தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்று அவரது மேடைப் பேச்சுகளைக் கடந்துசென்றாலும், பாடநூல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் அளித்த பதில்கள் விவாதத்துக்குரியதாகவே அமைந்துள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இலக்கியப் பணிகள், கல்விப் பணிகள், பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆற்றிய பணிகள் குறித்துப் பாடங்கள் இடம்பெறும் என்று லியோனி தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால், அடுத்த ஆண்டு இத்திருத்தங்களைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொண்டதற்கான பரிசாகத் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் கருதியிருக்கலாம்.
அதற்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே அவரது பேச்சு அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏறக்குறைய அனைத்து வகுப்புப் பாடங்களிலுமே திமுக குறித்தும் மு.கருணாநிதி குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தக் குறிப்புகள் நீக்கப்பட்டன. அதுபோலத் தலைவர்களின் பங்களிப்புகளை மாணவர்களுக்குப் பாடமாக வைப்பதை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்று ஒரு கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் லியோனி. ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்தவொரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் அதன் கருத்தியல்ரீதியிலான சார்புநிலைகள் பாடநூல்களிலும் எதிரொலிக்கவே செய்கின்றன. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், ஒரே கருத்தியலில் இயங்கும் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆளும் மாநிலத்தில், குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி மட்டுமே பாடங்கள் இடம்பெறும்போதுதான், ஆட்சி மாற்றங்களின்போது பாடநூல் வரிகள் கருப்பு மை கொண்டு அழிக்க ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. மு.கருணாநிதியின் இலக்கியப் பணிகள் பாடமாக்கப்படும்போது, அவரது சமகாலத்து திராவிட இயக்க எழுத்தாளர்களைப் பற்றி பாடங்கள் இடம்பெறுவதில்லை. முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவரது சமூகப் பணிகள் பாடமாக்கப்படும்போது, அவருக்கு முன்பும் பின்பும் ஆட்சிசெய்த மற்ற முதல்வர்களைப் பற்றிய பாடங்களும் இடம்பெறுவதுதானே முறை? அதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில்தான் கட்சி அரசியல் தலைதூக்குகிறது. கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாதிருக்கட்டும்.
--Source: hindutamil.in
திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், எதிர்பார்த்தது போலவே அமளியில் மூழ்கி ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு புதிய அமைச்சர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது என்பது மரபு. அதைக்கூட அனுமதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது நாடாளுமன்ற மரபுகளை மீறும் தவறான முன்னுதாரணம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கோரிய பொருளாதாரம் குறித்த, எரிபொருள் விலையேற்றம் குறித்த பிரச்னைகள் விவாதத்துக்குரியவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைக்காமல், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அவையை நடத்த விடாமல் செய்வதற்கான முன்னெடுப்பு. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்திருந்தது, அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதை வெளிப்படுத்துகிறது.
மாநிலங்களவையிலும், புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தவும், காலமான முன்னாள் மக்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதும் அதேபோலத்தான். எதிர்க்கட்சிகள் முன்வைத்த 17 பிரச்னைகள் குறித்த விவாதத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாக அனுமதி வழங்குவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு உறுதி அளித்தும்கூட அதை அவர்கள் ஏற்காதது தவறான அணுகுமுறை.
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கும், நரேந்திர மோடி அரசின் விளக்கத்தைப் பெறுவதற்கும் பல பிரச்னைகள் காத்துக் கிடக்கின்றன. அமளியில் ஈடுபடுவதால் அந்தப் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டுவிடாது என்பது தெரிந்தும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது. நமது மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பெருமதிப்பிற்குரிய குடிமக்களும் தெரிந்து கொள்வதற்காக, நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டிய முக்கியமான சில பிரச்னைகளை அவர்களது கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரிசையில் நின்றும்கூடத் தடுப்பூசி பற்றாக்குறையால் மையங்களில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட 92 கோடி பேருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதுவரை 40 கோடி பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் எப்படி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து அரசின் தெளிவான விளக்கம் தேவை.
இந்தியாவில் 5 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 30 கோடி. கடந்த 18 மாதங்களாகப் பள்ளிகள் செயல்படாமலும், அவர்களில் பலருக்கு இணைய வழிக் கல்வி வழங்கப்படாமலும் இருக்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும், மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது என்று மத்திய அரசு தட்டிக் கழித்துவிட முடியாது. 30 கோடி இந்திய குழந்தைகளின் வருங்காலம் கேள்விக்குறியாவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. மாநிலங்களுடன் இணைந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண அரசு என்னென்ன முயற்சிகள் செய்திருக்கிறது?
உணவுப் பொருள்களின் விலைவாசியும், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. நடுத்தரக் குடும்பங்கள் அதனால் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றன. அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு, மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது. ஒருபுறம் சேமிப்புகளுக்கான வட்டித் தொகை குறைகிறது; மற்றொருபுறம் விலைவாசி அதிகரிக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் ஈடுகட்ட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
உச்சநீதிமன்றம், கொள்ளை நோய்த்தொற்று இறப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமென்று பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்படி, இதுவரை கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு 4,13,091. இன்னொருபுறம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2019 அறிக்கைபடி, ஐந்தில் ஒரு இறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. அப்படியானால், கொவைட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கைதான் என்ன? அரசிடம் இந்தப் புள்ளிவிவரம் இருக்கிறதா? இல்லை கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கைபோல எந்தவித விவரமும் இல்லையா?
கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கைதான் என்ன? தொழிலாளர் நல அமைச்சகத்திடம் வேலை இல்லாதவர்களின் புள்ளிவிவரமும், வேலை இழந்தவர்களின் புள்ளிவிவரமும் இருக்கிறதா, இல்லையா? கடந்த ஓர் ஆண்டில் மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்த புள்ளிவிவரம் திரட்டப்பட்டிருக்கிறதா? ஆண்டொன்றுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக மட்டும் மக்கள் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு ரூ.2.54 லட்சம் கோடியை வழங்கும் நிலையில், இந்த புள்ளிவிவரங்களைக்கூட சேகரிக்க முடியவில்லை என்றால், எப்படி?
அரசிடம் கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. நாடாளுமன்ற அமளி மூலம் அரசைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் உதவுகின்றன. இதனை ஏற்பவர் ஏற்கட்டும், மறுப்பவர் மறுக்கட்டும்!