ போன்ற கிரேட் இந்தியன் பஸ்டர்ட்டில் (Great Indian Bustard) கவனம் செலுத்த சில வழிமுறைகள் சாத்தியமில்லையா” என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி ஏ.எஸ் போபண்ணா மற்றும் நீதிபதி வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: இனவெறி, களங்கம்: உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மையை ‘mpox’ என்று அழைக்க என்ன காரணம்?

கிரேட் இந்தியன் பஸ்டர்ட் என்றால் என்ன?

முக்கியமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் காணப்படும் இந்த பெரிய பறவை, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிரேட் இந்தியன் பஸ்டர்ட்களின் வரலாற்று வரம்பு இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், இப்போது அது வெறும் 10 சதவீதமாக சுருங்கிவிட்டது. பறக்கும் பறவைகளில் அதிக எடை கொண்ட பறவைகளான கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் புல்வெளிகளை தங்கள் வாழ்விடமாக விரும்புகின்றன. நிலப்பறவைகளான கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை தரையில் செலவிடுகின்றன, பூச்சிகள், பல்லிகள், புல் விதைகள் போன்றவற்றை உண்கின்றன. புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தின் காற்றழுத்தமானிகளாக இருப்பதால், கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் புல்வெளியின் முதன்மையான பறவை இனங்களாகக் கருதப்படுகின்றன.

கிரேட் இந்தியன் பஸ்டர்ட் ஏன் ஆபத்தான நிலையில் உள்ளது?

கிரேட் இந்தியன் பஸ்டர்ட்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று மேல்நிலை மின் பரிமாற்றக் கம்பிகள். அவற்றின் மோசமான முன் பார்வை காரணமாக, பறவைகள் மின் கம்பிகளை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாது, மேலும் நெருக்கமாக இருக்கும்போது பாதையை மாற்ற முடியாத அளவுக்கு கனமாக இருக்கும். இதனால், கம்பிகளில் மோதி இறக்கின்றன.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) படி, ராஜஸ்தானில், ஒவ்வொரு ஆண்டும் 18 கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் மேல்நிலை மின் கம்பிகளில் மோதி இறக்கின்றன.

கிரேட் இந்தியன் பஸ்டர்ட்: பாதுகாப்பு முயற்சிகள்

உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2021 இல், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள முக்கிய மற்றும் சாத்தியமான கிரேட் இந்தியன் பஸ்டர்ட் வாழ்விடங்களில் உள்ள அனைத்து மேல்நிலை மின் பரிமாற்றக் கம்பிகளையும் நிலத்திற்கு அடியில் மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

புதன்கிழமை நடந்த விசாரணையின் போது, ​​முன்னுரிமை பகுதிகளில் பறவை திசை திருப்பும் கருவிகளை (மின் கேபிள்களில் பொருத்தப்பட்ட பிரதிபலிப்பான் போன்ற கட்டமைப்புகள்) நிறுவுவது குறித்து ஆறு வாரங்களில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் தலைமைச் செயலாளர்களிடம் நீதிமன்றம் அறிக்கை கேட்டது. மேலும் இரு மாநிலங்களிலும் நிலத்தடியில் செல்ல வேண்டிய டிரான்ஸ்மிஷன் லைன்களின் மொத்த நீளத்தை மதிப்பிடுமாறும் கேட்டுக் கொண்டது.

மேலும், 2015 ஆம் ஆண்டில், மத்திய அரசு கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இனங்கள் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் வனத்துறை இணைந்து இனப்பெருக்க மையங்களை அமைத்தது, அங்கு காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கிரேட் இந்தியன் பஸ்டர்ட் முட்டைகள் செயற்கையாக அடைகாக்கப்பட்டு வருகிறது.



Read in source website

 முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை' என்கிற திரைப்படப் பாடல் வரிக்கு உதாரணமாக அமைந்திருக்கிறது, 26 இந்திய மாலுமிகளின் நிலைமை. மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்க நாடான ஈக்வடாரியல் கினியில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் அவர்களது வருங்காலம் என்ன என்பது தெரியாமல், இந்தியாவிலுள்ள அவர்களின் குடும்பத்தினர் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.
 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 மாலுமிகள், நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.டி. ஹிரோயிக் இடன் என்கிற சரக்குக் கப்பலில் பணியாற்றுகிறார்கள். ஆகஸ்ட் 9-ஆம் தேதி கினி நாட்டுக் கடற்படை அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்து, தன் வசத்தில் (கஸ்டடி) எடுத்துக் கொண்டது. கப்பலைப் பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், அதில் பணிபுரியும் மாலுமிகளும் கைது செய்யப்பட்டனர்.
 மாலுமிகள் சிலர் கப்பலிலும், சிலர் கரையிலுள்ள ஹோட்டலிலும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தி, மூன்று வாரங்களுக்குப் பின்னர்தான் தெரியவந்தது. நைஜீரியாவிலும், கினியிலும் தனது தூதரகங்கள் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயன்றும்கூட எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
 சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 16 மாலுமிகளில் மூன்றுபேர் தமிழர்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் பிரின்டன், சென்னையைச் சேர்ந்த ராஜன் தீபன்பாபு, ஆம்பூரைச் சேர்ந்த சுகுமார் ஹர்ஷா ஆகிய மூவரும் தமிழர்கள். கேரளத்தைச் சேர்ந்த மூன்று மாலுமிகளும் இருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த மாலுமி ஒருவரும் இருப்பதால், அந்நாட்டு அரசின் சார்பிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 ஹிரோயிக் இடன் என்கிற நார்வேயைச் சேர்ந்த அந்த சரக்குக் கப்பல், நைஜீரியாவிலுள்ள போனி துறைமுகத்தில் கச்சா எண்ணெய்யைக் களவாடச் சென்றது என்பதுதான் குற்றச்சாட்டு. நைஜீரிய கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் நுழைந்தது என்னவோ உண்மை. அப்போது, நைஜீரிய கடற்படையின் ரோந்துப் படகு அதைச் சுற்றி வளைத்தது. அதைப் பார்த்ததும், ஹிரோயிக் இடன் கப்பல், நைஜீரிய கடல் எல்லையிலிருந்து விரைந்து வெளி யேறியது.
 நைஜீரிய அதிகாரிகளின் தகவலைத் தொடர்ந்து, ஈக்வடாரியல் கினி கடற்படை அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்தியது. நைஜீரிய கடற்படையின் ரோந்துப் படகை, கடற்கொள்ளையர்களின் படகு என்று கருதி பயந்து விரைந்து சென்றதாக "ஹிரோயிக் இடன்'
 கப்பலின் தலைமை மாலுமி தெரிவித்த விளக்கத்தை நைஜீரியாவும், கினியும் ஏற்பதாக இல்லை.
 கினி நாட்டு கடல் எல்லைக்குள், அவர்களது கொடியை ஏற்றாமல், முன் அனுமதி பெறாமல் நுழைந்தது முதல் வழக்கு. அதற்கான அபராதமாக 25 லட்சம் டாலர் செலுத்த முற்பட்டது கப்பல் நிறுவனம். ஆயினும், நைஜீரியா விடுவதாக இல்லை. மாலுமிகளை கினியின் மலபோ துறைமுகத்திலிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
 மாலுமிகள் நைஜீரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாங்கள் எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக மாலுமிகளுக்காக செயல்படும் "செய்லர்ஸ் சொசைட்டி' தெரிவிக்கிறது. அவர்கள் கப்பலிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த விசாரணை ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
 நார்வேயின் பிரபல கப்பல் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கப்பலில் வேலை பார்க்கும் பணியாளர்களைக் கைது செய்து மூன்று மாதங்கள் வரை அவர்களின் குடும்பத்தினரிடம்கூடத் தெரிவிக்காமல் இருந்ததும், அவர்களின் தாய்நாட்டு அரசுக்குக்கூடத் தெரிவிக்காமல் இருந்ததும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகள். கப்பல் சட்டவிரோதமாக செயல்பட்டது என்றால், அதன் தலைமை மாலுமியைக் கைது செய்யலாம் அல்லது கப்பலைப் பிடித்து வைக்கலாம், நடவடிக்கை எடுக்கலாம். அதில் பணியாற்றும் தொழிலாளர்களைக் காவலில் வைப்பது என்பது மனித உரிமை மீறல் என்று நைஜீரிய அரசுக்குத் தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
 இதுபோன்ற நிகழ்வுகளில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டிய "இன்டர்நேஷனல் மேரிடைம் ஆர்கனைசேஷன்', ஹிரோயிக் இடன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளுக்கு உதவாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. கப்பலில் பணியாற்றும் 26 மாலுமிகளையும் விடுவிக்கக் கோரி, ஐ.நா. சபையின் கடல் சட்டம் (லா ஆஃப் த ஸீ) பிரிவு 292-இன் கீழ் சர்வதேச ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 மாதக்கணக்கில் கடலில் தங்களது வாழ்வைக் கழிக்கும் சரக்குக் கப்பல் மாலுமிகளின் துன்பங்கள் சொல்லி மாளாது. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், குடும்பங்களிலிருந்து பிரிந்து அவர்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் அலைகடலில் பயணிக்கும் பரிதாபம் குறித்தும் வெளி உலகத்துக்குத் தெரிகிறது. ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறைதான் தங்கள் மனைவி, மக்களையும் பெற்றோர் உறவினர்களையும் பார்க்க முடியும் என்கிற வேதனை போதாதென்று, இதுபோன்ற சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை அவர்களுடையது.
 இந்தியாவில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சரக்குக் கப்பல்களில் பணிபுரிகிறார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கும், வருங்காலத்துக்கும் சர்வதேச அளவில் இதுவரை எந்தவித உத்தரவாதமும் முன்னெடுக்கப்படவில்லை. ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித அனுகூலங்களும் சரக்குக் கப்பல் தொழிலாளர்களுக்குக் கிடையாது. குறைந்தபட்சம், அவர்களது பாதுகாப்பையாவது உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு!
 
 



Read in source website

 இந்தியா விடுதலை பெற்ற 1947-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 375 எம்.பி-க்கள் தில்லியில் ஒன்றுகூடி, தேசத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக இரு ஆண்டுக்கு மேலாக விவாதித்தார்கள். 22 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒரு குழு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசனத்தைத் தயாரித்த குழு. இன்னொரு குழு, நமது தேசத்திற்குரிய அலுவலக மொழி எதுவென விவாதித்த குழு.
 அலுவல் மொழி ஆங்கிலமாகவே தொடர்வதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருந்தன. ஆங்கிலத்துக்கு ஆதரவாக இருந்தவர்களுக்குக்கூட, அது இந்தியாவை அடிமைப்படுத்தியவர்களின் மொழி என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்தது. அதனால் அன்றைக்கிருந்த 30 கோடி இந்திய மக்களில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக்க முன்மொழிந்தவர்களுக்கு, போதிய பெரும்பான்மை அக்குழுவில் இல்லை. அதனால் அம்மொழிக் குழு உறுப்பினர்கள் 22 பேரும் பாதிக்குப் பாதியாகப் பிளந்து நின்றார்கள்.
 அந்த நிலையில்தான் குழுவின் தலைவராக இருந்த பிகாரியான ராஜேந்திர பிரசாத் தனது தலைவர் பதவிக்காகத் தரப்பட்ட வாக்கை, ஹிந்திக்கு செலுத்தினார்; ஹிந்தி மொழி அலுவல் மொழியானது.
 அதேசமயம், ஆங்கில மொழியை இணை அலுவல் மொழியாக நீட்டிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பெரும்பாலோர் பேசும் ஹிந்தி மொழியை ஹிந்தி தெரியாதவர்கள் கற்றுக்கொள்கிற காலம் 15 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டது.
 ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் (1986) தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. அதுவும் ஹிந்தி மொழிக்கு ஆதரவாகவே இருந்தது. அக்கல்விக் கொள்கையும் அமலாகவில்லை. 2005-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் உருவாக்கிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை உருவாக்கியதோடு, நீட் தேர்வையும் உருவாக்கியது.
 இவ்வாறு உருவான பலவிதமான கல்விக் கொள்கைகள் வேறு. 2020-இல் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவான கல்விக் கொள்கை வேறு. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடக் கூடாது.
 ஒவ்வொரு மாநிலமும் அவரவர் தாய்மொழியில் கல்வியைக் கற்பிக்க வேண்டுமென்றுதான் மத்திய அரசின் கல்விக் கொள்கை உரக்கக் கூறுகிறது. இது, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கிற முயற்சியாகும். அதற்கான முக்கிய காரணம், தாய்மொழியில்தான் சுய சிந்தனை சாத்தியமாகும். இரவல் மொழியில் அந்த சுயசிந்தனை ஏற்படாது.
 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் திட்டம் என்பது, அவர்களுக்கு இழைக்கப்படும் வஞ்சம் அல்ல. பத்து மொழிகளைக்கூடக் கற்றுக் கொள்கிற பருவம் அது.
 நமது அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளை தேசிய மொழிகளாக இனம் கண்டுள்ளோம். 22 மொழிகளையுமே அலுவலக மொழியாக்குவதுதான் மொழி சமத்துவத்தைக் காட்டக்கூடிய நடவடிக்கை என்று தமிழ்நாடு மாநிலம் மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறது.
 1937 முதல் சென்ற 80 ஆண்டுகளாக இதை சந்தேகித்து வந்ததும் தமிழ்நாடு மாநிலம்தான். கட்டாயமாக ஹிந்தி கற்பதை எதிர்த்து வந்த மாநிலமும் தமிழ்நாடுதான். ஹிந்திக் கல்வி பற்றிய சந்தேகம் தீருமாறு தேசிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.
 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைக் கட்டாயமாக்கவில்லை. விரும்புகிறவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப் படிப்பதுபோல ஹிந்தி மொழியைப் படித்துக் கொள்ளலாம். விரும்பவில்லையானால், இரு மொழிகளை மட்டுமே தமிழக மாணவர்கள் கற்றுக் கொள்வதையும் அது எதிர்க்கவில்லை.
 எட்டாவது வகுப்புவரை தாய்மொழியில்தான் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறது தேசிய கல்விக் கொள்கை. அப்படிச் செய்யப்படுமானால், ஆங்கில வழியில் நடத்தப்பட்டுவரும் நர்சரி பள்ளிகளின் கல்வி வியாபாரம் தமிழ்நாட்டில் நீடிக்க முடியாது.
 நர்சரிப் பள்ளிகளில் தாய் தந்தையரை "மம்மி', "டாடி' என்று கற்கும் மாணவர்கள்தான் ஆரம்பப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டியவர்களாகி விடுகின்றனர். நர்சரி பள்ளிகள் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன என்பதை யாரும் மறைக்க முடியாது.
 எட்டாவது வகுப்புவரை தமிழில்தான் கற்பிக்க வேண்டும் என்பது தமிழை வளர்க்கும் முயற்சியா? இல்லையா? இதனால் பாதிக்கப்படக் கூடிய பள்ளிகள் ஆங்கில நர்சரி பள்ளிகள்தான். அப்பள்ளிகள் செயல்படும்வரை குழந்தைகள் மனதில் நாம் தாய்மொழி தமிழை ஊட்ட முடியாது. அதனால் தமிழ்வழிக் கல்வி என்பது ஆங்கிலத்திற்கு எதிரானது.
 அலுவலக மொழியென்று ஹிந்தியைப் பற்றி பேசுகிறபோது மத்திய அரசின் உத்தரவுகள், அறிவிக்கைகள், திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஹிந்தியில் வெளிவரும். ஹிந்தி புழக்கத்தில் இல்லாத மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில்தான் அவை வெளியாக வேண்டி உள்ளது. தென்னிந்தியாவில் கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் மும்மொழித் திட்டம் அமலான காலத்திலேயே மூன்றாவது மொழியாக ஹிந்தியை அம்மாநிலங்கள் மாணவர்களுக்குக் கற்பித்தனர். அதனால் மலையாளமோ, கன்னடமோ, தெலுங்கோ பாதிக்கப்படவில்லை.
 ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழி தவிர்க்கப்படுகிறது. தாழ்வாக நினைக்கப்படுகிறது. ஆங்கிலத்தைத்தான் தமிழ் மக்கள் நேசிக்குமாறு செய்ய இப்போதும் ஒரு சூழ்நிலை நீடிக்கிறது.
 உண்மையில், தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை உருவாக்கக் கூடியது. காரணம், அது தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு ஆதரவாக உள்ளது. முன்பு அமலாக்கப்பட்ட மும்மொழி திட்டம் என்பது அப்படியில்லை என்பதை ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்க ஏன் மறுக்க வேண்டும்? இதனை அரசியல் செய்து ஆதாயம் பெறுவது என்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் ஆகிவிடாதா?
 இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு முதலிய ஐரோப்பிய நாடுகளில்கூட ஆங்கில மொழிக்கு முதலிடம் இல்லை. அந்தந்த நாடுகளின் தாய்மொழிக்குத்தான் முதலிடம். காரல் மார்க்ஸ் தனது நூலான "மூலதன"த்தை ஜெர்மனியில்தான் எழுதினார். காந்திஜி தனது சுயசரிதையான "சத்திய சோதனை" நூலை குஜராத்தியில்தானே எழுதினார். நோபல் பரிசுபெற்ற ரவிந்திரநாத் தாகூர் தனது "கீதாஞ்சலி"யை வங்காளத்தில்தானே எழுதினார். அந்த மேதைகளெல்லாம் தாய்மொழியைத் தவிர்க்கவில்லை. ஆங்கிலத்தை நாடவில்லை.
 சீன தேசத்தில் ஆங்கிலம் படித்தா செயற்கைகோள் விண்வெளி நிலையத்தை உருவாக்கி உள்ளார்கள்? ரஷிய நாட்டில் ரஷிய மொழியில்தானே மாணவர்கள் சிந்திக்கின்றனர்; புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தருகின்றனர்.
 தாய்மொழியைத் தவிர்ப்பதற்குரிய வழித்தடம் தமிழ்நாட்டில் மட்டும் அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்துவைக்கப்படுவது நியாயமாகுமா? அந்தக் கதவுகளைச் சாத்துவதற்காக வந்துள்ள சந்தர்ப்பத்தை சதியென்றும், சர்வாதிகாரம் என்றும், சனாதனம் என்றும் பேசுபவர்கள் தமிழ்வழியில் படித்த டாக்டர் அப்துல் கலாம் பற்றி சிந்திக்க வேண்டும்.
 நாடாளுமன்றத்தில்கூட தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். தேசிய மொழி, அலுவலக மொழி இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது இணைப்பு மொழி நமக்கு மிகமிக அவசியமாகும். 22 தேசிய மொழிகளையும் இணைப்பு மொழிகளாக்கினால், ஒவ்வொரு இந்தியனும் 22 மொழிகளையும் கற்றுக்கொண்டு பேசுவது சாத்தியமாகுமா?
 அப்படியானால், இணைப்பு மொழியின் எண்ணிக்கையைச் சுருக்க வேண்டாமா? எப்படிச் சுருக்குவது? தொன்மையை முதன்மைப்படுத்தி தேர்வு செய்தால் எட்டு கோடி பேர் பேசும் தமிழ்மொழியை இணைப்பு மொழியாக்கலாம். அதேசமயம் மற்ற மாநிலத்திலுள்ள 132 கோடி பேருக்கு இந்தத் தமிழ்மொழி தெரியுமா? அதனால் இணைப்பு மொழிக்குத் தமிழ் சாத்தியமில்லை.
 பாரம்பரிய கலாசாரத்தை வைத்துத் தேர்வு செய்தால் சம்ஸ்கிருதத்தை இணைப்பு மொழியாகத் தேர்வு செய்யலாம். டாக்டர் அம்பேத்கர் சம்ஸ்கிருதத்தைத்தான் மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும் என்றார் என்பதை அரசியல் தலைவர்கள் குறிப்பிடுவதே இல்லை. இந்தியாவுக்குள் உருது பேசுகிற முஸ்லிம்கள் குறைவு. ஹிந்தி பேசுகிற உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி முதலிய மாநிலங்களில் அதிகம் உள்ளனர். மேற்குவங்க முஸ்லிம்கள் வங்கமொழி பேசுகிறவர்கள்.
 ஹிந்தி பேசும் பாமர மக்கள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லியில் சுமார் 60 கோடி பேர் உள்ளனர். ஹிந்திக்கு நெருக்கமாக உள்ள பிகாரி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி மொழி பேசுபவர்கள் சுமார் 40 கோடி பேர் உள்ளனர்.
 ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொண்டு கையாளுகிறவர்களாக தென்மாநிலங்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநில மக்கள் 30 கோடி பேர் உள்ளனர். ஏறக்குறைய 140 கோடி இந்திய மக்களில் 130 கோடி பேர் பேசுகிற மொழியாக ஹிந்தி ஆகிவிட்டதால், தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி திணிப்பு என்ற பெயரில் அதிகமாக அரசியலும், கொஞ்சமாக மொழிப்பற்றும் வெளிப்படும் விதத்தில் நிலைமை நீடிக்கலாமா? ஹிந்தி மொழியை இதுவரை படிக்காத தமிழர்கள், ஆங்கில எழுத்துகளின் உதவியோடு வாசித்துக் கொள்கிற திட்டமும் நமது ராணுவத்திலேயே நடைமுறையில் உள்ளது.
 தேசிய மொழிக்கு நிகரான அலுவலக மொழி மட்டும் போதாது. இன்றைக்கான அவசியம் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிற இணைப்பு மொழிதான். குஜராத்திக்காரனோடு தமிழன் பேச வேண்டுமானால் இப்போது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ஆங்கிலம் பாமர மக்களின் மொழியல்ல. குஜராத்தியனுக்கும் மராட்டியனுக்கும் ஹிந்தியும் தெரியும். தமிழன் மட்டும் அவர்களோடு ஆங்கிலத்தில்தான் பேச முடியும். ஆனால் அவர்களோடு ஒரு கன்னடனோ, மலையாளியோ ஹிந்தியில் பேசிவிட முடிகிறது. அதற்குக் காரணம் இணைப்பு மொழி அவர்களுக்கு மத்தியில் கையாளப்படுகிறது.
 அதனால் இணைப்பு மொழிப் பற்றித் தீர்மானிக்கும் சந்திப்பு நிலையத்தில் தமிழ்ப் பயணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிலும் கணிசமான தமிழர்கள் சரியான பயணத்தைத் தொடர்வதற்கு இணைப்பு மொழியை சுயமாகவே கற்றுக் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆகவே தேசிய மொழி, அலுலக மொழி, இணைப்பு மொழி ஆகியன பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு ஏற்பட்டாக வேண்டிய தருணம் இது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.



Read in source website

 எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) 1965- ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டு இந்தியா- பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லை என ஏழாயிரம் கிலோ மீட்டருக்கும் மேலான நமது நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகிறது. "இந்தியாவின் முதல்நிலை அரண்' (இண்டியாஸ் ஃபர்ஸ்ட் லைன் ஆஃப் டிஃபென்ஸ்) என்ற சிறப்பைப்பெற்ற இது உலகின் மிகப் பெரிய எல்லைக் காவல் படையாகும்.
 தற்போது 192 படைப் பிரிவுகளை (பட்டாலியன்ஸ்) கொண்ட இது, பீரங்கிப் படைப்பிரிவு (ஆர்ட்டிலிரி ரெஜிமென்ட்), விமானப் படைப்பிரிவு (ஏர் விங்), நீர் படைப்பிரிவு (வாட்டர் விங்), ஒட்டகப் படையணி (கேமல் விங்) போன்ற சிறப்பு படைப்பிரிவுகளையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் வீரர்கள் பணிபுரியும் இப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம்.
 எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் என்பவை, அமைதிக் காலங்களில் நமது நாட்டின் எல்லையை எதிரி நாட்டிடமிருந்து பாதுகாப்பது. எல்லையை ஒட்டி வாழும் மக்கள் மனதில் பாதுகாப்புணர்வை ஏற்படுத்துதல். எல்லையில் சட்ட விரோத செயல்கள் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றவையாகும்.
 போர்க் காலத்தில், ஆக்கிரமித்த நிலங்களைப் பாதுகாப்பது; ராணுவத்திற்கு எல்லையில் வழிகாட்டியாக (கெய்ட்) செயல்படுவது; எல்லையில் அந்நியர் ஊடுருவலைத் தடுப்பது. தகவல் சேகரிப்பு, தாக்குதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுதல்; போர்க் கைதிகளை பாதுகாப்பது; ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள எதிரி நாட்டின் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது போன்றவை.
 அரசு விதிமுறைகளின்படி தரைப்படை (ஆர்மி),கடற்படை (நேவி) விமானப் படை (ஏர் ஃபோர்ஸ்) ஆகியவற்றில் பணி புரிந்து ஓய்வு பெறும் படை வீரர்கள் மட்டுமே "முன்னாள் படை வீரர்கள்' (எக்ஸ் சர்வீஸ்மென்) என அழைக்கப்படுகிறார்கள். இதில் பி.எஸ்.எப். வராது.
 மத்திய அரசு "டைரக்டரேட் ஜெனரல் ரீசெட்டில்மென்ட்' மூலமும், மாநில அரசு "டமில்நாடு எக்ஸ் சர்வீஸ்மென் கார்ப்பரேஷன்) மூலமும் ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு மறு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவ வசதி, குழந்தைகளின் படிப்புக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, சிஎஸ்டி கேண்டீன் வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், எல்லைப் பாதுகாப்பு படையினர் இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
 கொடிநாள் நிதி, படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த நிதியானது, முப்படை என்று சொல்லப்படும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 நாட்டின் எல்லையில் நின்று எதிரிகளோடு நடக்கும் சண்டையின் போது உடல் ஊனமுற்ற முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கோ எல்லையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நலவாழ்வுக்கோ இந்த நிதி பயன்படாது.
 ஆண்டிற்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே விடுமுறையில் வரும் இவர்கள் நாட்டைக் காக்க எல்லையிலேயே நின்று எதிரிகளோடு போராடுகின்றனர். ஆனால் பணி ஒய்வு பெற்ற பிறகு இவர்களுக்கு முன்னாள் படைவீரர் அந்தஸ்து, மறு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு அங்கீகாரமும் சலுகைகளும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
 ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு முப்படை வீரர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 ஆனால் இதில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லைப் படை வீரர்களின் குறைகளை கேட்டு உடனே களைந்திருக்க வேண்டாமா? ஆனால் அப்படி நடப்பதில்லை. சட்டத்தில் பாகுபாடுகள் இருக்கலாம். நாட்டைக்காக்க இவர்கள் செய்த தியாகத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதே உண்மை!
 இதனால் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணிபுரிந்து ஓய்வு பெறும் எல்லை பாதுகாப்பு படையினர் தினக்கூலி வேலைக்கும் கட்டடக் காவலாளி வேலைக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நமது நாட்டைக் காத்த எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு இப்படி ஒரு அவல நிலை தொடர்வது மிகவும் வருத்தத்திற்குரியது.
 இனியாவது அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படையினருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
 முன்னாள் படை வீரர்கள் அந்தஸ்து, கொடி நாள் நிதி, எல்லை பாதுகாப்பு படையினர் குடும்பத்தினருக்குப் பயன்பட வேண்டும. அவர்களுக்கு மறு வேலைவாய்ப்பு, பிள்ளைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் குறைகளையும் கேட்டறிய வேண்டும்.
 புகழ்பெற்ற இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களோடு கொடியிறக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி (ரீட்ரீட் செரிமொனி டிரில்) செய்யும் நமது இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையினர்தான். ஆனால், இவர்களின் பணிகளும் தியாகங்களும் சமூகத்தின் கவனத்திற்கு வராமலே உள்ளன.
 நாம் இதுநாள் வரை கவனிக்கத்தவறிய எல்லை பாதுகாப்பு படையின் இரண்டு தலைமுறைத் தியாகங்களை, வலியை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். புறக்கணிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்காகவும் அவர்களின் நலவாழ்வுக்காகவும் மேற்கண்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான எல்லைப் பாதுகாப்பு படை குடும்பத்தாரின் ஒருமித்த கோரிக்கையாகும்.
 இன்று (டிச. 1)
 எல்லைப் பாதுகாப்புப் படை
 தொடக்க நாள்.



Read in source website

 

மார்ட்டின் ஹென்ரிச் கிளப்ரோத் (Martin Heinrich Klaproth)என்பவர் ஒரு  ஜெர்மனிய வேதியல் விஞ்ஞானி. கிளப்ரோத், 1743ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். இது அவரின் 279-வது பிறந்தநாளாகும். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் மருந்து தயாரிப்பவராகவே இருந்தார். கிளப்ரோத் பல ஆண்டுகள் மருந்தாளுநராக பணியாற்றினார். பிற்கால வாழ்க்கையில் கிளப்ரோத் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக பணியாற்றச் சென்றார். அந்த காலகட்டத்தில் அவரது மருந்துக் கடை பெர்லினில் இரண்டாவது பெரிய மருந்தகமாக மாறியது. மேலும் ஐரோப்பாவில் அதிகம் உற்பத்தி செய்யும் கைவினை ரசாயன ஆராய்ச்சி மையமாகவும்  விளங்கியது. கிளப்ரோத் பகுப்பாய்வு வேதியியலின் ஒரு முக்கிய அமைப்பாளராக இருந்தார். மேலும் கிராவிமெட்ரிக் பகுப்பாய்வின் ஒரு சுயாதீனமான கண்டுபிடிப்பாரும்கூட. அவர் ஆய்வில் பல்வேறு விபரங்களுடன் கவனம் செலுத்தியது, முடிவுகளில் உள்ள முரண்பாடுகளை புறக்கணிக்க மறுத்தது கருவியின் பயன்பாட்டில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது போன்றவையே கண்டுப்டிப்புகள் உருவாகக் காரணம். . கனிமங்களின் கலவையைப் புரிந்துகொள்வதிலும் தனிமங்களை வகைப்படுத்துவதிலும் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். கிளப்ரோத் யுரேனியம் (1789) மற்றும் சிர்கோனியம் (1789) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடிப்பு அல்லது இணை கண்டுபிடிப்பிலும் ஈடுபட்டார். டைட்டானியம் (1792), ஸ்ட்ரோண்டியம் (1793), சீரியம் (1803) மற்றும் குரோமியம் (1797) மற்றும் டெலூரியம் (1798) மற்றும் பெரிலியம் (1798) ஆகியவற்றின் முந்தைய கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியது.

ஆனால் அவரது சொந்த வேதியியல் ஆய்வு என்பது 1782-ம் ஆண்டு சிறப்பான விஷயம் ஆகும். இந்த ஆய்வு அவரை பெர்லினில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளியில் மருந்து மதிப்பீட்டாளர் என்ற பதவியைப் பெற அவருக்குப் பெரிதும்  உதவியது. அவர் பல்வேறு ராணுவ மற்றும் பிற பள்ளிகளில் வேதியியலைக் கற்பிக்கத் தொடங்கினார். மேலும் அவர் 1810 ம் ஆண்டு ஜெர்மனியில்  புதிதாக நிறுவப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கிளப்ரோத்தின் பல்வேறு பதவிகள்

கிளப்ரோத் பெர்லின் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும் இயக்குநராகவும் இருந்தார். அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி.இன்ஸ்டிட்யூட் டி பிரான்ஸ் மற்றும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆகியவற்றின் உறுப்பினராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

இளமை வாழ்க்கை

'துன்பமும் நம்பிக்கையும் - 1765 இல் கிளப்ரோத் இந்த வார்த்தைகளால் தனது இளமையின் சாரத்தை படம்பிடித்தார். கிளப்ரோத், ஜோஹன் ஜூலியஸ் கிளப்ரோத்தின் மூன்றாவது மகன். அவர் ஒரு ஏழை,  ஆனால் மரியாதைக்குரிய தையல்காரர். அவர் மத குருமார்களுக்காக வடிவமைக்கப்பட்டவர். கிளப்ரோத், வெர்னிகெரோட் பள்ளியில், நான்காண்டுகள் லத்தீன் மொழி பயின்றார். இருப்பினும், கிளப்ரோத்தின் பதினைந்தாவது பிறந்தநாளுக்குப் பிறகு, ஒரு விரும்பத்தகாத சம்பவம் அவரை வெர்னிகெரோட் லத்தீன் பள்ளியிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. இயற்கை அறிவியலுடனான அதன் தொடர்பின் காரணமாக, கிளப்ரோத் 1759 ஆம் ஆண்டில் ஒரு க்யூட்லின்பர்க் மருந்தகக் கடையில் பயிலுநர் ஆனார். அவரது மாஸ்டர் அவருக்கு சிறிதளவு, ஏதாவது கோட்பாட்டுப் பயிற்சி மற்றும் குறைவான ஓய்வு நேரத்தைக் கொடுத்தார்.

கிளப்ரோத்  தனது வாழ்நாளின் பெரும்பகுதியில்  மருந்தகத் தொழிலையே தனது வாழ்வாதாரத்துக்குப் பின்பற்றினார். 1759 ஆம் ஆண்டில், அவருக்கு 16 வயதாக இருந்தபோது, ​​அவர் குவெட்லின்பர்க்கில் பயிற்சி பெற்றார். 1764 இல், அவர் ஒரு பயணி ஆனார். குவெட்லின்பர்க்கில் (1759-1766) மருந்தகங்களில் பயிற்சி பெற்றார்; ஹனோவர் (1766–1768, ஆகஸ்ட் ஹெர்மன் பிராண்டுடன்); பெர்லின் (1768); மற்றும் டான்சிக் (1770). 1771 ஆம் ஆண்டில், கிளப்ரோத் தனது வணிகத்தின் மேலாளராக வாலண்டைன் ரோஸ் தி எல்டரிடம் பணிபுரிய பெர்லினுக்குச சென்றார்.

மூத்த மேலாளர் & ஆய்வு

ரோஸின் அவரது மருந்தகத்தில் மரணம் அடைந்தார். அதனைத்  தொடர்ந்து, கிளப்ரோத் மூத்த மேலாளராக ஆவதற்குத் தேவையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். ஏ.எஸ். மார்கிராஃபின் செல்வந்த மருமகளுடன் ஒரு அதிர்ஷ்டமான திருமணம் அவருக்கு சொந்தக் கடையை வாங்க உதவியது. 1780 ஆம் ஆண்டில், தனது  36 வயதில், கிளப்ரோத் புகழ்பெற்ற பகுப்பாய்வு வேதியியலாளர் ஆண்ட்ரியாஸ் சிகிஸ்மண்ட் மார்கிராஃப்பின் பணக்கார மருமகள் கிறிஸ்டியன் சோஃபி லெஹ்மனை மணந்தார். முதன்முதலில் பலவற்றில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு தொழிலுக்குப் பிறப்பித்த பீட்ஸில் இருந்து சர்க்கரையைப் பிரித்தெடுத்த முதல் நபர் மார்கிராஃப் ஆவார். அவரது திருமணத்திற்குப் பிறகு, கிளப்ரோத் மார்கிராஃப் என்பவரிடமிருந்து ஒரு மருந்தகத்தை வாங்கி தனது சொந்த ஆய்வகத்தை நிறுவினார். அவர் தனக்காக  நிறுவனத்தை வாங்கினார். அதன் பெயர் Apotheke zum Baren என்பதாகும். தனது நிறுவனமான அப்போதேக்கின் ஆய்வகத்தில் கிளப்ரோத் 1782 மற்றும் 1800 ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், கிளப்ரோத் 84 அறிவியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார். அந்த நேரத்தில் ஐரோப்பாவில் கைவினைஞர் வேதியியல் ஆய்வுகளின் மிகவும் உற்பத்தித் தளமாக அவருடைய கடை இருந்தது.

வேதியல் பேராசிரியர் கிளப்ரோத்

கிளப்ரோத் 1782 ஆம் ஆண்டு தொடங்கி, ஓபர்-கொலீஜியம் என்ற மருத்துவ பரிசோதனைக் குழுவின், மருந்தகத்தின் மதிப்பீட்டாளராக இருந்தார். அதன் பின்னர் 1787-ம் ஆண்டு கிளப்ரோத், ப்ருஷியன் ராயல் ஆர்ட்டிலரிக்கு வேதியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1788-ம் ஆண்டு முதல்,  கிளப்ரோத், பெர்லின் அகாடமி ஆஃப் சயின்ஸில் சம்பளம் பெறாத உறுப்பினரானார். 1800 ஆம் ஆண்டில், அவர் பெர்லின் அகாடமி ஆஃப் சயின்ஸில் ஊதியம் பெற்றுக்கொண்டு அதில் இயக்குநர் பதவி வகித்தார். பின்னர் கிளப்ரோத்  மருந்தகத்தை விற்றுவிட்டு, அகாடமிக்குச் சென்றார்.. அங்கு அவர் ஒரு புதிய ஆய்வகத்தை உருவாக்க பல்கலைக்கழக உறுப்பினர்களை சமாதானப்படுத்தினார். அது 1802 ம் ஆண்டு முடிந்ததும், கிளப்ரோத், தனது மருந்தக ஆய்வகத்திலிருந்து அனைத்து கருவிகளையும் புதிய கட்டிடத்திற்கு மாற்றினார். பெர்லின் பல்கலைக்கழகம் 1810 இல் நிறுவப்பட்டது. அங்கேயே அவர் வேதியியல் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

1817 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, ஜனவரி முதல் தேதியில் கிளப்ரோத் மாரடைப்பு ஏற்பட்டு பெர்லினில் இறந்தார்.

பங்களிப்புகள்

கிளப்ரோத் ஒரு துல்லியமான, மனசாட்சியுள்ள தொழிலாளி. கிளப்ரோத் பகுப்பாய்வு வேதியியல் மற்றும் கனிமவியல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் நிறைய செய்தார். அளவு முறைகளின் மதிப்பை அவர் பாராட்டியதால், அவர் பிரான்சுக்கு வெளியே லாவோசிரியன் கோட்பாடுகளின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவராக ஆனார். யுரேனியத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் கிளப்ரோத்; அதை முதலில் டோர்பெர்னைட்டில் கண்டறிந்தார். ஆனால் பிட்ச்பிளெண்டே என்ற கனிமத்தைக் கொண்டு தனது ஆராய்ச்சியின் பெரும்பகுதியைச் செய்தார்.(இந்த பிட்ச்பிளெண்டே  தனிமத்திளிருந்துதான் மேரி க்யூரி யுரேனியத்தைப் பிரித்து நோபல் பரிசு பெற்றார்) செப்டம்பர் 24, 1789 இல், பெர்லினில் உள்ள ராயல் பிரஷியன் அகாடமி ஆஃப் சயின்சஸுக்கு அவர் தனது கண்டுபிடிப்பை அறிவித்தார்.

கிளப்ரோத், 1789 ஆம் ஆண்டில் சிர்கோனியத்தையும் கண்டுபிடித்தார். அதை அதன் 'பூமி' சிர்கோனியா, ஆக்சைடு (ZrO2) வடிவத்தில் பிரித்தார். கிளப்ரோத் சிலோனில் இருந்து "ஹயசின்த்" என்று அழைக்கப்படும் கனிமத்தின் பிரகாசமான நிற வடிவத்தை பகுப்பாய்வு செய்தார். அவர் புதிய தனிமத்திற்கு சிர்கோனியம் என்ற பெயரை அதன் பாரசீகப் பெயரான "சர்குன்", என்பதிலிருந்து. அதாவது அது தங்க நிறத்தின் இருப்பதால் அதே பெயரை வழங்கினார்.  கிளப்ரோத் யுரேனியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றை தனித்தனி தனிமங்களாக வகைப்படுத்தினார், இருப்பினும் அவர் தூய உலோக நிலையில் அவற்றில் எதையும் பெறவில்லை. 1803 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஜான்ஸ் ஜேக்கப் பெர்சிலியஸ் மற்றும் வில்ஹெல்ம் ஹிசிங்கர் போன்ற அதே நேரத்தில், கிளப்ரோத் ஒரு அரிய பூமித் தனிமமான சீரியத்தை (1803) சுயாதீனமாக கண்டுபிடித்தார்.

கார்ன்வாலின் வில்லியம் கிரிகோர் 1791 ஆம் ஆண்டில் டைட்டானியம் தனிமத்தை முதன்முதலில் கண்டறிந்தார். மெனச்சன் பள்ளத்தாக்கில் இருந்து தாது மனைட்டில் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்ததாக சரியாக முடிவு செய்தார். அவர் "மெனாசனைட்" என்ற பெயரை முன்மொழிந்தார், ஆனால் அவரது கண்டுபிடிப்பு சிறிய கவனத்தை ஈர்த்தது. 1795 இல் ஹங்கேரியில் இருந்து தாது ரூட்டில் அறியப்படாத தனிமத்தின் ஆக்சைடு இருப்பதை கிளப்ரோத் சரிபார்த்தார். கிளப்ரோத் "டைட்டானியம்" என்ற பெயரைப் பரிந்துரைத்தார். இரண்டு வெவ்வேறு தாதுக்களில் இருந்து மெனாசனைட் மற்றும் டைட்டானியம் ஒரே தனிமம் என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது, மேலும் கிளப்ரோத்தின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது புதிதாக அங்கீகரிக்கப்பட்ட டெல்லூரியம், ஸ்ட்ரோண்டியம் மற்றும் குரோமியம் ஆகிய தனிமங்களின் கலவைகள் உட்பட, அதுவரை முழுமையாக அறியப்படாத பல பொருட்களின் கலவையை கிளப்ரோத் தெளிவுபடுத்தினார். குரோமியம் 1797 ஆம் ஆண்டில் லூயிஸ் நிக்கோலஸ் வாக்வெலின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1798 ஆம் ஆண்டில் கிளப்ரோத் மற்றும் டோபியாஸ் லோவிட்ஸ் ஆகியோரால் யூரல் மலைகளில் இருந்து ஒரு கனிமத்தில் சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லூரியத்தின் இருப்பு முதன்முதலில் 1783 இல் ட்ரான்சில்வேனியன் தங்க மாதிரிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த ஆஸ்திரிய சுரங்கப் பொறியாளரான ஃபிரான்ஸ்-ஜோசப் முல்லர் வான் ரீசென்ஸ்டீனால் பரிந்துரைக்கப்பட்டது. டெல்லூரியம் 1789 இல் ஹங்கேரிய பால் கிடாய்பெல் என்பவரால் சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்டது. முல்லர் 1796 இல் கிளப்ரோத்துக்கு தனது கனிமத்தில் சிலவற்றை அனுப்பினார். கிளப்ரோத் புதிய பொருளைத் தனிமைப்படுத்தி 1798 இல் புதிய உறுப்பு டெல்லூரியத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தினார். அவர் முல்லரை அதன் கண்டுபிடிப்பாளராகக் கருதி, பரிந்துரைத்தார். கனரக உலோகம் "டெல்லஸ்", லத்தீன் மொழியில் 'பூமி' என்று பெயர்.

1790 ஆம் ஆண்டில் அடேர் க்ராஃபோர்ட் மற்றும் வில்லியம் க்ரூக்ஷாங்க் ஆகியோர் ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்ட்ரோண்டியன் அருகே காணப்பட்ட ஸ்ட்ரோண்டியானைட் என்ற கனிமமானது பேரியம் சார்ந்த கனிமங்களிலிருந்து வேறுபட்டது என்று தீர்மானித்தனர். கிளப்ரோத் ஸ்ட்ரோண்டியம் சேர்மங்கள் மற்றும் கனிமங்களின் குணாதிசயங்களில் ஈடுபட்ட பல விஞ்ஞானிகளில் ஒருவர். கிளப்ரோத், தாமஸ் சார்லஸ் ஹோப் மற்றும் ரிச்சர்ட் கிர்வான் ஆகியோர் ஸ்ட்ரோண்டியானைட்டின் பண்புகள், ஸ்ட்ரோண்டியத்தின் சேர்மங்களைத் தயாரித்தல் மற்றும் பேரியத்தில் இருந்து அவற்றின் வேறுபாட்டைப் பற்றி சுயாதீனமாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். செப்டம்பர் 1793 இல், கிளப்ரோத் பேரியத்திலிருந்து ஸ்ட்ரோண்டியத்தைப் பிரிப்பது குறித்தும், 1794 இல் ஸ்ட்ரோண்டியம் ஆக்சைடு மற்றும் ஸ்ட்ரோண்டியம் ஹைட்ராக்சைடு தயாரிப்பது குறித்தும் வெளியிட்டார். இதற்கிடையில் 1808 இல், ஹம்ப்ரி டேவி முதன்முதலில் அதன் தூய தனிமத்தை வெற்றிகரமாக தனிமைப்படுத்தினார்.

லூயிஸ் நிக்கோலஸ் வாக்வெலின் 1798 இல் மரகதம் மற்றும் பெரிலுக்குப் பொதுவான ஒரு புதிய தனிமம் இருப்பதாக அறிவித்தார்.  மேலும் அதற்கு "குளுசின்" என்று பெயரிடுமாறு பரிந்துரைத்தார். கிளப்ரோத் ஒரு புதிய தனிமம்  இருப்பதை உறுதிப்படுத்தினார்.  மேலும் "பெரிலியா" என்று பரிந்துரைப்பதன் மூலம் அதன் பெயரின் மீது நீண்ட மற்றும் நீடித்த விவாதத்தில் ஈடுபட்டார். ஃபிரெட்ரிக் வொஹ்லர் மற்றும் அன்டோயின் புஸ்ஸி ஆகியோரால் சுதந்திரமாக இந்த தனிமம் முதன்முதலில் 1828-ம் ஆண்டு தனிமைப்படுத்தப்பட்டது. 1949 இல் மட்டுமே IUPAC பெரிலியம் என்ற பெயருக்கு ஆதரவாக பிரத்தியேகமாக ஆட்சி செய்தது.

வெளியீடுகள்

கிளப்ரோத் பெய்ட்ரேஜ் சூர் கெமிஷென் கென்ட்னிஸ் டெர் மினெரல்கோர்பர் (5 தொகுதிகள், 1795-1810) மற்றும் கெமிஷே அபாண்ட்லுங்கன் ஜெமிஷ்டென் இன்ஹால்ட்ஸ் (1815) ஆகியவற்றில் 200 க்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சேகரித்து விரிவாக வெளியிட்டார். அவர் ஒரு Chemisches Wörterbuch (1807-1810) ஐ வெளியிட்டார், மேலும் F. A. C. Gren's Handbuch der Chemie (1806) இன் திருத்தப்பட்ட பதிப்பைத் திருத்தினார்.

பெருமைகள்

  1. கிளப்ரோத் 1795 இல் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டனில் வெளிநாட்டு உறுப்பினரானார்.
  2. 1804 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளிநாட்டு உறுப்பினரானார். அவர் இன்ஸ்டிட்யூட் டி பிரான்ஸைச் சேர்ந்தவர்
  3. சந்திரனில் உள்ள கிளப்ரோத் பள்ளம் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
  4. 1823 ஆம் ஆண்டில், தாவரவியலாளர் கார்ல் சிகிஸ்மண்ட் குந்த், மத்திய அமெரிக்காவிலிருந்து க்ளாப்ரோதியா என்ற பெயரில் பூக்கும் தாவரங்களின் வகையை (லோசேசி குடும்பத்தைச் சேர்ந்தது) வெளியிட்டார்.

யுரேனியம் உண்மைகள்

இத்தாலியில் நேபிள்ஸ் அருகே கி.பி.79-க்கு முந்தைய 1% யுரேனியம் ஆக்சைடு கொண்ட மஞ்சள் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. கிளப்ரோத் பிட்ச்பிளெண்டில் உள்ள அறியப்படாத தனிமத்தை அங்கீகரித்து 1789 இல் உலோகத்தை தனிமைப்படுத்த முயன்றார். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ் கிரகத்திற்கான தனிமத்திற்கு அவர் பெயரிட்டார்.

யுரேனியம் ஒரு வெள்ளி (வெள்ளை) நிறம் கொண்டது. அது பலவீனமான கதிரியக்க ரசாயன தனிமம்.  U அதன் குறியீடு. அணு எண் 92. இது கால அட்டவணையின் ஆக்டினைடு தொடரில் உள்ள வெள்ளி-வெள்ளை உலோகமாகும். ஒரு யுரேனியம் அணுவில் 92 புரோட்டான்கள் மற்றும் 92 எலக்ட்ரான்கள் உள்ளன, அவற்றில் 6 வேலன்ஸ் எலக்ட்ரான்கள். யுரேனியம் பலவீனமான கதிரியக்கமானது. ஏனெனில் அதன் அனைத்து ஐசோடோப்புகளும் நிலையற்றவை. இது இயற்கையாகவே மண், பாறை மற்றும் நீர் ஆகியவற்றில் ஒரு மில்லியனுக்கு ஒரு சில பகுதிகளின் குறைந்த செறிவுகளில் நிகழ்கிறது, மேலும் யுரேனைட் போன்ற யுரேனியம் தாங்கும் கனிமங்களிலிருந்து வணிக ரீதியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

யுரேனியம் தாது பல வழிகளில் வெட்டப்படுகிறது: திறந்த குழி, நிலத்தடி, உள்-சிட்டு கசிவு மற்றும் போர்ஹோல் சுரங்கம் மூலம் யுரேனியம் ஆரஞ்சு-சிவப்பு முதல் எலுமிச்சை மஞ்சள் நிறங்களை உருவாக்கும். யுரேனியம் கண்ணாடியில் வண்ணப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாதுக்களில் உள்ள யுரேனியம் வேதியியல் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு யுரேனியம் டை ஆக்சைடு அல்லது தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய பிற இரசாயன வடிவங்களாக மாற்றப்படுகிறது. யுரேனியம் புகைப்பட இரசாயனங்களிலும், மேடை விளக்கு விளக்குகளுக்கான விளக்கு இழைகளிலும், செயற்கைப் பற்களின் தோற்றத்தை மேம்படுத்தவும், தோல் மற்றும் மரத் தொழில்களில் கறை மற்றும் சாயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. யுரேனியம் உப்புகள் பட்டு அல்லது கம்பளியின் mordants ஆகும்.

யுரேனைல் அசிடேட் மற்றும் யுரேனைல் ஃபார்மேட் ஆகியவை டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான்-அடர்த்தியான "கறைகளாக" பயன்படுத்தப்படுகின்றன, அல்ட்ராதின் பிரிவுகளில் உயிரியல் மாதிரிகளின் மாறுபாட்டை அதிகரிக்கவும் மற்றும் வைரஸ்கள், தனிமைப்படுத்தப்பட்ட செல் உறுப்புகள் மற்றும் மேக்ரோமோலிகுல்களின் எதிர்மறை கறைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

டைட்டானியம் உண்மைகள்

டைட்டானியம் 1791 இல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1795 இல் மார்ட்டின் ஹென்ரிச் கிளப்ரோத் என்பவரால் பெயரிடப்பட்டது. இது முதன்முதலில் 1887 இல் அசுத்தமான வடிவத்தில் தயாரிக்கப்பட்டது, ஆனால் 1910 ஆம் ஆண்டு வரை மேத்யூ ஏ. ஹண்டர் டைட்டானியம் டெட்ராகுளோரைடை (TiCl4 ஐ) சூடாக்கும் வரை தூய உலோகமாகத் தயாரிக்கப்படவில்லை.

டைட்டானியம் என்பது Ti மற்றும் அணு எண் 22 ஐக் கொண்ட ஒரு வேதியியல் உறுப்பு. இது வெள்ளி நிறம், குறைந்த அடர்த்தி மற்றும் அதிக வலிமை கொண்ட ஒரு பளபளப்பான உலோகமாகும். இது கடல் நீர், அக்வா ரெஜியா மற்றும் குளோரின் ஆகியவற்றில் உள்ள அரிப்பை மிகவும் எதிர்க்கும். தாவரங்கள் மற்றும் விலங்குகள், இயற்கை நீர் மற்றும் ஆழ்கடல் அகழ்வுகள் மற்றும் விண்கற்கள் மற்றும் நட்சத்திரங்களிலும் டைட்டானியம் உள்ளது.

பெரும்பாலான உலோகங்கள் மற்றும் சில உலோகங்கள் அல்லாத உலோகக்கலவை முகவராக டைட்டானியம் முக்கியமானது. இந்த உலோகக் கலவைகளில் சில டைட்டானியத்தை விட அதிக இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளன. டைட்டானியம் பல சூழல்களில் சிறந்த அரிப்பு-எதிர்ப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் செயலற்ற ஆக்சைடு மேற்பரப்பு படம் உருவாகிறது.

டைட்டானியம் இரும்பு மற்றும் நிக்கல் போன்ற பிற மாறுதல் உலோகங்களை ஒத்திருக்கிறது. அதிக வலிமை, குறைந்த அடர்த்தி மற்றும் சிறந்த அரிப்பு-எதிர்ப்பு ஆகியவற்றின் கலவையானது விமானம், விண்கலம், ஏவுகணைகள் மற்றும் கப்பல்களின் பல பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது புரோஸ்டெடிக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது சதைப்பற்றுள்ள திசு மற்றும் எலும்புடன் செயல்படாது. டைட்டானியம் எஃகில் டீஆக்ஸைடிசராகவும், தானிய அளவைக் குறைக்க பல இரும்புகளில் கலப்புச் சேர்க்கையாகவும், கார்பன் உள்ளடக்கத்தைக் குறைக்க துருப்பிடிக்காத எஃகிலும், தானிய அளவைச் செம்மைப்படுத்த அலுமினியத்திலும், கடினப்படுத்துதலை உருவாக்க தாமிரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

(டிச. 1 - மார்ட்டின் ஹென்ரிச் கிளப்ரோத் பிறந்தநாள்) 

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

 



Read in source website

உலகெங்கும் இன்று ஒருவழிப்பாதைகள் உள்ளன; ஆனால், முதல் ஒருவழிப்பாதை உருவானது, குழந்தைகள் அறிவியல் ஆர்வத்தினால் என்பது ஆச்சரியம் தரும் செய்தி. 1850-களில் லண்டன் ராயல் கல்வியகம் உருவான புதிதில், ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்தவெளி அரங்கில் பல ஆய்வுகளை மைக்கெல் ஃபாரடே குழந்தைகளுக்குச் செய்துகாட்டத் தொடங்கினார்.

இதனால் லண்டனின் அல்பமாரேல் வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல், அந்த வீதியை உலகின் முதல் ஒருவழிப்பாதையாக மாற்றியது. ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் ஆய்வகம் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக்கியதும் இந்த நிகழ்வுதான்.

ஒரு குழந்தை, அறிவியல் அறிஞராகப் பரிணமிப்பதற்கான அடித்தளம் மாணவப் பருவத்தில் பள்ளியிலேயே விதைக்கப்பட வேண்டும். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்ற தன் கேள்விக்குக் கரும்பலகையில் விடை தந்ததுடன், குளக்கரைக்கு அழைத்துச் சென்று நேரிலும் விளக்கம் அளித்த அறிவியல் ஆசிரியர், தன் வாழ்வின் லட்சியம் அறிவியல் தேடல்தான் என்பதை உணர்த்தியதாக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவுகூர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் உரையாடலின் தேவை: பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்ட தகவல்களை மனப்பாடம் செய்து, அதை மதிப்பெண்ணாக மாற்றும் கல்வி முறையிலிருந்து விலகி, மாணவர்களுடனான திறந்த உரையாடலை நோக்கி நாம் நகர வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் கூட்டிணைவான ‘ஸ்டெம்’ (STEM), உலக அறிவியல் கல்வியின் அங்கமாக இன்று ஏற்கப்பட்டுள்ளது.

அது பள்ளிக் கல்வியில் இணைக்கப்பட வேண்டும். ஆனால், கல்லூரியில் மட்டும் வெறும் சடங்குபோல் ‘ஸ்டெம்’ அமல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அவற்றிலும் தேர்வுமைய ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுவதால், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி சுயமான தேடல்களுக்கு இட்டுச்செல்லாத இடங்களாகவே பள்ளிகள் உள்ளன.

ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளின் மாணவர் பருவம்தான் அறிவியல், புதிய சிந்தனை, கட்டமைப்பியல், படைப்பாக்கத் திறன் முளைவிடும் பருவம். உலகெங்கும் இந்த வகுப்புகளின் ஊடாகத்தான் ‘ஸ்டெம்’ கல்வி பயணிக்கிறது. இன்று, நம் பள்ளிக் கல்வியில் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பாடப்புத்தக அறிவை நம்பும் வகுப்புகளாக ஆறு முதல் எட்டாம் வகுப்புக் கல்வி சுருக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், நமக்கு உடனடித் தேவை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக் கூட்டுக் கல்வியான ‘ஸ்டெம்’ சார்ந்த திறந்தவெளி உரையாடல் அமைப்புதான். பள்ளிகள்தோறும் அதை உருவாக்குவது கல்விச் சிக்கல்களைத் தீர்த்திட உதவும். செயல்பாட்டு ஆக்கத்திறன், கை-மூளை இயக்க இயல்பூக்கம் ஆகியவை பள்ளிப் பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்புப் பருவத்தில் ‘ஸ்டெம்’ கல்வி என்பதே அதற்கான தீர்வு.

அறிவியல் மனோபாவம்: போலிச் சாமியார்களின் அட்டகாசங்கள், சோதிடப் பரிகார அவலங்கள், வாஸ்து முதல் நரபலிவரை நடந்தேறும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல்–சமூகச் சிந்தனை மலர்ச்சி இன்றைய தேவை என, அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையில் பி.என்.ஹங்கர், பி.எம்.பார்கவா ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 1981இல் ‘இந்திய அறிவியல் மனப்பான்மை அறிக்கை’யில் குறிப்பிட்டது.

மத்திய-மாநில அரசுகளுக்கு 16 அம்சப் படிநிலைகளை அக்குழு பரிந்துரைத்தது: ஒவ்வொரு பள்ளியிலும் வாரம்தோறும் திறந்தவெளிச் செயல்பாடாக, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வலர்கள், வல்லுநர்கள் கலந்துரையாடும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த அம்சங்களில் முதன்மையானது. அன்றாட வாழ்க்கை, இயற்கை நிகழ்வுகள், உடலியல் தொடர்பான மாணவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு, தேடலை விரிவுபடுத்துவதே அறிவியல் மனோபாவம் கொண்ட பகுத்தறிவுச் சமூகத்தை உருவாக்குவதற்கான வழியாகும்.

படைப்பாக்க அறிவியல்: 21ஆம் நூற்றாண்டுக் கல்வியின் நோக்கங்களில் முக்கியமானது புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குதல். நான்காம் தொழிற்புரட்சி காலத் திறன்களை வளர்த்தல், இந்தியாவின் நம் காலத்துக் கண்டுபிடிப்பாளர்களான அஜய்பாட் (பென்டிரைவ்), சபீர் பாட்டியா (ஹாட் மெயில்) போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், தொழில்நுட்பத் தேடலுக்கான பொறி. அவர்களது ஆர்வம் இந்தியப் பள்ளிப் பருவத்திலேயே விதைக்கப்பட்டதை விவரிப்பவையாக உள்ளன. அந்த வகையில் படைப்பாக்க அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கிட ‘ஸ்டெம்’ ஏதோ ஒரு வடிவில் பள்ளிக் கல்விக்குள் நுழைவது அவசியமாகும்.

ஆசிரியர் - மாணவர் உறவு: வெறும் சொற்களாகவும் படங்களாகவும் இருக்கும் பாடப்புத்தக அம்சத்தை, பலவகைச் சோதனைகள் வழியே புதிய கற்பித்தல் முறைகளில் திறம்பட மாணவர்களிடம் கொண்டுசெல்லும் ஆசிரியர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களது திறன்களை மாணவர்களின் தேடல் நிறைந்த கேள்விகளோடு இணைக்கும் திறந்தவழி உறவுப் பாலத்தை ‘ஸ்டெம்’ கல்விமுறையில் வழங்க முடியும் என்பது அடுத்த பரிமாணம்.

இறுகிப்போன வகுப்பறை எனும் சிறைக் கூண்டுகளில் இருந்து கல்வியை மீட்டெடுத்து, பட்டாம்பூச்சிகளின் தேடலுக்கு வான்வெளியைப் பரிசளிக்கும் ‘ஸ்டெம்’ கல்விமுறையின் ஆற்றல்மிக்க வழிகாட்டும் செயல்வீரர்களாக ஆசிரியர்களுடன் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களும் ஆர்வலர்களும் கைகோக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். - ஆயிஷா இரா. நடராசன் கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com



Read in source website

சீனாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று சின்ஜியாங்; அதன் தலைநகர் உரும்கி. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த நகரம் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கில் இருக்கிறது. இதன் அடுக்ககம் ஒன்றில் நவம்பர் 24 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பத்துப் பேர் இறந்துபோயினர்.

தீயணைப்புப் படையினர் வருவதற்குத் தாமதமாயிற்று என்றனர் சிலர்; வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களால் பூட்டிய கதவுகளைத் தாண்டி வெளியேற முடியவில்லை. இரண்டுக்கும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளே காரணம் என்றனர் சமூக ஊடகர்கள். அண்டை அயலில் வசித்தவர்கள் பதிவிட்ட காணொளிகள் வேகமாய்ப் பரவின. அடுத்த நாள் நகரவாசிகள் அணிதிரண்டனர். மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கூடவே, அரசு ஊரடங்கைக் கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இது உரும்கியோடு முடியவில்லை.



Read in source website

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வழியாக மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகளை நாடும் போக்கு அதிகரித்துவருவது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஷங்கர் (36) என்பவர், மன அழுத்தத்துக்கு இன்ஸ்டகிராம் வழியாக உளவியல் சிகிச்சை எனும் பெயரில், சஞ்சனா (28) என்பவர் மூன்றேகால் லட்சம் ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றியதாகப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை ரத்துசெய்யக் கோரிய ‘நல சிகிச்சையாளர்’ சஞ்சனாவின் வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தும் தெரபிஸ்ட்கள் பலரும் போலிகளாக இருக்கிறார்கள். குறிப்பாக, ஏராளமானோர் உளவியல் சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு உடனடியாக ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.



Read in source website