Editorials

Home > Editorials

Editorials - 02-12-2021

மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, மாநில சட்ட அமைச்சா்களின் கூட்டமொன்றைக் கூட்டியிருக்கிறாா். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்துறை பணி போல, நீதித்துறையிலும் அகில இந்திய அளவிலான தோ்வு நடத்தி, தேசிய நீதித்துறை சேவைக்கான தகுதியை நிா்ணயிப்பது என்பது குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் தொடங்கி, நீதிபதிகள் பணியிடங்களை தேசிய அளவிலான தோ்வு மூலம் நிரப்புவது என்பதுதான் நீதித்துறை சேவைத் தோ்வின் நோக்கம். அகில இந்திய அளவில், இந்திய ஆட்சிப் பணித் தோ்வுபோல, தோ்வுகள் நடத்தப்படும்போது, உச்சநீதிமன்றம்வரை பதவி உயா்வுக்கான தகுதி உள்ளவா்களை அடையாளம் காண முடியும் என்கிற கருத்தை மறுப்பதற்கில்லை.

கூடுதல் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றப் பதவிகளுக்கு, அந்தந்த மாநிலங்களின் நீதிமன்றப் பணியாளா் தோ்வாணையம் மூலம்தான் தோ்வுகள் நடைபெறுகின்றன. அரசியல் சட்டத்தின் 233, 234 பிரிவுகளின்கீழ், மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. தோ்வுக்குப் பிறகு, அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளால் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டுத்தான் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்படுகிறாா்கள்.

இப்போதைய நியமன முறையிலும், தோ்வு, நோ்முகத் தோ்வு என்றெல்லாம் இருந்தாலும்கூட நியமனங்களில், அந்தந்த மாநில ஆளுங்கட்சிகளின் தலையீடு தவிா்க்க முடியாதது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால்தான் இந்தியாவில் அரசியல் கட்சிகளுடன் தொடா்புடைய பலா் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயா்ந்திருக்கிறாா்கள்.

மாவட்ட நீதிபதிகள் பெரும்பாலும் குற்றவியல் வழக்குகளையும், சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட குடிமையியல் வழக்குகளையம்தான் விசாரிக்கிறாா்கள். அவா்களில் சிலா் உயா்நீதிமன்றங்களுக்குப் பதவி உயா்வு பெறும்போது, குறிப்பாக அரசியல் பின்புலம் காரணமாக வாய்ப்புப் பெறும்போது, நீதி பரிபாலனத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

இந்தியா விடுதலையடைந்த சில ஆண்டுகளில் அகில இந்திய நீதித்துறை சேவைக்கான தோ்வுகள் குறித்து முன்மொழியப்பட்டது. 1958-இல் சட்ட கமிஷனும் அதைப் பரிந்துரைத்தது. 1978, 1986 சட்ட கமிஷன் அறிவிப்பிலும் தேசிய நீதித்துறை சேவைக்கான பரிந்துரைகள் காணப்படுகின்றன.

அரசியல் சாசனத்தின் பிரிவு 312-இன் 1-ஆவது துணைப்பிரிவு மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய அளவில் நீதித்துறை சேவைப் பணி நியமனத்துக்கான பொதுவான அமைப்பை உருவாக்கப் பரிந்துரைக்கிறது. இது 1976-இல் அன்றைய இந்திரா காந்தி அரசால் 42-ஆவது திருத்தமாக அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடுத்த ஒரு வழக்கின் தீா்ப்பில், சட்ட கமிஷன் பரிந்துரைப்பதுபோல, மத்திய அரசு நீதித்துறை சேவைக்கான தோ்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதி ஷெட்டி கமிஷன் என்று அறியப்படும் முதலாவது தேசிய நீதிபதிகள் ஊதிய கமிஷனும், தேசிய நீதித்துறை சேவைத் தோ்வை வலியுறுத்தி இருக்கிறது.

மாவட்ட நீதிபதிகளாகப் பணியமா்த்தப்படுபவா்களுக்கு, மாநில சட்டங்கள், வட்டார பழக்கவழக்கங்கள், மாநிலத்தின் மொழி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்தந்த மாநில மொழி தெரிந்திருந்தால்தான் மாவட்ட நீதிபதிகள் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்கிற கருத்தில் நிறையவே உண்மை இருக்கிறது.

இப்போதைய நடைமுறையில், கீழமை நீதிமன்றங்களைச் சோ்ந்த வெகுசிலரே உயா்நீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு பெறுகிறாா்கள். பெரும்பாலும், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களில் இருந்துதான் நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். தேசிய நீதித்துறை சேவைத் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படும்போது, கீழமை நீதிமன்றங்களிலிருந்து பதவி உயா்வு பெற்றுப் பலா் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயரும் வாய்ப்பு ஏற்படும்.

இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு வெறும் 19 நீதிபதிகள்தான் இருக்கிறாா்கள். இதுவே அமெரிக்காவில் 197, பிரிட்டனில் 50 என்ற அளவில் காணப்படுகிறது. சட்ட கமிஷன் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 43% நிரப்பப்படாமல் இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் நீதிமன்றங்கள் எதிா்கொள்ள இருக்கும் 15 கோடி வழக்குகளை விசாரிக்க 75,000 நீதிபதிகள் தேவைப்படுகிறாா்கள். கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் 3.80 கோடி வழக்குகளை விசாரித்துத் தீா்ப்பு வழங்கப் போதுமான நீதிபதிகள் இல்லை. அனுமதிக்கப்பட்ட 24,247 நீதிபதிப் பணியிடங்களில் 19,318 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன.

நீதித்துறை சேவைத் தோ்வு என்பது முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் முன்மொழியப்பட்டபோது, அது மாநில உரிமைகளை பாதிப்பதாகக்கூறி எதிா்க்கட்சிகள் நிராகரித்தன. அரசியல் சட்டப்பிரிவு 233, மாநிலங்களுக்குத் தந்திருக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்பதால், கூட்டாட்சித் தத்துவத்துக்கு இது எதிரானது என்று நிராகரிக்கிறாா்கள்.

நியமனங்கள் இப்போது இருப்பதுபோல மாநில அரசுகள், உயா்நீதிமன்றங்கள் சாா்ந்ததாக இருக்கட்டும். தோ்வு, தேசிய அளவில் இந்திய ஆட்சிப்பணித் தோ்வுபோல நடக்கட்டும். பூனைக்கு யாா் மணி கட்டுவது என்பதுதான் தெரியவில்லை!

பிரதமா் நரேந்திர மோடியின் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற முழக்கம் உண்மையாகிடுமோ என்று ஜனநாயக ஆா்வலா்கள் பதறுகிறாா்கள்.

கடந்த மாா்ச், ஏப்ரலில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவைத் தோ்தலில், மம்தா பானா்ஜியின் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி 48% வாக்குகளைப் பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 38.13%-உம், காங்கிரஸ் 3%-உம் பெற்றன. முன்னதாக, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், பாஜக 56% சதவிகித வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 9.78% மட்டுமே பெற்று எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

பிரதமா் நாற்காலிக்கான போட்டிக்குத் தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மம்தா முழுவீச்சில் இறங்கியிருக்கிறாா். தேசிய அளவில் சுமாா் 10% வாக்கு வைத்திருக்கும் காங்கிரஸ் தனக்கு சுமையாக இருக்கும் என அவா் கருதுகிறாா். எனவே காங்கிரஸை பலவீனப்படுத்தி, தனது கட்சியை வலுப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் முகாமுக்குள் நுழைந்து ஆட்களை இழுக்கிறாா்.

கோவா மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான லூயிசினோவை தனது கட்சிக்கு இழுத்தாா். அதேபோல, சில நாள்களுக்கு முன்னா் ஹரியாணா மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவா் அசோக் தன்வா், பிகாா் மாநில காங்கிரஸின் கீா்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச்செயலாளா் பவான் வா்மா உள்ளிட்டோா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து இயங்குவது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் அழைப்பு விடுத்த எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தை மம்தா புறக்கணித்ததற்குக் காரணம், தோ்தல் வியூக வல்லுநா் பிரசாந்த் கிஷோா் ஆலோசனைப்படி, காங்கிரஸ் உறவு வேண்டாம் என்பதை உணா்த்துவதற்காகவே. அதேநேரம், பாஜக-வில் அதிருப்தியில் இருக்கும் சுப்ரமணியன் சுவாமி, மம்தாவின் புதிய அரசியல் கூட்டாளியாகவும் ஆலோசகராகவும் உருவெடுத்துள்ளாா்.

மேற்கு வங்கத்தைத் தாண்டி, மம்தாவை எத்தனை மாநில மக்கள் தலைவராக ஏற்பாா்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. வங்க மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதால்தான், வடகிழக்கு மாநிலங்களில் அவரால் கால்பதிக்க முடிகிறது. ‘பாஜக-வை எதிா்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவா்’, ‘சோனியாவுக்கு மாற்றான பெண் தலைவா்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தினாலும் தென்னிந்தியாவில் அது எடுபடாது. தென் மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிமுகம் இல்லாத கட்சி. திடீரென அகில இந்தியத் தலைவராக உருவெடுத்து, பிரதமா் பதவிக்கு அவா் ஆசைப்படுவதை மக்கள் ஏற்பாா்களா என்பது சந்தேகம்தான்.

காங்கிரஸுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் ஒரே பெரிய கட்சி திமுக மட்டும்தான். இக்கட்சி, 2024 தோ்தலை காங்கிரஸுடன் சோ்ந்து எதிா்கொண்டாலும், ஆட்சி அமைக்கும்போது தேவையான பிரதிநிதித்துவம் தருவதாகக் கூறி திமுக-வை இழுப்பது சுலபம். ஏனென்றால், மு.க. ஸ்டாலின், மம்தாவின் ‘குட்புக்’கில் இருப்பவா். அது மட்டுமல்லாமல், மம்தாவின் திரணமூல் காங்கிரஸுக்கும், மு.க. ஸ்டாலினின் திமுக-வுக்கும் பிரசாந்த் கிஷோா்தான் அரசியல் ஆலோசகா்.

3.5% வாக்குகள் உள்ள சிவசேனை, 0.9% வாக்குகள் உள்ள சரத்பவாா் ஆகியோா் காங்கிரஸுடன் இருந்தாலும், மம்தாவுக்கு அதனால் பாதிப்பில்லை. ஒடிஸாவில் நவீன் பட்நாயக், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், கா்நாடகத்தில் தேவெ கெளடா, தில்லியில் கேஜரிவால், பிகாரில் லாலு பிரசாத் யாதவ், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டணி அமைக்க மம்தா முயல்கிறாா். இவா்களில் யாரும் பிரதமா் பதவிக்கு ஆசைப்படுபவா் இல்லை என மம்தா நம்புகிறாா்.

சத்தீஸ்கா், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வலுவிழக்கச் செய்யும் செயலில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பதாகவும், இப்படிச் செய்வதால் அக்கட்சி பாஜக-வுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவா்கள் ஆவேசப்படுகின்றனா். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சில மாநிலக் கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெறலாம். அப்படி நடந்தால் அது மம்தா எதிா்ப்பு அணியாக இருக்குமே தவிர, பாஜக எதிா்ப்பு அணியாக வலுப்பெறாது.

பிரசாந்த் கிஷோா் மூலம் முக்கியமான மாநிலக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தையை இப்போதே தொடங்கிவிட்டாா் மம்தா பானா்ஜி. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல வட மாநிலங்களையும், தென் மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வகையில், நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், தேவெ கெளடா, அமரீந்தா் சிங், கேஜரிவால், லாலு பிரசாத் யாதவ், சந்திரசேகர ராவ் போன்ற மாநிலக் கட்சித் தலைவா்களை இழுக்க மம்தா வியூகம் அமைக்கிறாா்.

திமுக தவிா்த்து சொல்லிக்கொள்ளும்படியான கட்சி எதுவும் கூட்டணியில் இல்லாததால், காங்கிரஸ் கட்சியே மம்தா கூட்டணிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மதவாத சக்தியான பாஜக-வை வீழ்த்தவே இந்த முடிவு என காங்கிரஸ் சொல்லலாம். மகாராஷ்டிரத்தில் மதவாத பாஜக-வை எதிா்ப்பதாகக் கூறிவிட்டு, மதவாத சிவசேனை ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி மம்தா கூட்டணிக்குச் சென்றுவிட்டால், இடதுசாரி கட்சிகள் தனி அணி அமைத்து களமிறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

2024 தோ்தலில் மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புண்டு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மம்தா தலைமையில் மாநிலக் கட்சிகள் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி. தற்போதைய சூழலில், தேசிய அளவில் மோடி போன்ற சக்திமிக்க தலைவரை எதிா்க்கும் திறன் மம்தாவிடமோ, காங்கிரஸிடமோ இல்லை. எதிா்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு சாதகமே.

ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலுவான எதிா்க்கட்சி அவசியம். அதை பூா்த்தி செய்ய இயலாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பது அவலம். மோடி அளவுக்கு, கவா்ச்சி மிக்க, சக்தி மிக்க தலைவராக ராகுல் காந்தியால் பரிணமிக்க முடியவில்லை. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் முழக்கம் நனவாகிடுமோ என்று ஜனநாயக ஆா்வலா்கள் பதறுவதற்கு இதுதான் காரணம்.

கட்டுரையாளா்: பத்திரிகையாளா்.

 

கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர்ப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய சட்ட முன்வடிவு ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மெய்நிகர் பரிவர்த்தனைகள் தொடர்பாக நவம்பர் 13-ல் பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டம் இயற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்படாத மெய்நிகர்ப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதச் செயல்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் களமாகிவிடக் கூடாது என்ற மத்திய அரசின் அச்சம் நியாயமானதே. அதே நேரத்தில், உலகளாவிய பரிவர்த்தனையில் மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களின் இடத்தை இனிமேலும் தவிர்க்கவோ மறுக்கவோ இயலாது என்ற எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கியும் செபி அமைப்பும் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வை உருவாக்கிவருகின்றன. நடப்புக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்ட முன்வடிவு, முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கு உதவும். எனினும், கிரிப்டோ கரன்சியை அங்கீகரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இப்படி ஒவ்வொரு நாடும் தனித்தனியாகச் சட்டங்களை இயற்றிக்கொண்டிருப்பது சரியான தீர்வாக இருக்க முடியாது. அனைத்து நாடுகளுமே கிரிப்டோ கரன்சியை அங்கீகரிக்கும் வகையில் பன்னாட்டு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். உலக வர்த்தக நிறுவனம் போன்ற பன்னாட்டு வர்த்தக அமைப்புகளும்கூட இது தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்கலாம்.

பரிமாற்றங்களின் அலகாக நாணய மதிப்பு உருவான காலம் தொடங்கி, இன்று வரையிலும் பணவியல் பொருளியல் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டிருக்கிறது. மதிப்புமிக்க உலோகங்களைக் கொண்டு நாணயங்களை வெளியிட்ட காலம் மாறி, அச்சிடப்பட்ட பணத்தாள்கள் இன்று உலகம் முழுவதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. வணிக நடவடிக்கைகளில் நேரடிப் பணப் பரிமாற்றங்களின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது.

மின்னணுப் பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் இக்காலத்தில், மெய்நிகர்ப் பரிமாற்றங்களும் அறிவியல்ரீதியான ஒரு வளர்ச்சி நிலைதான் என்பதை அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையைச் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதும் இங்கு சேர்த்து எண்ணத்தக்கது. பணவியல் பொருளியல் மீது தமக்கிருக்கும் முழுமுற்றான அதிகாரத்தை இழக்க நேருமோ என்ற மத்திய வங்கிகளின் சந்தேகமும் மெய்நிகர்ப் பணப் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயக்கத்துக்குக் காரணமாக உள்ளது. மத்திய வங்கிகளின் கூட்டமைப்பால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியும்.

நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு பொது நாணய முறைக்கான தேவை எழுந்துள்ளது. அந்த வெற்றிடத்தை மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களால் நீக்க முடியும். ஆனால், மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களை உலக நாடுகள் அனைத்தும் ஒருசேர அங்கீகரிக்காமல் அது சாத்தியமில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. அதே நேரத்தில் வருமான வரி ஏய்ப்பு, கறுப்புப் பணப் புழக்கம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி போன்றவற்றுக்கு இதுபோன்ற பணப் பரிவர்த்தனை பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது எப்படி என்பதையும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்.

செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசியை (Fortified Rice) பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், அரிசியிலோ எண்ணெயிலோ இயற்கையாக இருக்கும் ஊட்டச்சத்தைத் தொழில்நுட்பம் கொண்டு எடுத்துவிட்டு, சத்தற்ற தானியத்துக்குச் செயற்கையாகச் சத்து சேர்க்கப்படுகிறது. இதையே ‘ஊட்டமேற்றப்பட்ட உணவு’ என்று அழைக்கிறார்கள். இது வலிமையூட்டப்பட்ட உணவா, வலியூட்டப்பட்ட உணவா என்கிற பெருங்கேள்வி எழுந்துள்ளது.

அரிசியை முதலில் மாவாக்கி, ‘சத்து’ எனப்படும் பொருளைக் கலந்து, அவற்றைக் கூழாக்கி, பின் இயந்திரம் வழியாக அரிசி வடிவில் மீண்டும் வார்க்கப்படுகிறது. இப்படி அதிக வெப்பநிலை, உயர் அழுத்தத்தில் அரிசியாக்கப்படுபவைதான் ‘ஊட்டமேற்றப்பட்ட அரிசிகள்’ என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. உணவு தானியங்களில் செயற்கை வழியில் வேதிப்பொருட்களைக் கொண்டு ஊட்டமேற்ற வேண்டும் என்பதற்கான வரைவு விதிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி சமையல் எண்ணெயிலும் பாலிலும் வைட்டமின் ஏ, டி செயற்கையாக ஊட்டமேற்றப்பட வேண்டும். 2024 முதல் அரிசியில் வைட்டமின் பி 12, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலத்தின் மூலம் கட்டாயம் ஊட்டமேற்றப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கான 3 ஆண்டு முன்னோடித் திட்டத்தை அரசு சமீபத்தில் தொடங்கியது.

மதிய உணவுத் திட்டம், ஐசிடிஎஸ் திட்டத்தின் மூலம் 2021 ஏப்ரல் முதல் 15 மாவட்டங்களில் ஊட்டமேற்றப்பட்ட அரிசியை அரசு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பரிசோதனை முயற்சிக்கு மட்டுமே ரூ. 1,700 கோடி செலவுசெய்யப்படுகிறது! ஐக்கிய நாடுகள் உணவு உச்சி மாநாடு உணவில் ஊட்டமேற்றல் நடைமுறைகளுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுப்பதன் விளைவு இது.

தேசிய அளவில் ஊட்டமேற்றலை நியாயப்படுத்துவதற்கு, இதில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் நிதியில் நடத்தப்பெற்ற ஆய்வுகளை ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ மேற்கோள் காட்டியுள்ளது. இது கேள்விக்குரியது, ஏனெனில், இத்தகைய கொள்கையால் மக்கள் பலன் பெறுவதற்கு மாறாக, அந்த நிறுவனங்களே அதிக லாபம் ஈட்டுகின்றன.

இந்தியாவில் சமையல் இடுபொருட்களின் செயற்கை/வேதி ஊட்டமேற்றலை ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ கட்டாயமாக்கியதன் உள்நோக்கம் குறித்தும், அதன் அறிவியல் ஆதாரத்தை கேள்விக்கு உட்படுத்தியும் ‘நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு’ (ஆஷா) கண்டனம் தெரிவித்துள்ளது. பல வல்லுநர்களும் அறிவியலர்களும் மருத்துவர்களும் இந்த ஊட்டமேற்றல், அதன் பின்விளைவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதனால் விளையும் தீங்கு, மீள முடியாத ஆரோக்கிய நசிவு, சந்தை மாற்றங்கள் போன்ற சமூக-பொருளாதாரப் பாதிப்புகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். மேலும், இத்திட்டம் பெருநிறுவனங்களின் நலனை மட்டுமே கணக்கில் கொண்டும், எளிய, முறைசாராத மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் விதமாகவும் இருக்கிறது.

உணவில் ஒற்றைமயத்தையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மீதான சாய்வையும் இத்திட்டம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சமையல் இடுபொருட்களுக்கு ஊட்டமேற்றுதல் குறித்து உறுதியான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இதனால் பயனடைந்தவர்கள் குறித்த ஆய்வுகள் உலகில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம், இதனால் விளையக்கூடிய பிரச்சினைகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவிலும் பல வல்லுநர்கள் இதை எதிர்த்திருக்கிறார்கள்.

‘‘இந்த செயற்கை ஊட்டமேற்றல் தீங்கு விளைவிக்கும்… சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவர்களுக்கும் இப்படிப் பொதுப்படையாக ஊட்டமேற்றப்பட்ட உணவை அளிப்பதன் மூலம் உருவாகக்கூடிய பிரச்சினைகளை ஆராய வேண்டும்’’ என்கிறார் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வீணா சத்ருக்னா.

அது மட்டுமல்லாமல், ஒருவருடைய உடல் கிரகித்துக்கொள்ளும் தன்மையைப் பற்றியும் பல கேள்விகள் உள்ளன. முதலாவதாக, இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல உணவே கிடைப்பதில்லை, இந்த நிலையில் ‘கொழுப்பில் கரையக்கூடிய’ வைட்டமின்களை அவர்களுக்குக் கொடுப்பதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

சமையல் இடுபொருட்களில் வேதி ஊட்டமேற்றம் செய்வதில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், எந்த ஊட்டச்சத்தும் தனித்து இயங்குவதில்லை. ஒன்றோடொன்று இணைந்து செயல்படுபவை. கலோரிக் குறைபாட்டுடனும் புரதக் குறைபாட்டுடனும் ஏற்கெனவே போதிய அளவு உணவு கிடைக்காத நமது நாட்டின் ஏழைகளுக்கு வெறும் அரிசியில் ஏற்றப்பட்ட ஊட்டம் மட்டும் எப்படிப் பயனளிக்கும்? இது புதிய பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். அது மட்டுமில்லாமல் மற்றுமொரு முக்கியக் கேள்வி, சமையல் இடுபொருட்களைக் கழுவி - அதிக அழுத்தத்தில் குக்கரில் சமைத்த பின் அல்லது கஞ்சியை வடித்த பின், இந்த செயற்கை ஊட்டத்தில் எவ்வளவு மிஞ்சியிருக்கும்?

ரத்த சோகைக்கு இரும்புச் சத்து மட்டுமே போதாது. மேலும் பல ஊட்டச்சத்துகள் தேவை. அதனால்தான் உணவு/பயிர் பன்மைத்துவம்தான் இதற்குத் தீர்வு என உலகெங்கிலும் பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இரும்புச்சத்தை எல்லோருக்கும் கொடுத்தால், பல உடல் உபாதைகள் உருவாகும். நீரிழிவு நோய், கணையக் குறைபாடுகள் போன்றவை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஓரிரு வைட்டமின்கள், கனிமங்களைச் செயற்கையாகச் சேர்ப்பதால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ள மக்களிடம் இவை நஞ்சாக மாறுவதுடன், தேவையற்ற உடல்நலக் கோளாறுகளையும் உருவாக்கும்.

‘‘ஒருபுறம் ஊட்டச்சத்தை இழந்த பளபளப்பாகத் தீட்டப்பட்ட அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மறுபுறம் வேதி ஊட்டமேற்றல் பற்றிப் பேசுகிறது. இரண்டு செயல்பாடுகளுமே முரணானவை’’ என்று மரபு அரிசிப் பாதுகாவலர் தேபால் தேவ் சுட்டிக்காட்டுகிறார். பல மரபு அரிசி ரகங்களில் உள்ள சத்துக்களை ஆய்வுகள் மூலம் நிரூபித்து, அவற்றைப் பற்றி உலக அளவில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டவர் இவர்.

ஊட்டமேற்றப்பட்ட உணவு இடுபொருட்களை அரசு ஊக்குவிக்கும்போது, நுகர்வோர் மட்டுமில்லாமல் சிறிய, முறைசாரா அரிசி ஆலைகள், எண்ணெய்க் கானிகள்/மரச் செக்குகள், சிறு விவசாயிகள், உள்ளூர் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் நலிந்துபோகும். இப்போதிருக்கும் அரிசி ஆலை நடைமுறை தகர்ந்துபோகும். சிறிய, உள்ளூர் அரிசி ஆலைகள் இதற்குத் தேவையான அதிக முதலீடுகளைச் செய்ய முடியாது. விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். உற்பத்தி விலை வீழ்ச்சி அடையும். மாற்றுச் சந்தைகளும் அழிக்கப்பட்டுவிடும்.

அரசு மதிப்பீடுகளின்படி இந்த நடைமுறைக்கான செலவு சில கோடிகளில் இருக்கும். இதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துக்களின் ஒரே விநியோகஸ்தர்கள் சில பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே. அந்தச் சத்துக்களுக்கு அவர்கள் நிர்ணயிப்பதே விலை. அந்நிறுவனங்கள் தங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் ஏற்கெனவே விலை ஏற்றம் செய்து லாபம் பெருக்கிக்கொண்டுவருகின்றன. வெனிசூலா போன்ற நாடுகள் ஊட்டமேற்றப்பட்ட உணவை சமீபத்தில் நிறுத்தியுள்ளன.

இந்த நாடுகளைப் போல் நமது உணவுப் பாதுகாப்பும் எதிர்காலத்தில் தகர்ந்துபோகும். இதற்கு ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’யும் அரசும் துணைபோவது பெரும் துயரம். ஏற்கெனவே, பாகிஸ்தான் போன்ற நாடுகளில், உணவு ஒழுங்குமுறை விதிமுறைகளை வகுத்து சில்லறை பால் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது; இது சிறிய விவசாயிகளை, சிறு ஆலைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இப்படிப் பெருமளவில் மக்களுக்கும் விவசாயத்துக்கும் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய நவீனத் தொழில்நுட்பங்கள் தேவையா?

அப்படியென்றால், நமது ஏழைகளின் ஊட்டச்சத்துக்கு என்னதான் தீர்வு? மாடித் தோட்டம்/ கொல்லைப்புறத் தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், மகளிர் குழுக்களின் கறிவேப்பிலைப் பொடி, சிறுதானிய லட்டு, விலங்கு புரதம் போன்ற உணவுப் பொருள் உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு உதாரண முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றுள்ளன. சிறுதானியங்கள், கோழி, கால்நடைகள், பால் எனப் பலவும் கைகொடுக்கும். இவற்றைத் தாண்டி கர்ப்ப காலத்தில் ரத்த சோகை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரவலாகக் கொடுக்கப்படும் துணை மருந்துகள் போதுமானவை. ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான அவசிய ஊட்டச்சத்துக்களில் பலவும் ஒரு நாளைக்கு 30-50 கிராம் மட்டுமே தேவைப்படுகின்றன. அவை பாலீஷ் செய்யப்படாத தானியங்கள், சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களிலேயே கிடைத்துவிடும்.

‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்று ஒரு பக்கம் முழங்கிவிட்டு, செயற்கையான நுண்ணூட்டங்களை உலக நிறுவனங்களிடம் பெற்று, சந்தையைக் கட்டுப்படுத்தி, விலையை உயர்த்தும் வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒருசில பன்னாட்டு நிறுவனங்களிடம் உணவுக்காகக் கையேந்தும் நிலையையே இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் செய்கிறதோ என்ற ஐயம் பலரிடமும் எழுந்துள்ளது.

- அனந்து, ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு. தொடர்புக்கு: organicananthoo@gmail.com

சென்னையையும், கன்னியாகுமரி, காவிரிப் படுகை மாவட்டங்களையும் வரலாறு காணாத அளவில் பெருமழையானது புரட்டிப்போட்டுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி பருவமழையைவிட இந்த ஆண்டு சுமார் 56% அதிகமாகப் பெய்துள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான அளவில் சரிந்த பகுதிகளான சேலம், நாமக்கல், தருமபுரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முறையே 29%, 85%, 19%, 101%, 36%, 24% என்ற அளவில் சராசரியைவிடக் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

இருப்பினும், இம்மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த அக்டோபர் மாதவாக்கில் முறையே 24, 42, 36, 32, 42, 30 அடிக்கும் கீழாகவே இருந்தது. மாநிலத்தின் நீர்ப்பாசனத் தேவைக்காக அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கையில், மாநிலத்துக்குள்ளாகவே பெய்த பெருமழையை முறையாகச் சேமிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பொதுவாக, தமிழ்நாட்டுக்கான நீர் ஆதாரம் மழைப் பொழிவாலும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் நதிநீர்ப் பங்கீட்டின் மூலமாகவும் கிடைக்கிறது. மழையால் 4,314.9 டி.எம்.சி. அடி நன்னீரும், அண்டை மாநிலங்களிலிருந்து நதிநீர்ப் பங்கீட்டின்படி 249 டி.எம்.சி. அடி நீரும் என்று மொத்தமாக ஆண்டுக்கு 4,563.9 டி.எம்.சி. அடி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறது. இதில், 885 டி.எம்.சி. அடியானது நீர்நிலைகளிலும் 624.72 டி.எம்.சி. அடியானது நிலத்தடியிலும் சேகரமாகிறது. மீதமுள்ள மூன்றில் இரு மடங்கு நீர் (3,054.18 டி.எம்.சி. அடி) கடலுக்குச் செல்கிறது.

2020-ல் தமிழ்நாட்டில் சேகரமான 624.72 டி.எம்.சி. அடி நிலத்தடி நீ